Blog

  • பதினாறு பேற்றை அருளும் மகாலட்சுமி தாயார்

     

    அன்னையர் மூவரை தொழும் அற்புத நாளான நவராத்திரி திருநாளில் `மகாலக்ஷ்மியின் 16 பேறுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

     

     ஸ்ரீதனலட்சுமி:

    அறம் ,பொருள் இன்பம், வீடு என்பார்கள். இந்த உலக இன்பங்களை நாம் அனுபவிக்க பொருட் செல்வம் வேண்டும். பொருளோடு சேர்ந்த அறம் வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பும், மனதில்  நேர்மையுடனும்  வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

     

     ஸ்ரீவித்யாலட்சுமி:- 

    பொருளை அடைந்தால் போதுமா?.அதை காக்கவும், அறவழியில் செலவு செய்யவும் அறிவு வேண்டும் அல்லவா?. நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தி எல்லா உயிரிடத்தும்  அன்பாகவும்,இனிமையாகவும் பேச வேண்டும். புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த ,ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

     

    ஸ்ரீதான்யலட்சுமி:- 

    பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். நம் பசியை மட்டுமின்றி நம்மை சார்ந்தவர்களின் பசியை போக்குவது நம் கடமை. ஸ்ரீயானவள் பசிப் பிணி போக்கும்  தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானம் என்பார்கள்.அன்னதானம் செய்தால், ஸ்ரீ தான்யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

                       

                                                                              

     ஸ்ரீவரலட்சுமி:-

     உடலினை உறுதி செய்வது போல்,நம் மனதையும்  உறுதி செய்ய வேண்டும்.நம் வாழ் நாளில் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, அந்த சங்கல்பத்தில் உறுதியுடன் இருக்க  ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

     

    ஶ்ரீசவுபாக்கியலட்சுமி :- 

    ஸ்ரீதேவி இருக்கும் இடத்தில்,மகிழ்ச்சிக்கும் ,மங்களதிற்கும் குறைவு இருக்காது.ஆனால் அந்த மகிழ்ச்சியை நம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ள கூடாது. நம்முடைய மகிழ்ச்சி ,நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் பரவ வேண்டும்.அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாகும் போது  சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

     

    ஸ்ரீசந்தானலட்சுமி:-

    குழலினிது யாழினிதான மக்கள் செல்வத்திற்கு ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு. இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயானவள்  அந்த ஜெகன்மாதா. அவளைப்போலவே தாயற்ற எல்லா குழந்தைகளையும் நம்  குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு நமக்கு வேண்டும்.

     

    ஸ்ரீகாருண்யலட்சுமி:- 

    வாடும் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல ,அனைத்து எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதையை தவிர்த்து, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

     

     ஸ்ரீமகாலட்சுமி:- 

    அள்ளி அள்ளிக் கொடுப்பது தான் அன்னை மகாலட்சுமியின் இயல்பு. நாமும், நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தாலே அந்தஅன்னையின் கருணை நமக்கு எப்போதும் இருக்கும். மேலும் ஸ்ரீ மகாலட்சுமி பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை நமக்கு வழங்குவாள்.

     

    ஸ்ரீ சக்திலட்சுமி:- 

    எந்த வேலையும் செய்ய நமக்கு ஆன்மீக பலத்தையும்,சக்தியையும் கொடுப்பவளே ஸ்ரீசக்தி லட்சுமி.அவளை வணங்கினால்,நமக்கு சக்தியை என்றும் கொடுப்பாள்.

     

    ஸ்ரீ சாந்திலட்சுமி:- 

    எவ்வளவு தான் பணமும் புகழும் இருந்தாலும்,மனதில் நிம்மதி இல்லையென்றால் பிரயோசனம் இல்லை. நிம்மதி என்பது நம் மனம்சார்ந்த ஒன்று. ஸ்ரீசாந்தி லட்சுமியை மனதில் இருத்தி தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

     

    ஸ்ரீ சாயாலட்சுமி:- 

    சம்சார பந்தம் நம்மை முழுமையாக ஆட்கொள்ளாமல்,மனதை பக்தி மார்க்கத்தில் செலுத்தி ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அவள் அருளைப் பெற வேண்டும்.

     

     ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி:- 

    ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதிப்பதினால், எப்போதும் நம் மனதில் பக்தியும், பிறருக்கு உதவ வேண்டும்,என்ற  ஞானமும்,பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையும் கிடைக்கும்.

     

     ஸ்ரீ சாந்தலட்சுமி:- 

    தன்னை மிதிப்பவரையும் பொறுத்துக் கொள்ளும் நிலம் போன்று பொறுமையுடன் இருப்பவர்களை சாந்தலட்சுமியின்  அருள் கிடைக்கும்.

     

     ஸ்ரீ கீர்த்திலட்சுமி:-

     நாம் செய்யும் எந்த ஒரு  செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால்,புகழுடன் ,ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

     

     ஸ்ரீ விஜயலட்சுமி:- 

    விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

     

     ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:- 

    கோபம், பொறாமை, காமம், பேராசை போன்றவை நம் மனதை கெடுக்கா வண்ணம்,மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு  ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

     

    இந்த பதினாறு பேற்றை அருளும் லக்ஷ்மி தேவியை இந்த நவராத்திரி காலத்தில் தினம் தினம் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.

     

  • துன்பங்களை போக்கும் புரட்டாசி…

    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக் கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.
    சனிக்கிழமை விரதம்
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

  • பண்ருட்டி பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

    பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு விழாவும், 1,008 தாமரை பூ ஸகஸ்ரநாம அர்ச்சனையும் விமர்சையாக நடைபெற்றன. பண்ருட்டியில் பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், மூன்று நாள்கள் திருபவித்ரோத்ஸவம் விழா சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் உற்சவர் உள்புறப்பாடு நடைபெற்றது. 6 மணி அளவில் 1,008 தாமரை மலர்கள் ஸஹஸ்ரநாம் அர்ச்சனை நடைபெற்றது. திருக்கோயில் பட்டாச்சாரியார் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் பட்டாச்சாரியார்கள் பூஜைகளைச் சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • ‘கோலாஸுர பயங்கரீ…’ யான கோலாப்பூர் மகாலட்சுமி தாயார்

     

    அகில உலகிற்கும் அன்னையாக விளங்கும் தேவி பராசக்தியை  நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்கை,லக்ஷ்மி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் வணங்குகிறோம்.அவர்களை நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பக்தி சிந்தனையுடன்,முழுமனதோடு வழிபட்டால்,நாம் கேட்டதையும்,கேட்காத பலவற்றையும் பெறலாம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும்,அடுத்த மூன்று நாட்கள் மஹா லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன.

    இன்றைய பதிவில் உலகத்தை காக்கும் ஜகத்ரட்சகனான அந்த மகாவிஷ்ணுவின் திரு மார்பில் உறையும் லட்சுமி தேவியின் சிறப்பு பெற்ற தலங்களுள் ஒன்றான கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

                      

    நவராத்திரி கோலாகலமாக திருவிழாவாக கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று, மஹாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்புரி. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும், நவராத்திரி திருவிழாவே இந்த ஆலயத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.இன்று வரைக்கும் நவராத்திரிக்கு கோலாப்பூர் மகாலட்சுமியை அலங்கரிக்க திருப்பதி திருத்தலத்திலிருந்து பெருமாளின் பரிசாக பட்டுப்புடவைகள் வந்து சேர்வது சிறப்பு.

     

    கோலாப்பூர் என்றதுமே நமக்கு ‘கோலாஸுர பயங்கரீ…’ என்ற மஹாலக்ஷ்மி அஷ்டகத்தில் வரும் வரிகள் தான் நினைவிற்கு வரும். ஆம் கோலாசுரன் என்ற அரக்கனை சிம்ம வாகினியாக வந்து தேவி மகாலட்சுமி அடக்கி அருளிய தலம் என்று ‘கர வீர மகாத்மியம்’ கூறுகிறது. பயங்கரி என்ற வார்த்தையில் தான் பயங்கரம் இருக்குமே தவிர அன்னையின் முகத்தில் இருக்காது. தவிர, தன்னை அணுகும் பக்தர்களுக்கு அவள் செல்வத்தை வாரிவாரி வழங்கும் தயாபரி.  தன்னை உள்ளன்போடு நாடி வரும் பக்தர்களுக்கு எப்போதுமே அவள் வரப்ரசாதி தான்.

    இது மட்டுமின்றி சரஸ்வதி, சிவாநதி, கும்பி நதி, பாக்வதி, பத்ரா நதி என்ற ஐந்து புண்ணிய நதிகள், கூடும்“பஞ்சகங்கா’ என்ற தனிச் சிறப்பும் கோலாப்பூருக்கு உண்டு. இது சக்தி பீடங்களுள் ஒன்று.

     

                                                                                                                                                     

     

    ‘கர்வீர் நிவாஸிநி’ என்றும் ‘அம்பாபாய்’ என்றும் போற்றப்படும் கோலாப்பூர் ஸ்ரீதேவி மஹாலட்சுமி ஆலயம் கிட்டத்தட்ட 6000 ஆண்டு பழமையானது. இந்த ஆலயத்தில், 40 கிலோ எடையுள்ள, மிக உயர்ந்த ஒளி பொருந்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட்டு சிலா ரூபத்தில் ஒரு சதுரமான கல்லின் மீது நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அருள் பாலிக்கிறாள். தேவியின் சிரத்தின் மேல் ஆதிசேஷன் குடையாக விளங்க, பின்னால் சிம்ம வாகனமும், நான்கு கரங்களும் கொண்டு தாமரையின் மேல் நிற்கிறாள்.

     

    கோலாசுரன் என்ற கொடும் அரக்கனை மஹாலட்சுமி நவ துர்க்காக்களின் உதவியுடன், எதிர்த்து அழித்ததால்,இவ்வூர் கோலாப்பூர் எனப் பெயர் பெற்றது. நவராத்திரியின் ஒன்பது நாளூம் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் அம்மன் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி.

     

    ஒருமுறை அகத்தியர் தென்பகுதி யாத்திரை முடிந்து காசிக்குச் செல்லும் சமயம் களைப்பு ஏற்பட,ஈசன் அவருக்கு  காட்சியளித்து கோலாப்பூரை ‘தட்சிண காசி’யான கோலாப்பூரில் தங்கினாலே அது, உத்தர காசியில் வாழ்ந்ததற்குச் சமம் என்று அருள் புரிய அகத்தியரும், அவர் மனைவி லோபா முத்திரையும் இத்தலத்திலேயே வாழ்ந்ததாக புராண வரலாறு ஒன்று உண்டு.

     

    இக்கோவிலின் சிறப்பே தாயாருக்கு செய்யப்படும் ஆரத்தி தான். தினமும் ஐந்து முறை ஆரத்தி நடத்தப்படும். நவராத்திரியின் முதல் நாள் கலச பூஜையுடன் ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு நாளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி அன்று இரவு அம்மன் தூங்காமல் ஊர் முழுவதும் சுற்றி வருவதாக ஐதீகம். மறு நாள் விடியற் காலை ‘தேவி ஸப்தஸதி’ பாராயணத்துடன் ஹோமம் செய்யப்பட்டு பூரணாஹூதியுடன் நவராத்திரி உற்சவம் முடிவடைகிறது.

     

    இந்தக் கோவிலின் இன்னுமோர் சிறப்பு,வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன் மஹாலட்சுமியை தனது ஒளி கதிர்களால் வழிபடுவது. திருமணம், புத்திரப் பேறு என தாயாரிடம் வேண்டுதலை வைப்பவர்கள், வேண்டுதல் பலித்தவுடன், அபிஷேகம் செய்து புடவை சாற்றுவது வழக்கம்.

     

    இத்தகைய பெரும் சிறப்பு வாய்ந்த கோலாப்பூர் சென்று மஹாலட்சுமி தாயாரை வணங்கி சகல ஐஸ்வர்யங்கள் பெறுவோம்.

     

  • அன்னை சாமுண்டியின் வெற்றியைக் கொண்டாடும் மைசூர் தசரா

     

    நவராத்திரியின் ஒன்பது நாளும், ஒன்பது இரவுகள் தனி பெரும் சக்தியாக விளங்கும் அம்பிகை,பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக ஐக்கியமாவது தான் இந்த விழாவின் புராண கதை. தான் படைத்த அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள் என்பதை உலகிற்கு உணர்த்தவே, நவராத்திரியின் போது வீடுகளிலும்,ஆலயங்களிலும் கொலு வைக்கப்படுகிறது.

     நவராத்திரி என்றதுமே எப்படி வங்காளிகளின் துர்கா பூஜை நினைவிற்கு வருமோ,அதே போல  மைசூர் தசரா விழாவும் நம் நினைவிற்கு வந்து விடும். உலகப் புகழ் பெற்ற கொண்டாட்டங்களில் ஒன்றான  இது, மைசூரில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை நாம் தெரிந்துக்கொள்ளலாம். 1573ம் ஆண்டு மைசூரை ஆண்ட  நான்காம் சாமராஜ உடையார் ஒருநாள் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசனம் முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது  நேரத்தில் திடீரென இடி, மின்னல், மழை தோன்ற ,பயணத்தை நிறுத்தி விட்டு, ஒரு பெரிய மரத்தின் அடியில் நின்றார்கள்.‘‘நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா’’ என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார் மன்னர்.

     ஆலயம் தெரியாதபடி மழை மறைக்க,சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி கோயிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.

     மகிஷாசுரனை வதம் செய்ததும் மைசூரைச் சுற்றியுள்ள இடங்களில்தான்.  ஐம்பத்தோரு சக்தி பீட தேவிகளுள் ,இங்கு ஒருவளாக காட்சி தருகிறாள்அன்னை. சாமுண்டி மலையில் அருளாட்சி புரியும் அன்னை  சாமுண்டீஸ்வரி விஜயதசமி அன்று தான் மகிஷனை வதம் செய்தாள். மகிஷாசுர என்பது தான் மறுவி மைசூர் ஆயிற்று என்ற செய்தியும் உண்டு. அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

     தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.உலகப் புகழ்ப்பெற்ற இந்த தசரா விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.

    இந்த விழாவின் முக்கிய அம்சமே ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும்தான்.  தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையே  அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும். நகரமே வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவர்க்க லோகம் போல் காட்சியளிக்கும்.

     

                                                                                   

     

    தசராவின்போது மைசூர் மகாராஜா நடத்தும் கொலு தர்பாரும் சிறப்பு வாய்ந்தது. தர்பாரில் அமர்ந்து ராஜா அனைவரையும் ஆசிர்வதிப்பார். தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று கண்கவரும் யானை ஊர்வலம் நடைபெறும் என்பதால்,மைசூர் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தசரா விழாவைக் கண்டுகளிப்பதற்கும் உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகளாலும் நகரமே கோலாகலமாக காணப்படும்.

     

     

     

  • வங்காளத்தின் துர்கா பூஜை

     

    துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் விழா நவராத்திரி. வடமாநிலங்களில் துர்கா பூஜா என்ற பெயரில் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.வெவ்வேறு விதமாக அம்பிகை ஒன்பது நாட்களும் பூஜிக்கப்படுகிறாள்.குறிப்பாக வங்காளத்தில் இந்த துர்கா பூஜை மிகவும் பிரசித்தம்.

     இதற்கான புராணக் கதையை நாம் தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

     தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள் சக்தி. இதனால் கோபமடைந்த சிவன், இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு கோரதாண்டவம் ஆடினார். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தார்.அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதிப் போற்றப்படுகிறது.

    பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் வங்க தேசத்து மக்கள்.

                                                                                 

    வங்காளத்தில் மட்டுமே சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில், பதினாறு சக்தி பீடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வங்காளிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே சக்தி வழிபாடு இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

    துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்காக  தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் அமைக்கப்பட்டு,அதில் துர்கையின் பிரம்மாண்டமான சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.காண்போரை சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப்படும் அந்த துர்கையின் சிலைகளை அவ்வளவு எளிதில் எல்லோராலும் செய்து விட முடியாது. அதை செய்வதற்கெனவே மிகச் சிறந்த சிற்பிகள் வங்க மாநிலத்தில் அதிக எண்னிக்கையில் இருக்கிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் கவனத்துடன் தயாரிக்கப்பட்டு பூசையில் படைக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

    மேலும் நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கையில்  பார்லி விதைகள் விதைக்கிறார்கள். முளைகட்டி வளர்ந்த பிறகு, பத்தாவது நாளில் அதை விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

     நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.விழாவின் முதல் நாளில்  குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாளில்  கன்னியின் அம்சமாகவும்,மூன்றாம் நாளில்  பேரிளம் பெண்ணின் அம்சமாகவும் தேவி வணங்கப்படுகிறாள். கடைசி நாள் மஹாநவமியாக கொண்டாடப்படுகிறது.அன்று  ஒன்பது கன்னிப் பெண்களுக்கும் பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

     

    நவராத்திரி பெண்களை கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி,நம்முடைய பாரம்பரியத்தைக் காக்கும் விழாவாகவும் விளங்குகிறது.

     

  • நாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்!

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வரசித்தி விநாயகர். இந்த விநாயகர் கிணற்றில் சுயம்புவாக தோன்றினார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

    இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றளவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆனால் கடவுள்களே தங்களை வெளிப்படுத்தி காட்டி, கோயில் கட்ட அற்புதங்களும் நடந்தது உண்டு. காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகரும் ஒரு திருவிளையாடல் மூலம் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி, பிறகு கோயில் கட்ட வைத்தார்.

     

    விநாயகரின் மகிமை!

     

    விநாயகரின் மகிமையை அறிந்த ஊர் பொதுமக்கள். பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். இன்றும் விநாயகரைசுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான். இதை காணும்போது உள்ளம் உருகும், நெஞ்சம் நெகிழும்.

     பக்தர்களுக்கு பேரருள் புரியும் காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் சிலைக்கு பொருந்தவில்லையாம். இந்த அதிசயத்தால் பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். 

     கோயில் அருகே மணிகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச்செல்வதாக ஒரு நம்பிக்கை.

    பிரார்த்தனை!

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் ஸ்ரீவரசித்தி விநாயகரை வணங்கி சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், கோயிலுக்கு வந்து பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.

    இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் ஆஞ்சநேயர், நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றன.

     அதேபோல் தினமும் மாலை “சத்தியப்பிரமாணம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும்போது, அவர்கள் பொய் கூறி இருந்தால் கட்டாயம் விநாயகர் உடனடியாக தண்டனை வழங்கி விடுவாராம். 

     இதனால் உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் நீங்க, வரசித்தி விநாயகரை மனமுருகி வழிபட்டால் குறைகள் நீங்கி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

     விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

  • அன்னையின் ஒன்பது அம்சங்கள்

     

    சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னைக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

    நவராத்திரியின் முதலாம் நாளில் நாம் சக்தித் தாயை சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், சாமுண்டா எனவும் அழைப்பர். அநீதியை காண்டு கோபம் கொள்ளும் இவளுக்கான முதல்நாள் நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

     

    ஒன்பது நாள் கொண்டாட்டமான நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களைத் தாங்கியிருக்கும் இவளுக்கான நைவேத்தியம் தயிர்ச்சாதம்.

    மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இந்திரனின் சக்தியான இவள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளே. பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்கள் இவளை சரணடைய வேண்டும். இவளின் அருட்பார்வை பெற படைக்க வேண்டிய நைவேத்தியம் வெண்பொங்கல்.

    சக்தியை நான்காம் நாள் அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவளான  இவளின் வாகனம் கருடன். நைவேத்தியம், எலுமிச்சை சாதம்.

    ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். மகேஸ்வரனின் சக்தியான இவள், திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னைக்கு படைக்க வேண்டிய  நைவேத்தியம் புளியோதரை.

    ஆறாம் நாள்  அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு இவளே ஆதாரமானவள். ஓங்கார சொரூபமான இவள், சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தரும் இவளுக்கான ஆறாம் நாள் நைவேத்தியம் தேங்காய்ச்சாதம்.

    ஏழாம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். ஸ்ரீமன் நாராயணனின்  பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தை கொண்ட இவள், தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.ஏழாம் நாள் நைவேத்தியம் கற்கண்டுச் சாதம்.

    எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னைக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். நல்வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமான இவள்  கல்விச்செல்வம் அருள்பவள். அன்னையின் அருள் பெற படைக்க வேண்டிய நைவேத்தியம் அக்கர வடசல், சுண்டல்

     

                                                                              

    இப்படி ஒன்பது நாளும் அன்னையை ஒன்பது அம்சமாக கொண்டாட,நம் இல்லத்திலும் உள்ளத்திலும் அன்னையின் அருள் நிறைந்திருக்கும்.

     

  • சிலைகள் இல்லாத கோவில்!

     

     

    மூலஸ்தானத்தில், சுவாமி – அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும், அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.

    பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, ‘ஆத்மநாதர்’ என பெயர் வந்தது.

     இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு – அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.

    சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.

     அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.

     

    தட்சிணம்’ என்றால் தெற்கு; சிவன், மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

    அம்பாளின் பெயர் யோகாம்பாள்!

    இவளுக்கும் உருவம் இல்லை. சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது.

     பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர். இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

    நைவேத்யம்!

    ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர். அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.

    சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும். வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!

  • தெய்வங்கள் கொலுவீற்றிருக்கும் கொலுபடிகள்

     

    மங்கையர் கொண்டாடும் நவராத்திரியின் சிறப்பு அம்சமே, அந்த ஒன்பது நாட்களும்  வைக்கப்படும் கொலு தான். பல படிகளை கொண்ட மேடையில் நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும் பலவிதமான  பொம்மைகளை பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியும் குதூகலத்தையும் கொடுக்கும்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறு நாள், கொலு ஆரம்பிக்கும். அவரவர் வீட்டு வழக்கப்படி, வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் நிறுத்துவார்கள்.

    கலசம் வைக்கும் போது மனதில் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கி, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச் செம்பை, நன்றாகக் கழுவி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

    செம்பினுள் பச்சரிசியை நிரப்பி ,அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் மேலும் சிறப்பு.

    கலசத்தின் மேல் மாவிலை மற்றும் அதனை சுற்றி வெற்றிலையை வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும்.தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

    இந்தக் கலசத்தை, அம்மனாகவே பாவித்து  பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும். கலசத்திற்கு தினமும் பூஜை செய்ய வேண்டும். அதனால்,கலசத்தை  கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ கலசத்தை வைக்கலாம். தினமும் பூவைத்து , பூஜை செய்ய வேண்டும்.

    எப்போதும் கொலுப் படிகளை  5 , 7 ,9 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் கிழக்கு மேற்காக இருக்குமாறு வைக்கலாம். படிகளின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை, விரிக்க வேண்டும். அமாவாசையன்று மரப்பாச்சி பொம்மைகளை ஜோடியாக கொலுப்படியில் வைத்து விடலாம்.

    மேல் படிகளில், முதலில் நடுநாயகமாக பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.

    அடுத்த படியாக தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம். அதற்கும் அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆன விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.

     பிறகு, கிரிக்கெட் வீரர்கள் செட் , பூங்கா செட் ,செட்டியார் பொம்மைகள் என மற்ற பொம்மைகளை  வைக்கலாம்.

     அதற்கு அடுத்து  சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் வைக்கலாம். அடுத்த படியில் பறவை பொம்மைகள்.கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

    தினமும் கொலுவின் முன்னால், அழகான கோலங்களைப் போட வேண்டும். இந்த ஒன்பது நாட்களும்,தினமும் மாலையில் விளக்கேற்றி, அந்தந்த  நாளுக்குரிய சுண்டல் போன்ற நைவேத்தியங்கள்  செய்ய வேண்டும். கொலுவின் இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைத்தால், மங்களங்களை அள்ளி தரும்.

    இந்த நன்னாளில் ஒருவருக்கொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இந்த விரதத்தின் சிறப்பம்சமாகும்.