Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • ராமபிரானும்….. சிவபிரானும்…..

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காகபுஜண்டர் திவ்விய சரித்திரம்

    காகபுஜண்டர்
    ஒரு
    பரிபூரண சித்தர்.

    பல 
    யுகங்கள் கண்டவர்.
    பல யுகப் 
    பிரளயங்களைப் பார்த்தவர். 

    எத்தனையோ பிரம்மாக்கள்…. 
    எத்தனையோ விஷ்ணுகள்…. 
    எத்தனையோ சிவன்கள் 
    அழிந்ததைக் கண்டவர்.

    புது யுகங்கள் 
    புலர்வதைப் பார்த்து 
    மெய் சிலிர்த்தவர்.

    இராம காதையில் காகபுஜண்டருக்கு 
    முக்கிய இடமுண்டு.

    ஆம்….
    காகபுஜண்டரின் 
    பிரிய தெய்வம் 
    சீதாப் பிரியன் 
    ராம பிரானே.

    எப்போதெல்லாம் ராமவதாரம் 
    நிகழ்கிறதோ அப்போதெல்லாம் 
    பல யுகம் வாழும் காகபுஜண்டர் 
    அயோத்தி சென்று ராமபிரானின் 
    அருகிலிருப்பதை வழக்கமாக்கிக் 
    கொள்வார்.

    சிறு காக்கையாய்
    உருமாறி 
    ராம பிரானின் 
    பால பருவத்தை
    ரசிப்பார்.

    ராமன் 
    உண்ணும்போது 
    சிதறும் உணவுகளை காக்கை உருவில் பிரசாதமாக எடுத்து ருசிப்பார்.

    ராமபிரானின் 
    பால பருவத்தில் விளையாட்டுத் தோழன் 
    காக உருவில் இருந்த காகபுஜண்டர் தான்.

    சின்ன குழந்தையாய் இருந்தபோது 
    ராமன்
    தன் தோழன் காகத்தைக் காணவில்லை 
    என்று அழுவது 
    வழக்கமாம்.

    ஒருமுறை 
    இருவருக்கும் 
    ஓடிப் பிடிக்கும் விளையாட்டு.

    ராமன்
    துரத்திப் பிடிக்க முயற்சிக்க 
    காகம் தப்பியோடி ஆகாயத்தில் 
    உயரப் பறந்தது.

    'ராமரால் 
    இனி பிடிக்க முடியாது'
    என ஆகாயத்தில் இருந்தபடி 
    காகம் 
    பெருமூச்சு விட்ட போது பாலகன் ராமனின் திருக்கரங்கள் 
    விண் வரை நீண்டு காகத்தைப் பிடித்தன.

    மயங்கிய காகம் கண்விழித்தபோது ராமனின் 
    கைப்பிடியில் 
    இருந்தது.

    பின் 
    நடந்ததுதான்
    அதிசயம் !
    பேரதிசயம் !!

    ராமபிரான்
    கையிலிருந்த 
    காக ரூப 
    காகபுஜண்டர் 
    ராமனின் திருவாயால் இழுக்கப்பட்டார்.

    இறைவனின் திருவயிற்றில் அடைக்கலமானார்.

    அங்கே 
    ராமபிரான் 
    வயிற்றுக்குள் காகபுஜண்டர் கண்டது எவரும் காணாதது 
    பல யுகம் கண்ட 
    அவரும் காணாதது.

    பலவித 
    உலகங்கள்..
    பிரம்ம தேவர்கள்…
    ருத்திரர்கள்…
    சூரிய சந்திரர்கள்… முனிவர்கள்…
    சித்தர்கள்…

    பற்பல அண்டங்கள்…

    பிரம்மாக்கள்…
    விஷ்ணுகள்…
    சிவன்கள்….

    கூடவே 
    ராமபிரானும் காகபுஜண்டரும்.

    புஜண்டருருக்குப் 
    புரியாததெல்லாம் புரிந்தன.
    தெரியாததெல்லாம் தெரிய வந்தன.

    அதுவரை 
    அவர் அறிந்திருந்தது அணுவளவு எனவும் அறிந்து கொண்டார்
    பல யுகம் கண்ட
    காகபுஜண்டர்.

    சில நேரம் 
    கழித்து 
    ராமபிரான் 
    வாய்விட்டுச் சிரித்தார்.

    புஜண்டர் 
    ராம பிரானின்
    வாய்ப்புறம் வழியாக வெளியே வந்தார்.

    இறை விளையாட்டு இனிது முடிவுற 
    வெளியே வந்தவர்,
    "காப்பாற்று…
    எனைக் காப்பாற்று…"  
    என வணங்கி நின்றார்.

    "புஜண்டரே…
    பயம் வேண்டாம்.

    என்ன 
    வரம்வேண்டும் ?

    தயங்காது கேள்.

    எதுவானாலும் 
    தருவதற்குத் 
    தயாராக இருக்கிறேன்.

    உனக்கெது வேண்டும் ?

    அஷ்டமா சித்திகளா ? தத்துவ ஞானமா ? வைராக்கிய அதிர்ஷ்டமா ?

    வேறெது வேண்டும் ?"

    கருணையாய்க்
    கேட்டது 
    இறைவனின் 
    திருக்குரல்.

    "ராமா…
    கருணைக்கடலே… 
    எனக்கு 
    எதுவும் வேண்டாம்.

    உன் திருவடிகளில் நீங்காத பக்தி 
    ஒன்றே போதும்."

    பாதம் பணிந்து காகபுஜண்டர் 
    கண்ணீர் மல்கக்
    கேட்டார்.

    ராமபிரான் 
    வியந்து போனார்.

    "இதுவரை
    இப்படி ஒரு 
    வரத்தை 
    யாரும் எவரும் 
    எவரிடமும் கேட்டதாகத் தெரியவில்லை.

    பக்தியை யாரும் 
    வரமாய் கேட்டதில்லை.

     நீ ஒப்பற்றவன்.
     நீடு வாழ்க…!

     உனக்கு 
    எல்லாம் கைகூடும்."

    ஆசி தந்தார்.
    விடை தந்தார்.

    மேருமலைக் காகமான காகபுஜண்டர் குறித்து ஆதிகாலக் கதை 
    ஒன்றும் உண்டு.

    காகபுஜண்டர் 
    ராமபிரானின்
    தோழனாய் இருப்பதற்கும் பக்தனாய் இருப்பதற்கும் இக்கதை சொல்லும் நிகழ்வே காரணம்.

    பல பிறவிகள் கண்ட காகபுஜண்டரின்
    கதைக் களம் 
    காலம் தோறும் 
    புதுத் தளம்
    கொண்டிருப்பது நியாயம்தானே !

    அப்படி 
    ஒரு பிறவியில் அயோத்தியில் 
    பிறந்தார்
    புஜண்டர் பிரான்.

    அப்பிறவியில் 
    புஜண்டர் 
    மாறுதலாய் 
    ஒரு 
    சிவ பக்தன்.

    ஆயினும் 
    வாய்ஜாலம் 
    தற்பெருமை 
    அதிகமிருந்தது.

    அயோத்தியில் பிறந்திருந்தாலும் ராமபிரான் மீது கிஞ்சித்தும் 
    பற்றில்லை.

    ராமனை இகழ்வது வழக்கமாயிருந்தது. அப்பிறவிப் பழக்கமாயிருந்தது.
    அந்த நேரம்
    அயோத்தியில் 
    பஞ்சம் 
    தலை விரித்தாடியது.

    புஜண்டர் 
    பிற தேசம் போனார்.

    போன இடம் 
    வடநாடு 
    உஜ்ஜயினி.

    அங்கே 
    புஜண்டரின் 
    சிவ வழிபாடு 
    தொய்வின்றித்
    தொடர்ந்தது.

    அங்கும் 
    ராமரைப் பற்றிய 
    மதிப்பீடு 
    தாழ்ந்திருந்தது. 
    வாய்வீச்சு 
    மிகுந்திருந்தது.

    அங்கு 
    வேதம் அறிந்த 
    வேதியர் ஒருவர் பழக்கமானார்.

    அவர் 
    புஜண்டருக்கு
    குருவாய் திகழ்ந்து 
    கல்வி, வேதம், மந்திரம் கற்பித்தார்.

    குரு தந்த 
    கல்வியும் கூட 
    புஜண்டரை மேன்மையாக்க
    வில்லை.

    ராமபிரானை இகழ்வதைக் குறைக்கவில்லை.

    இப்படிக் குரைப்பது குருநாதருக்கும் எரிச்சலைத் தந்தது.

    மகன் போல 
    வைத்திருந்த 
    புஜண்டருக்கு 
    அவரால் ஆன 
    அறிவுரை தந்தார்.

    "மகனே…புஜண்டா…

    ராமநாமம் தூற்றாதே..! போற்ற வேண்டிய திருநாமம் அது.!!

    சிவபெருமானும் 
    பிரம்மதேவனும் ராமபிரானை
    வழிபட்ட வரலாறு அறிவாயா நீ !

    அவர்களை விடவா
    எல்லாம் 
    அறிந்தவன் நீ ?!

    உண்மையான 
    சிவபக்தன் 
    மேன்மையான 
    ராமர் திருவடி மீது பக்தியே வைப்பான்.

    ராம வெறுப்பை 
    விட்டு விடு.

    தவறு தவிர்.
    மேன்மையைக் 
    குறி வை."

    குரு 
    உபதேசம் செய்தும் திருந்தவில்லை 
    காகபுஜண்டர்.

    குரு சொல்லை 
    மீறினார்.
    சிலநேரம் 
    குருவையும் 
    அவமதித்தார்.

    சதா
    ராம புராணம் 
    பாடுவதாக 
    குருவையே
    நையாண்டி செய்தார்.

    ஒருமுறை 
    மகா காலேஸ்வரர் கோயிலுக்கு 
    குரு வந்தார்.

    அவர் 
    வருவதைக் 
    கவனித்தும் 
    பாராதவரைப் போல 
    புறம் பார்த்திருந்தார் புஜண்டர். 

    'அவன் அப்படித்தான்!'
     என குரு 
    ஒதுங்கிப் போனார்.

    பார்த்திருந்த பரம்பொருளுக்குத் தான் 
    கோபம் வந்தது.

    குரு பொறுப்பார்.
    மூல குருவுக்கு 
    என்ன கவலை ?

    பொறுப்பது 
    அவர் வேலையா என்ன !

    கோபம் வந்தது.
    சாபம் எழுந்தது.

    "இவன் 
    குரு துரோகி.

    குருவின் சொற்களை மதிக்காதவன்.

    குரு மன்னிக்கலாம்.
    நான் மன்னிக்க மாட்டேன்.

    இவன் 
    கோடி யுகங்கள் 
    கொடிய உலகில் 
    நரகில் 
    நலிந்து கிடக்கட்டும்.

    பற்பல பிறவிகள் 
    பாம்பாய் புழுவாய் பூச்சியாய் பறவையாய் நெளிந்து பறந்து 
    ஒளிந்து வாழட்டும்.

    குருவைக் கண்டு மலைப்பாம்பு போல் உட்கார்ந்திருந்தவன் பாம்பாய் மாறி மரப்பொந்தில் 
    கிடக்கட்டும்.!"

    சிவபெருமானை
    அப்படியொரு 
    கோபத்தில் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.!

    குரு தான் 
    சாபக் கணைகளுக்கு இடையில்…

    "சிவ…சிவ…
    அறியாமல் செய்துவிட்டான்.

    அவனை 
    அருள்கூர்ந்து
    மன்னியுங்கள்.

    அவன் என் 
    வளர்ப்பு பிள்ளை…!"

    சிவபிரான் 
    குருவின் 
    வார்த்தைகளால் கொஞ்சம் 
    மனம் இரங்கினார்.

    குரு பற்றிய 
    பாதங்களில் 
    கண்ணீர் நிறையவே 
    தோள் பற்றி 
    எழ வைத்தார்.

    "சரி… சரி….
    சாபம் தந்தது 
    தந்தது தான். 
    பலித்தே தீரும்.

    இனிமேல் 
    இவன் 
    ராமபிரானைத் 
    தூற்றக் கூடாது.

    அப்போது தான் 
    பிறவி தோறும் 
    போற்றும் வண்ணம் வாழ்க்கை அமையும்.

    உங்களைப் போன்ற பிரம்ம ஞானிகளை யாரும் 
    அவமதிக்கக் கூடாது.

    உங்கள் 
    வேண்டுதலால்
    இவன் 
    இதுநாள் வரை 
    சேமித்து வைத்திருக்கும் ஞானம் 
    எப்பிறவியிலும் குறையாது… தாழாது.

    பிறவிகள் தோறும் புதுப்பிறவி எடுக்கட்டும்.

    ராமபக்தி நிலைத்திருக்கட்டும்."

    புஜண்டரும் குருவும் சிவபிரானை
    வணங்கி மகிழ்ந்தனர்.

    அது தொடர்ந்து 
    பாம்பாய் 
    ஒரு பிறவி.
    புழுவாய் இன்னொரு பிறவி என
    பற்பல ரூபத்தில்
    பல பிறவிகள் 
    எடுத்து வந்த 
    புஜண்டர் நிறைவாக
    காகமாய் 
    பிறவி எடுத்தார்.

    அதனாலேயே புஜண்டர் காகபுஜண்டர்
    ஆனார்.

    சாபம் பெற்ற பின்னர் 
    தொடர்ந்த 
    பிறவிகள் தோறும் புஜண்டரின் உள்ளத்தில்
    ராமபிரானே 
    நிரம்பி இருந்தார்.

    அயோத்திக்குச்
    செல்வதும் 
    ராமருடன் 
    விளையாடி மகிழ்வதும் ஒவ்வொரு அவதாரத்திலும் நிகழ்ந்தது.

    (தொடரும்)

  • சிருங்கேரி தொழும் நெரூர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சதாசிவ பிரம்மேந்திரர் திவ்ய சரித்திரம்

     

    சிருங்கேரி  சாரதா பீடத்திற்கும் 
    நெரூர் 
    சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கும்
    ஓர் ஆத்மார்த்தத் 
    தொடர்பு உண்டு.

    பொதுவாக 
    சிருங்கேரி
     பீடாதிபதியாக
    அமர்பவர்கள் 
    தத்துவ 
    ஞான சாஸ்திரம் 
    கசடறக் கற்றவர்களாக இருப்பார்கள்.

    இறைவி 
    வாணி தேவியே
     தக்கதொரு பீடாதிபதியைத்
    தேர்வு செய்து 
    'இன்ன இடத்தில் 
    இப்படி ஒருவன் இருக்கின்றான்'
    என்று 
    அடையாளம் 
    காட்டுவாள்.

    இயல்பிலேயே 
    கல்வி கேள்விகளில் சிறந்திருப்பார் 
    அன்னை 
    அடையாளம் 
    காட்டியவர்.

    காரணம் 
    முற்பிறப்புக் கல்வியும் முழுமையாக அவரிடம் நிறைந்திருக்கும்.

    'பீடாதிபதியாக 
    அமரும் தருணத்திலேயே           
     64 கலைகளும் அவர்களுக்கு 
    அத்துப்படியாயிருக்கும்'
    என்பது 
    ஆதிசங்கரர் 
    அருளிய வாக்கு.

    அப்படி 
    குருவருளோடு திருவருளோடு பீடாதிபதியானவர் சச்சிதானந்த சுவாமி
    நவ நரசிம்ம பாரதி 
    மகா சுவாமிகள்.

    அப்பெரும் 
    சுவாமிகளுக்கு 
    பரிச யோக சித்தியில்
    சில கேள்விகள் 
    இருந்தன.

    நூல்கள் பல 
    நுழைந்த போது 
    நெரூரில்  
    ஜீவசமாதியில் 
    துயில் கொண்டிருக்கும்
    சதாசிவ பிரம்மேந்திரரே
    சர்வ வல்லமை கொண்டவர் 
    என்பதை சுவாமிகள் 
     அறிய நேர்ந்தது .

    'அவரிடம் அடைக்கலமானால் அனைத்தும் புரியவரும். எதிலும் தெளிவு வரும்'
    என 
    சில நூல்கள் சொல்லின.

    பிரம்மேந்திரர் ஐக்கியமாகியிருக்கும் நெரூருக்குப்
    புறப்பட்டார் 
    சிருங்கேரி சுவாமிகள்.

    நீண்ட 
    பல்லக்குப் பயணம்.

    சிருங்கேரி 
    பீடத்தின் கிளை
    கரூர் அருகே 
    மாயனூரில் இருந்தது.

    அங்கு தங்கி 
    நெரூர் செல்ல 
    பாதை விசாரித்து 
    பயணம் தொடங்கினார்.

    அமராவதி நதியின் 
     வடகரை 
    ரங்கநாதன் பேட்டை. 
     அங்கு 
    பயணம் தடைபட்டது.

    பல்லக்குத் தூக்கிகள் யாரோ தள்ளுவது 
    போலிருப்பதாகச் சொன்னார்கள்.

    மகா சுவாமிகளுக்கு 
    ஒன்று புரிந்தது.
    'இது 
    சதாசிவ பிரம்மேந்திரர் 
    அனுகிரகம். 
    நுழைவுச்சீட்டு கிடைத்துவிட்டது !

    பல்லக்குப் பயணம் 
    வீண் பகட்டு, 
    நடை பயணமே 
    நாயகன் உணர்த்துவது.'

    உடனே 
    பல்லக்கிலிருந்து 
    இறங்கி 
    பாதங்களைப்
     படரவிட்டார்
    திவ்விய திருத்தலம் நோக்கி.

    அவரது 
    ஒவ்வொரு அடியும் 
    ஆசி வேண்டி 
    அடி பணிந்தது.

    நெரூர்
    திசை நோக்கி 
    நமஸ்காரம் செய்தார்.
    பின் 
    தன் கைநீட்டும்
     தூரம் நடந்து 
    மீண்டும்
     நமஸ்கரித்தார்.

    இப்படியே 
    ஒன்றரை மைல்
    நடந்த படியும்
    வணங்கியபடியும் 
    வந்தவர் கண்களில் 
     காவிரிக் கரையோரம் 
    தவத் துயில்
     கொண்ருக்கும் பிரம்மேந்திரர் 
    ஜீவசமாதி 
    பேரொளியாய்ப் பட்டது.

    நல்ல நாளிலேயே பிரம்மேந்திரர் பேசமாட்டார்.
    ஜீவ சமாதியில் இருக்கும் போதா 
    பேசப் போகிறார் ?

    மகா சுவாமிகளும்
    விடப்போவதில்லை.
    சந்தேகம் தீராமல் 
    திரும்பப் போவதில்லை.

    காலையில் 
    காவிரியில் 
    நீராடி விட்டு 
    பூஜை புனஸ்காரங்கள் முடித்துவிட்டு பிரம்மேந்திரரின்
    ஜீவசமாதி முன்
    விதையில்லா 
    வில்வமர நிழலில் அமர்வார்.

    கனிந்துருகிக் காத்திருப்பார். 
    ஊண் உறக்கமின்றி கண்மூடி 
    தியானித்திருப்பார்.

    ஆயிற்று 
    மூன்று நாட்கள்.

    அம் மூன்று 
    நாட்களுக்குள் 
    சிருங்கேரி சுவாமிகள் நெரூரில் 
    முகாமிட்டிருப்பது 
     செய்தியாகி சாஸ்திரிகளும் ஆன்றோர்களும் அந்தணர்களும் 
    பக்த கோடிகளும் பெருமளவில் கூட
     கோயில் 
    களை கட்டி விட்டது.

    மூன்றாம் நாள் 
    அந்த அமைதியான சூழலில் கோயிலினுள்ளே
    பேசும் சத்தம் மட்டும் 
    அப்பால் இருந்த அனைவருக்கும் 
    கேட்டது.

    என்னவென்று
    புரியும் பாக்கியம்தான் யாருக்கும்
     இருக்கவில்லை.

    ஒரு ஞானி 
    பேசமாட்டார்.
    இன்னொரு 
    ஞானியோ 
    அதிர்ந்து 
    பேச மாட்டார்.

    பின் எப்படி 
    உள்ளே இருந்து 
    பேசும் சத்தம் ?

    அது 
    இரு ஆன்மாக்களின் மௌன ஒலி.
    தெய்வ மொழி.

    ஆன்மீகப் 
    பேரலையில் 
    அந்தரங்க உரைவீச்சு. இறை பேச்சு.

    நீண்ட 
    சம்பாஷனைக்குப் பிறகு
    சிருங்கேரி சுவாமிகளின் காந்தக் குரல் தோத்திரங்களில் 
    கலந்து ஒலிக்க ஆரம்பித்தது.

    வெளியே 
    காத்திருந்த கூட்டம்
    அவரின் 
    தெய்வீகப் பாடலில்
    லயித்து சிலிர்த்தது.

    சிருங்கேரி சுவாமிகள் வெளியே வந்தார்.

    முகத்தில் 
    சந்தேகங்கள் தீர்ந்த தெளிவு…
    உவமையில்லா 
    உண்மைப் பேரொளி.

    அந்தணர்கள் 
    சூழ்ந்து கொண்டு
    நடந்ததை அறிய முயன்றனர்.

    அட,
    என்ன ஆச்சரியம் !!!

    இப்போது 
    மகா சுவாமிகளிடம் பேச்சில்லை.

    அமைதியின்
     உறைவிடமாய் அனைவருக்கும் 
    ஆசி தந்துவிட்டு
     கோயிலை 
    வணங்கி விட்டுப் புறப்பட்டார்.

    அவர் 
    திருக்கரங்களில் 
    கத்தை கத்தையாக தாள்கள்.

    சிருங்கேரி சுவாமிகள் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி முன் 
    துதித்துப் பாடிய 
    தேனமுதக் கீதங்களாய் 
    அத் தாள்களில்
    ஒளிர்ந்தன.

    இன்னொரு கையில் 
    ஓர் அழகிய படம் 
    ஒளி பரப்பிக் 
    கொண்டிருந்தது.

    அது 
    திகம்பர சுவாமிகள் சதாசிவ பிரம்மத்தின் திருவுருவப்படம்.

    மகா சுவாமிகள் மகிழ்வோடு 
     தெளிவோடு 
    புறப்பட்டார்.

    அவர் எழுதிய 
    அந்த 
    45 துதிப்பாடல்கள் பிரம்மேந்திரர் 
    புகழை 
    இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றன.

    சிருங்கேரி 
    பீடாதிபதியின்
    பல்லக்கில் 
    எப்போதும் 
    பிரம்மேந்திரர் திருவுருவப்படம் உடனிருந்து 
    வழி காட்டிக் கொண்டிருந்தது.

    இன்றுவரை 
    சிருங்கேரி பல்லக்கில் சீரோடும் சிறப்போடும் பிரம்மேந்திரர் 
    ஒளிப் படமாய் 
    பவனிவரும் 
    வழக்கமாகிப் போனது.

    அது சரி
    அப்படம் எப்படி 
    சிருங்கேரி 
    சுவாமிகளுக்கு
     கிடைத்தது ?
    யார் 
    கொடுத்திருப்பார்கள் ?

    அது 
    பிரம்மேந்திரருக்கும் சிருங்கேரி 
    பீடாதிபதிக்குமே வெளிச்சம் !

    இது நடந்து 
    சுமார் 150 வருடங்கள் இருக்கலாம்.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து 
    இன்றுவரை 
    சிருங்கேரி பீடத்திற்கும் 
     நெரூர் மடத்திற்கும் 
    உள்ள தொடர்பு 
    ஆன்மீகச் செறிவுடன் வளர்ந்து வருகிறது.

    சிருங்கேரி பீட.த்தின்
    பட்டத்திற்கு வரும் ஆச்சாரியார்கள் 
    நெரூர் வந்து பிரம்மேந்திரரின் வணங்கித் துதித்து 
    அவர் 
    ஆசியோடு தான் பதவி ஏற்கிறார்கள்.

    அதுபோது
    சிருங்கேரியில் இருந்தே பூஜை சாமான்கள் வரும்.

    காவிரித் தீர்த்தமும் 
    நெரூர் பாலுமே
    அவர்கள் 
    நெரூரில் வாங்குவது. 

    அவர்கள் 
    வழங்கும் 
    நிறைந்த காணிக்கை பிரம்மேந்திரர் 
    பெருமை பேசும்.

    அத்தனை நெருக்கம் !அற்புத ஈடுபாடு !!
    ஆன்மீக வழிபாடு !!!.

    அருமைகளும் பெருமைகளும் 
    சித்த ஆற்றலும்
    கொண்ட 
    நெரூர் 
    சதாசிவ
    பிரம்மேந்திரரை
    வணங்கி நின்றால் வெறுமைகளும் சிறுமைகளும் விலகிப்போகும்.

    விடுதலையோ 
    வீடுபேறோ
    முக்தியோ
    சித்தியோ 
    தேடிவரும்.

    அதற்குத்
    தேடி வாருங்கள்…
    ஓடி வாருங்கள்….. நாடி வாருங்கள்….

    நெரூர்
    சதாசிவ பிரம்மேந்திரர் 
    ஜீவ சமாதிக்கு !

  • அருள் பொங்கும் ஜீவசமாதி

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்…..

    சிறுவர்களுடன் சிறுபிள்ளை போல் விளையாடிக் களிப்பது சதாசிவ பிரம்மேந்திரருக்குப்
    பிடித்தமான ஒன்று.

    அதனால்தான் 
    பாலர்களை அழைத்துக்கொண்டு கணநேரத்தில் 
    மதுரை சென்று
    கள்ளழகர் திருவிழாவைத் தரிசிக்க வைத்தார்.

    இந்த 
    அதி அற்புதச் செயல் 
    அக்கம் பக்கம் இருப்பவர்களுக்குத் தெரியவர 
    ஆளாளுளுக்கு பிரம்மேந்திரரை நச்சரிக்கத் தொடங்கினர்.

    ஒரு தடவை 
    ஒரு வைணவர் 
    நேபாளம் சென்று சாலிகிராமம் 
    வாங்கிவர 
    வணங்கி நின்றார்.

    நொடியில்
    நேபாளப் பயணம் நிகழ்ந்தது.

    "பெருமானே.…!"
    போற்றி நின்றார்
    அந்த வைணவர்.

    கண்ணிமைக்கும்
    கால அளவில் ஸ்ரீரங்கத்தைச்
    சீடர் காண சென்றதும் நேபாளப் பயணமும் ஊரெங்கும் பரவியது.

    கருவூரைச் சேர்ந்த கனபாடிகள் சிலரும் சாஸ்திரிகள் பலரும் திருப்பதிக்குப் போய் திருமாலைத் தரிசிக்க ஆயத்தம் செய்யுமாறு சுவாமிகளிடம் 
    வேண்டி நின்றனர்.

    நாவசைக்கா நாயகன் தலையசைத்து 
    சம்மதம் சொல்லி .
    உடன் 
    'ஜன ஆகர்ஷண சக்கரம்' ஒன்றை எழுதினார்.

    அதை அப்படியே தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமி குடைவரைக் கோயிலில் வைத்து 
    வணங்கி நின்றார்.

    'திருப்பதி சென்று 
    ஓங்கி உலகளந்த வெங்கடாஜலபதியை வேண்டும் 
    வரம் யாவும் 
    தான்தோன்றி மலைக்கு சென்று வணங்கினால் கிடைக்கும்.

    இரு பெருமாள்களும் ஒருவரே. 
    இரு கோயில்களின் 
    அருள் தன்மையும் 
    ஒன்றே '
    என்று 
    அழைத்து வந்த 
    அத்தனை பேரையும்
    உணரச் செய்தார்.

    அன்றைய நாள் 
    புரட்டாசி மாதம் மூன்றாவது 
    சனிக்கிழமை.

    இப்போதும் 
    புரட்டாசி மாதம்
    மூன்றாம் சனிக்கிழமை தான்தோன்றி மலையில் சிறப்பாக கொண்டாடப்படுவது
    இந்நிகழ்வின் குறியீடே.

    மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூர் மன்னர் புதுக்கோட்டை மகாராஜா ஆகிய மூவருக்கும் 
    முத்தேக சித்திபெற்ற பிரம்மேந்திரருக்கும் உள்ள நெருக்கம் 
    நீண்டது….
    நெடியது…..
    அது பிரம்மேந்திரர் சித்தியான 
    நிறை நாளன்றும் 
    அதன் பின்னரும்
    தொடர்ந்தது 
    அருளாளரின் தயவு.

    பேசாதிருந்தாலும் மனதினில் 
    பிரம்மேந்திரர் பாடாதிருக்கவில்லை.
    கீர்த்தனைகள் 
    கிருதிகள் படைக்காதிருக்கவில்லை. 
    நூல்கள் 
    அருளாமலிருக்கவில்லை. 

    வடமொழி 
    அவருக்குச் 
    சேவகம் செய்ததால் சமஸ்கிருதம் 
    சாமரம் வீசியதால் பிரம்மேந்திரர் அருளியவை 
    அனைத்தும்
    இணையற்று திகழ்கின்றன.

    எளிய நடை 
    பக்தி ரசம் 
    சித்தாந்தத் தெளிவு வேதாந்த ஞானம் 
    நுட்ப விளக்கம் 
    அனுபவ நிறைவு
    இவையே 
    பிரம்மேந்திரர் 
    அருளிய நூல்களின் 
    அடிப்படை.

    'பிரம்ம சூத்திர விருத்தி' பிரம்மேந்திரரின் 
    பிரதான படைப்பு.
    ஞான தேடலுக்குத் தீனி.

    பாமரருக்கும் பண்டிதருக்கும் 
    உகந்த உரை நூல்.

    'யோக சுகாதாரம்'
    ஒரு சாஸ்திர நூல்.
    பதஞ்சலி முனியின்
    யோக சூத்திரங்களுக்கு அனுபவ விளக்கமே 
    இந்த யோக நூல்.

    உபநிஷத்துகளுக்கு தீபிகை,
    ஆரிய விருத்தத்தில் பாடல்கள்,
    'ஆத்ம வித்தியா விலாசம்' 'சித்தாந்த கல்ப வல்லி' முதலானவை 
    பிரமேந்திரரின்
    அற்புதப் படைப்புகள்.

    இசைக்கும் 
    தாளத்திற்கும் 
    இசையும் 
    அப்பாடல்களும் 
    அவர்தம் படைப்புகளும் பிரம்மேந்திரர் 
    ஓர்
    ஆன்ம யோகி என்றே பறைசாற்றும்.

    காலச்சக்கரம் யாருக்காகவும் காத்திராமல் 
    சுழன்று 
    கொண்டிருந்தது. 

    பிரம்மேந்திரர் 
    நிகழ்த்திய 
    அதிசயங்கள் 
    சித்தாடல்கள்
    ஆங்காங்கே 
    பிரசித்தி பெற்றன. 

    பல 
    எவருக்கும் 
    தெரியாமல் 
    ரகசியமாயின.

    மைசூர் 
    சாம்ராஜ்யத்திலும்
    புதுக்கோட்டை சமஸ்தானத்திலும்
    தஞ்சாவூரிலும் பிரம்மேந்திரர் 
    பாதம் பதித்த 
    காடு,மேடுகளிலும் 
    கழனி, கரைகளிலும் 
    'ஒரு மகான்'
    'தெய்வமகன்'
    என்ற 
    பிரமிப்பிருந்தது.

    விராலிமலை பிரம்மேந்திரருக்குப் பிடித்த மலை.
    அங்கு சென்று அமைதியான குகையில் தவத்தில் 
    ஆழ்ந்து விடுவார்.

    இன்றும் 
    அக்குகையில் 
    அருளாளரைத்
    தரிசிக்கலாம்.

    அண்டை 
    நாடுகளையும் விட்டுவைக்கவில்லை அவதூதரின் 
    அருந்தவப் பாதங்கள்.

    வட இந்தியா தொடங்கி துருக்கி வரை 
    நீண்டது 
    பிரம்மேந்திரரின் 
    தேச சஞ்சாரம். 

    போகுமிடங்களில் ஆதரவும் 
    துன்பமும் 
    இருந்தன.
    இரண்டையும் 
    ஒன்றெனப் பாவிக்கும் பிரமேந்திரரை
    எதுவும் எதையும் 
    செய்ய முடியவில்லை.

    அவர் போக்கு 
    சித்தன் 
    போக்காய் இருந்தது. 
    சிவம் 
    நோக்காய் ஒளிர்ந்தது.

    உலகமெங்கும் 
    உலா வந்த போதும் அவரை ஏனோ 
    கருவூர் பகுதியும் 
    காவிரி நதியும்
    அமராவதி ஆறும் 
    நெரூர் பூமியும் 
    அதிகம் ஈர்த்தன.

    நெரூர் மக்கள் 
    அவரின் 
    நெஞ்சில் இருந்தனர். மக்களின் மனங்களில் மகான் வீற்றிருந்தார்.

    நெரூரே 
    விவேக முக்தியடைய உகந்த இடம் 
    எனத் தீர்மானித்தார்.

    உரிய காலத்திற்குக் காத்திருந்தார்.

    ஆழ்ந்து உணர்ந்து 
    சமாதிக்கான 
    நாளும் குறித்தார்.

    அந்நாள் வந்தது.

    ஊர் திரண்டிருந்தது. அந்தணர்கள் சூழ்ந்திருந்தனர்.

    பிரம்மேந்திரரின் தவயோக அழைப்பு 
    மைசூர் புதுக்கோட்டை தஞ்சை மன்னர்களுக்குச் சென்றிருந்தது.

    அம்மூவேந்தர்களும் கவலையோடு அருகிருந்தனர்.

    அது 
    ஜேஷ்ட சுத்த
    தசமி நாள்.

    தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் 
    பறிக்க பறிக்க அருள் பொங்கும் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து 
    சுத்தம் செய்து 
    சாஸ்திர விதிப்படி அமைத்த குழி 
    தயாராயிருந்தது.

    பிரம்மேந்திரர்
    மெல்லக் குனிந்தபடி 
    நடந்து வந்தார்.

    அவர் 
    வாய்ப் பேச்சை
    செவிமடுத்துக்
    கேட்டவர் எவருமில்லை.

    பேச என்ன இருக்கு !?

    குனிந்தபடி 
    வந்தவர் 
    குறிப்பேதும் காட்டவில்லை.

    ஓரிரு நாள் முன்னர் 
    ஜீவசமாதிக்கு 
    நாள் குறித்த போது அருகிலிருந்த அந்தணர்களிடம்,
    "காசியிலிருந்து 
    ஒரு பிராமணர் பாணலிங்கம்
    கொண்டு வருவார்.

    அதற்குள் 
    விதை போடாத 
    வில்வமர செடி ஒன்று துளிர்த்து வெளிவந்திருக்கும்.

    அவ்விடமே 
    நான் சமாதி கொள்ளும் ஞானபீடம்.

    அதனருகே
    12 அடி கீழ்ப்புறம் 
    பாணலிங்கத்தை
    வைத்து 
    பிரதிஷ்டை 
    செய்ய வேண்டும்"
    என்று 
    ஆணையாக 
    உணர்த்தி இருந்தார்.

    ஒரு ஞானி 
    ஜீவசமாதி அடைவதைக் கண்ணுறுவது புண்ணியங்களில் மேலானது.

    எனவே கூட்டம் நிரம்பியிருந்தது. 

    அதோ….
    மைசூர் மன்னர்.
    புதுக்கோட்டை தொண்டமான்.
    இதோ… தஞ்சை அரசர். ஆயிரமாயிரம் அந்தணர் பல்லாயிரம் பக்தர்கள்.

    நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

    குனிந்து வந்தவர்
    தலை தூக்கி 
    சுற்றி ஒருமுறை 
    பார்த்தார்.

    லேசான 
    புன்னகை பூத்தது.

    அக்கணத்தில் 
    அந்த 
    ஞான குழிக்குள் இறங்கினார் 
    நம் ஞானி.

    தலைக்கு மேலே
    இருகரம் கூப்பி 
    கூட்டம்
    கும்பிட்டது.

    பக்தர்களின் 
    கண்களில் பரவசம். கண்ணீர்…. 

    குழிக்குள் இறங்கிய பிரம்மேந்திரர் 
    அடுத்த நிகழ்வுக்கு சமிக்ஞை செய்தார்.

    சாஸ்திர சம்பிரதாயம் தொடர 
    அக்கணமே 
    உலகத் தொடர்பினை அறுத்துக் கொண்டார் அருளாளர்.

    அமைதி.
    அப்படி 
    ஓர் அலாதி அமைதி.

    தந்தை தூக்கி 
    அவர் தலையில் 
    அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறுவன் ஒருவன்
    அமைதியைக் குலைத்தான்.

    பிரம்மேந்திரரைச்
    சூழ்ந்திருந்த பிராமணர்களைப்
    பார்த்துக் கத்தினான்.

    "அந்த தாத்தாவை 
    என்ன பண்றீங்க ?
    அவர்
    நல்ல தாத்தா…."

    அது சமயமெல்லாம் 
    200 ஆண்டு கால 
    அவதூதர் 
    உருவிலிருந்த 
    இறைதூதர்
    இறையோடு இறையாக இரண்டறக் கலந்திருந்தார்.

    சிறுவனின் குரல் அவருக்குக் 
    கண்டிப்பாகக் கேட்டிருக்கும்.

    அச்சிறுவன் 
    மதுரைத் திருவிழாவிற்கு பிரம்மேந்திரர்
    அழைத்துச் சென்ற 
    குட்டித் தோழனாய் இருக்கும் !

    பிரம்மேந்திரர் சொல்லியிருந்த படியே 
    ஒன்பதாம் நாள் 
    காசி பிராமணர் வந்தார். பானலிங்கம் தந்தார்.

     

    உரிய நாளில் வெகுவிமர்சையாக பிரதிஷ்டை ஆனார்
    காசி விஸ்வநாதர்.

    பிரம்மேந்திரரின் அணுக்கத் தொண்டர் புதுக்கோட்டை
    தொண்டமான் 
    அங்கு 
    கோயில் கட்டினார்.

    பொதுவாக 
    ஜீவசமாதி அடைந்த இடத்திலேயே 
    கோயில் அமைப்பது வழக்கம்.

    ஆனால் 
    நெரூரில்
    சதாசிவ பிரம்மேந்திரர் வழிகாட்டியபடி 
    12 அடி தள்ளியே 
    கோயில் அமைந்துள்ளது.

    பிரம்மேந்திரர் 
    ஜீவசமாதி வெட்டவெளியில் 
    வில்வ மரத்தடியில் பிரமாண்டமாய் பிரகாசமாய்
    தவச்சூழலில் 
    இன்றும் 
    அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது.
    அன்றாட பூஜைகள் தடைபடாமல் இருக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 
    இருந்த இரண்டு கிராமங்களை 
    மானியமாக வழங்கினார் தொண்டமான்.

    இன்றும் 
    நெரூர் 
    சதாசிவ பிரம்மேந்திரர் ஆலயப் பராமரிப்பு செய்வது
    புதுக்கோட்டை மன்னர் குடும்பமே.

    பிரம்மேந்திரர் புதுக்கோட்டை மன்னருக்கு
    எழுத்தறிவித்து
    மந்திரம் அருளிய மணல் 
    ஒரு பேழையில் 
    ராஜ மரியாதையோடு புதுக்கோட்டை அரண்மனையில் பூசிக்கப்பட்டு வருகிறது.

    அருகிருக்கும்
    சன்னதிக்கு அருகில் பிரம்மேந்திரரின் 
    அருள் நிறை சிலை வழிபாட்டுக்கு
    இருக்கிறது.

    ஆம்….
    புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் வழிபாட்டுக்குக் காத்திருக்கிறது.

    கடுந்துறவு
    நுண்ணறிவு 
    அருந்தவம் 
    மகாசமாதி 
    இவையே 
    பிரம்மேந்திரர்.

    விஷய ஞானமுள்ள ஆன்மீக உலகே
    ஆன்மீக யோகியை
    நாடி ஓடிவருதல்
    பாடித் தவமிருந்து
    பாக்கியம் பெறுதல் சிலருக்கே
    தெரிந்திருக்கும் 
    ஞான ரகசியம்.

    நெரூரில்
    ஜீவசமாதி அடைந்த பிரம்மேந்திரர் மானா மதுரையிலும்
    கராச்சியிலும் 
    சித்தி அடைந்ததாக 
    திவ்விய சரித்திரம் நிறைவு கொள்ளும்.

    ஸ்தூல உடலை
    நெரூரிலும்
    சூட்சம சரீரத்தை மானா மதுரையிலும்
    காரண தேகத்தைக் கராச்சியிலும் 
    சித்தியடைய வைத்ததாக பிரமிப்பூட்டும்.

    நெரூரில்
    தஞ்சை புதுக்கோட்டை மைசூர் மன்னர்களும் மானாமதுரையில்
    ஒரு சாஸ்திரியும் கராச்சியில் 
    ஒரு முஸ்லிம் அன்பரும் சித்தியடைவதைக் காணும் பாக்கியம் வேண்டியிருந்ததால் பிரமேந்திரர்
    முத்தேக சித்தியை வெளிப்படுத்தியதாக 
    வரலாறு விரியும்.

    இத்தலங்களில் 
    அருளாற்றல் நிறைந்த 
    நெரூர்
    ஓர் அற்புத 
    ஆன்மீக பூமி.

    பிரம்மேந்திரர் 
    விரும்பிச் சித்தியடைந்த சித்தர் பூமி.

    சிருங்கேரி 
    சாரதா பீடத்திற்கும் 
    நெரூர் 
    சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கும்
    ஓர் ஆத்மார்த்த
    தொடர்பு உண்டு.

    அது….

    (தொடரும்)

  • அற்புத சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்

     

    பிரம்மேந்திரர் 
    நிகழ்த்திய 
    அற்புதங்கள் திட்டமிட்டவை அல்ல.

    சித்தாடல்களை 
    உலகுக்கு காட்டும் 
    வீண் விளம்பரங்கள் அல்ல.

    உடல் 
    உணர்வு இன்றி 
    வெட்கம், துக்கம் 
    மகிழ்வு ஏதுமின்றி 
    ஏகாந்த நிலையில் இருந்து வந்தவர் 
    சதாசிவ பிரம்மேந்திரர்.

    அவர் பாட்டுக்கு 
    அவர் இருந்தார். 
    அது தானே 
    சித்தர் போக்கு.

    உடல் உணர்வு 
    அற்ற நிலை என்பது பிரம்மேந்திரர் போன்ற ஞானிகளுக்கே
    இயல்பாய் 
    இருக்கக் கூடியது.

    ஒருமுறை…. 
    கொடுமுடி 
    காவிரிக் கரையில் 
    சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி நிலையில் அமர்ந்திருந்தார்.

    பெரும் வெள்ளம் திடுமென வந்தது.

    காவிரி வடிந்தபோது அவரைக் காணவில்லை.

    காலம் நகர்ந்தது.

    பின்னொரு நாள் 
    ஆற்று மணலுக்காக
    மேடு ஒன்றை 
    வெட்டினர் 
    கூலியாட்கள்.

    ஓரிடத்தில் 
    மண்வெட்டி 
    தரை இறங்காது 
    ஏதோ தட்டுப்பட…
    திகைத்து எடுத்துப் பார்த்தபோது மண்வெட்டியில் 
    இரத்தம் சிதறி இருந்தது.

    பின் மெதுவாக 
    மண் அகற்ற
    உள்ளே உட்கார்ந்த நிலையில் 
    நிர்வாண சாமியார்.

    ஆம்….
    நம் 
    சதாசிவ பிரம்மேந்திரர்.

    கண்விழித்த பிரம்மேந்திரர் 
    ஏதும் நடக்காதது போல் இத்தனை காலம் மண்ணிலிருந்ததை உணராதவராய்
    மெல்ல எழுந்தார்.

    இரத்தம் வழிவது கூட தெரியாதவராய் 
    தன் பயணம் 
    தொடர்ந்தார்.

    அதிர்ச்சியில் இருந்த அனைவரும் 
    அவர் திசை 
    பணிந்தார்கள்.

    பிரம்மேந்திரரின் அருளாற்றல் 
    அவர்களைத் 
    தொழச் செய்தது. தொடர்ந்து
    புகழ் பாட வைத்தது.

    இன்னொரு சம்பவம்.

    உடல் உணர்ச்சியற்ற 
    நிறை ஞானியின் 
    உன்னத அற்புதம் சொல்லும் நிகழ்வு அது.

    ஒருமுறை 
    ஆண் பெண் பேதம் 
    ஏதுமற்ற 
    பிரம்மேந்திரர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திருச்சி பக்கம் 
    ஓர் அந்தப்புரம்.
    அதுவும் 
    ஓர் இஸ்லாமிய 
    சிற்றரசரின் அந்தப்புரம்.

    பிரம்மேந்திரர் 
    எப்போதும் போல் நிர்வாண நிலையில் திகம்பரராய்
    சென்று
    கொண்டிருந்தார். 

    அந்தப்புரத்திலிருந்த கோஷா பெண்களின் கூக்குரல் 
    அரசவையில் இருந்த மன்னன் செவிகளை அறைந்தது.

    பதறியபடி ஓடி வந்த மன்னன் 
    நிர்வாண 
    சாமியாரைப்பார்த்து
    கோபம் கொப்பளிக்க
    கொடு வாளினை எடுத்தான்.

    ஒரு பித்தனைப் போல் நடை போட்டுக் கொண்டிருந்த பிரம்மேந்திரரை
    நெருங்கினான்.

    அவர் பாட்டுக்கு ஏகாந்தமாய் சென்றுகொண்டிருந்தார். அரசனின் கோபம் 
    மேலும் அதிகரித்தது.

    அனிச்சையாய் அவசரமாய்
    வீசினான் 
    கூர்வாளினை.

    அந்தோ….! தோள்பட்டையில் 
    விழுந்த வீச்சு கையொன்றைத் தகர்த்தது தரையில் வீசி எறிந்தது.

    இரத்தம் 
    கொப்பளித்து 
    சுற்றுச் சூழலைச் 
    சிவப்பாக்கியது.

    இத்தனை 
    களேபரம் நடந்தும் 
    எதுவும் 
    நடக்காதது போல் பிரம்மேந்திரர் 
    நடந்து கொண்டிருந்தார்.

    "என்னடா இது சோதனை!" மன்னன் திகைத்தான்.

    சிந்தித்தான்.
    பயந்தான்.

    "இவர் வெறும் 
    சாமியார் இல்லை.

    மகத்துவமிக்கவர். மாமனிதர்."

    மதங்களைத் தாண்டி மன்னன் மனம் 
    எச்சரித்தது.

    சித்தன் போக்கில் இலக்கற்ற பாங்கில்
    சென்று கொண்டிருந்த பிரம்மேந்திரர் முன் 
    ஓடி நின்றான். மேற்கொண்டு 
    செல்வதைத் தடுத்தான்.

    அப்போது தான் 
    சுற்றும் முற்றும் பார்த்த திகம்பரர் 
    நடந்ததை யூகித்தார்.

    "ஐயோ….. 
    மன்னியுங்கள் சுவாமி "
    தரையில்
    விழுந்துகிடந்த 
    ஒடிந்த கரத்தை எடுத்து பிரம்மேந்தரரிடம் ஒப்படைத்தான்.

    பதட்டமும் பரப்பும் நடுநடுங்க வைக்க
    தவித்தபடி 
    நின்றிருந்தான். 

    வெட்டிய கையை 
    வாங்கிய 
    பிரமேந்திரர் தன் தோள்பட்டையின் மீது வைத்தார். ஒட்டிக்கொண்டது 
    அக்கை.

    பீறிட்ட இரத்தம் 
    ஒரு துளி கூட 
    இல்லாமல் 
    மறைந்து போனது. 

    சில நொடிகள் 
    சிறிது நடந்தவர் அனைவரும் 
    பார்த்திருக்க
    காணாமல் மாயமாய்
    மறைந்து போனார்.

    முஸ்லிம் மன்னன் மகானின் 
    தெய்வீகம் புரிந்து 
    நீண்ட நேரம் 
    தொழுதபடி இருந்தான்.

    அவனைத் தொடர்ந்து அரண்மனையும் அந்தப்புரமும் பிரம்மேந்திரரின் 
    புகழ் பாடின பலகாலம்.

    அடுத்து…
    பிரம்மேந்திரரின் வாழ்க்கையைத் 
    திசை திருப்பிய 
    சம்பவம் ஒன்று.

    எங்கோ 
    ஒரு திறந்தவெளியில் பிரம்மேந்திரர் படுத்திருந்தார்.

    தலைக்கு ஏதுவாக 
    மண் குவித்து தலைசாய்ந்து
    இருந்தார்.

    அப்போது 
    அவ்வழி வந்த 
    கிராம மக்கள் 
    "முற்றும் 
    துறந்தவருக்குத் தலையணைப் பாரு….!," கேலி செய்தபடி சென்றுவிட்டனர். 

    "என்னடா….
    வம்பாப் போச்சு" 
    என நினைத்தாரோ 
    என்னவோ 
    மறுநாள் 
    மணல் குவிக்காமல்
    தரை சாய்ந்திருந்தார்.

    அப்போதும்
    ஒரு விமர்சனம் 
    வந்தது.

    "நாம் 
    நேற்று சொன்னதை கேட்டு
    சாமிக்கு கோபம் வந்துவிட்டது பாரு…"

    வேத சித்தாந்த 
    யோக ஞானிக்கு 
    அதிர்ச்சி.

    குருகுல 
    குருவாயிருந்த 
    ஸ்ரீதர வெங்கடேசரிடம் விளக்கம் கேட்டார் பிரம்மேந்திரர்.

    "அகந்தையை விடு" அழுத்தமாய்ச் 
    சொன்னார் குருநாதர்.

    "பிறர் சொல்லுக்குச்
    செவி கொடுக்காதே !கோபம் தவிர்."

    இது 
    பிரம்மேந்திரருக்குக்
    கிடைத்த 
    உபதேச சொற்கள்.

    அதன் பின் 
    அவர் வாழ்வே
    முற்றிலுமாய் 
    குறையொன்றும் இல்லாமல் 
    இறை ஒற்றியே 
    இருந்தது.

    அற்புதங்கள் 
    அதி அற்புதமாய் தொடர்ந்தன.

    இப்படித்தான் 
    ஒருமுறை 
    பிரம்மேந்திரர் புதுக்கோட்டைப் பக்கம் ஏதோ ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

    நேரம் 
    நள்ளிரவு.

    வழியில் 
    ஒரு நெற்குவியல். அருகில் 
    வைக்கோல் போர்.

    என்ன நினைத்தாரோ அதன் அருகில் 
    சென்றார்.

    வைக்கோல் போரின் இடையே உட்கார்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.

    அடுத்தடுத்து 
    வைக்கோல் போர் ஒன்றன்மீது ஒன்றாய் சுமையேற 
    அடியிலே ஆட்பட்டார் அருளாளர்.

    பிறகு 
    பல மாதங்கள் கழித்து வைக்கோல் போர் 
    வேறு இடம் 
    கொண்டு செல்ல 
    எடுக்கப்பட்டபோது உடையின்றி 
    உணர்வின்றி உட்கார்ந்திருந்த பிரம்மேந்திரரைப்
    பார்த்தவர்கள் பிரமித்தார்கள்.

    எத்தனை காலம் 
    இப்படி 
    ஊண், உறக்கம்,உணர்வு ஏதுமின்றி தவத்தில் இருந்தாரோ !

    அருகில் 
    இருந்தோரில் சிலர் 
    'திருடன்'
    என நினைத்து 
    நெருங்கி வந்து 
    அடித்து தாக்க 
    கைகளை ஓங்கினர்.

    ஓங்கிய கைகள் 
    ஓங்கிய படியே 
    அப்படியே நின்றனர்
    அடிக்க வந்த கொழுப்பர்கள். 

    கீழிறக்க 
    முடியவில்லை. பிரமேந்திரரும்
    அப்படியே நின்றுவிட்டார்.

    நிலக்கிழார் 
    விரைந்து வந்து 
    தன் ஆட்கள் 
    கல்தூண் போல் 
    நிற்பது கண்டு 
    அருகிலே 
    ஓர் அவதூதர் 
    நிற்பது கண்டு 
    நடந்ததைப் புரிந்தார்.

    பிரம்மேந்திரரின் கால்களில் விழுந்தார். மன்னிக்க வேண்டினார்.

    நிர்வாண 
    பிரம்மேந்திரர் 
    முகக் குறிப்பு 
    ஏதும் காட்டாமல் 
    அவ்விடம் அகன்றார்.

    அவர் 
    விலக விலக காவலர்களின் 
    கரங்கள் 
    அதிசயம் போல் 
    கீழிறங்கின.
    செயல்பட்டன.

    காவலர்களும் மற்றவர்களும் பிரம்மேந்திரர் 
    சென்ற 
    திசை நோக்கி 
    தரை பணிந்து வணங்கினர்.

    பின்னொரு முறை…

    அரசாங்க 
    முகாம் ஒன்று.

    அதிகாரிகள் முன்னிலையில் 
    விறகு சேகரிக்கும்
    வேலை.

    கூலிகள் 
    தலைகளில் 
    கட்டுக்கட்டாக 
    விறகுக் கட்டுகளை வைத்து 
    வேறிடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கு யதேச்சையாக வந்த பிரம்மேந்திரர் தலையிலும் 
    விறகுக் கட்டு 
    சுமையை 
    ஏற்றி விட்டார் 
    ஓர் அதிகாரி.

    பிரம்மேந்திரர் 
    எச்சலனமும் இன்றி 
    தாங்க முடியா 
    அச்சுமையைச்
    சுமந்து சென்று 
    பிறர் போட்ட இடத்தில்
    தானும் போட்டார்.

    உடனே 
    அந்த 
    விறகுக் குவியல் தீப்பிடித்தது.

    பயந்து போயினர் 
    பார்த்திருந்தவர்கள்.

    ஓடிவந்து அதிகாரிகள் 'நடமாடும் தெய்வம்'
    என உணர்ந்து 
    சதாசிவ பிரம்மேந்திரரை  வணங்கித் தொழுதனர்.

    அது போதும் 
    முகபாவம் 
    மாற்றமின்றி
    போய்க் கொண்டிருந்தார் அந்த மகான்.

    பித்தர் போலிருந்தும் பிரம்மேந்திரர் குழந்தைகளுக்குப் பிரியமானவர்.

    பரிவு காட்டுவார். அவர்களை 
    மகிழ்விப்பார்.
    உய்விப்பார்.

    விளையாடும் இடத்தில் மரங்களிலிருந்து கனிகளைத் தானாக
    விழச் செய்து அவர்களுக்குக் கொடுப்பார்.

    கரும்பு ஆலையில் பொங்கும் 
    கரும்புச் சாறை மாயமந்திரமாய்
    சிறுவர்கள் 
    கைகளிலேந்திக்
    குடிக்கச் செய்வார்.

    ஒரு முறை 
    மதுரையில் 
    திருவிழா. 

    அது மகான் 
    கருவூர் பகுதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.

    குழந்தைகள் திருவிழாவைக் 
    கண்டு களிக்க 
    வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

    பிரம்மேந்திரரிடம்
    தம் ஆசையைச் சொல்லினர்.

    குழந்தைகளை 
    முதுகிலும் 
    தோள்களிலும் 
    ஏறச் சொன்னார்.

    இறுக அணைத்துக் கொள்ளச் சொன்னார். இரு கண்களையும் 
    மூடிக் கொள்ளச் சொன்னார்.

    அடுத்தகணம் 
    அனைவரும் 
    மதுரைத் திருவிழாவில் இருந்தனர்.

    கள்ளழகர் திருவிழா களைகட்டி இருந்தது.

    அதை விட 
    குழந்தைகளின் 
    முகங்கள் வியப்பிலும் விளையாட்டிலும் ஜொலித்துக்
    கொண்டிருந்தன.

    திருவிழா கொண்டாட்டத்தோடு கோயிலுக்கும்
    அழைத்துச் சென்றார்.

    வயிறு நிறைய 
    உணவு படைத்து கைநிறைய பட்சணங்களையும் வாங்கித் தந்தார்.

    பின்னர் –
    வாண்டுகளைக் 
    கண் மூடச் சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் 
    கருவூருக்கு 
    அழைத்துவந்து திருமாநிலையூரில் இறக்கி விட்டு விட்டு விடைபெற்றார்.

    பெற்றோருக்கும் உற்றோருக்கும்
    செய்தி தெரியவர அவர்களுக்குப்
    பெரும் வியப்பு.

    கூடவே
    அத்தனை பேருக்கும் சுவாமி மீது 
    ஏக கோபம்.

    ஏன் தெரியுமா ?

    குழந்தைகளைத் திருவிழாவிற்கு அழைத்துச் 
    சென்றதைப் போல் தங்களை 
    அழைத்துச் செல்லவில்லை 
    என்பதே 
    அவர்களின் 
    செல்லக் கோபம்.

    படிப்பறிவில்லாத 
    பாமரன் ஒருவன் பிரம்மேந்திரர் 
    பாதம் பற்றி
    அவர் பின்னே 
    வந்து கொண்டிருந்தான்.

    சுவாமியும் ஏதும் சொல்லவில்லை.

    அப்படியே ஒட்டிக்கொண்டான்.

    ஒருநாள் 
    தன் ஆசையைச் சொன்னான் தயங்கியபடியே.

    " ஸ்ரீரங்கநாதரைத் 
    தரிசிக்க ஆசை"

    'அவ்வளவுதானே !'
     என்கிற மாதிரி 
    இருந்தது 
    மகானின் நோக்கு.

    கண்களை 
    மூடச் சொன்னார் சைகையாலே.!

    மூடினான்
    பாமர பக்தன்.

    திறந்து போது திருவரங்கத்தில் இருந்தான்.
    கூடவே 
    பிரமேந்திரர். 

    இறைவனை 
    ஆசை தீரத்
    தொழுது 
    மகிழ்ந்தவன் 
    கூட்டத்தில் 
    குருநாதரைத் தொலைத்துவிட்டான்.

    "அரங்கனை நம்பி அருளாளரைக் கைவிட்டுவிட்டேனே ?" கதறி அழுதான்.

    அதன்பின் 
    தன் குருவைத் தேடி 
    ஊர் ஊராக 
    அலைந்தான்.

    குரு செல்லும் இடமெல்லாம் 
    தேடத் தொடங்கினான்.

    காடு மேடு 
    கழனி கரை 
    ஓரம் சாரமெங்கும் தேடினான்.

    தேடினான் 
    தேடினான் 
    விரக்தியின் 
    விளிம்பில் 
    ஓடியோடித் 
    தேடினான்.

    ஒருநாள் 
    காவிரிக் கரையோரமாய்
    பிரம்மேந்திரரைக்
    கண்டான்.

    அடுத்த அடி 
    வைக்க முடியாதபடி 
    அவர் காலடி விழுந்தான். 

    அவன் பற்றியதில்
    இருந்த பரவசம் பிரம்மேந்திரருக்குப் புரிந்தது.

    அவன் வெறும் வேலையாள் அல்ல. வேதம் யோகம் 
    கிடைக்க வேண்டிய 
    சீடன் 
    என உணர்ந்தார்.

    சீடனாக ஏற்ற பின்னே மந்திர உபதேசம் 
    செய்தார்.

    பள்ளி சென்று 
    படித்திராத 
    கல்வி வாசனை கடுகளவும் இல்லாத 
    அந்த பாமரர் 
    பண்டிதரானார்.

    மகா பண்டிதராகி
    புராண புலமையில் இணையற்றவராகி உலகையே 
    வியக்கவைத்தார் 
    அந்த சீடர்.

    பலபடி உயர்ந்தும் பிரம்மேந்திரர் 
    சீரடி தவிர 
    வேறடி ஓதாது பிரம்மேந்திரர் 
    தன்னை 
    திருவரங்கம் 
    அழைத்துச் சென்றது முதல் 
    குரு அருளிய 
    அற்புதங்கள் ஒவ்வொன்றையும் அற்புதமாய் சொல்வதை அன்றாடக் கடமையாகக் கொண்டார்.

    பின்னாளில் 
    'ஆகாச புராண 
    இராமலிங்க சாஸ்திரிகள்' என்ற பெயரில் போற்றப்பட்டவர் 
    அந்த பாமர சீடரே.
    இன்று கூட 
    அவரது சந்ததியார் 
    பிரம்மேந்திரர் சித்தியடைந்த
    நெரூரில் 
    வசித்து வருவது
    கண்கூடு.

  • சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சதாசிவ பிரம்மேந்திரருக்கு
    தஞ்சை அரசரும்
    புதுக்கோட்டை மன்னரும்
    இறையருளால் 
    வாய்க்கப் பெற்ற
    ஆன்மீகத் தொண்டர்கள்.

    புதுக்கோட்டை 
    மகாராஜா 
    விஜயரகுநாத தொண்டமான் 
    ஒரு விவேகி. 
    ஆழக் கற்றவர்.
    ஆளவும் தெரிந்தவர்.

    சாஸ்திரம் அறிந்தவர். சாதுக்களிடம் 
    பிரியம் கொண்டவர்.

    அரசாட்சி எனில் தெரிந்தும் தெரியாமலும் பாவங்கள் பல சூழும்.

    அதை 
    சாதுக்கள் மூலம் 
    தீர்ப்பது 
    சாலச்சிறந்தது என நம்புபவர்
    தொண்டமான். 

    மந்திரிமார்கள் 
    சதாசிவ 
    பிரம்மேந்திரரை
    அரண்மனைக்கு 
    அழைத்து வந்து ஆலோசனை 
    பெறலாம் என 
    ஆலோசனை தந்தனர்.

    மைசூர் சமஸ்தானத்தை அலங்கரித்தவர் புதுக்கோட்டையையும்
    புனிதப் படுத்துவார் 
    என்ற நம்பிக்கையுடன் பிரம்மேந்திரரை அழைத்துவர 
    பல்லக்குடன் 
    குதிரை ஏறினார் விஜயரகுநாத தொண்டமான்.

    கண்ணும் கருத்துமாய் அலைந்தும்
    கண்ணுக்குப் புலப்படாத கருணாமூர்த்தி திருவரங்குளம் காட்டில் முள் மரங்கள் 
    மத்தியில் 
    அமர்ந்திருந்தார்.

    கண்ட மன்னர் 
    மனம் மகிழ்ந்தார்,
    முள்ளென்றும் பாராது நெடுஞ்சாண் கிடையாக தரை பதிந்தார்.

    பேசா சுவாமி கவனிக்கவும் இல்லை.
    அரசன் அழைத்தும்
    செவி சாய்க்கவும் 
    இல்லை.

    விடாக் கண்டரான புதுக்கோட்டை மகாராஜா கண்கண்ட பிறகு விடுவாரா 
    சித்த சூரியனை.

    அருகிலேயே 
    குடிசை போட்டு 
    முழுநேர சேவையிலே மூழ்கிவிட்டார்.

    ஓடின நாட்கள்.

    மகானிடம் 
    குறிப்பு ஏதுமில்லை. மன்னனிடம் 
    அவசரம் சிறிதுமில்லை.
     
    ஒருநாள் 
    துணிந்து பணிந்து தனக்கு 
    தீட்சை வேண்டுமென்று குருவிடம் 
    மௌனமாய் 
    சொன்னார் சீடர்.

    மெளன சாமியாருக்கு சம்மதம் போலும்.

    மணலிலே
    மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். 
    மெளன மொழியிலேயே
    கற்பித்தார். 

    சிக்கெனப்
    பிடித்துக்கொண்டு
    தீட்சை பெற்ற சீடர்
    தன் 
    அங்கவஸ்திரத்தில்
    மகான் விரல் பட்ட 
    மந்திரம் பதிக்கப்பட்ட அம்மண்ணைத்
    தொட்டு வணங்கி மெல்லிய வருடலில் அலுங்காமல் 
    குலுங்காமல் எடுத்து நிரப்பிக் கொண்டார்.

    அதை அப்படியே அரண்மனைக்கு 
    எடுத்துச் சென்று 
    ஒரு தங்கப் பேழையில் வைத்து 
    அன்றாட பூஜையின் பிரதான 
    அங்கமாக்கினார்.

    அந்த பூஜை 
    இன்றும் 
    புதுக்கோட்டை அரண்மனையில் பிரசித்தம்.
    அது ஓர் ஆன்மீக 
    அருள் சித்தம். 

    காடு திரும்பிய மன்னர் சேவை தொடர்ந்தார்.
    நாட்கள் நகர்ந்தன. 

    அவ்வப்போது சந்தேகங்களைக் 
    கேட்ட மன்னருக்கு
    அனைத்தும் விளங்கின
    அருளாளர் தயவால்.

    குரு விட்ட 
    உத்தரவினால் 
    சொல் விட்ட
    பிரம்மேந்திரர் 
    ஒருபோதும் மன்னரிடம்
    பேசவே இல்லை.

    மன்னர் 
    மனம் தளரவில்லை. காத்திருந்தார்.

    ஒருநாள் 
    பிரம்மேந்திரர் 
    அவ்விடம் விட்டு 
    வேறிடம் 
    செல்ல நினைத்தார்.

    சீடரை அழைத்தார். 
    சீடரின் கண்களில் கடகடவென 
    கண்ணீர்.

    மௌன மொழியில் 
    சேதி சொன்னார்…

    "உத்தமர்
    கோயில் செல்.
    கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் 
    அங்கிருப்பார்.
    அவர் சொல்வார் 
    சாஸ்திர 
    சந்தேகங்களுக்குச் சாஸ்வதமான 
    பதில்களை"

    பொற்பாதங்களைப் பற்றிய மன்னர் 
    தலை நிமிர்த்தி 
    மகானின் தலை
    பார்த்துச் சொன்னார்..

    "சுவாமி…
    எப்படியாகிலும் 
    தாங்கள் 
    என் நாட்டில் 
    சில காலம் தங்கி ஆசீர்வதிப்பீர்கள் 
    என எதிர்பார்த்தேன்.

    காற்றும் 
    நதியும் போல் 
    நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும் 
    ஞானவான் 
    தாங்கள் என 
    உணர்ந்தேன்.

    தங்கள் 
    நிறைவு நாளில் 
    நான் உடனிருக்கும் 
    அருள் தாருங்கள்
    அது போதும்."

    பிரம்மேந்திரர் 
    எதுவும் 
    சொல்லவில்லை. தலையாட்டல் கூட
    இல்லை.

    மெளன மொழியிலும்
    எதையும் உணர்த்தவில்லை. 

    சில நொடிகள் 
    சிறிது நடந்தார்.
    பின் மாயமானார்.

    மகான் நடந்து 
    மறைந்த திசையில் மன்னர் விழுந்தார்.
    தொழுதார்.
    எழ மனமில்லாமல் எப்படியோ எழுந்தார்.

    கானகத்தில்
    இருந்தபோது 
    ஒருமுறை 
    பிரமேந்திரர்
    தனக்கு 
    யாரோ தந்து சென்ற
    வெண்ணையை
    அரசனையும் 
    அரசியையும் 
    உண்ணச் செய்தார். 

    அதன்மூலம் 
    பேரருளாளர் 
    அருளியது மகப்பேறு. 

    மகனுக்கு
    மன்னனிட்ட
    செல்லப்பெயர் நவநீதகிருஷ்ணன்.

    நவநீதம் என்றால் வெண்ணெய்.

    இன்னொரு 
    இனிய சம்பவம்
    பிரம்மேந்திரரின் 
    பெருமை சொல்லும்.

    பிரம்மேந்திரர் 
    குருகுல பாடசாலையில் பயின்ற போது 
    அமைந்த தோழர்கள் போதேந்திரர், 
    அய்யாவாள். 

    ஒருநாள் 
    இருவர் நினைப்பும் பிரம்மேந்திரருக்கு
    வந்தது.

    அஃது எப்படி சாத்தியம் ?

    உணர்வற்ற ஞானிக்கு பற்றற்ற மகானுக்கு தோழமை உணர்வு ?

    பயிலும் காலத்தில் அவர்களுக்குள் 
    ஒரு சங்கல்பம்.

    பின்னாளில் 
    ஒருமுறை 
    சந்திக்க வேண்டுமென்று.

    இதுபோன்றே
    தோழர் இருவருக்கும் சிந்தையில் எழுந்தது அந்த சத்தியம்.

    பிரம்மேந்திரரின் திருப்பாதங்கள் கோவிந்தபுரம் 
    நோக்கி நடந்தன .

    அங்கேதான் 
    போதேந்திரர் தங்கியிருந்தார்.

    வாரம் தவறாமல் அங்குவந்து 
    குருநாதராக விளங்கிய போதேந்திரரைத்
    தரிசித்து அளாவுவது திருவிசைநல்லூர் வாழ் அய்யாவாளின் வழக்கம்.

    கோவிந்தபுரம் வந்த பிரம்மேந்திரர் 
    வழியில் 
    காவிரிக் கரையில் நாணல் புதர் கண்டார்.

    வந்த நோக்கம் நினைவில்லை.

    நாணற் படுக்கையில் ஏகாந்தமாய் படுத்தார்.
    சில நொடிகளில் தவத்தின் உச்சியில்
    தவழ ஆரம்பித்தார்.

    அவ்வழி வந்த
    அய்யாவாள்
    நாணற்புதரில்
    மகான் ஒருவர் 
    படுத்திருப்பதைப் பார்த்தார்.

    'யாரோ 
    ஒரு மகானுபாவர்' என மனது சொல்லியது.

    அருகே வந்து 
    பிரதட்சணம் செய்து தோத்திரம் பாடித் தொழுதார்.

    மகான் எழவில்லை.
    அவர்தான் எழ மாட்டாரே !

    அவரது நிலை 
    யாருக்கும் கிட்டாத 
    உச்சநிலையாயிற்றே !!

    பின் 
    போதேந்திராவிடம் 
    சென்ற அய்யாவாள் 
    நாணற் புதர் நாயகன் பற்றி சிலாகித்தார்.

    "திகம்பர 
    மகானுபாவர்… 
    நாணற் புதரில் 
    ஒரு கூகை 
    கிடக்கிறது.." என 
    வியந்து சொன்னார். 

    போதேந்திரர் 
    அம்மகானை 
    தரிசிக்க விரும்பி 
    அய்யாவாளுடன் 
    காவிரிக் கரை வந்து 
    நாணற் புதர் தேடினார்.

    ஆட்களை அழைத்து புதர்களை செடிகளை அப்புறப்படுத்தி 
    மெழுகு தீபம் ஏற்றி சாம்பிராணி 
    புகை எழுப்பி 
    அந்த பகுதியையே ஆன்மீக பூமி ஆக்கினார்.

    இத்தனை களேபரம் நடந்தும் சித்தர் பிரம்மேந்திரர் 
    கண் விழிக்கவில்லை.

    பேரொளி 
    பரப்பிய வண்ணம் ஒடுங்கிப் படுத்திருந்தார்.

    ராம நாம ஜெபம் 
    பாடினர்
    எழ வில்லை.

    ராமபிரானே மயங்கும் இனிய கீர்த்தனைகள் பாடினர்….

    ஊஹும்
    கண் 
    விழிக்கவில்லை.

    ஆனால்
    இரண்டாவது கீர்த்தனையில் 
    அவர்கள் பாடிய 
    சப்த பேதங்கள் 
    பிரம்மேந்திரரை
    மெதுவாக 
    கண் விழிக்க
    வைத்தன.

    பாடல் தொனியின் தவறை உணர்த்தியவர் இருவரையும் 
    வணங்கினார்.

    அவர் 
    சதாசிவமே 
    என உணர்ந்த 
    இருவரும் 
    வணக்கம் செலுத்தினர்.

    பேச்சும் மூச்சும் 
    அறவே இல்லை.

    அருகிருக்கும் ஆசிரமத்திற்கு போதேந்திரர்
    அழைத்தார்.

    பிரம்மேந்திரரிடம்
    பதில் இல்லை.
    ஏற்பும் இல்லை.
    மறுப்பும் இல்லை.

    சில கணங்கள் 
    இப்படிச் சிதறின.

    பின்
    எச்சலனமுமின்றி 
    சதாசிவ
    பிரம்மேந்திரர் 
    எழுந்தார். 
    சிறிது நடந்தார்.
    ஆகாய மார்க்கமாக
    பறந்து மறைந்தார்.
     

  • நவநாத சித்தர்கள் பாகம் -2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    நவநாத சித்தர்களில் ஆறாவது சித்தர்
    மதங்க நாதர்.

    'சங்கிலிச் சித்தர்' 
    என்ற பெயரும் 
    இவருக்கு உண்டு.

    மதங்க நாதர் 
    அருளி
    கிடைத்திருக்கிற 
    பாடல்கள் தொகுப்பில் 
    36 பாடல்கள்
    தொகுப்பொன்றும் 
    16 பாக்கள் அடங்கிய 
     'ஞான சூத்திரமும்' 
    கும்மிப் பாட்டாய் கும்மியடிக்கின்றன.

    திருமூலரைக் 
    குருவாகக் 
    கொண்டவர் 
    மதங்க நாதர்.

    இறை
    எழுத்துக்களான 
    அகாரம் 
    உகாரம் 
    மகாரம்
    சிகாரம் 
    குறித்து 
    விளக்கி உள்ளது 
    மதங்க நாத சித்தரின் மங்காப் படைப்புகள்.

    நவநாத சித்தர்களில் ஏழாவது 
    சித்தர் பிரான் 
    மச்சேந்திர நாதர்.

    சிவபெருமானால் நாமகரணம் 
    சூடப் பெற்றார்.

    சிவபிரான் 
    தாரக மந்திரத்தை உமாதேவிக்கு உபதேசித்துக் கொண்டிருந்ததைக்
    கேட்ட – 
    கருவிலிருந்த 
    மீன்குஞ்சே
    மனித உருவெடுத்துப் பிறந்ததாகப் புராணம்.

    அந்த
    மீன் குஞ்சே –
    சிவபெருமானின் அருள் பார்வையால்
    மனித உருக்கொண்ட அந்த மீன் குஞ்சே –
    ஆதி சிவனால்
    'மச்சேந்திரா..'
    என்று
    பெயர் சூட்டி அழைக்கப்பட்டவரே
    மச்சேந்திர நாதர்.

    கோரக்கரை 
    சாம்பல் 
    குப்பையிலிருந்து 
    எழுந்து வரச்செய்து சிறுவனாய் இருந்தவரை சித்தராக உருவாக்கிய சித்தர் பிரானே மச்சேந்திரநாதர்.

    மலையாள தேசத்தில் 
    சில காலம் தங்கி 
    அத்தேசத்து 
    இளவரசியை 
    மணந்தவர். 
    அரச வாழ்க்கை வாழ்ந்தவர்.

    சீடர் கோரக்கரே 
    அவரைக்
    மலையாள தேசத்திலிருந்தும் 
     கேரளத்து
    இளவரசியிடமிருந்தும் மீட்டெடுத்து வந்தார்.

    குருவை மிஞ்சிய 
    சீடராய் 
    கோரக்கரே
    மச்சேந்திர நாதரின் மாயையைப் போக்கியது ஒரு தனி வரலாறு.

    நொண்டிச் சிந்து
    மச்சேந்திர நாதரின் பாடல்களில் 
    மிளிர்ந்திருக்கும்.

    அதனால்
    'நொண்டிச் சித்தர்'
    என்ற பெயரும் 
    மச்சேந்திரருக்குப் 
     பெருமை சேர்க்கும்.

    அழியாப் பரம்பொருளான இறைவனை 
    உணர்ந்து 
    ஞானம் அடையும் நிலையே
    மோட்ச நிலை 
    என்பதை
    மச்சேந்திரர் பாடல்கள் தெளிவாய்
     உணர்த்தும் 
    சிறப்பு உடையன.

    மச்சேந்திர நாதர் 
    அருளிய 
    சிவயோகத்தில் 'வாசியோகம்' 
    சித்தரின் 
    அனுபவ வெளிப்பாடாக
    விலாவாரியாக உள்ளது.

    வாசி யோகத்தின் மகத்துவத்தை
    மானிடர்க்கு 
    உணர்த்த வல்ல
    பெருமை கொண்டது
    மச்சேந்திரரின் சிவயோகம்.

    நவ நாதர்களில் 
    எட்டாவது சித்தர் 
    கஜேந்திர நாதர்.

    எதையும் 
    விளையாட்டாக 
    எடுத்துக் கொள்ளும் மாண்பினர் 
    ஆதலின் 
    'விளையாட்டுச் சித்தர்' 
    என்றும்  
    பெயர் பெற்றவர்
    கஜேந்திர நாதர்.

    வாழ்க்கையே விளையாட்டு
     என்பது 
    கஜேந்திர நாதரின் பாடல்களின் சாரம்.

    'பிறப்பே 
    விளையாட்டு.
    சிறுவர்கள் 
    'அம்மா அப்பா 
     விளையாட்டு '
    விளையாடுவதைப் போல வாழ்க்கை
    ஒரு தற்காலிக விளையாட்டு.'

    எனத் துவங்கி 
    மரணம் 
    மரணத்திற்குப் பின் 
    என அனைத்தையும் விளையாட்டு என்கிறார் சித்தர் பிரான்.

    'பிணமாயிருப்பதும் விளையாட்டே.
    அதைக் கண்டடைவதும்  விளையாட்டே.

    அப்பிணத்தைச் சுட்டெரிப்பதும் விளையாட்டே.

    பின் 
    செத்தவர் போக
    வீடு திரும்பியோர் 
    குளித்து விட்டு 
    வாழ்க்கையைத் தொடர்வதும் 
    விளையாட்டு தான்.'

    மொத்த ஞானமும் விளையாட்டு 
    என்பவர் 
    மெய்ஞானம் 
    காணாததும் 
    ஒரு விளையாட்டு 
    என்பார் 
    ஞான விளையாட்டாக.

    'இந்த 
    மேதினியில் 'போதும்' 
    என்பது
    விளையாட்டே' 
    என 
    ஞான உலகிற்கு விளையாட்டாய்
    அழைத்துச் செல்கிறது விளையாட்டுச் சித்தரின் பாடல்கள்.

    நவநாத சித்தர்களில் ஒன்பதாவது சித்தர் 
    கோரக்க நாதர்.

    கோரக்க நாதரின் 
    புகழ் வரலாறு 
    பிரபஞ்சம் போற்றும் 
    சிறப்பு கொண்டது.

    கோரக்கர் 
    வசிஷ்டருக்கும் 
    ஒரு 
    குறப்பெண்ணுக்கும் மகனாய்
     பிறந்தவர் 
    என்பது 
    செவிவழிச் செய்தி.

    நாகார்சுனர் 
    சாணாக்கிய முனிவர் இருவரும்
    கோரக்க நாதரின் 
    பிரதான சீடர்கள்.

    பிரம்மனின் 
    சிருஷ்டி ரகசியங்கள் பிரணவ உண்மை குண்டலினி யோகம் முதலியன குறித்து 
    பிரம்ம 
    ஞான சூத்திரத்தில் தெளிவாக்கியுள்ளார் 
    கோரக்க நாதர்.

    கற்ப சூத்திரத்தில் 
    கற்ப மூலிகைகளை   நற்கவிதைகள் மூலம் விளக்கி உள்ளார்
    கோரக்கர் சித்தர்.

    ஜெய நீரின்
    பக்குவ நிலைகளை 
    10 பாக்களாக படைத்துள்ளார்.

    கோரக்கரின்
    'வகார சூத்திரம்'
    அற்புத பொக்கிஷம்.

    நந்தியம்பெருமான் 
    கோரக்க நாதருக்கு 
    உபதேசித்த 
    ரசாயன சூத்திரம்.

    சுண்ணங்களான 
    பூநாகச் சுண்ணம்
    துருசுச் சுண்ணம் 
    ரோமச் சுண்ணம் கடல்நுரைச் சுண்ணம் கரியுப்புக் கட்டு 
     திருவங்கச் சுண்ணம் 
    மற்றும் 
    காந்தச் சத்து 
    நவச்சாரக் கட்டு 
    நாகக் கட்டு 
    சவுக்கார எண்ணெய்
    செந்தூரம் 
    முதலானவற்றைத் தயாரிக்கும் முறைகள் பக்குவ நிலைகள் 
    என 
    100 பாக்களில்
    வகார சூத்திரமாய்
    விரிந்திருக்கிறது 
    கோரக்க நாதரின் 
    ஞான மருத்துவம்.

    நவநாத சித்தர்கள் வடநாட்டு சித்தர்கள்.
    கயிலாயத்தில் வாழ்ந்தவர்கள் 
    என்பாரும் உண்டு.

    வடநாட்டுச் சித்தர்கள் மக்களோடு மக்களாய் கலந்திருந்தார்கள். மக்களுக்காக வாழ்ந்தார்கள்.

    ஆனால் 
    தென்னாட்டுச் சித்தர்கள் மக்களை விடுத்து 
    தனித்துத் தவமிருந்து மக்கள் நலன்
    பேணினார்கள் 
    என்கிறது ஓர் ஆய்வு.

    இது 
    மேலாய்வுக்கு உரியது.

    உண்மையில் நவநாத சித்தர்களில் மச்சேந்திர நாதர் கோரக்க நாதர் காலாங்கி நாதர் ஆகியோரது வரலாற்றுச் சுவடுகள்
    சதுரகிரி தலபுராணத்தில் காணக் கிடைக்கின்றன.

    இம்மூன்று சித்தர்களும் சதுரகிரி மலையில் நெடுங்காலம் 
    தவமிருந்தவர்கள்.

    இன்றும் 
    அருவாய் 
    உருவாய் 
    அருவுருவாய் சித்தர் மலையாம் சதுரகிரி மலையில் உலா வருபவர்கள்.

    ஒப்பில்லா
    ஞானம் பெற்ற
    நவநாத சித்தர்கள் 
    பற்றி
    நானிலத்தில்
    நிலவும் தகவல்கள்- உலவும் செய்திகள் இவ்வளவே.

    சித்தர்கள் குறித்து
    ஞான ஆய்வு 
    செய்வோரும்
    முக்காலம் உணர்ந்த ஞானியரும்
    நவநாத சித்தர்கள்
    பற்றி
    இன்னும்
    நிறையச் 
    சொல்ல வேண்டும்.

    அதுவே 
    ஞானத் தேடல்.

    (நவநாத சித்தர்கள் சரித்திரம் நிறைவுற்றது)
     

  • நவநாத சித்தர்கள்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    நவநாத சித்தர்கள் பாகம் 1

    சித்தர் பட்டியல் 
    என்பது 
    விசித்திரமானது.

    'நவநாத சித்தர்கள்' 
    என்று 
    ஒரு பட்டியல் உண்டு. 'நவநாத வர்க்கம்' 
    என்றும் சொல்வார்கள்.

    சித்தர்களை 
    வடக்கே 
    வரிசைப்படுத்தியவர்
    நவநாத சித்தர்கள் 
    எனப் 
    பெயர் சூட்டினர்.

    அதே பாணியில் 
    தெற்கே 
    தமிழகத்தின் சித்தர்கள் பதினெண் சித்தர்கள் என்று 
    அழைக்கப்பட்டனர்.

    முதன்முதலில் 
    சித்தர் 
    பட்டியலிட்டவர்கள்
    9 சித்தர்கள் அடங்கிய பட்டியலைத் தான் வெளியிட்டார்கள்.

    அதில் கூட
    வெவ்வேறு 
    பெயர்கள் உள்ளன.

    சத்யநாதர்
    சதோக நாதர் 
    ஆதி நாதர்
    அனாதி நாதர் 
    வகுனி நாதர் 
    மதங்க நாதர் 
    மச்சேந்திர நாதர் கஜேந்திர நாதர் 
    கோரக்க நாதர் 

    இந்த 
    ஒன்பதின்மர்களும் நவநாத சித்தர்கள் என்கிறது 
    ஓர் ஆதிகாலப் பட்டியல்.

    அபிதான சிந்தாமணி வேறொரு பட்டியலைப்
    வேறு பெயர்களுடன் தருகிறது.

    சத்துவ நாதர் 
    சாலோக நாதர்
    ஆதி நாதர் 
    அருளி நாதர் 
    கடயிந்திர நாதர் 
    கோரக்க நாதர் 
    குக்குட நாதர்.

    இன்னொரு 
    பட்டியலில்
    வேறு சிலர்.

    அந்தளேந்திரர் 
    கோரக்கர் 
    கொங்கணர் 
    நாகார்சுநர்
    மச்சேந்திரர் 
    பீமநாதர்
    அருணகிரி நாதர் 
    புஜங்க குருநாதர் ஆதிநாதர்
     
    ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    கணநாதர் 
    என்பவரும் 
    நாக நாதர் என்கிறது 
    ஒரு குறிப்பு.

    எத்தனை பேர் 
    இருந்தால் என்ன 
    அவர் தம் 
    வாழ்வும் வரலாறும் 
    அவர் கற்றுத் தந்த சித்துக்களும் 
    அருளிச் சென்ற நூல்களும் 
    சித்தர்களின் 
    சிறப்பைச் சொல்கின்றன. நல்வழி காட்டுகின்றன.

    நவநாத சித்தர்களைப் பார்க்கும் புண்ணியம் யாருக்கும் கிடைக்காது.

    அபூர்வமாக 
    விண்வெளிப் பயணத்தில் சிலருக்கு இனிய கானம் மிதந்து செல்வதை உணரும்
    பாக்கியம் கிட்டும்.

    அந்த 
    இனிய கானம் தான் நவநாத சித்தர்களின் இருப்பு.

    சித்தர் நெறியில் 
    சிறந்தோர்க்கே கிடைக்கும் 
    இந்த வாய்ப்பு.

    ஆதி சித்தர்களென அடையாளம் கொண்டவர்களை 
    நவநாத சித்தர்கள்
    எனக் கொண்டு 
    அவர்தம் 
    சிறப்புகளைச்
    சிறிது காண்போம்.

    சிறிதே இருக்கிறது –
    அவர்கள் பற்றிய 
    குறிப்புகள்.

    நவநாத சித்தர்கள் அம்மனை 
    வழிபடுபவர்கள்
    சக்தி உபாசகர்கள்
    என்பது வெளிப்படை.

    நவநாத சித்தர்களில்
    முதல் சித்தர் 
    சத்ய நாதர்.

    'ஞானச் சித்தர்' 
    என்பது 
    போற்றப்படும் 
    அவர் திருநாமம்.

    கால நிர்ணயம் அற்றவர்களே 
    சித்தர்கள் என்பது 
    ஆன்மீக நம்பிக்கை.

    ஞானப் பாடல்கள் 35 
    மெய் ஞானம் 12 
    என சத்ய நாதரின்
    47 பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

    'மனோன்மணி'
    என்று 
    அம்பிகையை முன்னிறுத்தியே பாடியிருக்கிறார் 
    சத்ய நாதர்.

    இரண்டாவது சித்தர் சதோக சித்தர்.

    யோக ஞானம் 
    பற்றி 
    அதிகம் பாடியதால் 
    'யோக சித்தர்'
    என்றழைக்கிறது 
    சித்தர் உலகம்.

    அம்பிகையை 
    வணங்கும் 
    சக்தி உபாசகரான 
    சதோக நாதர் அடிப்படையில் 
    ஒரு சைவர்.

    47 கண்ணிகள்
    கொண்ட 
    இவரது பாடல்கள் 'மாங்குயிலே' 
    என நிறைவு கொள்கின்றன.


    மூன்றாவது சித்தர் ஆதிநாதர்.

    வடமொழியிலிருக்கும் 
    வேதங்கள் 
    உபநிடதங்கள் முதலானவற்றைத்
    தமிழில் பாடியவர்.

    அதனால் 
    'வேதாந்தச் சித்தர்' 
    என்ற சிறப்பு பெயர் இவருக்கு உண்டு.

    சித்தர் இலக்கியத்திற்கு பெருமை சேர்ப்பவை நவநாத சித்தர் பாடல்கள்.

    அவற்றில் குறிப்பிடத்தக்கது 
    ஆதி நாதர் அருளிய 
    32 கண்ணிகளால் 
    ஆன பாடல் தொகுதி.

    ஞான சூத்திரம் 
    27 பாடல்கள். 
    கண்ணியில்
    நூறு வகை.

    யோனி பேதம் 
    எழுவகைத் தோற்றம் பிரணவம்
    ஐந்தெழுத்து 
    ஆறாதார வடிவம்
    சமாதி 
    மண் 
    பெண் 
    பொன்னாசை முதலானவற்றை விரித்துச் சொல்லி உணர்ந்து படிப்போரை உய்விக்கின்றார்
    ஆதி நாதர்.

    ஞான சூத்திரத்தில் 
    வாசி மார்க்கம் 
    காயகற்பம் 
    நாக கற்பம்
    வியாதிகள் பற்றி விரிந்துரைக்கின்றார்.

    நான்காவது சித்தர் காலாங்கி நாதர்.

    'அனாதி நாதர்' 
    என்பது 
    சிறப்புப் பெயர்.

    காலாங்கிநாதர் 
    பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு.

    காலாங்கி நாதரே பிற்காலத்தில் 
    கமலமுனி 
    என்கிறது 
    ஒரு சித்தர் குறிப்பு.

    காலாங்கி 
    திருமூலரின் சீடர். போகருடைய குரு.

    உபதேச ஞானத்தில் 
    முக்தி ரகசியம் 
    தியானம் செபிக்கும் மந்திரம் 
    சுழிமுனை 
    சிவயோக ஞானம்
    வாசியோக ஞானம் 
    என 
    ஆன்மீக நுட்பத்தைக்
    கற்றுத் தருகிறார் காலங்கி நாதர்.

    சீன தேசத்தவர் 
    எனினும் 
    தமிழகம் வந்து 
    சித்தராகி 
    சதுரகிரியில் 
    நெடுநாள் இருந்தவர் காலங்கி நாதர்.

    சுண்ணம் தயாரிப்பதில் உள்ள சூட்சமங்கள்
    காலாங்கி நாதர் 
    உலகுக்குத் தந்த 
    கொடையெனச் சொல்லலாம்.

    துருசுச் சுண்ணம் 
    நிமிளைச் சுண்ணம் கருவங்கச் சுண்ணம்
    நாகச் சுண்ணம் முதலானவற்றின் தயாரிப்பு முறைகளை மறை சொற்களாய் பாடலாக்கி 
    அருளி உள்ளார்
     அனாதி நாதர்.

    நவநாதர்களில் 
    5ஆவது சித்தர்
    வகுளி நாதர்.

     மௌன உபதேசம் அருளியதால் 
    'மௌன சித்தர்'
    என
    பூஜிக்கப்படுகிறார்.

    சக்தி உபாசகரான
    வகுளி சித்தர்
    12 பாடல்களாக 
    குறிஞ்சிப்பா படைத்திருக்கிறார்.

    8 பாடல்களில் 
    கற்பூர தேகசம்
    பிரணவ துரியம் மௌனத்திலிருந்து மார்க்கம் 
    நெற்றிக்கண் ரகசியம் மகா தீட்சை முதலானவற்றை 
    விளக்கி உள்ளார்.

    எளிமையான 
    பாடல்களில் 
    வலிமையான 
    ஞானத்தைப் பதிந்திருப்பது 
    வகுளி நாதரின் 
    சிறப்பு.

    ஊணுறக்கம் நீக்கி 
    யோக நிஷ்டை புரிந்து உற்றாரைத் துறந்து மலைக் குகையில் 
    தவமிருந்து 
    கண்ணுக்கு எட்டாத பரவெளியைக் கண்டோம்.

    பின்னர் 
    காயகற்பம் உண்டு உடலை கற்பமாக பெற்றோம்.

    அதன் பின்னர் 
    சக்தி சக்கர பீடமேறி 
    சுத்த வெளியைக் கண்டோம்.

    சகலமும்
    பரவெளியென 
    உணர்ந்து 
    சித்தி பெற்ற முக்தர்களைத் 
    தினம் தினம் 
    தரிசித்தோம்.'

    என 
    ஞானநிலைப்
    படிகளை 
    வகுளி நாதர்
    படிப்படியாய் வகுத்திருக்கிறார்.

    இது 
    அவரது 
    அருள் நிறை
    படைப்பாற்றலுக்குச் சான்று.

    (மீதமுள்ள நவநாத சித்தர்கள் பற்றி அடுத்த பதிவில்…)
     

  • காற்றையே உடலாகக் கொண்ட காலாங்கி நாதர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காலாங்கி நாதர் திவ்விய சரித்திரம் பாகம் – 2

    சதுரகிரியில் 
    காலாங்கி நாதர் 
    மிச்சம் மீதமில்லாத ஆன்மீக உச்சத்தில் உயர்ந்து இருந்தார்.

    ஒருமுறை 
    காலாங்கி நாதர் தவத்தில் இருந்த 
    சமயம்.
     
    வணிகர் ஒருவர் காலாங்கி நாதரைத் தரிசித்து நின்றார்.

    "என்னப்பா"
     என்றார் சித்தர்.

    " சிவ ஆலயம் ஒன்றினைக் கட்ட ஆரம்பித்தேன்.
    கட்டத் 
    தொடங்கியது முதல் 
    என் கட்டம் சரியில்லை.

    சொத்து பத்து அத்தனையும் விற்றேன்.
    பாதி கூட 
    முடியவில்லை.

    என்னால் 
    எதுவும் செய்ய முடியவில்லை…

    ஜோதியாய் தெரிகின்றீர்கள்… உதவுங்கள் சுவாமி " 

    கெஞ்சினார்.
    கதறினார்.
    காலைப் பற்றினார்.
    எத்தனை சொல்லியும் பற்றியதை விட்டாரில்லை.

    பற்றிலா சித்தர் மனம் ஏனோ ஒப்பவில்லை. மௌனமாக இருந்தார்.

    விடாக் கண்டரான வணிகர் விடவில்லை.
    அவருடனேயே தங்கி பணிவிடைகள் தொடர்ந்தார்.

    அவரது 
    மன உறுதியையும் 
    சிவ பற்றையும்
    போற்றிய மாமுனி அவருக்கு உதவ 
    உறுதி பூண்டார்.

    சதுரகிரி மலையில் 
    இல்லாதது இல்லை. சித்தர் ரகசியங்கள் ஆயிரம் ஆயிரம்.
    மூலிகைகள் பல்லாயிரம்.  பலாபலன்கள் 
    பலகோடி பல்லாயிரம்.

    வணிகர் வந்தது
    சதுரகிரிக்கு.
    சரணடைந்தது 
    கால தத்துவமறிந்த காலாங்கி நாதரிடம்.

    பலன் இல்லாமலா போகும் ?

    அரிய மூலிகைகளைப் பறித்து வந்து 
    தைலமொன்றைத் தயாரித்த சித்தர் காலாங்கிநாதர் அத்தைலத்தைக் கொண்டு 
    தங்கம் தயாரித்தார்.

    அடடே….
    கோடி சூரிய ஒளி…..!பொன்னிறம் தகதகவென 
    ஓங்கி ஒளிர 
    சதுரகிரியே திணறித்தான் போனது.

    "வேண்டிய மட்டும் எடுத்துச் செல்.
    உன் லட்சியம் 
    நிறைவேற 
    சிவன் அருள் புரிவார்.

    வாழ்த்தி அனுப்பினார், வகாரத் தைலமெனும் பொன்னை உருவாக்கும் சித்தத் தைலம் கண்ட கலங்கி நாதமுனி.

    வணிகர்
    எடுத்துச் சென்றது போக மீதமிருந்தது தைலம்.

    கெட்டவர்களுக்கும் 
    பேராசை மனிதர்களுக்கும் 
    போய்ச் சேர்ந்தால் 
    தீயது மிகுமே 
    எனக் கருதிய காலாங்கிநாதர் 
    அருகில் இருந்த கிணற்றில் 
    அதைக் கொட்டி 
    கனத்த பாறை ஒன்றால் அதை மூடி 
    நாற் திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவலுக்கு வைத்தார்.

    ஆம்…
    தெய்வங்கள் கூட 
    அவரது ஏவலுக்கு காத்திருந்தன.

    இன்றும் 
    சதுரகிரி செல்வோர் மூலிகைக் கிணற்றையும் மூடிய பாறையையும் வராகி, காளி பேச்சியம்மன், கருப்பணசாமி 
    எனும் காவல் தெய்வங்களையும்
    கண்ணுற்று
    வணங்கலாம்.

    தனித்திருப்பதும்
    தவமிருப்பதும் சித்தர்களின் 
    ஏகாந்த நிலை.

    காலாங்கி நாதரும் சதுரகிரியிலேயே
    நீண்ட தவமிருக்க அமர்ந்துவிட்டார்.

    தன்னிலை மறந்த
    அவரைத்
    தட்டி எழுப்பியது 
    ஒரு கரம். 

    அக்கரம் 
    குரு திருமூலநாதர் திருக்கரம்.

    'காலாங்கி…..' 
    சித்தர் மரபு 
    உன்னோடு முடிந்து விடக்கூடாது.
    வளர வேண்டும்.
    ஆல்போல் 
    தழைக்க வேண்டும். 

    நீ என்னிடம் உரிமையோடு கற்றதை நன்காய்ந்து தேர்ந்தெடுத்து சீடர்களுக்கு வழங்கு.

    உபதேசி.

    நல்லவர்களை உருவாக்கு.
    நாடு பேதம் வேண்டாம்.

    சீனாவிற்குச் செல். அங்கு பணியாற்று.
    உன் கடமையைச் செய்.

    உபதேசித்து மறைந்தார் உன்னத குருவாம் திருமூலநாதர்.

    அதன்பின்னர் காலாங்கிநாதர் 
    சீனா போனார்.

    அம்மக்கள் மேம்பட உபதேசம் அருளினார். அவர்கள் மாண்புற 
    மருந்துகள் தந்தார்.

    சீன தேசத்திற்கு 
    எப்படிப் போனார் ?மாயமில்லை. மந்திரமில்லை.

    ககன குளிகை 
    என்னும் 
    அதிசய மருந்து 
    அவர் 
    கைவசமிருந்தது.
    அதன் மூலம் 
    சீனா சென்றார்.

    உலகெங்கும் 
    உயரப் பறந்தார்.
    உலகம் உய்விக்க!

    அதற்கெனப் 
    பிறந்தவர் போல் 
    உலா வந்தார்.

    அக்னி வேள்வி நடத்துவதில் வல்லவர் கலாங்கி நாதர்.

    ஒருமுறை 
    அகத்தியருக்காக 
    கங்கை நதிக்கரையில் 
    மரகத மலை அடிவாரத்தில் 
    அன்னை ராஜேஸ்வரிக்கு அக்னி வேள்வி நடத்தி அகத்திய முனிவரின் ஆசியருள் பெற்றார். அவர்தம் 
    உள்ளத்தில் அமர்ந்தார்.

    கால் என்றால் காற்று.
    அங்கி என்றால் உடை.
    காற்றை அங்கியாக
    அணிந்தவரே 
    காலாங்கி நாதர். 

    நம் உடலைப் போல் தசைகளால் ஆனதல்ல
    அவர் உடல்.
    காற்று அணுக்களால் ஆனது.
    உணரலாம்.
    தொட முடியாது.
    இஃதோர் 
    உயர் நிலை. 
    உயர் சித்தர் நிலை.

    ஒருகட்டத்தில் 
    மூவாயிரம் வருடம் 
    சமாதி நிலையிலிருக்க ஆசை கொண்டார் காலாங்கி நாதர்.

    உடனே தனது 
    சீடர் போகரை 
    சீனாவுக்கு வரவழைத்து 
    தன் பணி தொடரக் கோரினார்.

    அதன்பின்னர் 
    குருநாதர் 
    சீனாவிலேயே 
    சமாதி கொண்டார்.

    சீனாவில் 
    காலாங்கி நாதர் 
    சமாதி இருக்கும் 
    முக்காதக் கோட்டைக்கு அடிக்கடி செல்வது போகரின் வழக்கமாம்.

    போகர் 
    செல்லும்  
    போதெல்லாம் 
    சமாதி கதவு 
    தானாகத் திறக்க வாத்தியங்கள் இன்னிசை எழுப்ப காலங்கி நாதர் ஒளிமயமாய் தகதகவென பொன்னிறமாய் 
    ஆயிரம் கோடி சூரியனாய் 
    காட்சி அளிப்பது வழக்கம்.

    காலாங்கி நாதரின்
    நூல்கள் பல 
    நம் கைக்குக் கிடைக்கவில்லை.

    வைத்திய காரியம் 
    ஞான சாராம்சம் 
    வகாரத் திரவியம் ஞானம் 
    கற்பக விதி 
    ஞான பூஜா விதி 

    தண்டகம் 
    பகரணி 
    இந்திர ஜால ஞானம் தீட்சா விதி 
    உபதேச ஞானம் 
    சூத்திரம் 
    ஞான விந்த ரகசியம் ஞான சூத்திரம் 
    ஆகிய 
    அரும்பெரும் நூல்கள் அவரது அருளாற்றலுக்குச் சான்று.

    சதுரகிரி குறித்த காலாங்கி நாதர் பாடலொன்று….
    அவர்தம் ஆன்மீக அனுபவச் சான்று.

    "பாரப்பா 
    அக்குகையின் 
    உள்ளே செல்ல
    பாம்பாட்டிச் சித்தரும் தங்கியிருப்பார்.

    தேரப்பா…. 
    நீ வணங்கி அதன் மேற்காக திரும்பவே 
    அத்திரியின் குகை 
    தானுண்டு…ப

    பாதை வழி நேராய் நாதாந்த சித்தர் 
    பதியான குகை தெரியும்.

    பார்த்துக் கொண்டு வேதை நீ அடையாமல் உள்ளே சென்றால் வேதாந்த சித்தருடன் குதம்பைச் சித்தர் போதையுள்ள ஞானச் சித்தர் அடிவணங்கி…."

    இப்படிப் போகும் பாடல்.

    சதுரகிரியின் 
    ஆன்மீகச் சிறப்பை இப்படி
    அடி அடியாய் அடியெடுத்து வைத்து சித்தத்தைத்
    துடிக்க வைக்கிறது.

    உலகப் புகழ் 
    தத்துவ ஞானி கன்பூசியஸ் 
    நீண்டகாலம் வாழ்ந்திட காலங்கி நாதரே காரணம் 
    என்னும் ஒரு கருத்து ஆன்மீக உலகில் உண்டு.

    காலங்கி நாதர் தான்
    ஞானி கன்பூசியஸ் 
    என்றும்
    ஒரு குறிப்பு உண்டு.

    காலங்கிநாதர் 
    சித்தி அடைந்தது
    சீனநாட்டில் 
    என்றும் 
    தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் 
    என்றும் 
    போகரே
    இரு இடங்களைச்
    சொல்லியுள்ளார். 

    சேலம் அருகில் இளம்பிள்ளை கிராமத்தில் 
    அமாவாசைக் கோயிலிலும் 
    காலாங்கி  நாதரின் ஜீவசமாதி உள்ளது.

    காலாங்கி நாதருக்கு கஞ்சமலை சித்தர் 
    என்ற பெயரும் உண்டு.

    சேலம் 
    இளம்பிள்ளை மலையே கஞ்சமலை.

    பற்பல இடங்களில் சித்தியாவது 
    சித்தர்களுக்கு 
    வழக்கம் என்பது 
    ஏற்புடையது என்பதால் 
    காலாங்கி நாதரின் அருள் பெற நாம்
    சீன தேசம் செல்ல
    வேண்டியதில்லை.

    அருகில் 
    கஞ்சமலை இருக்கு.
    காஞ்சிபுரம் இருக்கு. சதுரகிரி இருக்கு.

    கஞ்சமலை செல்வோம்.
    காஞ்சிபுரம் செல்வோம்.
    சதுரகிரி செல்வோம்.

    தெய்வ நிலையில் உலவும் 
    காலாங்கிநாதர் 
    அருள் பெறுவோம்.
     

  • காலாங்கி நாதருக்குப் பிடித்த மலை

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காலாங்கி நாதர் திவ்விய சரித்திரம் பாகம் -1

    சித்தர் பரம்பரையில் முதல் சித்தரென சிவனைச் சொல்வர்.
    அடுத்து திருமூலர்.
    அதற்கடுத்து 
    காலங்கி நாதர்.

    திருமூலரின் 
    சீடர்களில் முதன்மையானவர் காலங்கி சித்தர்.

    சித்தர் உலகையே
    வியக்க வைத்த
    போகர் பிரான் 
    காலாங்கி நாதரின் 
    அத்யந்த சீடர்.

    இப்படி
    குருவும் சீடரும் 
    காலாங்கி நாதருக்கு கிடைத்தது பேரருள்.

    சித்த ஆற்றல்மிக்க காலாங்கி நாதர் 
    குறித்த தகவல்கள் 
    அதிகம் இல்லை.

    அகத்தியரின் 
    ஜனன சாசனத்திலும் போகரின் 
    சப்த காண்டத்திலும்
    காலாங்கி பற்றிய சுவைமிகு பதிவுகளைக் காணமுடிகிறது.

    குரு 
    திருமூலர் போலவே பல்லாண்டு வாழ்ந்த காலாங்கிநாதர்
    சீனா, பாரதம் என அலைந்து அலைந்து 
    இரு நாட்டு மக்களையும் மேம்படுத்தியவர்.

    அன்றொருநாள்…

    பாரத தேசத்தில் 
    ஒரு பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

    மழை…
    மழை…
    மழை…
    நாடே வெள்ளக்காடாய்
    காட்சியளித்தது.

    பேய் மழை 
    தொடர்ந்து பெய்து பூமியை நிரப்பியது.

    நீர்மட்டம் உயர 
    மக்கள் தவித்தனர். மாண்டனர் பலபேர்.

    உயரே செல்வதே தப்பிக்க கிடைத்த
    ஒரே வழி.
    உன்னத வழி.

    மலைமீது ஏறினர் மக்களில் சிலபேர்.

    அதோ தெரிகிறதே…!

    அந்த மலைமீது கிடுகிடுவென 
    ஏறிக் கொண்டிருந்தார் ஒரு மனிதர்.

    அருகில் சென்று பார்த்தால் 
    அவர் 
    சாதாரண மனிதர் அல்ல என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது.

    அவரின் 
    பார்வையில் 
    ஒளி இருந்தது.
    தேகம் கூட ஒளி வீசிக்கொண்டிருந்தது.

    அவர் யாராயிருக்கும்…!

    மேலே
    மலை மேலே 
    அவரைப் போலவே பலரும் இருந்தனர்.

    எல்லோருக்கும் 
    ஓர் ஒற்றுமை.
    அவர்கள் 
    அத்தனை பேரும் சித்தரைப் போல 
    ஞானியைப் போல பித்தரைப் போல ஒருமித்து இருந்தனர்.

    புதிதாய் வந்தவரைப் பார்த்ததும் 
    அவர்கள் மகிழ 
    பார்த்தவர்களைப் பார்த்து 
    வந்தவர் மகிழ அறிமுகப்படலம் ஆரவாரமாய் இருந்தது.

    "நான் காலாங்கி"
     என்றார் வந்தவர். இருந்தவர் யாவரும் சமகால சித்தர்கள்.
    தவஞானிகள். சித்துக்கள் பல 
    அறிந்த வித்தகர்கள்.

    அன்பு விரிந்தது.
    நட்பு பூத்தது.
    ஆனந்தம் அருகில் தாண்டவமாடியது.

    தான் கற்றதையும் பெற்றதையும் 
    பிற சித்தர்களுக்குக் கற்பித்தார் 
    காலங்கி நாதர். 

    பதிலுக்கு தாங்கள் கற்றதை 
    காலங்கி நாதருக்குச்
    சொல்லித் தந்தனர் மலைவாழ் சித்தர்கள்.

    காயகல்ப முறைகளும்
    ரசவாத வித்தைகளும் பிரதானமாக இருந்தன அவர்கள் குருகுலத்தில்,

    இப்படிச் சிலகாலம் அமைந்ததால் காலாங்கிநாதர் பேரானந்தம் அடைந்தார். பெருமகிழ்வு கொண்டார்.

    அந்த மலை 
    வந்த சித்தருக்குப் பிடித்துப்போனது.
    அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

    அவருக்குப் பிடித்த
    அந்த மலை சதுரகிரி.
    எவர்க்கும் பிடிக்கும் சதுரகிரி மலை.

    அன்றும் இன்றும் 
    என்றும் 
    அருவாய் உருவாய் அருவுருவாய் 
    எண்ணிலா கோடி
    சித்தர் பெருமக்கள் அருள்பாலிக்கும் மலையே சதுரகிரி.

    பதினெண் சித்தர்கள் பார்வையும் பாதங்களும்
    பதிந்த இடமே சதுரகிரி. 

    ஒருநாள்.

    காலாங்கிநாதர் 
    சதுரகிரி மலையில் 
    ஒரு தடாகம் கண்டார்.

    அருகில் 
    ஒரு புலி…. 
    கம்பீரம் பீறிட படுத்திருந்தது.

    அந்தப் புலி
    ஆன்மீகம் தவழும் சித்தரைக் கண்டு 
    உறும வில்லை. பாயவில்லை. 
    அமர்க்களமாய் பார்த்தபடி இருந்தது. 

    காலாங்கி நாதருக்கா தெரியாது….?!

    அது புலி அல்ல… 
    ஓர் ஞானப் புலி.
    புவி போற்றும் பேரொளி எனப் புரிந்தார்.

    புலி வடிவத்தில் இருக்கும் 
    சித்தர் அருகில் 
    காலாங்கி வந்தார்.
    காலடி தொழுதார்.

    மக்கள் தொந்தரவு தவிர்க்க 
    தவத் தன்மை
    கெடாதிருக்க
    இப்படி ஏதேனும் 
    வடிவம் எடுப்பது சித்தர்கள் வழக்கம்.

    புலிச் சித்தர் உருமாறினார். காட்சியளித்தார்.

    நிறைய
    உபதேசங்கள் செய்தார்.

    காலாங்கி நாதருக்கு
    சதுரகிரித் தாய் 
    ஆதி மனோன்மணி அருள் இருப்பதாய் அகமகிழ்ந்து வாழ்த்தினார்.

    மனம் நிறைந்து மறைந்தார்.

    அதன்பின் 
    காலாங்கி நாதர்
    மகா சித்தர் ஆனார்.

    இப்படித்தான் 
    ஒரு நாள்…
    ஓர் ஆமையைக்
    கண்டார்.

    அது ஆமை அல்ல… அதுவும் சித்தர் 
    என அறிந்து 
    தாழ் பணிந்தார்.

    சித்தரின் கருணையையும் அருளையும் 
    காலாங்கி பெற்றார்.

    பிறிதொரு நாள் 
    வராக வடிவில் 
    வாராது வந்த மாமணியாய் 
    வராக சித்தர்.

    யாருமே 
    யூகிக்க முடியாத அவரைக் கண்டுணர்ந்து வணங்கியதால் 
    யாருமே பெற முடியாத ஞான உபதேசங்களைப் பெற்றார்.

    யார் கண்களுக்கும் புலப்படாது 
    புனிதர் கண்களுக்கு மட்டும் தென்படும் 
    வராக சித்தர் 
    காலாங்கி நாதருக்கு புலப்பட்டது 
    குருவருள் திருவருள் அன்றி வேறென்ன !

    இப்படி 
    சிங்க சித்தர்
    வாமன சித்தர்
    பரசுராம சித்தர்
    ராம சித்தர்
    பலராம சித்தர்
    கிருஷ்ண சித்தர் குதம்பைச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் வேதாந்தச் சித்தர்
    தவ சித்தர்
    போகர் சித்தர்
    ஞான சித்தர் 
    கஞ்சிமுகிச் சித்தர் 
    என வாழையடி வாழையென வந்த சித்தர் திருக்கூட்டத்தை சதுரகிரியில் கண்டார். ஞானக் கல்வி பெற்றார்.

    பிற்பல வழிகளில் 
    பற்பல பயின்றார்.

    ஆதி சித்தரை,
    நவநாத சித்தர்களை,
    பதினெண் சித்தர்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

    அவர்களுடன் 
    கலந்து மகிழ்ந்தார்.

    கற்றார். பெற்றார்.
    கற்றதையும் பெற்றதையும் 
    வழங்கி மகிழ்ந்தார்.

    சதுரகிரி உச்சியில் 
    சித்தனுபவ உச்சத்தில் உலவி வந்தார்.

    ( சரித்திரம் தொடரும்.)
     

  • சிதம்பரம் கோயிலின் ஆதிமூலர் திருமூலரே

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    திருமூலர் திவ்விய சரித்திரம் பாகம் – 4

     

    கருவூரார் செய்த 
    தங்க விக்கிரகத்தில் சிக்கல் வந்ததும்
    நடந்ததைச் சொல்லி கருவூராரைக்
    கை காட்டினர் சிற்பிகள்.

    காவலர்கள் ஓடிச்சென்று கருவூராரைப் பிடித்து வந்தனர்.

    "சிறையில் தள்ளுங்கள்" அதிரடித் தீர்ப்பை
    அரசன் தந்தான்.

    திருமூலர் பெருமான் பிரசன்னமானார்.

    கூடவே சீடர்கள்.
    அவர்கள் வசம் மூட்டைகள்.
    அவை நிறைய 
    தங்கத் துகள்கள்.

    " மன்னா….
    கருவூரான்..
    என் மாணவன்.
    அவனையா சிறையில் வைத்தாய்?"

    "மாபெரும் 
    மோசடிக்குத் தண்டனை….. சிறைவாசம்."
    கோபத்தின் உச்சியில் கத்தினான்
    மன்னன் உறுதியாக.

    "மன்னர் மன்னா… தெய்வச்சிலையாகச்
    செய்து 
    வணங்க வேண்டியவனைச் 
    சிறைப்படுத்தி விட்டாய்..

    இது பெரும் பாவம்…

    உனக்குத் தெரியுமா ?

    சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் 
    செய்ய முடியாது. 
    செம்பு கலந்தாலே 
    வடிவம் கைகூடும்.

    மேலும்….."
    மெல்லிய குரலில் சொன்னார் மூலர்.

    "சுத்தத் தங்கம் கொடுக்கும் ஒளி 
    நாளாக நாளாக பார்ப்போர் 
    பார்வைத் திறனை பாழ்படுத்திவிடும்…."

    பின் 
    உரத்துச் சொன்னார்.

    "நீ கொடுத்த தங்கத்தை தந்துவிடுகிறேன்.
    என் மாணவனை விடுதலை செய்….

    இதோ…
    மாற்றுத் தங்கம்.
    அதிகமாய் வேண்டுமானாலும் தருகிறேன்."

    தராசுத் தட்டில் 
    விக்கிரகம் வைக்கப்பட்டு ஈடான தங்கமும் நிறைக்கப்பட்டது. 

    "உன் தங்கத்தை 
    எடுத்துக் கொள்…
    என் தங்கத்தை
    என்னிடம் தா…"

    வேகமாய் 
    நடராஜ விக்கிரகத்தை எடுத்தபடி 
    கிளம்பத் தயாரானார் திருமூலர்.

    அவரது ஆற்றல் கண்டு மிரண்டு போன அரசன் திருமூலரின் பாதம் பணிந்தான்.

    கண்ணீர் சொரிந்து காலடி தொழுதவன் கருவூராரை விடுவிக்க கட்டளை இட்டான்.

    சிறையில் 
    பூட்டிய பூட்டு 
    பூட்டியபடி இருக்க அறைக்குள் 
    கருவூராரைக் காணவில்லை.

    "சீடனைத் தா…."
     உரத்த குரல் கொடுத்தார் .

    மன்னன் பதில் ஏதும் இல்லாமல் பரிதவித்தான்.

    தயங்கியபடியே காவலர்கள் சொன்னார்கள்.

    "அரசே…… 
    அவரைக் காணவில்லை"

    "அப்படியா…"

    கலகலவென்று 
    சிரித்த மூலர் 
    "கருவூரானே …..
    நீ எங்கே போனாய் ?எல்லோரும் 
    பார்க்கும்படி 
    தரிசனம் தா….."

    "குருவே…
    தங்கள் திருவருளால் இங்கேதான் இருக்கிறேன் …"
    கூறியபடி 
    திருவடிவு தாங்கியபடி வெளியே வந்தார் 
    கருவூர் சித்தர்.

    அரசன் 
    சிற்பிகள் 
    காவலர் 
    அத்தனைபேரும் வணங்கினர் 
    இரண்டு
    சித்தர் பெருமக்களையும்.

    அம்பலவாணராம் நடராஜர் சிலையை அரசனிடம் தந்தார் திருமூலர் பெருமான்.

    கோயில் அமையவேண்டிய முறை, தெய்வத்திற்கு உரிய இடங்கள்,
    பிரதிஷ்டை முறை,
    பூசை வகைகள் 
    என கோயில் இலக்கணம் சொன்னார் கருவூரார்.

    விடைபெற்றனர் ஈடில்லாத 
    சித்தர் பெருமக்கள் இருவரும்.

    பின் எத்தடையும் இல்லாது 
    கோயில் உருவானது.

    நடராஜர் விக்கிரகம் பேரருளோடு அருள்பாலிக்க ஆரம்பித்தது.

    கடைசியில் சோழமன்னன் 
    முற்றும் துறந்து
    முனிவனானான் 
    என்பது 
    கொங்கணர் 
    வடித்த காவியத்தில் முடிவாய் இருக்கிறது.

    சிதம்பரம்
    ஆதிமூலர் சன்னதியில்
    லிங்க வடிவில் இருக்கும் திருமூலரைத்
    தரிசிக்க –  தியானிக்க எண்ணியதெல்லாம் எண்ணியவாறு கைகூடும் என்பதே 
    திருமூலரின் சிறப்பு.
    அருட்தன்மை.

    திருமூலரின் 
    கிருபை 
    பொருந்திய இடமாக காட்டுமன்னார்கோயில் அருகே 
    திருநாரையூர் 
    பொல்லாப் பிள்ளையார் கோயிலைச் சொல்கிறார்கள்
    சித்தர் தேடல் 
    கொண்ட சிலர்.

    தமிழ்நாட்டில் 
    மூலனூர் 
    என்ற பெயரில் இருக்கும் அத்தனை ஊர்களும் திருமூலரின் 
    கிருபை பெற்ற தெய்வத்தமிழ் தலங்களே.

    சதுரகிரி மலையில் இன்றும் 
    உலா வருகிறார் திருமூலர்.

    அங்கு அவரது 
    தவக் குகை 
    ஆழ்நிலைத் தவத்திற்கு அடித்தளமாய் 
    இன்னமும் இருக்கிறது.

    குளித்தலை அருகே ஐவர்மலை என்னும் இரத்தினகிரீஸ்வரர் மலையில் 
    மன்னன் வீரசேனன் உருவில் இருந்த திருமூலரின் 
    சொரூப சமாதி முகம் இருப்பதாகவும்
    அங்கு தான் 
    திருமூலரைத் 
    தரிசித்ததாகவும் 
    போகர் 
    தனது சப்தகாண்டத்தில் 12 பாடல்களில் பரவசத்தோடு குறிப்பிடுகிறார்.

    'வழியுடனே இரத்தினகிரி மேலே சென்றேன்.
    வாகுடனே இரத்தின மென்ற கிரியிற்கண்டேன்.
    அழியாத ஆஸ்தான கோட்டை கண்டேன்.
    அதற்கப்பால் திருமாலின் கோயில் கண்டேன்.'

    என்கிறது 
    போகர் பாடல்.
    இதில் கூறப்படும் திருமாலின் கோயில் ஸ்ரீரங்கம் என்பது 
    ஓர் ஆன்மீகக் கணிப்பு.

    இன்னொரு பாடலில்
    'சமாதி இடம் கொண்டு சென்றார்
    நிலையான 
    இரத்தினகிரி மலையோரம் தான்..'
    என்கிறார் 
    போகர் பெருமான்.

    திருமூலரைத் தரிசித்து அருள் பெற உகந்த இடம் இரத்தினகிரீஸ்வரர் மலை என்பது 
    இக்குறிப்பு உணர்த்தும் போகர் அனுபவம்.

    9 மனைவிகளோடு 
    90 மக்கள் செல்வங்களோடு வாழ்வாங்கு வாழ்ந்த திருமூலர் 
    புரட்டாசி அவிட்டம் மூன்றாம் பாதத்தில் அவதரித்தார்.

    அவரை வழிபடத்
    தக்க நாள் அது.

    திருமூலரின்
    திருமந்திரம்
    தமிழுக்கும்
    சைவத்திற்கும்
    சித்தர் உலகுக்கும் ஆன்மீகத் தேடலுக்கும்
    கிடைத்த 
    ஒரு பொக்கிஷம்.

    திருமூலரே
    சித்தர் உலகிற்கு கிடைத்த
    மூலவர் தானே !

    (திருமூலர் திவ்விய சரித்திரம் – நிறைவு)