Blog

  • 2018-03-28-14-42-50

    கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆவது நாளான இன்று, நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. 7ஆம் நாளான இன்று கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் நான்கு மாட வீதிகளில் உலா வந்த தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். தேரைத் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிவந்த சிறுமிகள், பக்தர்களை மகிழ்வித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்களுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு ஆர்வமுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • 30

    முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. பங்குனி திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

  • 2018-03-28-14-30-44

    சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பவுர்ணமி தின வழிபாட்டிற்காக பக்தர்கள் 4 நாட்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் 4 நாட்கள் அனுமதி வழங்கிஉள்ளனர். சதுரகிரி சுந்தரமாகலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வழிபட செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை வழியில் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே பக்தர்கள் செல்லவேண்டும். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்போ, பின்போ பக்தர்கள் சென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், மலையில் பக்தர்கள் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் கோவில் வளாகத்தில் மட்டுமே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வேறு வன பகுதிகளில் பக்தர்கள் தங்ககூடாது. மலை பாதையில் செல்லும் முன்பு பக்தர்கள் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது. மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். வழியில் தென்படும் விலங்குகளை தொந்தரவு செய்யகூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் .

  • 2018-03-27-15-59-25

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கமல தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 248-வது தலமாகும். தொண்டைமண்டல பாடல் பெற்ற தலங்களுள் இது 15-வது திருத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலமாகும். சிவபெருமான் நடனமாடிய பஞ்சசபைகளுள் இச்சபை இரத்தின சபையாகும். இக் கோயிலில் இன்று கமலத் தேர் திருவிழா நடைபெற்றது. தாமரை மலர் போன்ற தேரில் வண்டார் குழலி தாயார் வீற்றிருக்க கோயிலில் இருந்து புறப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இத் தேர் திருவிழாவில் திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

  • 63

    பங்குனி உத்தர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவருடன் 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் பகலிலும், இரவும் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, இரவு கயிலாச பீட ராவண வாகனத்தில் சுவாமியும், காமதேனு வாகனத்தில் அம்பிகையும் பவனி வந்தனர். 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் அலங்காரம், செய்யப்பட்டு, நான்கு ராஜவீதிகளில் பவனி வந்தனர். இதைத்தொடர்ந்து, இரவு வெள்ளித்தேரில் உற்சவர் எழுந்தருளினார்.

  • 2018-03-27-15-42-49

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர்,மகாமாரியம்மன் கோயிலில் கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழா தொடங்கியது முதல் சிறப்பு பூஜை, சுவாமி வீதி உலா என திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் பால் குடம்,கரகம்,தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மதியம் கஞ்சி வார்த்தல்,அன்னதானம் வழங்கல் நகழ்ச்சியும் மாலை பூச்சொரிதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

  • 2018-03-27-15-30-41

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிதாக நிறுவப்படும் கொடிமரம் எண்ணெய் தொட்டியில் வைக்கப்பட்டது.
    திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட உள்ளது. இதற்காக கேரளா மாநிலம் பத்தினம்திட்டை மாவட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 75 அடி உயரம் கொண்ட தேக்குமரத்தை தேர்வு செய்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மரத்தில் பச்சை கற்பூரம் மற்றும் மஞ்சள் அரைத்து பூசப்பட்டது. சபரிமலையில் கொடிமரம் செய்த சிற்பி பாபு, இந்த மரத்தை கொடிமரமாக வடிவமைத்தார். அதைத்தொடர்ந்து கொடி மரத்தை பல்வேறு மூலிகை கலந்த எண்ணெய் தொட்டியில் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதலில் கொடி மரத்தில் எண்ணெய் ஊற்றி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து கொடிமரம் எண்ணெய் தொட்டியில் வைக்கப்பட்டது.

  • 2018-03-27-15-23-19

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் 5ஆம் நாளில் வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவபெருமான், கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5 ஆம் நாளான நேற்றிரவு வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 28ஆம் தேதியும், வெள்ளி விமான உற்சவத்தில், கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுடன் காட்சியளிக்கும், அறுபத்து மூவர் விழா மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.

  • 2018-03-26-13-35-20

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராமநவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் கோயில் ஜீயர்கள் மற்றும் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி நேற்று காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு அர்ச்சனை, தோமாலை நடைபெற்றது. பின்னர், ரங்கநாத மண்டபத்தில் சீதா லட்சுமண சமேத கோதண்டராமர் மற்றும் அனுமந்த ஆழ்வாருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் ஜீயர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலு அபிஷேகம் செய்தார். பின்னர், துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், துணை செயல் அலுவலர் அரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு ராமரின் தீவிர பக்தரான அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

  • 2018-03-26-05-15-36

    திருத்தணி பாதயாத்திரைக் குழுவின் சார்பில், ஆண்டுதோறும், சென்னையில் இருந்து, காவடிகளுடன் புறப்பட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து உற்சவருக்கு பால் அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர்.அந்த வகையில், நடப்பாண்டில், சென்னை, பவளக்காரத் தெருவில் உள்ள பழைய தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் காலையில் புறப்பட்டு, மதியம் அம்பத்துார் வந்தடைகின்றனர். தொடர்ந்து மாலையில் அம்பத்துாரில் இருந்து புறப்பட்டு, ஆவடி பாபு திருமண மண்டபத்தில் தங்கியிருந்து ஓய்வு எடுக்கின்றனர்.பின், 27ம் தேதி, ஆவடியில் இருந்து புறப்பட்டு, வேப்பம்பட்டு வழியாக திருவள்ளூர் வந்தடைகின்றனர். தொடர்ந்து, 28ம் தேதி, திருவாலங்காட்டிலும், 29ம் தேதி, திருத்தணி அருகே சரஸ்வதி நகர் தங்கியிருந்து, 30ம் தேதி, காலை, 9:00 மணிக்கு காவடிகள் மற்றும் பால்குடங்களுடன் பக்தர்கள், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சென்றடைகின்றனர்.பின், காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால் அபிஷேகம் நடத்தியும், இரவு தங்க ரதத்தில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதியில் வீதியுலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன