Muruga nayanar history

– "மாரி மைந்தன்" சிவராமன்

காவிரிசூழ் நாடான
சோழ நாட்டில் திருப்பூம்புகலூர் என்ற திருத்தலம்.

இச் சிவதலத்திற்கு திருப்புகலூர் என்ற பெயரும் உண்டு.

மூவர் தேவாரம் 
பெற்ற இடம். 
அப்பர் சுவாமிகள் 
முக்தி பெற்ற தலம். சுந்தரமூர்த்தியாருக்கு இறையனார் செங்கல்லைப் பொன்னாக்கிக்குத்
தந்த தலம் 
எனப் பற்பல
 பெருமைகளை கொண்ட
தெய்வாம்சம் நிறைந்த சிவத் தலமே திருப்புகலூர்.

திருப்புகலூரின் திருப்புகழைச் சேர்க்க 
தனி கோயில் கொண்டிருக்கும் 
சிவனின் திருநாமம் வர்த்தமானீஸ்வரர்.

சோழ நாட்டைப் போலவே இக்கோயிலும் 
நீர் சூழ்ந்திருக்கும் பெருமை கொண்டது.

அங்கு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் சிவனடியார் கூட்டம் ஏராளம்….  ஏராளம். அவர்கள் 
நெற்றிமுதல் 
உடலெங்கும் பூசும் திருநீறு 
தாராளம்….  தாராளம். 

திருப்புகலூரில் வாழ்வாங்கு வாழ்ந்த சிவனடியார்களில் முதன்மையானவர் 
முருக நாயனார்.

அவர்
அவதரித்தது மறையோதும் 
மறையோர் குலம்.

சிவத் தொண்டில்
குறிப்பாக சிவபூசையில்
லிங்கத் திருமேனியைத் தொட்டுத் தொடும்
அர்ப்பணிப்பு கொண்ட அந்தணர் குலம்.

முருகநாயனார் நான்மறைகளை 
நன்குணர்ந்தவர்.

ஞான மார்க்கத்தில் எல்லை கண்டவர்.
எல்லையில்லாதவன்
ஞான எல்லைக்குள் தியானிப்பவர்.

அவரது சிவப்பணி அருமையானது.
நறுமணங் கமழும் 
பெருமை கொண்டது.

இறையனாருக்குப் 
பல வண்ண மலர்கள் பறித்து காலத்திற்கும் தருணத்திற்கும் ஏற்றபடி மாலை கட்டி 
உரிய நேரத்தில் 
உரிய மாலைகளை வழங்குதலே 
முருக நாயனாரின் 
ஒரே சிவப்பணி.

வேறு எதுவும் செய்யார். இறையை 
வேறு எதுவும் வேண்டார்.

எதுவும் வேண்டுதலற்ற பிரார்த்தனையே
அவரது சிவவழிபாடு.

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் துயில் எழுவார்.

சிவ நாமம் 
கூறியபடியே நீராடுவார். தூய திருநீறு அணிவார். சந்தியாவந்தனம் செய்வார்.

பலவித பூக்கூடைகளோடு வண்ண மலர்களும் வாசனை பூக்களும் தெய்வீக இலைகளும் புதிதாய் பூத்திருக்கும் 
நந்தவனம் செல்வார்.

முத்து கிளத்தல் என்ற சூத்திரப்படி முதலில்
அழகுப் பூக்களை 
மனதார ஓதுவார்.

வண்ண மலர்களை வலிக்காமல் பறித்து தனித்தனி கூடைகளில்  அடிபடாமல் சேர்ப்பார்.

அலர்ந்தது
பழமையானது
உதிர்ந்தது
காற்றில் அடிபட்டது
ஆடையிலும் கையிலும் எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் பட்டுத் தெறித்தது 
புழுக்கடி
சிலந்தி நூல்
மயிர், எச்சம் பட்டது போன்ற மலர்களில்
ஒன்றினைக் கூடத் தொட்டுப் பறிக்க மாட்டார்.

பிறகு 
பறித்த மலர்களைத் 
தனி இடத்திற்கு 
எடுத்துச் சென்று 
பூமாலை தொடுப்பார்.

அதன் பின்னர் 
மாலைகளை எடுத்துக்கொண்டு வர்த்தமானீஸ்வரர் சன்னதி சென்று 
மனதார பஞ்சாட்சர மந்திரம் சொல்லி மாலைகளை மாயனாருக்குச் சூடி
சிவ ஆகமங்களில் சொல்லியவாறு அர்ச்சனை செய்து மனமுருகப் பூசிப்பார்.

முருகநாயனார் மலர்களைப் பறிப்பதும் தனித்தனி கூடைகளில் சேகரிப்பதும்
பின் 
மாலைகள் தொடுப்பதும் அவற்றை 
ஆதி முதல்வனுக்கு முறையாகச் சூட்டி 
மறை ஓதுவதும்
சிவபிரானே புறத்தே
காட்டிக் கொள்ளாது
அகத்தே கிறங்கிப் போகும்
சிவநெறிச் செயல்கள்.

பஞ்சாட்சர மந்திரம் 
என்னும் 
மகா மந்திரம் 
உச்சரித்தபடி 
முற்றும் உணர்ந்தோனை மூல நாதனைப்
பூசிப்பது 
பிறப்பு இறப்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் 
மகிமை கொண்டது என்பது மறைகள் சொல்லும் 
மரணமில்லாப் பெருவாழ்விற்க்கு எளியவழி.

மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது 
சச்சிதானந்த மயமானது என்பர் ஆன்றோர்.

சத்து என்பது நிறம்.
சித்து என்பது வடிவு. ஆனந்தம் என்பது மனம். இவையே சச்சிதானந்தம் என்பதே இதன் விளக்கம்.

பூக்களைக் கொண்டு பரம்பொருளை வேண்டினால் 
பூவினுள் மகரந்தம் பொருந்துவது போல் சிவனுள்ளே 
சிவமணம் கமழும் என்பது ஓர் ஆன்மிகக் குறிப்பு.

முருக நாயனாரின் 
மலர்த் திருப்பணி மறையோன் முதல்வனின் மனம் நெகிழும் அளவிற்கு மணம் பரப்பி இருக்கும்.

மந்தாரம் 
கொன்றை 
செண்பகம் முதலான
கோட்டுப் பூக்கள் என்னும் மரத்தில் வளரும் பூக்கள்.

நந்தியாவட்டம் 
அலரி 
வெள்ளெருக்கு 
கரந்தை 
தும்பை 
ஆகிய நிலப் பூக்கள்.

மல்லிகை 
முல்லை 
சம்பங்கி 
ஜாதி 
போன்ற கொடிப் பூக்கள்.

தாமரை 
நீலோற்பவம் 
செங்கழுநீர் 
உள்ளிட்ட நீர்ப் பூக்கள்.

முதலான 
நான்கு வகைப் பூக்களை நாசிக் காற்று கூட 
பட்டு மாசு படாமல்  
தன் தலைக்கு மேல் 
உயரப் பிடிக்கும் தண்டின் மேல்முனையில் 
கட்டப்பட்ட கூடையில் 
மென்மையாகப் பறித்து விழச் செய்வார்.

கோவை மாலை 
இண்டை மாலை 
பக்தி மாலை 
கொன்றை மாலை 
சர மாலை 
தொங்கல் மாலை 
என்று ஆறு வகையாக  திருமாலைகள் அமைத்து அந்தந்த காலத்திற்கேற்றபடி தொகுத்துக் கட்டி 
அதற்குரிய நேரத்தில் இறைக்குச் சாத்தி ஏகாந்தம் கொள்வார்.

மலர்களை எடுக்கும்போதும் தொடுக்கும்போதும் ஐந்தெழுத்தை உச்சரிப்பார்.
அர்ச்சனை 
புரியும் போது 
தேவாரம் பாடுவார்.

ஆகம விதிப்படி பூஜிப்பதையும் 
இடைவிடாது 
பஞ்சாட்சர ஜெபம் செய்து
கொண்டிருப்பதையும்   
அன்றாடம் கண்டு அகமகிழ்ந்த இறையனார்
முருக நாயனாரை நிரந்தரமாகத் தன்னருகே வைத்துக் கொண்டு
அழகு பார்க்கத் தீர்மானித்தார்.

அதற்கு ஏற்ற நாள் அருளாளர் அனுகிரகத்தால் 
அதி விரைவில் வந்தது.

தன்னேரில்லா இறைவனை வணங்கி வாழும் அருளாளர்கள் திருப்புகலூர் அடிக்கடி
வந்து செல்வது உண்டு.

அவர்களை வணங்கி தனது திருமடம் அழைத்துச் சென்று 
அமுது படைத்து ஆசீர்வாதம் பெறுவது முருகநாயனாரின் வழக்கம்.
அவரது பிரதிபலன் எதிர்பாராத
சிவத்தொண்டு கூட.

அப்பர் பெருமான் திருநீலநக்கர் சிறுதொண்டர் போன்ற பெரும் அருளாளர்கள் திருப்புகலூர் வந்தபோது முருகநாயனார் அவர்களை 
உபசரித்த விதம் அடியார்களிடையேயும் நாயன்மார்களிடையேயும் ஏகப் பிரசித்தம்.

சிவஞானப் பாலுண்ட திருஞானசம்பந்தர் சுவாமிகள் 
ஒருமுறை 
திருபுகலூர் எழுந்தருளினார்.

முருகநாயனார் 
பிறவிப் பயன் அடைந்ததாக மகிழ்ந்து ஞானசம்பந்தரை அன்பாலும் பண்பாலும் அவரடி தொழுவதிலும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

மனம் நிறைந்த ஞானசம்பந்தர் 
அதுநாள் தொட்டு 
முருக நாயனாரின்
கெழுதகை நண்பரானார்.

அந்த இனிய நட்பு 
திருஞானசம்பந்தர் 
வெவ்வேறு தலங்கள் சென்றபோதும் குறையாமல் நாளும் வளர்ந்து வந்தது.

இதற்கு 
முக்கிய காரணம் 
முருக நாயனாரின் சிவபூசை பலனே.

பின்னாளில் 
ஒரு நற்செய்தி 
ஞானசம்பந்தரிடமிருந்து 
முருகநாயனாருக்கு அழைப்பாக வந்தது.

அது 
திருஞானசம்பந்தருக்கு நடைபெறவிருந்த 
ஞாலம் போற்றும் திருமணம்.

திருஞானசம்பந்தரின் அழைப்பை ஏற்று முருகநாயனார் 
திருமணம் நடக்கவிருந்த திருநல்லூர் பெருமணம் சென்றடைந்தார்.

அந்தத் 
திருமணத்தின் 
போது தான் 
ஆன்மிக உலகம் 
அதற்கு முன்னரும் பின்னரும் 
இன்று வரை காணாத
ஓர் அற்புதம் அரங்கேறியது.

திருமண வேளையில் தோன்றிய
தென்னாடுடைய
பார்வதி மணாளன்
திருமண விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரையும்
சிவஜோதியில் 
கலக்கச் செய்து
முக்தி தந்தார்.

அன்று அவ்விதம் 
முக்தி பெற்ற –
திருமணம் காணவிருந்த மணமகன் திருஞானசம்பந்தரோடும் 
மணமகளோடும் 
முருக நாயனாரும் சிவனோடு ஐக்கியமானார்.

உமையிடம் 
ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரும்
உமையவரிடம்
மலர்களால் நெருங்கிய
முருக நாயனாரும் அவர்களிருவரின் தயவால்
மணவிழா காண வந்திருந்த
அத்தனை பேரும்
முக்தி பெற்றதன்
பின்னணி
வேறு யாருக்கும் சாத்தியமில்லாதது..

'யஜுர் வேதத்தின் 
நடுக் காண்டத்தில் நடுப்பகுதியில் உள்ள 
திரு ருத்திரத்தின் 
நடுவில் இடம்பெறும்
பஞ்சாட்சர மந்திரம் என்னும் மகா மந்திரத்தை இடையறாது 
துதி செய்பவர் 
இறை ஜோதியில்  கலப்பர்'
என்னும் மறைச்சொல் 
முருக நாயனார் 
முக்தி பெற்றதால் நிரூபணம் கண்டது.

'முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும்  அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

திருச்சிற்றம்பலம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *