Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • மீனாட்சி அம்மனை தரிசித்த மேத்யூ ஹேடன்!

    ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டர்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை பிரபலப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் மதுரை சென்றார்.

    மதுரை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், மதியம்.12.30 மணியளவில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.

    கோயிலுக்கு வந்த அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே ஹேடனுக்காக, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் முழுவதையும் ஹேடன் சுற்றிப் பார்த்தார். அர்ச்சகர்கள், ஹேடனுக்கு மீனாட்சி அம்மன் கோயிலின் பெருமைகளை விளக்கிக் கூறினர்.

  • ராஜகோபுரத்தில் விரிசல்… சரி செய்யும் பணிகள் தீவிரம்…

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கோபுரத்தில், 13 நிலைகளில் சேதமடைந்துள்ள படிகளை சீரமைக்க, இரும்பு தூண் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. பணியின் போது, ராஜகோபுரத்தில் மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள, நான்காவது தூணில், மேற்கூரையில், பத்து டன் எடை கொண்ட பீமில், நான்கு அடி தூர விரிசல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோபுரத்தில் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளதால், ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ மூலம் ஒட்டி சீர் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துரைக்கப்பட்டது. மேலும் கோபுரத்தின், 13 நிலைகளிலும் ஏறி ஆய்வு செய்தபோது, அங்கு பொருத்தப்பட்டுள்ள தேக்கு மரத்திலான படி சேதமடைந்தது தெரிந்தது. இதையடுத்து, இந்த நிலைப்படியை மாற்றுவதற்கு பொருத்தப்பட வேண்டிய இரும்பு தூண், நேற்று கொண்டு வரப்பட்டது. இதை ஒவ்வொரு நிலைப்படியிலும் பொருத்தி, புதிய தேக்கு மரத்தால் ஆன நிலைப்படி பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணி துவங்கி நடந்து வருகிறது.

  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ யாகம்…..

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விசே‌ஷ யாகம் வரும் 17-ந்தேதி தொடங்குகிறது.
    நாட்டுமக்கள் நலனுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரார்த்தனா உபவாசம் என்ற விசே‌ஷ யாகம் நடத்தப்படுவது வழக்கம். வருகிற 17-ந்தேதி சபரிமலை சன்னிதானத்தில் இந்த விசே‌ஷ யாகம் நடைபெற உள்ளது.

    கோவிலின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் இந்த யாகத்தை நடத்த உள்ளனர். இந்த யாகத்தையொட்டி பம்பை கணபதி கோவில், மாளிகை புரத்தம்மன் கோவில்களில் விசே‌ஷ பூஜைகள் நடத்தப்படும்.

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விசே‌ஷ பூஜைகள், திருவிழாக்களின் போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
    நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

  • திருப்பதியில் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் !!

    திருப்பதியில் நன்கொடை அளிக்கும் பக்தர்களை தரிசனத்துக்கான ஏற்பபாடுகளை செய்து தர வேண்டும் என தேவஸ்தான அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நன்கொடை பிரிவு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் நன்கொடை வழங்கும் பக்தர்களிடம் இருந்து டிடி அல்லது செக் மூலம் நன்கொடை பெறவேண்டும் எனவும், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நன்கொடை பெற அதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 48 மணி நேரத்தில் இ-பாஸ் புத்தகம் வழங்கவேண்டும். அவர்களுக்கு நன்கொடை பிரிவு அலுவலகத்தில் சலுகைகளை பெற வழிகாட்டவேண்டும். நன்கொடையாளர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு விவரங்கள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், நன்கொடையாளர்களுக்கு தரிசனம், தங்கும் அறைகள் ஏற்பாடு செய்து தரவேண்டும். அவர்களை சுவாமி சன்னதியில் அலையக்கூடாது என நன்கொடை பிரிவு தலைமை அதிகாரி அறிவுறுத்தினார்.

  • சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி 7 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்ட கோயில் நடை 8 ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அண்மையில் ஆடி மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது.

    அதன் பிறகு, நிறை புத்தரிசி பூஜைக் காக நடை திறக்கப்பட்டது. அச்சன்கோயிலில் இருந்து நெற்கதிர்கள் ஊர்வலமாக சபரிமலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, மாலையில் பம்பை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்தும் நெற்பயிர்கள் கொண்டு வரப்பட்டன.
    அச்சன்கோயிலில் இருந்து நிறை புத்தரிசி பூஜைக்கு நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறை.
    பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை பூஜையறையில் கட்டி வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்

  • திருப்பதி மாதிரி கோயில்…

    கிருஷ்ணா புஷ்கரம் விழாவையொட்டி, விஜயவாடாவில் திருப்பதி ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது.
    ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரும் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கிருஷ்ணா புஷ்கரம் எனப்படும் புனித நீராடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவையொட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், விஜயவாடா பொதுப் பணித்துறை மைதானத்தில் எழுமலையானின் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஆகம விதிகளின்படி திறக்கப்பட்டது. திருமலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் சுப்ரபாத சேவை உட்பட அனைத்து சேவைகளும் திருப்பதி மாதிரி கோயிலிலும் நடைபெறும்.

    இதேவேலையில் கிருஷ்ணா புஷ்கரம் விழாவுக்காக ஆந்திராவுக்கு மட்டும் பல மாநிலங்களைச் சேர்ந்த 3 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 4,000 சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர அரசும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தென் மத்திய ரயில்வேயும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கிருஷ்ணா நதிக்கரையின் பல இடங்களில் பக்தர்கள் நீராடுவதற்காக நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பவித்ர சங்ராமம் எனப்படும் இடத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தினமும் 7.5 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக மோர், குடிநீர், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாணம்

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மிருத்தியுஞ்சய ஹோமம் நடைபெற்றது.

    கருவூர் ஸ்ரீ மகா அபிஷேகக்குழு சார்பில் 18 ஆம் ஆண்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை மிருத்தியுஞ்சய ஹோமத்துடன் தொடங்கியது. தீர்க்க ஆயுள்,நோய்கள் வராமல் காப்பது ஆகிய பல்வேறு மேன்மைக்காக இந்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் மூலமந்திர ஹஸ்த்ர மிருத்தியுஞ்சய ஜபஹோமம், பூர்ணாஹூதி,மஹா தீபாராதனை,மூல ஆலய மிருத்தியுஞ்சொரூப பசுபதீஸ்வரர் சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு ராஜகோபுரத்துக்கு மாலை சாத்துதலும்,கரூர் மேட்டுத்தெரு பெருமாள் கோயிலுக்கு பெண் வீட்டு சீர்த்தட்டு அழைக்கப்பட்டு,முக்கிய வீதிகள் வழியே பசுபதீஸ்வரர் கோயிலை வந்தடையும் நிகழ்ச்சியும், அரசு இசைப்பள்ளி குமார சாமிநாதன் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  • ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்…

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஆண்டாளின் கோயிலில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் 5-ம் திருநாளான ஆகஸ்டு 1-ம் தேதி காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

    ஏழாம் திருநாளான புதன்கிழமை இரவு கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது.

    தனித்தனி தோளுக்கினியான்களில் புறப்பாடு நடைபெற்று திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை நான்கு ரத வீதிகளின் வழியே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

  • வெள்ளிக்கிழமை … கூடுதல் சிறப்புடன் ஆடிப்பூரம் கொண்டாட்டம்….

    ஆண்டாள் அவதரித்த திருநாளான ஆடிப்பூரம் அம்மன் கோயில்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    ஆடிப்பூரம்… ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது.
    ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை, ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

    இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு. ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.
    ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வைணவ கோவில்கள் உள்ளிட்ட பல கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு, விளக்கு பூஜை என சிறப்பு வழிபாடு இன்று நடத்தப்படுகிறது.
    மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

  • ஈடு இணையில்லா பக்தி எது?…

    ஆன்மீகத்தின் முக்கிய அம்சம் இறைவனும், சகலமும் அவனே என சரணாகதி அடைவதும்தான். ஆனால் ஆன்மீக விவகாரத்தில் இறைவனை எவ்வழியில் யார்யார் எப்படியெப்படி காண்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.
    பெருமாள், முருகன், காளி, சிவன் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என பல வடிவங்களில் சொல்லப்படும் இறைசக்தியை, சிலர் மறுப்பார்கள். அதுவும் அப்பட்டமான உண்மையே..அதாவது, ‘’எல்லாவற்றையும் மிஞ்சிய சக்தி உண்டு. ஆனால் அதன் வடிவம் இப்படித்தான் என்று வரையறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்பதே இதன் பின்னணி.
    உதாரணத்திற்கு ஏதாவது உருவக்கடவுளைப்பற்றி விவாதிக்கையில், அந்த கடவுளின் சக்தி, எல்லை போன்றவை பற்றி கேள்விகள் எழும். அகில உலகத்தையும் ஒரு கடவுள் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒவ்வொரு நாட்டிலும், எத்தனையெத்தனையோ கடவுள்கள் எப்படி உருவாகமுடியும். சிவன்தான் மனித குலத்தை படைக்கிறார் என்றால் அவர் ஏன் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஆட்கொள்ளமுடியவில்லை?
    இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளெல்லாம் தேவையில்லை என்பதே இறைவனே இல்லாத நிறைபக்தி நிலை.
    உலகில் பெரும்பாலான குற்றங்களை தடுப்பது அரசோ, காவல்துறை மீதான பயமோ அல்ல. யாரும் பார்க்கமுடியாத, கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள், மோசடிகள் போன்றவற்றை ஒரு மனிதன் தவிர்ப்பது, அவனை ஆட்டிப்படைக்கும் மனசாட்சியால் மட்டுமே.
    வறுமையோடும் பசியோடும் இருப்பவர்கள், தனியாக இருக்கும் ஒரு குழந்தையின் வசமுள்ள விலையுயர்ந்த ஆபரணங்களை சுலபமாக களவாடிவிடமுடியும். கொள்ளை புத்தி கொண்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் அப்படி செய்யாததற்கு காரணம், அப்படி செய்வது பாவம் என, யாருடைய உந்துதலும் இன்றி மனசாட்சி தடுப்பதாலேயே.
    மற்றவர்களிடமிருந்து பணம், பொருள் உட்பட பல விஷயங்களை பிறர் கண்டறியாதவகையில் அபகரிக்கும் வாய்ப்பு, எடுத்துப்போகும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்கும். ஆனால் அப்படி செய்கிறோமா? தெருவில் கேட்பாரற்று கிடக்கும் ஒரு முக்கிய பொருளைக் கண்டால் அதன் உரியவரிடம் சேர்க்கத்தான் பெரும்பாலானோரின் மனது துடிக்கும். இதுதான் மனசாட்சியின் மகிமை.
    இப்படி எல்லாவகையிலும் குற்றங்களை தடுத்தும் நல்ல புத்திகளை கொடுப்பதுமான மனசாட்சியும், தன்னம்பிக்கையும் சேர்ந்த ஒரு அம்சம்தான் நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்.
    கடவுள் நமக்கு அள்ளியும் கொடுக்கவும் மாட்டார்.. நம்மிடமிருந்து பறிக்கவும் மாட்டார். நம்மை ஆசிர்வதிக்கவும் மாட்டார்..தண்டிக்கவும் மாட்டார்.. ஏனெனில் கடவுள் என்ற ஒருவரே கிடையாது. நம்முள் இருக்கும் மனசாட்சியும், ‘இனி நடக்கும் எதுவும் நல்லதாகவே நடக்கும்’ என்ற பலத்தை தரும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு அரூபமே, மகா சக்தி என்கிற சிந்தனை.
    கும்பிடுகிற கோவிலில் உள்ள சாமி எதுவாக இருந்தாலும், அது நம்முடைய உள்தோற்றதை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடிதான்.
    வழிபாடு என்ற பெயரில் நாம் சரணாகதி அடைகிறோம். நம்முடைய தவறுகளை மனம்விட்டு ஒப்புக்கொண்டு மனதை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என திருத்திக்கொள்கிறோம். நாம் கும்பிடும் சாமி நமக்கு நல்லதே செய்யும் என அடியோடு நம்புகிறோம்..
    எப்பேர்பட்டவரும் கோவிலுக்குள் வழிபடும்போது சரணாகதி அடையாமல் ‘’நான் வந்திருக்கிறேன்..எனக்கு நீ அருள் புரிந்தே தீரவேண்டும்’’ என்று அகங்காரத்துடன் வழிபடுவதே கிடையாது.. சர்வ நாடிகளும் ஒடுங்கிவிடும் தருணம்.
    நமக்குள் இருக்குள் ஆற்றலை நாமே வழிபட்டுக்கொள்வதுதான் இறைவனில்லா ஆனால் ஈடுஇணையில்லா பக்தி.

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.