
– "மாரி மைந்தன்" சிவராமன்
ஆடு மேய்ப்பது
அவன் தொழில்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் பசுமை போர்த்திய சூழலில்
அவன் வாசம்
ஒரு குடிசையில்.
இன்முகம் ஒன்றே அவன் வெளிப்பாடு.
ஆடுமாடுகளை மேய்க்கும் அவன் ஒருநாளும் ஐம்புலன்களை
மேய விடவில்லை.
புலன்களை அடக்கியதும் அடக்கத்துடன் இருந்ததும்
கூடிய விரைவில்
ஒரு நல்ல பலனை தந்தது .
வான் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த
ஒரு மகா ஞானியின் கண்களில்
அவன் பட்டான்.

'ஆடுமேய்க்கும் இடையனிடம்
இப்படி எப்படி ஞானத்தேடல் ?' மகாசித்தர் சிந்தித்தார்.
'இப்படிப்பட்ட சீடனைத் தேடி எப்படிப்பட்ட இடமெல்லாம் அடைந்தோம் '
என புன்னகைத்தார்.
சித்தர்
ஒருவரை உருவாக்கும் இறை பணிக்காக இறங்கி வந்தார்.
இப்படிச் சீடனைத் தேடி குரு வருவது
சித்தர் இயல்பு.
வந்தவரை வணங்கி தொழுது
நின்றான்.
அந்த ஆட்டிடையன் தரையில்
தர்ப்பைப்புல் போட்டு
சிம்மாசனம் தந்தான்.
ஓடிப்போய் குட்டிகளோடு
முட்டி நிற்கும் ஆடு ஒன்றின்
முலைப்பால்
கொணர்ந்தான்.
ஏற்கனவே அகமகிழ்ந்திருந்த மகாபுருஷர் மனம் நெகிழ்ந்து போனார்
உளம் கனிய
உபசரிப்போக்கு எல்லாம் தேடி வரும் எனும் வரம்
மெய்ப்படத் தொடங்கியது.
"தம்பி….
நீ ஆடு மாடு
மேய்க்க வந்தவனல்ல. நீ மேய்ப்பவன்.
ஆம்…
உலக மக்களை மேன்மை கொள்ள மேய்ப்பவன். மேய்ப்பன்.
நல்ல மேய்ப்பன்.
நோயால் சாய்ந்து போனவர்களை மருந்தால்
ஓய்ந்து போகாதிருக்க செய்பவன்.
விதிவசத்தால் சோர்ந்துபோன மக்களை சோதிடத்தால்
கூர்ந்து பார்க்க வைப்பவன்.
நிமிர்ந்து வாழ வைப்பவன்
என பீடிகை போட்டார்.
இடைச் சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை.
ஆடும் மாடும் அழைக்கும்
'அம்மா '
என்கின்ற
ஓசையைத் தவிர
ஏதும் அறியாதவனுக்கு மகான் சொன்னது எதுவும் புரியவில்லை.

ஆனால்
கேட்ட வண்ணம் இருந்தான்.
ஏதேதோ சொன்னார். கொஞ்சம் புரிந்தது.
இன்னும் சொன்னார். தெளிவுறச் சொன்னார்.
புரிந்தது.
அத்தனையும் புரிந்தது.
வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் மற்றும்
இன்ன பலவும்
அந்த சிறுவனுக்கு ஞானமாய் அருளினார்.
ஞான அமுதாய் ஊட்டினார்.
ஆட்டுப்பால் தந்தவனுக்கு ஞானப்பால் தந்தார்.
"இடைக்காடா…!" இப்படித்தான் அழைத்தார் மகாபுருஷர்.
ஓ .. அதுதான்
அவன் திருநாமம். அவர் சூட்டிய நாமகரணம்.
"படிப்பதும் கேட்பதும் யார்க்கும் எளிதே.
கொஞ்சம் அறிந்துகொண்டு எனக்கு எல்லாம் தெரியும்
என வாய்ப் பந்தல் போடுதல்
யாருக்கும் வழக்கம்.
மாற்று.. அதை மாற்று.
நான் சொல்வதை முதலில் நீ கடைப்பிடி.
உன் வாழ்வு சிறக்கும்.
உன்னால்
உலகம் சிறக்கும்.
எளிமையாய்
உலக வாழ்க்கையை ரகசியமாய் உணர்த்தியவர் உச்சிமுகர்ந்து
இடையரை
இடைக்காரரை
இடை அணைத்து இறுகத் தழுவினார்.
என்ன அதிசயம் ?!
கடையனாய்
ஆடு மேய்த்து வந்த
இடையன்
நாடு போற்ற உதித்த இடைக்காடரானார்.
மகாபுருஷர்
சுடர்வித்த
ஞானதீபம்
ஆயிரம் கோடி சூரியனாய்
ஒளியூட்டத் துவங்கியது.
வந்த வேலை
முடிந்த நிறைவோடு வான் பறந்தார்
வந்த மகான்.
மகா புருஷர் விடைபெற்றார். இன்னொரு
மகாசித்தர் உதயமானார்.
ஆடுகள் மாடுகள் மேய்க்கும் வேலை தொடர்ந்தது.
மகா சித்தரின் உபதேசத்தால்
ஆடுகள் மீதும்
மாடுகள் மீதும்
அன்பு அதிகரித்திருந்தது. ஆன்மநேயம் தழைத்திருந்தது.
மனிதநேயம்
முழுநேர
சிந்தனையாக இருந்தது.
இப்படித்தான்
ஒருநாள்
ஆடு மேய்த்தபடி
ஆன்ம விசாரணையில் ஆழ்ந்திருந்தார் இடைக்காடர்.
"இதென்ன அநியாயம்?
மனித உறவு என்பதே உதட்டளவாய்
அருகி வருகிறதே !
உள்ளம் கலப்பது வெறும் பேச்சளவாய் குறுகி வருகிறதே !
குணம் கெட்ட உறவால்
குற்றங்கள் மிகுகிறதே!
பக்தி வேசமாகி
போலிகள் ஆட்டம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிறதே !
நம்பிக்கைத் துரோகம் நயவஞ்சகம்
நர்த்தனம் ஆடுகிறதே !' கவலை கொண்டார் இடைக்காடர்.
"இதன் விளைவு
எதில் முடியும் ?
மக்கள் மனம்
பாழானால்
மழை நிற்கும்.
வானம் விசனப்பட்டு தன்னிலை மறக்கும்.
பஞ்சமே பஞ்சமின்றி தஞ்சம் புகும்."
இடைக்காடர்
கவலை கொண்டார்.
மகாபுருஷர் கற்றுத்தந்த ஜோதிடக்கலை கவனத்தில் வந்தது.
கட்டமிட்டார்.
கவலை
மிகக் கொண்டார்.
'12 ஆண்டுகள்
கடும் பஞ்சம் '
கணிப்பு கதறியது.
இடைக்காடர்
மனம் பதறியது.
" ஐயோ…
ஆடு மாடுகள் என்செய்யும் ?
மக்கள் என் செய்வர் ? " துடித்தார்.
துவண்டார்.

விடிவெள்ளியாய் அக்னிப் பிழம்பொன்று அகத்தில் உதித்தது.
அடுத்த நாள் முதல் செயலில் இறங்கினார்.
ஆடுகளுக்கு
எருக்கம் செடிகளை
உணவாகக் கொடுத்து பழகச் செய்தார்.
ஆங்காங்கே சுவரெழுப்பி
வரகரிசி நிரப்பி
சேறு கொண்டு
பூசி வைத்தார்.
காலம் நகர்ந்தது.
கணித்தபடி
பஞ்சம் நுழைந்தது.
மரம் செடி கொடிகள் மட்டுமல்ல
மக்களும்
மடியத் தொடங்கினர்.
இடைக்காடர் மட்டும் பஞ்ச பாதிப்பு சிறிதுமின்றி
காலம் தள்ளினார்.
எப்படித் தெரியுமா ?
பஞ்சகாலமெனினும் காட்டில்
எருக்கும் செடிகளுக்கு குறைவிருக்காதே.
அவை
பூத்துக் குலுங்கின.
அவற்றை உண்டு பழக்கப்பட்டிருந்த
ஆவினங்கள் பசியாறின.
எருக்கம்பூ
உண்ட உடம்பை
அரித்துத்தள்ளுமே !
ஆடுகளும் மாடுகளும் அரிப்பு நீங்க
சுவற்றில் உரசி உரசி சுகம் கண்டன.
சுவற்றில் உரசலால் உள்ளே இருந்த வரகரிசியை
வெளிக் கொணர்ந்தன.
அவற்றை எடுத்து இடைக்காடனார்
அமுது ஆக்கினார். ஆட்டுப்பாலில்
கலந்து குடித்து
பசி ஆற்றினார்.
இடைக்காடரின்
இந்த யுக்தி அக்கம்பக்கத்தில்
பரவிய போதும் பிறரால் போற்ற முடிந்ததே தவிர அவர்தம்
வயிற்றுப் பசி
ஆற்ற முடியவில்லை.
ஒருகாலத்தில் பைத்தியம் என பரிகசித்தித்தவர்கள்…. வரகரிசியை சேற்றோடு கலந்து சுவர் எழுப்பிய போது இடைக்காடன் புத்தி எடக்கு மடக்கு ஆகிவிட்டது
என கேலி பேசியவர்களில் செத்தவர் போக
மீதம் இருந்தவர்கள்
ஓடோடிவந்தனர்.
இடைக்காட ரை
இரு கை கூப்பி வணங்கி நின்றனர்.
"சுவாமி …
பஞ்சத்தால் சாவது ஒருபுறம் இருக்க இப்போது
தாகத்திற்கு
தண்ணீர் இல்லை. எங்களின் சாவு நிச்சயம் ….
அதுவரை தண்ணீராவது கொடுத்து உதவுங்கள்."
காலைப் பிடித்தனர்.
ஞானப்பழம்
கனிந்து உருகினார்.
"வாருங்கள்…." அவர்களை
அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் கூடி
குழி ஒன்றைப்
பறிக்கச் செய்தார்.
'வந்தது பாரு
ஊற்றென…'
ஊற்றுநீர் பீறிட்டது.
திரண்ட மக்கள்
தாகம் நீங்கி
வாழ்த்தி வணங்கினர்.
"சுவாமி …
நீங்கள்
எங்கள் குலசாமி" கூக்குரலிட்டனர்.
ஊர்க்காரர்களின் வாழ்த்தொலிகள்
மேல் உலகிலும் எதிரொலித்தது.
அது
நவக்கிரக நாயகர்களின் கூட்டத்தில்
விவாதமானது.
"பஞ்சத்தை ஏற்படுத்தியது நாம். மக்களின்
பாவச் செயல்களாலும் ஆள்பவர்களின் தவறுகளாலும் தீர்மானிக்கப்படுவது பஞ்சம்.
அதை மாற்ற
இவர் யார் ?" கோபப்பட்டனர்
கிரக நாயகர்கள்.
அவர் மகத்துவமிக்க மகா புருஷரால் ஞானம் பெற்ற
ஓர் ஞானபுருஷர்" என்றார் சூரியனார்.
"இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்று ஒரு பேச்சு இருக்கிறது"
என்று ஒரு மெல்லிய குரல் எழுந்தது.
அது சந்திரனின் குரல்.
"இடைக்காடருக்கு ஞானம் தந்த மகாபுருஷர்
யார் தெரியுமா…?
போகர்….!"
ஒலித்தது
ஓர் ஓங்கிய குரல் ஆணித்தரமாக. அக்குரலுக்குச் சொந்தக்காரர் குருபகவான்.
"அந்த மகானை
நாமும் பார்க்கலாம்… நியாயம் கேட்கலாம்.." சனிபகவானும்
புத்தி நாயகன் புதனும் சுகநாயகன் சுக்கிரனும் வெற்றி நாயகன் செவ்வாயும்
தங்கள் அபிப்பிராயத்தை
ஆழமாய் சொல்லினர்.
'கேட்போம் நியாயம் ' கூட்டம் முழுமனதாக தீர்மானித்து
பூமிக்கு உடன்
விஜயம் செய்தது.

"வாருங்கள்.. நவநாயகர்களே.." வரவேற்றார் இடைக்காடர்.
சூரியன், சந்திரன் செவ்வாய், குரு
புதன், சுக்கிரன்,சனி ராகு, கேது
என ஒன்பது நீதிமான்களும் புன்னகைத்து அமர்ந்தனர்,
அவரவர்
இருக்க வேண்டிய
அமைப்பில் அமர்ந்தனர்.
"மகானே…
எங்கள் சந்தேகம்
நீக்கப் பெற
இங்கு வந்துள்ளோம்.." சூரியன் ஆரம்பித்தார்.
"எங்கள் சக்தியை தாங்கள் மீறி விட்டீர்கள்…"
சுக்கிரன்
குற்றம் சொன்னார்.
"ஆம்..பஞ்சம் என்பது நாங்கள் நிர்ணயித்தது.
அதை நீக்கி விட்டீர்கள்.."
செவ்வாய் சினந்தார்.
"ஈசனே ஒருமுறை எங்கள் அனுமதி இன்றி செயல்பட்டு அவனே இயங்காமல் போய்விட்டான் தெரியுமா ?"
ராகு-கேது
கோபமாய் வெடித்தனர்
"சர்வசக்தி படைத்த எங்களை மீறி
ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் ?"
சந்திரன்
அமைதியாய் கேட்டார்.
நவகிரக நாயகர்கள்
இப்படிக்
கேட்டார்களே தவிர மகாபுருஷரிடம் கொஞ்சம்
பயம் இருந்தது.
பேச்சில் நிறைய
பணிவு இருந்தது.
கனிவோடு அவர்களைப்
பார்த்த இடைக்காடர்
"பதிலுக்கு முன்னர்… உபசரிப்பு.."
என்றார்.
வரகரிசி
ஆட்டுப்பால்
விருந்து.
உண்டனர் நவநாயகர்கள்.
உண்ட களைப்போ வந்த களைப்போ
சில நொடிகளில் உறங்கிப் போனார்கள்.
இடைக்காடர்
அவர்கள் துயிலும் அழகை ரசித்தபடி ஜோதிடக் கலையின் ரகசியத்தை ருசித்தபடி
கிரக நாயகர்களை நகர்த்தி இடமாற்றி
அமைத்தார்.
"இனி பிரச்சினையில்லை.. பஞ்சம் வராது."
அதற்கேற்ற
கிரக அமைப்பை சரிசெய்து விட்டு திருப்தியுடன் நவநாயகர்கள் விழித்தெழக் காத்திருந்தார்.
இடைக்காடர் அமைத்த கிரகநிலை காரணமாய்
வெளியே மழை
மாமழையாய் பொழியத் தொடங்கியது
மழை தந்த
இளம் குளிரும்
அந்த குளிர் சூடி ய
மண் மணமும்
நவ நாயகர்களை விழித்தெழச் செய்தன.
கண் விழித்த நாயகர்கள்
முதலில்
உறங்கிய ரகசியம் புரிபடாமல் திகைத்தனர்.
அமைதியின் சொரூபமாய் இடைக்காடர் அமர்ந்திருக்க ஆனந்தம் தாண்டவமாடியது அக்குடிலில்.
மகா புருஷரின் மகாத்மியம்
கிரக நாயகர்களுக்குப் புரிந்தது.
வெளியே மழை வெறித்தனமாய் பெய்து
கொண்டிருந்தது.
ஒரே நாளில் பஞ்சம் பறந்தோடிவிடும் பெருமழை.
உலகம் கண்டிராத பேய்மழை.
மன்னிக்கவேண்டும்… நாயகர்களே…
மக்கள் துயர் கண்டு மனம் பொறுக்காமல் உங்கள் இடங்களை மாற்றிவிட்டேன்.
பஞ்சம் தவிர்த்துவிட்டேன்"
"அபசாரம் ! ஐயனே.…
முக்காலம் உணர்ந்த உங்கள் குணம் அறியாது
செயல் அறியாது பிறவியின் நோக்கம் அறியாது
நாங்கள் தான் தவறிழைத்து விட்டோம்…. ஆசீர்வதியுங்கள்.
உயிரினங்களின் மீது தாங்கள் காட்டும் அன்பும் பரிவும் வழிபடத்தக்கது.
ஆன்மநேயம்
உய்வுற
வழியாய்
சொல்லத் தக்கது."
நவகிரக நாயகர்களுக்கு
அன்று ஓர்
அதிர்ஷ்ட நாள்.
சித்தபெருமானின் ஆசி
நவகிரக நாயகர்களுக்கு ஒருசேரக் கிடைத்தது.

அவர்கள் வணங்கியபடி வாழ்த்தியபடி விண்ணுலகம் பயணித்தார்கள்.
மழைப்பொழிவு நிகழ்த்திய புண்ணியரின் புகழ் ஊரெங்கும் பரவியது.
ஆண்டி முதல்
அரசர் வரை இடைக்காடரைத்
தேடி வந்து
தொழ ஆரம்பித்தனர்.