Tag: Nayanar

  • Perumizhalai kurumba nayanar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மிழலை நாடு.

    இது 
    பாண்டிய நாட்டில் 
    ஓர் உள்நாடு.

    வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்த பெருமிழலை 
    மிழலை நாட்டின்
    தலை நகரம்.

    மாந்தோப்புகளும் தென்னை பலா 
    பாக்கு முதலான சோலைகளும் நிறைந்த
    பசுஞ்சூழல் 
    நகரே பெருமிழலை.

    நீதிநெறி தவறாத மக்களையும் 
    எப்போதும் திருவெண்ணீற்றின் தீர்க்கமான ஒளியையும் கொண்ட 
    மிழலை நாட்டில் 
    ஒரு குறுநில மன்னர்.

    குறும்பர் என்னும் 
    குறுநில மன்னர் குடியில் பிறந்ததால் 
    'குறும்பர்' என்னும் 
    மரபுப் பெயரும் 'பெருமிழலை' என்ற ஊரின் பெயரும் இணைந்து 
    பெருமிழலைக் குறும்பர் என அழைக்கப்பட்டார்.

    சிவ பக்தியிலும் சிவனடியார்களைப் பேணிக்காத்து உபசரிப்பதிலும்
    நிகரற்றவராக விளங்கினார் பெருமிழலையார்.

    திங்களை 
    முடியில் தரித்த 
    சங்கரரின் அடியார்களுக்கு 
    உவந்த தொண்டுகளை அவர்கள் கூறுவதற்கு முன்பே குறிப்பறிந்து  தொண்டாற்றுவார்.

    சிவனடியார்கள் 
    ஆயிரம் பேர் வந்தாலும் அகமகிழ்ந்து 
    திருவடி தொழுது திருத்தொண்டாற்றி காணிக்கையாக செம்பொன் வழங்கி ஆனந்தம் அடைவது 
    அவர் வழக்கம்.

    பொன்மனச் செம்மலாக
    இருந்தபோதும் 
    அவர் காட்சிக்கு 
    எளியவராகவே இருப்பார்.

    அடக்கத்தில்- பணிவில்
    அவரை யாரும் 
    விஞ்ச முடியாது. அவ்வளவு எளிமை !அத்துணை அடக்கம் !!

    'இறைவன்
    திருவருளைப் பெற குருவருளே 
    சிறந்த சாதனம்'
    என்பதில் அவர் உறுதியாக இருந்ததால் நல்லதொரு குருவை நாள்தோறும் தேடி வந்தார்.

    பிறவிப் 
    பெருங்கடலைக் கடக்க இறைவன் திருவடி மரக்கலம் எனில் 
    குருவே மாலுமி 
    என உணர்ந்து 
    தனக்கான குருவைத் தேடினார்.

    சிவபக்தியில் திளைத்திருந்த பெருமிழலையாருக்கு சிவனருளே தக்கதொரு குருவைக் காட்டிக்கொடுத்தது.

    அவர் 
    வேறு யாரும் இல்லை.

    வேறு யாருக்கும் இணையில்லாத சுந்தரமூர்த்தி சுவாமிகளே.
    சாட்சாத் 
    சுந்தரமூர்த்தி நாயனாரே.

    திருத்தொண்டினது
    உண்மை நிலையை உலகத்தார் அறிந்து உய்யும் பொருட்டு எழுந்த 'திருத்தொண்டத்தொகை' திருப்பதிகங்களையும் அவற்றைப் பாடியருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகளையும்
    பணிந்து வழிபட்டார்
    பெருமிழலையார்.

    குரு பக்தியோடு வைராக்கியத்தோடு
    வழிபட்டார்.

    வழி கிடைத்தது.

    நம்பியாரூராரோடு ஏற்பட்ட தனி ஈடுபாடு பெருமிழலையாரை ஆன்மீக உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. 

    சுந்தரரின் 
    திருவடிகளைக் 
    கைகளால் தொழுதும் வாக்கினால் வாழ்த்தியும் கருத்தினால் கருதியும் வழிபடும் வழக்கத்தை நாள் முழுதும் மேற்கொண்டவர்
    நம் பெருமிழலையார்.

    நாள்தோறும் 
    நம்பியாரூராரின்
    திருவடித் தாமரைகளைத் தனது 
    இதயத் தாமரையில் வைத்து 
    தியானித்து வந்த 
    பெருமிழலையாருக்கு பெறுதற்கரிய 
    சித்திகள் தேடி வந்தன.
    கை கூடி நின்றன.

    அணிமா 
    மகிமா 
    இலகிமா 
    கரிமா 
    பிராத்தி 
    பிராகாமியம் 
    ஈசத்துவம் 
    வசித்துவம் 

    முதலான 
    அட்டமா சித்திகளைப் பெற்றார் பெருமிழையார்.

    அட்டமா சித்திகள் அப்படியொன்றும் 
    எளிதில்
    கிடைக்கும்
    மந்திரம் தந்திரம் அல்ல.

    அந்த எட்டு சித்திகளின் வல்லமைகளை அறிந்தால்
    ஆச்சரியமே மேலிடும்.

    அணிமா –
    ஆன்மாவைப் போல அணுவாதல்.

    மகிமா –
    சிறிது மிகப் பெரிதாதல்.

    இலகிமா –
    மிகக் கனத்து மிக இலகுவாதல்.

    கரிமா –
    இலகுவானது மிகக் கனத்ததாதல்.

    பிராப்தி – 
    வேண்டுவன அடைதல்.

    பிராகாமியம் – விரும்பியதை நுகர்தல்.

    ஈசத்துவம் – 
    ஆட்சியுளனாதல்.

    வசித்துவம் –
    எல்லாம் தன் வசமாக்கும் வல்லனாதல்.

    இவற்றில் 
    முதல் மூன்று 
    உடம்பால் ஆவன.

    மீதம் ஐந்தும்
    மனம் போன்ற கருவிகளால் சாத்தியமாவன.

    இத்தனை சித்திகளும் வாய்த்திருந்தும்
    அகங்காரம் கொள்ளாமல்
    ஆணவம் காட்டாமல்
    இவை எதையும் சிந்தியாமல் 
    சுந்தரருடைய திருவடிகளையே சதாகாலமும் சிந்தித்திருந்தார் பெருமிழையார்.

    குருவருளோடு 
    கூடவே
    திருவருளும் 
    அவருக்குத் 
    துணை நின்றது.
    சிவனடியார் 
    சேவைகளும் 
    நிதமும் தொடர்ந்தது.

    ஒரு சமயம்
    திருவஞ்சைக்களத்தில் உறையும்
    நஞ்சுண்ட 
    அமுதப் பெருமானைப் பணிந்து 
    தமிழ் பாடிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமான் நாயனார் அரண்மனையில் தங்கியிருந்தார்.

    அது போது 
    திருக்கயிலை மலையை அடையும் பெரும் வாழ்வு மறுநாள் தனக்கு 
    நிகழவிருப்பதை 
    சுந்தரர் உணர்ந்தார்.

    பல காலம் காத்திருந்து பெற்ற பெரும்பேறு 
    என மிக மகிழ்ந்தார்.

    இது நடந்தது கொடுங்களூரில்.

    ஆனால் 
    அச்செய்தி 
    மனம் 
    மொழி 
    மெய் 
    ஆகிய மூன்றாலும் 
    குரு சுந்தர மூர்த்தியை 
    வழிபட்டு வரும் பெருமிழலையில் வாழும் குறும்பருக்கு
    யோகக் காட்சியாய் தெரிந்து போனது.

    "என் குருமூர்த்தி
     நாளை கயிலை செல்கிறாரே!

    இறைவனின் திருவடிகளில் இளைப்பாறப் போகிறாரே!

    குருநாதரை நீங்கி 
    இங்கு நான் வாழேன்.

    கண்மணியைப்
    பிரிந்து 
    வாழ்வோரைப் போல 
    நான் வாழ மாட்டேன்.

    என் குருநாதர் வேண்டுமானால் 
    இறை திருவுளப்படி நாளை செல்லட்டும்.

    நான் இன்றே செல்கிறேன்.
    யோக நெறியால் இறைவனைச் சார்வேன்."

    என்று எண்ணியபடி
    அந்த நொடியே 
    சிவயோக நெறியில் சிந்தனையைச் செலுத்தினார்.

    மனதை 
    ஒருமுகப்படுத்தி சுழுமுனை 
    நாடி வழியே 
    பிராண வாயுவை செலுத்தி 
    பல காலம் 
    பயின்று வந்த சாதனத்தின் முதிர்ச்சியினால் பிரமந்திர வழியே சென்று பிரணவ நாதத்துடன் 
    பிரம கபாலத்தைத் திறந்துகொண்டு திருக்கயிலாய மலை நாயகனைச் சார்ந்தார். கபால மோட்சம் அடைந்தார்.

    ஆம்…
    பெருமிழலைக் குறும்ப நாயனார் 
    ஒளி வடிவாக பரவெளியைச் சார்ந்தார்.
    பரபிரமத்தை அடைந்தார்.

    குரு சுந்தரருக்கு 
    ஒருநாள் முன்னரே இறைவனின் திருப்பாதங்களில் இணைந்தார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் 
    குரு வழிபாடு மூலம்
    ஆதி குருவான சிவபிரானை அடைந்தவர்கள் 
    பத்து திருத்தொண்டர்களே.

    குலச்சிறையார் 
    சுந்தரர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் 
    திருமூலர் 
    நின்றசீர் நெடுமாறர் பெருமிழலைக் குறும்பர் மங்கையர்க்கரசியார் ஆகியோரே அவர்கள்.

    அப் பாக்கியவான்களில் ஒருவரே
    குருபக்தியாளரான பெருமிழலைக் குறும்ப நாயனார்.

    திருமயம் 
    பேரையூர் அருகே குடவரையில் சிவலிங்கத்தின் திருமுன் யோக நிலையில் அமர்ந்து இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் பெருமிழலைக் குறும்ப நாயனார்.

    'பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன் '
    – சுந்தரர் வாக்கு.

  • Kulachirai Nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சைவத்தை வளர்ப்பதற்கும் 
    சமயத்தை அழிக்க நினைப்போரை 
    வேரொடு வேராய் 
    அழிக்க வல்லவருமான சமய ஞான வீரரை தரிசிக்க 
    ஆவல் கொண்டனர்
    மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்.

    அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற ஞானசம்பந்தரரை மதுரைக்கு 
    அழைத்து வந்தால் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்பதில் 
    உறுதியாய் இருந்த குலச்சிறையார் 
    அரசியாரிடம் கலந்துரையாடி திருமறைக்காடு விரைந்தார்,
    ஞானசம்பந்தரைத் தரிசித்து 
    பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர.

    வழியில் எதிரே 
    ஒரு சிவிகை.
    சிவிகையைச் சுற்றி 
    'சிவ சிவ ' என
     ஒலித்தவாறு 
    அடியவர் கூட்டம்.

    சிவிகையினுள்
    அன்பொழுக 
    அருள் பெருக அமர்ந்திருந்தார் ஆளுடைய பிள்ளை.

    திருஞானசம்பந்தரைப் பற்றி நிறையக் 
    கேள்விப் பட்டிருந்த 
    குலச்சிறையார் குதிரையிலிருந்து அவ்விடத்திலேயே இறங்கி கைகூப்பியபடி
    நிலமிசை வீழ்ந்தார்.

    'யார் இவர் ?'
    என அருகிருந்தோரிடம் கேட்டறிந்த 
    சிவஞானச் செல்வர் சிவிகையில் இருந்து இறங்கி வந்து 
    குலச்சிறையாரை 
    தோள் தூக்கி
    ஆசி தந்து
    ஆரத் தழுவினார்.

    நலம் 
    விசாரிப்புக்குப் பின்பு
    நாடு பற்றி பேச்சு எழுந்தது.

    சமணத்தால் 
    நாடு படும் பாடு குறித்து குலச்சிறையார் விவரிக்க
    நிலைகுலைந்து போனார் ஞானசம்பந்தர் பெருமான்.

    சைவம் தழைக்கவே 
    தான் தேசசஞ்சாரம் செய்வதாகக் கூறிய ஞானசம்பந்தர் 
    பாண்டிய நாட்டிற்கு 
    வர ஆர்வம் காட்டினார். உடனே சம்மதித்தார்.

    விடைபெற்று  
    பரிமேலேறி
    காற்றை விட வேகமாக பாண்டியநாடு விரைந்து பட்டத்தரசியிடம் நடந்ததைக் கூறி
    வரவேற்பு ஏற்பாடுகளில் மனத் துள்ளலோடு ஈடுபடலானார்.

    பாண்டிய நாட்டின் பட்டத்தரசி மங்கையர்க்கரசியார்
    எல்லை வரை சிவிகையில் 
    வந்து 
    எல்லையில்லா பக்தியோடும் நம்பிக்கையோடும் ஞானசம்பந்தரரை
    வணங்கி வரவேற்றார்.

    முதல் அமைச்சர் குலச்சிறையார் முறைப்படி 
    அரசனிடம் சொல்லிவிட்டு
    மகாராணியோடு வந்து
    ஞானக் குழந்தையை
    முகமலர்ந்து வரவேற்றார். 

    ஞானசம்பந்தர் மதுரையிலேயே சிலகாலம் 
    தங்க ஏற்பாடாயிற்று.

    சமணர்களால் சம்பந்தருக்கு தீங்கேதும் நேர்ந்துவிடும் என்பதை யூகித்த
    முதலமைச்சர் குலச்சிறையாருக்கு 
    பலத்த காவலுக்கு
    ஏற்பாடு செய்திருந்தார்.

    ஞானசம்பந்தரை
    மதுரையம்பதி உறையும் சொக்கநாதரைத் 
    தரிசிக்க வைத்து 
    தானும் உடனிருந்து பெரும் பாக்கியம் பெற்றார்
    குலச்சிறையார்.

    ஞானசம்பந்தர் 
    தனது 
    இணையற்ற அருளாற்றலால் மன்னனின் மனதை மாற்றி 
    சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிவிட்டால் 
    'தங்கள் கதி அதோ கதி'
    என அஞ்சிய சமணர்கள் கொடும் திட்டம் தீட்டினர்.

    பாண்டிய வீரர்களின் கட்டுக் காவலை மீறி ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு 
    தீ வைத்தனர் 
    தீய மனதோர்.

    சமணர்கள் வைத்த 
    பெரும் தீ 
    அனல் விழியனின் 
    அருள் புதல்வனை 
    என்ன செய்துவிடும் ?

    எம்பிரானை எண்ணி 
    ஒரு பதிகம் பாடி
    'தீ எய்தவரையே 
    சென்று சேரட்டும்' என கோபம் காட்டினார் ஞாலமும் அறிந்த ஞானசம்பந்தர்.

    அவர் வாக்கு சற்றும் பொய்க்காமல் 
    அப்பெருந்தீ 
    அரசனின் வயிற்றைச் சென்றடைந்தது.

    மன்னன் தீராத 
    வெம்மை 
    நோயில் வீழ்ந்தான். பெரும் நெருப்பு தீண்டிய புழுவாய் துடித்தான்.

     சமணர்கள் சமணத்துறவிகள் தாங்கள் அறிந்திருந்த அனைத்து மருந்துகளையும் மந்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்தனர்.

    வெம்மை
    கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
    கோபம் கொண்டு
    சமணர்களை நோக்கி மன்னன் வீசிய வார்த்தைகள் வெம்மையாய் சுட்டன.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாதரசி மகராசியாரும் முதலமைச்சர் குலச்சிறையாரும் மன்னனிடம் திருஞானசம்பந்தரின் மகத்துவங்களை எடுத்துச்சொல்லி 
    அவரை அழைத்து வர அனுமதி கேட்டனர்.

    சமணமே 
    பெரிதெனக் கருதி 
    அதுகாறும் 
    சமணம் தழுவி 
    அரசாண்டு வந்த மன்னன் 
    வெம்மை நோயைக் கூட தீர்க்க முடியாத 
    பொய் மதம் 
    சமணம் 
    என வெறுத்து ஞானசம்பந்தரைத் தரிசிக்க 
    விருப்பம் தெரிவித்தான்.

    வந்தார் 
    ஆளுடைய பிள்ளை.

    கனிவாய் பார்த்து புன்னகையால் 
    ஆசி கூறி 
    வெண்ணீறைக் கையிலெடுத்து உடலெங்கும் பூசி விட்டார் சிவநாமம் அர்ச்சித்தபடி.

    என்ன மாயமோ அக்கணமே 
    பாண்டியனின் நோய் பறந்தோடிப் போனது.

    மன்னன்
    மனதில் இருந்த அஞ்ஞான இருளும் அகன்று போனது.

    தீரா நோய் 
    தீர்க்கப்பெற்ற அனுபவத்தால் சைவத்தின் 
    பெருமையை உணர்ந்த 
    பாண்டிய மன்னன் அடுத்தகணமே
    சைவம் தரித்தான்.

    ஞானசம்பந்தரின் திருவடிகளில் 
    தன் நெற்றி பதித்து கண்ணீர் வடித்தான்.

    அது நாள் வரை தன்னையும் 
    தன் குடிகளையும் 
    நம்பவைத்து 
    மதம் மாற்றிய சமணர்களுக்குத் 
    தக்க தண்டனை தர முடிவெடுத்தான்.

    அதற்குள்ளாகவே மன்னன்  ஞானசம்பந்தரால்
    குணமான செய்தி பாண்டிய நாடெங்கும் பரவிவிட்டது.

    பயந்துபோன 
    சமணத் துறவிகள் ஞானசம்பந்தரை வம்பிழுக்கும் நோக்கில் வாதப் போருக்கு அழைத்தனர்.

    மூன்று வகை வாதங்களான
    சுர வாதம் 
    அனல் வாதம் 
    புனல் வாதம் 
    அறிவு தெளிய நடந்தேறின.

    முதல் இரண்டு வாதங்களில் 
    தோல்வி கண்ட சமணர்கள் 
    'புனல் வாதத்தில் தோற்றால் வேந்தனே எங்களைக் கழுவேற்றலாம்' என 
    மார் தட்டினர்.

    ஆனால் அதிலும் ஞானசம்பந்தர் 
    வெற்றிக் கொடி நாட்டினார்.

    முதலமைச்சர் குலச்சிறையார் 
    வாதம் புரிந்து தோற்ற 
    சமண குருமார்களையும் ஓடி ஒளிந்த சமணர்களையும் ஒருவரைக் கூட 
    விடாமல் பிடித்து 
    கழுவேற்றினார்.

    அப்படி 
    கழுவேற்றப்பட்டு 
    மாண்ட சமணர்களின் எண்ணிக்கை 
    எட்டாயிரமாம்.

    அதன் பின்னர் 
    பாண்டிய மன்னன் அரசியாருடன் சேர்ந்து குலச்சிறையார் ஆலோசனையுடன் செய்த 
    சிவப் பணிகள் 
    பல்லாயிரம் இருக்கும்.

    அதனால் 
    பாண்டிய நாட்டில் 
    சமணம் பூண்டோடு அழிந்தது.
    சைவம் தழைத்தது.

    'வந்த வேலை 
    இறை விருப்பப்படி முடிந்துவிட்டது'
    எனக் கருதி
    சில நாட்களில் ஞானசம்பந்தர் 
    சோழநாடு புறப்பட்டார்.

    குலச்சிறையாருக்கு ஞானசம்பந்தருடனேயே சோழநாடு சென்று 
    சமயப் பணி தொடர 
    ஆசை மிகுந்தது.

    ஞானசம்பந்தர் 
    புறப்படும் தருணம் வரை 
    அவரது சம்மதத்திற்காக காத்திருந்தார். கண்ணசைவுக்காக
    முகம் பார்த்திருந்தார்.

    ஞானசம்பந்தரோ "இங்கிருந்தபடியே 
    சைவம் தழைக்க 
    சமயப் பணியாற்றுங்கள். சிவநெறி போற்றி இருங்கள்." எனக் கனிவோடு 
    உத்தரவிட்டு விட்டு மகிழ்வோடு விடைபெற்றார்.

    திருஞானசம்பந்தரின் திருவாக்கே
    இறைவாக்கு என உணர்ந்த 
    குலச்சிறையார் பல்லாண்டு 
    சிவப் பணிகள் செய்து ஒரு நன்நாளில் 
    மதுரையம்பதியிலேயே முக்தியடைந்தார்.

    சிவபுரியில் 
    சிவபிரான் அருகில் தேவகணங்களுடன் அவர்களில் ஒருவராய் 
    பேரருளோடு 
    திகழத் தொடங்கினார். இன்றும் 
    அருள் சுரந்து கொண்டிருக்கிறார்.

    குலச்சிறையாரை  'பெருநம்பி' எனப் போற்றுகின்றனர் தாங்கள் அருளிய பதிகங்களில் 
    நம்பியாரூராரும் ஒட்டக்கூத்தரும்.

    இது 
    குலச்சிறையாருக்கு கிடைத்த 
    இறையம்சம் கொண்ட
    நாயனார் விருது.

    நம்பி என்றால் 
    ஆண்களில் மேன்மையானவர் 
    என்று பொருள்.

    'குணம் கொடு 
    பணியுங் குலச்சிறை' எனப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

    'பாண்டிய நாடு முழுதும் சமண இருள் 
    கவிழ்ந்த போது 
    ஆணில் ஒருவரும் பெண்ணில் ஒருத்தியுமே சைவத்தில் நிலைத்து நின்று காத்தவர்கள்.

    ஆணில் 
    குலச்சிறை நாயனார்.
    பெண்ணில் மங்கையர்க்கரசியார் ' என்று நன்றியோடு புகழ்மாலை சூட்டுகிறார்   வாரியார் சுவாமிகள்.

    'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் ' 
    – சுந்தரமூர்த்தி நாயனார்.

  • Kulachirai nayanar puranam part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பழம் பெருமை  
    பல கொண்ட 
    புகழ்மிகு நாடு 
    பாண்டிய நாடு.

    பாண்டிய நாட்டிற்கு ஆன்மீகச் சிறப்பு சேர்க்கும் சிவ தலங்கள் பல உண்டு.

    அதில் ஒன்று மணமேற்குடி.

    நெற்பயிர் நிறைந்த வயல்கள்.
    கரும்புப் பயிர் 
    சூழ்ந்த தோட்டங்கள். 
    கமுக மரங்கள் 
    பரந்த புறம்புகள்
    என பசுமை மிளிர் 
    நகரே மணமேற்குடி.

    மணமேற்குடியில் அவதரித்து 
    சிவனடியார் 
    சேவை புரிந்து 
    உரிய காலத்தில் 
    சைவம் காத்த பெருமை கொண்டவர் 
    குலச்சிறை நாயனார்.

    மணமேற்குடியில் குடிகொண்டிருக்கும் ஜகதீஸ்வரனாரைத் தரிசிக்க நாள்தோறும்
    சிவனடியார்கள் 
    வந்த வண்ணம் இருப்பர்.

    அதற்கான 
    அருள் ஆற்றல் கொண்ட
    ஆன்மீகச் சிறப்பு அக்கோயிலுக்கு இருக்கிறது.

    அக் கோயிலை
    நிர்மாணித்து
    அர்ப்பணித்தவர் 
    யார் தெரியுமா ?

    திருவாசகம் அருளிய மாணிக்கவாசகப் 
    பெருமானார். 

    அதனாலேயே சிவனடியார்கள்       பிறவிப் பிணி தீர்க்க
    மாணிக்கவாசகரைத் 
    தேடி வந்து விடுவார்கள்.

    ஜகதீஸ்வரர் கோயிலுக்குத்
    தினந்தோறும் சென்று 
    சிவ பாதங்களைத் தொழும் வழக்கம் உடையவர் குலச்சிறையார்.

    சிவ பாதங்களை மட்டுமல்ல சிவனடியார்களை கண்டாலும் 
    அவர்தம்
    காலடி விழுந்து 
    கொண்டாடி மகிழ்வார்.

    சிவனடியார்களைக்
    கண்ட மாத்திரத்திலேயே கூப்பிய கரங்களோடு வணங்கி வரவேற்று தாள்பணிந்து 
    ஆசி பெற்று 
    அவர்கள் அகமகிழ உபசரித்து வழியனுப்புவது குலச்சிறையாரின் சிவதொண்டு.

    நெற்றியில் திருநீறு கழுத்தில் உருத்திராட்சம் நாவினில் பஞ்சாட்சரம் என்று வருகை தரும் சிவநேசர்களைக் 
    கண்டால் போதும் 
    பிறவிப் பயன் 
    அடைந்த மாதிரி உபசரித்து உளமகிழ்ந்து
    அருள் பெறுவார்.

    சிவனடியார் வழிபாடே சிவ வழிபாடு என்பது அவரது வாழ்வியல். சிவனடியார்களைச் சிவனாக பார்ப்பதே அவரது பண்பியல்.

    வரும் சிவனடியார் 
    உயர் குலமா 
    பிற குலமா நற்குணத்தவரா
    தீங்குணத்தவரா என்றெல்லாம் 
    ஆராய மாட்டார்.

    வேறுபாடு 
    பார்க்க மாட்டார்.
    வேறுபாடும்
    காட்ட மாட்டார்.

    தனித்து வந்தாலும் கூட்டமாக வந்தாலும் துதித்து வணங்குவார். முகம் மலர்ந்து
    உபசரித்து மகிழ்வார்.  

    அனுதினமும் சிவனடியார்களைத் தரிசிப்பதை 
    வழக்கமாகக் கொண்டிருந்ததால் 
    அவர் இருக்குமிடம் ஆண்டு முழுதும் 
    சிவ மணம் கமழ்ந்த வண்ணம் இருக்கும்.

    இத்தனைக்கும் குலச்சிறையார் 
    சாதாரண பிரஜை அல்ல.

    பாண்டிய நாட்டின் 
    பெரும் செல்வந்தர். ஆனால் 
    செல்வம் அவருக்கு வெறும் தூசு.
    சொத்தெல்லாம் 
    சிவன் சொத்து 
    என்று கூறி புன்னகைப்பார்.

    அவர் ஒரு போர்வீரர்.
    வெறும் வாய்ச்சொல் 
    வீரர் அல்ல.
    நாடு காக்கும் 
    நற்படைக் காவல்தலைவர்.
    சிவப் படையின் 
    தளபதி தானென்று நினைத்து மிடுக்கோடு வலம் வருவார்.

    எப்போதும் 
    தன்னைச் சிவனடியார்களின் 
    அடித்தொண்டர்களின் ஒருவராகவே
    கருதிப் பணி செய்வார்.

    பின்னாளில் 
    பாண்டிய நாட்டின் முதலமைச்சராக 
    பாண்டி மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கபரிபாலனம் மேற்கொண்டபோதும் தன்னை 
    முதலமைச்சராக கருதாமல் சிவனடியார்களின் அடிமையாகவே 
    எண்ணி வாழ்ந்தார்.

    திருநீறு 
    உருத்திர மாலை பஞ்சாட்சரம் 
    கோவணம் என 
    சிவக் கோலமே முதலமைச்சரின் அடையாளமாய் இருந்தது.

    அப்போது 
    பாண்டிய நாட்டின் அரசனாக இருந்தவன் 
    நின்றசீர் நெடுமாறனார் என்பவன்.
    அவனது இயற்பெயர் மாறவர்மன் அரிகேசரி.

    பின்னாளில் 
    அவன்தான் 
    கூன் பாண்டியன் என அழைக்கப்பட்டான்.

    அவனுக்கு ஏனோ 
    சமண மதத்தின் மீது 
    ஓர் ஈர்ப்பு.
    அதனால்
    சமண மதத்தைத்
    தூக்கிப் பிடித்தான். அவனையொட்டி குடிமக்களும் 
    சமணம் சாய்ந்தனர்.

    குல பேதம் பார்க்காத குணக்குன்றே 
    தனது முதலமைச்சராக இருக்க வேண்டுமென குலச்சிறையாரை முதலமைச்சராக நியமித்தான்.

    குலத்தைக் காப்பவர் என்னும் பொருளில் தான்
    அவருக்கு குலச்சிறையார் என்ற பெயரே வந்தது.

    ஆம்…
    குல பேதம் காணும்
    இழி குணத்திற்குச் சிறையிட்டவர்
    குலச்சிறையார்.

    முதலமைச்சரான குலச்சிறையாருக்கு சமணம் ஏற்புடையதல்ல. என்றாலும் 
    தம் உயிர்க் கொள்கையான
    சைவம் போற்றினார். சைவம் தழைக்க விரும்பினார்.

    செந்தமிழ் பாடல்களால்
    செஞ்சடையனைத் துதித்தபடி 
    நல்ல காலத்திற்காகக் காத்திருந்தார்.

    பாண்டிய மண்ணில் சைவம் அழியாதிருக்க சைவத்தின் வழிநின்று நல் முயற்சிகள் பல மேற்கொண்டார்.

    நல்ல வேளையாக 
    சைவத் திருத்தொண்டை 
    தன் பிறவிப் பயனாக கருதி வாழ்ந்து வந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் 
    சிவ பணிகளை இடைவிடாது மேற்கொண்டிருந்தார்.

    மங்கையர்கரசியார் செய்து வந்த திருத்தொண்டுகளால் குதூகலித்த குலச்சிறையார் 
    அரசமாதேவிக்கு
    மெய்த் தொண்டராய் துணை நின்றார். 

    'பயிரை வளர்த்தால் 
    மட்டும் போதாது 
    பயிரை அழிக்க முயலும் கோரைப்புல் போன்ற களைகளைக் களைந்தெறிய வேண்டும்' என்பது குலச்சிறையாரின் கருத்தாய் இருந்தது.

    'ஆண்டவனுக்குச் செய்வது ஆராதனை.
    அடியவருக்குச்
    செய்யும் வழிபாடு சமராதனை.

    'சம' என்பதற்கு 'நல்ல' என்று பொருள்.
    அடியவருக்குச் செய்யும் வழிபாடு 
    செய்தாலே போதும். 
    விரைந்து 
    முக்தி  கிடைத்து விடும்' 
    என்பது
    மங்கையர்க்கரசியாரின் செயல்பாடாய் இருந்தது. 

    அது உண்மைதான்.

    பட்டினத்தார் 
    நேரே இறைவனை வழிபட்டார்.
    பத்ரகிரியாரோ
    பட்டினத்தாரை 
    வழிபட்டார்.

    பட்டினத்தாருக்கு முன்னரே 
    பத்திரகிரியார் 
    முத்தி பெற்றார் 
    என்பது தானே
    முக்தி இரகசியம் ?

    இதனை உணர்ந்து பட்டத்தரசியாரும் குலச்சிறையாரும் எவ்வளவோ 
    திருத்தொண்டுகள் புரிந்தும் 
    சைவம் அருகி
    சமணம் பெருகி வந்தது.

    காரணம் 
    மன்னனின் விருப்பமே மக்கள் விருப்பமாக மலர்ந்தது.
    இதில் 
    சமணர்களின் சூதும் கலந்திருந்தது.

    இந்த சமயத்தில் 
    பாண்டிய நாட்டிற்கு அருகே உள்ள திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் தங்கியிருப்பதாகத் 
    தகவல் வந்தது.

    அரசி 
    மங்கையர்க்கரசியாருக்கும் 
    முதல்வர் குலச்சிறையாருக்கும் 
    ஏக மகிழ்ச்சி.

    (குலச்சிறை நாயனார் புராணம் தொடரும் )
     

  • part 2 of sandeswar nayanar puranam

    -மாரி மைந்தன் சிவராமன்

    விசார சருமரின் 
    மனதில் ஒரு 
    கற்பனைக் காட்சி தினம்தோறும் 
    எழுந்த வண்ணம் இருந்தது.

    அது நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்தது.

    ஒரு நாள் – 
    மண்ணியாற்றங்கரையில் 
    ஓர் அத்திமர நிழலில் மணல் விளையாட்டினூடே
    மண்ணினால் 
    ஒரு சிவலிங்கம் அமைத்தார்.

    சிவத் திருமேனியை
    பாதுகாப்பாக வைக்க  
    மணல் கோபுரம் கட்டினார்.

    நாற்புறமும் 
    வாயில் அமைத்து 
    உள்ளே
    சிவலிங்கத்தை
    வைத்து அழகு பார்த்தார்.

    கோயிலைச் சுற்றி மணலால் மதில் அமைத்தார்.

    விசார சருமர் 
    சிறுபிள்ளை தானே!
    மண் விளையாட்டாக வெண்மணல் 
    கோயிலே கட்டி விட்டார்.

    பலத்த காற்று அடித்தாலோ
    கரையேறி ஆற்றுநீர் வந்தாலே
    மேய்ந்து திரும்பிய பசுக்கள் மிதித்தாலோ  நொடியில் சிதைந்துவிடும் மணற்கோயில்.

    விசார சருமரின் 
    மண் விளையாட்டு விளையாட்டு நாயகனின் மன விளையாட்டுக்கு 
    முன் எம்மாத்திரம் ?

    அஞ்செழுத்தானின் விருப்பப்படி 
    அடுத்த ஆசை 
    விசார சருமருக்கு 
    மனதில் எழுந்தது.

    உடனே 
    ஆற்றுக்குச் சென்று திருமஞ்சன நீர் கொணர்ந்தார்.

    அத்திப்பூக்களையும் 
    பசும் தளிர்களையும் முல்லைப் பூக்களையும் நொடிப் பொழுதில் சேகரித்தார். 

    நீர் ஊற்றி 
    அபிஷேகம் செய்து 
    பூக்கள் தூவி 
    அலங்கரித்து 
    அர்ச்சனை செய்ததைக் கண்ணுற்ற 
    பெருத்த 
    மடி பசுக்கள் 
    விரும்பி வந்து 
    பால் சொரிந்தன பரம்பொருள் மீது.

    அடுத்தடுத்த நாட்களில் பூசைகள் வெகு விமர்சையாயின.

    விசார சருமர் 
    புதிய குடங்கள் வாங்கினார்.

    வற்றாத மண்ணியாறு புனிதநீர் தந்த மாதிரி வள்ளல் பெரும்பசுக்கள் 
    மடிக்காம்பு தொட்டாலே
    பால் மழை பொழிந்தன. 

    வேடிக்கை என்னவெனில் அப்பசுக்கள் 
    மண்ணாலான பசுபதிக்குப் 
    பால் வார்த்த 
    பின்னரும் கூட 
    அந்தணர் வீட்டிலும் அளவுக்கு அதிகமாக 
    பால் தந்தன.

    நன்றாகத்தான் 
    நடந்து கொண்டிருந்தது நீள்சடையானுக்குத் 
    தினப் பூசை.

    ஒருநாள் 
    அவ்வழியே வந்த ஊர்க்காரன் ஒருவன் இதைப் பார்த்தான்.

    விசார சருமர் 
    குடம் குடமாய் 
    பால் கறந்து 
    பாலை மண்ணில் 
    ஊற்றி விளையாடி வீணாக்குவதாக அவனுக்குப் பட்டது.

    வந்த வேகத்தில் அந்தணர்களிடம் ஓடினான்.

    "இடையனைத்
    குற்றம் சொல்லி 
    மாடு மேய்க்க வந்தவன் உங்கள் அனைவரையும் மடையர்களாக்கி விட்டு மண்ணில் கொட்டி பசும்பாலைப்
    பாழாக்குகிறான்!"

    அடித்துச் சொன்னான் ஆத்திரம் பொங்க. வெடித்து போயினர் பசுக்களை வளர்க்கும் மறையோதும் அந்தணர்கள்.

    வந்தவனை விட்டே
    விசார சருமரின் 
    தந்தை எச்சதத்தனை வரவழைத்தனர்.

    "இவன் சொல்வதைக் கேட்டாயா ?

     உன் மகன் 
    எங்களுக்கு மட்டும் 
    மோசடி செய்யவில்லை. சிவபிரானுக்குச் சேரவேண்டிய 
    பாலை வீணடித்து 
    இறைவனுக்கே துரோகம் செய்திருக்கிறான்." 

    கோபம் தலைக்கேற குமுறித் தள்ளினர்.
    தந்தை எச்சத்தனுக்கு
    அவர்களை விட 
    கோபம் மிகுந்தது.

    சொந்த சமூகத்தினர் முன்பு அவமானம் பிடுங்கித்தின்றது.
    நாக்கைப் பிடுங்கிச்
    சாகச் சொன்னது.

    "பெரியவர்களே…. இதுவரை நடந்ததற்காக – – எனக்காக 
    அவனை மன்னியுங்கள்.

    என் குலத்தைச்
    சபித்து விடாதீர்கள்.

    இனிமேல் தவறு நடந்தால் நானே பொறுப்பேற்கிறேன்.

    கடவுளே எங்களைத் தண்டிக்கட்டும்."

    தலை குனிந்தபடி விடைபெற்றார்
    மகனை மோசடிக்காரன் என்று செவிமடுத்ததால் துடிதுடித்த தந்தை.

    அன்றிரவு 
    சிவபூசை சிறந்திருந்த மகிழ்வோடு 
    விசார சருமர் 
    வீடு திரும்பியபோது 
    வீடு அமைதியாக இருந்தது.

    தந்தையும் தாயும் பேசவில்லை. களைத்திருந்த 
    விசார சருமர் 
    காலையில் 
    கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து 
    தூங்கி விட்டார்.

    மறுநாள் காலை பசுக்களுடன் 
    பாலகர் 
    மேய்க்க கிளம்பிவிட்டார்.

    கலங்கிய மனத்துடன் தந்தை எச்சதத்தன் 
    மகன் அறியாமல் 
    பின் தொடர்ந்து 
    மரம் ஒன்றில் ஏறி நடப்பதைக் கவனிக்க தொடங்கினார்.

    விசார சருமரின் மேய்க்கும் பணி 
    மாலை வரை  போற்றும்படி தான் இருந்தது.

    அந்தணர்கள் கேள்விப்பட்டது 
    'பொய்' எனச் சொல்லி 
    எச்சதத்தன்  புறப்பட்டபோது  
    குடமும் பூக்கூடைகளும் எடுத்தபடி விசார சருமர் ஆற்றோரம் போனார்.

    அதிர்ந்த தந்தை 
    அடுத்து நடப்பதை 
    கோபம் வெளிப்பட
    கூர்ந்து
    பார்க்கத் தலைப்பட்டார்.

    ஒரு குடத்தில் 
    மண்ணியாற்று 
    புனிதநீர்.
    மறுகையில் 
    பூக்களும் 
    பசும் தளிர்களும் 
    நிறைந்த பூக்கூடை.

    இரண்டையும் 
    மணற்பரப்பில் வைத்துவிட்டு 
    மணலால் 
    லிங்கம் அமைத்து கோபுரம் கட்டி 
    மதில் அமைத்து காத்திருந்தார் 
    விசார சருமர். 

    கனைத்தபடி வந்த 
    கனத்தமடிப் பசுக்கள் குடங்கள் அருகே சென்று முலை தளர்த்தி 
    பால் பொழிந்தன.

    சில பசுக்கள் 
    விசார சருமரை 
    நாவால் மேவி அழைத்து காம்பு தொடச் செய்து குடம் நிரப்பின.

    பாலாபிஷேகம்
    நீர் அபிஷேகம் செய்து பூவலங்காரம் முடித்து ஐந்தெழுத்தை ஓதியபடி தியானத்தில் ஆழ்ந்தார் விசார சருமர்.

    தந்தை எச்சதத்தனுக்கு எல்லையில்லா கோபம்.

    மகனின் 
    அற்புத பக்தியை 
    அறியாத தந்தை 
    மரம் இறங்கி 
    அருகிலிருந்த 
    கோலை எடுத்தபடி 
    பூசையிலிருந்த 
    மகனருகே வந்தார்.

    உச்சி முதல் 
    உள்ளங்கால் வரை 
    ரத்தம் வேகமெடுக்க கையிலிருந்த கோலால் வேகம் குறையாமல் தடித்த சொற்களுடன் அடிக்க ஆரம்பித்தார் எச்சதத்தன்.

    நிஷ்டையில் இருந்த விசார சருமர் 
    ஒருமித்து இருந்த 
    இறை தவிர எதையும் உணரவில்லை.

    அருகிலிருந்த 
    பசுக்கள் கூட 
    எச்சதத்தனை நோக்கி வேகமாக ஓடி வந்தன முட்டி மோதி விரட்ட.

    தனது பலத்தஅடிகள் எதுவும் மகனுக்கு உறைக்கவில்லை என கோபமுற்ற எச்சதத்தன் என்ன செய்வது
    என்று புரியாது கோபத்தின் விளிம்பில் பால்குடத்தை காலால் எட்டி உதைத்துத் தள்ளினார்.

    இறைவனுக்கான பாலுக்கு 
    இடையில் இடையூறு நேர்வதை உணர்ந்த விசார சருமர் 
    தியானம் நீங்கி கண்விழித்தார்.

    எதிரே தந்தை…!
    உடைத்து இருப்பதோ சிவபூசை…!!
    உதைத்திருப்பதோ பால்குடம்…!!!

    தந்தையே என்றாலும் எல்லோருக்கும் 
    தாயும் தந்தையுமாய் இருக்கிற 
    ஆதிமூலத்தை 
    அவமதித்து விட்டாரே!

    சிவனுக்கான 
    பால் குடத்தை 
    மிதித்து விட்டாரே! 

    விசார சருமருக்கு 
    கோபம் வந்தது.

    'யாராய் இருந்தால் என்ன? சிவ அபராதத்திற்கு யாரும் விலக்கில்லை' என்று நினைத்தவாறு, 
    சிவ தண்டனைக்கு தந்தையாக இருந்தாலும் தப்பி விடக்கூடாது 
    என முடிவெடுத்தார் நொடிப்பொழுதில்.

    கையருகே இருந்த 
    பசு மேய்கும் கோலெடுத்து பால் குடத்தை எட்டி உதைத்த எச்சதத்தன்
    கால்களின் மீது வீசினார்.

    ஆனால் 
    அக்கோலோ
    கோடாரியாக மாறி பிதாவும் குருவும் பிராமணனுமாகிய 
    தந்தை எச்சதத்தனின்  கால்கள் இரண்டையும் துண்டுகள் ஆக்கியது.

    துவண்டு விளைந்த எச்சதத்தன் துடிதுடித்து மாண்டு போனார்.

    அதுசமயம்
    ஒரு பேரொளி எழும்ப பூதகணங்கள் சூழ 
    இடப வாகனத்தில் இறைவன் இறைவியுடன்  அருட்காட்சி தந்தார். 

    "குழந்தாய்….!
     என் பொருட்டு 
    உன் தந்தையின் கால்களை வெட்டி 
    உயிர் பறித்தாய்.

    இனி உனக்குத் 
    தந்தை நானே!

    இனிமேல் 
    நம் பூதகணங்களுக்கு தலைவராக விளங்குவாயாக!

    சிவபுரியின் 
    உயர்ந்த பதவியாகிய 
    'சண்டீசன்' பதவியை உனக்கு அளிக்கிறேன்.

    நீ எனக்கு 
    உணவு படைத்தாய். உடையும் 
    மலர் மாலையும் அணிவித்தாய்.

    என்னை வழிபட்ட 
    நீயும் இம்மாதிரி 
    வழிபடப் படுவாய்.

    இனி நான் 
    உண்பன உடுப்பன 
    சூடுவன அனைத்தும் உனக்கும் ஆகுக!

    அதன் பொருட்டே 'சண்டீசன்' ஆகும் பதவியை உனக்குத் தந்தேன்…"

    என்றபடி ஆரத்தழுவி தனது திருக்கரங்களால் விசார சருமருக்கு  
    தனது கழுத்திலிருந்த 
    கொன்றை மாலையை எடுத்து அணிவித்தார்.

    அனைத்து
    உலகங்களில் உள்ளவரும் 'ஹரஹர' என முழங்க வானவர் பூ மழை பொழிய பல்லாயிரம் கணநாதர்கள் பாடியும் ஆடியும் மகிழ வேதங்கள் துதிக்கப்பட பற்பல வாத்தியங்கள் வாழ்த்திசைக்க
    பரமன் விடைபெற்றார்.

    ஈசனின் ஈடில்லா விளையாட்டால்  சண்டீசன் 
    பதவி பெற்றதால்  தந்தையைக்
    கொன்ற பாபம் 
    விசார சருமருக்குச் சேரவில்லை.

    இறைவனின் சித்தப்படியே 
    பால் குடத்தை 
    எட்டி உதைத்ததால்
    மகனாலேயே கொலையுண்டு போன எச்சதத்தனுக்கும்
    தீங்கேதும் நிகழவில்லை.

    எச்சதத்தனும்
    சிறப்பு பரிசாக 
    அவரது சுற்றத்தாரும் இறையருளால் 
    முக்தி பெற்றனர்.

    இறைவனே வழங்கிய 'சண்டீசன்' பதவி பெற்ற விசார சருமர் 
    சண்டிகேசுவரராக சண்டேசுர நாயனாராக  சிவாலயங்கள் தோறும் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    விசார சருமர் 
    சண்டேசுர நாயனாரானதற்கு 
    சிவநெறியும் சிவபூசையுமே முழுக்காரணம்.

    சண்டேசுர நாயனாரை திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர் 
    ஆகிய 
    சமயக் குரவர் நால்வரும் புகழ்ந்து பாடி 
    துதி செய்தது
    சண்டேசுர நாயனாரின் கீர்த்தியை
    உலகறியச் 
    செய்யவல்லது.

    சண்டி பெருமானுக்கு அடியேன் – சுந்தரர்

    திருச்சிற்றம்பலம்.
     

  • Sandeswara nayanar puranam part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பொதுவாக சிவாலயங்களில் ஆதிநாதர் அருள்பாலிக்கும் கருவறைக்கு இடப்பக்கத்தில் 
    எம்பிரான் அருகிலேயே சண்டிகேசுவரருக்கு
    ஒரு சிறு சன்னதி தனியாக இருக்கும்.

    கோயிலைச் சுற்றி வரும்போது சண்டிகேசுவரரை வணங்கும் தருணம் 
    விரல் சொடுக்கியோ 
    மெலிதாகக் கைதட்டியோ  ஆடையில் இருந்து 
    சிறு நூலைப் பிரித்து அவர் முன் போட்டு கைவிரித்து 
    அருள் பெற வேண்டுவது பக்தர்களின் வழக்கம்.

    சண்டிகேசுவரரை 'செவிட்டுச்சாமி'
    என்று நினைத்து சிற்றொலி எழுப்புவது பலரின் நம்பிக்கை.

    சிறு நூல் பிரித்து அவர்முன் போட்டு 
    கை விரித்துக் காட்டுவது திருக்கோயிலில் இருந்து சிவன் சொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என காண்பிப்பது பழங்காலம் தொட்டு இருக்கும் 
    ஒரு வழிபாட்டு முறை.

    அவரிடத்தில் 
    ஆடை நூல் பிரித்துப் போட்டால்
    பன்மடங்கு பெரிதான புத்தாடை கிடைக்கும் என்றும் சொல்வார்கள்.

    இப்படியெல்லாம் வழிபடுவதைத் 
    'தவறு…. வெற்றுச் சடங்கு' என்று வாதிடும்
    கற்றறிந்தார் உண்டு.

    எந்நேரமும் 
    தவத்தில் இருக்கும் சண்டிகேசுவரரை 
    சப்தம் எழுப்பாமல் வணங்க வேண்டும் என்பர் புராணம் அறிந்தோர்.

    இதற்கெல்லாம் 
    மேலான சிறப்பம்சம் ஒன்றும் உண்டு. 

    சண்டிகேசுவரர் 
    சிவனின் அம்சம். 

    'சண்டீசன்'
    என்னும் இறை பதவி
    சிவனே வழங்கிய சிவபதவி.

    அதற்கும் மேலாய் 
    ஓர் அதிசயம் உண்டு. 

    சண்டிகேசுவரர் என்னும் 'சண்டேசுரர்'
     ஒரு நாயனார்.

    ஆம்…. 
    சண்டிகேசுவரர் 
    ஒரு நாயனார். சமயக்குரவர் போற்றும்
    'சண்டேசுர நாயனார்'.

    "உனக்கு இனி 
    நானே தந்தை" என்று உலகநாயகன் 
    உவந்து வழங்கிய உரிமைச் சாசனம் 
    பெற்ற பேறு பெற்றவர் சண்டிகேசுவரர் என்னும் சண்டேசுர நாயனார்.

    நெல் விளையும் சோழநாட்டில் 
    நல் நதியாம்
    மண்ணியாற்றின் தென்கரையில் 
    அமைந்த திருநகரம் திருச்சேய்ஞலூர்.

    சோழர்காலம் 
    செழிக்க வந்த 
    அபிநாய சோழரின் மூதாதையர்கள் முடிசூட்டிக் கொண்ட தலைநகரங்கள் 
    ஐந்தனுள் ஒன்று திருச்சேய்ஞலூர்.

    முன்னாளில் 
    கிரவுஞ்கிரியைப் பிளந்து தன் வேலாயுதத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தி
    சூரபத்மன் முதலான அசுரர்களை கொன்ற குமரக்கடவுள் விரும்பி நிர்மாணித்த திருநகரே திருச்சேய்ஞலூர்.

    அதுசமயம்
    முருகப் பெருமான்
    ஓர் இரவு தங்கி 
    தந்தை சிவபிரானைப் பூசித்த பெருமை திருச்சேய்ஞலூருக்கு உண்டு.

    இந்நகரில் 
    பிராமண குலத்தில் 
    காசிப கோத்திரத்தில் 
    பிறந்தவர் எச்சதத்தன்.

    பவித்திரை என்னும் பாவையை மணந்து இனியதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் எச்சதத்தனார்.

    இருவரின் பிரார்த்தனைகளின் பலனாக 
    இறவாப் புகழ்பெற்ற 
    ஓர் ஆண்மகவு பிறந்தது.

    பெயர் விசார சருமர்.

    விசார சருமர் 
    பால பருவத்திலேயே 
    பல ஓதாது உணர்ந்தார். ஓதியும் உணர்ந்தார் சில.

    காரணம் 
    விட்ட குறை 
    தொட்ட குறை போல் முற்பிறவி ஞானம் அவருடன் ஒட்டி 
    ஒளி வீசியது.

    பிறவி மேதையான 
    விசார சருமர் 
    ஐந்து வயதிலேயே 
    வேதம், ஆகமங்கள் அனைத்தும் கற்றுணர்ந்தார்.

    சீடரின் விவேகம் குருவுக்குப் 
    பெருமை தந்தது.
    விசார சருமரைத் 'தெய்வப்பிறவி'
    என்று போற்றி 
    மகிழ்ந்தார் குருநாதர்.

    விசார சருமர் 
    ஐந்து வயதிலேயே 
    கேட்போர்
    வியந்து போற்றும் வகையில் 
    நான்கு வேதங்களையும் நயம்பட உரைத்தார். 
    அரிய விளக்கம் தந்தார். 

    ஏழுவயதில் 
    உபநயனம் நடந்தது. 

    சொல்லிக் கொடுக்க 
    வந்த குருமார்கள் 
    எட்டாத ஞானத்தை நோக்கி 
    விசார சருமனார் 
    பயணித்துக் கொண்டிருந்தார்.

    ஒருநாள்-
    சக வேத பாடசாலை மாணவர்களுடன் 
    வேத விசாரணை செய்தபடி தெருவில் சென்றுகொண்டிருந்தார் விசார சருமர்.

    அப்போது 
    அவர் கண் முன்பு 
    நடந்த ஒரு 
    கொடூர சம்பவம் 
    அவரைக் 
    கலக்கமுறச் செய்தது.

    வேறொன்றுமில்லை.

    இடையன் ஒருவன் பசுக்களை 
    ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கையில் துள்ளி குதித்த 
    கன்று ஈன்ற பசு ஒன்று இடையனை 
    முதுகில் மெதுவாக
    முட்டித் தள்ளியது.

    கடும் கோபமுற்ற இடையன் 
    முட்டிய மாட்டை 
    எட்டிப் பிடித்து
    பலமாக அடிக்க ஆரம்பித்தான்.

    அப்பசு 
    பயந்து ஓடியும்
    அடி தாங்காமல் துடிதுடித்துக் கனைத்தும் களைத்தும் போனது.

    ஆனால் 
    அவன் அடிப்பதை 
    நிறுத்த வில்லை.

    இது கண்ட 
    விசார சருமர் 
    விரைந்து ஓடி இடையனின் கைகளைத் தடுத்துப் பிடித்து
    அவன் கையிலிருந்த கோலைப் பறித்து வீசி கனிவோடு 
    அவன் கண் நோக்கி கோபம் தணிக்க முயன்றார்.

    அவனோ 
    அடித்துக் கொண்டிருந்த பசுவை 
    விரட்டிப் பிடித்து 
    மிரட்டி வைக்கவே யத்தனித்தான்.

    "அறிவில்லாத மூடனே…!

    பசுவைப் போய் 
    அடித்து வதைக்கிறாயே?

    பசு தெய்வீகமானது. வணங்கத்தக்கது.

    தேவாதி தேவர்கள் பசுவின் உடலில் 
    குடி கொண்டு இருக்கிறார்கள்.

    இறை பூசைக்கு 
    பசுவின் 
    பால் தயிர் நெய் 
    மூத்திரம் சாணம் முதலான 
    பஞ்ச கவ்வியங்களே 
    உதவி புரிகின்றன.

    சாணம் மூலமாக 
    விபூதி தருவது பசுக்களே.

    கோயிலில் மட்டுமல்ல சமயச் சடங்குகளிலும் 
    முக்கிய அங்கம் வகிப்பது பசுக்களே.

    பசுக்களை அன்போடு பேணிக்காத்தல் 
    நமது கடமை.

     பசு காத்தலே 
    ஒரு சிறந்த சிவநெறி.

    பாவியே…. 
    உனக்குத் தெரியுமா ?

    பசுக்களை துன்புறுத்துவோருக்கு நரகம் நிச்சயம்.

     பசுக்களை வணங்குவோருக்கு விண்ணுலகம் 
    அல்லது 
    வீடு பேறு சத்தியம்.

    பசுவதைத்து
    நீ பெரிய பாவம் 
    செய்து விட்டாய்…!

    இனி நீ 
    பசுக்களை 
    மேய்க்கத் தகுதியில்லாதவன்.

    இத்தொண்டை
    இனி நானே செய்வேன்..!"
    என தலைகுனிந்த இடையனின் 
    வேலைக்குத் தடைபோட்டு அடுத்து
    அவன் வேலைக்கும் வேட்டு வைத்தார்.

    பசுக்களை வளர்க்கும் அந்தணர்களிடம் 
    சென்று பேசி 
    தான் நல்ல முறையில்  மேய்த்துத் தருவதாக வாக்குறுதி தந்தார்.

    அந்தணர்கள் 
    அகமகிழ்ந்து சம்மதிக்கவே 
    அடுத்த நாள் தொட்டு
     பசு மேய்க்கும் 
    தெய்வீகப் பணியை விசார சருமர் 
    அன்புடனும் 
    ஆதரவுடனும்
    மேற்கொண்டார்.

    அன்றாடம் 
    மண்ணியாற்றுக்
    கரையில் இருக்கிற காடுகளுக்கு 
    பசுக்களை ஓட்டிச் செல்வார்.

    வயிறாரப் புற்களை
     மேயச் செய்வார்.

    வெய்யில் நேரத்தில் தாகம் தீர 
    தண்ணீர் கொடுத்து  இதமாகத் தடவிக் கொடுத்து 
    சுகம் கூட்டுவார்.

    களைத்த பசுக்களை 
    அடர் நிழலில் 
    ஓய்வு பெறச் செய்வார்.

    ஒவ்வொரு பசுக்களையும் அன்யோனியம் புரிபட
    பெயர் சொல்லி அழைப்பார்.

    அவற்றோடு பேசுவார். பாடிப் பரவசப் படுத்துவார் கூடிக் குலாவுவார்.

    பசுக்கள் 
    விசார சருமரைத் 
    தம்மை மேய்ப்பவராக
    நினைக்காமல் 
    உலக மக்களை 
    உய்விக்க வந்துதித்த 
    நல் மேய்ப்பராக 
    உணர்ந்து மகிழ்ந்தன. 

    விசார சருமரின் மேய்க்கும் திறன் கண்ட அந்தணர்களுக்கு பெருமகிழ்ச்சி.

    இராப்பகல் இரு நேரமும் பால் கறக்கும் நேரத்தில் வீடு வரும் பசுக்கள் முன்னை விட அதிகம் பால் தந்தன.

    கன்றுகள்
    முட்டி முட்டி 
    பால் குடித்தே 
    களைத்தன.

    பசுக்கள்
    கன்று அருகில் 
    இல்லை என்றாலும் 
    குடம் குடமாய் 
    பால் தந்தன. 

    சில பசுக்களோ 
    மடி அருகே பால் குடத்தை கொண்டு சென்றாலே அருவி போல் 
    பால் பீய்ச்சின.

    அந்தணர்கள்
    வளர்த்து வந்த
    பசுக்களின் 
    பால் பெருக்கம் காரணமாக 
    சிவனாருக்கு 
    அதிகப் பால் குடங்களில் பாலாபிஷேகம் நடந்தது.

    மாட்டுச் சாணம் தந்த திருநீறு பூசை மாதொருபாகன் 
    மனம் மகிழ நடந்தது.

    பஞ்சகவ்வியத்தின் 
    பால் மனம் மாறா நறுமணத்தில் திருச்சேய்ஞலூரே திளைத்திருந்தது.

    விசார சருமரின்
    அரவணைப்பில் இருந்த பசுக்களின் பஞ்சகவ்வியம் 
    பசுபதி நாதரையும் திக்குமுக்காட வைத்தது.

    விளைவு ?

    எம்பிரானுக்கு 
    விசார சருமரிடம்
    விளையாடல் புரிந்து
    சோதிக்க 
    எண்ணம் வந்தது.

    அவரது 
    சிவ வேட்கையை உலகறியச் செய்து தன்னுடனேயே 
    வைத்துக் கொள்ள 
    ஆசை வந்தது.

    அதேசமயம்……

    (சண்டேசுர நாயனார் புராணம்- தொடரும்)
     

  • Muruga nayanar history

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காவிரிசூழ் நாடான
    சோழ நாட்டில் திருப்பூம்புகலூர் என்ற திருத்தலம்.

    இச் சிவதலத்திற்கு திருப்புகலூர் என்ற பெயரும் உண்டு.

    மூவர் தேவாரம் 
    பெற்ற இடம். 
    அப்பர் சுவாமிகள் 
    முக்தி பெற்ற தலம். சுந்தரமூர்த்தியாருக்கு இறையனார் செங்கல்லைப் பொன்னாக்கிக்குத்
    தந்த தலம் 
    எனப் பற்பல
     பெருமைகளை கொண்ட
    தெய்வாம்சம் நிறைந்த சிவத் தலமே திருப்புகலூர்.

    திருப்புகலூரின் திருப்புகழைச் சேர்க்க 
    தனி கோயில் கொண்டிருக்கும் 
    சிவனின் திருநாமம் வர்த்தமானீஸ்வரர்.

    சோழ நாட்டைப் போலவே இக்கோயிலும் 
    நீர் சூழ்ந்திருக்கும் பெருமை கொண்டது.

    அங்கு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் சிவனடியார் கூட்டம் ஏராளம்….  ஏராளம். அவர்கள் 
    நெற்றிமுதல் 
    உடலெங்கும் பூசும் திருநீறு 
    தாராளம்….  தாராளம். 

    திருப்புகலூரில் வாழ்வாங்கு வாழ்ந்த சிவனடியார்களில் முதன்மையானவர் 
    முருக நாயனார்.

    அவர்
    அவதரித்தது மறையோதும் 
    மறையோர் குலம்.

    சிவத் தொண்டில்
    குறிப்பாக சிவபூசையில்
    லிங்கத் திருமேனியைத் தொட்டுத் தொடும்
    அர்ப்பணிப்பு கொண்ட அந்தணர் குலம்.

    முருகநாயனார் நான்மறைகளை 
    நன்குணர்ந்தவர்.

    ஞான மார்க்கத்தில் எல்லை கண்டவர்.
    எல்லையில்லாதவன்
    ஞான எல்லைக்குள் தியானிப்பவர்.

    அவரது சிவப்பணி அருமையானது.
    நறுமணங் கமழும் 
    பெருமை கொண்டது.

    இறையனாருக்குப் 
    பல வண்ண மலர்கள் பறித்து காலத்திற்கும் தருணத்திற்கும் ஏற்றபடி மாலை கட்டி 
    உரிய நேரத்தில் 
    உரிய மாலைகளை வழங்குதலே 
    முருக நாயனாரின் 
    ஒரே சிவப்பணி.

    வேறு எதுவும் செய்யார். இறையை 
    வேறு எதுவும் வேண்டார்.

    எதுவும் வேண்டுதலற்ற பிரார்த்தனையே
    அவரது சிவவழிபாடு.

    விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் துயில் எழுவார்.

    சிவ நாமம் 
    கூறியபடியே நீராடுவார். தூய திருநீறு அணிவார். சந்தியாவந்தனம் செய்வார்.

    பலவித பூக்கூடைகளோடு வண்ண மலர்களும் வாசனை பூக்களும் தெய்வீக இலைகளும் புதிதாய் பூத்திருக்கும் 
    நந்தவனம் செல்வார்.

    முத்து கிளத்தல் என்ற சூத்திரப்படி முதலில்
    அழகுப் பூக்களை 
    மனதார ஓதுவார்.

    வண்ண மலர்களை வலிக்காமல் பறித்து தனித்தனி கூடைகளில்  அடிபடாமல் சேர்ப்பார்.

    அலர்ந்தது
    பழமையானது
    உதிர்ந்தது
    காற்றில் அடிபட்டது
    ஆடையிலும் கையிலும் எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் பட்டுத் தெறித்தது 
    புழுக்கடி
    சிலந்தி நூல்
    மயிர், எச்சம் பட்டது போன்ற மலர்களில்
    ஒன்றினைக் கூடத் தொட்டுப் பறிக்க மாட்டார்.

    பிறகு 
    பறித்த மலர்களைத் 
    தனி இடத்திற்கு 
    எடுத்துச் சென்று 
    பூமாலை தொடுப்பார்.

    அதன் பின்னர் 
    மாலைகளை எடுத்துக்கொண்டு வர்த்தமானீஸ்வரர் சன்னதி சென்று 
    மனதார பஞ்சாட்சர மந்திரம் சொல்லி மாலைகளை மாயனாருக்குச் சூடி
    சிவ ஆகமங்களில் சொல்லியவாறு அர்ச்சனை செய்து மனமுருகப் பூசிப்பார்.

    முருகநாயனார் மலர்களைப் பறிப்பதும் தனித்தனி கூடைகளில் சேகரிப்பதும்
    பின் 
    மாலைகள் தொடுப்பதும் அவற்றை 
    ஆதி முதல்வனுக்கு முறையாகச் சூட்டி 
    மறை ஓதுவதும்
    சிவபிரானே புறத்தே
    காட்டிக் கொள்ளாது
    அகத்தே கிறங்கிப் போகும்
    சிவநெறிச் செயல்கள்.

    பஞ்சாட்சர மந்திரம் 
    என்னும் 
    மகா மந்திரம் 
    உச்சரித்தபடி 
    முற்றும் உணர்ந்தோனை மூல நாதனைப்
    பூசிப்பது 
    பிறப்பு இறப்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் 
    மகிமை கொண்டது என்பது மறைகள் சொல்லும் 
    மரணமில்லாப் பெருவாழ்விற்க்கு எளியவழி.

    மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது 
    சச்சிதானந்த மயமானது என்பர் ஆன்றோர்.

    சத்து என்பது நிறம்.
    சித்து என்பது வடிவு. ஆனந்தம் என்பது மனம். இவையே சச்சிதானந்தம் என்பதே இதன் விளக்கம்.

    பூக்களைக் கொண்டு பரம்பொருளை வேண்டினால் 
    பூவினுள் மகரந்தம் பொருந்துவது போல் சிவனுள்ளே 
    சிவமணம் கமழும் என்பது ஓர் ஆன்மிகக் குறிப்பு.

    முருக நாயனாரின் 
    மலர்த் திருப்பணி மறையோன் முதல்வனின் மனம் நெகிழும் அளவிற்கு மணம் பரப்பி இருக்கும்.

    மந்தாரம் 
    கொன்றை 
    செண்பகம் முதலான
    கோட்டுப் பூக்கள் என்னும் மரத்தில் வளரும் பூக்கள்.

    நந்தியாவட்டம் 
    அலரி 
    வெள்ளெருக்கு 
    கரந்தை 
    தும்பை 
    ஆகிய நிலப் பூக்கள்.

    மல்லிகை 
    முல்லை 
    சம்பங்கி 
    ஜாதி 
    போன்ற கொடிப் பூக்கள்.

    தாமரை 
    நீலோற்பவம் 
    செங்கழுநீர் 
    உள்ளிட்ட நீர்ப் பூக்கள்.

    முதலான 
    நான்கு வகைப் பூக்களை நாசிக் காற்று கூட 
    பட்டு மாசு படாமல்  
    தன் தலைக்கு மேல் 
    உயரப் பிடிக்கும் தண்டின் மேல்முனையில் 
    கட்டப்பட்ட கூடையில் 
    மென்மையாகப் பறித்து விழச் செய்வார்.

    கோவை மாலை 
    இண்டை மாலை 
    பக்தி மாலை 
    கொன்றை மாலை 
    சர மாலை 
    தொங்கல் மாலை 
    என்று ஆறு வகையாக  திருமாலைகள் அமைத்து அந்தந்த காலத்திற்கேற்றபடி தொகுத்துக் கட்டி 
    அதற்குரிய நேரத்தில் இறைக்குச் சாத்தி ஏகாந்தம் கொள்வார்.

    மலர்களை எடுக்கும்போதும் தொடுக்கும்போதும் ஐந்தெழுத்தை உச்சரிப்பார்.
    அர்ச்சனை 
    புரியும் போது 
    தேவாரம் பாடுவார்.

    ஆகம விதிப்படி பூஜிப்பதையும் 
    இடைவிடாது 
    பஞ்சாட்சர ஜெபம் செய்து
    கொண்டிருப்பதையும்   
    அன்றாடம் கண்டு அகமகிழ்ந்த இறையனார்
    முருக நாயனாரை நிரந்தரமாகத் தன்னருகே வைத்துக் கொண்டு
    அழகு பார்க்கத் தீர்மானித்தார்.

    அதற்கு ஏற்ற நாள் அருளாளர் அனுகிரகத்தால் 
    அதி விரைவில் வந்தது.

    தன்னேரில்லா இறைவனை வணங்கி வாழும் அருளாளர்கள் திருப்புகலூர் அடிக்கடி
    வந்து செல்வது உண்டு.

    அவர்களை வணங்கி தனது திருமடம் அழைத்துச் சென்று 
    அமுது படைத்து ஆசீர்வாதம் பெறுவது முருகநாயனாரின் வழக்கம்.
    அவரது பிரதிபலன் எதிர்பாராத
    சிவத்தொண்டு கூட.

    அப்பர் பெருமான் திருநீலநக்கர் சிறுதொண்டர் போன்ற பெரும் அருளாளர்கள் திருப்புகலூர் வந்தபோது முருகநாயனார் அவர்களை 
    உபசரித்த விதம் அடியார்களிடையேயும் நாயன்மார்களிடையேயும் ஏகப் பிரசித்தம்.

    சிவஞானப் பாலுண்ட திருஞானசம்பந்தர் சுவாமிகள் 
    ஒருமுறை 
    திருபுகலூர் எழுந்தருளினார்.

    முருகநாயனார் 
    பிறவிப் பயன் அடைந்ததாக மகிழ்ந்து ஞானசம்பந்தரை அன்பாலும் பண்பாலும் அவரடி தொழுவதிலும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

    மனம் நிறைந்த ஞானசம்பந்தர் 
    அதுநாள் தொட்டு 
    முருக நாயனாரின்
    கெழுதகை நண்பரானார்.

    அந்த இனிய நட்பு 
    திருஞானசம்பந்தர் 
    வெவ்வேறு தலங்கள் சென்றபோதும் குறையாமல் நாளும் வளர்ந்து வந்தது.

    இதற்கு 
    முக்கிய காரணம் 
    முருக நாயனாரின் சிவபூசை பலனே.

    பின்னாளில் 
    ஒரு நற்செய்தி 
    ஞானசம்பந்தரிடமிருந்து 
    முருகநாயனாருக்கு அழைப்பாக வந்தது.

    அது 
    திருஞானசம்பந்தருக்கு நடைபெறவிருந்த 
    ஞாலம் போற்றும் திருமணம்.

    திருஞானசம்பந்தரின் அழைப்பை ஏற்று முருகநாயனார் 
    திருமணம் நடக்கவிருந்த திருநல்லூர் பெருமணம் சென்றடைந்தார்.

    அந்தத் 
    திருமணத்தின் 
    போது தான் 
    ஆன்மிக உலகம் 
    அதற்கு முன்னரும் பின்னரும் 
    இன்று வரை காணாத
    ஓர் அற்புதம் அரங்கேறியது.

    திருமண வேளையில் தோன்றிய
    தென்னாடுடைய
    பார்வதி மணாளன்
    திருமண விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரையும்
    சிவஜோதியில் 
    கலக்கச் செய்து
    முக்தி தந்தார்.

    அன்று அவ்விதம் 
    முக்தி பெற்ற –
    திருமணம் காணவிருந்த மணமகன் திருஞானசம்பந்தரோடும் 
    மணமகளோடும் 
    முருக நாயனாரும் சிவனோடு ஐக்கியமானார்.

    உமையிடம் 
    ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரும்
    உமையவரிடம்
    மலர்களால் நெருங்கிய
    முருக நாயனாரும் அவர்களிருவரின் தயவால்
    மணவிழா காண வந்திருந்த
    அத்தனை பேரும்
    முக்தி பெற்றதன்
    பின்னணி
    வேறு யாருக்கும் சாத்தியமில்லாதது..

    'யஜுர் வேதத்தின் 
    நடுக் காண்டத்தில் நடுப்பகுதியில் உள்ள 
    திரு ருத்திரத்தின் 
    நடுவில் இடம்பெறும்
    பஞ்சாட்சர மந்திரம் என்னும் மகா மந்திரத்தை இடையறாது 
    துதி செய்பவர் 
    இறை ஜோதியில்  கலப்பர்'
    என்னும் மறைச்சொல் 
    முருக நாயனார் 
    முக்தி பெற்றதால் நிரூபணம் கண்டது.

    'முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும்  அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

    திருச்சிற்றம்பலம்

  • Manakanjara nayanar story

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஆறு வகை 
    ஆகம நூல்களைக்
    கற்றுணந்தோர் 
    புகழ்ந்து பாடும் ஊர் கஞ்சாறூர்.

    சோழநாட்டில் 
    கஞ்சாறூரில் கொம்புத்தேன் சாறும் கரும்புச்சாறும் 
    நிறைந்து விளங்கியதால் கஞ்சாறூர் என காரணப்பெயர் பெற்றது.

    கஞ்சாறுரில் 
    வேளாளர் குலத்தில் தோன்றி
    சேனாதிபதி 
    பொறுப்பில் இருந்தவர் மானக்கஞ்சாறனார்.

    இவருக்கு 
    மான காந்தன் 
    என்ற பெயரும் உண்டு.

    சுந்தர மூர்த்தி நாயனாரின் சமகாலத்தவர்.
    சிவ பக்தி மிக்கவர்.
    சிவ பக்தர்களை வழிபடுவதும் 
    அவர்களை உபசரிப்பதும் சிவபெருமானுக்கே செய்யும் உயர் வழிபாடு என்ற கொள்கையாளர்.

    சிவ பக்தர்களின் பார்வையைக்
    கவனித்த கணமே அவர்கள் மனதில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் கேட்காமலேயே 
    வாரி வழங்கும் வள்ளல்.
    மானக்கஞ்சாறனார்.

    எல்லா பேறுகளையும் பெற்றிருந்த அவருக்கு பிள்ளைபேறு மட்டும் அமையவில்லை.

    அவரும் மனைவியும் 
    கடும் விரதம் பூண்டு கங்கைகொண்டானை 
    சிலகாலம் தொழுது 
    ஒரு பெண் மகவைப் பெற்றனர்.

    அப்பெண் குழந்தை 
    சிறிய வயதிலேயே
    அறிவாற்றல் கொண்டதாகவும் ஒப்பில்லா அழகுடையதாகவும் 
    சிவ பக்தையாகவும் விளங்கியது.

    வளர வளர 
    அழகும் 
    அறிவும் 
    பக்தியும் கூடின.

    பருவ வயதை 
    எட்டிய போது 
    பாவாடை தாவணியில் கால்கொலுசு ஒலியோடு போட்டி போட்டுக்கொண்டு அவள் 
    அன்னம் போல் நடந்ததை
    ஊரே கண்டு வியந்தது.

    முகப்பொலிவும் 
    சுருள் சுருளாய் தலைமுடியும்
    அவள் முகமொழியை
    பேரழகியென பறைசாற்றின.

    சேல் போன்ற விழியும் பால்போன்ற மொழியும் கொண்ட அவளைப் பார்த்து ஊரார் கண்படுமே என அவள் தாய் அஞ்சி சங்கு வெண்குழையணிந்த சங்கரனை 
    வேண்டியபடி தவம் இருப்பாள்.

    பருவ வயதில் 
    செம்மணித் தீபம் போல கன்னிப்பெண்ணொருத்தி இருந்தால் 
    திருமண வாய்ப்புகள் பல வரத்தானே செய்யும் ?

    வந்தது.

    மானக்கஞ்சாறனார்
    ஒத்த குடியையும் அவரையொத்த  சேனாதிபதி பதவியில் இருந்தவருமான பெருமங்கலக்குடி ஏயர்கோன் கலிக்காமனார்
    எனும் இளம் காளையிடமிருந்து மணமுடிக்கத் 
    தூது வந்தது. 

    கலிக்காமனாரும் திருநீலகண்டராகிய சிவபெருமானிடத்தில் இடையறாத அன்பு கொண்டவர்.

    பெண் கேட்டு வந்த மூத்தவர்களை 
    வரவேற்று உபசரித்து ஜோதிடரை அழைத்து கட்டம் பார்த்து சிவபிரானிடம் உள்ளத்திலேயே உரையாடி 
    சம்மதம் பெற்று 
    'சரி' என்றார் மானக்கஞ்சாறனார்.

    திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக இருதரப்பிலும் 
    ஊர் வியக்க
    நடந்து கொண்டிருந்தன.

    கஞ்சாறூரும் தெருக்களும் 
    கஞ்சாறனார் வீடும் மங்கள இசை ஒலிக்க திருமணச் சூழல் 
    களை கட்டியிருந்தது.

    அது நேரம் 
    ஒரு பழுத்த சிவபக்தர் 
    வீட்டின் வாசலில் 
    வந்து நின்றார்.

    அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே 
    எவரும் வணங்கி விழுவர். ஆசி பெறுவர்.
    அத்தகையதோர் 
    ஓங்காரத் தோற்றம்.

    அவர் தன் 
    திருச்சடைத் தலையில் ருத்ராட்ச மாலை 
    அணிந்து இருந்தார்.

    இரண்டு காதுகளிலும் பொருத்தமான குண்டலங்கள் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

    அவரது திருமார்பில் பட்டிகை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    மார்பில் 
    அணியப் பெற்றிருந்த கருநிறம் பொருந்திய மயிர்வடப் பூணூல் பார்ப்போர் கண்களைப் பரவசப்படுத்தியது.

    சூடியிருந்த
    எலும்பு மாலை 
    பய பக்தியை 
    உண்டு பண்ணியது

    நெற்றியும் திருமேனியும் திருநீறினைப் பெற்றிருந்தன.

    அவர் கால்கள்
    பஞ்ச முத்திரை 
    பதித்த திருவடிகள்.

    மொத்தத்தில் அவர் 
    மிக உயர்ந்த விரதம் பூண்ட 
    மகாவிரிதி வடிவில் இருந்தார்.

    வாசலில் வந்து நின்ற 
    மா விரத  முனிவரைக்
    (மகா விரிதி) கண்ட மாத்திரத்தில் மானக்கஞ்சாறனார் சிவநாமம் உச்சரித்தபடி அருகில் சென்று 
    அடி வணங்கி 
    வீட்டிற்குள் அழைத்தார்.

    அவரைச் 
    சிவனாகவே பார்த்த 
    மானக்கஞ்சாறனார் மலர்ந்த முகத்தோடு வீட்டில் அமர வைத்து அறுசுவை அமுதுக்கு மனைவியிடம் 
    அன்போடு ஆணையிட்டார்.

    "ஆமாம்…
    இங்கு என்னப்பா விசேஷம்?
    தெருவெங்கும் 
    பூரண கும்பங்களும் தோரணங்களும் அலங்காரம் கொண்டு
    விழாக்கோலம் பூண்டிருக்கிறதே ?

    உன் வீடு 
    மங்கள இசையோடு மனமயக்கம் செய்கிறதே !

    "ஏதேனும் விழாவா….? "
    விசாரித்தார்

    "ஐயன்மீர்….!
    தாங்கள் ஊருக்கு 
    வந்ததே விசேஷம்.

    என் வீட்டில் எழுந்தருளியிருப்பது 
    என் பிறவிப் பயன்.
    மூத்தோர் செய்த புண்ணியப் பலன்.

    என் அன்புக்குரிய மகளுக்குத் திருமணம்.

    அதற்காகவே 
    இத்தனை அமர்க்களம் !"
    என்று விவரித்து விட்டு

    "என் மகளை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும். அவள் 
    புகுந்த வீட்டில்
    திருமகளாய் திகழவேண்டும்." என்றவாரே வீட்டிற்குள் இருந்த மகளை 
    'அம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தார் மானக்கஞ்சாறனார்.

    இயற்கையாகவே 
    அழகிய தமிழ் மகள். மணப்பெண் என்றால் கேட்கவா வேண்டும்!

    கனக்கச்சித
    அலங்காரத்துடன் 
    பிறை நெற்றியில் 
    சிறை படாமலிருந்த முடிக்கற்றையை ஒதுக்கியபடி வந்தாள் அந்த யவனராணி.

    மாவிரத முனிவர் மணப்பெண்ணை அன்பொழுகப் பார்த்து ஆசிர்வதித்தார்.

    அவள் 
    திருப்பாதம் தொழுது எழுந்த போது 
    நீண்ட முடியழகை 
    வியந்து நோக்கி மானக்கஞ்சாறனாரிடம்,

    "குழந்தையின் முடியழகு திருமுடி 
    கொண்டோனுக்குப் பிடித்தமானது.

    இவள் தலைமயிர் கொண்டு பஞ்சவடி (பூணூல்) அமைத்தால் பரமனே மகிழ்வார்.

    எனக்கு 
    அப்படி அணிய ஆசை" என்றார் ஆசை ஆசையாக
    மாவிரத முனிவர்.

    ஒரு கணம் கூட யோசிக்காத மானக்கஞ்சாறனார்
    "என்ன தவம் செய்ததோ என் குலம் !
    என் மகள் செய்த புண்ணியம் தான்…." என்றவாறு 
    தன் உடைவாளை எடுத்து தனது அன்பு மகளின் அழகிய சுருள் கூந்தலை அடிவரை அறுத்து 
    மகா தவசிக்குத் தரத் திரும்பினார்.

    ஆனால் தவசி காணவில்லை.
    எவர் கண்ணிலும் அகப்படவில்லை. மாயமாய் மறந்து போயிருந்தார்.

    மா விரிதியாய் வந்து மாயமாய் மறைந்தவர்
    மாணிக்க வண்ணன் அன்றி வேறு யார் 
    இருக்க முடியும் ?

    தீராத விளையாட்டுப் பிள்ளையான 
    தில்லையம்பதியைத் தவிர வேறு யார் 
    இருக்க முடியும் !

    அக்கணத்திலேயே பேரொளியோடு 
    பார்வதி தேவியோடு காட்சி தந்தார் சிவபிரான்.

    "மானக்கஞ்சாறனாரே…!

    உன் 
    அகத்தில் அன்பு வடிவத்தில் அடக்கம் வாய்மொழியில் பண்பு கண்டு வியந்து போனேன்.

    உனது அன்பின் திறமும் அறத்தின் உரமும் கண்டு உளம் மகிழ்ந்தேன்.

    இனி எல்லாம் 
    இனிதே நடக்கும்.

    உரிய காலத்தில் 
    நீ சிவபுரி வருவாயாக!"

    என மானக்கஞ்சாறனாரை மட்டுமில்லாது 
    அவரது வீட்டில் கூடி இருந்தவர்களையும் மாலை சூடக் காத்திருந்த மணமகளையும் வாழ்த்தி மறைந்தார் இறையனார்.

    இரு கரங்களை 
    உச்சியில் குவித்த வண்ணம் 
    போற்றி போற்றி என போற்றி வணங்கினர் அத்தனை பேரும்.

    மானக்கஞ்சாறனார் இறையருளால் இப்படித்தான் மானக்கஞ்சாற நாயனார் ஆனார்.

    இறைவனின் அருட்கொடை
    இத்தோடு முடியவில்லை.

    மணப்பெண்ணின் அழகிய கூந்தல் அக்கணமே 
    பேரழகுக் கூந்தலாக மாற பேரழகுப் பெட்டகமாக அவள் ஜொலித்தாள்.
    சிவநாமம் ஜெபித்தாள்.

    ஏதுமறியா 
    மாப்பிள்ளை கலிக்காமனார் 
    வெள்ளைப் புரவி 
    ஏறியமர்ந்து உற்றார் உறவினர் புடைசூழ மணமகள் வீடு வந்தார்.

    நடந்ததைக் கேட்டறிந்து வியப்பு மேலிட்டார்.

    பரம்பொருளின் கருணையை 
    நினைந்து நினைந்து வானை நோக்கி 'கருணைக்கடலே….'  என்று கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தார்.

    பிறகென்ன…..
    பரமபிதாவின் ஆசிபெற்ற மானக்கஞ்சாற நாயனாரின் 
    மகளின் திருமணம் இனிது நடந்தது.

    பெரியோர்களிடம் ஆசி பெற்ற மணமக்கள் 
    ஊர் மக்கள் வாழ்த்த கலிக்காமனார்
    ஊருக்குச் சென்று 
    இனிய இல்வாழ்க்கையைத் தொடங்கினர்.

    இறையருள் பெற்ற மணமகள்
    பிறந்த வீடும் புகுந்த வீடும் பெருமை கொள்ளும் நல்வாழ்வைப் பெற்று 
    வாழ்ந்து வரலானாள்.

    பின்னாளில் கலிக்காமனாரும் 
    ஒரு நாயன்மார் ஆக சிவனருள் பெற்றார் என்பது சிவாம்ச செய்தி.

    'ஒரு மகள் கூந்தல் தன்னை 
    வதுவை நாள் ஒருவருக்கீந்த பெருமையார் தம்மைப் போற்றும் பெருமையென் னளவிற்றாமே'
    எனப் போற்றுகிறார் பெரியபுராணம் அருளிய சேக்கிழார் பெருமான்.

    'மலைமலிந்த தோள் வள்ளல் 
    மானற்கஞ்சாறன் அடியார்க்கு அடியேன்'
    என வணங்குகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

    திருச்சிற்றம்பலம்.

  • Kannappa nayanar part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    நாயன்மார்களில் வித்தியாசமானவர் கண்ணப்ப நாயனார்.

    காலத்தால் மிகவும் முற்பட்டவர் 
    கண்ணப்ப நாயனார்.
    அதனால்தான் அவரது இறையன்பை 
    மெச்சி வணங்கி நாயன்மார்களும் சித்தர்களில் பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் 
    புகழ்ந்து பாடியுள்ளனர்.

    அந்நாளைய 
    பொருப்பி நாட்டில்
    உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு வேடுவ மக்களை ஆண்டு வந்தான் நாகன் என்பான்.

    வேடுவர் குலம் 
    என்பதால் வேட்டையாடுதல் 
    பிரதான தொழில்.

    ஒரு சிறு நாடு.
    ஒட்டி ஓர் அடர் காடு. அடுத்து ஓர் உயர்ந்த மலை.
    இடையில் ஓர் ஆறு.

    இவைதான் 
    அவர்கள் வாழ்விடம்.  வாழ்வாதாரப் பிழைப்பிடம்.

    மரபுப்படி 
    வேட்டையும் 
    மாமிசமும் 
    கள்ளுமுமாய்
    வாழ்வைக் கொண்டிருந்த 
    வேடுவர் குல அரசன் நாகனின் நாயகியின் பெயர் தத்தை.

    வீரமும் தீரமும் திடகாத்திரமும்
    கொண்டிருந்த இருவருக்கும் ஏனோ
    பல்லாண்டு கால தாம்பத்தியத்தில் 
    பிள்ளை வாய்க்கவில்லை.

    பாராத மருத்துவம் இல்லை. 
    கேளாத
    மூத்தோர் இல்லை.

    ஏதேதோ செய்து பார்த்தும் பலன் கிட்டாததால் எல்லாம் செய்ய வல்ல மலைக் கடவுளான 
    முருகப் பெருமானை வேண்டி நின்றார் முருக பக்தர்கள் இருவரும்.

    கேட்காமலேயே அருளவல்ல 
    குறிஞ்சி நில 
    முருகப் பெருமான் நாகனுக்கும் தத்தைக்கும் பலகால வேண்டுதலுக்குச் செவி மடுத்து பிள்ளைப்பேறு அளித்தார்.

    யானை ஒத்த 
    கரிய நிறத்தில் 
    யாரையும் கவரும் 
    அழகில் ஆண்பிள்ளை.

    தாய் தத்தை முதன்முதலாக குழந்தையைத் 
    தூக்கிய போது
    'திண்' என்று இருந்ததால் 'திண்ணனார்' எனப் பெயரிட்டார் பெற்றோர்.

    திண்ணனார் 
    உரிய பருவத்தில் 
    வில் பயிற்சி முதற்கொண்டு வேட்டையாடும் 
    பயிற்சி அனைத்தும் கசடறப் பயின்றார்.

    காலம் நகர்ந்தது.
    நாகன் நடை தளர்ந்தான். மகன் திண்ணனார் அடுத்த தலைவராகத் தயாராக இருந்தார்.

    ஊர் ஜனங்கள் 
    ஒருநாள் கூடி 
    நாகனிடம் ஒரு வேண்டுதல் வைத்தனர்.

    "வேடுவர் குல அரசரே…!
    எங்கள் நாகரே…!

    நீண்ட காலமாக 
    நம் வேடுவப் படை வேட்டையாடச் 
    செல்லாமல் இருந்ததால் மலைச்சாரலில் விளையும் பயிர்களையும் உயிர்களையும் காட்டுவிலங்குகள் 
    துவம்சம் செய்து விடுகின்றன.

    இனியும் 
    தாமதிக்காமல் வேட்டையாடிட வேண்டும்." 

    தளர்ந்திருந்த நாகன் மலர்ந்த முகத்தோடு  'மகன் திண்ணனாரே
    இனி உங்கள் தலைவர்' என முடிசூட்டினான் மாபெரும் விழா எடுத்து.

    மறுநாளே 
    திண்ணனாரின் தலைமையில் வேட்டுவர்களும் 
    வேட்டை நாய்களும் கொலைக் கருவிகளோடு திண்ணனாரின் 
    கன்னி வேட்டையை மின்னல் வேகத்தில் தொடங்கினர்.

    திண்ணனாருக்குத் துணையாக 
    கண்துஞ்சா 'நாணன்'
    காடு அஞ்சா 'காடன்'
    என்ற 
    இரு வீர வேடுவர்கள்
    உடன் வந்தனர்.

    திண்ணனாரின் 
    வில் திறன் 
    வேடுவரை மட்டுமல்ல வேட்டை நாய்களையும் வன விலங்குகளையும் வியக்க வைத்தது.

    காட்டுப் பன்றி 
    மான், கரடி 
    காட்டெருமை 
    யானை, புலியென 
    காட்டு விலங்குகள் திண்ணனாரின் வில்லுக்குத் 
    தப்ப முடியாமல் 
    தரையில் சாய்ந்து மாண்டன.

    குல தர்மப்படி திண்ணனாரின் வில்லம்பு 
    குட்டி விலங்குகளையோ பெண் விலங்கினங்களையோ கர்ப்பமுற்ற விலங்குகளையோ 
    பதம் பார்க்கவில்லை.

    ஓரிடத்தில் வேடுவர் விரித்த வலையில் தப்பித்தக் காட்டுப்பன்றி காடதிரும் உறுமலோடு 
    புயல் வேகத்தில் 
    மலை நோக்கிப் 
    பாய்ந்தோடியது.

    திண்ணனார் 
    கண்களில் 
    சட்டெனப் பட்டது 
    அந்தக் காட்டுப் பன்றி.

    துரத்தினார்.
    வேகமாகத் துரத்தினார். அதிவேகமாகத் துரத்தினார்.
    நாணனும் காடனும் 
    களைப்புறும் அளவிற்கு துரத்தி ஓடினர் மூவரும்.

    கடைசியில் 
    மலைக்கும் காட்டுக்கும் இடையில் 
    இரு தேக்கு மரத்திற்கு இடையில் 
    மாட்டிய காட்டுப்பன்றியை வெட்டி வீழ்த்தினார் திண்ணனார்.

    நாணனும் காடனும் 
    எடுத்த தாகத்திற்கு தண்ணீர் குடித்துவிட்டு எடுக்கும் பசிக்கு பன்றியைக் கறியாக்கி உண்டுவிட்டு 
    வேட்டை தொடரலாம் 
    என வேண்டினர்.

    "தண்ணீருக்கு எங்கே செல்வது?" என்று திண்ணனார் கேட்க
    அருகில் 
    அரை காத தூரத்தில்
    பொன்முகலி ஆறு 
    என்று ஒன்றிருப்பதாகச்  சொன்னான் அனுபவசாலியான நாணன்.

    இருவரையும் 
    பன்றியைத் தூக்கி 
    வரச் சொல்லிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தார் கொஞ்சம் கூட களைப்படையா திண்ணனார்.

    ஆற்றங்கரையில் 
    நீர் அருந்தும் போது திண்ணனாரின் கண்களை ஈர்த்தது மிக அருகில் இருந்த பேரழகு கொண்ட மாமலை.

    "இது என்ன மலை?"
    என்று கேட்டார்.

    "இதுதான் 
    காளஹஸ்தி மலை.

    மலை உச்சியில் குடுமியுடன் கூடிய இறைவன் இருக்கிறார். அவரைக் 'குடுமித் தேவர்' என்பார்கள்" 
    என்றான் நாணன்.

    திண்ணனாருக்கு அப்போதெல்லாம் இறைவனைப் பற்றியோ இறைவழிபாட்டைப் பற்றியோ 
    ஏதும் தெரியாது.

    அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'இரை'.. விலங்குகளின் மாமிசம்.

    திண்ணனாரின் கண்களை ஈர்த்த
    காளஹஸ்தி மலை இப்போது அவரது 
    மனத்தை இழுத்தது.

    "நீ பன்றியைப் பதமாய் சமைத்து வை" என்று காடனிடம் சொல்லிவிட்டு நாணனை  இழுத்துக்கொண்டு மலையை 
    நோக்கி நடந்தார் 
    மலை போன்ற மார்பு கொண்ட திண்ணனார்.

    மலை அடிவாரம் வரை திண்ணனார்  
    விரைந்து நடந்தார்.
    அப்படி ஈர்த்தது 
    அந்த மலை.

    மலை ஏறத் 
    தொடங்கிய நொடியிலேயே திண்ணனாரின் மனநிலை 
    அறிவுநிலை 
    ஆற்றல் நிலை 
    அடியோடு மாறத் தொடங்கியது.

    வேடனாக வந்து 
    குறப் பெண்ணை மணமுடித்த 
    வேலவனின் கருணையால் அவதரித்த வேடுவன் அல்லவா?

    எப்போதும் 
    வேடன் கோலம் பூண்டிருக்கும்
    திண்ணப்பர் அல்லவா ?

    முன் எப்போதும் சந்தித்திராத
    ஓர் ஏகாந்த அலை
    அவருள் பாய்ந்தது.
    அவ்வலையினால் 
    ஏற்பட்ட அதிர்வுகள் அவரை ஆட்கொண்டன.

    முற்பிறவிப் பயனோ என்னவோ 
    இதுவரை பெற்றிராத குதூகலத்துடன் 
    மன அமைதியுடன் 
    மலை ஏறினார் 
    குடுமிச் சாமியைத் தரிசிக்க.

    ஓரிடத்தில் 
    தோள்களில் இருந்த சுமைகளும் 
    இன்னொரு கட்டத்தில் மனதில் இருந்த பாரங்களும் 
    குறைந்த மாதிரி உள்ளுணர்வு உண்டானது.

    ஓர் இடத்தை கடக்கும் போது ஐந்து துந்துபிகளின் ஓசை 
    கடல் அலைபோல் அவருக்குக் கேட்டது.

    அதுவரை உடுக்கை பம்பை, சிறுபறை ஓசைகளை மட்டும் கேட்டிருந்த திண்ணனார்
    "இது என்ன ஓசை?"
    என்று நாதனிடம் 
    கேட்டார் ஆர்வத்துடன்.

    அது இறை அழைப்பு 
    என அறியாத நாணன் எந்த ஓசையும் அவனுக்குக் கேட்காததால் 'மலைத்தேன் வண்டுகளின் சத்தம்' எனக் கூறி சமாளித்தான்.

    ஒருவழியாக 
    குடுமித் தேவரின் இருப்பிடத்தை அடைந்தனர் இருவரும்.

    சிவலிங்கமாகக் காட்சியளித்த 
    குடுமித் தேவரைப்
    பார்த்த மாத்திரத்தில் திண்ணனார்
    தடுமாறிப் போனார்.
    உயர்ந்த அன்பின் அதிர்வலைகள் அவரைத் திக்குமுக்காட வைத்தன.

    சிவலிங்கத்தின்
    அருகில் ஓடினார்.
    ஆரத் தழுவினார். முத்தமிட்டார். 
    அக மேகம் குளிர
    கண்ணீர் பொழிந்தார்.

    இறைவனை விட்டு 
    ஒரு கணமும்
    பிரியாதிருக்கும் 
    மனநிலைக்கு 
    மறுகணமே வந்துவிட்டார்.

    'ஐயோ…
    யார் துணையுமின்றி தனியாக இருக்கிறாரே..!  காட்டு விலங்குகள் இரவில் வந்து 
    துன்பம் தராதோ' என்றெல்லாம் அஞ்சினார்.

    சிவலிங்கத்தின் 
    மீதும் சுற்றியும் 
    மலர்கள் தூவப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் 
    "யார் செய்த வேலை இது?" என்று வினவினார்.

    "நான் ஒருமுறை 
    உனது தந்தை நாகனுடன் இங்கு வந்தேன்.

    அப்போது ஒரு பிராமணர் லிங்கத்தின் தலையில் 
    நீர் வார்த்து
    இலைகளையும் பூக்களையும் சூடி அர்ச்சித்துக் கும்பிடக் கண்டேன் "என்றான் நாணன்.

    அப்போதுதான் திண்ணனாருக்கு 
    நினைவுக்கு வந்தது
    'இறையனாருக்குப் பசிக்குமே!'

    உண்மையில் 
    தன் பசியை 
    மறந்திருந்தார் 
    திண்ணனார்.
    அந்த அளவிற்கு சிவனாருடன் லயித்திருந்தார்.

    "வா… உணவு எடுத்து வரலாம்"
    நாணனை
    அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக 
    மலை இறங்கினார்.

    ஆற்றங்கரையில் பக்குவமாய்
    பன்றிக் கறி சமைத்துக் காத்திருந்தான் காடன்.

    ஆங்கிருந்த தேக்குமர இலை பறித்தார்
    திண்ணனார்.

    மாமிசத் துண்டுகளை ஒவ்வொன்றாய் 
    பற்களில் அதுக்கிப்
    பதம் பார்த்து ருசித்து அவற்றைப் 
    பிரித்தெடுத்து 
    இலையில் வைத்தார்.

    தானும் தின்னாமல் தங்களையும் 
    தின்ன விடாமல் முற்றிலும் மாறிவிட்ட
    திண்ணனாரை 
    நாணனும் காடனும் திட்டாத குறைதான்.

    "திண்ணனாரே…! 
    நீங்கள் எங்கள் அரசர். ஊர் திரும்ப வேண்டாமா?"என்று காடன் கேட்டுக் கொண்டிருந்த போதே பதிலேதும் சொல்லாமல் மலை நோக்கி தனித்து நடக்க ஆரம்பித்தார் திண்ணனார்.

    ஒருகையில் 
    பன்றி இறைச்சி.
    மறு கையில் வில் 
    கணை சகிதமாக.

    பின்னர் 
    நாணன் 
    நடந்ததைச் சொல்ல 
    மனம் நொந்த காடன் 
    'தெய்வப் பித்து தலைக்கேறி விட்டது' என்று தலையில் அடித்தபடி நாணனுடன்  ஊருக்குப் புறப்பட்டான்.

    திண்ணனார் 
    தன்னை 
    உடும்புப் பிடியாய்
    பிடித்து விட்ட
    குடுமித் தேவரைத் தரிசிக்க 
    மலை ஏறத் 
    தொடங்கினார்

    ஒவ்வொரு அடியும் சிவனடியை 
    நெருங்கும் அடி என்று அவர் அறிந்தார் இல்லை.

    வழியில் 
    பூத்திருந்த பூக்களையும் துளிர்த்திருந்த இலைகளையும் 
    பறித்து தன் தலையில் 
    செருகிக் கொண்டார்.

    ஒரு சிற்றருவியில் 
    சிதறிக் கொண்டிருந்த நீரைக் கைஏந்தி 
    தன் வாய் நிறைக்க வைத்துக் கொண்டார்.

    சிவலிங்கம் இருக்கும் இடம் வந்ததும் 
    நாணன் சொல்லியிருந்த பிராமணர் செய்த அபிஷேகத்தைத் 
    தனக்குத் 
    தெரிந்த அளவில் 
    செய்ய ஆரம்பித்தார்.

    முதலில் 
    நாதர் முடிமேல் இருந்த பழைய மலர்களை செருப்பணிந்த கால்களால் 
    கீழே தள்ளிவிட்டார்.
    கீழே விழுந்த மலர்களை கால்களால் 
    சற்று தூரம் 
    தள்ளி விட்டார்.

    வாய் நீரை உமிழ்ந்து லிங்கத்தைச் சுத்தப்படுத்தினார்.

    தன் தலையில் 
    செருகி இருந்த மலர்களையும் இலைகளையும் சிவலிங்கம் 
    மேல் வைத்து 
    அழகு பார்த்தார்.

    கடைசியாக 
    தேக்கு மர இலையில் வைத்துக் 
    கொண்டு வந்திருந்த 
    பன்றி மாமிசத்தைப் படையலாக 
    வைத்து நின்றார்.
    அனிச்சையாய் 
    கை கூப்பினார்.

    அப்படியே 
    லிங்க ரூபத்தை 
    ரசித்திருந்தவர் 
    இரவு நேரம் வந்துவிட்டதை உணர்ந்து இறைவன் தனித்திருக்க வேண்டாம் எனக் கருதி விலங்குகள் நெருங்காதிருக்கும் வண்ணம் 
    சற்று தள்ளி நின்று வில்லோடு 
    காவல் காக்க ஆரம்பித்தார்.

    இரவு முழுதும் 
    ஒரு நொடி கூட கண்ணிமைக்காமல் காவல் காத்தார் திண்ணனார்.

    (கண்ணப்ப நாயனார் புராணம் -தொடரும்)
     

  • Enadi nadha nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மறுநாள் 
    ஏனாதி நாதருக்கு 
    ஒரு செய்தி அனுப்பினான்
    அதிவீரன்.

    "எதற்கு 
    அனாவசியப் போர் ?அப்பாவிகள் ஏன் 
    உயிர் விட வேண்டும்??

    நமது இருவருக்கும் 
    தானே பகை ?

    பக்கத் துணை யாருமில்லாமல் 
    போர் செய்வோம்.

    நானும் தனித்து வருகிறேன்.
    நீயும் தனியாளாய் வா.

    ஒத்தைக்கு ஒத்தை பார்த்து விடுவோம் 
    ஒரு கை.

    ஊர் எல்லையில்
    இருக்கும் 
    காட்டுப்பகுதியே 
    சண்டைக் களம்.

    வென்றவர் மட்டுமே 
    வருங்காலத்தில்
    வாட் பயிற்சிக்கு வாத்தியார்"

    என்பதே வந்த ஆள் சொன்னார் 
    போர்முரசின் சாராம்சம்.

    சொன்ன நாளில் 
    குறித்த நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருந்தார் 
    ஏனாதி நாதர்.

    தனியாளாக 
    வருகிறானா…
    இல்லை…
    காட்டில் பலரை முன்னேற்பாடாக 
    ஒளித்து வைத்திருக்கிறானா
    என நினைத்தாரே தவிர ஆயிரம் பேர் வந்தாலும் எதிர் கொள்ளத் 
    தயாராக இருந்தார் ஏனாதிநாதர்.

    அதிசூரனும் 
    அப்படி ஒரு திட்டத்தில் தான் இருந்தான்.

    ஆனால் அதை விட 
    ஒரு பெரும் சூழ்ச்சியின் சூட்சமம் 
    அவனுள் 
    பொறி தட்டியதால்
    அத்திட்டத்தைக் கைவிட்டான்.

    ஏனாதிநாதர் 
    நாற்புறமும் 
    பார்வையைச் சுழற்றியவாறே காத்திருக்க 
    அதிசூரன் 
    ஒரு கையில் வாளுடனும் மறுகையில் கேடயத்துடனும் 
    தனித்தே வந்தான்.

    ஆனால் 
    ஏனோ முகத்தை கேடயத்தால் மறைத்தபடி
    வந்தான்.

    அவனைப் பார்த்த மாத்திரத்தில் 
    ஓ(ம்)வென கத்தியவாறே அவன்மீது
    புலி போல் பாய்ந்தார்  ஏனாதி நாதர்.

    கேடயம் அவன் 
    முகம் விட்டு நழுவியது.

    முகத்தில் திருநீறு. 
    அதுவும் மூன்று கீற்று.

    ஏனாதி நாதருக்குப் போரிடத் தோன்றவில்லை.

    'திருநீறு அணிந்து 
    சிவன் ஆகிவிட்டவனிடம் வாட்போரா…?

    தவறு….  தவறு

    நல்லவேளை வாளை வீசாதிருந்தேன்'

    கேடயத்தையும் கூர்வாளையும் 
    தாழ்வாக்கி 
    அதிசூரனைப் பார்த்து புன்னகைத்தார் ஏனாதிநாதர்.

    திட்டம் பலித்து விட்ட மகிழ்வில் 
    ஏனாதி நாதரை 
    வாள் வீசி 
    கொல்லத் துடித்தான் அதிசூரன்.

    அவன் அப்படி 
    செய்து விடுவானோ என ஏனாதிநாதரும் பயந்தார்.

    ஒரு சிவ வடிவில் இருப்பவருக்கு 
    கொலை செய்த
    பழிபாவம் வந்துவிடுமோ என தான் 
    ஏனாதியார் பயந்தார்.

    சிவ பக்தனுக்குத் 
    தோஷம் வந்துவிடக்கூடாது 
    என்று அஞ்சிய 
    ஏனாதி நாதர் 
    போர் புரிபவர் போல் கொஞ்சம் நடித்தார்.

    சும்மா போரிட்டபடியே 
    அவனிடம் 
    தன் எண்ணம் சொல்லி இனிமேல் அவனே 
    வாள் வித்தை கற்பிக்கட்டும் 
    என்று உறுதி சொல்லி
    வாட் போரை 
    நிறுத்தி விடலாம் 
    என நினைத்தார்.

    ஆனால் ஆத்திரக்காரனுக்குப் 
    புத்தி மட்டு என்பதை உறுதியாக்கும் வகையில்
    ஏனாதி நாதரின்
    நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளாத அதிசூரன் 
    அதிவீரன் போல் 
    ஏனாதி நாதரை 
    வாள் வீசிக் கொன்றான்.

    ஜெயபேரிகை 
    கொட்டிய வண்ணம்
    ஊராரிடம் 
    தம்பட்டம் அடிக்க
    ஊருக்கு விரைந்தான்.

    அப்போது செஞ்சடை மின்னலிட வெளிப்பட்டார் இந் நாடகத்தின் இயக்குனர் 
    சிவபிரான் தேவியோடு.

    "வெண் திருநீறு அணிந்தவரெல்லாம் சிவவடிவம் என 
    எப்பேதமுமின்றி 
    பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருக்கும்
     ஏனாதி நாதரே!

    எனதன்பு 
    ஏனாதி நாத நாயனாரே!

    விழித்திடு. எழுந்திரு."

    ஆண்டவனின் கட்டளையை 
    அப்படியே ஏற்றார் 
    ஏனாதி நாத நாயனார்.

    உயிர் பிழைத்து
    உயிர்ப்போடு எழுந்து 
    தாள்பணிந்து 
    இறை வணங்கி நின்றார்.

    "மெய்யன்பரே…!

     

    வஞ்சகனின் 
    சூதை மீறி 
    திருமண் அணிந்திருந்ததாலே அவனை
    என் போல் பாவித்து கொலை ஏற்று 
    உலகப் பாசம் 
    அறுத்த அருளாளரே…!

    நீர் என்றென்றும் 
    எம்மை விட்டுப் பிரியாத வாழ்வைப் பெறுவாயாக!

    வா….
    சிவபுரி  செல்வோம்."

    என அழைத்தார் 
    சிவபுரித் தலைவர்.

    காட்டிலிருந்த 
    ஓரறிவு முதல்
    ஐந்தறிவு வரையிலான ஜீவிகள் அனைத்தும்
    வியந்து பார்க்க வானிலிருந்து விழுந்த மலர்களை நுகர்ந்தபடி
    விண்ணில் பறந்து மறைந்தார் 
    ஏனாதி நாத நாயனார்.

    'வேடநெறி நில்லார்
    வேடம் பூண்டு 
    என்ன பயன் ?'
    என்ற திருமூலர் வாக்குப்படி
    சிவனடியார் போல் 
    பொய் வேடம் பூண்ட அதிசூரன் 
    ஊர் தூற்ற வாழ்ந்து பின்னரும் நரகத்தில் துன்பமுற்றான் 
    என்கிறார்
    வாரியார் சுவாமிகள்.

    கிபி 660-840 வாக்கில் இயற்பகை நாயனார் இளையான்குடி நாயனார் ஏனாதி நாத நாயனார் வாழ்ந்ததாக ஓர்
    ஆய்வுக் குறிப்பு உள்ளது.

    'ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

    திருச்சிற்றம்பலம்.

    (ஏனாதிநாத நாயனார் புராணம்- முடிவுற்றது)
     

  • Enadhi naadha nayanar puranam

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    புலிக்கொடி பறந்த சோழநாட்டில் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் 
    அரிசிலாற்றங்கரையில் சிவபுரி போல் அமைந்திருக்கும் அருள்மிகு ஊர் எயினனூர்.

    அவ்வூரில் தான் அவதரித்தார் 
    ஏனாதி நாத நாயனார்.

    ஏனாதி நாத நாயனார் 
    ஈழகுலச் சான்றார் குலத்தைச் சேர்ந்தவர்.
    கள் இறக்கும் சமூகம்.

    சான்றார் என்பதே காலப்போக்கில் 
    சாணார் என்று மருவியதாகச் சொல்வர்.

    அக்காலத்தில் 
    சேனைத் தலைவர்களுக்கு ஏனாதியர் என்ற 
    பெயர் இருந்தது.

    சங்க காலத்தில் 
    அரசர்கள் 
    ஏனாதியருக்கு 
    நெற்றியில் அணியும் தங்கப் பட்டமும் 
    விரலுக்கு 
    ஏனாதி மோதிரமும் அளித்து வருவதை மரபாகக் கொண்டிருந்தனராம்.

    இப்படிப்பட்ட 
    சிறப்பான குலத்தில் தோன்றிய ஏனாதிநாதர் சிவனிடத்தில் 
    பேரன்பு கொண்டவர்.

    சிவ கோலத்தில் இருப்பவர்களைக் கண்டால் 
    மனம் நெகிழ்ந்திடுவார்.

    நெற்றியில் திருநீறு 
    அணிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பரவசமாகி விடுவார்.

    புனித திருநீறைப் முக்கீற்றாகப் 
    பூசுபவர்கள் 
    ஏனாதி நாதரைப பொறுத்தமட்டில் 
    பூசிக்கத்தக்கவர்கள்.

    அதற்கு அவரிடம் 
    நிறையக்
    காரணங்கள் இருந்தன.

    திருநீறு 
    சிவபக்தியின் புறச்சின்னம்.

    அகம்பாவம் 
    சுயநலம் 
    மயக்கம் என்ற மும்மலங்களை அழிக்கவல்லது.

    பொருளாசை பெண்ணாசை
    புத்திர பாசம் 
    ஆகிய 
    மூன்று ஆசைகளைத் துறக்க வைப்பது.

    உலகப்பற்று 
    சமய வேத வாக்குவாதம் மற்றும் நம்பிக்கை 
    உடல் பற்று 
    ஆகிய மனச் சார்புகளைப் போக்கவல்லது.

    தூல சரீரம் 
    ஆவி சரீரம் 
    காரண சரீரம் 
    ஆகிய மூவகை உடல் பற்றுகளைக் கடந்து நிற்கச் செய்வது.

    விழிப்பு நிலை 
    கனவு நிலை 
    ஆழ்ந்த உறக்க நிலை முதலான 
    மூவகை அவஸ்தைகளிலிருந்து விலகி
    இறைவனோடு 
    கலக்க வைப்பது.

    பிணி நீக்கி 
    பிறப்பு இறப்பு 
    உள்ளிட்ட எல்லா நோய்களையும் நீக்கி முக்தியைத் தரவல்லது.

    இவை போன்ற
    ஆன்றோர் வாக்கினைப் 
    பரிபூரணமாக நம்பியதால் சிவ உருவமாகவே பார்த்தார் 
    விபூதி பூசியவர்களை.

    அவர்கள் 
    ஆசைப்பட்டால் 
    தன் உயிரைத் தரவும் சித்தமாக இருந்தார்.

    அவரைப் 
    பொறுத்த மட்டில் 
    திருநீறு சிவனின் ரூபம்.

    சிவ பணிக்கு அப்பால் ஏனாதி நாதரின் வருமானத்திற்கு
    ஒரு தொழில் இருந்தது.

    அது அரச குடும்பத்தினருக்கும் இளம் காளையருக்கும் வாள் பயிற்சி பயிற்றுவிப்பது.

    அதில் வரும் வருமானத்தில் திருநீறுடன் வருவோருக்கும் 
    சிவனடியாருக்கும் 
    உதவி, உபசரணை செய்துவந்தார்.

    வேண்டியவர் வேண்டாதவர் 
    நண்பர் பகைவர் 
    என்று பாராமல்
    உதவி புரிந்து வந்தார்.

    வாள் வலியும் 
    தோள் வலியும் 
    சிவ வலியும் 
    பெற்றிருந்த அவருக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பேரும் புகழும் 
    பெருகி வந்தது.

    மாணாக்கர் கூடினர்.
    ஓய்வறியாது கற்பித்தார்.
    ஊருக்கே உதவி வந்தார்.

    எல்லோருக்கும் 
    இன்பம் தரும் சந்திரன் கள்வருக்கு 
    வெறுப்பைத் தரும் அல்லவா ?

    நல்லரின் வளர்ச்சியை வெறுத்த புல்லன் 
    ஒருவன் அவ்வூரில் இருந்தான்.

    ஆதி சூரன் 
    எனப் பெயர் பெற்றிருந்த அவன் ஏனாதி நாதரின் உறவினன்-பங்காளி.

    அவனும் 
    வாள் பயிற்சி  
    கற்பிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தான்.

    அவன் வெறும் 
    வாய் வீச்சு வீரன்.
    தற்பெருமைக்காரன்.

    தனக்கு 
    ஒப்பாரும் மிக்காரும் யாருமில்லை 
    எனக் கருதிய 
    தலைக்கனத்தான். 

    வாள் வித்தை பயிற்றுவிக்கும் உரிமை தனக்கு மட்டும் 
    இருக்க வேண்டும் என பேராசைப்பட்டான்.

    ஆனால் அவனிடம் 
    கற்க வருபவர் எண்ணிக்கை 
    நாளுக்கு நாள் குறையவே அத்தனை ஏமாற்றமும் ஏனாதி நாதர் மீது வன்மையாய் பொறாமையாய் பகையாய் 
    வெடித்த வண்ணம் இருந்தது.

    இந்த முறையில்லாப் பகை காரணமாக 
    ஒரு நாள் 
    தன் உற்றாரையும் தன்னிடம் கற்றாரையும் கற்போரையும் 
    கொலைத் தொழில்
    புரிவோர்களையும் சேர்த்துக்கொண்டு படைகலன்களோடு வந்து ஏனாதிநாதர் 
    வீட்டில் தனித்திருந்த நேரம் பார்த்து  
    வீட்டின் முன் நின்று
    போருக்கு அழைத்தான்.

    அஞ்செழுத்தானை நெஞ்சில் கொண்ட
    அஞ்சா நெஞ்சரான ஏனாதிநாதர் 
    தனித்தே தயாரானார் போர் அறியா 
    பொய் வீரன் 
    அறைகூவலைக் கேட்டு.

    இடுப்பில் 
    இறுகக் கட்டிய கச்சையோடும்
    காலில் கட்டிய 
    வீரக்கழங்களோடும் 
    ஒரு கையில் 
    வாளுடனும் 
    மறு கையில் கேடயத்துடனும் 
    ராஜ சிங்கமாக 
    வீர கர்ஜனையோடு வெளியே வந்தார் ஏனாதிநாதர்.

    சிங்கத்தை சந்திக்க சிங்கத்தின் குகைக்கே வந்த குள்ள நரி போல அதிசூரன் 
    நின்றதைக் கண்டு சிரிப்புத் தான் வந்தது ஏனாதி நாதருக்கு.

    அதற்குள் 
    அக்கம் பக்கத்திலிருந்த அவரின் உறவினர்களும் மாணவர்களும் ஓடிவந்து 
    நிலைமை உணர்ந்து ஏனாதிநாதர் 
    இருபக்கமும் 
    அரண் போல் நின்றனர்.

    கூட்டத்தைப் பார்த்ததும் பயந்து போன 
    அதிசூரன் புத்திசாலித்தனமாய்,

    "ஏனாதியாரே…!
    இங்கு வேண்டாம் சண்டை… 
    இப்போதும் வேண்டாம்…

    சாலைக்கரைக் குளம் அருகே உள்ள 
    திடலுக்கு வா… 
    அதுவே 
    இருவருக்குமான 
    பொது இடம்.

    வாள் பயிற்சி தரும் தகுதி வெற்றி பெற்றவருக்கே"
    என 
    நிபந்தனை விதித்தான்.

    அவனே நாளும் குறித்தான்.

    அந்நாளில் 
    அதிசூரனின் கூலிப்படையும்
    ஏனாதி நாதரின் 
    வாள் படையும்
    திடலில் கூடின.

    உண்மையில் 
    ஒரு பெரும் 
    போரே நடந்தது.

    எக்கச்சக்கமானோர்
    கை இழந்தனர்
    கால் இழந்தனர்.
    தலை இழந்தனர்.

    தரைமண் 
    செங்குருதி
    மயமாகியது.

    பிணக் குவியலை கழுகுகள் வட்டமிட்டன.

    ஒருகட்டத்தில் 
    உயிர்பிழைத்தோரும் அதிவீரனும் 
    புறமுதுகிட்டுத் தப்பியோடினர்.

    அன்று இரவு
    அதிவீரனுக்குத் 
    தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
    அவமானம் மேலும் அவமானப்படுத்தியது.

    நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என நேர்மையாகத் தீர்மானித்தான்.

    ஏதேனும் தந்திரத்தால் வஞ்சகத்தால் 
    வெற்றி பெறலாம் 
    என முடிவெடுத்தான்.

    யோசித்தபடியே 
    தூங்கிப் போனான்.

     

    (ஏனாதி நாத நாயனார்  புராணம் -தொடரும்)