Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • சொர்க்கவாசல் திறப்பு: ரங்கநாதர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 -ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.

    தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சி அளித்தார். பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் திறக்கப்பட்டது. 

    பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
     

  • வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தசரா குழுவினரால் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல டன் எடையுள்ள பல வகையான மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு வியக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முடிந்த பிறகு சாதாரண  
    பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று இரவு 12.5 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு பாசுரங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அச்சகர்கள் 12.25 மணி அளவில் பூஜைகள் செய்து ஆர்த்தி எடுத்தனர்.தோமாலையுடன் கருவறை கதவு திறக்கப்பட்டு மூலவருக்கு அர்ச்சனைகள் நடந்தது. வழக்கமான பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

  • வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்!

    'வைகுண்ட வாசனுக்கு வருடம் முழுவதுமே கொண்டாட்டம்' என்பார்கள். அதிலும் சிறப்பாக மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசல் திறப்பும் வைணவர்களுக்கு கதி மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும்.

    ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி. பொதுவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா பகற்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் திருக்கைத்தல சேவையும் அடுத்தடுத்த நாள்களில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் தீர்த்தவாரியும் நடைபெறும். விழாவின் இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறும். இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்காகவும் ரங்கநாதரை தரிசிக்கவும் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசாவதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருவார். ஸ்ரீமன் நாராயணனின் 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஆகிய திவ்ய தேசங்களை நாம் இந்த நிலவுலகில் தரிசிக்க முடியாது. ஆனால், திருவரங்கம் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை வைகுண்ட ஏகாதசி நாளில் தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவியை அளிப்பதாக பெருமாள் மக்களுக்கு வாக்குறுதியை அளிக்கின்றார். ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டிப்பவர்களின் சந்ததிக்கு, இம்மையிலும் மறுமையிலும் மனமகிழ்ச்சி, சுகம், ஆரோக்கியம், செல்வம், புகழ் ஆகியவற்றை வாரி வழங்குகிறார் என்பது ஐதிகம்.

  • சூரிய பூஜையின் மகிமைகள்!

     

    திகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறான். அந்த சூரியனை நோக்கி செய்யப்படும் பூஜையின் மகிமை இங்கே.. 

    சூரிய சந்திர பூஜை!

    தஞ்சை மாவட்டம், திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திங்களூர் சந்திர பகவானுக்கு உரிய தலம். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு சூரிய ஒளி, சிவலிங்கத்தின் மீது படுவதால் அன்று சூரிய பூஜையும், மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி சிவலிங்கத்தின் மீது படுவதால் சந்திர பூஜையும் நடை பெறுகின்றன.

    பாவங்களைப் பொசுக்கும் உஷத் காலம்!

    அதிகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறான். அதனால் அதிகாலையை உஷத் காலம் என்கிறார்கள். இந்த நேரத்தில் உஷஸின் செழிப்பான கிரணங்கள் பூமியை நோக்கிப் பாய்வதால் நீர்நிலைகளில் உள்ள நீர் வெதுவெதுப்பாக இருக்கும்.எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும், பாவங்கள் பொசுங்கும் என்பது ஐதீகம்.

     

  • சபரிமலை: 18 படிகள் உணர்த்தும் தத்துவங்கள் என்ன?

    பரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால் தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.

    இந்த 18 படிகள் உணர்த்தும்  தத்துவங்கள் இங்கே… 

    1. காமம்
    பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

    2. குரோதம்
    கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

    3. லோபம்
    பேராசைக்கு இடம் கொடுத்தால், இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.

    4. மதம்
    யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

    5. மாத்சர்யம்
    மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

    6. டம்பம் (வீண் பெருமை)
    அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

    7. அகந்தை
    “தான்’’ என்ற அகந்தை கொண்டவன், ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை.

    8. சாத்வீகம்
    விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

    9. ராஜசம்
    அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

    10. தாமசம்
    அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

    11. ஞானம்
    எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

    12. மனம்
    நமது மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

    13. அஞ்ஞானம்
    உண்மைப் பொருளை அறியமாட்டாது மூடி நிற்கும் இருள்.

    14. கண்
    ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

    15. காது
    ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக்கடலில் மூழ்க வேண்டும்.

    16. மூக்கு
    ஆண்டவனின் சந்நதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

    17. நாக்கு
    கடுஞ்சொற்கள் பேசக்கூடாது.

    18. மெய்
    இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்லவேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

    இந்த 18 வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்.

  • சிதம்பரம் நடராஜர் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆருத்ரா தரிசன உற்சவம்!

    டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்  கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனையத்து நாளை ஞாயிற்றுக்கிழமை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6 ஆம் தேதி அன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7 ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது.

     விழாவின் முக்கிய நிகழ்வான  தேர்த்திருவிழா 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14 ஆம் தேதி அன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15 ஆம் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழுவினர் செய்து வருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

     

  • புத்தாண்டு: தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

    2025  புத்தாண்டை வரவேற்று தமிழகம்  முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.  

    2025 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவில் உள்படதமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   

    மேலும் திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.  

    கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார்  5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

    அதேபோன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதேபோல், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். டெல்லியின் ஜந்தேவாலன் கிருஷ்ணர் கோயில், பிர்லா மந்திர், சத்தார்பூர் துர்க்கை கோயில், ஹனுமன் கோயில், கல்காஜி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அயோத்தியில் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சரயு நதியில் நீராடி சூரியனுக்கு தீபம் காட்டி, பின்னர் ராமர் கோயில் சென்று வழிபாடு மேற்கொண்டனர். உத்தராகண்ட்டின் ஹரித்வார் நகரில் அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா கரீப் நவாஸ் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து தீபம், ஊதுபத்தி ஆகியவற்றைக் காட்டி வழிபாடு மேற்கொண்டனர்.

    ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.  
     

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்: கோலாகலமாக தொடங்கிய பகல்பத்து உற்சவம்!

    108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார். மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம், திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல்
    பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.

    இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10 ஆவது நாள் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10 ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள்  வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

    அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.  

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 10 ஆம் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
    ராப்பத்து ஏழாம் திரு நாளான 16 ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 17 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19 ஆம் தேதி தீர்த்தவாரியும், 20 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடையும்.

  • அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகல கொண்டாட்டம்!

    நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு  ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். 

    அதன்படி நடப்பாண்டு மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு 2 ஆவது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று 30 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. 

    விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது. அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர். 

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும்   போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

  • 2025 ஆங்கிலப் புத்தாண்டு: திருவேற்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்!

    ருகிற 2025 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. 

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக, முந்தைய தினமான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து, கோவில் அலுவலகத்தில் கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    அதன்படி, வருகிற புத்தாண்டையொட்ட்டி  நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்வது, கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

    கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உப கோவிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், 2025 புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக டிசம்பர் 31 ஆம் தேதி 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபி ஷேகங்கள் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.