Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு….

    திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி சாம்ப சிவ ராவ் தெரிவித்துள்ளார்.
    திருமலைக்கு வரும் பக்தர் களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று ஆன்லைன் சேவை டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்படுவதாகவும், இதன் மூலம் வெளி மாநில பக்தர்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக விரைவில் திருமலையில் காம்ப்ளக்ஸ் கட்டப்படும் எனவும் இந்த காம்பளக்ஸில் அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் சுவாமியை தரிசிக்கலாம் என்றும் கூறினார்.

    அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சாம்ப சிவ ராவ் தெரிவித்துள்ளார்.

  • திருப்பதியில் ஆர்ஜித சேவை தற்காலிக ரத்து

    பவித்ரோற்சவத்தை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தினமும் நடக்கும் பூஜைகளில் அல்லது யாராவது தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காகவும், தோஷங்களுக்காகவும் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
    அதன்படி இந்தாண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவமூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை வைர, வைடூரியம் அணிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், பூவராக சுவாமி கோயிலில் பவித்ர மாலை சமர்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் …..

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி,
    ஆகஸ்டு 17 ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுதினம் 18 ஆம் தேதி மாலை 3.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி திருவிழா

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்டு 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிசேகம், செப்டம்பர் 11ல் பிட்டு உற்சவம் நடக்கிறது.

    திருவிழா முக்கிய நிகழ்வுகள்….
    ஆகஸ்டு 27ல் ஆவணி மூல திருவிழா வாஸ்து சாந்தி.
    ஆகஸ்டு 28 காலை 8.30 மணிக்கு மேல் 8.54 மணிக்குள் கொடியேற்றம்.
    ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 2 வரை: காலை, இரவு சந்திரசேகர் உற்சவம் 2ம் பிரகாரம் புறப்பாடு.
    செப்டம்பர் 3 ஆவணி மூல உற்சவ முதல் திருநாள் கருங்குருவிக்கு உபதேசம்.
    செப்டம்பர் 4 இரண்டாம் திருநாள் நாரைக்கு மோட்சமருளிய லீலை.
    செப்டம்பர் 5 மூன்றாம் திருநாள் மாணிக்கம் விற்ற லீலை.
    செப்டம்பர் 6 நான்காம் திருநாள் தருமிக்கு பொற்கிழியருளிய லீலை.
    செப்டம்பர் 7 ஐந்தாம் திருநாள் உலவாக்கோட்டை.
    செப்டம்பர் 8 ஆறாம் திருநாள் பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தவித வரலாறு லீலை.
    செப்டம்பர் 9 ஏழாம் திருநாள் வளையல் விற்ற லீலை, இரவு சுவாமி பட்டாபிஷேகம் (இரவு 7.05 மணிக்குள் 7.29 மணிக்குள்).
    செப்டம்பர் 10 எட்டாம் திருநாள் நரியைப் பரியாக்கிய லீலை (குதிரை கயிறு மாறிய லீலை).
    செப்டம்பர் 11 ஒன்பதாம் திருநாள் புட்டுத் திருநாள் (புட்டுக்கு மண் சுமந்த லீலை).
    செப்டம்பர் 12 பத்தாம் திருநாள் விறகு விற்ற லீலை.
    செப்டம்பர் 13 பதினொன்றாம் திருநாள் சட்டத்தேர், (8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள்). இரவு ஸ்பதாவரணம் துலா லக்னம்.
    செப்டம்பர் 14 பன்னிரண்டாம் திருநாள் தீர்த்தம் உற்சவ முடிவு.

    உற்சவ நாட்களில் கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் தங்கக்கவசம், வைரக்கீரிடம் சாத்துப்படியும், உபய திருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் நடத்தப்படுவதில்லை. ஆகஸ்டு 27ம் தேதி முதல் திருநாள் முதல் காலை, மாலை இரண்டு வேளையும் ஆவணி மூலவீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலா, மண்டகப்படிகளில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

  • ஆவணி அவிட்ட நிகழ்ச்சிக்கு அழைப்பு….

    பிராமணர் நலச்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் ஆகஸ்டு 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், ஆவணி அவிட்ட நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரியில், இந்த ஆண்டுக்கான ஆவணி அவிட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆகஸ்டு 17 ம் தேதி காலை, 7 மணிக்கு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தேரடி தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், ஸ்ரீ வெங்கட்டரமணாச்சாரியாராலும், பழையபேட்டை பரவாசுதேவய்யர் தெருவில் உள்ள சீதாராம வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமி ம்ருத்யுக பிருந்தாவனத்தில், கிருஷ்ணாச்சாரியாராலும் நடத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    18 ம் தேதி காலை 8 மணிக்கு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஜகத்குரு சங்கர மடத்தில், யஜூர் உபாகர்மா, ஏ.ஜி.கே.சாஸ்திரியாலும், தேரடி தெருவில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், வெங்கட்டரமணாச்சாரியராலும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழையபேட்டை வீர ஆஞ்சநேய சுவாமி சமேத ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், கிருஷ்ணாச்சாரியராலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாம் தொகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேய சுவாமி சமேத வினை தீர்த்த விநாயகர் கோவிலில், காரிமங்கலம் நாகராஜா சாஸ்திரிகளாலும் நடத்தி வைக்கப்படுவதாகவும், 19 ம் தேதி, காயத்ரி ஜப கர்மா அனைத்து அந்தணர்களாலும் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

    பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள், வாஸ்து ஹோமம், வாத்யங்களுக்கு பேரிபூஜை ஆகியன நடைபெற்றன.

    சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜை பொருள்கள் ஆகியன பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜை நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
    தொடர்ந்து, கோயிலின் உள்ளே மூலவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதர் அகோபில வரதராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆகஸ்டு 20 ஆம் தேதி திருக்கல்யாணமும், 21 ஆம் தேதி பாரிவேட்டையும், 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடத்தப்பட்டு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  • கிருஷ்ண ஜெயந்திக்காக பத்தாயிரத்து எட்டு ஓவியப் பானைகள்….

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அழகழகாய் ஓவியங்கள் வரையப்பட்ட 10 ஆயிரத்து எட்டு பானைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுடலை குடும்பத்தினர் சிறிய ரக 9 ஆயிரம் பானைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பரப்பாடியைச் சேர்ந்தவர்கள் 1008 பெரிய ரக பானைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
    ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்த மறுநாளே அடுத்த ஆண்டிற்கான பானைகள் தயாரிக்கும் பணியை இவர்கள் துவங்குகின்றனர்.
    ஒவ்வொரு பானையையும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    நான்கு நாள் தொடர் விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    வாரத்தின் 2–வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே தரிசன வரிசைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 21 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். ஒரேநாளில் மொத்தம் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 9 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 7 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 14 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • புஷ்கர மேளாவில் காஞ்சி சங்கராச்சாரியர்….

    ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் தொடங்கி உள்ள புஷ்கர மேளா விழாவில் ஜயேந்திரர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    புஷ்கர மேளா விழாவை விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர்.

    அதன் பின் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது.

  • ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு….

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெறும். தினமும், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமான பூஜை ஆகியவை நடத்தப்படும். 21-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆவணி மாத பூஜை நிறைவுபெறும்.

    மீண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 13-ந் தேதி முதல் ஓணம், 14-ந் தேதி திருவோண தின சிறப்பு பூஜையும் நடக்கிறது.