மதுரையில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வானை, பவளக் கனிவாய் பெருமாள் ஆகியோர் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுப்பதற்காக அருள்மிகு பவளக் கனிவாய் பெருமாளும் கடந்த 6 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அவர்கள் தினமும் ஆவணி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரிடம் விடைபெறுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தெற்காவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதியம் சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
அதேசமயம் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதிகளில் வலம் வந்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இரவு 9 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தார். சுவாமிகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது.
Category: ஆன்மீக செய்திகள்
ஆன்மீக செய்திகள்
-
முருகன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் வருகை
-
அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மத தகனம்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளில் இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அருணாசலேஸ்வரர் எய்த அம்பில் சிக்கிய மன்மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலானார்.
இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
எரிந்த மன்மதனின் சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக் கொண்டனர். இத்துடன், இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றது. -
பழநி முருகன் கோயிலில் இலவச பஞ்சாமிர்த திட்டம்….
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழநி முருகன் கோயிலில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை இன்று காலை தொடங்கினார்.
இந்த திட்டத்தின்படி, கோயிலுக்கு வரும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு தொன்னையில் 20 கிராம் பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி…
மே 10-ஆம் தேதி சித்ரா பௌர்மணியை முன்னிட்டு திருவண்ணாமலை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத சிவஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளின்போது ஏராளமானோர் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர். சுமார் 14 கி.மீ. தூரம் கொண்ட மலையை சுற்ற முடியாத முதியவர்கள், உடல் நலிந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்காக ஆட்டோ, கார்கள் மூலமும் சுற்றும் வசதியும் உள்ளது. இந்நிலையில் வரும் மே 10-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவர். பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி….
திருவண்ணாமலை கோவிலில் சித்திரை வசந்த உற்வச விழாவையொட்டி அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை வசந்த விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேம், ஆராதனை நடந்து வந்தது. இரவில் கோவில் 3-ம் பிரகாரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் தலவிருட்சமான மகிழமரம் அருகே வரும்போது உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி முற்பகல் 11.30 மணியளவில் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு அய்யங்குளத்தில் எழுந்தருளினார்.
-
மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம் ….
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 5-ந் தேதியும், திக் விஜயம் 6-ந் தேதியும் நடைபெற்றது. இந்த விழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் தேர்முட்டி வீதியில் திரண் டனர். சுவாமி- அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.
-
சுந்தர வரதராஜ பெருமாள் கருட சேவை
பிரசித்தி பெற்ற உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவள்ளி நாயிகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி நடைபெ,றறது. இங்கு கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் முக்கிய நிகழ்வாக கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுந்தர வரதராஜ பெருமாள் அதிகாலை 5.30 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் கருட வாகனத்தில் புறப்பட்டு ராயர் தெரு, மேட்டு தெரு. கருணீகர் தெரு, திருமலையா பிள்ளை தெரு, வீர பெருமாள் அய்யங்கார் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட மாடவீதிகளில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள வைகுந்த வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்துக்கு வந்த உற்சவருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். -
திருச்சி தாயுமானவர் கோவிலில் திருக்கல்யாணம்….
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 6-வது நாளில் பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை கல்யாண மாப்பிள்ளையான தாயுமான சுவாமிக்கும், மணப்பெண்ணான மட்டுவார்குழலம்மைக்கும் மங்கள ஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது.தொடர்ந்து 11.30 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண சடங்குகள் நடந்தன. அதையடுத்து தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திரு நாணை தொட்டு வணங்கியவுடன் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-
மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
சித்திரைத்திருவிழாவில் மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று சுந்தரேசுவரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக தங்க பல்லக்கில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி கீழ சித்திரைவீதி, தெற்குஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக வலம் வந்தனர்.
-
திருப்பதியில் காணிக்கை முடி ரூ. 11 கோடிக்கு ஏலம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 14 ஆயிரம் கிலோ முடி ரூ. 11.24 கோடிக்கு ஏலம் போனது. திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்கதர்கள் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் தங்களது முடியை காணிக்கை செலுத்துகிறார்கள். அப்படி காணிக்கை செலுத்திய முடி, இணைய தளம் மூலமாக ஏலம் விடப்பட்டது. அதில் 13 ஆயிரத்து 90 கிலோ எடையுள்ள முடி 11 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.