Tag: Thirupathy

  • Thirupathyil June 14 Jestabisegam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவர் சிலைக்கு தினமும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சிலைகள் சேதமடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட மாதத்தில் சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டு வருகிறது.

    அது போல், இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 14-ம் தேதியில் இருந்து 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாளான 14-ம் தேதி உற்சவர் மலையப்ப சுவாமி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும் வைர கவசம் அணிவிக்கப்படுகிறது. 

    வைர கவசத்துடன் உற்சவர் மலையப்பசுவாமி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 2-வது நாளான 15-ம் தேதி முத்துக்கவசமும், 3-வது நாளான 16-ம் தேதி மலையப்ப சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது மீண்டும் உற்சவர் மீது அணிவிக்கப்பட்ட கவசம் அகற்றப்படும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 14-ம் தேதி நிஜபாத தரிசனம், 15-ம் தேதி வசந்த உற்சவம், 16-ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த 3 நாட்களிலும் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமாலை சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களின்றி ஏகாந்தமாக நடத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Thirupathy Heavy Rush

    திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிகிக்க கட்டுக்கடங்கா பக்தர்கள் கூட்டம் இருப்பதால் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆனது.

    வார விடுமுறை, பள்ளிகள் கோடை விடுமுறை முடிய உள்ளது போன்ற காரணங்களால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பல ஆயிரம் பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கம் எங்கும் மனித தலைகளாகவே காணப்பட்டன.

    இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலுள்ள அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்து கொண்டிருந்தனர்.

    இதனால் சுமார் 30 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து உள்ளே அனுப்ப தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.  எனவே 300 ரூபாய் டிக்கட், திவ்ய தரிசனம் டோக்கன்கள்,  இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை வாங்கி சென்ற  பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சற்று அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
     

  • Thirupathy Perumal Adhisaya Thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
     

  • Thirupathy Ezhumalayan Koil Rain Yagam

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் காஞ்சி மடம் இணைந்து  மழை வேண்டி திருமலையில் காரீரி இஸ்டி யாகம் நடைபெற்று வருகிறது.  இதற்காக  தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா  மாநிலங்களில் இருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு  யாகம் நடைபெற்று வருகிறது.

     நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் போதிய மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று தொடங்கிய காரீரி இஸ்டி யாகம் 18 ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. 

     

    மேலும் திருப்பதி மலை  அடிவாரத்தில் உள்ள  கபிலேஷ்வர சாமி கோவிலில் வருண ஜபத்தையும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது.

     இந்நிலையில் திருமலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் காரீரி இஸ்ட்டி யாகத்தை தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதியினர் சமேதர்களாக காரீரி இஸ்ட்டி யாகத்தில் கலந்து கொண்டனர்.  

    உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை, கருப்பு ஆடு ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நடத்தினர்.

    இதேபோல் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வர சுவாமி கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் இசைக்கலைஞர்கள் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்த வர்ஷ்னிராக ஆலாபனை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், கடந்த 2017 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்ட்டி யாகம், வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன அந்த ஆண்டில் சிறப்பான முறையில் மழை பெய்து  நாடு செழிப்படைந்தது. இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்ட்டி யாகத்தைத் தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும், நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள் என்று கூறினார்.

    இம் மாதம் 18 ம் தேதி வரை காரீரி இஸ்ட்டியாகம், வருணஜபம், அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடை பெறும் என அவர் தெரிவித்தார்.
     

  • thirupathy malaiappar

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான இன்று மாலை குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் எழுந்தருளினார். பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட திருக்கல்யாண வைபவத்தை தேவஸ்தானம் திருமலையில், 3 நாள்கள் பரிணய உற்சவமாக நடத்தி வருகிறது.

    அதன்படி, திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் நேற்று திங்கட்கிழமை  விமரிசையாக தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான இன்று  மாலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கில் பரினய மண்டபத்திற்கு  ( கல்யாண மண்டபத்துக்கு ) எழுந்தருளினர். 

    அதன்பின், அவர்களுக்கு திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, தீப தூப ஆராதனை செய்து, அவர்கள் இருவரையும் ஊஞ்சலில் அமர வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தினர். பின்னர், இரவு மீண்டும் உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இதில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான இணை செயல் அலுவலர் லட்சுமிகாந்தம், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் மற்றும் அதிகாரிகளும், அர்ச்சகர்களும், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

  • Thirupathy Thyagaraja Jayanthi Urchavam

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் பாபவிநாசம் சாலையில் உள்ள கல்யாண மேடையில்  252 ஆவது தியாகராஜர் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. 

    இதில் தியாகராஜ ஸ்வாமி பஞ்சரத்ன கீர்த்தனைகள் , உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத  வித்வான்களின் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. இதில் ஸ்ரீ பத்மாவதி பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இசை மற்றும் நாட்டிய கல்லூரி மாணவ ,மாணவிகள், அன்னமாச்சாரியா,  இந்து தர்ம பிரசார பரிஷத் கலைஞர்கள் என 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் சங்கீத கச்சேரிகள் நடைபெற்றது. 

    இதில் வெங்கடேஸ்வரா சங்கீத கல்லூரி முதல்வர் பத்மாவதி நிகழ்ச்சி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம் ரெட்டி ,பிரபல சங்கீத வித்வான் புதுக்கோட்டை ராமநாதன் ,ஹைதராபாத் சகோதரர்கள் சேஷாச்சாரி, ராகவாச்சாரி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இருந்து வந்த வீணை, வயலின், டோலு, நாதஸ்வர கலைஞர்களின் சங்கீத இசை கச்சேரி நடைபெற்றது .இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டும் கேட்டு ரசித்தனர்.

  • Thirupathy selbavarkal Sella vendiya koil

    திருப்பதிக்கு செல்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்தால்தான் திருப்பதி சென்றுவந்த பலன் கிடைக்கும். அது எந்த கோயில் என்று தெரியுமா?

    இலங்கையில் நடந்த  போரின் போது லட்சுமணன் மயங்கி விழ, சஞ்சீவினி மூலிகைக்காக சஞ்சீவிமலையை எடுத்து வந்த அனுமன், ஓரிடத்தில் அமர்ந்து கைமாற்றிவைத்து எடுத்துச் சென்ற இடம் எதுவென்று தெரியுமா?

    அதுதான் மலையை கீழே வையாத ஊரான திருமலைவையாவூர். சென்னையை கடந்து மதுராந்தகம் செல்லும் முன்பாக படாளம் கூட்டுரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் சாலையில் ஒருமலை தெரியும். அங்குதான் வீற்றிருக்கிறார் பிரசன்ன வெங்கடேசபெருமாள். மலையேறிச் செல்லபடிக்கட்டுகள் இருக்கின்றன. கார்கள், வாகனங்கள் செல்ல மலைப்பாதையும் இருக்கிறது.

    இங்குமூர்த்தி, ஆதிவராகப் பெருமாள். திருப்பதி கோயிலைப் போல ஆதிவராகர் சன்னதிக்குப் பிறகு தான் பிரசன்ன வெங்கடேசபெருமாள்.
    மலையேறிச் சென்றதும் முதலில் தென்படுவது கம்பீரமான கோயில் கொடிமரம் அதனைக் கடந்து சென்றதும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதி. அலர் மேலமங்கை தாயார் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் இருக்கிறது. 

    மனதார வழிபட்டு வெளியே வந்ததும் அடுத்துள்ளது சக்கரத்தாழ்வாருக்கு தனிசன்னதி. அங்கு விமான தரிசனம் செய்ய வேண்டியது அவசியம். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி போல இருப்பது இக்கோயிலின் சிறப்பு.

    திருப்பதி திருக்கோயிலை கட்டிய அபராஜிதவர்ம பல்லவமன்னன் வேண்டியவாறு குதிரைகள் பூட்டிய ரதத்தில் காட்சியளித்ததால் பிரசன்ன வெங்கடேசராக அழைக்கப்படுகிறார்.

    சுவாமி குதிரை பூட்டிய ரதத்தில் காட்சியளித்ததன் அடையாளம், குதிரை குளம்பின் அடையாளத்துடன் கோயிலின் வெளியே காணப்படுவதை இன்றும் காணலாம்.

    முகூர்த்த நாட்களில் இக்கோயிலில் கல்யாணங்கள் நடப்பதை அதிகம் பார்க்கலாம்.

    திருப்பதிக்கு சென்றுவந்தவர்கள் இந்த கோயிலில் வந்து பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டால்தான், திருப்பதி சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பதால், திருப்பதி செல்பவர்கள் தவறாமல் வரவேண்டியதலமும் கூட. 

    ஒருமுறை வந்து பாருங்கள். பிரசன்ன வெங்கடேச பெருமாள், வாழ்க்கையை பிரகாசமாக்குவதை கண்கூடாகஉணர்வீர்கள். 

    ஓம்நமோநாராயணாய

    –    எழுத்தாளர் பாமா

  • Thirupathy Anna Dhanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்களாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்களில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத்துக்கு தினமும் 16 ஆயிரம் கிலோ அரிசி, 6 ஆயிரத்து 500 கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒருநாளைக்கு அன்னதானத்துக்கு ரூ.26 லட்சம் செலவாகியது. தற்போது விலைவாசி உயர்வால் ஒருநாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது என தேவஸ்தான கணக்குத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

    எனவே திருமலையில் பக்தர்களுக்கு ஒருநாளைக்கு இலவசமாக அன்னதானம் செய்ய ரூ.26 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். அவர்களின் பெயரில் பக்தர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படும். ஒருநாளைக்கு செலவாகும் தொகையை செலுத்த முடியாதவர்கள் 3 வேளையில் ஏதேனும் ஒரு வேளை உணவை மட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்.

    அதில் காலை ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.7 லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். மதியம் ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். ஒருநாளைக்கு பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத் தும் திட்டம் இந்த மாதம் (மே) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் காணிக்கை வழங்கி உள்ளனர். அதன் மூலம் இதுவரை ரூ.1,071 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அந்த காணிக்கை தொகை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து தான் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • thirupathy arjith seva tickets

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 67,737 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  

    ஆன்லைன் குலுக்கல் முறையில் 11,412 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 8, 117
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 180
    நிஜபாத தரிசனம் – 2, 875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 53,675 நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7, 425
    வசந்த உற்சவம் – 14,300
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 15,600
    இந்த டிக்கெட்  www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

  • Thirupathy Temple Yearly Income

    திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையின் மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார் ரூ.845 கோடி வட்டியாக கிடைத்து வருவதா திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும். இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானம் வசம் உள்ளன. அதில் ஆபரண தங்கம் உருக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாற்றப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில், 5,387 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.