Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • குருவை மிஞ்சிய சீடர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஓர் அப்பழுக்கற்ற முனிவர்.
    பற்றில்லாத அவரை தீராத தலைவலி பற்றிக்கொண்டது.
    அகத்தியரை நாடி வந்தார்.
    அகத்தியர்தான் மாஸ்டர் ஆஃப் சர்ஜரி ஆயிற்றே !
    முனிவரின் மூளைக்கான 
    அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமானார்.

    முனிவரின் 
    கபாலம் திறந்தார்.
    உள்ளே 
    ஒரு சிறு உயிரினம்.
    ஒரு சிறு தேரை அங்குமிங்கும் 
    ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

    அதுதானே தலைவிதி ! 
    அதனால்தானே தலைவலி !!

    தேரையை வெளியே எடுக்க 
    அகத்திய முனி ஆனமட்டும் பாடுபட்டார்.

    தேரையோ பிடிக்கப் போனால் 
    எதிர்திசை ஓடி ஒளிந்தது.
    மிகவும் முயன்றால் மூளை சிதையும் அபாயம் இருந்தது.

    அகத்தியரின் முயற்சி ஒருபுறமிருக்க 
    உதவியாளனாய் அருகிலிருந்த 
    ஓர் ஊமைச் சிறுவன் ஆர்வமுடன் 
    இதைக் கவனித்திருந்தான்.

    திடுமென அவன் 
    ஒரு காரியம் செய்தான்.

    ஒரு தாம்பாளம் எடுத்து அதில் 
    தண்ணீர் நிரப்பி அருகினில் வைத்தான்.
    தண்ணீரைக் கண்ட தேரை
    தாவிக் குதித்தது தாம்பாளத் தடாகத்தில்.

    பிறகென்ன 
    அகத்தியர் மகிழ்ந்து 
    முனிவரின் மண்டையை மூடினார் 
    சந்தானகரணி என்னும் மூலிகையால்.
    தலைவலி 
    போயே போச்சு…!

    அகத்தியர் வியந்தார்.
    சீடனின் விவேகத்தை பாராட்டி நெகிழ்ந்தார்.
    முனிவரும் 
    உயிருடன் எழுந்தார்.
    முனிவரையும் குருவையும் 
    வணங்கி நின்றான் அச்சிறுவன்.

    "வாழ்க நீ…
    நீ விவேகி.
    உன் பெயர் 
    இனி 
    ஊமையன் இல்லை… 
    நீ தேரையன்…
    தேரையை மீட்டதால் 
    நீ தேரையன்.
    உன் பெயர் 
    தேரையன்"
    என பெயர்சூட்டி வாழ்த்தினார் அகத்தியர்.
    முனிவர் வழிமொழிந்தார்.

    நோய்ப்பட்ட முனிவரும் வாழ்த்தவே 
    நெகிழ்ந்து போனார் அகத்தியர்.

    "நீயே என்குரு..
     நீயே என் தெய்வம்… குலக்கொழுந்து…."
    என உளம் மகிழ்ந்து அது போதே
    சீடனாய் ஏற்றுக் கொண்பார்.
    அதோடு விடவில்லை அகத்தியர் பெருமான்.

    தன் தவ ஆற்றலால் ஊமைத் தன்மையைப் போக்கி 
    ஊர் வியக்க பேசவும் வைத்தார்.

    இதுவே ஊமையன் தேரையரான அற்புதமான நிகழ்வு.

    தலைவலி 
    நீங்கப் பெற்றவர் சங்கப்புலவர் 
    திரணாக்கிய முனிவர் என்றும்..
    காசிவர்மன் என்ற மன்னன் என்றும்… இந்திரன் என்றும் ..
    இல்லையில்லை… நக்கீரன் என்றும் பல்வேறு 
    கருத்துக்கள் உண்டு.

    திரணாக்கிய முனிவர் தான் 
    பின்னாளில் அகத்தியரின் சீடராகி 
    தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியர் என்பது 
    இன்னுமொரு வியத்தகு செய்தி.

    தேரையரின் முற்பிறப்பு 
    ராமதேவர் என்றும் யாக்கோபு என்றும் 
    பெரும் பேறுகள் கொண்ட சிறப்புடைத்தது.

    தேரையர் வேறு.. இராமதேவர் வேறு…
    என அடித்துச் சொல்வோரும் உண்டு.
    கடந்த பிறப்பில் இராமதேவருக்கு அகத்தியர் மேல் அலாதி பக்தி.
    அவரிடம்  குருகுலவாசம் வேண்டிப் பெற்றார் இராம தேவர்.
    அந்த வாய்ப்பு 
    சில காலமே சிறந்திருந்தது.

    அப் பிறப்பில் 
    போதிய காலம் இல்லாது போனதால் 
    மறுபிறப்பிலேனும் அகத்தியர் 
    அடி மனதில் 
    ஆழ்ந்து அமர மறுபிறப்பு எடுத்தார்.
    புதிய பிறவியில் பிறப்பால் 
    அவர் ஓர் ஊமை.
    அந்தணர் ஒருவர் பரிந்துரை செய்ய 
    அகத்தியர் ஏற்றார் அச்சிறுவனை.

    அந்த ஊமைச் சிறுவனே
    காலப்போக்கில் தேரையர் ஆனார். 
    காலம் கடந்த சித்தபுருஷர் ஆனார்.
    அகத்தியரிடம் அழைத்துச்சென்று 
    சேர்த்து விட்டவர் ஔவைப் பாட்டியே
    என்பாரும் உண்டு.

    பேச்சு தான் இல்லையே தவிர 
    ஊமைச் சிறுவன் 
    படு சுட்டி.
    புத்தியும் கெட்டி.

    அகத்தியர் பிரானுக்கு 
    அவனைப் பிடித்துப்போகவே அந்த 
    ஊமைச் சிறுவனை 
    உடன் வைத்துக் கொண்டார்.

    தேரையர் என 
    பெயர் சூட்டிய பின்னர்
    வைத்தியம் மருந்து 
    என அனைத்தும் கற்பித்தார்.

    இப்பிறவியின் நோக்கமே அதுதானே ? 
    சிக்கெனப் பிடித்துக் கொண்டார் சீரிய சீடர் தேரையர்.

    இன்னொரு மருத்துவ மகத்துவமும் அடுத்து நடந்தது.
    பாண்டிய மன்னன் ஒருவன்.
    பெயர் கூன்பாண்டியன்.
    அவனுக்கு அசிங்கமாய் கூன்முதுகு.
    மக்கள் பரிகாசம் ஒருபுறமிருக்க 
    அவனுக்கே அவனைப் பிடிக்காமல் போனது.

    அகத்தியரிடம் அடைக்கலமாய் வந்த மன்னன் 
    நோய் தீர்க்க வேண்டி கதறி நின்றான்.

    கும்பமுனி 
    குறை தீர்ப்பார் 
    என பக்தியுடன் காத்திருந்தான் பாராளும் மன்னன்.
    மூலிகைத் தைலம் தயார் ஆனது.

    அன்று
    தேரையரிடம் தைலம் காய்ச்சும்
    முக்கியப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு 
    அகத்தியர் பெருமான் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தார்.

    கொப்பரையில் தைலம் 
    கொதித்துக் கொண்டிருக்க தேரையர் 
    தைலப் பதத்திற்கான தருணம் பார்த்திருந்தார்.

    அது ஒரு புது முயற்சி.

    தேரையர் 
    கவனம் பிசகாமல் காத்திருந்தார்.

    அப்போது மேற்கூரையில் சடசடவென சத்தம்.
    டப்… டுப் 
    என அதிர்வொலி.
    மேலே பார்த்தார் மருத்துவச் சீடர்.

    உடனே கருத்து 
    ஒன்று கருக்கொண்டது.

    கொதிக்கும் தைலம் கொடுத்த ஆவி 
    மேலே கூரையில் வளைந்திருந்த மூங்கில் கம்புகளை 
    நேராக நிமிர்த்திக் கொண்டிருந்தன.

    அதனால்தான் 
    தைலம் சுடச்சுட 
    சடச்சட சப்தம்.

    'ஆஹா..
    இதுவே உரிய பதம்.
    நல்ல தருணம் '
    என தீர்மானித்தார் தேரையர்.

    மூங்கிலின் 
    கூன் நிமிர்ந்த
    அந்த பதமே மன்னனின் 
    கூன் நிமிர்த்தும் தைலத்தின் பதம் 
    என கணத்தில் முடிவெடுத்து 
    கீழே எரிந்து கொண்டிருந்த 
    தீயை அணைத்தார்.

    அகத்தியர் வந்தார். நடந்தது அறிந்து
    சீடரை ஆரத் தழுவினார்.

    பதமான தைலம் இதமாக தடவ 
    மன்னன் கூன் நிமிர்ந்தது.

    கேள்விக்குறி போல் இருந்த உடம்பு 
    ஆச்சரியக்குறி போல் அதிசயம் கண்டது.

    அதன் பின் உலகின்கண் 
    தேரையர் பெயர் உயர்ந்து 
    உலவத் தொடங்கியது.

    ஆனால் அதுவே 
    குரு அகத்தியருக்கும் சீடர் தேரையருக்கும் 
    பெரிய பிளவையும் ஏற்படுத்தியது.

    அகத்தியர் ஆசிரமத்தின் அருகில் இருந்த 
    சித்தர் ஒருவருக்குத் தீராத வயிற்றுவலி.
    ருத்ராசாரர் என்பது அவரது திருப்பெயர்.
    சித்தர்களுக்கு 
    நோய் தீர்க்கும் மருத்துவ மாமணி 
    அகத்தியரை நாடினார் அந்த சித்தர்.
    மருந்து தந்த 
    மாமுனி அகத்தியர் 
    பத்துநாள் பத்தியமும் சொன்னார்.

    பத்தாம் நாள் 
    சித்தர் தந்த தகவல் 
    அகத்தியருக்குப் பேரதிர்ச்சி தந்தது.

    'மருந்து வேலை செய்யவில்லை. வயிற்றுவலியும் போன பாடில்லை.'

    அகத்தியர் 
    தேரையரை அழைத்து 
    சித்தரைப் பார்த்து வரச் சொன்னார்.

    தேரையர் போனார். சித்தரைச் சோதித்தார். 
    மருந்தையும் சோதித்தார்.

    "சுவாமி…. கவலை வேண்டாம்.. வயிற்றுவலியை 
    உடனே போக வைக்கிறேன்"
    என ஆறுதல் சொன்னார்.

    குழல் போன்ற 
    ஒரு குச்சியை எடுத்து சித்தர் வாயினுள் நுழைத்து 
    அதன் துளை வழியே அகத்தியர் தந்த 
    அதே மருந்தைக் கொடுத்தார்.

    என்ன மாயம் !
    கணப்பொழுதில் வயிற்று வலி காணாமல் போச்சு..!
    ஞானி ருத்ராகாரருக்கு மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி.

    "குருவை மிஞ்சிய சீடனாக இருக்கிறாயே !" வியந்தார். 
    முதுகில் தட்டி வாழ்த்தினார்.

    இங்கு தான் வந்தது வினை.
    கவனியுங்கள்….
    உலகை காக்க வல்ல சித்தர் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி.
    மகா சித்தர் ஒருவரின் மருந்து தீர்க்கவில்லை
    அவர் தம் சீடர் 
    அதே மருந்து தர தீர்ந்தது வலி.

    "என்ன நடந்தது ?
    எப்படித் தீர்த்தாய்??" அகத்தியர் கேட்டார் 
    கொஞ்சம் ஆற்றாமையுடன்.

    "குருவே…. 
    தங்கள் மருந்து 
    பல்லில் பட்டால் 
    பல்லின் விஷம் பட்டு மருத்துவ குணம் முறிந்துவிடும்.

    அதனால் 
    பல்லில் படாமல் 
    குழல் குச்சி மூலம் தந்தேன்…
    வலி தீர்ந்தது."

    என நோய் 
    தீர்ந்த வழிதனைப் பகன்றார்.

    பெருமிதம் கொண்ட அகத்திய மாமுனி 
    அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தார்.

    ஆனாலும் கூடவே 
    துளிர்ந்திருந்த பொறாமை 
    இன்னும் வளர்ந்தது.

    அடுத்த சிலநாட்களில் 
    அகத்தியரைப் பார்த்து 
    நன்றி சொல்ல வந்த ருத்ராகாரரின் பாராட்டில் 
    'குருவை மிஞ்சிய சீடன் '
    என்ற புகழ்ச்சி தூக்கலாய் இருக்க எழுந்தது 
    அந்த வினை விஸ்வரூபமாய்.

    சீடரை அழைத்த சித்தர் பெருமகன் 
    அகத்திய மாமுனி அமைதியாய் சொன்னார்.

    அதில் ஏனோ கொஞ்சம் 
    காரம் இருந்தது.

    "இரு கத்திகள் 
    ஓர் உறையில் 
    இருக்கக் கூடாது.

    இனி 
    உன் வழி 
    தனி வழி.

    இந்த இருப்பிடம் வேண்டாம்.
    கிளம்பு.

    உன் விருப்பிடம் செல். 
    செல்லுமிடம் தொண்டு செய்."

    குருவின் கட்டளை !
    அடிபணிந்த சீடர்
    அவர் அடிபணிந்து விடைபெற்றார்.

    'மருத்துவச் சித்தர்' என 
    சித்தர்களே வியந்த
    சித்தர் தேரையர்
    பின்னாளில்
    குரு அகத்தியருக்கே
    மருத்துவம் பார்த்த அதிசயம் நடந்தது.

    அது 
    பிறவியின் பயன்.
    குரு காணிக்கை.

  • ஆட்டுப்பால் கொடுத்தவனுக்கு கிடைத்த ஞானப்பால்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஆடு மேய்ப்பது 
    அவன் தொழில்.

    ஊரின் ஒதுக்குப்புறத்தில் பசுமை போர்த்திய சூழலில் 
    அவன் வாசம் 
    ஒரு குடிசையில்.

    இன்முகம் ஒன்றே அவன் வெளிப்பாடு.

    ஆடுமாடுகளை மேய்க்கும் அவன் ஒருநாளும் ஐம்புலன்களை 
    மேய விடவில்லை.

    புலன்களை அடக்கியதும் அடக்கத்துடன் இருந்ததும் 
    கூடிய விரைவில்
    ஒரு நல்ல பலனை தந்தது .

    வான் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த 
    ஒரு மகா ஞானியின் கண்களில் 
    அவன் பட்டான். 

    'ஆடுமேய்க்கும் இடையனிடம் 
    இப்படி எப்படி ஞானத்தேடல் ?' மகாசித்தர் சிந்தித்தார்.

    'இப்படிப்பட்ட சீடனைத் தேடி எப்படிப்பட்ட இடமெல்லாம் அடைந்தோம் '
    என புன்னகைத்தார். 

    சித்தர்
    ஒருவரை உருவாக்கும் இறை பணிக்காக இறங்கி வந்தார்.

    இப்படிச் சீடனைத் தேடி குரு வருவது
    சித்தர் இயல்பு.

    வந்தவரை வணங்கி தொழுது 
    நின்றான்.

    அந்த ஆட்டிடையன் தரையில் 
    தர்ப்பைப்புல் போட்டு 
    சிம்மாசனம் தந்தான்.

    ஓடிப்போய் குட்டிகளோடு 
    முட்டி நிற்கும் ஆடு ஒன்றின் 
    முலைப்பால்
    கொணர்ந்தான்.

    ஏற்கனவே அகமகிழ்ந்திருந்த மகாபுருஷர் மனம் நெகிழ்ந்து போனார்

    உளம் கனிய 
    உபசரிப்போக்கு எல்லாம் தேடி வரும் எனும் வரம் 
    மெய்ப்படத் தொடங்கியது.

     "தம்பி….
    நீ ஆடு மாடு 
    மேய்க்க வந்தவனல்ல. நீ மேய்ப்பவன்.
    ஆம்…
    உலக மக்களை மேன்மை கொள்ள மேய்ப்பவன். மேய்ப்பன்.
    நல்ல மேய்ப்பன். 

    நோயால் சாய்ந்து போனவர்களை மருந்தால் 
    ஓய்ந்து போகாதிருக்க செய்பவன்.

    விதிவசத்தால் சோர்ந்துபோன மக்களை சோதிடத்தால்
    கூர்ந்து பார்க்க வைப்பவன்.
    நிமிர்ந்து வாழ வைப்பவன்
    என பீடிகை போட்டார்.

    இடைச்  சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை. 

    ஆடும் மாடும் அழைக்கும் 
    'அம்மா '
    என்கின்ற 
    ஓசையைத் தவிர 
    ஏதும் அறியாதவனுக்கு மகான் சொன்னது எதுவும் புரியவில்லை.

    ஆனால் 
    கேட்ட வண்ணம் இருந்தான்.

    ஏதேதோ சொன்னார். கொஞ்சம் புரிந்தது.

    இன்னும் சொன்னார். தெளிவுறச் சொன்னார்.

    புரிந்தது.
    அத்தனையும் புரிந்தது. 

    வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் மற்றும் 
    இன்ன பலவும் 
    அந்த சிறுவனுக்கு ஞானமாய் அருளினார்.

     ஞான அமுதாய் ஊட்டினார்.
     
    ஆட்டுப்பால் தந்தவனுக்கு ஞானப்பால் தந்தார்.

     "இடைக்காடா…!" இப்படித்தான் அழைத்தார் மகாபுருஷர்.

    ஓ .. அதுதான் 
    அவன் திருநாமம். அவர் சூட்டிய நாமகரணம்.

    "படிப்பதும் கேட்பதும் யார்க்கும் எளிதே.

    கொஞ்சம் அறிந்துகொண்டு எனக்கு எல்லாம் தெரியும் 
    என வாய்ப் பந்தல் போடுதல் 
    யாருக்கும் வழக்கம்.

    மாற்று.. அதை மாற்று.

    நான் சொல்வதை முதலில் நீ கடைப்பிடி.

    உன் வாழ்வு சிறக்கும்.

    உன்னால் 
    உலகம் சிறக்கும்.

    எளிமையாய் 
    உலக வாழ்க்கையை ரகசியமாய் உணர்த்தியவர் உச்சிமுகர்ந்து 
    இடையரை 
    இடைக்காரரை
    இடை அணைத்து இறுகத் தழுவினார். 

    என்ன அதிசயம் ?!

    கடையனாய் 
    ஆடு மேய்த்து வந்த
    இடையன் 
    நாடு போற்ற உதித்த இடைக்காடரானார்.

    மகாபுருஷர் 
    சுடர்வித்த 
    ஞானதீபம் 
    ஆயிரம் கோடி சூரியனாய் 
    ஒளியூட்டத் துவங்கியது.

    வந்த வேலை 
    முடிந்த நிறைவோடு வான் பறந்தார்
    வந்த மகான்.

    மகா புருஷர் விடைபெற்றார். இன்னொரு 
    மகாசித்தர் உதயமானார்.

    ஆடுகள் மாடுகள் மேய்க்கும் வேலை தொடர்ந்தது.

    மகா சித்தரின் உபதேசத்தால் 
    ஆடுகள் மீதும் 
    மாடுகள் மீதும் 
    அன்பு அதிகரித்திருந்தது. ஆன்மநேயம் தழைத்திருந்தது.

    மனிதநேயம் 
    முழுநேர
    சிந்தனையாக இருந்தது.

    இப்படித்தான் 
    ஒருநாள் 
    ஆடு மேய்த்தபடி 
    ஆன்ம விசாரணையில் ஆழ்ந்திருந்தார் இடைக்காடர்.

    "இதென்ன அநியாயம்?

    மனித உறவு என்பதே உதட்டளவாய் 
    அருகி வருகிறதே !

    உள்ளம் கலப்பது வெறும் பேச்சளவாய் குறுகி வருகிறதே !

    குணம் கெட்ட உறவால்
    குற்றங்கள் மிகுகிறதே!

    பக்தி வேசமாகி 
    போலிகள் ஆட்டம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிறதே !

    நம்பிக்கைத் துரோகம் நயவஞ்சகம்
    நர்த்தனம் ஆடுகிறதே !' கவலை கொண்டார் இடைக்காடர். 

    "இதன் விளைவு 
    எதில் முடியும் ?

    மக்கள் மனம் 
    பாழானால் 
    மழை நிற்கும்.

    வானம் விசனப்பட்டு தன்னிலை மறக்கும்.

    பஞ்சமே பஞ்சமின்றி தஞ்சம் புகும்."

    இடைக்காடர் 
    கவலை கொண்டார்.

    மகாபுருஷர் கற்றுத்தந்த ஜோதிடக்கலை கவனத்தில் வந்தது.

    கட்டமிட்டார்.
    கவலை 
    மிகக் கொண்டார்.

     '12 ஆண்டுகள் 
    கடும் பஞ்சம் '
    கணிப்பு கதறியது. 

    இடைக்காடர் 
    மனம் பதறியது.

    " ஐயோ… 
    ஆடு மாடுகள் என்செய்யும் ? 
    மக்கள் என் செய்வர் ? " துடித்தார்.
    துவண்டார்.

    விடிவெள்ளியாய் அக்னிப் பிழம்பொன்று அகத்தில் உதித்தது.

    அடுத்த நாள் முதல் செயலில் இறங்கினார்.

    ஆடுகளுக்கு 
    எருக்கம் செடிகளை  
    உணவாகக் கொடுத்து பழகச் செய்தார்.

    ஆங்காங்கே சுவரெழுப்பி
    வரகரிசி நிரப்பி 
    சேறு கொண்டு 
    பூசி வைத்தார். 

    காலம் நகர்ந்தது. 
    கணித்தபடி 
    பஞ்சம் நுழைந்தது.

    மரம் செடி கொடிகள் மட்டுமல்ல 
    மக்களும் 
    மடியத் தொடங்கினர்.

    இடைக்காடர் மட்டும் பஞ்ச பாதிப்பு சிறிதுமின்றி 
    காலம் தள்ளினார்.

    எப்படித் தெரியுமா ?

    பஞ்சகாலமெனினும் காட்டில் 
    எருக்கும் செடிகளுக்கு குறைவிருக்காதே.

    அவை 
    பூத்துக் குலுங்கின.

    அவற்றை உண்டு பழக்கப்பட்டிருந்த
    ஆவினங்கள் பசியாறின.

    எருக்கம்பூ 
    உண்ட உடம்பை 
    அரித்துத்தள்ளுமே !

    ஆடுகளும் மாடுகளும் அரிப்பு நீங்க 
    சுவற்றில் உரசி உரசி சுகம் கண்டன.

    சுவற்றில் உரசலால் உள்ளே இருந்த வரகரிசியை 
    வெளிக் கொணர்ந்தன.

    அவற்றை எடுத்து இடைக்காடனார் 
    அமுது ஆக்கினார். ஆட்டுப்பாலில் 
    கலந்து குடித்து 
    பசி ஆற்றினார்.

    இடைக்காடரின் 
    இந்த யுக்தி அக்கம்பக்கத்தில்
    பரவிய போதும் பிறரால் போற்ற முடிந்ததே தவிர அவர்தம் 
    வயிற்றுப் பசி 
    ஆற்ற முடியவில்லை.

    ஒருகாலத்தில் பைத்தியம் என பரிகசித்தித்தவர்கள்…. வரகரிசியை சேற்றோடு கலந்து சுவர் எழுப்பிய போது இடைக்காடன் புத்தி எடக்கு மடக்கு ஆகிவிட்டது 
    என கேலி பேசியவர்களில் செத்தவர் போக 
    மீதம் இருந்தவர்கள் 
    ஓடோடிவந்தனர்.

    இடைக்காட ரை
    இரு கை கூப்பி வணங்கி நின்றனர். 

    "சுவாமி …
    பஞ்சத்தால் சாவது ஒருபுறம் இருக்க இப்போது
    தாகத்திற்கு 
    தண்ணீர் இல்லை. எங்களின் சாவு நிச்சயம் ….
    அதுவரை தண்ணீராவது கொடுத்து உதவுங்கள்."

    காலைப் பிடித்தனர்.

    ஞானப்பழம் 
    கனிந்து உருகினார்.

    "வாருங்கள்…." அவர்களை 
    அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் கூடி
    குழி ஒன்றைப்
    பறிக்கச் செய்தார்.

    'வந்தது பாரு 
    ஊற்றென…' 
    ஊற்றுநீர் பீறிட்டது.

    திரண்ட மக்கள் 
    தாகம் நீங்கி 
    வாழ்த்தி வணங்கினர். 
    "சுவாமி …
    நீங்கள் 
    எங்கள் குலசாமி" கூக்குரலிட்டனர்.

    ஊர்க்காரர்களின் வாழ்த்தொலிகள் 
    மேல் உலகிலும் எதிரொலித்தது.

    அது
    நவக்கிரக நாயகர்களின் கூட்டத்தில் 
    விவாதமானது.

    "பஞ்சத்தை ஏற்படுத்தியது நாம். மக்களின் 
    பாவச் செயல்களாலும் ஆள்பவர்களின் தவறுகளாலும் தீர்மானிக்கப்படுவது பஞ்சம்.

    அதை மாற்ற 
    இவர் யார் ?" கோபப்பட்டனர்
    கிரக நாயகர்கள்.

    அவர் மகத்துவமிக்க மகா புருஷரால் ஞானம் பெற்ற 
    ஓர் ஞானபுருஷர்" என்றார் சூரியனார்.

    "இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்று ஒரு பேச்சு இருக்கிறது"
    என்று ஒரு மெல்லிய குரல் எழுந்தது.
    அது சந்திரனின் குரல்.

     "இடைக்காடருக்கு ஞானம் தந்த மகாபுருஷர்
    யார் தெரியுமா…?
    போகர்….!"
    ஒலித்தது 
    ஓர் ஓங்கிய குரல் ஆணித்தரமாக. அக்குரலுக்குச் சொந்தக்காரர் குருபகவான். 

    "அந்த மகானை 
    நாமும் பார்க்கலாம்… நியாயம் கேட்கலாம்.." சனிபகவானும்
    புத்தி நாயகன் புதனும் சுகநாயகன் சுக்கிரனும் வெற்றி நாயகன் செவ்வாயும் 
    தங்கள் அபிப்பிராயத்தை
    ஆழமாய் சொல்லினர். 

    'கேட்போம் நியாயம் ' கூட்டம் முழுமனதாக தீர்மானித்து
    பூமிக்கு உடன்
    விஜயம் செய்தது.

    "வாருங்கள்.. நவநாயகர்களே.." வரவேற்றார் இடைக்காடர்.

    சூரியன், சந்திரன் செவ்வாய், குரு 
    புதன், சுக்கிரன்,சனி ராகு, கேது 
    என ஒன்பது நீதிமான்களும் புன்னகைத்து அமர்ந்தனர்,
    அவரவர் 
    இருக்க வேண்டிய
    அமைப்பில்  அமர்ந்தனர்.

    "மகானே…
    எங்கள் சந்தேகம் 
    நீக்கப் பெற 
    இங்கு வந்துள்ளோம்.." சூரியன் ஆரம்பித்தார்.

    "எங்கள் சக்தியை தாங்கள் மீறி விட்டீர்கள்…"
    சுக்கிரன் 
    குற்றம் சொன்னார்.

    "ஆம்..பஞ்சம் என்பது நாங்கள் நிர்ணயித்தது.
    அதை நீக்கி விட்டீர்கள்.."
    செவ்வாய் சினந்தார்.

    "ஈசனே ஒருமுறை எங்கள் அனுமதி இன்றி செயல்பட்டு  அவனே இயங்காமல் போய்விட்டான் தெரியுமா ?"
    ராகு-கேது 
    கோபமாய் வெடித்தனர்

    "சர்வசக்தி படைத்த எங்களை மீறி 
    ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் ?"
    சந்திரன் 
    அமைதியாய் கேட்டார்.

    நவகிரக நாயகர்கள்
    இப்படிக்
    கேட்டார்களே தவிர மகாபுருஷரிடம் கொஞ்சம்
    பயம் இருந்தது.
    பேச்சில் நிறைய
    பணிவு இருந்தது.

    கனிவோடு அவர்களைப்
    பார்த்த இடைக்காடர் 
    "பதிலுக்கு முன்னர்… உபசரிப்பு.." 
    என்றார்.

    வரகரிசி 
    ஆட்டுப்பால்
    விருந்து.

    உண்டனர் நவநாயகர்கள்.

    உண்ட களைப்போ வந்த களைப்போ 
    சில நொடிகளில் உறங்கிப் போனார்கள்.

    இடைக்காடர் 
    அவர்கள் துயிலும் அழகை ரசித்தபடி ஜோதிடக் கலையின் ரகசியத்தை ருசித்தபடி 
    கிரக நாயகர்களை நகர்த்தி இடமாற்றி 
    அமைத்தார்.

    "இனி பிரச்சினையில்லை.. பஞ்சம் வராது."

    அதற்கேற்ற
    கிரக அமைப்பை சரிசெய்து விட்டு திருப்தியுடன் நவநாயகர்கள் விழித்தெழக் காத்திருந்தார்.

    இடைக்காடர் அமைத்த கிரகநிலை காரணமாய் 
    வெளியே மழை
    மாமழையாய் பொழியத் தொடங்கியது 

    மழை தந்த 
    இளம் குளிரும்
    அந்த  குளிர் சூடி ய
    மண் மணமும்
    நவ நாயகர்களை விழித்தெழச் செய்தன.

    கண் விழித்த நாயகர்கள் 
    முதலில் 
    உறங்கிய ரகசியம் புரிபடாமல் திகைத்தனர்.

    அமைதியின் சொரூபமாய் இடைக்காடர் அமர்ந்திருக்க ஆனந்தம் தாண்டவமாடியது அக்குடிலில்.

    மகா புருஷரின் மகாத்மியம் 
    கிரக நாயகர்களுக்குப் புரிந்தது.

    வெளியே மழை வெறித்தனமாய் பெய்து
    கொண்டிருந்தது.

    ஒரே நாளில் பஞ்சம் பறந்தோடிவிடும் பெருமழை.
    உலகம் கண்டிராத பேய்மழை.

    மன்னிக்கவேண்டும்… நாயகர்களே…

    மக்கள் துயர் கண்டு மனம் பொறுக்காமல் உங்கள் இடங்களை மாற்றிவிட்டேன்.
    பஞ்சம் தவிர்த்துவிட்டேன்"

    "அபசாரம் ! ஐயனே.…
    முக்காலம் உணர்ந்த  உங்கள் குணம் அறியாது 
    செயல் அறியாது  பிறவியின் நோக்கம் அறியாது
    நாங்கள் தான் தவறிழைத்து விட்டோம்…. ஆசீர்வதியுங்கள்.

    உயிரினங்களின் மீது தாங்கள் காட்டும் அன்பும் பரிவும் வழிபடத்தக்கது.

    ஆன்மநேயம் 
    உய்வுற
    வழியாய்
    சொல்லத் தக்கது."

    நவகிரக நாயகர்களுக்கு 
    அன்று ஓர்
    அதிர்ஷ்ட நாள்.

    சித்தபெருமானின் ஆசி
    நவகிரக நாயகர்களுக்கு ஒருசேரக் கிடைத்தது.

    அவர்கள் வணங்கியபடி வாழ்த்தியபடி விண்ணுலகம் பயணித்தார்கள்.

    மழைப்பொழிவு நிகழ்த்திய புண்ணியரின் புகழ் ஊரெங்கும் பரவியது.

    ஆண்டி முதல் 
    அரசர் வரை இடைக்காடரைத் 
    தேடி வந்து
    தொழ ஆரம்பித்தனர்.

  • குரு காணிக்கையாக தவ வலிமையைத் தந்த சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    போகருக்கு இணையான 
    யோகர்
    எவருமில்லை.

    சித்தர்களின் 
    சிறந்தவர் 
    போகர் பெருமானே.

    அப்படிப்பட்ட 
    போகரின் 
    ஞான வழித்தோன்றலே புலிப்பாணிச் சித்தர்.

    போகரின் 
    சீன வாழ்வு சிறப்புமிக்கது.

    குரு காலாங்கிநாதரின்  கட்டளையை ஏற்று சீனாவிற்குச் சென்று சீன மக்களுக்கென வாழ்ந்தவர் போகர்.

    சீன மக்களை உயர்த்தியவர். சீனநாட்டை மேம்படுத்தியவர்.

    போகர் சீனாவில் இருக்கும் போது அவருக்கு கிடைத்த அற்புதச் சீடரே புலிப்பாணி.

    சீன நாட்டின் 
    யூ எனும் இளைஞன் 
    போகர் மொழி கேட்டு அவரது சீடரானான்.

    அடிக்கடி உலகம் சுற்றும் போகர்
    உலகில் தான் கண்டதைச்
    சுவைபடக் கூறுவார்.

    அவரது உரை கேட்டு மறைமொழி உணர்ந்து அவரை சிக்கெனப் பற்றிக் கொண்டான் சீடன் யூ.

    ஒருமுறை 
    காய கற்பத்தை
    தான் மட்டும் உட்கொண்டால் போதாது என தன்னுடன் 
    எப்போதுமிருக்கும் நாய்க்கும் 
    கூடவே இருக்கும் சீடர்களுக்கும் தந்தார் போகர் முனி.

    உட்கொண்ட நாய் உடனே செத்து விழுந்தது.
    அடுத்து 
    எடுத்துக் கொண்ட யூவும்
    அரை நொடியில் மரணித்தான். 

    இதைக் கவனித்த 
    மற்ற சீடர்கள் 
    'விட்டேன் சவாரி '
    என அடுத்த வினாடி ஓடி மறைந்தனர்.

    எல்லாம் அறிந்த போகர் பிரான் சிரித்தபடி 
    நாயையும் 
    குருவே எல்லாம் 
    என்று விழுந்திருந்த யூவையும் உயிர்ப்பித்தார்.

    எப்போதும் உடன் வைத்துக் கொண்டு சீனத்து யூவுக்கு
    உபதேசம் தந்தார் .

    எல்லாம் கற்பித்தார் 
    ஞானம் கைகூடச் செய்தார்.

    அந்த யூ வே
    அந்த சீனத்து யூ வே பாரதத்து புலிப்பாணி.

    இப்படி ஒரு வரலாறு இயம்பிச் சிலிர்க்கிறது.

    இன்னொரு 
    கதையும் உண்டு. 

    எப்போதும் புலி மீதேறி பவனி வருவது
    இவரது வழக்கம்.

    புலியை வசியப்படுத்தும் வல்லமை கொண்டிருந்ததால் புலிப் பயணம் இவருக்கு சாத்தியமாயிற்று .

    ஒரு நாள் 
    போகர் 
    குடிப்பதற்குத்
    தண்ணீர் கேட்க குருநாதர் கேட்டு விட்டாரே என்ற அவசரத்தில்
    புலி மீது ஏறி காட்டிற்குச் சென்று
     கை நிறைய தண்ணீர் கொண்டு வந்தார் தன்னிகரில்லாச் சீடர்.

    புலி மீது சென்று தண்ணீர் கொண்டு வந்ததால் 
    புலியும் 
    தண்ணீரின் வடமொழியான பாணியும் சேர்ந்து புலிப்பாணி ஆனார்.

    காட்டில் 
    மூலிகை பறிக்கவும் சஞ்சாரம் செய்யவும் இவர் பயணித்தது 
    புலி மேல் தான் என்பது கூடுதல் செய்தி. 

    புலிப்பாணி பற்றிய தகவல்கள் கொஞ்சமே. ஆயினும் அவரது பங்களிப்பு 
    சித்த உலகிற்கு கொஞ்சமில்லை.

    போகருடன் இறுதிவரை இருந்தவர் புலிப்பாணி.
    அதுவே அவரை ஆக்கியது 
    ஞானக் கேணி. 

    அவருடன் இருந்ததாலேயே திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரம்மச்சாரியாகவே உடனிருந்தார்.

     அவருக்கு 
    உதவி புரிந்த வண்ணம் அருகிருந்தார்.

    தமிழகம் திரும்பிய போகர் 
    பழனிக்கு வந்தபோது பால தண்டாயுதபாணி சிலை செய்யும் பாக்கியம் கிடைத்தது.

    பழனியில் முருகப்பெருமானே சிலை அமைக்க போகரைக் கேட்டுக்கொண்டதாக புராணம் கூறுகிறது.

    எச்சூழலிலும் சிதையாத 
    நவபாஷண சிலையை போகர் அமைத்தார்.

    அச்சிலை செய்தது போகருக்கே சாத்தியம் என இன்றுவரை வியக்கிறது உலகு.

    அச்சிலைப் பணியில் போகரின்
     மூன்றாவது கரமாக விளங்கியது புலிப்பாணியே.

    நவபாஷண மூலிகைகளைப் பறித்து வந்ததும் பின்னாளில் அபிஷேகத்திற்குத் தினமும் 
    சண்முகநதி சென்று நீர் கொண்டு வந்ததும் புலிப்பாணியே.

    அவர் அதற்கு 
    பவனி வந்தது 
    புவி மயங்கும் 
    புலி மீதே.

    போகரே 
    புலிப்பாணியாரின்
    புலிப் பவனியை 
    ரசித்து 
    அவரது 
    தவ வலிமையைப் பாராட்டி 
    'புலிப்பாணி பாத்திர சுவாமிகள் '
    என்று அழைப்பாராம்.

    பழனி முருகன் சிலையைப் பாங்குற அமைத்த 
    போகர் பிரான் 
    அந்த அரிய வகை சிலையைப் பாதுகாக்கவும் பூசைகள் செய்யவும் புலிப்பாணியாரையே நியமித்தார் .

    அவ்வளவு நம்பிக்கை சீடன் மீது.

     நிறைவாக போகர் ஆரத்தழுவி ஆசீர்வதித்து விடைபெறும்போது புலிப்பாணி 
    ஓர் அனுமதி கேட்டார்
    குருவிடம்.

    எதையும் கேட்டிராத புலிப்பாணியிடமிருந்து 
    வேண்டுகோளா … வியந்தபடி என்னவென்று கேட்டார் 
    எதையும் அருளவல்ல போக முனி.

    " காலங்காலமாய் நவபாஷண சிலை பூசை செய்யும் பாக்கியம் 
    எனக்கு கிடைக்க அருள் தரவேண்டும்.. சுவாமி…"

    சின்னக் குழந்தை போல்
    புலிப்பாணி கேட்க 'அதற்கு என்ன ஆகட்டும் 'என்றார் போகர் பிரான்.

    பழனியில்
    காலையில் 
    எழுவார் புலிப்பாணி.
    அதிகாலை 
    பூஜையில் புகுவார்.

    பின்
    சண்முகா நதியில் 
    தூய நீராடல்.

    குடம் நிறைய 
    நீர் எடுத்து 
    பழனிமலை 
    அடிவாரம் வருவார்.

    அடிவாரத்தில் 
    ஒரு புலி காத்திருக்கும் .

    அதன்மேல் அமர்ந்து காடு மலை கடந்து முருகன் 
    சன்னதி அடைவார்.

    புலிப்பாணி இறங்குவார்.
    புலி ஓடிப்போகும்.

    இதுவே புலிப்பாணியின் வழிபாட்டு முறை.

    அதன் பின் தான் 
    300 வருட 
    பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு 
    விடை தந்து விட்டு திருமணம் புரிந்தார் 
    புலிப்பாணி.

    சந்ததி பெருகியது.

    நீண்ட காலமாய் அவரது பரம்பரையே நவபாஷண
    தண்டாயுதபாணி சிலையைப் 
    பூசித்து வந்தது.

    புலிப்பாணியிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் சீனா சென்று தத்துவங்களை 
    சீர்பட பரப்பினார் போகர் .

    காலம் கோலாகலமாய் விரைந்து சுழன்றது.

    போகர் அங்கிருக்க
    பழனியில் இருந்த புலிப்பாணி 
    முருகனடிமையாய் இருந்து  பூசையோடு சேவையோடு சேவையாய்
    தமிழ் நூல்கள் பல படைத்தார்.

    அவையாவும் 
    சித்தர் இலக்கியத்தின் கலைஞான பொக்கிஷங்கள். மருத்துவ உலகின் மகத்துவங்கள். ஜோதிடக்கலையின்
    களஞ்சியங்கள்.

    அத்தனையும் அமிழ்தம். 
    தமிழ்ப்பா அமுதம்.
    அருட்பா கடலில் 
    கடைந்தெடுத்த 
    ஞான அமிர்தம்

    பின்னாளில் 
    சீனாவில் 
    போகரின் 
    நிறைவு காலத்தில் தவவலிமை 
    குன்றிப் போனது.

    அவரைத் 
    தாய் மண்ணிற்கு அழைத்துவர 
    சீடர் புலிப்பாணி
    சீனா சென்றார்.

    உலகையே 
    உவகையுடன் 
    சுற்றி வந்த போகர்
     ஓர் அடி கூட நகர முடியாத நலிவு நிலை.

    புலிப்பாணி 
    அவரைத் தன் 
    முதுகில் அமர்த்தி 
    ககன மார்க்கத்தில் தமிழகம் கொண்டுவந்தார்.

    பழனியில் வைத்து குருவுக்குத் 
    தொண்டு செய்தார்.

    குருவுக்கு காணிக்கையாய் எதுவும் செலுத்தவில்லை என்ற எண்ணம் 
    அந்த குறைவில்லாச் சீடரிடம் 
    குறையாக 
    இருந்தது போலும்.

    ஒருநாள் 
    தன் தவ வலிமை அனைத்தையும் குருவுக்கு காணிக்கையாய்
     தந்து மகிழ்ந்தார்.

    குருவுக்கு சீடர் 
    தந்த இந்த காணிக்கை சித்தர் உலகம் காணாத
    ஒன்று. 

    குருவுக்கும் சீடருக்கும் இலக்கணம் சொல்வதென்றால் இவர்களைச் சொல்லலாம்.

    குருவின் ஆசியால் சீடரும் 
    சீடரின் காணிக்கையால் குருவும் 
    மகிழ்ந்திருப்பதும் உயர்ந்திருப்பதும் பழனிமலையில்.

    போகர் சித்தி படைத்த
    பழனி மலையின் காலடியிலேயே அதாவது அடிவாரத்திலேயே சீரிய சீடர் புலிப்பாணியும் ஒருநாள் சித்தியடைந்தார்.

    பழனிமலை செல்வோர் அடிவாரத்தில் 
    கிழக்குப் புறம் மலையேறும் பாதை அருகில் 
    புலிப்பாணிச் சித்தர்
    லயமான இடத்தில் வணங்கி 
    தவம் மேற்கொண்டு மேலே பயணித்தல் மிகுந்த பலன் தரும்.

    பக்தர் வருகையைப் பதிவு செய்பவர் அவரே.
    உடனே 
    போகருக்கும் 
    அவர் மூலம் முருகப்
    பெருமானுக்கும் பரிந்துரைப்பவரும் புலிப்பாணி சித்தரே.

    முதலில்
    புலிப்பாணி 
    அடுத்து
    முருகப்பெருமான்
    அதற்கடுத்து 
    போகர் என்பதே
    பழனிமலை வழிபாட்டின் வழிபாட்டுக் குறிப்பு. அதுவே சிறப்பு.

    சித்தர் நினைப்பே 
    ஒரு தவம்.
    சித்தரைப் படிப்பது
    ஒரு தவம்.
    சித்தர் பற்றி கேட்பது இன்னொரு தவம். சித்தர் வழி நடப்பது ஒரு பெருந்தவம். சித்தர் நிலை எய்துவது தவத்திற்கு தவம். சித்தர் தேடல் 
    ஒரு ஈடேற்ற தவம்.

    தேடுவோருக்கு  
    அத் தவமே தவம்.
    அருள் தரும் சிவம். அன்பே சிவம்.

  • மச்சேந்திரரும் கோரக்கரும்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கோரக்கர் சரித்திரம்
     ஒரு பெரிய சமுத்திரம்.
     அவர் பிறப்பே
     விசித்திரம்.

    காயகல்ப மருந்து 
    என கஞ்சாவையும் புகையிலையையும் சித்தர் மருத்துவம் வகைப்படுத்துவதின் பின்னணியில் இருக்கும் சித்தர் இருவர்.
    அவர்களில் ஒருவர் கோரக்கர்.

    கோரக்கர்
    திவ்விய சரித்திரத்தில் மச்சேந்திர முனிவரின் கதையும் அடக்கம். பிரம்ம முனியின்
     உறவும் அடக்கம்.

    கோரக்கர் உருவாய் நடமாடிய காலத்தில்
     குரு மச்சேந்திரருடன்
     இருந்த காலமே அதிகம்.

    அது பெரும் பகுதி எனச் சொன்னால் அதில் ஒருபாதி 
    சக சித்தர் 
    பிரம்மமுனியுடன் சேர்ந்திருந்த நாட்களும் 
    தவத்தில் தன்னைத் தொலைத்த நாட்களும் அடங்கும்.

    பிரம்ம முனியையும் கோரக்கரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்த சித்தர் உலகம் இருவரையும்
     'இரட்டைச் சித்தர்கள் ' 
     என சிலாகிக்கிறது.

    கோரக்கர்
     சிறப்பறிவதற்கு  மச்சேந்திரர்
     பிறப்பறிவது 
    சிறப்பாய் இருக்கும்.

    மச்சேந்திரர் பிறப்பு தெய்வ சித்தம்.

    ஆலகால விஷம் உண்ட சிவபெருமான்
     பார்வதி தேவிக்கு 
    ஆழ்நிலை விஷயமுள்ள மந்திரங்களை
     உபதேசம் 
    செய்து கொண்டிருந்தார்.

     இடம்
     கோடியக்கரை.
     கடற்கரை.

    ஆர்ப்பரிக்கும் கடல். சலிக்காத அலைகள்.
     மதி மயங்க வைக்கும் காற்று.

    மகாதேவனின்
     மந்திரச் சொற்கள் மாதேவியின் கவனச்சிதறலால் 
    அவள் செவிகளைச் சென்றடையவில்லை.

    பதிலுக்கு கடற்கரையில் கர்ப்பமுற்று இருந்த
      ஒரு மீனின் 
    செதில்களில் நுழைந்தன.

    அவ்வழியே கர்ப்பப்பையில் பிறப்புக்குக் காத்திருந்த குஞ்சொன்றின் செவிகளில் நிறைந்தன.

     மந்திரம்
     முடிந்த போது
     மீனின் வயிற்றிலிருந்து பிள்ளை 
     ஒன்று வந்தது.

    அது மானிட வடிவில் இருந்தது.

    உடன் மகேசன் முன்நின்றது.

     ஆதிசிவன் புன்னகைத்தார்.
     அவர் புன்னகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்.

    "மச்சத்தின் வயிற்றில் இருந்து வந்ததால் உனக்கு 
    மச்சேந்திரன் 
    எனப் பெயர் சூட்டுகிறேன்"

    மெத்த பெருமிதத்தோடு சிவபிரான் வாழ்த்த மச்சேந்திரன் பிறவியிலேயே
     திருவருள் கிடைக்கப் பெற்றார்.

    சிவனருள் நேரடியாக கிடைத்தாலும் மச்சேந்திரர்
    எப்போதும் 
    சிவ சிவ என 
    சிவனடி தேடி வந்தார்.

    ஒருநாள் 
    வழக்கப்படி 
    பிச்சை எடுத்துண்ண
    ஒரு வீட்டின் முன் 
    வந்து நின்றார்.

    அன்னமிட்ட அம்மா
     ஒரு பிராமணத்தி.

    அவள்
     மச்சேந்திரர் உருவத்தில் 
     தயவு கண்டாள்.

    "சுவாமி…
    பரிசுத்தமானவர் போல் இருக்கிறீர்கள்.

     என் மனம்
     நித்தம் கொள்ளும் வேதனைக்கு 
    விடியல் இல்லை.

    எனக்குப் 
     புத்திரப்பேறு இல்லை.
    இந்த வீட்டின் தரித்திரம் நீங்க வேண்டும்.
    சரித்திரம் படைக்கும் 
     ஒரு பிள்ளை வேண்டும்.
    வரம் தாருங்கள்…." வணங்கி நின்றாள்.

     "இதைச் சாப்பிடம்மா.. உன் ஆசை நிறைவேறும்."

    சுருக்குப் பையெடுத்து 
    உருக்கமாக இறைவனைத் 
    தொழுத வண்ணம் திருநீறு தந்தார்.

     "சாப்பிடம்மா…
    நல்ல பிள்ளை பிறப்பான்.

    பின் ஒரு நாள் 
    வந்து பார்ப்பேன்-
     அவன் உன்னோடு துள்ளி விளையாடுவதை."
    ஆசி தந்து விடைபெற்றார்.

    ஒன்பது ஆண்டுகள் உருண்டோடி இருக்கும்.

    ஒருநாள் மச்சேந்திரர் அவ்வழி வந்தார்.
    அந்த அம்மாவின் வீட்டின் முன் நின்றார்.

     உணவு வந்தது.
    " உன் மகன் எங்கே ? கூப்பிடு… பார்க்கவேண்டும். உணவெல்லாம்
     அவனைப் பார்த்த பின்னர் தான்…."

    முனிவர் கண்களை வீட்டினுள் 
    சுழல விட்டார். 

    அவரின் பார்வை 
    அந்த அம்மாள் மீது பட்டபோது 
    அத்தனை கண்ணீர் அவள் கண்களிலிருந்து.

    " என்னமா நடந்தது.?"

    "சுவாமி…
     நீங்கள் தந்த விபூதியை நான் வீதியில் 
     எறிந்து விட்டேன்.

     நீங்கள் பிள்ளை தரும் சாமியார் அல்ல..
     பிள்ளை பிடிக்கும் போலியார் 
     என பக்கத்து வீட்டுக்காரி சொன்னாள்.

     திருநீறை எடுத்தேயானால்
     சாமியார் பின்னால் சென்று விடுவாய்.

    அது நீறு அல்ல….வேறு. மந்திரித்த சாம்பல்"
     என பயம் காட்டினாள்.

     பயந்துவிட்டேன்….!
    அடுப்பு நெருப்பில்
     இட்டு விட்டேன்.
    பின் 
    அந்த குப்பைக் கூளத்தில் 
     சேர்த்து விட்டேன்…

    என்ன செய்வது…
     எல்லாம் என் விதி…

    பிள்ளை பாக்கியம் உங்களால் கிடைத்திருக்கும்..
     வீணாக்கி விட்டேன்."
     கண்ணீர் தாரைதாரையாகத் தரையைத் தொட்டது.

     முனிவருக்கும் அதிர்ச்சிதான்.
    ஆனால்
    சில நொடிகளில்
     மீண்டார்.

    " பரவாயில்லை.. தாயே….
    குப்பை கொட்டிய இடத்தைக் காட்டு.."

    காட்டினாள்.
     அது மாட்டுத்தொழுவம்.

     குப்பையும் கூளமாய் சாணியும் சகதியுமாய் ஒரு மலை போல் குவிந்து இருந்தது.

    அருகில் சென்ற மச்சேந்திரர் 
     'கோரக்கா…' என உணர்ச்சியாக உச்சரித்தார்.

    "வந்தேன் "
     என குரல் வந்தது.

    குப்பைகளை 
    ஒதுக்கிய போது 
    தவ நிலையிலிருந்தான் ஒன்பது வயது பாலகன்.

    " அம்மா….
     இந்தா உன் மகன்.

    உன் கருவறை தடுத்தாய்.
    தொழுவறை ஏற்றது.
    எனவே 
    இங்கு பிறந்தான்.

    ஆசையாய் அருகில் வந்தாள் அம்மா.

    " அம்மா….
     நீங்கள் வெறும் சும்மா..
    ஒரு பேருக்கு தான் அம்மா….

     உண்மையில் 
    இவரே என் 
    தாய் தந்தை.
    குருவும் இவரே."

    சிறுவன் பேச்சு கணீரென்று இருந்தது. அதில் அர்த்தம் இருந்தது.

    மச்சேந்திரர் முன்செல்ல
    அவருடன் 
     பின் சென்றவனே பின்னாளில் சித்தரானார்.
    மகா சித்தர் ஆனார்.

    மச்சேந்திரரின் 
    முதல் சீடர்
    முதன்மைச் சீடர்
    கோரக்கர்.

    ஞானம் 
    சித்துக்கள் 
    காயகற்பம் 
    காயசித்தி என படிப்படியாக யாவும் கிடைத்தன.

    குருவருள் திருவருள் ததும்பி வழிந்தது.

    எப்படியோ
    கர்வம் கொஞ்சம்
     காலடி ஏறி 
    தலைதனில் 
    கனத்து நின்றது.

    அவரது செருக்கைத் தகர்க்க
    தக்க சமயத்தில் வந்தார் 
    ஒரு மகா சித்தர்

    அல்லமாப்பிரபு .

    அவர்
     ஓர் அற்புத சித்தர். 
    சிவ அம்சம் 
    அச்சாய் நிறைந்தவர்.

    காலக் கணக்கில்லாத காகபுஜண்டருக்கு உபதேசித்த மூத்தவர்.

    காலாங்கி நாதர் 
    போல் 
    காற்றை உடலாகக் கொண்டவர்.

    ஒருநாள் 
    இறையருள் 
    அல்லமாப் பிரபுவையும் கோரக்கரையும் 
    கூட்டுவித்தது.

    தன்னைப் பற்றி தொகை தொகையாய் பெருமை பேசிய கோரக்கர் 
     கத்தி ஒன்றை 
    அல்லமாப் பிரபுவிடம் கொடுத்துத் தன்னை வெட்டச் சொன்னார்.

    வெட்டிய போது
     கோரக்கர் 
     உடலில் கத்தி
    பாய முடியவில்லை.

    எத்தனை முயன்றும்
     கூர் முனை
     மழுங்கியதே தவிர கத்தியின் கூர்மையும் சித்தரின் திறனும் வேலையாகவில்லை. வெற்றியாகவில்லை.

    "பார்த்தீர்களா…
     என் சக்தியை.
     காயசித்தி 
    பெற்று விட்டேன்.

    இனி நான் 
    கடவுள் போல…"
    கண்கள் விரித்து
     மனம் திறந்தார் கோரக்கர்.

    அல்லமாப் பிரபு அடுத்தவர் மனம் நினைப்பதை அறியும் ஆற்றல் பெற்றவர்.

     அமைதியாய் சிரித்தார்.

    இப்போது 
    அல்லமாப் பிரபு முறை.

     கத்தி கைமாறியது.

    குறை ஏதும் இல்லாத அல்லமாப் பிரபுவை கூர்முனைக் கத்தி கொண்டு வெட்டினார் கூர்த்த மதி கோரக்கர்.

    கத்தி உடலில் 
    பாய்ந்து சுழன்றது. முன்னும் பின்னும்
     முட்டிப் பார்த்தது.

    கோரக்கருக்குத் தான் வேர்த்துப் போனதே
     தவிர 
    வேறு ஒன்றும் நடக்கவில்லை.

    கோரக்கர் கத்தியை வெளியே எடுத்தார்.

    அந்த கத்தி 
    அச்சு அசலாக 
    புதியது போலவே கூர்முனை சற்றும் மழுங்காமல்
     போர்முனை செல்லவும் 
     தயாராக இருந்தது.

    என்ன ஆச்சரியம்…!
    கோரக்கருக்குப்
    பேச்சே வரவில்லை.

    அல்லமாப் பிரபு 
    அன்பு சுரக்க 
    கோரக்கர் முதுகை ஆதரவாக நீவியபடி சொன்னார்.

    "இன்னும் 
    பக்குவப் படு.
    உன் உடம்பு காயகல்பம் ஆகிவிட்டது.
    உன் மனது 
    காயகல்பம் அடையவில்லை.

    உடம்பும் உள்ளமும் காயகல்பம் அடைந்தால்
    உடம்பு லேசாகிவிடும் மனமற்றுப் 
    போய் விடும்.

    மேம்படு..
    உடம்போடு 
    நின்று விடாதே.
    கர்வம் தவிர்.
    சர்வமும் சித்தியாகும்." நறுக்கென்று சொன்ன அல்லமாப் பிரபு சுருக்கென்று 
    ஆசி தந்து
     விருட்டென்று 
    காற்றில் கரைந்தார்.

    நடந்ததைக்
    குருநாதர்
     மச்சேந்திரரிடம் கூறி
     உபதேசம் கேட்டார்.

    மச்சேந்திரரின் பதில் அல்லமாப் பிரபுவின்
    உபதேசங்களின்
     நகலாய் இருந்தன.

    அவை 
    கோரக்கரை செதுக்கின.
    செம்மைப் படுத்தின.

    இன்னொரு 
    பிச்சை சம்பவம் .

    குரு சீடர் உறவுக்கு மேம்பட்ட
     எடுத்துக்காட்டு அது.

    அது ஓர் 
    அக்ரஹாரம்.

    அங்கு பிச்சை 
    எடுக்கப் போனார் கோரக்கர்.

    அன்று 
    அந்த வீட்டில் 
    நீத்தார் நினைவு நாள். வீட்டம்மாள் 
    கீரை வடை 
    ஒன்று தந்தாள்.

    கீரை வடை 
    மணம் வீசியது.
    காரவடையாய்
    குருநாதரின்
     மனத்தைக் கவர்ந்தது.

    மறுநாள் கோரக்கரிடம்
    கேட்டார் மச்சேந்திரர்.

    " நேற்று மாதிரி இன்றும் வடை கிடைக்குமா….?"

    குரு விருப்பம்
     மறுப்பாரா சீடர் ?

    அதே வீட்டிற்குச் சென்றார்.
     அம்மணியிடம் 
    "நேற்று தந்த 
    வடை மாதிரி 
    இன்றும் தாருங்கள்.." வேண்டுகோள்
     வைத்தார்.

    அப்பெண்மணி கலகலவென சிரித்தாள். 

    "சுவாமி…
    நேற்று வீட்டில் விசேஷம் 
    அதனால் 
     வடை போட்டேன்….
    தினமும் 
    வடை செய்ய வாய்ப்பில்லை."

    கெஞ்ச ஆரம்பித்தார் கோரக்கர்.

    "என்ன சுவாமி….
    பசி துறக்க வேண்டியவர் 
    ருசியைக் கூட விடாமல்
      ரிஷி வேடம் போட்டிருக்கிறீர்கள் போலிருக்கே….!"
    கேலி பேசினாள்.

    "இல்லையம்மா.….
     இது என் 
    குருவின் விருப்பம்., நிறைவேற்றுவது 
    என் கடமை."

    "நல்ல குரு…
    நல்ல சீடர்… இருவருக்குமே நாவடக்கம்
     இல்லையே….!" ஓசையோடு சிரித்தாள்.

    ஆசையோடு 
    கோரக்கர் 
    தொடர்ந்து கெஞ்சினார்

    " என் குருநாதர் ஆசை.."

    "குருவென்றால்
    எதுவும் 
    செய்து விடுவீர்களா…? நாளை உங்கள் கண் வேண்டுமென்றால் பிடுங்கித் தந்து விடுவீர்களா….!"
    கேள்வி வந்தது. கேலியாய் ஒலித்தது.

    *நாளை என்ன…?
     இன்றே இப்போதே தருகிறேன் 
     என் கண்ணை…
    இதோ பார்….

    அதற்கு பதில் 
    நீ வடை தாம்மா."

    சொடுக்கிடும் நேரத்தில் 
    கண்ணைப் பிடுங்கி ரத்தம் சொட்டச்சொட்ட அம்மணி முன்பு
     வாழை இலையில் வைத்தார்.

    பதறிப்போனார் அப்பெண்மணி.

    மனம் பொறுக்காது வீட்டினுள் சென்று நெய்யிலே வடை சுட்டு ஓடிவந்து தந்தாள்.

    நெய் வடையோடு குருவிடம் ஓடினார் கோரக்கர்.

    வடையை வாங்கிய மச்சேந்திரர் 
    கோரக்கர் முகத்தை கவனிக்காது 
    ருசிக்க ஆரம்பித்தார்.

    கண் துருத்தி
     கண்ணீரும் ரத்தமும் வழிந்தோடியும் வாய்திறக்கவில்லை கோரக்கர்.

    அவ்வளவு குருபக்தி.

    உண்டு முடித்த பின் கோரக்கரைப் பார்த்தார் குருநாதர்.

    நடந்ததை அறிந்தார். துடித்துப் போனார்.

    'என்னே….குருபக்தி..!' இறுகத் தழுவினார்.

    இறையை நினைத்தார்.

    மீண்டும் 
    கண் புதிதாய் பூத்தது.
     அது முன்னைவிட ஒளியோடு இருந்தது.

    *நாளுக்கு நாள் 
    நீ உயர்ந்து வருகிறாய் என்னையும் மிஞ்சிய சீடராய் ஒளிர்வாய்"
     ஆசி தந்தார்.

    "கொஞ்ச நாள்
     மலையாள தேசம் செல்கிறேன்.
    நீ அங்கு வந்து
     அழைத்து வரவேண்டியிருக்கும்.

     செல்லட்டுமா…? சந்திப்போம்…!"

    விடைபெற்றார் 
    வடைப் பிரியரான மச்சேந்திரர்.
     

  • போகர் மீது வழக்குத் தொடுத்த சித்தர்கள்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    போகர் பிரான் மீது வழக்கொன்று பரமனிடம் வந்தது.

    வழக்குத் தொடுத்தவர்கள் சித்தர் பெருமக்கள்.

    வழக்கை ஒட்டி போகர் மீது 
    மூன்று சர்ச்சைகள் குற்றச்சாட்டுகளாக வைக்கப்பட்டன.

    குற்றச்சாட்டு – 1

    ஒரு சமயம்
    போகர் 
    ஒரு கணங்க மரத்தின் கீழ் 
    சிவமோனத்தில் ஆழ்ந்தார்.

    ஆழ்ந்தவர் 
    பிரம்ம நிலையில் அமிழ்ந்து போனார்.

    காலம் கடந்தது.

    அவ்விடம் காடாய் அடர்ந்தது .

    அவ்வழி வந்த 
    சிங்க ஜோடி ஒன்று அங்கேயே தங்கி வாழத் தொடங்கின.

    அருகில் இருக்கும் போகர் 
    சிலை போல் இருக்கவே 
    ஏதோ கற்சிலை 
    என விட்டு விட்டன.

    காலம் வேகமாக சுழன்றது.

     ஒரு நாள் ஆண்சிங்கம் கற்சிலை மடியில் ஆனந்தமாய் அனந்தசயனம் கொண்டது.

    வழக்கம்போல் நாவால் உடல் மேவிய சிங்கம் சிலை போல் இருந்த போகர் பெருமானை இதமாய் நக்கத் தொடங்கியது.

    போகரிடம் 
    எச் சலனமும் இல்லை.
    கற்சிலை தோற்கும் மோனநிலை.

    ஆனால் 
    கண்களில் மட்டும் கண்ணீர்.

    அது 
    கன்னத்தில் வழிந்து மார்பில் ஓடி சிங்கத்தின் 
    வாயில் பட்டது. 

    அத்துளி 
    ஓர் அதிர்வை உண்டு பண்ணியது.

    துள்ளி எழுந்தது சிங்கம்.

    அதன்பின் 
    உலகே வியக்கும் அற்புதம் நிகழ்ந்தது.

    சிங்கராஜா 
    ஓர் அரச குடும்பத்தில் அருந்தவ குழந்தையாய் அவதாரமெடுத்தார்.

    உரிய பருவத்தில் அரசராய் பொறுப்பேற்று நாடாண்டார்.

    ஒரு 
    சிறு கண்ணீர் துளியை உண்ட சிங்கம் 
    ஞானம் பெற்று 
    அரசன் ஆனது.

    ஞானமும் 
    அரச பதவியும் 
    ஒரு சிங்கத்திற்குத் தர 
    போகர் யார் என்பதே குற்றச்சாட்டு .

    குற்றச்சாட்டு- 2

    பொதிகை மலைச்சாரலில் போகர் இருந்த காலம்.

    உணவு சமைத்து உண்பது 
    அவர் வழக்கம்.

    உண்ட களைப்பில் ஒரு நாள் அவருக்குத்
    தூக்கம் வரவில்லை. 

    தாகம் தலைதூக்கியது.

    தண்ணீர் குடிக்க அருகில் இருக்கும் தெருவுக்குப் போனார். 

    அது அந்தணர் வாழும் அக்ரஹாரம்.

    கும்பலாக அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டு இருந்தது வேதியர் கூட்டம்.

    போகரின் பிச்சைக்காரத் தோற்றம் அந்தணர்களை அருவருப்புக்கு உள்ளாக்கியது.

    'சீய்… நாற்றம்… கிட்டே வராதே ! குமட்டுகிறது..'

    விரட்டியவர்கள் வீட்டிற்குள் 
    ஓடிக் கதவைத் தாழிட்டனர்.

    ஜன்னலில்
    'போகர்
    போய் விட்டாரா '
    என கண்களை மேயவிட்டனர்.

    துரத்தி விட்டதில் எரிச்சலடைந்த போகர் 
    குறுக்கே போன ஒரு பூனையைப் பிடித்து அதன் காதில் 
    ஏதோ சொன்னார்.

    தாவி ஓடி 
    ஒரு வீட்டின் கூரை ஏறிய அப்பூனை
    உரத்த குரலில் 'மியாவ் 'எனக்
    குரலிடவில்லை.

    அட்சர சுத்தமாக வேதம் ஓதியது.

    நாலுகால் பூனைக்கு 
    நான்கு வேதமும் போகர்
    சொல்லித் தரலாமா என்பதே குற்றச்சாட்டு.

    குற்றச்சாட்டு – 3

    இரசமணி போகருக்கு 
    கை கூடிய
    எளிய சித்தி.

    விண்வெளியில் பறக்க உதவும் குளிகையே இரசமணி.

    அதற்கு ஆதிரசம் என்னும் 
    அதிசய ரசம் 
    அதிகம் தேவை.

    உரோமபுரிக்குத்
    தென்புறத்தில் 
    ரசக் கிணறு இருந்தது .

    அதன் உரிமையாளர் சிவபெருமான்.

    போகர் பெருமான் அங்கே பறந்து போனார்.

    இப்படி யாரேனும் வந்து ஆதிரசத்தை அபகரித்துச் சென்று விடுவார்கள் என சிவபிரான் 
    பலத்த காவல் போட்டிருந்தார்.

    காவல்காரர்கள் எதற்கும் துணிந்த சிவ பூதகணங்கள்.

    போகர் 
    அவர்கள் கண்களுக்குப் படாமல் சென்று 
    ஒரு தேங்காய் குடுக்கையில் ரசத்தை எடுக்க முயன்றார்.

    ஆனால் ரசம் அவரை ஏமாற்றியது.

    தேங்காய் மூடியில் நிரப்பிய ரசம் சுருண்டு போனது. போகர் கையில் அகப்படாது 
    விலகி  நின்றது.
    ஓடி ஒதுங்கியது.

    எண்ணெய்க் கிணற்றின் உரிமையாளர் இறைவன் அல்லவா ?
    அவரை 
    ஏமாற்ற முடியுமா ??

    ஆனால் இறைவனின் குடுமி யாரிடம் என தெரிந்தவர் 
    போகர் ஆயிற்றே !

    கண்களை மூடி உமாதேவியை நோக்கி தியானித்தார்.

    அதன்பின் 
    அந்த சிவனையும் தியானித்தார்.

    அம்மன் அருளிய தம்பன மந்திரத்தை உச்சரித்தார்.

    ரசம் ஓடாமல் நின்றது. 
    பின் ரசத்தை 
    ஒரு பெரும் குடுவையில் நிரப்பினார் போகர்.

    புறப்படும்போது பூதகணங்களிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

    "சிவன் சொத்தையே கொள்ளை அடிக்கிறாயா ?" சீறினார்  தலைமை சிவபூதகணம்.

    " நான் யார் தெரியுமா….? மூலரின் பேரன்…! மூலர் சபித்தால் 
    நீ காலகாலமாய் கல்லாய் போவாய்" மிரட்டினார் போகர்.

    " நானொருவன் கல்லாய் போனால் பரவாயில்லை.. என்னைப்போல் ஆயிரமாயிரம் பேர் சிவன் சொல்கேட்டு காவல் காக்க காத்திருக்கிறார்கள்"

    அதற்குள் பூதகணங்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.

    அவர்களுக்கு 
    தன் சித்தாடல்  ஒன்றின் மூலம் கடல்நீரை கொட்டாங்குச்சியில் சுருக்கியும் பெருக்கியும் காட்டி அவர்களை 
    வியக்க வைத்து
    வணங்கவே 
    செய்து விட்டார். 

    "நடந்ததெல்லாம் பரமனுக்குத் தெரிந்தால் தண்டனை கிடைக்கும்" என கண்ணீர் விட்டனர் பூதகணங்கள்.

    "கவலை வேண்டாம்…. அவனன்றி 
    ஓர் அணுவும் அசையாது..  இதுவும் இறைவன் சித்தமே.."

    "மக்களுக்காகவே நான் ரசமணி தயாரிக்கிறேன்.

    இந்தாருங்கள்… உங்களுக்கும் ஆளுக்கு ஒரு ரசமணி தருகிறேன் பயன்படுத்திப் பறந்து பாருங்கள்"

    என்று கூறி அவர்களுக்கும் இரசமணி கொடுத்துவிட்டு போகர் ஆதிரசத்துடன்  விண்ணில் மறைந்தார்.

    சிவன் சொத்தை திருட முயற்சித்தது.. காவலர்களை ஏமாற்றியது.. அவர்களுக்கு லஞ்சமாக இரசமணி கொடுத்தது 
    என்பன 
    மூன்றாம் குற்றச்சாட்டு.

    இப்போதைய வழக்கு என்ன தெரியுமா?

    சவுக்காரம் 
    என்பது
    சித்தர் உலகில் உயர்ந்த விஷயம்.

    பெருமையும் அருமையும் ரகசியமும் கொண்டது.

    அதனை சகலரும் அறிந்துகொள்ள நூலாக்கி விட்டார் என்பதே வழக்கு.

    வெடியுப்பு 
    என்னும் 
    சவுக்காரம் பற்றி
    எவருக்கும் தெரியாதது
    தவறு எனத் தீர்மானித்தார் போகர்.

    அதை
    வெளிப்படையாய் பாடலாக்கி எல்லோருக்கும் பார்வையாக்கி விட்டார் . 

    பிரளயம்
    வராத குறைதான்.

    சித்தர்கள் கூடினர்.

    'யார் 
    சித்தர்
    ரகசியத்தை வெளியிட்டது ?

    அனைவருக்கும் தெரிந்தால் அகிலமே 
    சித்தர் 
    மயமாய் 
    மாறிவிடும்.

    உலகமே ஸ்தம்பித்து விடும்.

    போலிகள் 
    வசமானால்
    பிரபஞ்சமே மாயமாய்
    அழிந்து விடும்…

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..,' சித்தர் கூட்டம் விவாதித்தது.

    "திருமூலரின் 
    பேரனாம்…. காலாங்கியின் மாணவனாம்…
    போகர் 
    என்று பெயராம்.."

    கூர்முனி தான்அறிந்ததை தெரிவித்தார்.

    கூடிய சித்தர்கள் அகத்தியரின் பார்வைக்கு இவ்விஷயத்தை கொண்டு போய் தீர்வுகாணத் திட்டமிட்டனர்.

    "நீங்களே மூத்தவர்.. முடிவெடுங்கள்… ஆவன செய்யுங்கள்."

    சித்தர்கள் அகத்தியரை நிர்ப்பந்தித்தனர்.

    "போகர்
    அப்படித்தான்… மக்கள் நலன் என்பது 
    அவரது நோக்கு.

    எம்பெருமான் சிவபெருமான் தான் தீர்க்க வல்லவர்." என்று 
    தப்பிக்கப் பார்த்தார் அகத்தியர்.

    சித்தர்கள் விடவில்லை.

     "வாருங்கள் போகலாம்.…
    நானும் வருகிறேன்…"

    அகத்தியர் அவர்களைச் 
    ஆதிசித்தர்  சிவனிடமே
    அழைத்துச் சென்றார்.

    எப்போதும் மௌனமாய் இருக்கும் தட்சிணாமூர்த்தி சித்தர் 
    கூட்டம் கண்டு மௌனம் கலைத்தார்.

    " என்ன விசேஷம் ? எல்லோரும் வந்து இருக்கிறீர்களே…!"

    உலக 
    மகா நடிகர் 
    ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.

    குற்றச்சாட்டுகளை அடுக்கி குமுறினர் சித்தர்கள். 

    ' அமைதி… அமைதி என்று சப்தமிட்டவர்களை  அமைதிப்படுத்தினார் நந்திதேவர்.

    சிவநீதி மன்றம் அமைதியானது.

    சித்தர்களில்
    ஒருவர் உரத்த குரலில் சொன்னார்

    'வெடியுப்பு 
    கல்லுப்பு 
    வீரம் 
    தீட்சை விதி 
    யோக மார்க்கம் ஞானமார்க்கம் எல்லாம் பட்டவர்த்தனம்
    போகர் நூலில்.'

    அமைதியை மீறி கோபம் பரவியது.

    "போகரை அழைத்து வாருங்கள். 
    அவர்
    தரப்பைக் கேட்போம்."

    சிவபிரான் நடுநாயகமாய் நடுவில் நின்றார்.

    கூர் முனிவர் 
    போகரை 
    கையோடு
    அழைத்து 
    வந்தார்.

    " போகரே…."
    பரமனின்
    குரல் 
    கணீரென்று ஒலித்தது.

    "உம் மீது 
    அடுக்கடுக்காக
    புகார்கள் 
    வந்து கொண்டே இருக்கின்றன.

    ஒரு பூனைக்கு 
    நான்கு வேதங்களையும் உபதேசித்து 
    ஓதச் செய்தீர்…

    ஒரு சிங்கத்தை அரசனாக்கினீர்.

    என் பொறுப்பில் இருக்கும் 
    ரசக் கிணற்றிலிருந்தே காவலை மீறி எச்சரிக்கையை மீறி ஆதிரசத்தை அதிரடியாய்
    எடுத்து வந்தீர் ..

    இப்போது 
    புதிய புகார்.

    சித்தர் ரகசியங்களை நூலாக்கி உள்ளீராமே….?"

    "ஆம்… பகவானே.."

    "எங்கே அந்த நூல் ?
    படித்துப் பார்க்கிறேன்…"

    கையோடு கொண்டு வந்திருந்த நூலினைப் பணிந்து தந்தார் பரமனிடம்.

    "எனை 
    ஆளும்  இறைவா.. ! நானே படிக்கட்டுமா..?

    தட்சிணாமூர்த்தி
    மகிழ்வோடு தலையசைக்க போகர் படிக்கத் தொடங்கினார்.

    நீதியரசர் உன்னிப்பாய் கேட்டார்.

    போகர்
    ஒவ்வொன்றாய் படிக்கப் படிக்க
    ஒன்றிப் போனார் பரமேஸ்வரன்.

    கேட்க கேட்க இறைவன் முகத்தில் எல்லையில்லாப் பூரிப்பு….
    ஆனந்தம்…. பேரானந்தம்.

    இதைக் கண்ணுற்ற போகர் முகத்தில் 
    சூர்யப் பிரகாசம்.

    "எல்லாம் சரிதான்.. சித்தர்கள் 
    ரகசியம் காக்க விரும்புகின்றனர்.
    கொடுத்துவிடு… மலைக்குகையில் பத்திரப்படுத்தி விடுவோம் "
    இறைவன் ஆலோசனை சொன்னார்.

    இப்போது சித்தர்கள் முகத்தில் ஏகப் பிரகாசம்.

    "சுவாமி… ஏற்கனவே
    'ஏற்பவர் ஏற்க 'என அத்தனையையும் மக்களிடம் 
    வாரி 
    இறைத்து விட்டேன்"

    குற்ற உணர்வு ஏதுமின்றி 
    குரல் உயர்த்திச் சொன்னார் போகர்.

    இப்போதோ
    பரமன் முகத்தில் பல கோடி
    சூர்யப் பிரகாசம்.

    "அப்படியா 
    அதுவும் நல்லது…!"

    தன் தீர்ப்பை இப்படித்தான் ஆரம்பித்தார் இறைவன்.

    "கல்வி என்பதே
    ஒருவரோடு சுருங்கிப் போவதல்ல.

    கல்வி கற்பது போதிப்பதற்கு..

    பலரிடம் சேர்த்தலே பலரைச் சென்றடைவதே படைத்தலின் நோக்கம்.

    அது படைக்கும் நூலுக்கும் பொருந்தும்.

    மக்களுக்காகவே உலகு.

    சித்தர்களே…! பொறாமை.. காழ்ப்புணர்வு… சுயநலமே 
    உங்கள் புகாருக்கு அடிப்படை "

    சுப்ரீம் தீர்ப்பு.

    சித்தர்கள் இறைவனை வணங்கி விடைபெற்றனர்.

    போகரை 
    வாழ்த்தி
    உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தார்
    கைலாய நீதியரசர்.

  • யாகமா ? தவமா ?

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பொதுவாக சித்தர்கள் 
    அம்மன் பக்தர்களாய் இருப்பர். 

    சித்தி பெறுவதற்கு அடிப்படைத் தகுதியே 
    அம்மன் பக்தியே.

    அந்தவகையில் சித்தர்களில் 
    சிறந்தவரான கொங்கணர் 
    ஓர்
    அம்மன் பக்தர்.

    அம்மன் வழிபாடு அவருக்கு அனைத்துமாய் இருந்தது.

    குறிப்பாக கொங்கணர் மாரியம்மன் பக்தர்.

    மாரி மைந்தன்.

    இரும்பை உருக்கி கலங்கள் தயாரித்து சிவன் கோயிலில் விற்பது 
    அவர் பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத்தொழில்.

    அழகிய சிறுவனாய் கொங்கணர் சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும் 
    அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள்.

    வாலிபராய்
    வலம் வந்தபோதும் அம்மனே
    அவர் கனவிலும் நினைவிலும் அன்னையாய் கலந்திருந்தாள்.

    முக்தி
    என்பாளுடன் திருமணம் நடந்தது.

    மனைவியுடன் மகிழ்ந்திருந்த
    போதும் கூட மாரியம்மனே மனதில் நிறைந்து இருந்தாள்.

    இந்நிலையில் அடிக்கடி 
    அவர் பாதை வேறென்ன 
    ஓர் எண்ணம் எழுந்து 
    உள்ளத்தை உசுப்பியது.

    வாய்த்த மனைவி பேராசைக்காரி. பணம் பணம் என்பதே அவளது நிரந்தர பல்லவி.

    'செல்வமே சக்தி ' என்பது 
    முக்தியின் வேதம்.

    'சம்பாதிப்பவனே சிறந்த மனிதன்.. மற்றவர்களெல்லாம் பேடி 'என பரிகசிப்பாள் அவள்.

     கொங்கணர்
    அவள் நச்சரிப்பால் தொழிலில் கவனம் அதிகம் கொண்டார்.

    நல்ல வருமானம் நாளும் பெருகியது.

    ஆனால் அவர் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்தியது. அவர் மனம் ஆன்மீகம் தேடியது.

    மனைவி பெயரில் தான் முக்தி.. கொங்கணர் 
    நாடிய சக்தியை 
    முக்தியை 
    அவள் தரவில்லை.
    அதனால்
    விரக்தியே மிச்சமாய் 
    விஞ்சி நின்றது.

    வேதியரை ஞானியரை சாதுக்களைக் கண்டால் போதும் ஓடியோடி 
    அவரடி தொழுவது கொங்கணர்
    வழக்கம்.

    அவர்களுக்குப் பசும்பால் தந்து உபசரிப்பார்.

    வந்தவர்கள் பதிலுக்கு 
    ஞானப் பாலை அவருக்கு அளிப்பர்.

    'இருப்பினும் இன்னும் சம்பாதிக்க
    வேண்டும்..
    சொத்து சுகம் பெருக்க வேண்டும் ' என்ற தலையணை மந்திரம் 
    பெரிதாய் கொங்கணரிடம் வேலை செய்தது.

    நிறைய சக்திகள் பெற வேண்டும். சித்திகள் கற்று உயர்நிலை 
    அடைய வேண்டும்.

    இரும்பைத் தங்கமாக்கி 
    புகழ் , பொருள் பெறவேண்டும்.

    இம்சை அரசி இல்லாளிடம்  நற்பெயர் 
    பெற வேண்டும்.

    அதற்கு 
    முனிவர்
    சித்தர் 
    யாரிடமாவது கற்றுணர வேண்டும்.

    என்றெல்லாம் அடிக்கடி
    அசைபோட்டார்.

    ஆசை 
    அதற்கோர் 
    நாள் பார்த்தது.

    எளிமைக்கு இலக்கணமாய் சித்தர்கள் திகழ்வர். இதற்கு முற்றிலும் மாறுபட்டவராய் கொங்கணர் இருந்தார்.

    ஆசை 
    செல்வம் 
    படோபடம் 
    கோபம் 
    அலட்சியம் 
    வேகம் 
    மனைவி சொல்லே வேதம்
    என பலப்பல பன்முக குணாதிசியங்கள் அவரிடம் 
    அதிகம் இருந்தன.

    அத்தனைக்கும் பின்னால் 
    அவரை மணந்தவள் இருந்தாள்.

    மனையாட்டி ஆட்டியபடி 
    ஆடியது மணி.
    சப்தமும் எழுந்தது.

    ஆனால் அது  வெளிக்கு !

    உள்ளே
    அவர் நிலை தேடல்களாய் நிரம்பியிருந்தது

    இரண்டு நிலைகளால் இருண்ட குழப்பமே நிதமும் தொடர்ந்தது. 

    காடு மலை குகை சென்று வந்தால் குருவைக் காணலாம் 

    அவர் சொல்படி நடந்தால் 
    அம்பிகையை அடையலாம் 
    என மனக்குரல் தினம் தினம் சொல்லச் சொல்ல அவர் யாரிடமும் சொல்லாமல் 
    ஊரிடமும்  சொல்லாமல் கானகம் செல்ல விருப்பப்பட்டார்.

    அதற்கெனத் திட்டமிட்டார். 

    அது சமயம் 
    ஒரு சித்தர் திருவாடுதுறை
    வந்திருப்பதாக காற்றுவாக்கில் 
    ஒரு சேதி வந்தது.

    காற்றை விட வேகமாக ஆடுதுறைக்கு  ஓடினார்.

    அவரைத் தேடி அலைந்து திரிந்தார்.

    ஒருநாள் அவருக்கு திருநாளாய் அமைந்தது.

    அடர்ந்த மரத்தடியில் ஓர் ஒளி சிந்தும் சித்தரைத் தரிசித்தார்.

     அவர் போகர்.

    ஆச்சரியத்தோடு  'அடைக்கலம் ' என்றபடி 
    அவர் 
    பாத மலர்களைப் பற்றினார்.
    கண்களால் ஒற்றினார். 
    நெற்றியால் வருடினார்.

    ஸ்பரிசம் பட்டதும் தவத்திலிருந்த
    போகர் விழித்தெழுந்தார்.

    பார்த்த மாத்திரத்தில் கொங்கணரைப் பிடித்துப் போயிற்று போகருக்கு.

    கொங்கணர் 
    சிங்கமென சிலிர்த்து தங்கமென 
    ஒளிரப் போவது அவருக்குத் தெரிந்து போயிற்று.

     "யாரப்பா நீ…?"

    "அடியேன் தேவிதாசன். அம்பாள் பக்தன். அவளடி வாழ்பவன். 
    அவளை அடைய வழி தேடி வந்தேன்.

    நீங்கள் போதிக்க வேண்டும்"
    ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

    "உன் பெயர் ?

     பதில் இல்லை.

     "எங்கிருந்து வருகிறாய்…?"

    "கொங்கண தேசத்திலிருந்து…" தன் முன்கதைச்
    சுருக்கம் தந்தார்.

    "ஓ …கொங்கண நாட்டுக்காரனா ? உன்னை கொங்கணர்
    என்றே அழைக்கிறேன்".

    அந்த திருநாமமே நிலைத்துப் போனது.

    போகர் சூட்டிய பெயர் 
    கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் நிலைத்து நிற்குமன்றோ ?

    நின்றது…!
    நிற்கிறது.!!
    கொங்கண சித்தர் கொங்கண முனிவர் கொங்கண நாதர் கொங்கண நாயகர் என அப்பெயரே விரிந்தும் திரிந்தும் சிறந்தும் வியாபித்தது.

    அதன் பின் –
    பிடித்துப்போன
    கொங்கணருக்கு அம்பிகையை 
    அவள் திருவடிகளை இறுகப் பிடித்துக் கொள்ள மந்திரத்தை வழிபாட்டைப் போதித்தார்.

    ''கொங்கணா.…
     உன் முயற்சி பலிக்கட்டும்.

    மனிதர் தொல்லையில்லா இடம் சேர்.

    தவம் செய் 
    எல்லாம் 
    செயல் கூடும்."

    ஆசீர்வதித்தார்.
    விடைகொடுத்தார்.

    காடேகும்
    காலம் வந்த மகிழ்வில் கொங்கணர்
    காடு புகுந்தார்.

    காட்டில்
    அவரின் தேடலில் அற்புத மலையொன்று அவரை அழைத்தது.

    மேலேறினார். தவத்தில் ஆழ்ந்தார்.
    ஓங்காரியிடம் ஒன்றிப் போனார்.

    தவத்தில் இருந்தபோது 'யாகம் செய்..
    அதில்தான் நிறைந்த பலன்கள் விரைவில் கிடைக்கும்'
    என 
    அசரீரி கேட்டது.

    கொங்கணர் 
    தவம் விழித்தார்.
    தவமா யாகமா
    மனதில் போராட்டம்.

    எதுவாயினும் விரைந்து கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கு 
    ஆர்வம் இருந்தது.

    சீக்கிரமே எதையும் அடைந்துவிட வேண்டும் என்னும் பேராசை இருந்தது.

    மனைவியிடம் நற்சான்றிதழ் 
    பெற வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது.

    எனவே 
    போகர் சொல்லிய தவத்தை விட்டு யாகப் பாதைதான் யோகப் பாதை 
    என களத்தில் இறங்கினார்.

    அபூர்வ சக்திகள் அவரை அடைந்தன.
    சித்திகள் சிலவும் சித்தி ஆயின.

    சக்தி மிக்கவராய் தன்னை உணர்ந்தவர் தலைக் கனமாய் காட்டில் நடந்தார்.

    வழியில் 
    ஒரு சமாதி தெரிந்தது.
    அருகில் சென்றார்.

    அகல விரிந்த சமாதியிலிருந்து சித்தர் ஒருவர் எழுந்து வந்தார்.

    ஒளி…!
    பேரொளி..!! கொங்கணரின் கண்கள் 
    ஒளி வெள்ளத்தில் சுருங்கிப் போயின.

    வந்தவர் 
    கௌதம மகரிஷி.

    எடுத்தவுடன் கேட்டார்
    "ஏனப்பா தவம் நிறுத்தினாய்…. யாகம் வேண்டாம்..".

    தவத்தைச் செய்து சிவத்தை அடைவது சித்தர் பாரம்பரியம்.

    உன் செயல் தவறு.

    சித்திகள் எல்லாம் தெய்வ சத்துக்கள் கொண்டவை தான். இருப்பினும் 
    அவை 
    வீணானானவை. வெத்து வேட்டுகள்"

     எச்சரித்தார்.

    அவர் சொல்வது புரிவது போலிருந்தாலும் புரியாதது போலவும் இருந்தது.

    கௌதமர் எச்சரிக்கையை விட மன நச்சரிப்பும் மனையாள் நினைப்பும் வெற்றிகொண்டன.

    மீண்டும் யாகம் தொடங்கினார்.

    துவக்க நேரத்தில் மீண்டும் வந்தார் கௌதம மகரிஷி.

    "சொன்னால் கேள் …
    பின்னால் 
    வருந்த நேரிடும்.

    கடவுள் கூட
    உன்னைப் போன்றோருக்கு சில சித்திகள் தருவார்.

    அதிலிருந்து 
    மீள வேண்டும்.
    அதற்கு 
    அடுத்த படிகள் 
    ஏற வேண்டும் .

    மீளாதவர் அச்சித்துகளைக் கொண்டு
    சித்தாடி விட்டு ஒருநாள் போவார் செத்து.

    அவர் நிலை
    சிவம் ஆகாது.
    அழுகும் சவமாகும்.

    சாகா நிலை 
    என்னும் 
    சிவம் எய்ய
    தவம் கொள்… அதுவே நல்லது.!"

    கௌதமரின் குரல் கொங்கணரின் சிந்தையில் ஏறவில்லை. 

    யாகம் தொடர்ந்தார். இன்னும் பல சித்திகள் கூடின.

    பற்பல குளிகைகள் செய்தார். அவற்றின் பலனால் அற்புதங்கள் நிகழ்த்தினார்.

    உலகம் மெச்சியது. சந்தித்த முனிவர்களிடம் சாதிக்க பலவற்றைக் கேட்டுக் கற்றார்.

    ஒருநாள் திருமழிசை ஆழ்வாரைத் தரிசிக்க நேர்ந்தது.

    அவரிடம் தன்னிடமிருக்கும் செம்பை பொன்னாக்கும்
    குளிகையைக் காட்டி பெருமிதமாய் கர்வம் கொப்பளிக்கப் பார்த்தார்.

    கொங்கணர்
    யாக பலனாய் பெற்ற குளிகையைத் திருமாளிகைத் தேவர் 
    அதிசய படாமல் நோக்கிவிட்டு 
    தன் 
    உடல் அழுக்கைத் திரட்டி 
    அந்த உருண்டையைக் காட்டி 
    'இது 
    அதை விட சாதிக்கும்.' 
    என்றார்.

    அரைநொடி அழுக்கில் 
    திரட்டித் தந்து கூறிய வார்த்தை கொங்கணர் செவிகளில் தேளாய் கொட்டியது.

    "அப்பனே….
    சித்திகளில் மகிழாதே. விளம்பரம் தேடாதே. விபரீதமாய் போகும். 

    உன் எல்லை
    அவைதான் என இறைவன் அறிந்தால் 
    உன் நிலை 
    மேலேறாது. அப்படியே 
    நின்று விடும்.

    ஏற்ற வேண்டியது
    குண்டலினி.

    இதெல்லாம் இடையில் கிடைக்கும் 
    அருள் தீனி அவ்வளவே.

    வெறும் 
    நொறுக்குத் தீனி பசியாற்றாது.

    பரமன் பதம் சேராது. 
    இறை பற்றாது. கரை சேர்க்காது.

    தவமே சத்தியம். தவம்…
    ஆழ் தவம்… பெருந்தவம்….
    நீள் தவம்…
    அத்தவம் கொள்."

    தேவர் சொல்லிவிட்டு மறைந்தார்.

    போகர் கற்பித்தது.. கௌதமர் எச்சரித்தது… இப்போது 
    மாளிகைத் தேவர் வலியுறுத்தியது…. தவமே.

    கொங்கணர் மனம் கொஞ்சம் மாறியது.

    'தவத்தைப் பார்க்கலாம் '
    என முடிவு செய்தார். ஆழ் தவத்தில் ஆழ்ந்து போனார்.

    யாகத்திற்கும் தவத்திற்கும் இருக்கும் 
    மலை நிகர் பேதம் புரிந்த நிலையில் அகம் விழித்தது.

    அக்கணமே அவருக்கு கிடைத்திருந்த 
    'பூரண சித்தி ' ஏவலுக்கு காத்திருந்தது.

    அந்த சக்தி 
    அந்த சித்தி 
    ரசவாத வித்தை.

    இம்முறை கொங்கணரின் மனம் கூத்தாடவில்லை.

    அவ்வித்தை அற்புதம் தான்.

    ஆனால் 
    அம்மாபெரும் சொத்தை 
    அவர் விரும்பவில்லை.

    சிவம் தேடுவோருக்கு 
    அது அவஸ்தை 
    என நினைத்தார்.

    அது வெறும் சொத்தை 
    என தெளிந்தார்.

    எளிமையே ஆபரணம் 
    என உணர்ந்தார்.

    பக்குவ நிலைக்கு பாய் விரித்து
    சேய் போல் மெய்யாய்
    கலந்து ஒளிர்ந்தார்.
     

  • ரசவாத சித்தர் காலாங்கி நாதர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்
     
    அன்றொருநாள்…

    பாரத தேசத்தில் 
    ஒரு பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

    மழை..
    அடர் மழை..
    தொடர் மழை…

    நாடே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

    பேய் மழை 
    தொடர்ந்து பெய்து பூமியை நிரப்பிய வண்ணமிருந்தது.

    நீர்மட்டம் உயர உயர
    மக்கள் தவித்தனர். மாண்டனர் பல பேர்.

    உயரே செல்வதே
    உயிர் தப்பிக்க 
    ஒரே வழி..
    உன்னத வழி.

    மலை மீது ஏறினர் மக்களில் சிலபேர்.

     அவர்களில் ஒருவர்
    ஒரு மலை மீது கிடுகிடுவென 
    ஏறிக் கொண்டிருந்தார். 

    அருகில் சென்று பார்த்தால் 
    அவர் 
    சாதாரண மனிதர் அல்ல
    என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது.

    கூர்ந்து நோக்கினால் ஒரு மகான் போல் இருந்தார்

    அவரின் பார்வையில் பிரகாசம் ஒளிர்ந்தது.
    தேகம் கூட 
    பேரொளி வீசிக்கொண்டிருந்தது.

    அவர் யாராயிருக்கும் ?

    மேலே 
    மலைமேலே 
    அவரைப் போலவே பலரும் 
    வந்து சேர்ந்து இருந்தனர்.

    எல்லோருக்கும் 
    ஓர் ஒற்றுமை.
    அவர்கள் 
    அத்தனை பேரும் 
    ஒரு சித்தரைப் போல ஓர் ஞானியைப் போல ஒரு பித்தனைப் போல வித்தியாசமாய் இருந்தனர்.

    புதிதாய் வந்தவரைப் பார்த்ததும் 
    அவர்கள் மகிழ, பார்த்தவர்களைப் பார்த்து 
    வந்தவர் மகிழ அறிமுகப்படலம் ஆரவாரமாய் ஆரம்பித்தது.

    " நான் காலாங்கி.." என்றார் வந்தவர்.

    இருந்தவர் யாவரும் சமகால சித்தர்கள்.. தவஞானிகள்… சித்துக்கள் பல 
    அறிந்தவர்கள்.
    சித்தாடல்கள் 
    புரிந்த  வித்தகர்கள் .

    அன்பு விரிந்தது.
    புதிய நட்பு பூத்தது.
    ஆனந்தம் அருகில் . தாண்டவமாடியது.

    தான் கற்றதையும் பெற்றதையும் 
    பிற சித்தர்களுக்குக் கற்பித்தார் காலாங்கிநாதர்.

    பதிலுக்கு தாங்கள் கற்றதை 
    காலாங்கிக்குச்
    சொல்லித் தந்தனர் அம்மலை வாழ்  சித்தர்கள்.

    காயகல்ப முறைகளும் ரசவாத வித்தைகளும் பிரதானமாக இருந்தன அவர்களின் 
    அக்குருகுலத்தில்.

    இப்படிச் 
    சில காலம் 
    பயனுற அமைந்ததால் காலங்கிநாதர் பேரானந்தம் அடைந்தார்.
    பெருமிதம் கொண்டார்.

    அந்த மலை
    இந்த சித்தருக்கு பிடித்துப்போனது. அங்கேயே 
    தங்கிவிட 
    முடிவு செய்தார்.

    அவருக்குப் பிடித்த
     அந்த மலை சதுரகிரி.

    எவருக்கும் பிடிக்கும் சதுரகிரி மலை.

    அன்றும் இன்றும்
     என்றும் 
    அருவாய் உருவாய் அருவுருவாய் எண்ணிலா கோடி
     சித்தர் பெருமக்கள் அருள்பாலிக்கும் மலையே சதுரகிரி.

    பதினெண் சித்தர்களின் பார்வையும் பாதங்களும் 
    ஆழப் பதிந்த இடமே சதுரகிரி.

    ஒருநாள் காலாங்கிநாதர் சதுரகிரி மலையில்
     ஒரு தடாகம் கண்டார்.

    தடாகத்திற்கு 
    அருகில் ஒரு புலி 
    கம்பீரம் பீறிடப்
    படுத்திருந்தது.

    அந்தப் புலி 
    இந்த அருள்தவழும் சித்தரைக் கண்டு உறுமவில்லை.. பாயவில்லை… அமர்க்களமாய் ரசித்தபடி இருந்தது.

    சித்தருக்குத் தெரியாதது 
    எது உள்ளது உலகில் ?!

    அது புலி அல்ல…
    ஓர் ஞான புலி…
    புவி போற்றும்
     பேரொளி !
    எனப் புரிந்தார்.

    புலி 
    வடிவத்திலிருக்கும் சித்தர் அருகில் காலாங்கி வந்தார். காலடி தொழுதார்.

    மக்கள் தொந்தரவு தவிர்க்க –
    தவத் தனிமை கெடாதிருக்க 
    இப்படி ஏதேனும் 
    வடிவம் எடுப்பது சித்தர்கள் வழக்கம்.

    திடீரென

    புலிச் சித்தர் உருமாறினார்.
    தெய்வச் சித்தராய் காட்சியளித்தார்.

    நிறைய 
    உபதேசங்கள்
     செய்தார்.

    காலாங்கி நாதருக்கு சதுரகிரித் தாய் 
    ஆதி மனோன்மணி அருளிருப்பதாய் அகமகிழ்ந்து வாழ்த்தினார்.

    மனம் நிறைந்து மறைந்தார்.

    அதன்பின் 
    காலங்கி சித்தர் 
    மகா சித்தரானார்.

    இப்படித்தான் 
    ஒரு நாள் 
    ஓர் ஆமையைக் கண்டார்.

    அது ஆமை அல்ல.. அதுவும் சித்தர் 
    என அறிந்து 
    தாள் பணிந்தார்.

    அச் சித்தரின் கருணையையும் அருளையும் 
    காலாங்கி பெற்றார்.

    பிறிதொரு நாள் 
    வராக வடிவில்
    வாராது வந்த மாமணியாய்
    வராகி சித்தர்….

    யாருமே 
    யூகித்தறிய முடியாத அவரைக் கண்டுணர்ந்து வணங்கியதால் யாருமே பெற முடியாத ஞான உபதேசங்கள் 
    அவரிடம் பெற்றார்.

    யார் கண்களுக்கும் புலப்படாத –
    புனிதர் கண்களுக்கு மட்டும் தென்படும் வராக சித்தர் காலாங்கி நாதருக்கு நேரில் ஆசி தந்தது
    குருவருள் திருவருள் அன்றி 
    வேறெது இருக்கும் ?

    இப்படி 
    சிங்க சித்தர் 
    வாமன சித்தர் 
    பரசுராம சித்தர்
    ராம சித்தர்
    பலராம சித்தர்
    கிருஷ்ண சித்தர் குதம்பைச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் வேதாந்த சித்தர்  போகர் சித்தர் ஞானசித்தர் 
    கஞ்சிமுகிச் சித்தர் 
    என
    வாழையடி வாழையென 
    வந்த சித்தர் திருக்கூட்டத்தை சதுரகிரியில் கண்டார்.
    பெறற்கரிய 
    ஞானக் கல்வி பெற்றார்.

    ஆதி சித்தரை
    நவநாத சித்தர்களை
    பதினெண் சித்தர்களைப்
    பார்த்து மகிழ்ந்தார்.
    அவர்களுடன் 
    ஒன்றி மலர்ந்தார்.

    சதுரகிரி உச்சியில் 
    சித்த அனுபவ உச்சத்தில்
    உலவி வந்தார்.

    சதுரகிரியும்
    காலாங்கி நாதரும்
     மிச்சம் மீதம் இல்லாத ஆன்மீக உச்சத்தைத் தொடத் தொடங்கினர்.

    ஒருமுறை
    சதுரகிரியில்
    காலாங்கிநாதர்
    தவத்தில் 
    இருந்த சமயம்.. 
    வணிகர் ஒருவர் அவரைத் 
    தரிசித்து நின்றார்..

    'என்னப்பா '
    என்றார் சித்தர்.

    "சிவ ஆலயம்
     ஒன்றினைக் 
    கட்ட ஆரம்பித்தேன்.

    கட்டத் 
    தொடங்கியது 
    முதல் 
    என் கட்டம் 
    சரியில்லை.

    சொத்து பத்து அத்தனையும் 
    மிச்சம் மீதமின்றி கொட்டியும்
    பாதி கூட முடியவில்லை.

    என்னால் எதுவும்
     செய்ய முடியவில்லை.

    ஜோதியாய் தெரிகிறீர்கள்…

     உதவுங்கள்.. சுவாமி "
    கெஞ்சினார்.
    கதறினார். 
    காலைப் பற்றினார்.

    எத்தனை சொல்லியும் பற்றியதை
    விட்டாரில்லை.

    பற்றிலா
    சித்தர் மனம் 
    ஏனோ ஒப்பவில்லை. மௌனமாய் இருந்தார்.

    விடாக்கண்டரான வணிகர் விடவில்லை.
    அவருடனேயே தங்கி பணிவிடைகள் செய்தார்.

    அவரது 
    மன உறுதியையும்
    சிவ பற்றையும் போற்றிய 
    மாமுனி அவருக்கு 
    உதவ முடிவெடுத்தார்.

    சதுரகிரி மலையில் இல்லாதது இல்லை…! சித்த ரகசியங்கள் ஆயிரமாயிரம்…! மூலிகைகள் பல்லாயிரம்….! பலாபலன்கள் பலகோடி பல்லாயிரம்!

    வணிகர் வந்தது
    சதுரகிரிக்கு ! சரணடைந்தது 
    முக்காலமறிந்த காலங்கிநாதரிடம் !! பலன்இல்லாமலா போகும் ?

    சதுரகிரி மலையில் விரவியிருந்த
    அரிய மூலிகைகளைப் பறித்து வந்து 
    தைலம் ஒன்றைத்
    தயாரித்த 
    காலாங்கி சித்தர் 
    அத்தைலத்தைக் கொண்டு 
    தங்கம் தயாரித்தார்.

    அடடே …
    கோடிச் சூரிய ஒளி தோற்கும் பொன்னிறம். தகதகவென 
    ஓங்கி ஒளிர 
    சதுரகிரியே 
    திணறித் தான் போனது.

    "வேண்டிய மட்டும் எடுத்துச் செல்…

    கோயில் லட்சியம் நிறைவேற சிவன் அருள் புரிவார்"

    வாழ்த்தி அனுப்பினார்
    வகாரத் தைலமெனும் பொன்னை உருவாக்கும் 
    சித்தத் தைலம் கண்ட காலாங்கி நாதமுனி.

    வணிகர்
    எடுத்துச் சென்றது போக 
    மீதமிருந்தது தைலம்.

    'அது
    கெட்டவர் கைகளுக்கும் பேராசை மனிதருக்கும் போய்ச் சேர்ந்தால் 
    தீயது மிகுமே ' எனக்கருதிய காலாங்கிநாதர் அருகிலிருந்த கிணற்றில் 
    அதைக் கொட்டி பாறையை மூடினார்.

    நான்கு திசைகளிலும்  நான்கு  தெய்வங்களை காவலுக்கு நியமித்தார்.

    இன்றும் 
    சதுரகிரி செல்வோர் 
    மூலிகை கிணற்றையும் 
    மூடிய பாறையையும் 
    வராகி, காளி, பேச்சியம்மன், கருப்பண்ணன் 
    எனும் காவல் தெய்வங்களையும் கண்ணுற்று வணங்கலாம்.

    தனித்திருப்பதும்
    தவம் இருப்பதும் சித்தர்களின்
    ஏகாந்த நிலை.

    காலாங்கி நாதரும் சதுரகிரியிலேயே
    நீண்ட தவம் இருக்க அமர்ந்துவிட்டார்.

    ஒரு நாள்…
    தன்னிலை மறந்த அவரைத் 
    தட்டி எழுப்பியது 
    ஒரு கருணைக் கரம்.

    அக் கரம் 
    குரு திருமூலநாதர் திருக்கரம் 

    "காலங்கி…

    சித்தர் மரபு 
    உன்னோடு 
    முடிந்து விடக்கூடாது.
    வளர வேண்டும்… ஆல்போல் தழைக்க வேண்டும்…

    நீ என்னிடம் உரிமையோடு கற்றதை 
    நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுத்து சீடர்களுக்கு வழங்கு.

    உபதேசி.. நல்லவர்களை உருவாக்கு… 
    நாடு பேதம் வேண்டாம்.

    சீனாவிற்குச் செல்.. அங்கு பணியாற்று… உன் கடமையைச் செய்…." 
    உபதேசித்து மறைந்தார் 
    உன்னத குரு திருமூலநாதர்.

    அதன்பின்னர் காலாங்கிநாதர் 
    சீனா போனார்.

    சீன மக்கள் மேம்பட உபதேசம் தந்தார். மாண்புற 
    மருந்துகள் தந்தார்.

    கால் என்றால் காற்று. அங்கி என்பது உடை. காற்றை அங்கியாக அணிந்தவரே காலாங்கிநாதர்.

    மானிடர் 
    உடலைப் போல் தசைகளால் 
    ஆனது அல்ல
    அவர் உடல். 
    அது
    காற்றணுக்களால் ஆனது,

    உணரலாம்.
    தொட முடியாது.
    இஃதோர் உயர்நிலை. நிறை சித்தர் நிலை.

    ஒருகட்டத்தில் மூவாயிரம் வருடம் சமாதி நிலையில் இருக்க
    ஆசை கொண்டார் காலங்கிநாதர்.

    உடனே 
    தனது சீடர் போகரை  
    சீனாவுக்கு அழைத்து அவரை
    தன் பணி தொடரக் கூறினார்.

    போகர் சீனா
    வந்த பின்னரே 
    குரு காலாங்கி 
    சமாதி கொண்டார்.

    சீனாவில் காலாங்கிநாதர் 
    ஜீவசமாதியான
    முக்காதக் கோட்டைக்கு அடிக்கடி செல்வது போகரின் வழக்கம்.

    போகர் 
    செல்லும் போதெல்லாம் 
    சமாதி இருக்கும் இடத்தின் கதவு 
    தானாகத் திறக்க வாத்தியங்கள் இன்னிசை எழுப்ப காலாங்கிநாதர் ஒளிமயமாய் தகதகவென பொன்னிறமாய் ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசமாய்
    காட்சி அளிப்பது வழக்கமாம்.

    உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி கன்பூசியஸ் நீண்டகாலம் வாழ்ந்திட காலாங்கி நாதரே காரணம் 
    என்று 
    கூறுவோர் உண்டு.

    காலாங்கிநாதர் தான் கன்பூசியஸ்
    என்ற உறுதியான நம்பிக்கையும்
    சித்தர் உலகில் உண்டு.

    காலங்கிநாதர்
    சித்தி அடைந்தது சீனநாட்டில் என்றும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் என்றும் 
    போகர் பிரான் 
     இரண்டு இடங்களைக் குறிப்பிடுகிறார்.

    சேலம் அருகில் இளம்பிள்ளை கிராமத்தில்
    அமாவாசைக் கோயிலில் காலங்கிநாதர் ஜீவசமாதி உள்ளது.

    சித்தர்களை
    மயக்கும் மலையான
    சதுரகிரி குறித்து காலாங்கிநாதர் 
    பாடல் ஒன்று உண்டு.

    " பாரப்பா…
    அக் குகையின் உள்ளே செல்லப்
    பாம்பாட்டிச் சித்தரும் தங்கியிருப்பார்.

    தேரப்பா நீ வணங்கி அதன் மேற்காக திரும்பவே அத்திரியின்
    குகைதானுண்டு.

    பாதை வழி நேராய் நாதாந்த சித்தர் பதியான குகை தெரியும்.

    பார்த்துக்கொண்டு வேதை நீ அடையாமல் உள்ளே சென்றால் வேதாந்த சித்தருடன் குதம்பைச் சித்தர்.. போதை உள்ள ஞானசித்தர் அடிவணங்கி…'

    இப்படிப் போகும் 
    அந்தப் பாடல்.

    சதுரகிரியின் 
    சித்தர் இருப்பை 
    இப்படி அடி அடியாய் 
    எடுத்து வைத்து
    நமது சித்தத்தை துடிக்க வைக்கிறார் காலாங்கி நாதர்.

    காலாங்கி நாதருக்கு கஞ்சமலை சித்தர் என்ற பெயர் உண்டு.

    சேலம் 
    இளம்பிள்ளை மலையே 
    கஞ்சமலை.

  • கணக்கில்லா ஆயுள் கொண்ட காகபுஜண்டர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    தேவேந்திரன் 
    சபை….

    அதோ….
     நாரதர்.
     இதோ….
     வசிஷ்டர்.

    தவத்தில் சிறந்த உலகில் உயர்ந்த 
    தவ ராஜாக்கள் நிறைந்த சபை.

    ஞானம் நிறைந்த 
    ஒரு மகரிஷியின் உரை.

    அவர் 
    திருநாமம் 
    சதாதபர்.

    எல்லோரும் 
    கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    தலைப்பு:
    சிரஞ்சீவிகளாக இருப்பவர்களின் திவ்விய சரித்திரம்.

    சதாதபரின் 
    சத்சங்கம் 
    களை கட்டிக் கொண்டிருந்தது.

    "மெய் அன்பர்களே !

    என்னினும் உயர்ந்த ஞானிகளே !

    மாமேருவின் 
    உச்சியில் 
    காட்சிக்கினிய
    ஒரு கற்பக மரம் உள்ளது.

    அம்மரத்தின் 
    உச்சியில் ஒரு 
    பெரிய கூடு உள்ளது.
     
    அக்கூட்டில் ஒரு 
    பெரிய காகம் உள்ளது.

    அதன் பெயர் புஜண்டர். அதை 
    காகபுஜண்டர் 
    என்று அழைக்கிறார்கள்.

    ஒரு சாபத்தின் காரணமாக 
    காகமான 
    ஞானசித்தர் அவர்.

    அவரை ஒத்த ஞானநிலை கொண்டவர்
    எங்கும் இல்லை.. எவருமில்லை.

    அளவிட முடியாத ஆயுளைக் கொண்டவர் உரோமர்.

    அவரின் குருவே காகபுஜண்டர்.

     எல்லையற்ற ஆயுள் விரிந்த அறிவு
    முக்கால ஞானம் கொண்ட 
    சிரஞ்சீவி காகபுஜண்டர்.

    சதாதபர் பேசப் பேச 
    அவர் முகம் 
    ஒளி மிகுந்து பிரகாசித்தது.

    அவர் சொல்வதைக் கேட்க கேட்க கேட்பவரின் முகத்திலும் ஒளிவெள்ளம் படர்ந்தது.

    சித்தர்கள் குறித்து பேசுபவர் உள்ளம் பூரிப்பதும் 
    கேட்பவர் உள்ளம் குதூகலிப்பதும் இருதரப்பு முகங்களும் பிரகாசிப்பதும் இயற்கையே.

    அது இறையருள் வகுத்த  நீதி.. நியதி.

    காகபுஜண்டரின் பெருமைகளை
    சதாதபர் 
    சொல்லிக்
    கொண்டிருக்கும் போதே 
    வசிஷ்டருக்கு 
    நிலை கொள்ளவில்லை.

    உடனே அவரைப் பார்க்க 
    தரிசிக்க 
    ஆவல் கொண்டார்.

     அவதார புருஷர் இராமபிரானின் 
    ஞான குருவான வசிஷ்டர் 
    அக்கூட்டம் 
    முடிந்த கையோடு 
    மேருமலை விரைந்தார். 

    மேருமலை மலைகளாலும் குகைகளாலும் 
    மரம் செடி கொடிகளாலும் நிறைந்து
    ஓர்
    அருட்தவ
    ஞானியைப்
    போல் 
    விஸ்வரூபமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது .

    அங்கு 
    பறவைகளின் கானங்கள் கூட சிவமயமாய் 
    சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.

    வியந்தபடி 
    ரசித்தபடி 
    வசிஷ்டர் 
    கற்பகமரம் தேடி அலைந்தார்.

    "வாருங்கள் வேதவல்லுனரே ! ஈடில்லாத மாமுனியே !!"

    காக ரூபத்திலிருந்த காகபுஜண்டர் வரவேற்றார்,

    " பறவைகளின் அரசே !

    உங்களைப் பற்றித்தான் தேவலோகத்தில்
    ஒரே பேச்சு 

    அப்பப்பா….
    எத்தனை கால வாழ்க்கை…! மரணமிலாப் பெருவாழ்வு….!

    எத்தனை பிறவி ! எத்தனை அனுபவ ஞானம் !
    இருந்தும் எவ்வளவு அமைதி…!!!

    கர்வமற்ற
    காகபுஜண்டரே !

    உம்மைப் பற்றி 
    நிறைய அறிய 
    ஆவல் கொண்டே நேரில் வந்தேன்.

    உங்கள் ஆயுட்கால அனுபவத்தை ஞானத்தை தத்துவத்தை 
    அறியவே  வந்துள்ளேன்"

    ஞான நிலையின் உச்சத்திலிருந்த 
    ஞானமுனி
    வசிஷ்டர் கேட்க 
    கற்பகத் தருவின் உச்சியில் இருந்த காகபுஜண்டர் தலையசைத்தார்.

    அவர் சொன்ன பதில்களால் 
    எதற்கும் 
    அசையா 
    வசிஷ்ட ரிஷியே அசைந்தார்.

    அவர் சொன்ன சுயவரலாறு 
    கேட்பவர் எவரையும் 
    அசர வைக்கும் வல்லமை கொண்டது.

    அகிலத்தையே அசைக்கும் 
    பெருமை மிக்கது.

    "வசிஷ்ட மகரிஷியே !
    என்வரலாறு யாருக்கும் 
    பிரமிப்பு தரும்.

    அதில் 
    என் ஆயுள் வரலாறு எப்படிப்பட்டவருக்கும் மயக்கம் தரும்.

    இது இறைவனின் கருணை.

     மயூரநாதனின் மகிமை.

    சீர்காழி  மாயூரநாதனே எனக்கு 
    அருள் தந்து 
    ஆயுள் தந்து 
    வடிவு தந்து 
    காத்து வரும் 
    நாத பிரான்.

    நான்
    பல கோடி 
    யுகங்கள் கண்டவன்.

    யுகம் பற்றிய 
    கணக்கு ஒன்று உண்டு. கேளுங்கள்….
    அதுவே பிரமிப்பூட்டும். 

    மொத்த யுகங்கள் 18. ஒவ்வொன்றும் 
    பல கோடி வருடங்கள்.

    அறியுகம்14 கோடி வருடங்கள். 
    அற்புதனர் யுகம்
    10 கோடி ஆண்டுகள்.

    தர்ம யுகம்12 கோடி.
    ராசி யுகம் 16 கோடி. வீராசன் யுகம் 20 கோடி. 
    விண் யுகம் 16 கோடி. வாயுயுகம் 7 கோடி.
    மைன யுகம் 6 கோடி.

    இவ்விதம் தொடங்கி கலியுகம் 
    4 கோடியே 72 ஆயிரம் ஆண்டுகள்.

    18 யுகங்கள்.
    ஒரு கல்பம்.
    இந்த கல்பம் 15 சேர்ந்தால் அது இந்திரனின் ஒருநாள்.

    இந்திரன் கணக்கில் 
    60 வருடம் சேர்ந்தால்
    அதன் பேர் 
    ஆண்டு யுகம்.
    18 ஆண்டு யுகம்
     ஒரு பிரளயம்.

    ஒரு லட்சம்பிரளயம்
    ஒருநாள் பெருக்கம்.
    16 நாள் பெருக்கமே இந்திரன் ஆயுள்.

     7000 கோடி நாள் பெருக்கு
    வகோர முனிவரின் ஆயுள்.

    வகோர முனிவரின் 
    8 கோடி நாள் நாதமுனியின்ஆயுள்.

    நாதமுனியின் 
    ஒரு கோடி நாள் விஷ்ணுமுனிக்கு ஆயுள்."

    இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு முனிவருக்கும் 
    அவர்தம் ஆயுள்
    பற்பல கோடி பல்லாயிரம் கோடி 
    கூடி வரும்.

    அந்த வகையில் பார்துமா முனிவர்
    பல்லாயிரம் கோடி ஆயுட்காலம் பெற்றவர்.
    மூன்றரை கோடி உரோமம் உதிர்ந்தால் 
    அவர் ஆயுள் நிறையும்.

    அது பற்பல பல்லாயிரம் கோடிகள் என வரும் போது திருமால் 
    சங்கரர் மகாவிஷ்ணுவின் ஆயுள்கள் பூரணமாகும்.

    இப்படி யுகக் கணக்கு இருக்கையில் 
    என் ஆயுளை 
    நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    இது 
    நம்ப முடியாததாக இருக்கலாம்.

    ஆனால் 
    இதுவே உண்மை.
    இது இறையருள் கணக்கு.

    இதற்கு ஒரு 
    தற்காலிக சாட்சி நானே.

    உரோமரிஷி 
    என் புதல்வனே …!
    சீடனே…!!

    உங்களுக்கு தெரியுமா?

    காலக் கணக்கில் வரும் உரோமம்
    இதுவரை எனக்கு 
    ஒரு முறை கூட உதிரிந்தது இல்லை.

    என் நீண்ட ஆயுளில்
    நான் கண்டதைச் சொல்கிறேன்… செவிமடுத்துக் கேளுங்கள்.

    மாயூரநாதனைத் தரிசிக்க 
    உமாதேவி 
    மயில் வடிவம் கொண்டு 
    மாயூரம் வந்து 
    பூஜை செய்வதை 
    நான் பார்த்திருக்கிறேன்.

    அப்படி 
    இரண்டு முறை இறைவியைப் பார்த்த பாக்கியசாலி நான்….

    உங்களுக்குத் தெரியும்… 

    ஆதியில் 
    பிரமனுக்கு 
    ஐந்து முகங்கள் இருந்தன.

    'சிவனைப் போலவே எனக்கும் ஐந்து முகம் எனவே
    நானும் சிவனும் 
    சரி சமம் '
    என 
    கர்வம் ஏற்பட்டது பிரமனிடத்தில்… 

    கர்வத்தின் 
    விளைவு ?

    ஒரு தலை கொய்யப்பட்டது இறைவன் திருவருளால். 

    நடுத்தலை இழந்த பிரமன்
    நான்முகன் ஆனான்

    ஐந்து தலைகளோடு மாயூரம் வந்து சிவபூஜை செய்த பிரமதேவனை
    நான்
    ஒன்பதுபிறவியாய் 
    ஒன்பது முறை 
    ஒன்பது பிரமனை பார்த்திருக்கிறேன்.

    அதன்பின் 
    நான்கு தலைகளோடு நான்முகன் 
    வந்து சென்றதை 
    பத்து முறை பார்த்திருக்கிறேன்.

    மகாவிஷ்ணு கூட ஆதிகாலத்தில் வெண்மை நிறத்தில் இருந்தார்.

    பாற்கடலைக் கடைந்தபோது பக்தர்களைக் காக்க அவரும் 
    சிவனைப் போல 
    ஆலகால விஷம் உண்டு 
    நீலம் கொண்டார்.

    நான்
    வெள்ளை நிற விஷ்ணு பிரானையும் நீலநிற விஷ்ணுவையும் 
    10 தடவை பார்த்திருக்கிறேன்.

    ஒவ்வொரு முறையும் சிவ பூஜைக்காக 
    அவர் 
    மாயூரம் வருவார்.
    இறையருள் 
    பெற்றுச் செல்வார்.

    தேவர்கள் 
    பாற்கடலைக் கடைந்ததைக்  கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

    உலகம் தோன்றிய காலத்தில் 
    பூமி ,சூரியன், சந்திரன் தோற்றத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

     இரண்யாட்சன் பூமியை எடுத்துச் செல்ல முயன்றதையும்  பெருமாள் 
    வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டதையும் 
    நேரில் கண்டு வியந்திருக்கிறேன்."

    "காகபுஜண்டரே…! தாங்கள் 
    சொல்லச் சொல்ல வியந்து சிலிர்க்கிறேன்…

    எவ்வுலகமும் வியக்கூடிய 
    ஞான அனுபவம் பெற்றவர் நீங்கள்…." வசிஷ்டர் வாயால் வாழ்த்துக்கள் நிறைந்தன.

    "இன்னும் கேளுங்கள் மகரிஷி….

    சிவபெருமான் இதுவரை 
    30 தடவை முப்புரங்களை எரித்துள்ளார்.

    தட்சனது யாகத்தை இரண்டுமுறை அழித்துள்ளார்.

    மகாவிஷ்ணு பரசுராமராக 
    ஆறு தடவை அவதரித்துள்ளார்.

    ராம அவதாரம் 
    10 முறை.
    கிருஷ்ண அவதாரம்
    15 முறை.

    இவையெல்லாம் பார்த்தது 
    எனது பாக்கியம்."

    உடனே
    "உங்களைத் தரிசிப்பது எனது பாக்கியம்… " 
    வசிஷ்டர் வணங்கிச் சொன்னார்.

    "உங்களுக்கு இது எட்டாவது பிறவி தெரியுமா ?" காகபுஜண்டர் கணக்குச் சொன்னார்.

    வசிஷ்டர் அதிர்ந்து போனார்.

    "அடேங்கப்பா… எட்டாவது பிறவியா?! "

    காகபுஜண்டர் 
    'ஆம் ' என்பது போல புன்னகை பூத்தார்.

    தேவர்களும் தெய்வங்களும் சித்தர்களும் வியக்கும்  கணக்கில்லா 
    ஆயுள் கொண்ட  காகபுஜண்டர்
    இன்றும் அருவாய்
    சீர்காழி அருகே திருமணஞ்சேரியிலும், காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினத்திலும்,
    திருப்பதி அருகே திருகாளஹத்தியிலும், கள்ளக்குறிச்சி அருகே தென்பொன்பரப்பியிலும்,
    திருச்சி அருகே உறையூரிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

  • பொறியியல் சித்தர் போகர் பிரான்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சித்தர் 
    போகர் பிரான் 
    ஓர் அற்புத சித்தர்.

    பொறியியல் துறையின் 
    வல்லப சித்தர். 

    சீன தேசத்தில் 
    அவர் செய்த  வித்தைகள் 
    பற்பல கோடி..


     
    தன் வித்தைகளை 'வேடிக்கைச் சிமிட்டு வித்தை '
    என கண்சிமிட்டிச் சொல்லுவார் போகர்.

    கவி பாடும் 
    புலவர் என்பதால் அத்தனை செயல்களையும் அனுபவங்களையும் கண்டுபிடிப்புகளையும் அப்படியே 
    பதிவு செய்திருக்கிறார்
    சீன மொழியில்.

    போகர் கட்டிய 
    மரக் கப்பலும் தேவரதங்களும் வேறெந்த சித்தர்களும் சிந்திக்காதவை. 

    அவற்றை 
    உருவாகிய விதத்தை 
    பாடம் போல் 
    தன் பாடல்களில் பாங்காய் படைத்திருக்கிறார்.

    2400 அடி நீளம்.
    300 அடி அகலம். 
    300 அடி உயரம்.
    7 மாடிகள்.
    64 வீடுகள்.

    கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் !

    2400 அடி நீளம்..
    300 அடி அகலம்…
    300 அடி உயரம்…. 
    7 மாடிகள்…..
    64 வீடுகள். 

    இவை அரண்மனை ஜாடையில்….!

    கிழக்கும் மேற்குமாய் வாயில்கள்.
    தெற்கும் வடக்குமாக  ஜன்னல்கள்.

    ஒவ்வொரு மச்சும் 
    ஆறுகால் மண்டபம். ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள்..

    இத்தனை பிரமாண்டமும் எதன்மீது தெரியுமா ?

    ஒரு மரக் கப்பலின் மீது.!!

    டைட்டானிக் கப்பலே கிட்ட வர முடியாத அத்தனை அம்சங்கள்!

    கப்பல் இயங்கும் தொழில்நுட்பம்… போகர் கொண்ட மதிநுட்பம்.

    அப்பப்பா… 
    என்ன ஆச்சரியம் ..! 
    அந்த கப்பல் 
    நீராவிக் கப்பலாம்.

    கப்பலின் தலைவர்.. இயக்கிய மாலுமி
    யார் தெரியுமா ?

    போகர் தான்…
    தன்னிகரில்லாத போகர் பிரான் தான்.

    சீனாவில் இருந்தபோது 
    அமைத்த
    அந்த கப்பலில் 
    சீன மக்களையும் 
    ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி 
    ஏழு கடல்களையும் காண்பித்தார் 
    சுற்றுலா பிரியரான பற்றிலா சித்தர்.

    சுற்றுலா.
    ஆன்மீக சுற்றுலா.
    அவர் மக்களுக்கு சொன்ன 
    அகமகிழ் தத்துவம்.

    கடல் வழிப் பயணத்திற்கு 
    மரக் கப்பல் படைத்தவர் விண்வெளிப் பயணத்தை 
    விட்டு வைப்பாரா என்ன !

    வானூர்தியும் படைத்தார்.

    கையை நீட்டி 
    சித்து புரிந்து மந்திரத்தால் மாங்காய் பறித்திடவில்லை சித்தர் பிரான்.

    உயர் தொழில்நுட்பம். நுட்ப இயந்திர இயக்கம்
    அதன் சிறப்பம்சம்.

    அந்த பறக்கும் விமானத்தின் பெயர் தேவரதம் .

    விளையாட்டாய் 
    அதை காத்தாடி 
    என்று அழைப்பது 
    போகரின் வழக்கம்.

    காத்தாடிக்குப் 
    பட்டம் என பெயர் உண்டு அல்லவா?
    பறக்கும் பட்டமே காத்தாடி.

    30 அடி நீளம்
    30 அடி அகலம் 
    என  சதுர பரப்பில் பட்டம் செய்தார் 
    போகர்.

    ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து இன்றைய ஹெலிகாப்டர் மாதிரி பறக்க வைத்தார்.

    காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளும் சித்தர் தொழில்நுட்பங்களும் கொண்டு 
    காத்தாடி செய்து பறக்கவிட்டார்
    போகர்.

    சீன மக்களை 
    ஏற்றிக் கொண்டு முதலில் 
    முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார்.

    பின் உலகம் முழுதும்
    பல நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.

    ஏற்கனவே 
    ககன குளிகை கொண்டு 
    தான் மட்டும் பறந்தவர்- பல்லாயிரம் மைல்கள் கடந்தவர் 
    இப்போது 
    சீன அன்பர்களுக்காக- சீன மக்களுக்காக 
    காத்தாடியை அர்ப்பணித்திருக்கிறார்.

    போகர்
    காத்தாடி 
    துணை கொண்டு போன நாடுகள் 
    பார்த்த சித்தர்கள் பெற்ற பாடங்கள் படைத்த பாடல்கள் அதிகம்.

    போகர் சித்தர்களில் விவேகமானவர். விஞ்ஞானத்தில் விற்பனர்.

    கற்க வேண்டியதைக் கற்பதும் 
    கற்பிக்க வேண்டியதை பிறருக்குக் கற்பிப்பதுமே 
    அவரது கல்விக்கொள்கை.

    காத்தாடி தயாரிப்பதற்காகவே போகர்
    அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் 
    ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.

    அஸ்வினி மகரிஷியிடம் 
    ஓர் ஆகாயப் புரவியிருந்ததாம்.

    அது
    பஞ்சலோகத்தை உருக்கிச் செய்த உலோகப் புரவி .

    அது பறப்பதைப்
    பார்க்கும் போது ஒளிபொருந்திய சிவரதம் போல் இருக்குமாம்.

    அஸ்வினி சித்தரைச் சந்தித்து
    போகர் பிரான்
    தாள் பணிந்த போது போகரின் பெருமைகளை திறமைகளை 
    அம்மகரிஷி
    ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை
    வாழ்த்திப் போற்றியதோடு
    தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற 
    சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார் அசுவினி.

    அதன்படி
    வானரதம் தயாரித்த போகர் பிரான்
    அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.

    உண்மையில்
    முதன் முதலில் 
    உலகம் சுற்றிய வாலிபர் 
    போகர் தான். 

    போகரின் 
    உலக பயணம் 
    அறிய
    அவர் வார்த்தைகளுடன் பயணித்தால் சுவாரசியம் கூடும்.

     'தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்.
    தக்காண எண்ணாயிரம் காதமப்பா…

    வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா….

    கோடி பேர் சமாதிநிலை 
    தன்னைக் கண்டேன் கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்

    இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம்.
    கலைமிகு 
    ரோமாபுரிப் பயணம் .

    ரோமாபுரிக்கு 
    அடுத்து
    ஜெருசலேம் செல்கிறார்.

    'பாலான குருபரனை வணங்கி யானும் பார்க்கவே ஜெருசலேம் போகவென்று  மானான மாதாவைக் காணவென்று வணங்கினேன் 
    அவர் பாதம் தொழுதிட்டேனே !

    என்னவே இயேசுவின் தன் மகிமை மெத்த எடுத்துரைத்தார் 
    சீஷர் வர்க்க 
    அநேகம் பேர் '

    ஜெருசலேமில் 
    மேரி மாதாவையும் 
    இயேசு பிரானையும் தரிசனம் கண்டவர் 
    அடுத்து சென்றது 
    அரபு தேசம்.

    அரபு நாட்டு பயணத்தின் நோக்கம் இணையற்ற
    இறைதூதர்
    நபிகள் நாயகத்தை தரிசிப்பது தான். 
    அதை போகரே சொல்கிறார்.

    ' மன்னர் மெய்ச்சு
    மக்கவாம் புரியை
    காண உவகையுடனே ரதம் திருப்பி..

    திண்பான முகமது மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே 
    கோடி பேரே ! '

    மெக்காவில்
    சமாதி நிலையிலிருந்த யாகோபுவைச்
    சந்தித்த போகர்
    அவரது
    ஞான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.

    அப்புறம் 
    அவரது பயணம் 
    தென் அமெரிக்கா என்கிறது 
    பிறதொரு குறிப்பு.

    ' போச்சா 'என்பவர் தென் அமெரிக்கா வந்து 
    எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக –
    கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக 
    எழுதி வைத்திருக்கிறார் 
    சிலி நாட்டு வரலாற்றாசிரியர் 
    மைகாஸ் ( Mucas )
    என்பவர்.

    அந்த போச்சா 
    போகர் தான்
    என்கிறது 
    ஓர்
    ஆய்வுக் குறிப்பு.

    உலகம் சுற்றிய 
    வாலிப சித்தர்
    பாரிஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை.

    'பண்பான குளிகையது பூண்டு கொண்டேன். பாங்கான பாரிஸ் சபதியைக் கண்டேன்' என 
    வியக்க வைக்கிறார்.

    உலகைச் சுற்றிய அனுபவம் ,
    உமையவள் வழங்கிய ஞானம் 
    போகருக்கு மட்டுமல்ல உலகுக்கும்
    பற்பல அறிவியல்
    நன்மைகளை வழங்கின.

    * நிலம் ஒரு பங்கு 
    நீர் மூன்று பங்கு 
    என்று 
    புவிச்சூழல் அமைப்பை 
    முதலில் சொன்னவர் 
    போகர் பெருமானே.

    * கடல் பயணத்தின் போது 
    கடும் பாறையை –
    பாயும் சுறாவைக் கண்டறிந்து 
    விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.

    இன்றைய பெரிஸ்கோப்…
    போகர் கண்டுபிடித்த அன்றைய 
    போகர் ஸ்கோப் . 

    * பீங்கானும் கண்ணாடியும் போகரின் கண்டுபிடிப்புகளே.

    * வெப்பக் காற்றை நிரப்பி
    உயரே பறக்கும்
    பலூன்
    போகரின் கண்டுபிடிப்பே..

    அதற்கு 
    அவர் 
    வைத்த பெயர் 
    'கூண்டு வித்தை '

    * பாராசூட்டிற்கு முன்னோடி போகரே.
    அதை
    'குடை வித்தை '
    என 
    அறிமுகம் செய்தார் விஞ்ஞானி போகர்.

    * கடலுக்கடியில் பாதுகாப்போடு பயமின்றிப் பயணிக்க
    கவச உடையோடு சுவாசக்குழாய் 
    முதலான உபகரணங்களை 
    பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
    கண்டுபிடித்தவர் 
    போகர் பிரான்.

    அன்று உருவாய்
    உலகைச் சுற்றிய போகர் பிரான்
    இன்று அருவாய்
    பழனி, காஞ்சிபுரம் பேரூர், சதுரகிரி 
    ஆகிய தமிழகத் திருத்தலங்களில் சமாதி நிலையிலும்

    இந்திய இமயமலைப் பகுதிகளில்
    அமர்நாத், கேதார்நாத் பத்ரிநாத்…

    திபெத் – சீன பகுதியில் கைலாஷ்நாத்…

    நேபாளத்தில் பசுபதிநாத்….

    ஆகிய 
    ஐந்து தலங்களில்
    நிஷ்ட நிலையிலும்
    அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

  • எத்தனை கோடி வயது வைத்தாய்… இறைவா..!

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    அது ஓர்
    அழகிய வனம். 

    வனத்தில் ஒரு குகை. 
    மனத்தை அடக்கும் தவக் குகை.

    குகையில் இருவர்.

    ஒருவர் வயது முதிர்ந்தவர்.
    முனிவர் போல் இருக்கிறார்.

    நீண்டகாலத்
    தவ ஞானியாக இருக்கும்.

    இன்னொருவர்
    கம்பீரத் தோற்றம்.
    உருவமோ கனகச்சிதம்.
    ராஜ களையும் கொஞ்சம் கவலையும் தெரிவிக்கும் முகம்.
    ஓர் அரசன் போல் இருக்கிறார்.

    அருகிலிருக்கும் நாட்டின்
    மன்னனாக இருக்கும்.

    "முனிவரே ….
    எத்தனை நாட்கள் தாங்கள் இங்கு இருக்கிறீர்கள் ?" 
    ஆர்வமுடன் கேட்டான் மன்னன் போலிருந்தவன்.

    முனிவர் முகத்தில் சிறுநகை.

    "நான் சொல்லப்போவது புரிகிறதா பார்…."
    என்கிற மாதிரியான பார்வை.

    "மன்னா..
    மனிதருக்கு
    ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு
    ஒரு நாள்.

    இதன்படி பார்த்தால்
    மனிதர்களுக்கு
    375 வருடம் என்பது தேவர்களுக்கு
    ஒரு வருடம்.

    4800 தேவ வருடங்கள் சேர்ந்தது ஒரு யுகம்.

    3600 தேவ வருடங்கள் திரேதா யுகம்.

    2400 தேவ வருடங்கள் சேர்ந்தது துவாபர யுகம்.

    1200 வருடங்கள்
    ஒரு கலியுகம்.

    இவற்றை கூட்டினால் 12 ஆயிரம்
    தேவ வருடங்கள் வரும்.

    இந்த 12 ஆயிரம்
    தேவ வருடங்கள் பிரமனைப் பொருத்தமட்டில்…."

    முனிவர் கூறியபடியே மன்னனை நோக்கினார்.

    அவன் ஆழ்ந்து கவனிக்கிறானா என்பதைக்
    கவனிக்கிற மாதிரி இருந்தது
    முனிவரின் பார்வை.

    மன்னன் உற்றுநோக்க பற்றற்ற முனிவர் தொடர்ந்தார்.

    "மன்னா….
    12 ஆயிரம்
    தேவ வருடங்கள்
    பிரமனுக்கு
    ஒரு பகல் மட்டுமே.

    24 ஆயிரம்
    தேவ வருடங்களே பிரம்மனுக்கு ஒரு நாள்.

    என்ன….
    தலை சுற்றுகிறதா.? இது இறைவன் அருளிய கணக்கு.

    சரி,
    விஷயத்துக்கு வருவோம்.

    நான் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிறது
    என்று தானே கேட்டாய் ?

    அப்பனே…
    70 பிரம்மதேவன் ஆண்டுகள் ஆகின்றன…"

    கிஞ்சிற்றும்
    குழப்பமின்றி
    முனிவர்
    சொல்லி முடித்தார்.

    'வருவதற்கு முன்பு எங்கே இருந்தார்? எப்போது பிறந்தார்?? 
    இனி எங்கு செல்வார்???
    எத்தனை ஆண்டுகள் வாழ்வார்????'

    கேட்க நினைத்தான் மன்னன்.

    சித்த புருஷர்கள்
    பல ஆண்டுகள் வாழ்வார்கள்
    என மட்டும் அறிந்திருந்த மன்னனுக்கு 
    முனிவரின் வயது பிரமிப்பூட்டியது.

    அப்படியே நெடுஞ்சாண்கிடையாக
    முனிவர் பாதம் பணிந்தான்.
    முனிவர் புன்னகைத்தார்.

    புன்னகைத்த
    மாமுனி  தான்
    உரோம ரிஷி.

    பாதம் பணிந்த மன்னன் தொண்டமான். 
    காஞ்சியை ஆண்டுவந்த மன்னன்.

    அண்மைக்காலமாக அவனுக்கு ஒரு தோல்வி.
    அதனால்
    இனம் புரியாத ஒரு கவலை.

    அரசனல்லவா…?
    கால் போன பக்கம் போக வழி இல்லை. 
    எனவே யாரிடமும் சொல்லாமல்
    குதிரை போன பக்கம் போனான்.

    மனத்தைப் போலவே குதிரையையும்
    அவன் அடக்கவில்லை.

    காட்டில்
    நுழைந்த குதிரை
    இரவு வந்ததும் முனிவரின்
    குடில் முன் நின்றது.

    ஞான குதிரை
    போல் இருக்கிறது.

    அன்று பௌர்ணமி… நிலவொளியில்
    காடு ஜொலித்துக் கொண்டிருந்தது.

    குதிரையில் இருந்து இறங்கிய மன்னனின் கண்களில்
    குகையும்
    குகைக்குள்
    முனிவரும் தென்பட்டனர்.

    முனிவர் என்பதெல்லாம் உரையாடிய பின்னர் உணர்ந்த விஷயம்.

    முதன் முதலில் பார்த்தபோது
    குகையில் இருந்த மனித உருவைக் கண்டு
    பயந்து போனான்,
    பல போர்கள்
    கண்ட மன்னன்.

    ஆம்….
    முதிர்ந்த உருவம்.
    நெற்றியில் திருநீறு. கையில் ஜபமாலை. 
    கழுத்தில் ருத்ராட்சம்.

    அருகில் கமண்டலம். அடியில் புலித்தோல்.

    உடம்பு முழுக்க  
    பொசு பொசுவென்று முடி.
    ஆங்காங்கே
    சுருள்முடி முடிச்சுகள்.

    திருநீறும் கமண்டலமும் இல்லாதிருந்தால் 
    ஏதோ விலங்கு என விலகி ஓடி இருப்பான்.

    திரும்பத் தான் நினைத்தான்.
    ஆனால்
    உருவம் அழைத்தது.

    அப்படி
    ஓர் இனிமையான அன்பான குரலை 
    இதுவரை அவன் கேட்டதில்லை.

    "தொண்டமானே….!
    மன்னர் மனதில்
    பயம் இருக்கக்கூடாது.. 
    பயப்படாதே…. வா… அருகில் வா…"

    மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் 
    முனிவர் முன் நெருங்கி நின்றான்.

    "சுவாமி….
    என் பெயர் உங்களுக்கு
    எப்படி தெரியும்? நீங்கள்…."
    பயந்து இருந்தாலும் வியந்து கேட்டான்.

    "மன்னா…
    என்னை  
    உரோமசன்
    என்று அழைப்பர்.

    திருவருள் குருவருள் நிரம்பப் பெற்ற
    பேறு பெற்றவன்.

    உடல் முழுவதும் இருக்கும் உரோமம் காரணமாக
    உரோமசன் என பெயர் பெற்றவன்.

    முக்காலம் உணரும் ஞானம் பெற்றவன்.

    பற்றற்றவன் எனினும் இறைப்பற்று மிக்கவன்.
    தவப் பற்றுக் கொண்டவன்.

    இறையே
    இன்று
    உன்னை
    இங்கு அழைத்து வந்திருக்கிறது.

    மனக்கவலை விடு. மனம் சலனமடைந்தால்
    மதி கலங்கும்.
    கவலை விடு.
    இறையே வழி
    என வாழ்"
     
    என்ன ஆச்சரியம்..!

    மன்னன் மனத்தில் தெளிவு முளைவிட்டது

    முனிவர் பேசப்பேச அது
    பூவாகி, பிஞ்சாகி, காயாகி, 
    பழமாகி, கனியாகிக் கொண்டிருந்தது.

    பல காலம்
    பழகிய உறவு மாதிரியான ஒரு சூழல்.

    இச்சூழலில்தான் மன்னன் கேட்டான் 
    முனிவர் அக்குகையில் வாழும் காலம் குறித்து.

    பிரம்மதேவ
    வருடக் கணக்கை
    மன்னன் வாய்பிளக்க கேட்டதை ரசித்த உரோமரிஷி,

    "இன்னும் சொல்லவா… வயது ரகசியம்… 
    வாழ்க்கை ரகசியம்… இங்கிருக்கும் ரகசியம்… 
    அனைத்திற்கும் மேலாய்
    சித்தர் ரகசியம்…."

    முனிவர்
    இவ்விதம்
    கேட்க கேட்க
    அவரது முடி நிறைந்த புருவம்
    வில்லாய் வளைந்து கேள்விக்குறி போல் வித்தை காட்டியது.

    "மன்னா….
    மீண்டும் சொல்கிறேன்..
    கவலை மற..

    உன் முன்வினை தீவினை கொண்டது.
    உன் நாட்டு மக்களின் வினையும்
    சேர்ந்து கொண்டது.
    அதனால்தான்
    யுத்தம் நிகழ்ந்தது. அதில் உனக்கு தோல்வி வந்தது.
    வீரர் பலர் உருண்டு மாய்ந்தனர்.

    கவலையோடு
    நீ இங்கு ஓடி வரக் காரணமும் அதுவே.

    மன்னனது வாழ்வின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்தார்
    குகை முனி.

    பின்னர்
    இனி கவலை இல்லை என்பதுபோல் 
    கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

    முனிவர்
    ஆசீர்வதிக்கும் போது அவரது
    அருட் கரங்களை நோக்கினான் மன்னன்.

    சற்றே நோக்கியவன் திகைத்து
    உற்று நோக்கினான்.

    அது
    இன்னொரு ஆச்சரியம்.

    முனிவரின் முன்கையில் உரோமங்கள் இல்லை.

    மன்னன் பயப்படுவதை
    முனிவர் கவனித்தார், "மன்னா…
    நீ பயந்து வியந்து கேட்க விரும்புவது புரிகிறது.

    வேறொன்றுமில்லை.

    பிரமனின் ஆயுள் மூன்றரை கோடி வருடங்கள் என்று
    சற்று முன்பு சொன்னேன் அல்லவா?

    ஒரு பிரம்மன் இறக்கும்போது
    என் முன்கை முடி ஒன்று உதிரும்.

    இப்படி உதிர்ந்த கணக்கே எத்தனை
    பிரமன்கள் பிறந்து வாழ்ந்து 
    இறந்து போயிருக்கிறார்கள் என தெரியவரும் 
    தெய்வக் கணக்கு.

    இன்னொரு தொடர்பையும் இறைவன் வகுத்துள்ளான்.

    அஷ்டவக்ரர்
    என்றொரு
    முனிவர் உள்ளார்.

    அவருக்கு உடம்பு
    எட்டு கோணலாய் திரும்பி இருக்கும்.

    ஓர் உரோமரிஷி இறந்தால்
    ஒரு கோணல்
    சரியாகும்.

    என்னைப்
    போலிருந்த
    உரோமரிஷிகள்
    சிலர் இறந்திருக்கிறார்கள்.

    இப்போது கணக்கிட்டுக் கொள்…
    இறைவன் வகுத்த வயது கணக்கை.." 
    மன்னனுக்கு முனிவர் சொன்னார்.

    நூறு வயதுக்குள் மானிடப்பிறவி
    ஆடும் ஆட்டமும் போடும் கொட்டமும்
    நானே பெரியவன் எனக்கு எல்லாம் தெரியும்
    என ஆணவம் அகங்காரம்
    இவை எல்லாம்
    ஒரு தடவை
    மன்னன் மனக்கண்ணில்
    ஆடி மறைந்தது.

    மூவாயிரம் ஆண்டுகள் பூமியில் இருந்து 
    ஆண்டுக்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல்கள் படைத்த சித்தர்
    திருமூலரைப் பற்றி மட்டும்
    அறிந்திருந்த அரசனுக்கு பல்லாயிரம்
    கோடி ஆண்டுகள் வாழும் முனிவரை பார்த்தது
    தன் அற்ப வாழ்வில் கிடைத்த அற்புதம்
    என புளகாங்கிதம் உற்றான்.

    உரோமரிஷி
    பயம் தெளிந்திருந்த மன்னனைக் 
    கருணையோடு பார்த்துச் சொன்னார்.
    "மன்னா …..
    இந்த இடம்
    பெருமைமிக்கது.
    இறைத் தன்மை
    கொண்டது.

    என்னை
    என்றோ ஈர்த்தது.

    உன்னை
    இன்று ஈர்த்துள்ளது."

    "கேட்க நினைத்தேன்…
    சொல்கிறீர்கள்…
    சுவாமி….தாங்கள்
    இத்தனை காலம்
    இங்கு இருப்பதன்
    ரகசியம்…"

    மன்னன்
    நெகிழ்ந்துருகிக்
    கேட்டான்.

    "சொல்கிறேன் கேள்….
    இங்கு உனக்கும்
    வேலை இருக்கிறது.
    அதுவே
    உன்னை அழைத்து
    வந்திருக்கிறது."

    பதிலளித்த
    உரோம முனி தொடர்ந்தார்.

    "இது
    பிரம்ம தேவன்
    ஒருவன் இருந்த இடம்.

    அவன்
    சிவ சிந்தனையோடு
    தவமிருந்தான்.

    அவனது ஆன்மா
    சிவனோடு
    நெருங்கிய வேளையில்
    மூலக்கனல் எழுந்தது.

    ஒருநாள்
    அவ்விதம் எழுந்த
    மூல அக்னியின் மத்தியில்
    இறைவன் சதுரமான
    சித்திரப் பலகை
    வடிவில்
    பிரசன்னமானார்.
    பிரமனை ஆட்கொண்டார்.

    அதுமுதல் சிவனுக்குப்
    பலகைநாதர்
    என்ற பெயர் வந்தது.

    ஒருமுறை பிரளயம் ஒன்று எழுந்தது.
    உலகம் அழிந்தது.

    பின்
    இவ்விடத்தில் மீண்டும் தோன்றியது.

    அதனால் இவ்வூர்
    ஆதிபுரி ஆனது.

    அஷ்ட நாகங்களில்
    ஒன்று வாசுகி.

    அது
    இங்கு வந்து
    வழிபட்டு தவமிருந்து
    இறைவனோடு
    இரண்டறக் கலந்தது.

    அதன் அடையாளமாக
    அடிக்கடி
    பலகை நாதரின்
    திருமேனியில்
    பாம்புச்சட்டை
    மாலை போல்
    காணப்பட்டது.

    வாசுகி
    சித்தியானதைத் தொடர்ந்து
    படம்பக்கநாதர்
    என்ற பெயர்
    சிவபிரானுக்கு அமைந்தது.

    ஒருமுறை இங்கே
    பெரும் வெள்ளம்.

    சர்வமும் நாசம்
    என
    எண்ணியிருந்த வேளையில்
    சர்வேஸ்வரன்
    "வெள்ளமே ஒற்றிப்போ"
    என்றாரே பார்க்கலாம் !

    வெள்ளம் விலகியது.

    அது முதல் இவ்விடத்திற்கு
    ஒற்றியூர்
    என்ற
    திருப்பெயர்
    ஏறி அமர்ந்தது.

    இந்த இடம் அளவிற்கதிக
    ஆன்மீக அருள்
    நிறைந்த இடம்.

    எனவேதான்
    வந்த நாள் முதல்
    வேறிடம் செல்ல
    என் மனம் ஒப்பவில்லை.

    நாள்தோறும்
    அற்புதம் காண்கிறேன்.
    அதில் லயிக்கிறேன்.
    நீயும்
    இங்கேயே வந்து விடு.

    உனக்கு
    வேண்டுவனவற்றை
    உபதேசிக்கிறேன்.

    நீ தியானம் கொள்.
    நான் தரும்
    மந்திர உபதேசம்
    மனதில் கொள்"

    தலையாட்டிய
    தொண்டமான்
    உரோம ரிஷியிடம்
    உபதேசம் பெற்றான்.

    இடையில்
    நாட்டுக்குத் திரும்பி
    கடமையை முடித்து
    குகைக்குத் திரும்பினான்.

    தியானம்…
    தியானம்….
    தியானம்….
    தொடர்ந்து
    தவம்…
    கடும் தவம்….
    அருட்தவம்.

    ஆன்மிக
    உயர்நிலையை
    அடைந்த மன்னன்
    உரோம ரிஷியின்
    உறுதுணையோடு
    கோயில் அமைத்தான்.

    அக்னியால் உருவான
    பலகை நாதரின்
    உக்கிரம்
    தாக்காமலிருக்க
    மந்திரங்கள் அடங்கிய
    வட்டப் பாறையை
    உரோமமுனி
    தவநிலையில்
    அருளினார்.

    கோயில் பணி
    நிறைவடைந்த
    திருநாளில்
    சித்தர் உரோம ரிஷியின்
    ஆசிகளோடு
    மன்னன் தொண்டமான்
    இறையோடு இறையாய்
    சித்தியானான்.

    தேடி வருவோருக்கும்
    இக்கோயில் பணி
    செய்வோருக்கும்
    அமர்ந்து ஆழ்ந்து
    தியானிப்போருக்கும்
    உரிய புண்ணியத்தை
    உன்னத நிலையைத்
    தரவல்லது ஒற்றியூர்.

    சித்த புருஷர்
    உரோம ரிஷியின்
    குருவருள்
    பலகைநாதரின்
    திருவருளோடு
    சிறக்கிறது.

    ஒற்றியூர் தலத்தின்
    ஆன்மீக பலம்
    அபரிமிதமானது.

    மாணிக்கவாசகரும்
    பட்டினத்தாரும்
    பாடித் தவமிருந்து
    பக்தி பரவசமும்
    ஞானத் தெளிவும்
    பெற்ற
    திருவூரே
    திருவொற்றியூர்.

    வள்ளல் பெருமான்
    விரும்பி
    நடையாய் நடந்து
    நாள்தோறும்
    நாடித் தவமிருந்து
    அழுதபடி
    அமுதத்
    தமிழ் விருந்தாய்
    திருவருட்பாவை
    அருளிய
    திருப்பதியே
    திருவொற்றியூர்.

    அனைத்துக்கும் மேலாய்
    சித்தர் பிரான் உரோமரிஷி
    அருவுருவாய் அருள்பாலித்து 
    அருளாற்றல் பொழிவித்து 
    பெருமைபடச் செய்யும்
    பெருங்கோயில் இருப்பிடமே
    திருவொற்றியூர்.