Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • கண்ணபிரானுக்கு உபதேசம் செய்த சித்தர்பிரான்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமூலர் திவ்விய சரித்திரம்  பாகம்-3

    ஒருநாள் 
    நள்ளிரவு.
    அரண்மனை துறந்து காடேகினார் திருமூலர். 
    சதுரகிரி மலை ஏறினார்.

    அங்கே 
    போகும் வழியில் 
    ஓர் அந்தணன் 
    கற்சிலை போல் நின்று கொண்டிருந்தான்.

    அவனுக்கு உதவ அருகில் சென்றார். பிரமித்து நின்றார்.

    அவர் 
    கைப்பட்ட போது 
    அவன் உயிர் 
    விடை பெற்றிருந்தது.

    'ஏன் இப்படி ?
    என்ன நேர்ந்தது அவனுக்கு ?'

    சிந்தனையில் ஆழ்ந்தார். காட்சி விரிந்தது.
    நடந்தது தெரிந்தது.

    ஜம்புகேஸ்வரம் எனும்
    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரன்
    என்ற பெயரில் வாழ்ந்தவன் அவன்.

    குரு துணையின்றி பிரணாயாமம் செய்திருக்கிறான். 

    வெளியே மூச்சை 
    விடக் கற்றவனுக்கு 
    உள்ளே காற்றை 
    இழுக்கத் தெரியவில்லை.
    மறந்து விட்டான்.

    அருகே குருவோ 
    வேறு யாருமோ 
    இல்லை.

    ஆட்டம் காலி.

    வீரசேனன் 
    உருவிலிருக்கும் திருமூலருக்கு 
    கூடுவிட்டுக் 
    கூடுபாய்தல் 
    கைவந்த கலை அன்றோ !

    சவமாய் இருந்த ஜம்புகேஸ்வரன்
    உடம்பில் 
    வீரசேனன் உருவிலிருந்த 
    திருமூலர் ஏகினார்.

    அருகிருந்த
    மரப்பொந்தில் வீரசேனனின்
    உடலை வைத்தார்.

    அது எப்போதும் அழியாதிருக்க 
    ஜோதி மரப் பூக்களை 
    சிற்சில மூலிகைகளை கலந்து அரைத்து
    தன் மந்திர சக்தி ஏற்றி அரசன் உடலில் பூசினார்.

    இலை, தழை மரப்பட்டைகளால் மரப்பொந்தினை மூடினார்.

    'அழியாத அரசன் உடல்.
    தீர்க்க சுமங்கலியாய் அரசி'

    அரசி குணவதிக்கு
    கொடுத்த வாக்கு
    நிறைவேறிய திருப்தியில் 
    அடுத்த கட்டத்திற்கு பயணமானார் திருமூலர். 

    இப்போது மூலர்
    ஜம்புகேஸ்வரன்
    உடலைப் 
    போர்த்திக் கொண்ட
    மூன்றாம் மூலர்.

    'ஜம்புகேஸ்வரர்' மூலர்.

    சதுரகிரியில் 
    நீண்ட காலத் தவம்.

    மீண்டும் காயசித்தி.
    சித்தர்களே வியக்கும் அழகிய இளைஞரானார்.

    காலப்போக்கில் 
    சீடர்கள் பெருகினர்.

    சீடன் குரு ராஜனும் சேர்ந்து கொள்ள 
    அவர் இருப்பில் 
    சதுரகிரி மலையே தவச்சாலையாய் ஒளிர்ந்தது.
    ஓங்கி உயர்ந்தது.

    சுமங்கலியாய் 
    நாடாண்டு வந்த 
    அரசி குணவதி 
    கால முதிர்ச்சியில் நம் 
    சதுரகிரிச் சித்தர் பற்றி அறிந்து 
    அவர் யார் என்று அறியாமலேயே மலைக்கு வந்து 
    உதவி கோரினாள்.

    தன் துயர்துடைக்க 
    தாழ் பணிந்து நின்றாள்.

    "மகா யோகியான 
    என் கணவர் கிடைக்க வேண்டும்.
    பந்தம் 
    தொடர வேண்டும்."
    என்பதே அவள் பிரார்த்தனை.

    தன் தவ சக்தியால் 
    மாமுனி திருமூலர்
    அரசன் உடலை 
    ஒரு மரமாக உருவாக்கினார்.

    அந்த மரமே 
    அதுமுதல் 
    அரச மரம் என அழைக்கப்படுவதாகச் 
    சொல்கிறது ஒரு செவிவழிச் செய்தி.

    "அம்மா….
    இந்த மரத்திற்குப்
    பூஜை செய்…
    அதுவே 
    உனக்கான சேவை…
    பதி சேவை…
    பக்தியோடு செய்
    பலன் கிட்டும்.."
    ஆசியோடு சொன்னார்
    அரசியால்
    அறிந்து கொள்ள முடியாத
    உருவிலிருந்த
    திருமூலர்.

    அரசி அழுதவண்ணம்
    அரசமரத்தைத் தொழுதாள்.
    விடைபெற்றாள்.

    பின்
    பலகாலம் 
    நாடாண்டாள்.

    இந்நிகழ்ச்சிக்குப் பின் திருமூலரின்
    சித்தர் பணி 
    உலகை உய்வித்தது.

    சீடர்களை ஊக்குவித்தார்.
    மக்களை மேம்படுத்தினார்.
    20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார்.
    தவம் செய்தோருக்கு உதவி செய்தார். உபதேசம் தந்தார்.

    துவாரகைபதியான கிருஷ்ணனுக்கே
    உபதேசம் செய்ததாக அகத்தியர் 
    மூலர் புகழ் பாடியுள்ளார்.

    ஆம்…
    கீதா உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாவுக்கே
    உபதேசம் செய்த
    பாக்கியம் பெற்றவர்
    திருமூலர்.

    அதேபோன்று மார்க்கண்டேயரையும்
    மகிழ வைத்திருக்கிறார் திருமூலர்.

    "நீ சாகாவரம் பெற்றிருக்கலாம். இருப்பினும் சுழிமுனையில் 
    நிலைத்து நின்று 
    தவம் செய் " என மார்க்கண்டேயருக்கு உபதேசித்ததாக 
    அகத்தியர் அகமகிழ்ந்து சொல்கிறார்.

    ஏற்கனவே 
    3000 ஆண்டுகள் பாடல்கள் எழுதினார். 
    அது பின் 
    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தகவல் உள்ளது.

    'நம்ப முடியவில்லை.. நம்பகத்தன்மை இல்லை..'
    என்பார் சிலர்.

    உண்மையில் சித்தர்கள் யுகங்கள் கடந்தவர்கள்.
    அழியா உடல் அவர்தம் சொத்து. 
    எக்காலத்திலும் தோன்றுவது 
    சித்தர்களின் தவபலம்.

    நம் எல்லைக்கோடு, காலக்கெடு,
    அறிந்த அறிவியல் சித்தர்களைப் புரிய சிறிதும் உதவாது. 
    அதற்கு வேறோர் ஆற்றல் வேண்டும்.

    அதன் பெயர் ஞானம்.

    கயிலாயத்திலும்
    பூலோக கயிலாயத்திலும்
    திருமூலருக்கு சீடர்கள் இருந்தனர்.

    12 மடங்களை நிறுவி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென பணி செய்தார்.

    சனகர் 
    சனந்தனர் 
    சனாதனர் 
    சனத்குமாரர் ஆகிய நான்கு சனகாதி முனிவர்கள்…
    பதஞ்சலி முனிவர் அகத்தியர் ஆகியோர் மூலரின் சமகாலத்தவர்.
    ஒரு சாலையில் பயின்றவர்கள். அவர்களுக்கு குருவாக இருந்தவர் நந்தீசர்.

    வாழ்ந்த காலமெல்லாம் வள்ளலாய் இருந்தவர்.

    தக்க தருணம் வரவே இதுவே நல்ல சமயம் என்று எண்ணி 
    இறையோடு இறையாய் இரண்டறக் கலந்தார்.
    இது நிகழ்ந்த தலமே சிதம்பரம்.

    திருமூலர் லயமான இடமே 
    ஆதிமூலநாதர் 
    சன்னதி ஆனது.

    திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு 
    அமைக்கப்பட்ட கோயிலே சிதம்பரம் 
    நடராஜர் கோயில் என்கிறது 
    கருவூர் புராணம்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி 
    இன்னொரு சுவாரசியமான கதையைச் 
    சுவைபடக் கூறுகிறார்
    கொங்கணர்.

    சிதம்பரத்தில் 
    ஒரு பிரச்சனை.

    சோழ மன்னன் 
    இரணிய வர்மன் 
    தீர்த்த யாத்திரைப் பிரியன். 
    பயணத்தின் போது தில்லை வந்தான்.

    அங்கு சிற்றம்பலத்
    திருக்குளமான சிவகங்கைத் 
    தீர்த்தத்தில் நீராடினான்.

    தண்ணீரில் 
    மூழ்கிய போது 
    ஓர் ஓங்கார நாதம் கேட்டது.

    தண்ணீர் மேலே வந்தான்.
    ஏதும் கேட்கவில்லை.

    மீண்டும் நீரினுள் மூழ்கினான். 
    கண் திறந்து பார்த்தான்.
    இப்போது ஆடல்வல்லானின் 
    அற்புத நடனம் காட்சியாய் தெரிந்தது.

    கூடவே 
    ஓங்கார நாதமும் 
    ஓங்கி ஒலித்தது.

    வியந்த மன்னன் 
    தான் கண்ட நாதனை ஓவியமாய் எழுதினான்.

    அவ்வோவியத்தை விக்கிரகமாக்கி பொன்னம்பலத்தில் வைத்து 
    உலகோர் அனைவரும் தரிசனம் செய்ய 
    ஆர்வம் கொண்டான்.

    தமிழகத்தில் சிறந்த சிற்பிகளை அழைத்து 
    தன் விருப்பத்தைச் சொன்னான்.

    48 நாட்களில் செய்து முடிப்பதாக 
    சிற்பிகள் சொல்ல.. வேண்டிய தங்கம் 
    வாரிக் கொடுத்தான் சோழ அரசன்.

    சிற்பிகள் சாதாரணமானவர் அல்லர்.
    கோயில் சிலைகளை வார்ப்பதில் வல்லவர்கள்.

    அவர்கள் 
    ஆசை ஆசையாய் முயற்சிக்கையில் ஒவ்வொரு நாளும் 
    ஏதோ ஒரு காரணத்தால் விக்கிரகத்தில் 
    குறை எழுந்த வண்ணமே இருந்தது.

    ஆயிற்று 47 நாட்கள்.

    மன்னனின் கோபம் சிற்பிகளுக்குத் தெரியும்…
    'அரச தண்டனை'
    அழுதே விட்டனர்.

    விஷயம் 
    திருமூலருக்குப் போனது.

    ஞானவழித் தந்தி மூலம் கருவூராருக்குச் செய்தி போனது.

    திருமூலரின் உத்தரவை ஏற்றார் கருவூரார்.
    விரைந்தார் சிதம்பரத்திற்கு.

    "கவலைப்படாதீர்கள்…. ஒரு மணி நேரத்தில் தங்க விக்கிரகம் தயாராகியிருக்கும்…"
    ஆறுதல் சொன்னார்.
    அடுத்து காரியத்தில் இறங்கினார்.

    நம்பிக்கை இல்லை தான்….. 
    இருப்பினும் காத்திருந்தனர் 
    சிற்பிகள் 
    கலக்கத்துடனும்
    கண்ணீரோடும்.

    கருவூரார் 
    பணி முடித்து அனைவரையும் அழைத்தார்.

    அம்பலக் கூத்தனின் அழகுத் திருவுருவம் 
    அப்படி ஓர் அம்சமாய் அமைந்திருந்தது.

    அரசன் வந்தான். அகமகிழ்ந்தான்.

    நினைத்தபடி 
    விக்கிரகம் செய்த சிற்பிகளைப் பாராட்டினான்.

    அருகிருந்த 
    கூர்த்தமதி மந்திரி 
    "அரசே…
    கொடுத்த தங்கம் 
    மிக அதிகம்.
    மீதக் கணக்கைச் சோதித்து விட்டு 
    பரிசு மழைகளால் சிற்பிகளை மகிழ்விக்கலாம்…"

    சரியாய் போட்டார் குறுக்கே அரிவாளை.
    மீதமிருக்கும் துகள்கள் சோதிக்கப்பட்ட போது 
    செம்பு கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.

    சோழ சாம்ராஜ்யமே அதிரக் கத்தினான் இரணிய சோழன்.

    "கலப்படம்…
    கலப்படம்…
    நம்பிக்கை மோசடி…"

    (திவ்விய சரித்திரம் தொடரும்)

  • கூடுவிட்டுக் கூடுபாயும் கருணை வள்ளல்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமூலர் திவ்விய சரித்திரம்    பாகம் -2

    திருமந்திரம் 
    வலியுறுத்தும் தர்மம் 
    எக்காலத்துக்கும் பொருத்தமானது.

    'இறைவனுக்கு
    ஒரு துளசி அல்லது 
    வில்வ இலை கொடு.
    பசுவுக்கு ஒரு வாய் உணவு.
    யாசிப்பவருக்கு 
    ஒரு பிடி உணவு. 
    பிறருக்கு இனிய சொல். இவையே தர்மம்'
    என்கிறார் திருமூலர்
    திருமந்திரத்தில் மென்மையாக.

    'பத்து பெண்களுக்குத் திருமணம் செய்வித்தால்
    குழந்தையின்மை என்ற பாவமெல்லாம் தீரும்.
    தர்மம் மட்டுமே 
    பூர்வ ஜென்மப்
    பாவங்களைத் தீர்க்கும்'
    என்பதும் 
    திருமூலரின் திருமந்திரமே. 

    'மறு மந்திரமில்லை திருமந்திரத்திற்கு !
    ஈடில்லை ஒரு மந்திரமும் திருமந்திரத்திற்கு !! 
    ஈடில்லை ஒரு சித்தரும் திருமூலருக்கு !!!'

    இது 
    சித்தர் அனுபவம் 
    சிறக்கப் பெற்றோரின்
    சீரிய வாக்கு.

    திருமந்திரம் 
    படைத்த பின்னரும் தொடர்ந்து 
    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்கிறது 
    சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம்.

    வேறொரு கதை
    இன்னொரு விதமாய் சதுரகிரி தலபுராணத்தில்.

    இதில் 
    கூடுவிட்டுக் கூடு பாய்ந்த நிகழ்வு 
    நயம்பட கூறப்பட்டுள்ளது.

    பாண்டிய நாட்டில் 
    ஒரு மன்னன்.
    வீரசேனன் அவன் பெயர். 
    மனைவி குணவதி.

    ஒருநாள் நகர சோதனை சென்று வந்தவன் 
    தள்ளாடி வந்தான்.
    தன்னிலை மறந்தான்.
    சில மணித்துளிகளில் மரணித்தும் போனான்.

    இளம் வயது மன்னன்,
    இனிய மனது உள்ளவன் இறந்த செய்தி 
    மக்களை – மகாராணியை ஓலமிடச் செய்தது.

    அவர்களின் கூக்குரல் விண்ணை எட்டியது.

    அப்போது தான் சரியாக திருமூலர் 
    விண் வழியே 
    பயணத்திருந்தார்.

    ஐந்தறிவு கொண்ட பசுக்களின் துயரையே பொறுக்காதவர்
    ஆறறிவு படைத்த மக்களின் அழுகுரல் சகிப்பாரா !

    ஒருகணம் யோசித்தார். அக்கணமே 
    மன்னன் சாவை 
    முறியடிக்க 
    மன்னன் உடலில் உட்புகுந்தார்.

    வானிலிருந்து வந்த 
    சித்தர் திருமூலர்
    மண்ணில் இருந்த 
    மன்னன் வீரசேனனின் உடலில் உயிராய் புகுந்து
    'வீரசேனன்' மூலர் ஆனார்.

    அதுமுன்
    தான் தவமிருந்த 
    சதுரகிரியில் 
    அந்தரங்கச் சீடன்
    குருராஜன் என்பவரை நியமித்து 
    தன் பழைய உடலைப் பத்திரமாய் பாதுகாக்கச் சொன்னார்.

    மன்னர் உயிர் பெற
    மாநிலமே மகிழ்ந்தது.
    மக்கள் துள்ளி 
    மகிழ்ந்தனர். 
    மகாராணி குணவதி எல்லையில்லா
    மகிழ்வு கொண்டாள்.

    ராஜ வாழ்க்கை…. 
    அழகின் விளிம்பில்… 
    அதிசயம் காட்டிய 
    இளம் மகாராணி….
    அருகில்… மிக அருகில்.

    நாட்கள் நகர்ந்தன
    ஆடலும் பாடலுமாய்
    அரசும் ஆட்சியுமாய்.

    வீரசேனனாகவே
    மூலர் மாறிப்போனார். 

    இருப்பினும் 
    அரசியின் மனத்தில் 
    சந்தேகம் இருந்தது.

    ஒரு நாள் 
    கேட்டேவிட்டாள்.

    "மன்னன் மறைந்ததை 
    ராஜ வைத்தியர்தான்
    சொன்னார். 
    நான் கூட உடலைத் 
    தொட்டுப் பார்த்தேன். உணர்ந்தேன். 
    மரணமடைந்தார் என்பதைப் புரிந்தேன்.

    எதிலும் 
    உங்கள் ஆற்றலும் அணுகுமுறையும் 
    வேறாய் இருக்கிறது.

    அனுதினமும்
    இதை உணர்ந்து துய்க்கிறேன்.

    என் மனம் தான் 
    ஏனோ துன்புறுகிறது.

    கோபமே
    என் மன்னவனின்
    மரபு குணம்.
    முற்றிலுமாய் 
    அது 
    உங்களிடம் இல்லை.

    அவன் நாட்டம் வேறு.
    உங்கள் நாட்டம் புதிது.

    சொல் புதிது.
    பொருள் புதிது.
    ஆற்றல் புதிது.
    அனுபவம் புதிது.

    "யார் நீங்கள்?
    எனக்கு ஏதும் விளங்கவில்லை.

    அறிவால் 
    அரச சபையும்
    அன்பால்
    அந்தபுரமும்
    மாறி இருப்பதை 
    அறிய முடிகிறது."

    'வீரசேனன்' மூலர் உண்மையைச் 
    சொன்னார்.

    "விஷப்பாம்பு 
    ஊர்ந்த பூ ஒன்றை முகர்ந்ததாலே 
    உன் கணவன் 
    இறந்து போனான்.

    பின் அவன்
    பிழைத்ததும் 
    இப்போது இருப்பதும் ஆச்சரியமே !
    அது என் கருணையே !!"

    அரசனாய் இருப்பவனின்
    பதில் 
    அரசிக்கு 
    குழப்பம் தந்தது.

    அடுத்து 
    அவன் காத்த 
    அமைதியால் 
    கலங்கிப் போனாள்.
    அதன்பின்னே 
    தன்னுள் 
    புலம்பி ஓய்ந்தாள்.

    ஆனால் 
    அடுத்த முறை 
    அரசியார் 
    அதே கேள்வியைக் 
    கேட்ட போது 
    கேட்டு கேட்டு 
    நச்சரித்த போது 
    வீரசேனன் 
    உருவிலிருந்த மூலர் 
    உண்மையைப் 
    போட்டு உடைத்தார்.

    "அரசியே…!
    இவ்வுடல் 
    உன் தலைவன் வீரசேனனுக்கு உரியது.

    உள்ளிருக்கும் 
    உயிர் என்னுடையது.

    நீ சேர்ந்தது 
    அவன் உடலிலேயே.

    உறவும் பிணைப்பும் உடலுக்குரியன.
    உயிருக்கு அல்ல.
    ஆன்மாவுக்கு என்றும் களங்கம் கிடையாது"

    உடலின் உண்மையையும் 
    உயிரின் மேன்மையையும் 
    தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்தார்.
    நடந்த அனைத்தையும் 
    நயமாய் எடுத்துச் சொல்லி….

    "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை… 
    என்னைச் சொல்லி குற்றமில்லை…
    இது இறையருளின் கட்டளை."
    என நியாயப்படுத்தினார்.

    அரசிக்கு 
    குற்ற உணர்வு 
    குறுகுறுக்கவில்லை.
    கற்பு கெட்டதாக 
    கதறவில்லை.

    மூலரின் கூற்று 
    அரசிக்கு ஏற்புடையதாக இருந்தது.

    அரசு சுகமும் 
    ஆட்சி சுகமும் 
    மூலர் தந்த முழு சுகமும் அவளை அப்படிக்
    கட்டிப் போட்டிருந்தன.

    'இந்த 
    சாகா முனிவரிடம் 
    சமரசம் கொண்டால் தான் 
    சகல பாக்கியங்களும் நிரந்தரமாகும். 
    மகாராணியாய் 
    வலம் வர முடியும்'
    என கணக்குப் போட்டாள்.

    விதவைக்கோலம் 
    கண்களில் விரிய விவேகமாய் 
    முடிவெடுத்தாள் 
    சாகசக்காரி.

    'வீரசேனன்' மூலரை
    ஆரத் தழுவினாள்.

    சகலமும் 
    அறிந்தவரென்றாலும் 
    அந்த 
    காற்றும் புக முடியா
    அணைப்பில் 
    கொஞ்சம் கிறங்கித்தான் போனார் மூலர்.

    "ஆமாம்… சுவாமி,
    உங்கள் உடல் 
    சதுரகிரியில் 
    பத்திரமாய் 
    இருக்கும்தானே?

    சீடன் கவனம் 
    அதிலேயே சிதறாமல் இருக்குமா ?"
    சிக்கென கேள்விக்கணை எறிந்தாள்.

    "பயமில்லை… பாதுகாப்புக்கும் குறையில்லை…"

    "எனக்கென்னவோ பயமாயிருக்கிறது…
    சுவாமி…. 
    யாரேனும் எடுத்து 
    செத்த உடம்பென்று எரித்துவிட்டால்….!" 
    சந்தேகமாய் தான் 
    கேட்டாள் 
    சல்லாபக் குரலில். 

    "முடியாது….
    யாராலும் முடியாது…
    காய சித்தி 
    அடைந்த தேகம்.
    அதனை எரிக்க 
    சாதாரணத் தீயால்
    முடியாது.

    வெடி உப்பும் 
    குங்கிலியமும் 
    பொரிகாரமும் 
    போட்டுத் தூளாக்கித் தேகத்தில் பூச வேண்டும்.
    பின் விராலி இலைகள் 
    பரப்பி மூட வேண்டும்.

    அதன்பிறகு 
    அகில் கட்டைகள் 
    அடுக்கி தீ மூட்ட வேண்டும். 
    அப்போதுதான் சிதை எரியும்…

    இந்த ரகசியம் 
    எவருக்கும் தெரியாது…" 
    ரகசியமாகச் சொன்னார்.

    காமக்கிழத்தியிடம் ரகசியத்தைச் சொல்லிவிட்டு 
    உலகில் இது யாருக்கும் தெரியாதென 
    ரகசியமாய் சிரித்தார், சிதம்பர ரகசியம் அறிந்த
    அரச உருவ திருமூலநாதர்.

    அந்த ரகசியம் 
    தீயாய் படர்ந்தது 
    அரசியின் உள்ளத்தில்.

    "அழகிய இளைஞனாய் 
    இந்த அரசன்…. அமர்க்களமாய் 
    அரசு கட்டில்…
    ஆர்ப்பரிக்கும் 
    அரச வாழ்க்கை. எல்லையில்லா இன்பம்.

    அரசன் உருவில் இருக்கும் இந்த புதுக் கணவனைப் 
    பிரிந்தால் எல்லாம் பறிபோகும்…."

    "எவராயிருந்தால் என்ன ? கணவனைப் பிரிய 
    எந்த மனைவிக்கு மனது வரும்??
    சொத்து சுகம் குறைய யாருக்குதான் 
    மனசு வரும் ?"

    அரசியின் மனதில் 
    அதீத தீ கொழுந்தாய்
    எரிந்தது.
    மனதே அதில் 
    நெய் ஊற்றியது.

    வெளிக்காட்டிக் 
    கொள்ளாமல் 
    ஒரு திட்டம் தீட்டினாள் 
    பட்டத்து ராணி.

    அவளது திட்டம் 
    மிகச் சிறியது.
    கனக்கச்சிதமானது.

    நம்பிக்கையான 
    வீரர்களை அழைத்தாள்.

    மூலரின் 
    உடல் இருக்கும் 
    இடம் சொல்லி 
    எரிக்கும் முறைகளை எடுத்துச் சொல்லி 
    சடலத்தை கொஞ்சமும் விட்டுவிடாமல் 
    எரித்து வரச் சொன்னாள்.
    சாம்பலையும் 
    கரைத்துவிட்டு வர உத்தரவிட்டாள்.

    அதேசமயம் 
    'போன குரு 
    நீண்டகாலமாக
    காணவில்லையே '
    என புலம்பியபடியே 
    சீடன் குருராஜன் மூலரைத்தேடி 
    மதுரை நோக்கிப்
    புறப்பட்டான்.

    இது
    வீரர்களுக்கு காரியத்தை எளிதாக்கியது.

    மூலரின் பூவுடல் 
    அவர்கள் இட்ட தீயால் 
    நிர்மூலமானது.

    இத்தனை நடந்தும் 
    ஏதுமறியாதவள் போல் இனிய முகத்தோடு 
    ராஜ வாழ்க்கையைத் தொடர்ந்தாள் 
    மகாராணி குணவதி.

    பின்னொருநாள் 
    அரசன் காட்டிற்குச்
    சென்றார் வேட்டையாட.

    அருகில் 
    ஒளித்து வைத்திருக்கும் உடலும் 
    உத்தம சீடனும்
    நினைவுக்கு வரவே 
    கண்டு வரலாம் 
    என குகைக்குச் சென்றார்.

    குகையில் 
    வைத்த இடத்தில் 
    உரம் கொண்ட 
    உடல் இல்லை.

    ராணி செய்த சூழ்ச்சி 
    லேசாய் புரிந்தது.
    அமைதியாய் நாடு திரும்பினார் அவர்.

    ஏதும் அறியார் போல் ராணிக்கு 
    அரசாளும் பொறுப்பைத் தருவதாக 
    ஒரு நாள் 
    அறிவிப்பு செய்தார்.

    அகமகிழ்ந்தாலும்
    சூதாய் எரித்த கதை 
    தெரிந்திருக்குமோ
    என அஞ்சினாள்.

    ஆனால் 
    நாளாக நாளாக 
    ராணி குணவதிக்குத்
    தன் தவறு 
    மெதுவாய் புரிந்தது.

    தனது செயல் 
    சூழ்ச்சி துரோகம் 
    என பூரணமாய் 
    உணர்ந்தாள். 

    மூலரின் 
    காலடி விழுந்தாள்.

    தன் அன்பே காரணம்
    என நியாயப்படுத்தினாள். வாய்த்த கணவன்
    என்றும் பிரியாதிருக்க
    கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதவர்களே 
    மனைவிமார்கள்
    என தர்க்கம் செய்தாள்.

    நம்ப வைத்து செய்த துரோகம் 
    எனினும் கணவன் வேண்டும் என்ற மனைவியின் 
    அடிப்படை ஆசை எதார்த்தமானது 
    என்பதை மூலரும் ஏற்றார்.

    "மன்னிப்பீர்களா…" மகாராணியார் 
    மூலரின் மலர்ப் பாதம் 
    மீண்டும் பணிந்தாள்.

    "பரவாயில்லை…
    நடந்தது
    நடந்ததாக இருக்கட்டும்…

    விரைவில் ஒரு நாள் 
    நான் சென்று விடுவது நிச்சயம்.

    இனி என்னால்
    ஒன்று மட்டும் தர முடியும். 
    அது வரம்….
    என்ன வரம் 
    வேண்டும் கேள் ?"

    திருமூலர் 
    மனம் இரங்கினார்.

    பெண் மனம் ஆயிற்றே ! முடிச்சுப் போட்டது.

    "நான் 
    என்றும் சுமங்கலியாக இருக்க வேண்டும்."

    ஒரே கல்லில் 
    எத்தனை மாங்காய் !

    'வரம் கேட்பதில் 
    வல்லவர்கள் 
    வனிதைகள்!'
    கைகேயி கேட்ட வரங்கள் கணப்பொழுது 
    நினைவுக்கு வரவே
    திருமூலர் 
    சிரித்துக் கொண்டார்.

    "இனி 
    இந்த சித்தாதி சித்தர் நம்முடனே தான் 
    இருந்தாக வேண்டும் !

    உடல் மாறாது…
    உயிர் போகாது…."
    சிந்து பாடியது 
    அவள் உள்ளம்.

    ஆனால் அரசன் 
    உருவில் இருந்த
    திருமூலரின் சிந்தனை வேறாக இருந்தது.

    (திருமூலர் திவ்விய சரித்திரம் தொடரும்)
     

  • தமிழ் மணம் பரப்பிய திருமந்திரம்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமூலர் திவ்விய சரித்திரம்  பாகம் – 1

    சித்தர்களில் 
    சிறந்தவர்
    திருமூலர். 

    கயிலாயப் 
    பரம்பரையின் 
    முதன்மைச் சித்தர்.

    ஆதி சித்தரான 
    சிவ பெருமானிடம்
    உபதேசம் பெற்றவர்.

    கயிலாய நாயகன் 
    சிவ பிரானின் 
    பிரதம சீடரான
    நந்தி தேவரின் 
    அனுகிரகம் பெற்ற 
    அற்புதச் சீடர்.

    'ஒன்றே குலம் 
    ஒருவனே தேவன்'
    என்ற 
    ஒருமைக் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர்.

    சித்தர் பெருமக்களிடையே தமிழைக் காதலித்து 
    தமிழாய் வாழ்ந்த தன்னிகரில்லாச் சித்தர்.

    'என்னை இறைவன் 
    நன்கு படைத்தனன் 
    தன்னை நன்றாகத் 
    தமிழ் செய்யுமாறு…'
    எனப் பாடிய 
    தமிழ் நெஞ்சத்தார்.

    'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் மானிடரே..!
    உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான்'
    என உறுதிபடச் சொல்லி உடம்பே ஆலயம் 
    உள் உறைபவனே 
    இறைவன் என 
    புதிய வேதம் சொன்னவர்.

    பல கோடி யுகங்கள் 
    வாழ்ந்து 
    மூவாயிரம் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்றாய் 
    நான்கு அடிகளில் 
    ஒரு பாடல் பாடி 
    மூவாயிரம் பாடல்களைக் கோர்த்து 
    திருமந்திரம் என்னும் திருமந்திர மாலை 
    தந்தவர்.

    திருமூலர் அருளியவை 'திருமந்திரம் எண்ணாயிரம்' என வள்ளல் பெருமான் போற்றித் துதிக்கிறார்.

    திருமூலர் வர்க்கம்
    என்று
    ஒரு சித்தர் வர்க்கமே வர்ணிக்கப்படுவதும் பூஜிக்கப்படுவதும் 
    உண்டு.

    திருமாளிகைத் தேவர் காலங்கி நாதர் 
    கஞ்சமலையார்
    இந்திரன் 
    சந்திரன் 
    பிரம்மன் 
    ருத்திரன் 
    உள்ளிட்ட 
    ஏழு சித்தர்கள் 
    திருமூலரின் 
    சீர்மிகு சீடர்கள்.

    சிதம்பரத்தில் நேரில் 
    நடராஜர் நடனத்தைத் 
    தரிசித்து மகிழ்ந்தவர்.

    அங்கேயே 
    ஆதிமூலநாதர் 
    சன்னதியில் 
    மூலவராய் 
    ஆதிசிவன் ரூபத்தில் அருள்பாலித்து வருபவர்.

    திருமூலரின் 
    அருமைகளும் 
    பெருமைகளும் 
    அளப்பரியன.

    வரலாற்றில் இரண்டு திருமூலர்கள் இருந்ததாக சொல்வார் உண்டு.

    கூடு விட்டுக் கூடு பாயும் சித்தர் கலையான 
    பரகாயப் பிரவேசத்தில் வல்லவர் திருமூலர்.
    ஆதலால் 
    வான் புகழ் பெற்றவர்.

    பன்முறை
    பரகாயப் பிரவேசம் செய்திருந்தாலும் 
    அவரைப் பற்றிய 
    சித்தர் குறிப்பில் பதிவாகியுள்ளது 
    மூன்று முறையே.

    அவற்றை 
    ஒவ்வொன்றாகத்
    தரிசிப்போமா ?

     
    எல்லா சித்திகளும் 
    கைவரப் பெற்று கயிலாயத்தில் சிறப்புற்றிருந்த 
    சுந்தர நாதருக்கு 
    ஆத்ம நண்பரான அகத்தியரைப்
    பார்த்து வரலாம் 
    என்று 
    ஓர் ஆசை உதித்தது.

    கயிலாயம் விட்டு 
    அகத்தியர் வாழும் 
    பொதிகை மலைக்குப் பயணித்தார் சுந்தரநாதர்.

    வழியில் 
    பசுபதிநாத் (நேபாளம்)
    கேதார்நாத் (திருக்கேதாரம்)  காசி (கவி முத்தம்)
    விந்தமலை 
    திருப்பருப்பதம் திருக்காளத்தி திருவாலங்காடு
    காஞ்சிபுரம் என 
    சிவ தலங்களை அடைந்து சிவபாதம் போற்றி 
    சிதம்பரம் வந்தார்
    சுந்தர நாதர்.

    சிதம்பரத்தில் 
    தில்லை நடராஜரின் திருநடனம் கண்டார்.
    அது 
    அவருக்குக் கிடைத்த 
    பெரும் பாக்கியம்.

    அடுத்து வந்தது 
    ஆவடுதுறை.
    ஆம்…
    நம் திருவாடுதுறை,

    அங்கு 
    காவிரிக்கரையில் 
    பூஜை முடித்து
    எழுகையில் 
    ஓரிடத்தில் 
    பசுக்கூட்டம்.

    அவை 
    விம்மி விம்மி 
    செருமி செருமி 
    அழுத வண்ணம் 
    இருந்தன.

    பசுக்களின் அழுகுரல் சித்தரின் சித்தத்தைக்
    கலங்கச் செய்தன.

    பசுக்களின் 
    பரிசுத்த 
    ஆன்மாக்களின் 
    கூக்குரல் 
    சுந்தர நாதரிடம் 
    தங்கள் 
    துயர் நீக்க கோரின.

    சுந்தர நாதர் விசாரித்தார்.

    சாத்தனூரைச் சேர்ந்த 
    மூலன் என்பவன்
    பசுக்களை 
    மேய்ப்பவன்.

    மேய்க்கும்போது 
    உயிர் ஏய்த்து விலக
    அவன் மரணித்து  விட்டதாகவும் ,
    அவனின் 
    பிரியத்துக்குரிய பசுக்கள் பிரிய முடியாது என துடிதுடித்து வருவதாகவும் பதில் வந்தது.

    பசுக்களின் 
    துயர் தீர்ப்பது தனது 
    கருணைப் பெருக்கு 
    எனக் கருதிய 
    சுந்தர நாதர் 
    ஒரு கணம் யோசித்து 
    மூலன் உடலில் 
    பரகாயப் பிரவேசம் 
    செய்ய முடிவெடுத்தார்.

    மூலன் 
    உயிர்தெழுந்தாலே பசுக்கூட்டம் மகிழ்வுறும் என்பதனால் 
    சித்தர் சுந்தரநாதர்
    தனது உடலை ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டு 
    உயிராய் 
    மூலன் உடலில் ஐக்கியமானார்.

    துடித்திருந்த பசுக்கள் 
    மூலன் உடல் 
    அசைவதைக் கண்டதும் அருகில் ஓடின.
    நாவால் 
    அவனை மேவின.
    முகர்ந்தன. 
    வால் தூக்கித் துள்ளின. 'மா'எனக் குரல் உயர்த்தின. ஆடின. மகிழ்ந்தன.

    ஏதுமறியாது 
    எழுந்த மூலன்
    மாலை வரை 
    மாடுகளை மேய்த்தான்.

    இரவு நெருங்க 
    வழக்கப்படி 
    பசுக்களை ஒட்டியபடி
    வீட்டை நெருங்கினான்.

    ஓடிவந்த மனைவி 
    மூலனை 
    ஆசையாய் நெருங்கி அரவணைக்க முயல அதிர்ந்து அவன் 
    தள்ளிப் போனான்.

    'உண்மை உரைப்பதே உத்தமம்'
    என மூலன் 
    மனைவியிடம் 
    நடந்ததைச் சொன்னார் மூலன் உருவிலிருந்த 
    சுந்தர நாதர்.

    ஏற்கவில்லை 
    அந்த 
    அப்பாவிப் பெண்.

    ஊரைக் கூட்டினாள். பஞ்சாயத்து நடந்தது.

    மூலன் உருவில் வந்த 
    சுந்தர நாதர் 
    நடந்ததைக் கூறி 
    நம்ப மறுத்தவர்களிடம் மூலனின் உடலை விட்டு உயிரைப் பிரித்துக் காட்டி மீண்டும் அவனைச் 
    சடலம் ஆக்கி 
    தன் பக்கத்தை 
    நியாயம் ஆக்கினார்.

    வியந்த ஊர்மக்கள் 
    சுந்தர நாதரை 
    வணங்கித் தொழுது 
    விடை கொடுத்து 
    அனுப்பினர்.

    சுந்தர நாதர் 
    பசுவின் துயர் தீர்த்த நிறைவில் 
    மூலன் மனைவி 
    மறுத்திடாத மகிழ்வில் 
    தன் உடலைத் தேடக் கரையோரம் வந்தார்.

    உடம்பைத் தேடினார்.

    என்ன நடந்ததோ 
    அப்பூவுடல் காணவில்லை.

    மெளனித்து தியானித்தார்.

    நடந்தது 
    மனத்திரையில் ஒளிபரப்பானது.

    அது இறைவனின் சித்தம் 
    என சித்தருக்குப் புரிந்தது.

    இறை விருப்பத்தை உணர்ந்தவர் 
    மூலனின் உடலிலேயே 
    தங்கி விட முடிவெடுத்தார்.

    மீண்டும் மூலன் 
    வீடு திரும்பி 
    மூலனின் 
    உடலில் புகுந்தார்.
    மூலன் ஆனார்.

    அது முதல் 
    அவர் 
    'சுந்தரநாதர்' மூலன்
    ஆனார்.

    அவரை 
    சுந்தர நாத மூலர் 
    எனக் குறிக்கிறது 
    பக்தி உலகம்.

    திருவாடுதுறை திருக்கோயிலில் 
    மூலனுடைய 
    உடலிலேயே தங்கித் தான்
    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
    ஆண்டுக்கொரு பாடலாய் திருமந்திரம்  படைத்தார்.

    ஞானம், யோகம்,கிரியை, சரியை 
    எனும் நால்வகை நன்னெறிகள் விளங்க அந்நன்நெறிகளான பண்புகள், யோகம்,
    ஞானம், மந்திரம், தந்திரம், எந்திரம், வைத்தியம் 
    என சகலமும் 
    உள்ளடங்கிய 
    திருமந்திரங்களாக ஜொலிக்க செய்தார்.

    திருமந்திரத்தைத்
    திருக்கோயிலின் 
    வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் 
    ஓர் அரச மரத்தின்
    கீழ் தங்கித் தவமிருந்து படைத்தார்
    திருமூலர் பெருமான்.

    அவர் முதலில் 
    இட்ட பெயர் 
    'தமிழ் மூவாயிரம்'

    திருவாவடுதுறையில் 
    இருந்தே திருமந்திரத்தை வெளியிட வேண்டுமென வேண்டுகோள் வைத்தவர் ஒரு பெருமானே.

    அவர் 
    திருவாடுதுறை இறையான
    மாசிலாமணி பெருமான்.

    திருமூலரின் திருமந்திரம் தமிழுக்கும் சித்தர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் 
    கிடைத்த ஒரு பொக்கிஷம்.

    திருவாடுதுறையில் திருமந்திரம் 
    மணம் எழுப்பியது பற்றி 
    ஒரு சுவையான 
    வரலாறு உண்டு.

    திருவாடுதுறை திருக்கோயிலுக்கு 
    வழிபட வந்தார் 
    ஒரு தமிழ் ஞானி.

    கோயிலின் அருகே 
    விழுந்து வணங்கி எழுந்தபோது 
    அவருக்கு ஓர் ஆச்சரியம்.

    அருகிலிருந்தோரை
    அழைத்து 
    'இங்கே தமிழ் மணம் கமழ்கிறது…
    தோண்டிப் பாருங்கள்…..' என்றார் ஆர்வமாக.

    தோண்டிய போது 
    நூல் ஒன்று இருந்தது.
    அது 
    பரப்பிய நறுமணம் கும்மென்று 
    கோயிலை நிரப்பியது.

    அந்நூல் 
    திருமந்திரம் 
    என்கிறது ஒரு வரலாறு.

    தமிழ்மணம் கண்டறிந்த 
    அந்த ஞானி….
    தமிழ் மனம் கொண்ட திருஞானசம்பந்தர்.

    (திவ்விய சரித்திரம் தொடரும்)
     

  • மரணமிலாப் பெருவாழ்வு

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் –  பாகம் -8

    சரியாக 
    51 வது வயதில் 
    அந்த முடிவை 
    எடுக்க வைத்தார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

    அதற்கு முன் சிலமுறை 
    சித்தி வளாக அறையைத் தாழிட்டுக் கொண்டு 
    பல நாட்கள் 
    வெளியே வராமல் 
    அப்படியே 
    இருந்து விடுவார்
    வள்ளல் பெருமான்.

    ஆனால் 
    அன்று நடந்தது வேறு.

    அன்பர்கள் புடைசூழ அறைக்கு வெளியே கண்ணீருடன் 
    நின்றிருந்தனர்.

    தொழுவூரார் 
    கல்பட்டு ஐயா 
    சாம்பசிவ சாஸ்திரியார் உள்ளிட்ட 
    அன்பு நிறைந்த 
    அன்பர்கள் 
    செய்வதறியாது 
    கலங்கிய வண்ணம் காத்திருந்தனர்.

    அது தை மாதம்.
    புனர்பூச நட்சத்திரம். வெள்ளிக்கிழமை.
    மணி நள்ளிரவு 12.

    கரும சித்தி 
    யோக சித்தி 
    ஞான சித்தி 
    என்னும் 
    முத்தேக சித்திகளை அடைந்திருந்த 
    வள்ளல் பெருமான்…

    படைத்தல் 
    காத்தல் 
    அழித்தல் 
    மறைத்தல் 
    அருளல் எனும் இறைவனுக்குரிய ஐந்தொழில் ஆற்றலைக் கைவரப் பெற்றிருந்த 
    வள்ளல் பெருமான்….

    எல்லாம் வல்ல 
    இறைவனைப் போல் 
    எல்லாம்வல்ல சித்தராக ஞான உலா வந்த 
    வள்ளல் பெருமான்….

    மரணமிலாப் பெருவாழ்வு மனிதருக்குச சாத்தியம் 
    என போதித்து வந்த 
    வள்ளல் பெருமான்….

    சித்தி வளாகத்
    திருவறைக்குள் 
    நுழைந்தார்.

    'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி'
    எனும் மகாமந்திரம் 
    கனத்த இதயங்களிலிருந்து வெளிப்பட்டுக்
    கொண்டிருந்தது.

    அறை உள்ளிருந்து சாத்தப்பட்டது. 
    திருக்காப்பிட்டு 
    வைபவம் 
    வரலாறானது.

    'பின்னொருநாள் 
    வருவேன்'
    எனப் பூடகமாகச்
    சொல்லிச் சென்ற 
    வள்ளல் பெருமானைத் தரிசிக்க 
    வழிமேல் 
    விழி வைத்துக் காத்து கொண்டிருக்கின்றனர் அவரது அன்பர்கள்.

    இன்றுவரை 
    மருதூரிலும் 
    தர்மச் சபையிலும் 
    ஞான சபையிலும் 
    சித்தி வளாகத்திலும்  அருள்வேண்டி 
    கூடி நிற்கின்றனர்.

    அனுதினமும் 
    பெரும் கூட்டம்.

    தைப்பூசத்தன்றும் 
    மாதம் தோறும்
    பூசம் தோறும்
    ஏழு திரை நீக்கி 
    ஜோதி காட்டும் 
    வைபவத்தின் போது 
    பெருகும் கூட்டம் பெருமானின் 
    அருளாற்றலுக்கு 
    நடைமுறைச் சான்று.

    பெருமானார் 
    சித்தி அடைந்த பின்னர் பலத்த 
    சர்ச்சை எழுந்தது.

    அவரது 
    சித்தியை உணர்ந்த சன்மார்க்க அன்பர்கள் அவரைப் 
    போற்றி வணங்கும் 
    பக்தர்கள் கூட்டம்
    ஒருபுறம்.

    சாகாக்கலை என்னும் மீண்டும்
    பிறவாக் கலையை அனுபவத்தில் பெற்று இறையோடு இறையாக
    ஒளியோடு ஒளியாக
    இரண்டறக் கரைந்து மரணமிலாப் பெருவாழ்வின் அனுபவ வெளிப்பாடாய் வள்ளல் பெருமான் 
    சித்தி அடைந்தார் 
    என்பதை ஏற்காத
    இன்னொரு கூட்டம்.

    இவர்கள் எதிர் தரப்பு.

    சர்ச்சைகள் வலுத்தன. விமர்சனங்கள் வெடித்தன.

    வெள்ளைக்கார
    கலெக்டர் வந்தார்.

    ஆராய
    கூட வந்த 
    குறுக்கு புத்தி 
    தாசில்தார் 
    போலீசையும் 
    அழைத்தார்.

    அறையினுள் 
    திருக்காப்பிட்டு 
    கொண்டவர் 
    இடை நாளில் 
    சந்து பொந்துகளில் வெளியேறி இருப்பாரா 
    என கூரை ஏறியும் 
    சல்லடை போட்டும் 
    தேடிச் சலித்துப் போயினர்.

    வெள்ளைக்கார
    கலெக்டரோ 
    பெருமானைப்பற்றி அங்கிருந்த அன்பர்களிடம் விசாரித்து 
    நெகிழ்ந்துபோய் திருப்பணிக்கு 
    20 ரூபாய் வழங்கி விட்டு மனநிறைவோடு விடைபெற்றார்.

    அந்த 
    கலெக்டரின் பெயர் 
    ஜே.ஹெச். கார்ஸ்டின்.

    அவர் 
    வள்ளல் பெருமானின் வரலாறை 
    அரசு கெஸட்டாக வெளியிட்டார்.

    பின்னாளில் 
    தொழுவூரார் 
    பிரம்ம ஞான சங்கத்திற்கு பெருமான் குறித்து 
    ஒரு வாக்குமூலம் தந்தார்.

    இவ்விரண்டும் 
    வள்ளல் பெருமானின் 
    திவ்விய சரித்திரத்தின் அழிக்க முடியாத ஆவணங்கள்.

    அவற்றிலிருந்து 
    சில உண்மை வரிகள்.

    'அவர் பாடல்கள் 
    மேலான 
    அருள் அனுபவ 
    வாழ்க்கை 
    விளக்கங்களைக் கொண்டவை. 

    இறந்தவர்கள் 
    திரும்பவும் எழுந்து 
    நம்முடன் 
    இருக்கப் பார்ப்போம் 
    என்றவர் வள்ளலார்.

    இந்த நம்பிக்கையில் பிராமணர்கள் கூட இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கத் தொடங்கினர்.

    பல கிராமத்தினர் இறந்தவர்களை எரிக்காமல் வடலூருக்கு 
    கொண்டு வந்து 
    சமாதி வைத்தார்கள்.

    திருக்காப்பிட்டு கொண்ட அறையில்
    பின்னர் அவர் காணப்படவில்லை.

    தன்னுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.'

    இவையே 
    கார்ஸ்டின் ஐ.சி.எஸ் கையொப்பமிட்டு வழங்கியிருக்கும் 
    ஆவணச் சான்று.

    உடன் வாழ்ந்த 
    தொழுவூராரின் வாய்மொழிகள்…

    'இவர் 
    ஒரு சிறந்த
    ஏம சித்தர்.

    மாமிசம் உண்பவரை 
    மாற்றும் 
    அற்புதப் பார்வை 
    கொண்டவர்.

    ஐம்பதாவது வயதை
    அடைந்தபோது 
    உலகை விட்டுப் போகப் 
    போவதாகச் சொல்லி சீடர்களை 
    ஆறுதல்படுத்த தொடங்கினார்.

    ஆன்ம நேயத்தை விமர்சையாக போதித்தார்.

    வள்ளல் பெருமானின் 
    திவ்விய சரித்திரம் 
    அவர் சித்தி 
    அடைந்த பின்னரும் 
    தொடரும் அற்புதம். தொடர்வது அற்புதம்.

    அவர் அருளிய 
    சன்மார்க்க நெறிகள் 
    சாதி, மதம், நாடு, 
    மொழி, இனம்,காலம்
    கடந்து 
    நிலைத்து நிற்பது.

    அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி !

    வடலூர் பெருவளி 
    பயணிப்போருக்கு இறையருள் பேரொளி புலப்படும்.

    அது 
    வேறு எங்கும் 
    இல்லாத 
    வேறு எங்கும் 
    கிடைக்காத சிறப்பு.

    (நிறைவு)

  • அறக்கருணை மறக்கருணை

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 7

    எளிமையாய்
    அதிராமல் உலாவும் 
    வழக்கம் கொண்ட
    வள்ளல் பெருமான்
    ஒருமுறை 
    மதியவேளை 
    ஞான சபையை விட்டு வெளியே கிளம்பினார்

    சூரியன் சுட்டெரிக்கும் 
    கடும் வெயில் நேரம்.

    சபை அன்பர் 
    சண்முகம் பிள்ளை 
    பெருமானைக்
    காணவில்லை என்று கொஞ்ச நேரம் கழித்து
    தேடிப் போனார்.

    சற்று தூரத்தில் பெருமானாரின் 
    உடல்  
    தலை வேறு உடல் வேறு கைகள் வேறு வேறென அக்கக்காய் அங்கங்காய்
    பரவிக் கிடந்தன.

    பயந்துபோன 
    சண்முகம் பிள்ளை
    அரண்டு போய் கத்த
    உடலைச் சீராக்கிக் கொண்ட வள்ளல் பெருமான்….

    "இங்கு கண்டதை 
    யாரிடமும் சொல்லாதே..! இனி இப்படி 
    என்னைப்
    பின் தொடர்ந்து வராதேங்காணும்..!" 
    என உத்தரவு போட்டார்.

    இன்னொருமுறை 
    வெயிலில் நடந்து கொண்டிருந்த 
    வள்ளல் பெருமானை அன்பர்கள் பார்த்தபோது பயந்து ஒதுங்கினர். பரவசமடைந்தனர்.

    அதற்கு காரணம் 
    இருந்தது.

    வானத்து சூரியனுக்கும் வள்ளல் பெருமானின் 
    உச்சந்தலைக்கும் 
    இடையே 
    சூரியப் பேரொளி 
    நீள் ஒளித் தூணாய் 
    ஒளிமயக் கம்பாய் 
    ஒளிர்ந்து கொண்டிருந்தது.

    அக்காலத்தில்
    வள்ளல் பெருமான் மீது வழக்கொன்று நடந்தது மஞ்சக்குப்பம் கோர்ட்டில்.

    வழக்குப் போட்டவர் இலங்கையும் இந்தியாவும் போற்றிய நற்றமிழ் அறிஞர் சிவநேய சைவச் செல்வர் நாவலர் ஆறுமுகனார்.

    சிதம்பரத்தில் பெருமானும் பெருமானின் அன்பர்களும் நாவலரை நயமில்லாமல் நாகூசப் பேசி விட்டார்கள் என்பதே வழக்கு.

    அது ஓர் 
    அவதூறு வழக்கு. 

    தில்லை தீட்சிதர்கள் 
    ஐவரும் பெருமானும் 
    குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆறாவது நபரே 
    நமது நாயகர்.

    திரு என்னும் 
    மதிப்புமிகு சொல்லை திருஅருட்பாவிற்கும்
    திரு அருட்பிரகாச வள்ளலாருக்கும்
    சேர்க்க கூடாது 
    என்பதில் நேர்ந்த தகராறை ஒட்டிய விவாதத்தில் 
    எழுந்த வழக்கு அது.

    வழக்கு துவங்கும் நேரம்.

    'வள்ளல்பெருமான் கோர்ட்டுக்குச் செல்வார்,
    உடன் செல்லலாம்' என அன்பர்கள் 
    தருமச்சாலையில் 
    அவர் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

    கதவு திறந்த பாடில்லை. உள்ளே மெல்லிய ஒலியில் பிரார்த்தனை கீதம் 
    எழுந்த வண்ணம் இருந்தது.

    நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

    அதேநேரம் 
    'ராமலிங்க பரதேசி 
    ராமலிங்க பரதேசி 
    ராமலிங்க பரதேசி'
    கடலூர் கோர்ட்டில்  அழைத்தார் 
    கோர்ட் பணியாளர்.

    எங்கிருந்து வந்தாரோ 
    எப்படி வந்தாரோ 
    திடுமென வந்த 
    வள்ளல் பெருமான் 
    கோர்ட் அறைக்குள் நுழைந்தார்.

    கோர்ட்டில் வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலர் 
    வள்ளலைப் 
    பார்த்த மாத்திரத்தில் தன்னையும் அறியாமல் கைகளைக் குவித்து வணங்கியபடி 
    தன் இருக்கையை 
    விட்டு எழுந்தார்.

    அவரது ஆதரவாளர்களும் அப்படியே எழுந்தனர்.

    இதைக் கவனித்த 
    ஆங்கிலேய நீதிபதியும் அனிச்சையாய்
    எழுந்தார்.

    வணங்கினார்.
    மீண்டும் அமர்ந்தார்.

    விசாரணை தொடங்கியது.

    நீதிபதி கேட்டார் 
    நாவலரைப்  பார்த்து,
    "குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டு எல்லோரும் 
    ஏன் எழுந்தீர்கள் ?"

    "அவர் 
    வணங்கப் படவேண்டிய மகான்" 
    என்றார் நாவலர்.

    "வணங்கப் படவேண்டியவர் மீது வழக்கு ஏன் ?
    உங்கள் வழக்கே 
    தார்மீகமாகத் தப்பு.

    வழக்கைத் 
    தள்ளுபடி செய்கிறேன்,"

    நீதிபதி
    தீர்ப்பு எழுதினார்.

    தனித்து வந்த 
    வள்ளல் பெருமான் 
    தனித்தே திரும்பினார்.

    இதில்
    மனத்தில் பதிய வைக்க செய்தி ஒன்று உள்ளது.

    கோர்ட்டுக்கு வந்தது யார் ?

    வள்ளல் பெருமானா ??

    அவர் தர்மச் சாலையில் அல்லவா 
    தவத்தில் இருந்தார்..!

    அப்படியானால்….

    வள்ளல் பெருமான் தான் பற்பல இடங்களில் தோன்றுவாரே !

    அப்படி நடந்திருக்கும்.

    இல்லாது போனால் ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 
    பெருமானுக்குப் பதிலாக பெருமானாய் 
    வழக்காட வந்திருப்பார்.

    இது ஓர் 
    இறை குறிப்பு.

    வள்ளலார் கருணை ஆச்சரியமானது. அற்புதமானது.

    ஒருநாள் இரவு 
    ஒற்றியூர் சத்திரத்தில் வள்ளல்பெருமான் 
    தங்க நேர்ந்தது.

    அப்போதெல்லாம் வள்ளல்பெருமான் 
    காதில் 
    கடுக்கன்
    அணிந்திருப்பார்.

    காதுக் கடுக்கன்
    கள்வன் ஒருவனைக்
    களவாடத் தூண்டியது.

    ஒருக்களித்துப் 
    படுத்துக் கொண்டிருந்த வள்ளல் பெருமானின் காதருகே
    பூனைபோல வந்தவன் திறமையோடு 
    காதணியைத் 
    திருகித் திருடினான்.

    இன்னொரு காதணியும் அவனது திருட்டு 
    நோக்காக இருந்தது.

    வள்ளல் பெருமான் அவனுக்கு வாய்ப்பாக திரும்பிப் படுத்தார்.

    மறு காதணியையும் 
    கழற்றிய திருடன் வெற்றிவாகை சூடிய மகிழ்வில் புறப்பட்டான்.

    அவன் கரம் பற்றி, "இத்தொழில் 
    விட்டு விடு "
    என கனிவாகச் சொல்லி அனுப்பி வைத்தார். 

    பின்னொரு முறை….
    கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் இருந்தபோதும்
    இம்மாதிரிச் சம்பவம்
    ஒன்று நிகழ்ந்தது.

    ஹெட் கான்ஸ்டபிள் ஒருவரின்
    அழைப்பின் பேரில் சென்றிருந்து 
    இருட்டாகி ஆகிவிட்டதால் சத்திரத் திண்ணையில் படுத்திருந்தார்.

    பாதுகாவலுக்குப் 
    போலீசும் பக்கத்தில் 
    படுத்து இருந்தார்.

    வந்த திருடனின் 
    கண்களில் 
    சுவாமிக்குப்
    போலீஸ் போர்த்திய பொன்னாடையை 
    அவர்
    போர்த்தித் தூங்குவது தெரிந்தது. 

    நைசாக அருகில் வந்து ஆடையை உருவினான்.

    அவனுக்கு ஏதுவாக பெருமாள் 
    உடல் தளர்த்தி 
    புரண்டு படுத்து அனுமதித்தார்.

    ஆனால்
    பக்கத்தில் இருந்த போலீஸ்காரரோ 
    அக் கள்வனைக்
    கையும் களவுமாக 
    பிடித்து விட்டார்.

    "பாவம்… விட்டு விடுங்கள்… ஏழை… என்ன செய்வான் ?"
    என காவலரின்
    கையைத் தட்டி விட்டார்.

    ஆடையை உருவ வந்தவன் உருகிப் போனான். 
    அக் கள்வன் கை குவித்தான்.

    மாட்டிக்கொண்ட
    கள்வரைக் கூட 
    கனிவுடன் நடத்தி 
    உதவி புரிவதும் 
    புத்தி சொல்வதும்
    ஒருவகைக் கருணை.

    அறக்கருணை 
    என்பார்கள்.

    இன்னொன்றும் உண்டு.
    அது மறக்கருணை,

    தண்டித்துப் 
    புத்தி சொல்வது…
    திருந்த வைப்பது மறக்கருணை.

    மஞ்சக்குப்பம் 
    ராமச்சந்திர முதலியார் குடும்பத்தோடு 
    வள்ளல் பெருமானைத் தரிசிக்க வந்தார்.

    இரவு நெருங்கி விட்டதால் அவரைத் 
    தனியாக அனுப்ப 
    வள்ளல் பெருமான் விரும்பவில்லை.

    தானும் அவர்களின் 
    மாட்டு வண்டியில் ஏறி அவர்களை ஊர் சேர்க்கப்
    பயணப்பட்டார்.

    வழியில் 
    குள்ளஞ்சாவடி.
    அது
    திருடர்கள் நிறைந்த 
    காட்டுப் பகுதி.

    கள்வர்கள் 
    வண்டியைச் சூழ்ந்து முதலியார் அணிந்திருந்த 
    வைர மோதிரத்தைக்
    கழற்றச் சொல்லி 
    அதட்டினர்.

    அதுவரை 
    அமைதியாயிருந்த வள்ளல்பெருமான் "அவசரமோ…"
    என்று கேட்டார்.

    அதே வினாடியில் 
    அந்த அற்புதம் 
    நிகழ்ந்தது.

    சூழ்ந்திருந்த கள்வர்கள் சிலைபோல் ஆயினர்.

    தடியை ஓங்கியவனின் 
    கை தூக்கியபடியே செயலிழந்தது.

    "ஐயோ…. சாமி 
    தவறிழைத்து விட்டடோம்" கதறினர் கள்வர்.

    அமைதியாய்
    இருந்தார் 
    அருளாளர். 

    "இனிச் சத்தியமாகத்
     திருட மாட்டோம்…"

    அமைதியின் சொரூபம் அசையவில்லை.

    "உயிர் தாருங்கள்…
    இனி உழைத்து மட்டுமே உணவு உண்போம் "
    உறுதி சொல்லினர். 

    வள்ளல் பெருமான் 
    திருவாய் மலந்தார்.
    'பிச்' என்றார்.

    சிலை போல் இருந்த 
    திருடர்களால் 
    அசைய முடிந்தது.
    அடுத்த நொடியே 
    அருளாளர் காலில் விழுந்தனர். 

    இதுதான் 
    மறக்கருணை.

    தண்டித்துத் திருத்துவது. மறக்கருணை.

    இடை விடாத 
    இறை சிந்தனை. இடையிடையே 
    உலகம் உய்ய 
    உபதேசங்கள்.
    உலகோரை 
    உணரவைக்க 
    சித்தாடல்கள்.

    ஆண்டவரை 
    உள்ளொளியாய் 
    உணர்ந்து அனைவருக்கும் அவ்வனுபவத்தை வழங்க தயாராக இருந்த பேருள்ளம்.

    இப்படியெல்லாம் 
    இருந்தும் 
    வள்ளல் பெருமானின் 
    முகம் எப்போதும் 
    வாடியே இருந்தது.

    மக்கள் நெருங்கி 
    வராத நிலை. 
    நெருங்கி வந்த 
    அன்பர்களும் 
    உபதேசங்களை 
    உள்ளத்தில் 
    ஏற்றாத நிலை.

    'கடைவிரித்தேன் கொள்வாரில்லையே '
    என்னும் மனநிலை.

    வந்த தன் நோக்கம் நிறைவேறாத ஏக்க நிலை. சித்தர்கள் பலருக்கும் 
    நேர்ந்த நிலை.

    உலகுக்கே உபதேசம் 
    அருளிய 
    வள்ளல் பெருமானின் 
    உள் மனமோ 
    வேறு ஒரு உபதேசம் சொல்லியபடியே இருந்தது.

    இது 
    சீரிய சித்தர்களுக்கே 
    இயலும் நிலை.

    வழக்கம்போல 
    சித்தர்கள் 
    இறையடி சேரும் 
    இயல்பான நிலை அல்ல.

    அதற்கு மேலே.

    எந்த சித்தரும் 
    அடையாத 
    சித்தி நிலை.

    முத்தேக சித்தி நிலை.

    (சரித்திரம் விரியும்)

  • நொடிப்பொழுதில் நோய் தீர்க்கும் சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 6

    நாடி வரும் 
    அன்பர்களின் 
    நோய் நொடி 
    தீர்த்தல் 
    வள்ளல் பெருமானுக்கு மிகவும் பிடித்த காரியம்.

    பிறர் துன்பம்
    பொறுக்காத 
    பேரருளாளர்  
    அல்லவா !

    உயிர் இரக்கத்தின் இலக்கணம் 
    அவர்தானே !!

    கண்ணாடி 
    அப்பராய முதலியார் என்பவருக்குப்
    பலகாலம் வாதநோய்,

    அவரின் 
    நெடுங்கால நோயை 
    நொடி நேரத்தில் 
    தீர்த்து வைத்தார்.

    கண்ணாடிப் புலவர் "அகத்தியனோ
    வால்மீகியோ 
    ஆதிசேடனோ !"
    எனப் புகழ் மாலை 
    பாடி மகிழ்ந்தார்.

    இதே மாதிரி 
    சீர்காழியில் 
    ஓர்அன்பருக்குத்
    திருநீறு கொடுத்து 
    பெரும் 
    குன்ம நோய் தீர்த்தார்.

    கருங்குழியில் 
    குஷ்டநோய் கண்டிருந்த 
    பாலு ரெட்டியார்,
    கண்நோய் பீடித்திருந்த 
    முத்துநாராயண ரெட்டியார், உள்நாக்கு வளர்ந்து வதைப்பட்ட 
    சேலம் 
    ஜவுளி வியாபாரி,
    மகோரதம் 
    நோய் கொண்ட 
    வேட்டவலம் ஜமீன்தாரிணி, தலைமை மாணாக்கர் தொழுவூரார்…
    என நோய் 
    நீக்கப் பெற்றவர் 
    பட்டியல் நீளும்.

    நோய் நீங்கப் 
    பெற்றவரை 
    ஆட்கொண்டு 
    அவர்களை 
    அன்பெனும் பிடிக்குள் வைத்துக் கொண்டு 
    பல நற்பணிகளைச் செய்விப்பது பெருமானாருக்கு 
    கைவந்த கலை.

    உணவு என்பதும் 
    பசி என்பதும் 
    பசி நீக்குதலும் பெருமானாரின் 
    திவ்ய சரித்திரத்தில் அனுதினமும் 
    நடந்த அற்புதங்கள்.

    தர்மச் சாலையில் 
    அரிசி தீர்ந்து விட்டதாக தகவல் தருவார்கள்.

    கவலையோடு 
    'மறுநாள் 
    பசி ஆற்றுவது எப்படி ?'
    என்று 
    பதற்றத்தோடு 
    படுக்கச் செல்வர்.

    இரவில் 
    மாட்டு வண்டி வரும்.
    வண்டி நிறைய 
    நெல் மூட்டைகள் 
    அரிசி, பருப்பு 
    அணிவகுத்து வரும்.

    வண்டி ஓட்டி சொல்வார், "நாங்கள் 
    திருத்துறையூரிலிருந்து வருகிறோம்.

    எங்கள் எஜமானர் 
    கனவில் வந்து 
    பெருமானார் 
    அரிசி கேட்டு 
    உத்தரவிட்டார்."

    சில சமயம் 
    தருமச்சாலையில் எதிர்பாராது 
    கூட்டம் கூடிவிடும். 

    ஆக்கிய உணவு 
    தீர்ந்து போய் 
    கைகளைப் பிசைவர்  பொறுப்பாளர்கள்.

    வள்ளல் வருவார்.
    உணவுச் சட்டியிலிருந்து பசித்தவருக்கு உணவு போட்டபடி இருப்பார்.
    உணவு தீராது.
    வந்தவண்ணம் இருக்கும். வயிறு பல நிறைக்கும்.

    வாய் பிளந்து நிற்பர் 
    தர்மச்சாலையினர்.

    ஒரு முறை
    ஓரிடத்தில் 
    குடிக்கக்கூட 
    நீர் இல்லை என 
    மக்கள் அழுதனர்.

    ஒரு சொம்பு 
    நீர் கொண்டு வந்து 
    தன் கால் மீது 
    கொட்டச் சொன்னார்.
    மறுகணமே மழை 
    கொட்டோ கொட்டென்று கொட்டிப் பஞ்சம் தீர்த்தது.

    அம்மக்கள் 
    வள்ளல் பெருமானின் திருவடிகளில் தஞ்சமடைந்தனர்.

    இச்செய்தி கேட்டு 
    ஒரு நாள்
    ஓர் ஊரே 
    திரண்டு வந்தது. 

    அவ்வூரில் 
    மழை பொழிந்து 
    பல காலம் 
    கழிந்திருந்தது. 

    குளம் குட்டை 
    கிணறுகள் எல்லாம் தரைகாட்டி தவித்தன.

    பெருமானின் கருணை அவர்களின் ஊரான புதுப்பேட்டைக்கு கணப்பொழுதில் 
    கிடைத்தது.

    ஆறு குடம் தண்ணீர் கொண்டு வந்து 
    ஊற்றச் சொன்னார்.

    மேலே 
    மழை வெள்ளம். 
    கீழிருந்தும் 
    ஊற்று வெள்ளம்.

    ஆறு கூட 
    அளவில்லா நீருடன் 
    இருகரை தொட்டு 
    இறுமாப்பு கொண்டது.

    இன்று கூட 
    அவ்வூர்ப் பக்கம் 
    தண்ணீர் பஞ்சமில்லை என்கிறது வரலாறு.

    ரசவாதம் என்னும் 
    அற்புதச் சித்து 
    பிடிவாதமாய் 
    அவர் ஏவலுக்கு
    காத்திருக்கும்.

    ஏழை எளியோருக்கு 
    தங்கம் செய்து தருவார்.
    அவர்கள் ஏழ்மை நீக்குவார்.

    ரசவாதம்
    கற்றுக்கொள்ள வந்த சுயநலக் கூட்டத்தை கண்டிப்போடு 
    ஒதுக்கி வைப்பார்.

    ஒரு சமயம்
    கூடவே இருந்த அன்பர் ரகசியமாய் 
    பொருள் சேர்த்து 
    ரசவாதம் செய்த போது 
    கண் போனதே 
    மிச்சமாய் இருந்தது.

    அவரையும் 
    புத்தி சொல்லி 
    ஆட்கொண்டு 
    புத்தொளி வழங்கினார்.

    வள்ளல் பெருமான் 
    ஞான சபையை
    ரசவாதம் செய்து 
    பொருளீட்டிக் 
    கட்டி முடித்ததாக 
    அன்பர்கள் வியப்பர்.

    ஞானசபையைச்
    சுற்றியிருக்கும் 
    பிரமாண்ட சங்கிலி ஆரம்பத்தில் அனைத்தும் தங்கமாய் தான் இருந்தது.

    பின் தான் 
    வள்ளல் பெருமான் 
    இரும்புச் சங்கிலியாய் மாற்றினாராம்.

    நாடிவரும் அன்பர்களின் வேண்டிய உதவிகள் பூர்த்தியானதும் 
    மீதம் இருப்பதை 
    கிணற்றில் வீசி 
    அழித்து விடுவாராம்
    பற்றற்றப் பெருமகனார்.

    பெருமானாரின் 
    உருவமும் உடையும் 
    நடையும் பேச்சும் 
    பணிவும் ஒழுக்கம் நிறைந்தது.

    வாழையடி வாழையென 
    வந்த திருக்கூட்ட மரபில் வேறெந்த ஞானிகளிடம் காண முடியாதது.

    ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு செயலிலும் அன்பும் கனிவும் பணிவும் தயையும் இறையும் இணைந்திருக்கும்.

    மெலிந்த உடல்.
    நடுத்தர உயரம்.
    நிமிர்ந்த தோற்றம்.
    அழகிய திருமுகம்.
    ஒளி வீசும் கண்கள்.

    இவையே 
    வள்ளல் பெருமான்.

    உடை வெள்ளை.
    இரண்டு ஆடை
    உடல் முழுதும் மறைக்கும். முக்காடு தலை மறைக்கும்.

    ஊர் உலகத்திற்கு உணவளித்த 
    அவரின் உணவு 
    மிக சாதாரண 
    சாத்வீக உணவே.

    சிலகாலம் 
    இருவேளை உணவு. காலப்போக்கில் 
    இரண்டு மூன்று தினங்களுக்கு ஒரு முறை.

    பல நாட்கள் பட்டினி. பின்னாளில் 
    உணவையே தவிர்த்தார்.

    உறக்கம் பெருமானுக்கு 
    ஒரு பொருட்டல்ல.

    இளமையில் 
    நாலு மணிநேரம்.
    பின் அது ஆனது
    இரண்டு மணி நேரம்.  அதுவும் தேய்ந்து 
    ஒரு மணி ஆனது. பிற்காலத்தில்
    தூக்கமே இல்லை.

    நடையும் பாவனையும் அடக்கம் நிறைந்தது.
    கைகட்டிய நிலையே 
    அவரது நித்திய நிலை.

    அதிர்ந்து பேசுதலோ
    அதிர நடப்பதோ 
    அவரிடத்து இல்லை.

    கைகளைக் கூட 
    வீசி நடக்க மாட்டார்.
    கை கட்டியபடியே நடப்பார்.

    காலில் 
    அதுவரை 
    எச்சித்தரும் 
    அணிந்திராத 
    ஆற்காடு ஜோடு.

    பெயரையும் புகழையும் சற்றும் விரும்பார்.
    யாருக்கும் தெரியாமல் இருப்பதே 
    அவருக்குப் பிடித்த ஒன்று.

    எப்போதும் உலகக் கவலை. உள்ளத்தில் 
    பரம்பொருளைச் சேர பெருங்கவலை.

    அதனால் 
    எப்போதும் 
    கவலை தோய்ந்த முகம். சட்டென உருகிக்
    கண்ணீர் விடும் கண்கள்.

    இறை சிந்தனை 
    ஒன்றே அவரது 
    அகத்தில் நிறைந்திருக்கும்.

    தமிழறிஞராயினும் 
    ஆன்மிக ஆர்வலராயினும் அவர்களுக்கு 
    உரிய உதவி புரிந்து ஆட்கொண்டு 
    அரவணைப்பது
    அவர் சிறப்பு.

    கல்பட்டு ஐயாவைத்
    தேடிச்சென்று அருள்பாலித்தார் 
    அருளாளர்.

    இன்று அவரும் 
    வடலூரில் 
    அருள்பாலித்துக் கொண்டிருக்கும் 
    பேறு தந்தவர்
    வள்ளல் பெருமான்.

    பல இடங்களில் 
    ஒரே சமயத்தில் 
    தோன்றி அன்பர்களை ஆச்சரியப்படுத்துவதும் 
    வள்ளலாரின் வழக்கம்.

    கடலூர் 
    பேரை தேவநாதன் 
    பெருமானின் பக்தர்.

    அவரது 
    அன்பு மகன்
    அய்யாசாமி
    ஒருநாள் இரவில் 
    நோயால் துடித்தார்.

    துடிப்பைக் 
    காணச் சகிக்காத 
    தந்தை தேவநாதன் 
    வள்ளல் பெருமானை நினைத்து நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார்.

    தியானத்தைக் 
    கலைத்தது 
    கதவை தட்டும் 
    மெல்லிய ஓசை.

    ஓடிப் போய் 
    கதவைத் திறந்தால் 
    வேண்டி நின்ற 
    அன்பர் அருகில் 
    நின்றார் 
    வள்ளல்பெருமான்.

    கட்டிலில் 
    துடித்த வண்ணமிருந்த
    மகனைஅன்பொழுகப் பார்த்தார்.

    அருள் ஒழுக 
    திருநீறு பூசினார்.

    சில நிமிடங்களில் 
    துடிப்பும் களைப்பும் 
    நோயும் துடுக்கென 
    ஓடி விடைபெற்றன.

    புத்துணர்வோடு 
    துள்ளி எழுந்த 
    அய்யாசாமி 
    பெருமானை 
    வணங்கினார்.

    இருவரும் 
    வியந்து நிற்க 
    பெருமானார் 
    விடைபெற்றார்.

    மறுநாள் 
    தருமச்சாலைக்கு 
    அப்பாவும் மகனும் 
    ஆவலுடன் வந்தனர் பெருமானுக்கு 
    நன்றி சொல்ல.

    அவர்களைப் 
    பார்த்த மாத்திரத்தில் 
    எதிர்கொண்டு 
    வழக்கத்திற்கு மாறாக வேகமாய் வந்தார் வள்ளல்பெருமான்.

    "நேற்று இரவு வந்ததை 
    இங்கு யாரிடமும் சொல்லாதேங் காணும்.."

    "சரி '
    என்ற தேவநாதன் 
    ஆர்வக் கோளாறினால் அங்கிருந்தவர்களிடம் அளவளாவின் போது பெருமான் இரவு எங்கிருந்தார் 
    என கேட்டார்.

    முதல் நாள் இரவு 
    நீண்டநேரம் 
    சத்சங்கம் நடந்ததாகச் சொல்லி பெருமானின் பேச்சைச் சிலாகித்தனர் அவர்கள்.

    தேவநாதன் 
    முதல் நாள் இரவு 
    தங்கள் வீட்டிற்குப்
    பெருமான் வந்ததை பெருமையோடு 
    சொன்னார்.

    தர்மச்சாலை முழுதும் 
    செய்தி பரவ 
    உலகிற்கு ஓர் உண்மை தெரிய வந்தது.

    அது 
    வள்ளல் பெருமான் 
    பல இடங்களில் 
    ஒரே நேரத்தில் காட்சியளிப்பார் 
    என்பதே.

    இப்படித்தான் 
    ஒருமுறை 
    திருபொதிகைக்கு 
    வழிபடச் சென்றார்.

    அது திருவிழாக் காலம். கூட்டம் அலைமோதியது.
    பெருமானைக் கண்டதும் அவரை வழிபட 
    ஆர்வம் கொண்டது.

    தள்ளுமுள்ளு.
    அடிதடி,
    மக்களுக்கு நெருக்கடி.

    பொறுப்பாரா 
    பூமனத்தார் ?

    அங்கே கூட்டத்தில் 
    பல இடங்களில் 
    ஒரே சமயத்தில் தோன்றி பக்தர்களை ஆசீர்வதித்தார் அருளாளர் 
    வள்ளல் பெருமான்.

    இன்னொருமுறை.

    பெருமானைத் 
    தரிசிக்க வந்தது 
    அன்பர் கூட்டம்.

    தருமச்சாலையிலிருந்து உலாவப் புறப்பட்டார் 
    வள்ளல் பெருந்தகை.

    அதுபோது 
    தனித்து இருப்பது 
    அவர் வழக்கம்.

    அன்பர்கள் விரைந்து நெருங்கிவர வர
    அவரோ அப்போதும்
    தொலைவிலிருந்தார்.

    அவர்கள் 
    விரைந்து நெருங்கி நிற்க அப்போதும் பெருமான் தொலைவில் காணப்பட்டார்.

    இந்த அதிசயம் 
    மாயாஜாலம் அல்ல.
    சித்தர் ரகசியம்.

    சத்திய தருமச்சாலை 
    கட்டடப் பணிக்கு 
    மரம் வாங்கும் நேரம்.

    காண்ட்ராக்டர் 
    ஆறுமுக முதலியார் சென்னைக்குச் செல்வதாகவும் 
    பெருமானும் கூட 
    வர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

    ' ஆகட்டும் பார்க்கலாம் '
     என்றார் அருளாளர்.

    மறுநாள் 
    சென்னை மரக்கடையில் பெருமான் முன்னதாகவே காத்திருந்து 
    ஆறுமுக முதலியாருக்கு 
    உதவியாய் இருந்தார்.

    ஆனால் 
    அதேநேரம் 
    வடலூரில் நடமாடிக் கொண்டிருந்தார்.

    விஷயம் தெரியவர
    இந்த அற்புதம் பெருமானாரின் 
    புகழைப் பாடியது.

    – வரலாறு விரியும்.

  • முக்காலம் உணர்ந்தவரின்  மூன்று காலம்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 5

    வள்ளல் பிரானின் 
    திவ்விய சரித்திரத்தை 
    மூன்று பாகங்களாகப் பகுக்கிறது 
    ஓர் ஆய்வுக் குறிப்பு.
    அது
    ஒரு காலக் குறிப்பு.

    திருவொற்றியூர் 
    வழிபாட்டுக் காலம்.
    சிதம்பரம் 
    வழிபாட்டுக் காலம்.
    வடலூர் 
    வழிபாட்டுக் காலம்.

    இவை மூன்றும் 
    வள்ளல் பிரான் 
    உலகுக்கு
    வழிகாட்டும் காலமுமாய் அமைந்தது தான் சிறப்பு.

    12 வயதில் 
    அருளியல் வாழ்க்கை தொடங்கிய போது 
    அவருள் 
    சித்திகள் சில 
    சக்தி மிக்கவையாகவே வெளிவரத் துவங்கின.

    அவ்வப்போது 
    இறைவனும் இறைவியும் உடனிருந்து அருளியதும் அற்புதங்கள் காட்டி 
    அவரை உலகில் 
    சிறக்க வைத்ததும் இறையருள் சித்தமே.

    ஒருநாள் 
    திருவொற்றியூர் 
    தரிசனத்தை 
    முடித்துவிட்டு 
    நள்ளிரவில் 
    வீட்டுக்கு வந்தார் 
    வள்ளல் பெருமான்.

    வீடு உள்பக்கமாகத்
    தாழிடப்பட்டு இருந்தது. 
    திண்ணையிலேயே படுத்துவிட்டார்.

    பசி வந்திட்டால் 
    பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பெருமானுக்கு 
    அது பொருந்துவதில்லை.
    எதுவும் பலிக்காது அவரிடத்தில்.

    படுத்தவுடன் 
    தூங்கிவிட்டார்.

    பசியைப் பிணியென உலகிற்குத் தெரிவித்து எல்லா உயிர்க்கும் 
    பசிப்பிணி ஆற்ற பிறப்பெடுத்து 
    வந்தவருக்கு 
    பசியாற்ற 
    விருப்பப்பட்டது 
    ஓர் உள்ளம்.

    உலகின்
    உச்ச தெய்வம் 
    உமாபதியின் 
    உள்ளம் நிறை 
    வடிவுடை அம்மனே 
    அவ்வுள்ளத்தின் அதிபதி.

    'நம்பிள்ளை பசியோடு தூங்குகிறதே…'
    என உணவோடு 
    வந்தது அம்மன்.

    வேடிக்கை காட்ட 
    எண்ணி
    வள்ளல் பிரானின் 
    தமக்கை உருவில்
    வந்தது.

    தம்பியை எழுப்பி 
    அமுதுண்ணச் செய்து மகிழ்வோடு சென்றது சகோதரி வடிவுடைய 
    வடிவுடையம்மன்.

    சற்று நேரத்தில் 
    வீட்டினுள்
    துயிலிருந்த 
    தமக்கைக்குத்
    திடீர் விழிப்பு.

    'இவ்வளவு நேரமாய் 
    தம்பியைக் காணாமே…'
    வீட்டை திறந்து 
    வெளியே வந்தார்.

    திண்ணையில் 
    உறங்கியபடி இருந்த 
    தில்லை அரசனின் திருக்குமரனைப்
    பார்த்தார்.

    உடனே 
    வீட்டிற்குள்
    ஓடோடிச் சென்று 
    உணவு கொண்டு வந்து தம்பியை எழுப்பினார்.

    "என்னக்கா….

    எத்தனை முறை உண்பது ? இப்பத் தானே தந்தீர்கள் ?

    இது என்ன 
    புதுப் பழக்கம் !"

    கேள்வி மேல் 
    கேள்வி வந்தது.

    "நானா ? உனக்கா ?
    என்னப்பா… விளையாடுகிறாயா "

    தமக்கை 
    அந்த ராத்திரியிலும் ரெளத்திரப்பட்டார்.

    வள்ளல் பெருமான்,
    "என்ன சோதனை இது ?"
    என கண்களை மூடினார்.

    மனக்கண்ணில் வடிவுடையம்மன் 
    சிரித்தபடி தெரிந்தார்.

    சிவனைப் போலவே அம்மனும் 
    விளையாடுவார் போலிருக்கிறது…!

    அது 
    திருவிளையாடல்.
    இது 
    அம்மன் விளையாடல். 
    அன்பு விளையாட்டு.

    "பாருங்கள் அக்கா…
    உங்கள் உருவில் 
    வடிவுடை அம்மனே வந்து எனக்கு 
    அமுதூட்டி இருக்கிறார். "

    கொஞ்சம் பரவசமாய் சொன்னார் பெருமகனார்.

    அந்த இரவிலும்
    தமக்கையின் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது.

    அவர் திருவாய்
    'சிவ சிவ '
    என ஒலித்தது.

    தெய்வம் ஊட்டிய உற்சாகத்தில் 
    உறங்கிப் போனார்
    எல்லா உயிர்களுக்கும் உணவூட்டிய 
    அன்பூட்டிய 
    ஞானம் ஊட்டிய 
    ஞான வள்ளல்

    வராது வந்த 
    மாமணியாய் திகழ்ந்த வள்ளல் பெருமான் நிகழ்த்திய 
    அற்புதங்கள் 
    சித்துகள் 
    எண்ணிலடங்காதவை.

    விவரிக்கின்
    ஒரு பெரும் 
    நூலாய் விரியும். 

    ஒரு சில மட்டும் 
    சான்றாக இங்கு .

    வள்ளல் பெருமான் நிகழ்த்திய 
    சித்தாடல்கள்
    இறைவன் அவர் மூலம் நிகழ்த்திய அற்புதங்கள். பெருமானின் 
    சித்தர் தன்மைகளை உலகுக்கு அறிவிப்பவை.

    திருவொற்றியூர் 
    சென்று வந்த 
    காலகட்டத்திலேயே பெருமான் 
    சித்திகள் பல
    கைவரப் பெற்றார்.

    திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் 
    ஆலயம் பிரசித்தம்.

    அங்கு 
    ஒரு மூதாட்டி.
    கோயில் தொண்டே 
    அவரது வாழ்வு.

    ஒருநாள் 
    கோயிலின் 
    குளத்தைக் கடந்த
    வள்ளல் பெருமானைக் 
    கண்ட மூதாட்டி 
    ஓடோடி வந்தார்.

    "ஐயனே….
    எனக்கு 
    ஓர் அற்புதம் 
    காட்டுங்கள்….
    அருள் அற்புதம் 
    செய்யுங்கள்…"
    பெருமானின் 
    திருப்பாதம் பணிந்தார்.

    குனிந்து 
    குளத்து மண் 
    எடுத்தார் 
    குவலயம் 
    சிறக்க வந்த 
    குணாளர்.

    மூதாட்டியின் 
    கைகளில்
    எடுத்த மண் வைத்துக்
    கைகளை மூடி 
    சில நேரம் கழித்துத் 
    திறக்கச் சொன்னார்.

    பாட்டியும் 
    பெருமான் 
    சொன்னபடி 
    கைகளைக் குவித்து
    மூடி 
    பின் திறந்தார்.

    கை நிறைய 
    சிறு சிறு 
    சிவலிங்கங்கள்.

    அற்புதம் கேட்டவருக்கு ஆனந்தம்… பேரானந்தம்.

    சிவலிங்கங்களின் பொற்பாதங்கள் 
    கைகளில் 
    நிறைந்திருக்க 
    வழங்கிய 
    வள்ளல் பெருமானின் திருப்பாதங்களைத்
    தேடினார்.

    அப்பாதங்களோ 
    இறைவனின் பொற்பாதங்களைக்
    காண வேண்டி 
    ஒற்றியூர் கோயிலுக்குப் பயணித்திருந்தது. 

    பிறகென்ன,
    இவ்வற்புதம் 
    மூதாட்டியின் வார்த்தைகளால் 
    ஒற்றியூர் முழுக்க எதிரொலித்தது.

    திருவொற்றியூர்
    நெல்லிக்காய் 
    பண்டார சந்து
    வள்ளல் பெருமான் கோயிலுக்குச் செல்லும் வழக்கமான 
    சந்தடியற்ற
    சின்ன சந்து.

    அங்கு
    ஒரு 
    வீட்டுத் திண்ணையில் 
    ஒரு 
    நிர்வாண சந்நியாசி.

    பித்தனைப் போல் 
    வாய்க்கு வந்தபடி
    வசை பாடிக் 
    கொண்டிருப்பது 
    அவரது வழக்கம்.

    வருவோர் போவோரைப் பார்த்து…

    "இதோ… நாய் போகிறது..!"

    "அட… கழுதை போகிறது..!"

    "கொழுத்த மாடே … 
    பார்த்து போ.." 
    கெக்கலிப்பார்.
    குதுகலிப்பார்.

    அச்சந்தே
    அவரால் 
    அருவருப்பாய் 
    இருந்தது.

    ஒரு நாள் 
    வள்ளல் பெருமான் 
    அச்சந்து வழியாகச் 
    செல்வதைப் பார்த்து….

    "இதோ…
    உத்தம மனிதன் 
    போகிறார்…."
    என உரக்கச் சொல்லி பெருமானை நோக்கி 
    ஓடி வந்தார் 
    அந்த பித்தர்.

    பார்த்த 
    தெருமக்களுக்கு 
    ஆச்சரியம் !

    ஓடி வந்தவர் 
    முதன் முறையாக 
    தன் 
    நிர்வாண நிலை 
    உணர்ந்து 
    கூனிக்குறுகி 
    முடிந்த மட்டும் 
    கைகளால் 
    நிர்வாணம் மறைத்து 
    அருகில் நின்றார்.

    வள்ளல் பெருமான் புன்னகைத்தபடி 
    அப்பித்தனின் காதில்
    ஏதோ உரைத்தார் 
    மெல்ல நடந்தபடி.

    தெருவே 
    வேடிக்கை பார்த்தது.

    அதற்குப் பின்னர் 
    நடந்ததே 
    ஆச்சரியம்…!
    அதிசயம்…!! 
    அற்புதம்…!!!

    வள்ளல் பெருமான் 
    கோயில் பக்கம்
    சென்ற 
    அதே வேளையில் 
    அத்தனை காலம் அருவருப்பாய் 
    ஆட்டம் போட்டு அனைவரையும் 
    மனம் கலங்கச் 
    செய்து வந்த 
    நிர்வாணப் பித்தர் இன்னொருபுறம் 
    மூட்டை முடிச்சுகளுடன் நடையைக் கட்டினார்.

    அதன்பின் அவர் 
    எப்போதும் அங்கு காணப்படவில்லை.

    அந்த பித்தர்
    பின்னாளில் 
    ஒரு மாபெரும் 
    சித்தரானார் 
    என்கிறது ஒரு குறிப்பு.

    இந்த அற்புதம் 
    இன்றும் 
    திருவொற்றியூரில் 
    ஏகப் பிரசித்தம்.

    (வள்ளலார் வரலாறு விரியும்)
     

  • ஒளி தேக நிறை ஞானி

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 4

    ஆரவாரம் நிறைந்த சென்னையும் 
    அன்பு நிறைந்த 
    உற்றாரும் உறவினரும்
    ஒருவித அமைதி தேடிய வள்ளல் பெருமானுக்கு சுமையாகப் பட்டனர்.

    வயதோ முப்பத்தைந்தை எட்டிப்பார்த்து இருந்தது.

    சிதம்பரம் 
    நடராஜர் வேறு 
    அடிக்கடி கனவிலும் நினைவிலும் 
    ஏக்கத்தோடு 
    அழைத்தார்.

    கடைசியாக 
    குழந்தையாக 
    ஐந்து மாதத்தில் 
    பார்த்தது.

    தேச சஞ்சாரம் திருக்கோயில்கள் 
    ஏழை எளிய 
    பாவப்பட்ட மக்கள் விருப்பமாக இருந்தது.

    இறை தேடலை 
    ஒட்டி 
    ஞானத்தேடல் 
    பாக்கியிருந்தது.

    சென்னைக்கு விடைகொடுத்தார்.

    வள்ளலாரின் 
    ஞானப் படை 
    தரைவழிப் பயணமாய் ஒவ்வொரு கோயிலாக வழிபட்டு 
    சிதம்பரம் வந்தது.

    வழிபட்டது.

    அங்கு கோயிலில் 
    வள்ளல் பெருமான் மீது கருங்குழி மணியக்காரர் வேங்கட ரெட்டியார் விழிபட்டது.

    "எனது இல்லத்தில் தங்குங்கள்…

    அங்கிருந்தபடியே 
    கோயில் கோவிலாய் போகலாம்.
    ஆன்மீகம் அருளலாம். தமிழமுது படைக்கலாம்."

    மறுக்க விடாமல் 
    வற்புறுத்தி 
    கருங்குழிக்கு அழைத்துச்சென்றார்.

    ஒன்பது ஆண்டுகள் கருங்குழியே 
    வள்ளல் பெருமானின் வசிப்பிடம் ஆனது.

    இக்காலத்தைச் 
    சிதம்பர வழிகாட்டு காலம் என வரலாறு
    குறிப்பிட்டு மகிழ்கிறது.

    நான்காம் திருமுறையும்
    ஆறாம் திருமுறையின் முற்பகுதியும்
    இக்காலத்தில் 
    வள்ளல் பெருமானால் அருளப் பெற்றன. 

    கருங்குழியில் 
    இரவுநேரத்தில் எழுதுவது வள்ளல் பெருமானின் வழக்கம்.

    ஒரு நாள்
    விடிய விடிய 
    எழுதினார்.

    வெளிச்சம் குறையவே அருகில் இருந்த 
    எண்ணெய் செம்பைக் கவிழ்த்து ஊற்றி எழுத்துப்பணி 
    தொடர்ந்தார்.

    மறுநாள் காலை 
    ஓர் உண்மை 
    அதிசயமாய் 
    உலகிற்குத்
    தெரியவந்தது.

    எண்ணெய் செம்பில் 
    அன்று எண்ணெய் இருக்கவில்லை.

    எண்ணெய் 
    ஊற்றி வைக்கும் 
    பணி செய்யும் 
    ரெட்டியார் வீட்டம்மாள் 
    ஏதோ 
    ஊருக்குச் செல்லும் அவசரத்தில் 
    தவறிழைத்து விட்டார்.

    புதிய செம்பில் 
    நீர் ஊற்றி 
    அதை பதமாக்க 
    ஓரத்தில் வைக்க நினைத்தவர் 
    ஏதோ நினைப்பில் வள்ளல்பெருமான் 
    பக்கத்தில் வைத்துவிட்டார்.

    மறுநாள் காலை…
    வள்ளல் பெருமான் தண்ணீரில் 
    விளக்கெரித்த தன்னிகரில்லா 
    தவ ஆற்றல் 
    ஊருக்குத் தெரியவர அன்பர்கள் 
    கொண்டாடி வணங்கினர்.

    தண்ணீரில் விளக்கெரித்து
    தன்னிகரில்லா 
    அகவல் அருளியதும் 
    அன்று இரவு தான்.

    அன்று
    ஓர் இரவில் 
    பெருமாள்
    திருக்கரத்தால் 
    அருளியது தான் 
    இன்றளவும்
    ஒப்புயர்வற்ற 
    ஞான பொக்கிஷமாக
    விளங்கும் அகவல்.

    வள்ளலார் அருளிய
    அருட்பெருஞ்ஜோதி அகவல்
    தமிழ் இலக்கிய உலகில் எழுதப்பட்ட 
    1596 அகவல் பா
    வரிகள் கொண்ட
    முதல் மற்றும் முதன்மை இலக்கியம்.

    இன்றளவும் 
    அதை விஞ்சிய 
    அகவலும் இல்லை.
    ஞானமும் இல்லை.

    உபதேசம் 
    நோய்க்கு மருந்து அற்புதங்கள் 
    சித்தாடல்கள் 
    என்பன 
    அக்கம்பக்கம் பரவி அன்பர்கள் பெருகினர் 
    இக் காலகட்டத்தில்.

    அவரது 
    ஆன்மீகக் கட்டமோ 
    தேடலை அடுத்து 
    ஞானத்தை 
    நெருங்கி நின்றது.

    ஆம்….
    வள்ளல்பெருமான் 
    சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதிய நெறியை உணர்ந்து திளைக்கும் உயர்ந்த நெறியை பின்னாளில்
    உலகுக்கு 
    அர்ப்பணித்தார்.

    'கடவுள் ஒருவரே.
    உண்மை அன்பால் 
    அவரை ஒளி வடிவாய் உணரலாம்.
    வழிபடலாம்.

    அவரே 
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் '
    என்று இறைவனை வணங்கவும்
    வழிபடவும் 
    நெருங்கவும் 
    உணரவும் 
    வழி சொன்னார்.

    வாழ்வியல் நெறிகளை வரிசைப் படுத்தினார்.

    சன்மார்க்க 
    கொள்கைகளை
    அறிவித்தார்.

    ஒரு நன்னாளில்
    சுத்த சன்மார்க்கத்தை கருங்குழியில் நிறுவினார்.

    அதுவரைத் 
    தான் உள்பட 
    உலகத்தார் வணங்கிய தெய்வங்கள் யாவும் 
    மறை தெய்வங்கள் 
    என்றும் 
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் 
    நிறை தெய்வமென 
    தான் உணர்ந்ததை 
    உலகிற்குச் சொன்னார்.

    புலால் மறுத்தலும் பசித்தவருக்கு உணவிடுதலும் ஜீவகாருண்யம் 
    என்றும் 
    ஜீவகாருண்யமே 
    மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் 
    ஜீவகாருண்யம் இல்லாத இறை வழிபாடு பயனற்றது இறையிடம் சேர்க்காது என்றும் 
    உண்மை சொன்னார்.

    அன்பர்கள் சேர்ந்ததால் ஆர்ப்பரிப்பது
    வள்ளலாரின்
    வழக்கமில்லை.

    குறைவான பேச்சும் நிறைவான தவமும்
    அவரது 
    வாழ்வியல் கொள்கை.

    பசியாற்றும் 
    அன்னதான பணிக்கு 
    சத்திய தருமச்சாலையை வடலூரில்
    1867-இல் துவக்கினார்.

    அவர் 
    இட்ட கருணைத் தீ 
    இன்றும் அணையா 
    அடுப்பாய் 
    154 ஆண்டுகளாய் 
    அன்பர்கள் பசியை 
    ஆற்றி வருவது 
    உலகமே வியந்து போற்றும் அறப்பணி.

    உலகிற்கே வழிகாட்டும் ஜீவகாருணியப் பணி.

    ஊரும் உலகமும் 
    வள்ளல் பெருமானை ஊன்றிப் பார்த்து 
    வியந்த வேளை…. 

    தொழுவூர் 
    வேலாயுதனாரும் 
    இறுக்கம் 
    ரத்தினசாமி முதலியார் போன்றோரும் 
    வள்ளல் பெருமான் 
    அதுவரை 
    அருளியவற்றைத் தொகுத்து ஐந்து திருமுறைகளாக வெளியிட்டனர்.

    அவரது பாடல்களை திருஅருட்பா என்றும் 
    அவரை 
    திருஅருட்பிரகாச வள்ளலார் என்றும் 
    உலகம் அழைக்க ஆரம்பித்தது.

    இதற்கு வித்திட்டவர் தொழுவூராரே.

    திருவருட்பா என்றும் திருமுறை என்றும் 
    பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் வழக்கும் 
    வந்தது.

    அது காலப்போக்கில் காணாமல் போனது.

    தர்மச் சாலை 
    தொடங்கப் பெற்றதும்
    கருங்குழி விடுத்து 
    வடலூர் வந்தார் 
    வள்ளல் பெருமான்.

    தர்மச் சாலையே இருப்பிடமானது.

    வடலூர்
    தமிழக வரைபடத்தில் முக்கியம் ஆனது.

    இறையனுபவம் 
    தேடுபவர்களின்
    புகழிடம்
    புகலிடமானது.

    தனிமை வேண்டி 
    வள்ளல் பெருமான் 
    அருகிருக்கும் 
    மேட்டுக்குப்பம் சென்று அங்கேயே உறையத் தொடங்கினார்.

    சித்தி வளாகம்.

    மேட்டுக்குப்பத்தில் பெருமானார் தங்கிய திருமாளிகை.

    அதன் பெயரை 
    சித்தி வளாகம் 
    என வைத்த 
    பெருமான் மனதில் 
    ஒரு கணக்கு இருந்தது. 
    அது இறை சித்தம்.
     அவருக்கு மட்டும் உணர்த்தப்பட்ட 
    நிறைநிலை.

    சித்தி வளாகத்தில் 
    இருந்த படி 
    சத்திய ஞானசபையை உருவாக்கினார் 
    வள்ளல் பெருமான்.

    ஞான சபையில் 
    ஏழு திரைகள் அமைத்து
    ஏழு தத்துவங்களை 
    விளக்கி 
    எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை அனுபவமாய் 
    உலகுக்குக் காட்டினார்.

    அதை உணர்வோர் கூட்டம் ஞான சபையை 
    கோயிலாகக் கொண்டு இன்றும் கூடி வழங்குவது கண்கூடு.

    ஞான சபையைத் 
    தொடர்ந்து 
    சன்மார்க்கத்தின் 
    கொடியைப் படைத்தார்.

    கொடியைப் பறக்க விட்டு பெருமான் உபதேசித்தது 
    மகா உபதேசம் 
    பேருபதேசம் 
    என்ற பெயரோடு 
    ஞான வழிகாட்டி வருகிறது.

    அதுவே 
    வள்ளல் பெருமானின் தீர்க்கமான கொள்கை வழிபாடு.


    அது 
    1874 ஆம் ஆண்டு.

    கார்த்திகைத் தீபத்தன்று 
    ஒரு விளக்கைச்
    சித்திவளாகத் திருமாளிகையில் 
    புறத்தில் வைத்தார்.

    'இதை ஜோதியாய் ஆராதியுங்கள்.
    தடைபடாது ஆராதியுங்கள்… நினைந்து நினைந்து 
    என்று தொடங்கும் 
    ஞான சரியை
    28 பாடல்களாக அருளப்பட்டுள்ளது.

    அதனைப் பாடியபடி 
    தெய்வ பாவனையை ஜோதியில் செய்யுங்கள்.

    நான் இப்போது 
    இந்த உடம்பில் 
    இருக்கிறேன்…

    இனி 
    அனைத்து உடம்பிலும்
    புகுவேன்.'

    உபதேசித்தார் 
    மெல்லிய குரலில்.

    'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி '
    என்று உள்ளம் உருகி குரலெழுப்பியது 
    அன்பர்கள் கூட்டம்.

    'சாகாதவனே சன்மார்க்கி' என்பது 
    வள்ளல் பெருமானின் உபதேச மொழி.

    பெருமானார்
    அறைக்குள் நுழைந்தார்.
    கதவு சாத்தப்பட்டது.
    பெருமானின் உருவம் உலகின் கண்களில் 
    இருந்து மறைந்தது.

    அன்பர்கள் 
    இக்கணம் வரை 
    அவர் வரவுக்கென 
    வழிமேல் விழிவைத்து 
    காத்த வண்ணம் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    அறைக்குள்ளே 
    நடந்தது என்ன ? 
    என்ன நடந்திருக்கும் ?

    வள்ளல் பெருமான் இறையோடு இறையாக இரண்டறக் கலந்துவிட்டார்.

    உலகில் 
    பல சித்தர்கள் 
    இப்படித்தான் 
    கலந்தார்கள். 

    ஆனால் 
    நிறைஞானியான 
    வள்ளல் பெருமான் 
    ஒளி தேகம் பெற்றவர்.

    அதனால் அருட்பெருஞ்ஜோதியில் ஒளியாய் கலந்துவிட்டார். கரைந்து விட்டார்.

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை போல் 
    வள்ளல் பெருமானும் எல்லாவற்றிலும்
    வியாபகம் ஆனார்.

    பிறப்பில் 
    வளர்ப்பில் 
    எழுத்தில் 
    பேச்சில் 
    சித்தாடல்களில் 
    அருளில்
    மட்டுமில்லாது 
    நிறைவிலும் 
    உலகை 
    வியக்க வைத்தவர் 
    வள்ளல் பெருமான்.

    (வள்ளலார் சரித்திரம் விரியும்)
     

  • அண்ணனை விஞ்சிய தம்பி

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் -3

    வள்ளல் பிரானின் அண்ணன் 
    சபாபதி பிள்ளைக்கு 
    ஒரு சனிக்கிழமை அன்று 
    கடும் சுரம்.

    சனி தோறும் அவருக்கு 
    சோமு செட்டியார் என்னும் 
    செல்வந்தர் வீட்டில் சொற்பொழிவு இருக்கும்.

    மனைவியின் 
    பரிந்துரையின் பேரில் தம்பியை 
    அனுப்பி வைத்தார் 
    சுரத்தில் மூழ்கிய 
    சபாபதி பிள்ளை.

    ஆன்றோரும் சான்றோரும் கூடியிருந்த 
    சபையில் சின்னஞ் சிறுவரான 
    வள்ளல் பெருமான் 
    பேசிய பேச்சு 
    அதுவரை…… ஏன் 
    இன்றுவரை 
    தமிழ் உலகும் 
    ஆன்மீக உலகும் 
    கேட்டிராத பேச்சு.

    ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரின் 
    திவ்விய சரித்திரத்தை ஞானச்செல்வன் 
    நீண்ட நேரம் 
    பிரசங்கம் செய்தார்.

    வழக்கத்திற்கு மாறாக நள்ளிரவு வரை 
    நீண்டிருந்தது சத்சங்கம்.

    ஆனால் 
    பாடல் வரிகளில் 
    இரண்டு வரிக்குத் தான்
    விளக்கம் சொல்லியிருந்தார்.

    சொற்பொழிவின் போது
    'உலகெலாம்' என்ற சொல்லை 
    அவர் விளக்கிய விதம் அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    அன்றுதான் 
    வள்ளல் பெருமானின் பேச்சாற்றல் 
    ஊருக்குத் தெரிந்தது.

    மறுநாள் 
    சொற்பொழிவுக்கு அழைப்பதற்காக 
    சோமு செட்டியார் தரப்பு பிரமுகர்கள் 
    வந்திருந்தார்கள்.

    சபாபதி பிள்ளை 
    அவர்களை வரவேற்று உபசரித்து 
    காய்ச்சல் சரியானவுடன் 
    வந்து விடுவதாகச் சொன்னார்.

    ஆனால் வந்தவர்களோ,
    "ஐயா…  நீங்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்…
    உங்கள் தம்பி 
    உங்களை விட பிரமாதமாக சொற்பொழிவாற்றினார்.
    செட்டியார் 
    உங்கள் தம்பியைத் தான் பேசி சம்மதம் 
    பெற்று வரச் சொன்னார்…"

    என்று சொல்ல 
    முகம் சுருங்கியதே தவிர 
    மனம் விரிந்து மகிழ்ந்தது சபாபதி பிள்ளைக்கு.

    பின்னொரு நாள்…

    வள்ளல்பெருமான் பேச்சை  மறைந்து நின்று கேட்டு 
    பிரமித்துப் போனார் அண்ணன்.

    அதுமுதல் 
    அண்ணன் பெருமைப்படும் தம்பி ஆனார் 
    வள்ளல் பெருமான்.

    சிதம்பரம்
    அப்பைய தீட்சிதர்
    சொல்லிய சொற்கள் உண்மையாவதைக் கண்ட சபாபதி பிள்ளை 
    தம்பியைத் 
    தெய்வக்குழந்தை 
    என உணர்ந்து
    தொழவும் 
    தயங்கவில்லை.

    ஒன்பது வயதில் கண்ணாடியில் 
    காட்சி தந்து 
    ஆட்கொண்ட இறைவன் 
    12 வயதில் 
    அருளியல் வாழ்க்கைக்கு ஆணையிட்டார்.

    வள்ளல் பிரானின்
    அருளியல் வாழ்க்கை தொடங்கியது.

    தினமும் கால்நடையாக திருவொற்றியூர் சென்று 
    தியாகராஜப் பெருமானையும் 
    வடிவுடை அம்மனையும் வழிபடுவார்.

    அக்கோயில்
    முருகன் சிலைக்கு 
    முன் நின்று 
    திருத்தணி முருகனாக பாவித்துக் கவி பாடுவார்.

    இடையிடையே திருத்தணி விஜயமும் இனிதே நடந்தது.

    இவையே 
    வள்ளல் பெருமானின் 
    35 வயது வரை நிகழ்ந்த ஆன்மிக நிகழ்வுகள்.

    அவர் திருவாய் மலர்ந்தவை தமிழுக்கு கிடைத்த 
    அற்புத பாடல்கள் ஆகின.

    பின்னாளில் 
    திருமுறைகள் ஆகின.

    சென்னையில் 
    இருந்த காலம் 
    பெருமானின் 
    வாழ்க்கைக் தடத்தில் 
    அருளும் ஆன்மீகமும் 
    ஆற்றலும் தமிழும் 
    செழித்த காலம்.

    ஓதாது உணர்ந்த பெருமானிடம் 
    ஆன்றோரும் சான்றோரும் கற்றோரும் 
    கவி படைப்போரும் 
    மேலும் கற்க 
    தேடி வந்தனர்.

    எந்நேரமும் 
    சூழ்ந்து நின்றனர்.

    காலையிலே சிறுவர்களுக்கான வகுப்பு.

    மதியம் 
    தமிழ் 
    ஆர்வலர்களுக்கான புலவர்களுக்கான 
    தமிழ் வகுப்பு.
    இலக்கண வகுப்பு.

    மாலை சத்சங்கம்.
    கூடவே 
    திருவொற்றியூர் பயணம்.

    இதுவே பெருமானின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

    எண்ணற்ற 
    தமிழ் வித்துவான்கள் புகழ்பெற்ற தமிழ்க் கடல்கள் 
    பெருமானிடம் வந்து சேர்ந்து தமிழ் கற்றது 
    அவரால் புலமை பெற்றது வரலாற்றுப் பதிவு. 

    வள்ளல் பெருமானின் 
    முதல் மாணாக்கர் 
    என்ற பெருமை பெற்றவர்  
    தொழுவூர் வேலாயுதனார்.

    பெருமானோடு சேர்ந்து
    தமிழ் மணம் பரப்பிய பேறுபெற்றவர் அவர்.

    தொழுவூரார்
    பெருமானைத் 
    தொழுத நிகழ்வு சுவாரசியமானது.

    பெருமானாரைச் 
    சந்திக்க நினைத்த தொழுவூரார் 
    அவரைச் சோதித்தறிய முற்பட்டார்.

    தானே கடின நடையில் 
    நூறு செயல்களை இயற்றி அவற்றைக் கையோடு 
    எடுத்து வந்து 
    பழைய ஏடுகளில் 
    காணப்பட்ட 
    சங்கப் பாடல்கள் என பெருமானார் கைகளில் வைத்தார்.

    படித்துப் பார்த்த 
    மாத்திரத்தில் 
    "இவை 
    சங்கப்பாடல்கள் இல்லை…
    யாரோ 
    பொருளிலக்கணம் தேரா கடைக்குட்டி பாடியவை"
    என்று புறம் தள்ளினார் தமிழ்ப் புலமையில் இணையற்ற 
    இறைப் புதல்வர் தமிழ்த்தாயின் 
    தவப்புதல்வர் வள்ளல் பெருமான்.

    தொழுவூரார் 
    நாணிக் கோணி 
    தாள் பணிந்தார்.
    பெருமானிடம் 
    மன்னிப்புக் கோரி சரணடைந்தார்.

    அது முதலே 
    வள்ளல் பெருமானின் சீடரானார்.
    அவருடனேயே இருந்தபடி தமிழ்ச் சேர்த்தார். 
    பெரும்புலவர் ஆனார்.

    பின்னாளில் 
    மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் 
    பேராசிரியராக உயர்ந்தார்.

    'உபய கலாநிதி பெரும்புலவர்'
    என பட்டமும் பெற்றார்.

    இறுக்கம் இரத்தினம் முதலியார் 
    பொன்னேரி சுந்தரம் நரசிங்கபுரம் வீராசாமி 
    பாயாறு ஞானசுந்தரம் ஐயர் கிரியா யோகா 
    பண்டாரம் ஆறுமுகம் ஐயா 
    என பயின்றவர் 
    பட்டியல் நீளும்.

    இதுதவிர 
    தமிழ் பெரியார்கள் 
    பெரும் புலவர்கள் வள்ளல்பெருமான் தொடர்பில் இருந்தனர்.

    ஒரு முறை
    அப்போதைய சங்கராச்சாரியாருக்கு வடமொழியில் 
    ஒரு சந்தேகம்.

    அதைத் தன் மாணாக்கர் தொழுவூராரைக் கொண்டு தீர்த்து வைத்தார்.

    இப்படி ஆன்றோர் சான்றோர் பலர் 
    சந்தேகம் கேட்டு தெளிந்தனர். 
    சத்சங்கம் கேட்டு சிறந்தனர்.

    சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில்தான்
    நூல்கள் பல அருளினார். அரிய நூல்களைப் புதுப்பித்தார்.
    பதிப்பித்தார்.

    மாயூரம் 
    வேதநாயகம் பிள்ளை போன்றோருக்கு 
    சாற்றுக் கவி அளித்தார்.

    அருளியல் வாழ்க்கையை 
    12 வயதில் தொடங்கி 
    இறை அருளுக்கும்
    தமிழ் அருள்வதற்கும் தன்னை 
    அர்ப்பணித்துக் கொண்ட வள்ளல் பெருமானுக்கு 
    வந்தது ஒரு தொந்தரவு 
    27 வயதில்.

    பிள்ளைப் பருவத்திலேயே மூவாசைகளையும்
    முற்றும் துறந்து 
    துறவொழுக்கம்
    பூண்டவருக்கு 
    ஓர் அன்பு நெருக்கடி.

    தமையனும் தாயும் சகோதரிகளும் சகோதரர்களும் 
    தந்த குடும்பப் பிடி.

    சகோதரி உண்ணாமுலை அம்மையாரின் மகள் 
    தனகோடி அம்மாளைத் திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்தித்தனர்.

    எவ்வளவோ மறுத்தும் 
    வீட்டாரே வென்றனர்.

    பெருமான் 
    இறைவனை 
    வேண்டியபடி 
    தாலி கட்டினார்.

    முதலிரவன்றே 
    தன் நிலையை 
    விளக்கினார். 
    வீட்டார் ஏற்காத 
    வள்ளலின் சிந்தனையை கட்டிய மனைவி 
    கலங்கியபடி 
    முழுதும் ஏற்றார்.

    பெருமானாரின் துறவறப்பயணம் 
    மனம்போல் தொடர்ந்தது.

    –    வள்ளல்பிரானின் சரித்திரம் தொடரும்..
     

  • ஓதாது உணர்ந்தவர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 2

    இறை அருளோடு  
    இராமையா பிள்ளை சின்னம்மை தம்பதியரின் 
    செல்லக் குழந்தை….
    சிதம்பரம் நடராஜப் பெருமானின் 
    அருட்பார்வையைத் தரிசித்த ஞானக்குழந்தை 
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது.

    குழந்தையைப் பார்க்க வரும் 
    உற்றாரும் உறவினரும் ஒன்றை உணர்ந்தனர்.

    பார்த்துவிட்டுத் திரும்பிய மாத்திரத்தில் ஆகாத காரியங்களெல்லாம் ஆகத் தொடங்கின.

    அகமகிழ்ந்து 
    குழந்தையைக் 
    'குழந்தை வடிவில் 
    தோன்றிய குமரவேல் '
    எனப் போற்றினர்.

    ஆனால் 
    காலச் சக்கரத்தின் சுழற்சி அப்படி ஒன்றும் 
    கனிவாய் இருக்கவில்லை.

    தந்தை 
    இராமையா பிள்ளை
    காலமானார். 

    தாய் சின்னம்மை 
    தன் தாய் வீடு இருந்த சின்னகாவனம் சென்று 
    சில காலம் இருந்து பார்த்துவிட்டுப்
    பிழைப்பிற்காக சென்னையில் 
    குடியமர்ந்தார்.

    சின்னம்மைக்கு 
    மொத்தம் 
    ஐந்து குழந்தைகள்.

    மூத்தவர் சபாபதி பிள்ளை 
    ஐந்தாவது கடைக்குட்டியே 
    இறை விரும்பிய இராமலிங்கம்.

    சபாபதி பிள்ளையின் வருமானத்தில் 
    வறுமையை விரட்டி வாழத் தலைப்பட்டது 
    வள்ளலின் குடும்பம்.

    சபாபதி பிள்ளை
    சிறு பிள்ளைகளுக்குப் 
    பாடம் சொல்லித் தருவார். 
    கணக்கு எழுதுவார்.
    நில அளவைக்குச் செல்வார். 
    இவையே வருமானம்.

    அப்பா இல்லாத 
    பிள்ளையைத் தப்பாக வளர்த்து விடக்கூடாது 
    என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார் சபாபதி பிள்ளை.

    அவருக்கு வாய்த்த மனையாட்டி 
    பாப்பாத்தி 
    ஓர் அற்புதத் திருவாட்டி.

    அன்னையாய் 
    கணவரின் தம்பியை அரவணைத்தார்.
    தாயினும் மேலாய் 
    தயவுடன் வளர்த்தார்.

    சபாபதி பிள்ளை 
    தம்பி இராமலிங்கத்திற்கு அடிப்படைக் கல்வி 
    சொல்லித் தந்தார்.

    கல்வியில் 
    தம்பி காட்டாத அக்கறை 
    வருத்தத்தைத் தந்தது.

    அடுத்த கட்டமாய் பள்ளிப்பருவத்தில் 
    தனக்கு கல்வி தந்த காஞ்சிபுரம் 
    மகாவித்துவான் 
    சபாபதி முதலியாரிடம் சேர்ப்பித்தார்.

    பள்ளிக் கல்வியிலும் 
    வள்ளல் பிரானுக்கு நாட்டமில்லை.

    அவர் நோட்டம் எல்லாம் 
    பள்ளி செல்லும் 
    வழியில் இருந்த 
    கந்தக் கோட்டம் 
    கந்தவேல் 
    மேல்தான் இருந்தது.

    பள்ளிக்கு வராது 
    கோயிலில் ஒதுங்கும் இராமலிங்கத்தின்
    பின் சென்று பார்த்தார்கள் உடன் படித்த மாணவர்கள்.

    அவர் 
    சிறுவயதுக்கு மாறாக
    அந்த இளம் 
    பிராயத்திலேயே 
    இறைவன் திருவடி பற்றி…

    'ஒருமையுடன் 
    உனது திருவடி 
    நினைக்கின்ற 
    உத்தமர் தம் உறவு 
    வேண்டும் '
    என இயல்பாய் பாடிக் கொண்டிருந்தார்.

    'வேண்டாம்… வேண்டாம்'
    என 
    எதிர்மறையாய் 
    பாடல்கள் 
    உலா வந்த காலத்தில்…

    'வேண்டும்…. வேண்டும் '
    என்று இறைவனை
    வேண்டிக் கொண்டிருந்தார்.

    ஆசிரியர் சபாபதி முதலியாருக்கு 
    எளிதில் புரிந்தது.

    'ஒன்பது வயது 
    இராமலிங்கம் 
    சாதாரண மாணாக்கன் அல்ல.

    ஏற்கனவே 
    எங்கேயோ 
    கற்று முடித்தவன்.
    அவனுக்குக் கற்பிக்க ஏதுமில்லை.

    எல்லாம் அறிந்தவன். கல்லாது பெற்றவன்.
    ஓதாது உணர்ந்தவன்.'

    பிரமிப்பு நீங்காமல்
    சபாபதி பிள்ளையை 
    அழைத்தார் 
    வித்துவான்
    சபாபதி முதலியார்.

    "அப்பா… உன் தம்பி 
    கற்பிக்கத் 
    தகுந்தவன் அல்ல…"

    அடுத்து 
    அவர் 
    'ஞானம் செறிந்தவன்..'
    என்று சொல்வதற்குள் கோபத்தோடு 
    தம்பியை 
    இழுத்துக்கொண்டு 
    வீடு திரும்பினார் 
    சபாபதி பிள்ளை.

    வீடு 
    அல்லோல
    கல்லோலப்பட்டது. 

    முடிவில் 
    'இராமலிங்கத்திற்கு 
    வீட்டில் இடமில்லை. உணவில்லை. 
    உடையும் இல்லை…'
    தடை போட்டார் தனையன்.

    அண்ணி 
    பாப்பாத்தி அம்மாவால் 
    அழத்தான் முடிந்தது.

    இது 
    வள்ளல் பெருமானுக்கு இன்னும் 
    நல்லதாய்ப் போனது.

    கந்தக் கோட்டத்திலேயே காலம் கழித்தார்.
    களிப்போடு இருந்தார்.
    கந்தா கந்தாவென
    நாள் முழுதும் 
    கனிந்துருகி அழுதார்.

    எப்போதாவது 
    வீட்டிற்கு வருவார்… 
    அண்ணன் இல்லாத நேரம் அல்லது அவர் 
    அயர்ந்து தூங்கும் சமயம்.

    அண்ணி அழுதபடி 
    அமுது ஊட்டுவார்.

    'அண்ணன் சொல்
    கேளேன்' என்பார்.

    அமைதியாய் சென்றுவிடுவார் 
    சிறுவர் இராமலிங்கம்.

    அன்று 
    அப்பாவிற்குத் திதி.

    ஊரே திரண்டிருந்தது 
    மதிய விருந்துக்கு.
    அறுசுவைப் படையல்.

    சபாபதி பிள்ளை 
    கால் வயிறு
    உண்ட களைப்பில் 
    உறங்கிக் கொண்டிருந்தார்.

    பின்பக்க வழியில்… கிணற்றடியில்… 
    இராமலிங்கம்.

    அண்ணிக்கு 
    அன்று கடுங்கோபம்.
    கூடுதல் கவலை.

    காரணம்,
    தம்பியை நினைத்து 
    அவன் இல்லாத நிலையில் திதி நடத்துகிறோமே
    என்ற கவலையில் 
    விருந்துண்ணாமல் 
    பாதியில்
    எழுந்து சென்றுவிட்டார் சபாபதி பிள்ளை.

    அண்ணியார் இராமலிங்கத்தைப்
    பார்த்த மாத்திரத்தில் கொட்டிவிட்டார் கோபத்தையும் கண்ணீரையும்.

    "அண்ணன்
    சொல்வதைக் கேள்…
    உன் நன்மைக்குத் தானே படிக்க சொல்கிறார்…

    'படிக்கிறேன் 'என்று சொல்.. வீட்டிலே தங்கு…
    மீதியை நான் 
    பார்த்துக் கொள்கிறேன்.."

    'சம்மதம்'
    என்று சொன்ன வள்ளல்பெருமான் 
    சில நிபந்தனைகள் விதித்தார்.

    "மாடியில்
    தனி அறை வேண்டும்.

    அங்கு பூஜைப் பொருட்கள்
    எப்போதும் தயாராய் 
    இருக்க வேண்டும்…
    தொந்தரவு ஏதும் இருக்கக்கூடாது…"

    'சரி'
    என்று சந்தோஷப்பட்ட
    அண்ணியார் 
    அவசரமாய் 
    வீட்டினுள் ஓடி 
    கணவரிடம் 
    விஷயத்தைச் சொல்லி 
    அவர் சம்மதம் பெற்றார்.

    சிறுவர் ராமலிங்கம் 
    வீட்டிற்கு வந்தார்.

    தனித்த அறையில் 
    நாள் முழுக்க 
    இறை தொழுதார்.

    உணவு உண்ண 
    கீழே வருவார்.
    உணவுக்குப்பின்
    மேலே 
    மாடிக்குப் 
    படியேறிப்
    போகும்போது
    படிக்கத் தமையனார் 
    சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை
    எடுத்துச் செல்வார்.

    அண்ணனை 
    நேரில் கண்டால் 
    ஒன்றும் பேசாமல்
    பணிவுடன் 
    ஒதுங்கிச் செல்வார். 

    உணவு
    உடை 
    இருப்பிடம் 
    தனிமை
    பிரார்த்தனை
    இறைசிந்தனை 
    இப்படியே 
    நாட்கள் நகர்ந்தன.

    மாடியிலிருக்கும்
    முகக் கண்ணாடியில்
    முருகப்பெருமானின் 
    உருவை நினைத்தபடி 
    மாலை சூட்டி 
    தீபம் காட்டி 
    தியானிப்பது 
    வள்ளல் பெருமானின்
    வழக்கம்.

    ஒருநாள் 
    அப்படி கண்ணாடி முன் 
    தவம் கொண்டபோது
    திருத்தணிகை முருகன் கண்ணாடியில் 
    நேரடியாகக் காட்சி தந்தார்.

    பொதுவாக 
    கண்ணாடியில் 
    ஒருவர் பார்த்தால் 
    அவரது உருவம் தான் பிரதிபலிக்கும்.

    ஆனால் 
    வள்ளல் பெருமான் நின்று
    பிரார்த்தித்தபோது 
    தணிகைவேலன் கண்ணாடியில் 
    தெரிந்தார்.

    உண்மையில் 
    கண்ணாடியில் தெரிந்த உருவம்தானே
    எதிரில் நின்ற உருவம் ?

    இதை எண்ணி கண்ணாடியில் 
    காட்சியளித்த 
    திருத்தணிகை வேலன் புன்னகை புரிந்தார்.

    'நானே நீ…நீயே நான்..' 
    என உணர வைத்தார்.

    ஆனந்த கண்ணீரில் 
    மூழ்கிய 
    வள்ளல் பெருமானின் சிந்தையில் 
    கந்தப் பெருமான் 
    தானே வந்து 
    கலந்து போனார்.
    கரைந்து போனார்.

    ஆம்….
    அந்த 
    ஒன்பது வயதிலேயே 
    சிறுவர் இராமலிங்கம் 
    எல்லையில்லா
    ஞானம் எய்தினார்.

    (சரித்திரம் விரியும்)