Tag: Thirupathy

  • Thirupathy ticket timing changed

    திருப்பதியில்  ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்  நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்களின் ஆதார் கார்டுகளை வைத்து நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. 

    பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் விதமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

    எனவே பக்தர்கள் திருப்பதியில் உள்ள அரசு பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறை, திருப்பதி  ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது சத்திரம், அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் இனி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நாள் தோறும் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் செலுத்தும் காணிக்கை பல கோடி ரூபாய் ஏழுமலையான் உண்டியலில் நிறம்பி வழிகிறது. இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில் இதுதான். திருப்பதியில், ஶ்ரீவாரி உண்டியலும், லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தரும் உன்னதங்கள்.

    திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, அசையா சொத்துக்கள், பொன்னாபரணங்கள், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணம், தினம்தோறும் நடைபெறும் திருமலை சேவா மூலம் கிடைக்கும் பணம், நேர்த்திக்கடனாக, காணிக்கையாகவென உண்டியலில் செலுத்தப்படும் பணம், லட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என பலவகைகளிலும் வருமானம் வருகிறது. இந்த பணமெல்லாம் ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்பட்டு அதற்கேற்ப பல்வேறு நல்ல காரியங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது. 

    இவையாவும் திருமலை-திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் அறங்காவலர் குழுவினரின் மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்படுகின்றது. பிரதானக் கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்,  கோவிந்தராஜ ஸ்வாமி கோயில், சீனிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும்  இந்த வருமானத்திலிருந்தே பராமரிக்கப்படுகின்றன.

    இவை தவிர திருமலையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் வேறு பல கோயில்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது. திருமலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள்,  இலவச லாக்கர்கள், இலவச குளியலறைகள், இலவச கழிப்பறைகள் என பல்வேறு வசதிகள் தரமான முறையில் வழங்கப்படுகின்றது.

    பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானம் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையைப் பெற்றதாகும். 

    கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இவை தவிர இலவச பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. ஸ்ரீவெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திர பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள், மலர்கள், செடிகொடிகள் மற்றும் பசுமை மிக்க மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

    கடவுளின் கடைக்கண் பார்வை படுவதற்கு ஒரு பக்தர் செய்யக்கூடிய பல காரியங்களில், அன்னதானம் வழங்குவது மிக உயர்ந்த காரியமாகக் கருதப்படுகிறது. அன்னச் சத்திரங்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே நன்கொடைகள் மூலம் நடத்தப்பட்டு வந்ததாக, கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வளாகத்தைச் சுற்றியும் இருக்கின்ற கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றளவும், அன்னதானத் திட்டத்தின் வாயிலாக, மேல்திருப்பதியில் தினமும் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்ற இத்திட்டம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளால்தான் நடத்தப்படுகின்றது.

    அன்னதானத் திட்டத்தை என்றென்றைக்கும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நன்கொடையாகக் கிடைக்கும் பணம் முழுவதையும் தேவஸ்தானம் தேசிய வங்கிகளில் முதலீடு செய்கிறது. அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றது. 

  • Thirupathy Azhvar thirumanjanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் ஆறாம் தேதி யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவையுடன் தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி  விஸ்வ சேனாதிபதியுடன்  இணைந்து ஆனந்த நிலையத்தை கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து தங்க கதவு அருகே கொலு வைக்கப்பட உள்ளது.

    பின்னர்  மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய வருட  பஞ்சாங்கத்தை கோவிலின் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷித்தலு படித்து காண்பிக்க உள்ளார். யுகாதி ஆஸ்தானத்தை ஒட்டி ஏப்ரல் ஆறாம் தேதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

    மேலும் யுகாதியை ஒட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று  நடைபெற்றது. ஏழுமலையான் கோவிலில் யுகாதி , ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரக் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

    அவ்வாறு ஏப்ரல் ஆறாம் தேதி யுகாதி தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி இன்று  கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11மணி வரை பக்தர்கள்  அனுமதிக்கப்படுவது  நிறுத்தப்பட்டு கோவில் முழுவதும் மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. 

    இதை அடுத்து பச்சைக்கற்பூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கலவையை கோவில் சுவற்றில் தெளிக்கப்பட்டது. இதனை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுவது வழக்கம். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று சுத்தம் செய்யப்பட்டு மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர்  மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் மற்றும் ஜீயர்கள் பங்கேற்றனர். கோயில் ஆழ்வார் திருமஞ்னத்தை ஒட்டி அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.

  • Thirupathy theppa thiruvizha

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சீதா, ராமர், லட்சுமணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    இரண்டாவது நாளான இன்று இரவு ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி அமர்ந்து காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். 

    மூன்றாவது நாளான நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
     

  • Thirupathy Direct dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரடியாக மகா துவாரம் என படக்கூடிய  ராஜகோபுரத்தின் வழியாக நேரடியாக  செல்ல கூடிய தரிசனத்திற்கு அனுமதிக்கக்  கூடியவர்களின் பட்டியலை அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது.

    1, ஜனாதிபதி
    2, துணை ஜனாதிபதி
    3, பிரதமர்
    4, ஆந்திர மாநில கவர்னர்
    5, முன்னாள் ஜனாதிபதி,  முன்னாள் துணை ஜனாதிபதி
    6, துணை பிரதமர்
    7, உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி
    8, நாடாளுமன்ற சபாநாயகர்
    9, ஆந்திர மாநில முதல்வர்
    10, மத்திய அமைச்சர்கள்
    11, மற்ற மாநில முதல்வர்கள்
    12, மற்ற மாநில கவர்னர்கள்
    13,  உச்சநீதிமன்ற நீதிபதிகள்
    14, ஆந்திர மாநில அமைச்சர்கள்
    15, முன்னாள் பிரதமர்
    16, முன்னாள் கவர்னர், முன்னாள் ஆந்திர மாநில முதல்வர்
    17, முன்னாள் உச்சநீதிமன்ற  முதன்மை நீதிபதி
    18, ஆந்திர மாநில சட்டமன்றத் சபாநாயகர், துணை சபாநாயகர்
    19, சட்டமேலவை சபாநாயகர், துணை சபாநாயகர்
    20, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி

    ஆகிய 20 பேர்  பட்டியலுடன் கூடிய அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது
     

  • Thirupathy Koil Theporchavam

    திருப்பதி வேங்கடேசப் பெருமாள் தெப்போற்ஸவ நிகழ்ச்சி, நேற்று மாலை, கோயில் அருகிலிருக்கும் சுவாமி புஷ்கரணியில் நடைபெற்றது.

    தெப்போற்ஸவ விழா இன்று தொடங்கி, அடுத்த ஐந்து நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோயில் திருக்குளம் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    உற்சவத்தின் முதல் நாளான இன்று, கோதண்டராம சுவாமி, சீதா லட்சுமண சமேதராக எழுந்தருளுகிறார். நாளை, ருக்மணி கிருஷ்ணர் அலங்காரத்திலும், நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாள்களும், தேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி திருக்கோலத்திலும் வேங்கடவன் தெப்பத்தில் பவனி வருவர்.

    விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி, திருமலை தேவஸ்தானம் வசந்தோற்ஸவம், சகஸ்ரதீப அலங்காரம் ஆகிய ஆர்ஜித சேவைகளை ரத்துசெய்துள்ளது. 

  • Ammavaru App

    திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான படங்கள் குறித்து பக்தர்கள் விளக்கம் பெறுவதற்காக "பத்மாவதி அம்மவாரு ஆப்' என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகிலுள்ள தோட்டத்தில், தாயாரின் அவதாரம் குறித்த விளக்கப்படங்கள் தற்போது வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களின்மூலம், தாயாரின் அவதாரம் குறித்த புராணத் தகவல்களைப் பக்தர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்தப் படங்கள், விரைவில் செயலி வடிவத்துக்கு மாறும் எனத் தெரிவித்தார்.

    இந்தச் செயலிக்கு, `பத்மாவதி அம்மவாரு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியில், தாயாரின் புகைப்படங்களைத் தொட்டால், அந்தப் படங்கள்குறித்த தகவல்களை அறியலாம். மேலும், கோயில் மண்டபத்திலுள்ள சிலைகள்குறித்த விவரங்களையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். `பத்மாவதி அம்மவாரு' செயலி, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     அத்துடன் கோயில் மண்டபங்களில் உள்ள சிலைகள் குறித்த தகவல்களையும் இந்தச் செயலியில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை தேவஸ்தானம் விரைவில் அறிமுகம் செய்யும் என்றார் அவர்.
     

  • Thirupathy Arjitha sevaigal Cancel

    திருப்பதி கோயிலில் 16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.  தெப்ப உற்சவத்தை அடுத்து 16 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு மார்ச் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 

    தெப்ப உற்சவத்தையொட்டி தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாளான 16ம் தேதி இரவு 7 மணிக்கு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சுவாமியும், இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் தெப்பலில் மூன்று சுற்றுகள் வலம் வர உள்ளனர். கடைசி மூன்று நாட்கள் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகின்றனர். 

    இதில் மூன்றாவது நாள் மூன்று சுற்றுகளும், நான்காவது நாள் ஐந்து சுற்றுகளும், ஐந்தாவது நாள் ஏழு சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தெப்ப உற்சவத்தையொட்டி 16 மற்றும் 17ம் தேதி வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையும், 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் ஆர்ஜித சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • Ranil in thirupathy

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்தினார். ரணில் தனது 80 கிலோ எடைக்கு ஒரு ரூபாய் நாணயங்கள் அடங்கிய 16 ஆயிரத்து 160 ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளார். 

  • Thirupathy theporchavam

    திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது.
     
    வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கோவில் தெப்பகுளத்தில் வருடாந்திர தெப்ப திருவிழா நடக்கிறது. திருமலையில் புதிதாக ரூ.97 கோடியில் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சேவை புரியும் 2 ஆயிரம் சேவகர்கள் ஓய்வு பெற வசதியாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில்களில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்ச் 5 மற்றும் 12-ந்தேதிகளில் ஊனமுற்றோர், முதியோர்கள், மார்ச் 6 மற்றும் 16-ந்தேதி 5 வயது குழந்தைகள் தங்களது தாய், தந்தையருடன் காலை 9 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் பக்தர்கள் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.82 கோடியே 77 லட்சமும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81 கோடியே 13 லட்சமும் வருமானமாக கிடைத்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.