Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • ஆடி வெள்ளி… அம்மன் கோயில்களில் திருவிழாக்கோலம்…

    ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இந்த ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அதேபோல ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இப்படி அனைத்து விசேஷங்களையும் கொண்ட ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  • அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியமில்லை….

    பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்  தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

    இந்த நிலையில் தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அங்கப்பிரதட்சணத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற முடிவை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம், ஆதார் அட்டை நடைமுறையில் சில விதியை தளர்த்தி உள்ளது. 

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து தினமும் 750 பேருக்கு அங்கப்பிரதட்சண அனுமதிசீட்டு வழங்கப்படும். அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பிக்கலாம். ஆனால், அங்கப்பிரதட்சண அனுமதி சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை” என்று கூறியுள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். 

  • இனி ஆதார் இருந்தால் அங்கப்பிரதட்சணம்….

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இம்முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
    அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இன்று முதல் தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
    வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். வெள்ளிக்கிழமை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதால் வியாழக்கிழமை மட்டும் அங்கபிரதட்சணம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியுள்ளார்.

  • ஆடி பெளர்ணமி: கிரிவலத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    ஆடி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், ஆடி மாத பெளர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.31 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக நேற்று காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர். பகல் 12 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, அருணாசலேஸ்வரர் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • மதுரையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மதுரையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நாளை மாலை நடைபெறுகிறது. மதுரை சுந்தரராஜபுரத்தில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இத்திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தைக் காண வருவோருக்கு தேவஸ்தானம் மற்றும் பக்தர்கள் அமைப்பினர் பிரசாதங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவர். திருக்கல்யாணத்துக்கு அனுமதி இலவசம்.  திருக்கல்யாண ஏற்பாடுகளை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வித்யாவதி, வீரபாஞ்சனில் உள்ள டி.வி.எஸ்.லட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
  • பெரியபாளையம் ஆடித் திருவிழா

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில், ஆடி திருவிழா இன்று காலை தொடங்கியது. ஆடி திருவிழாவின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இவர்கள் இரவு தங்கி  மறுநாள் காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவார்கள். 

    உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள். அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

    வழக்கமான உற்சாகத்துடன் ஆடி திருவிழா பெரியபாளையத்தில் தொடங்கியிருக்கிறது. முடிந்தால் நீங்களும் இந்த ஆடியில் அம்மனை தரிசித்து எல்லா நலமும் வளமும் பெற்றிடுங்கள்.