Tag: History

  • Muruga nayanar history

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காவிரிசூழ் நாடான
    சோழ நாட்டில் திருப்பூம்புகலூர் என்ற திருத்தலம்.

    இச் சிவதலத்திற்கு திருப்புகலூர் என்ற பெயரும் உண்டு.

    மூவர் தேவாரம் 
    பெற்ற இடம். 
    அப்பர் சுவாமிகள் 
    முக்தி பெற்ற தலம். சுந்தரமூர்த்தியாருக்கு இறையனார் செங்கல்லைப் பொன்னாக்கிக்குத்
    தந்த தலம் 
    எனப் பற்பல
     பெருமைகளை கொண்ட
    தெய்வாம்சம் நிறைந்த சிவத் தலமே திருப்புகலூர்.

    திருப்புகலூரின் திருப்புகழைச் சேர்க்க 
    தனி கோயில் கொண்டிருக்கும் 
    சிவனின் திருநாமம் வர்த்தமானீஸ்வரர்.

    சோழ நாட்டைப் போலவே இக்கோயிலும் 
    நீர் சூழ்ந்திருக்கும் பெருமை கொண்டது.

    அங்கு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் சிவனடியார் கூட்டம் ஏராளம்….  ஏராளம். அவர்கள் 
    நெற்றிமுதல் 
    உடலெங்கும் பூசும் திருநீறு 
    தாராளம்….  தாராளம். 

    திருப்புகலூரில் வாழ்வாங்கு வாழ்ந்த சிவனடியார்களில் முதன்மையானவர் 
    முருக நாயனார்.

    அவர்
    அவதரித்தது மறையோதும் 
    மறையோர் குலம்.

    சிவத் தொண்டில்
    குறிப்பாக சிவபூசையில்
    லிங்கத் திருமேனியைத் தொட்டுத் தொடும்
    அர்ப்பணிப்பு கொண்ட அந்தணர் குலம்.

    முருகநாயனார் நான்மறைகளை 
    நன்குணர்ந்தவர்.

    ஞான மார்க்கத்தில் எல்லை கண்டவர்.
    எல்லையில்லாதவன்
    ஞான எல்லைக்குள் தியானிப்பவர்.

    அவரது சிவப்பணி அருமையானது.
    நறுமணங் கமழும் 
    பெருமை கொண்டது.

    இறையனாருக்குப் 
    பல வண்ண மலர்கள் பறித்து காலத்திற்கும் தருணத்திற்கும் ஏற்றபடி மாலை கட்டி 
    உரிய நேரத்தில் 
    உரிய மாலைகளை வழங்குதலே 
    முருக நாயனாரின் 
    ஒரே சிவப்பணி.

    வேறு எதுவும் செய்யார். இறையை 
    வேறு எதுவும் வேண்டார்.

    எதுவும் வேண்டுதலற்ற பிரார்த்தனையே
    அவரது சிவவழிபாடு.

    விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் துயில் எழுவார்.

    சிவ நாமம் 
    கூறியபடியே நீராடுவார். தூய திருநீறு அணிவார். சந்தியாவந்தனம் செய்வார்.

    பலவித பூக்கூடைகளோடு வண்ண மலர்களும் வாசனை பூக்களும் தெய்வீக இலைகளும் புதிதாய் பூத்திருக்கும் 
    நந்தவனம் செல்வார்.

    முத்து கிளத்தல் என்ற சூத்திரப்படி முதலில்
    அழகுப் பூக்களை 
    மனதார ஓதுவார்.

    வண்ண மலர்களை வலிக்காமல் பறித்து தனித்தனி கூடைகளில்  அடிபடாமல் சேர்ப்பார்.

    அலர்ந்தது
    பழமையானது
    உதிர்ந்தது
    காற்றில் அடிபட்டது
    ஆடையிலும் கையிலும் எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் பட்டுத் தெறித்தது 
    புழுக்கடி
    சிலந்தி நூல்
    மயிர், எச்சம் பட்டது போன்ற மலர்களில்
    ஒன்றினைக் கூடத் தொட்டுப் பறிக்க மாட்டார்.

    பிறகு 
    பறித்த மலர்களைத் 
    தனி இடத்திற்கு 
    எடுத்துச் சென்று 
    பூமாலை தொடுப்பார்.

    அதன் பின்னர் 
    மாலைகளை எடுத்துக்கொண்டு வர்த்தமானீஸ்வரர் சன்னதி சென்று 
    மனதார பஞ்சாட்சர மந்திரம் சொல்லி மாலைகளை மாயனாருக்குச் சூடி
    சிவ ஆகமங்களில் சொல்லியவாறு அர்ச்சனை செய்து மனமுருகப் பூசிப்பார்.

    முருகநாயனார் மலர்களைப் பறிப்பதும் தனித்தனி கூடைகளில் சேகரிப்பதும்
    பின் 
    மாலைகள் தொடுப்பதும் அவற்றை 
    ஆதி முதல்வனுக்கு முறையாகச் சூட்டி 
    மறை ஓதுவதும்
    சிவபிரானே புறத்தே
    காட்டிக் கொள்ளாது
    அகத்தே கிறங்கிப் போகும்
    சிவநெறிச் செயல்கள்.

    பஞ்சாட்சர மந்திரம் 
    என்னும் 
    மகா மந்திரம் 
    உச்சரித்தபடி 
    முற்றும் உணர்ந்தோனை மூல நாதனைப்
    பூசிப்பது 
    பிறப்பு இறப்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் 
    மகிமை கொண்டது என்பது மறைகள் சொல்லும் 
    மரணமில்லாப் பெருவாழ்விற்க்கு எளியவழி.

    மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பது 
    சச்சிதானந்த மயமானது என்பர் ஆன்றோர்.

    சத்து என்பது நிறம்.
    சித்து என்பது வடிவு. ஆனந்தம் என்பது மனம். இவையே சச்சிதானந்தம் என்பதே இதன் விளக்கம்.

    பூக்களைக் கொண்டு பரம்பொருளை வேண்டினால் 
    பூவினுள் மகரந்தம் பொருந்துவது போல் சிவனுள்ளே 
    சிவமணம் கமழும் என்பது ஓர் ஆன்மிகக் குறிப்பு.

    முருக நாயனாரின் 
    மலர்த் திருப்பணி மறையோன் முதல்வனின் மனம் நெகிழும் அளவிற்கு மணம் பரப்பி இருக்கும்.

    மந்தாரம் 
    கொன்றை 
    செண்பகம் முதலான
    கோட்டுப் பூக்கள் என்னும் மரத்தில் வளரும் பூக்கள்.

    நந்தியாவட்டம் 
    அலரி 
    வெள்ளெருக்கு 
    கரந்தை 
    தும்பை 
    ஆகிய நிலப் பூக்கள்.

    மல்லிகை 
    முல்லை 
    சம்பங்கி 
    ஜாதி 
    போன்ற கொடிப் பூக்கள்.

    தாமரை 
    நீலோற்பவம் 
    செங்கழுநீர் 
    உள்ளிட்ட நீர்ப் பூக்கள்.

    முதலான 
    நான்கு வகைப் பூக்களை நாசிக் காற்று கூட 
    பட்டு மாசு படாமல்  
    தன் தலைக்கு மேல் 
    உயரப் பிடிக்கும் தண்டின் மேல்முனையில் 
    கட்டப்பட்ட கூடையில் 
    மென்மையாகப் பறித்து விழச் செய்வார்.

    கோவை மாலை 
    இண்டை மாலை 
    பக்தி மாலை 
    கொன்றை மாலை 
    சர மாலை 
    தொங்கல் மாலை 
    என்று ஆறு வகையாக  திருமாலைகள் அமைத்து அந்தந்த காலத்திற்கேற்றபடி தொகுத்துக் கட்டி 
    அதற்குரிய நேரத்தில் இறைக்குச் சாத்தி ஏகாந்தம் கொள்வார்.

    மலர்களை எடுக்கும்போதும் தொடுக்கும்போதும் ஐந்தெழுத்தை உச்சரிப்பார்.
    அர்ச்சனை 
    புரியும் போது 
    தேவாரம் பாடுவார்.

    ஆகம விதிப்படி பூஜிப்பதையும் 
    இடைவிடாது 
    பஞ்சாட்சர ஜெபம் செய்து
    கொண்டிருப்பதையும்   
    அன்றாடம் கண்டு அகமகிழ்ந்த இறையனார்
    முருக நாயனாரை நிரந்தரமாகத் தன்னருகே வைத்துக் கொண்டு
    அழகு பார்க்கத் தீர்மானித்தார்.

    அதற்கு ஏற்ற நாள் அருளாளர் அனுகிரகத்தால் 
    அதி விரைவில் வந்தது.

    தன்னேரில்லா இறைவனை வணங்கி வாழும் அருளாளர்கள் திருப்புகலூர் அடிக்கடி
    வந்து செல்வது உண்டு.

    அவர்களை வணங்கி தனது திருமடம் அழைத்துச் சென்று 
    அமுது படைத்து ஆசீர்வாதம் பெறுவது முருகநாயனாரின் வழக்கம்.
    அவரது பிரதிபலன் எதிர்பாராத
    சிவத்தொண்டு கூட.

    அப்பர் பெருமான் திருநீலநக்கர் சிறுதொண்டர் போன்ற பெரும் அருளாளர்கள் திருப்புகலூர் வந்தபோது முருகநாயனார் அவர்களை 
    உபசரித்த விதம் அடியார்களிடையேயும் நாயன்மார்களிடையேயும் ஏகப் பிரசித்தம்.

    சிவஞானப் பாலுண்ட திருஞானசம்பந்தர் சுவாமிகள் 
    ஒருமுறை 
    திருபுகலூர் எழுந்தருளினார்.

    முருகநாயனார் 
    பிறவிப் பயன் அடைந்ததாக மகிழ்ந்து ஞானசம்பந்தரை அன்பாலும் பண்பாலும் அவரடி தொழுவதிலும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

    மனம் நிறைந்த ஞானசம்பந்தர் 
    அதுநாள் தொட்டு 
    முருக நாயனாரின்
    கெழுதகை நண்பரானார்.

    அந்த இனிய நட்பு 
    திருஞானசம்பந்தர் 
    வெவ்வேறு தலங்கள் சென்றபோதும் குறையாமல் நாளும் வளர்ந்து வந்தது.

    இதற்கு 
    முக்கிய காரணம் 
    முருக நாயனாரின் சிவபூசை பலனே.

    பின்னாளில் 
    ஒரு நற்செய்தி 
    ஞானசம்பந்தரிடமிருந்து 
    முருகநாயனாருக்கு அழைப்பாக வந்தது.

    அது 
    திருஞானசம்பந்தருக்கு நடைபெறவிருந்த 
    ஞாலம் போற்றும் திருமணம்.

    திருஞானசம்பந்தரின் அழைப்பை ஏற்று முருகநாயனார் 
    திருமணம் நடக்கவிருந்த திருநல்லூர் பெருமணம் சென்றடைந்தார்.

    அந்தத் 
    திருமணத்தின் 
    போது தான் 
    ஆன்மிக உலகம் 
    அதற்கு முன்னரும் பின்னரும் 
    இன்று வரை காணாத
    ஓர் அற்புதம் அரங்கேறியது.

    திருமண வேளையில் தோன்றிய
    தென்னாடுடைய
    பார்வதி மணாளன்
    திருமண விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரையும்
    சிவஜோதியில் 
    கலக்கச் செய்து
    முக்தி தந்தார்.

    அன்று அவ்விதம் 
    முக்தி பெற்ற –
    திருமணம் காணவிருந்த மணமகன் திருஞானசம்பந்தரோடும் 
    மணமகளோடும் 
    முருக நாயனாரும் சிவனோடு ஐக்கியமானார்.

    உமையிடம் 
    ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரும்
    உமையவரிடம்
    மலர்களால் நெருங்கிய
    முருக நாயனாரும் அவர்களிருவரின் தயவால்
    மணவிழா காண வந்திருந்த
    அத்தனை பேரும்
    முக்தி பெற்றதன்
    பின்னணி
    வேறு யாருக்கும் சாத்தியமில்லாதது..

    'யஜுர் வேதத்தின் 
    நடுக் காண்டத்தில் நடுப்பகுதியில் உள்ள 
    திரு ருத்திரத்தின் 
    நடுவில் இடம்பெறும்
    பஞ்சாட்சர மந்திரம் என்னும் மகா மந்திரத்தை இடையறாது 
    துதி செய்பவர் 
    இறை ஜோதியில்  கலப்பர்'
    என்னும் மறைச்சொல் 
    முருக நாயனார் 
    முக்தி பெற்றதால் நிரூபணம் கண்டது.

    'முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும்  அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

    திருச்சிற்றம்பலம்

  • Oonam Festival History

    மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது ஓணம் பண்டிகை. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கேரளாவில் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.

    இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர்.

    இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார். 

    அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.

    யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான். 

    வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.

    அப்போது, சுக்ராச்சாரியார் அவனை தடுத்து, ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவாக இருக்கும், எதையும் யோசித்து செய்’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலி, ‘என் தானத்தின் அருமை அறிந்து மகாவிஷ்ணுவே தானம் பெற வந்திருக்கிறார். அவருக்கு தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றான். உடனே, சுக்ராச்சாரியார் கருவண்டாக உருமாறி, கமண்டல நீரின் வழியை அடைத்தார். வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்தினார். பின்பு, வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான். 

    உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.

    பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், ‘கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார். 

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
     

  • Sangadahara chadurthi history

    முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

    சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைத்தார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

    ஸ்ரீகிருஷ்ணர் நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற்பட்டது. எனவே அவர் இந்த விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீளப் பெற்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.

    தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

    இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைபிடித்து நவகிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.

    மேலும், இந்திரன், இராவணன் போன்றோர் இந்த விரதத்தின் மூலம் பலன் அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

  • Thia Poosam History

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்டது போர்….
    தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை…. 
    சிவபெருமானிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். 

    சிவபெருமானே எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் மன்றாடினர். 

    கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழ கான குழந்தைகளாயின.

    கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார். அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

    அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். 

  • Thiru Onam History

     முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

    மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். 

    திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். 

    பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

  • Shakthi Peedangal thondriya varalaru

    சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!

    பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

    இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

    ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
    இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் கூறுகிறது.

    சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.
    இதோ 51 சக்தி பீடங்கள்.
    1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
    2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
    3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
    4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
    5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
    6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
    7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
    8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
    9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
    10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
    11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
    12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
    13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
    14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
    15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
    16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
    17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
    18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
    19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
    20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
    21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
    22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
    23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
    24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
    25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
    26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
    27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
    28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
    29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
    30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
    31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
    32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
    33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
    34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
    35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
    36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
    37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
    38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
    39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
    40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
    41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
    42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
    43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
    44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
    45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
    46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
    47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
    48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
    49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
    50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
    51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.