Blog

  • கோவில் அதிசயங்கள்..!

    கோவில் அதிசயங்கள்..!

    அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
    ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
    அவைகளில் சில:
    1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். – நடராஜ கோயில்
    2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
    3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.
    4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.
    5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.
    6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
    7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
    8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.
    9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
    10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.
    11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
    12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.
    13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.
    14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள்
    பெண்வடிவில் உள்ளது.
    15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.
    16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு – பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் அப்பெயர் பெற்றார்.

     

  • வேலே முருகர்!

     

    திர்வேலே மூலவராக விளங்கும் ஆலயம், சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்த குமரன் கோவில், ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடையே அமைந்த திருத்தலம், முருகனைத் தேடி வெள்ளை மயில் வந்து திருவிளையாடல் புரிந்த தலம், ஆன்மிகப் பணியோடு, சமுதாயப் பணியையும் இணைத்து செய்யும் பொது நலக்கோவில், சித்திரைத் தேர் கொண்ட ஆலயம், சுவிஸ் நாட்டு மக்களின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்வது செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை சுவிட்சர்லாந்து நாட்டிலும் நிரூபித்திருக்கிறார் முருகப்பெருமான்.   ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில், ஜீவநதியான ரைன் நதிக் கரையோரம் எழுந்தருளியுள்ளார், ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி. சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாட்டின் எல்லையோர மாவட்டமாக விளங்குவது செங்காலன். இதில் சென்மார்க்கிறேத்தன் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம். வேலும், மயிலும் பிரதானமாக விளங்கும் ஆலயம் இது. இவ்வாலயம் பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

    தாமாக வந்த வெள்ளை மயில் 

    கதிர்வேலாயுத சுவாமி ஆலயப் பகுதிக்கு கடந்த 2010–ம் ஆண்டு ஒரு வெள்ளைநிற மயில் ஒன்று தாமாகப் பறந்து வந்து சேர்ந்தது. அங்கே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு இது வியப்பாக இருந்தது. உடனே அருகில் இருந்த ஆலய நிர்வாகியிடம் இத்தகவலைக் கூறினர். அந்நாட்டு வனவிலங்கு சட்டப்படி, உடனே அவரும் இதனைக் காவல்    துறைக்குத் தெரிவித்தார். அத்தோடு தங்கள் ஆலய தெய்வமான       முருகப்பெருமானைப் பற்றியும், முருகனின் வாகனம் மேற்படி மயில் என்பதையும் எடுத்துக் கூறினார். அதனால் அவர்கள் எவராவது உரிமை கோரினால் திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஆலயத்தின் வசம் மயிலை காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஆண்டுகள் பல கடந்தும், இன்றுவரை எவரும் அந்த மயிலை உரிமை கோரவில்லை. அபூர்வ பறவையான வெள்ளை மயில், கந்த சஷ்டி நாளில்  இந்த ஆலயத்தைத் தேடி பறந்து வந்த நிகழ்வு அப்பகுதிவாழ் மக்களாலும், பக்தர்களாலும் இன்றும் வியப்பான செய்தியாகப் பேசப்படுகிறது. 

    வேலே முருகர்

    முருகப்பெருமானின் திருக்கோவில்களில் வேலுக்கும் முக்கியப் பங்குண்டு. முருகனின் அருவுருவத் திருக்கோலம் ‘வேல்’ ஆகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், மூலவராக விளங்கும் முருகப்பெருமானின் வேலாயுதம். இந்த வேலினை மையமாக வைத்தே ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிறகு இதை நோக்கினால் முருகப்பெருமானே நேரில் காட்சி தருவது போலத் தோன்றுகிறது.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் சென்மார்க்கிறேத்தன் என்ற கிராமத்தில், தொழிற்சாலைப் பகுதியில் பிரமாண்ட தனிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது.  அயல்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாட்டு கட்டிட பாணியில் அமைந்துவிட்டது போலும். எளிய நுழைவு வாசல், நுழைந்ததும், சில படிகள் ஏறினால் ஆலயம் நம்மை வரவேற்கிறது.

    வேல்கள் தாங்கிய கதவுகள் வழியே உள்ளே நுழைந்ததும், விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். அருகே எளிய கொடிமரம், மயில் மூலவரை தரிசித்த வண்ணம் காட்சி தருகின்றன. மூலவராக முருகப்பெருமானின் வேல் அழகுற அலங்கரிக்கப்பட்டு நமக்கு காட்சிதருகின்றது. இடது பின்புறம் விஷ்ணு துர்க்கை அழகுற வீற்றிருக்கிறாள். எதிரில் சண்டிகேசுவரர், பைரவர் காட்சி தருகின்றனர். அருகே அலங்கார மண்ட பத்தில் விநாயகர், வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் என அனைத்து வித உற்சவ மூர்த்திகளும் அழகுற வடிவமைக்கப்பட்டு காட்சியளிக்கின்றனர். மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் அனைத்துமே ஐம்பொன் சிலைகளால் அமைந்துள்ளது தனிச் சிறப்பு அம்சமாகும். 

    ஆண்டுதோறும் வைகாசி விசாக பட்சத்தை அடிப்படையாகக் கொண்டு, பன்னிரண்டு நாட்கள் பிரமோற்சவமும் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவில் முக்கிய அம்சமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கென  மரத்திலான பெரிய சித்திரைத்தேர் இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் காவடி எடுத்தல், பால் குடம், தீச்சட்டி, அலகு குத்துதல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்    கணக்கில் பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர, தைப்பொங்கல், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆலய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாவான தைப்பூசம், கந்தசஷ்டி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


    தரிசன நேரம்

    இவ்வாலயம் நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சிறப்பு நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும். 

    சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாலயம் சமயத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து மக்களை நெறிப்படுத்துகின்றது.  அத்துடன் தங்கள் தாய்நாட்டில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

    இதுமட்டுமின்றி, சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட இவ்வாலயம் உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு திருமண வைபவங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

    தலவரலாறு

    2005–ம் ஆண்டில் சிறிய அளவில் தமிழர்கள் வழிபாடு செய்ய தொடங்கப்பட்ட இந்த ஆலயம், தனி ஆலயமாக மாற்றம் பெற்று 2007–ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் பின் இப்பகுதியில் தமிழர்கள் பங்களிப்பும் அதிகமாகி வர, அவர்களின் வருகையும் கூடியது.  பக்தர் களின் வேண்டுதல்களை கதிர்வேலாயுதசுவாமி நிறைவேற்றித்தர, பக்தர்கள் வருகையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.  அயல்நாட்டினரும் இவ்வாலயத்தை வியப்புடன் தரிசித்துச் செல்கின்றனர்.

    சுவிட்சர்லாந்து  நாட்டின் கிழக்கு மாநிலம் செங்காலன். இதன் முக்கிய ஊராகத் திகழ்வது  சென்மார்க்கிறேத்தன். ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடைப்பட்ட பகுதியில்   இயற்கை எழில் வாய்ந்த ஊரில் அமைந்துள்ள திருக்கோவில் இது.

    ஜுரிச்சிலிருந்து ஆஸ்திரியா செல்லும் ரெயில் வழித்தடத்தில், ஜுரிச்சின் மாநகரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், செங்காலன் மாநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. அல்ரன்றைன் என்ற உள்நாட்டு விமான நிலையம் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆஸ்திரியா எல்லை 200 மீட்டர் தூரத்திலும், ஜெர்மனி எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது.

  • முருகன் அழித்த ஆறு பகைகள் எது ?

     

    சரவணப் பொய்கையில் உதித்தவன் ஆகையால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான். மயிலில் சஞ்சரிப்பவன் என்பதால்  முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.

    சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய நாட்கள் முருகப் பெருமானுக்கு  உகந்த நாட்கள் ஆகும். முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனின் மூலமந்திரம் ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

    நம் அனைவரின் மனதிலும் நீங்கா புகழ்ப் பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

    பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகனுக்கு உள்ளது. அது பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்முருகனை மட்டுமே காண முடியும்.

    ஆறு முகனான முருகன் அழித்த ஆறு பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. நம் மனதில் உறைந்திருக்கும் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் தான்.

     முக்கண்ணன் மகன் ஆறுமுகன் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். அவை ,சூரபத்மனை வதம் செய்த திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்த திருப்பரங்குன்றம், சிங்க முகாசுரனை வதம்செய்த போரூர் ஆகும்.

    சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் ஏற்பட்ட பள்ளம்,இன்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் இருப்பதைக் காண முடியும்.

    ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகத்தை  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஓதினால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    முருகப்பெருமானின் வலப்புற ஆறு கரங்களில் அபயகரம்,கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புற ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் காணப்படுகிறது.

     ஈரோடு அருகே வெண்ணைமலையில்  முருகன் தன்னந்தனியனாகத்  தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார்.

    கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்த முருகனின் பெருமைகளை பாராட்டி  இறைபணிச் செய்தவர்கள்  அகத்தியர், அருணகிரி நாதர், ஒளவையார், பாம்பன் சுவாமிகள், அப்பர் அடிகளார், நக்கீரர், முசுகுந்தர்,சிகண்டி முனிவர், குணசீலர், முருகம்மையார்,திருமுருக கிருபானந்த வாரியார், வள்ளிமலைச் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் ஆவார்கள்.

    திருப்பங்குன்றத்தில் உள்ள பிரம்மகூபம் என்ற சந்தியாசிக் கிணற்று நீரைத்தான் முருகப் பெருமானின்  அபிஷேகத்திற்காகப் பயன்படுகிறது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

    திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பது சிறப்பாகும்.

     கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

    முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர் என்கிறது புராணம்.

    கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை,சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகியவை தமிழகத்தில் முருகனுக்குக்கான குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் ஆகும்.

    மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள பத்துமலை என்ற பெரியமலை மீது உள்ள முருகன் கோயில் மிக விசேஷம்.

     

                                                                                  

    முருகப் பெருமானுக்காக முதலாம் ஆதித்த சோழன் கட்டிய திருக்கோவில் புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூரில் உள்ளது. இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

    நான்முகனுக்குப் பதில் முருகன் சிறிது காலம் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார் என்பதை  உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

    சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ள  சிறுவாபுரி முருகனுக்கு ,புதுமனை புகுவோர் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

    வேறு எங்கும் இல்லாதபடிக்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தரும் முருகன் பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு கோவிலில் காட்சி தருகிறார்.

    வேலுண்டு வினையில்லை …

    மயிலுண்டு பயமில்லை…

  • சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மர்!

     

     

    திருமணத்தடை, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    “நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’ என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.
    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள்( காரைக்கால் அம்மையார்)

     

     

    ஈசன் ‘அம்மையே’ என்று அழைக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார்

     

    சிவமே மூச்சாக வாழ்ந்த நாயன்மார்களில் முதன்மையானவரான  காரைக்கால் அம்மையார், மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். இவர் புனிதவதி என்ற இயற் பெயர் கொண்டவர்.

    சோழமண்டலத்தில் அமைந்த காரைக்காலில் வைசியர் குலத்திலே, தனதத்தன் என்பவரின் மகளாக பிறந்த  புனிதவதியார் , சிறுவயது முதல் சிவபக்தியில் தன்னை கரைத்துக் கொண்டார்.

    பருவமடைந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ,நாகப்பட்டணத்தில், நிதிபதி என்பவருடைய மகனான பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தார் தனதத்தன். பரமதத்தனும், புனிதவதி அம்மையாரும் சிறப்புற இல்லறம் நடத்தி வந்தனர்.

    ஒருநாள் பரமதத்தனிடம் வணிகம் செய்ய வந்த  சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கள் கொடுக்க , அவன் அவைகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான்.

    சிவனடியார் ஒருவர்  உணவு நேரத்தில் புனிதவதியார் வீட்டிற்கு சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு,அமுது படைத்து அச்சிவனடியாருக்கு கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை படைத்தார்.உணவு உண்டு ,அம்மையாரை வாழ்த்திச் சென்றார் அவ்வடியார்.

    பின், பரமதத்தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் பொழுது,அம்மையார்  எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருப்தியடையாமல் மனைவியாரை நோக்கி, “மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை” என்றான்.

    இன்னொரு மாங்கனியை சிவனடியாருக்கு படைத்துவிட்ட நிலையில், புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், ஒரு மாங்கனி அவர் கையில் விழுந்தது. அதைக் கொண்டுவந்து, கணவனுக்குப்  படைக்க,அவன் அதை உண்டு, “இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்” என்றான்.

     

                                                                                

    புனிதவதியார் அதைக்கேட்டு, கணவனிடம் உண்மையை மறைப்பது அறம் ஆகாது என்று எண்ணி,”நீர் தந்த கனிகளில் ஒன்றை சிவனடியார் ஒருவருக்கு கொடுத்து விட்டமையால், , பரமசிவனைத் தியானித்து,அவருடைய திருவருளினால் இந்தக் கனி கிடைத்தது” என்றார்.

    இதை பரமதத்தன்  நம்பாததினால் அம்மையார் பரமசிவனைத் துதிக்க , ஈசன் திருவருளினாலே ஒரு மாங்கனி அவர் கையில் வந்து விழுந்தது.இதனால் அவன் மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று அவரை விட்டு நீங்கினான். 

    பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒரு வைசியனுடைய மகளை திருமணம் செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான்.

    தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியார், உறவினர்கள் மூலம் இந்த தகவலைத் தெரிந்துக் கொண்டார். கணவனுடன் வாழ முடியாத தனக்கு இனி இளமையும் அழகும் வேண்டாம் என்றும் ,ஈசனைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை தந்தருளல்வேண்டும் என்றும் இறைவனை  பிரார்த்தித்தார்.

     அந்தக்கணமே  அக்கடவுளுடைய திருவருளினாலே, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

     ஈசன் அருளால் பேய் வடிவை பெற்ற புனிதவதியார், ஈசனை நினைத்து ஆலயம் பல சென்று பாடல் பாடி துதித்தார். புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போக விரும்பினார்.

    திருக்கைலாசகிரியை அடைந்த அவர் , அங்கே காலினால் நடத்தல் கூடாது என்று எண்ணி , தலையினாலே கைகள் கொண்டு நடந்துபோய், மலையிலேறினார். புனிதவதியாருடைய பக்தியைக் கண்டு உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தார். நந்தி தேவரும்  புனிதவதியாரின் சிவ பக்தி கண்டு வியந்து வணங்கி வரவேற்றார்.

     

    புனிதவதியாரைக் கண்ட சிவ பெருமான் ,அவரை நோக்கி, “அம்மையே வருக” என்று அழைத்தார். புனிதவதியாரும்  “அப்பா” என்று சொல்லிக் கொண்டு பரமேஸ்வரன் திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, “உனக்கு என்ன வரம் வேண்டும் ” என்று கேட்டார்.

    புனிதவதியார் வணங்கி நின்று, “சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்.” என்ற வரம் கேட்டார்.

     

    சுவாமி அவரை நோக்கித் “தென் திசையில் உள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். காரைக்கால் அம்மையார் ,சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

     

    திருச்சிற்றம்பலம் …..

     

  • அல்லல் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்

     

    நாம் எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் விக்கினங்கள் இல்லாமல் இருக்க அந்த விக்னேஸ்வரனை வணங்கி வழிபட்டால் , எடுத்த காரியம் யாவிலும் வெற்றி தான்.

    கணக்கெடுத்துப் பார்த்தால், நம் ஊரில் விநாயகருக்கு இருப்பது போல் கோவில்கள் வேற எந்த தெய்வத்திற்கும் இல்லை எனலாம். கணபதிக்கு கோவில் எழுப்ப பெரிய நிலபுலங்கள் தேவையில்லை. தெரு முக்கு மற்றும் அரச மர நிழலாக இருந்தாலும்,தன்னை  உண்மையான அன்போடு கூப்பிடும் பக்தருக்காக எழுந்தருளக்கூடியவர்.

     விண்ணுலகும், கீழான  பாதாள லோகமும், நாம் இருக்கும் இந்த பூவுலகு என மூவுலகிற்கும் கணபதி தான்  முழுமுதற் கடவுள். உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் அவரை போற்றிப் பாடுகின்றன  பக்தி நூல்கள்.

     

    முழுமுதற் கடவுள்  பற்றிய முத்தான தகவல்கள் :

     

    ஆலயங்களில் மகா கணபதியாகவும். மலை உச்சியிலும் உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகராகவும் போற்றப்படுகிறார். 

     

    திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாரைப் போல கும்பகோணத்திலும் கட்டுமலை போன்ற அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவருக்கும் உச்சிப்பிள்ளையார் என்று தான்பெயர்.  

     

    மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருக்கும்  விநாயகரை பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரை ஆழத்துப் பிள்ளையார் மற்றும்  பாதாள பிள்ளையாராக  பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

     

    காளஹஸ்தி மற்றும்  விருத்தாசலம் திருக்கோயிலில் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன.

     

    எங்கும் இல்லாதபடி,சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் விநாயகரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.

     

    தன் தந்தை கயிலாச நாதரின் மலையில், ஆனைமுகனின் உறைவிடம் கரும்புக்காடுகள் சூழ்த்த ஆனந்தபுவனம்.

     

    தன் தாய் மாமனான  திருமால், பாற்கடலில் உறைவது போல, கணபதியின் உறைவது கருப்பஞ்சாற்று  கடல்.

     

    திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில் தான் கணேசபஞ்சரத்தை ஆதிசங்கரர் எழுதினர்.

     

    எத்தனையோ விசித்திரமான பெயர்கள் விநாயகருக்கு இருந்தாலும் ,கோவையிலுள்ள ஒரு விநாயகரின் விசித்ரமான பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.

     

    உலகம் போற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

     

    மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர். இதிலிருந்து ஆதி தெய்வமான விநாயகரின் தொன்மை நமக்கு புரிபடும்.

     

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.

     

    விநாயகருக்கு அனைத்து இலைகள் மற்றும் மலர்கள் பூஜைக்கு உகந்தது என்றாலும், துளசியால் சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை பூஜிக்கலாம்.

     

    27நட்சத்திரங்களில் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.

     

    ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.

     

    ஐந்துகரப் பண்டிதன் என அருணகிரிநாதர் விநாயகரைக் குறிப்பிட்டுள்ளார்.

     

    திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்றும் காணப்படுகிறது.

     

    மதுரை முக்குறுணி விநாயகருக்கு24 படி அரிசியால் மோதகம் செய்யப்படுகிறது.

    வேறு எங்கும் இல்லாதபடி ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில்

     

    புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.திருப்பரங்குன்றத்தில்   கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.

     

    `ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை

    நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை

    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”

     

    ஐந்து கரங்களை கொண்டவர், யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை,புந்தியில் – நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக!

    கவலைகள் அகல கணபதி பாதம் தொழுவோம் …..

     

  • விநாயகர் பற்றிய 80 அற்புத உண்மைகள்…

    விநாயகர் பற்றிய 80 அற்புத உண்மைகள்…
    தெரிந்து கொள்வோம்!
    1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.
    2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
    3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.
    4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
    5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.
    6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.
    7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.
    8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.
    9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.
    10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
    11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
    12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
    13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
    14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.
    15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
    16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
    17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
    18. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
    19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.
    20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
    21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
    22. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
    23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.
    24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

     

    26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.
    27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.
    28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
    29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.
    30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.
    31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.
    32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.
    33. சாதூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவிலில் தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை.நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ்செயலில் உங்களுக்குத்துணையாக இந்தக்கணபதி விளங்குவார்.
    34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
    35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
    36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
    37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
    38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.
    39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
    40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.
    41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.
    42. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.
    43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
    44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
    45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.
    46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
    47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.
    48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
    49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
    50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.


    51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.
    52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
    53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
    54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.
    55. மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.
    56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
    59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.
    60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.
    61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.
    62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.
    63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.
    64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.
    65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.
    66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
    67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.
    68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.
    69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.
    70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.
    71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.
    72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.
    73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.
    74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.
    75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
    76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.
    77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
    78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.
    79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.
    80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  • மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக பிறவி எடுத்த வேங்கடநாதன்

     

     

    மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக பிறவி எடுத்த வேங்கடநாதன்

     

    சென்ற பதிவின் தொடர்ச்சி…….

     திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் திருமலை தெய்வத்தின் கருணையால் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில் ,மிருகசீரிஷ  நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

     

    வேங்கடவனிடம்  வைத்த வேண்டுதலினால் பிறந்த குழந்தை ஆதலால், குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.குழந்தையின் முகப் பொலிவைக் கண்டு பெற்றோர் மட்டுமின்றி ஊர் மக்களே பிரமித்தனர். அந்த தெய்வீகக் குழந்தைப் பிறந்ததினால் புவனகிரியும் புனிதமடைந்தது.

    உரிய நேரத்தில் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்து வைத்து மூன்று வயதில் அக்ஷராப்யாஸமும்  செய்து வைத்தார் திம்மண்ண பட்டர். தாயாரின் ஹரி கீர்த்தனைகளையும் ,தந்தையார் இறைவன் முன் அனுதினமும் பாராயணம் செய்வதையும் தன் தாயின் கருவறையில் இருந்து கேட்டுக் கொண்டே வளர்ந்திருந்தான் வேங்கடநாதன்.

     குடும்பம் வறுமையில் சுழல, சுசீந்திரரின் கட்டளையை ஏற்று மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார் திம்மண்ணர்.  ஸ்ரீமடத்தில் வித்வத்சபையில் தான் கலந்துகொள்ளும்போது வேங்கடநாதனையும் தவறாது உடன் அழைத்துச் செல்வார் திம்மண்ணர். சிறுவனின் தேஜஸைக் கண்ட சுசீந்திரருக்கு  அவர் மீது  மிகுந்த பற்று உண்டாயிற்று. திம்மண்ணரின் இறுதிக் காலத்தில்,வேங்கடநாதன் தமையன் குருராஜனிடம் ஒப்படைக்கப்பட்டான்.

     தமையன்  குருராஜன், தந்தையாரின் மரணத்திற்கு பின்,தந்தையின் ஸ்தானத்தில் இருந்து  வேங்கடநாதனுக்கு உபநயனம் செய்வித்து வித்யாப்யாசத்தின் பொருட்டு மதுரை லக்ஷ்மிநரசிம்மாச்சாரிடம் அனுப்பிவைத்தார்.அவரிடம் வேங்கடநாதனும்  வேதாந்த தர்க்க வியாகரணம், சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.

     மேலும் தன்னுடைய ஞானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த வேங்கடநாதன் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.அங்கு மடத்தில் ஸ்ரீ விஜயேந்திரருடன்  ஸ்ரீ சுதீந்திரரும் தங்கியிருந்தார். இவர்கள் முன் சென்று பணிந்து நின்ற வேங்கடநாதனின், முக தேஜஸையும், லட்சணங்களையும் பார்த்து, இவர் சாதாரண பிறப்பல்ல என்பதை அறிந்து இருவரும்  பரவசப்பட்டனர். இவர் மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவும் பிறவி எடுத்துள்ளதை புரிந்துகொண்ட இருவரும் வேங்கடநாதனை ஆசீர்வதித்தனர்.

     சாஸ்த்திர ஞானம் ஏற்பட சுதீந்திரரிடம் சிஷ்யனாக வேண்டும் என அவர் முன்பு நமஸ்கரித்து நின்ற வேங்கடநாதனை மிக்க மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக்கொண்டு பல சாஸ்திர விஷயங்களைக் கற்பித்து வந்தார்  சுதீந்திரர்.

    ஒருநாள்  குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்று பாடம் போதும் என்று சொல்லி எழுந்து விட்டார்.அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். ஆனால் வேங்கடநாதனோ தனிமையில் அமர்ந்து கொண்டு குரு சொன்னவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

     அன்றைய பாடம்  ஸ்ரீமத்வரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு  ஸ்ரீ ஜெயதீர்த்தர் கொடுத்துள்ள உரைநூல்’ நியாயசுதா’ என்ற நூலுக்கு விளக்கத்தைக் கூறிக் கொண்டிருந்தார். திடீரென்று விளக்கம் சொல்ல இயலாமல்  பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அதையே நினைத்துக் கொண்டிருந்த வேங்கடநாதன் அப்படியே பனியில் படுத்து உறங்கிவிட்டார்.

     நடுஇரவு, குரு சுதீந்திரர் சிஷ்யர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வெளியில் வந்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க அங்கு வேங்கடநாதனை மட்டும் காணாததால் தேடிக் கொண்டே சென்றார்.

     

     

    மகானின் சரித்திரம் தொடரும்…..

     

        

     

  • விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

     

    அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

    பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

    அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.

    அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

    பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.

    பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

    வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

    இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.

  • விளக்கு அணைந்த பின் எவன் உண்பானோ அவன் நரகம் போவான்

     

    வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை ஆன்றோர்களும், கற்றறிந்த சான்றோர் பலரும் சுவையான கதைகள் மூலம் நமக்கு சொல்லிச் சென்றுள்ளனர். நம்முடன் தோன்றி,வாழ்ந்து இறையருள் பெற்ற திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் ,எப்படி ஒரு பெண் நினைத்தால், தன கணவனை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காக்க முடியும் என்பதை அழகான கதை மூலம் சொல்லியிருக்கிறார்.

    அவர் ஒரு சிறந்த ஜோதிடர். ஆனால் குழந்தை இல்லை. பலவித விரதங்கள் மேற்கொண்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த தந்தையான ஜோதிடர் அதிர்ந்து போனார். சாந்திமுகூர்த்தம் அன்று அவளது கணவர் இறந்து போவான் என்று உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். இருந்தாலும், பாக்கியவதி என்று தனது மகளுக்கு பெயர் சூட்டினார்.

    ஆண்டுகள் நகர்ந்தன. அந்த குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்தது. மகளை மணக்க விரும்புகிறவர்களிடம், சாந்திமுகூர்த்தம் அன்று மணமகன் இறந்து போவான் என்று உண்மையைச் சொல்வார் ஜோதிடர். வந்தவர்கள் வந்த வழியே சென்றுவிடுவார்கள். இப்படியே பலர் வந்து போனார்கள். பாக்கியவதிக்கு திருமணம் ஆகாமல் பல காலம் கழிந்தது.

    ஒருநாள், அறிவில் சிறந்த, துணிச்சல் மிகுந்த இளைஞன் ஒருவன் ஜோதிடரை அணுகி, அவரது மகளை மணக்க விரும்புவதாக கூறினான். ஜோதிடரும் வழக்கம்போல், “நீ சாந்திமுகூர்த்தம் அன்று இறந்து போவாய்” என்றார். உடனே, அந்த இளைஞன், “நானும் சாஸ்திரங்களை கற்றறிந்தவன் தான். மரணத்திற்கு அஞ்சுபவன் கோழை. நான் வீரன்” என்று சூளுரைத்தான்.

    ஒரு நல்ல நாளில் பாக்கியவதி, அந்த இளைஞன் திருமணம் நடந்தது. அன்று இரவு சாந்திமுகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்தார் ஜோதிடர். நாளை மருமகன் உயிரோடு இருக்க மாட்டான் என்று உறுதி செய்து கொண்டு, அவனது இறுதிச்சடங்குக்கும் கூடவே ஏற்பாடு செய்தார். பாக்கியவதி முதல் நாள் இரவில் தனிமையில் கணவனை சந்தித்தாள். தான் கற்றறிந்த வேதங்கள் பற்றி அவளுக்கு கூறினான்.

    அப்போது, அவனுக்கு திடீரென்று வயிற்றுவலி உண்டானது. அன்றைய தினம் உணவு அதிகமாக சாப்பிட்டதால் அந்த நிலை ஏற்பட்டது. அருகில் உள்ள தோப்புக்கு சென்றான். வயிற்று உபாதை நீங்கியதும் பக்கத்தில் தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டையில் கால் அலம்பச் சென்றான். அப்போது அவனது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது.

    “மரணம் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். மரணத்தை கண்டு நான் அஞ்ச மாட்டேன். என்னை கொஞ்சம் விடு. எனது அன்பு மனைவியிடம் தகவல் கூறிவிட்டு மீண்டும் வருகிறேன்” என்றான். “நீ என்ன அரிச்சந்திரனா? உன்னை விட்டால் வரமாட்டாய். எனக்கு பசிக்கிறது. அதனால் நீ எனக்கு வேண்டும்” என்றது அந்த முதலை.

    உடனே, அவன், “முதலையே! நான் சத்தியத்தை மதிப்பவன். என்னை நம்பு. உறுதியாக வருகிறேன்” என்றான்.

    அதற்கு முதலை, “மனைவியிடம் தகவல் கூறிவிட்டு வராமல் போவேன் என்றால், சாப்பிடுகின்றபோது விளக்கு அணைந்த பின் எவன் உண்பானோ அவன் போகின்ற நரகம் போவேன் என்று சத்தியம் செய், விடுகிறேன்” என்றது. அதன்படி அவன் சத்தியம் செய்ய, முதலை அவனை விட்டது.

    சாந்திமுகூர்த்தத்திற்காக காத்துக்கொண்டிருந்த மனைவியிடம் நடந்ததை கூறி, அவளை தழுவி விடைபெற்று முதலை இருக்கும் இடத்தை நோக்கி மீண்டும் வந்தான். பாக்கியவதி பெரிதும் வருந்தினாள். இறைவன் அருளாள் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கணவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தாள்.

    அந்தநேரம் முதலை அருகில் வந்த அவளது கணவன், “முதலையே! நான் வந்து விட்டேன். என்னை உணவாக ஏற்றுக்கொள்” என்றான். முதலை ஆவலுடன் அவனது காலை பற்றிக்கொண்டது. அந்தநேரம், அவனை பின்தொடர்ந்து வந்த பாக்கியவதி, எரிகின்ற ஒரு விளக்கை காண்பித்து அணைத்துவிட்டாள். இதை கண்ட முதலை அவளது கணவனது தனது பிடியில் இருந்து விட்டுவிட்டது.

    “உன்னை நான் உண்ணும் நேரத்தில் விளக்கு அணைந்து விட்டது. அதனால் உண்ண மாட்டேன். நீ போகலாம்” என்றபடி விலகிக்கொண்டது முதலை. திரும்பி பார்த்தான் அவன். அருகே மகாலட்சுமியைபோல் நிற்கும் மனைவி பாக்கியவதியை கண்டான். அவளது மதிநுட்பத்தை எண்ணி வியந்தான்.

    அன்று நம் முன்னோர்கள்  சொன்ன சொல்லிற்கும்,செய்த செயலிற்கும் காரண காரியம் இல்லாமல் இல்லை. விளக்கு அணைந்தப் பின் சாப்பிடும் போது நம்மை அறியாமல், கெடுதலான சில பொருட்களையும் சேர்த்து பார்க்காமல் நாம் சாப்பிட்டு விடக்கூடும் என்பதால் தான், விளக்கு அணைந்தப் பின் சாப்பிடுபவன் நரகத்திற்கு போவான் என்று கூறி வைத்தார்கள். முன்னோர் வாக்கை பின்பற்றி பயன் பெறுவோம்.