Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • சிவன் கோயிலில் மனமுருகி வழிபட்ட மோடி….

    கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.
    பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ளார்.
    இந்நிலையில் காலை சுமார் 9.10 மணியளவில் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயில் வந்த மோடிக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    வாசலில் கை, கால்களை கழுவிய பின்னர் கோயிலுக்குள் சென்ற மோடி, ஸ்ரீ கந்தேஸ்வரரை மனமுருகி வணங்கி வழிபட்டார்.
    பிரதமரின் பெயர், மற்றும் பிறந்த நட்சத்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டு சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. பின்னர், பிரசாதம் மற்றும் நாராயண குருவின் படம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டது.

  • திருவண்ணாமலையில் நவராத்திரி விழா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
    அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், நவராத்திரி விழா தனிச்சிறப்புமிக்கது. அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 1ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான 1ம் தேதி இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அதைத்தொடர்ந்து, திருவீதியுலா நடைபெறும்.

    விழாவின் 2ம் நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3ம் நாளன்று கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4ம் நாளன்று மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாள் ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், 6ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம் நாள் லிங்கபூஜை அலங்காரத்திலும் 9ம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 10ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெறும். அதே போல், பிரசித்தி பெற்ற துர்கையம்மன் கோயில், பச்சையம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

  • பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு.

    புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை அதிகாலை முதலே பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் துளசி, அருகம்புலம் மாலைகளையும், பூக்களையும் வாங்கி பூஜை செய்தனர். பூஜைக்குப் பின்னர் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

     

  • ஸ்ரீகாளஹஸ்தியில் நிவாரண பூஜை செய்தார் சிந்து….

    ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, கோயிலில் ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்று நிவாரண பூஜை செய்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தனது பெற்றோருடன் வந்த சிந்துவுக்கு, கோயில் அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.
    ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். பின்னர் ஞானப்பூங்கோதை தாயார் மற்றும் காளத்திநாதரை அவர் தரிசித்தார்.
    பின்னர் தேவஸ் தானம் சார்பில் அவருக்கு பட்டு வஸ்திரம், பிரசாதங்கள் மற்றும் நினைவுப் படம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    “ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் இங்கு வருவதாக வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி இங்கு வந்ததாகவும், மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டதாகவும் சிந்து கூறினார்.

  • ஸ்ரீசைலம் கோயிலில் தரிசன டிக்கெட் உயர்வு….

    ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது, ஆந்திரத்திலுள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
    அவர்களுக்காக, காலை முதல் இரவு வரை பல வகையான தரிசன சேவைகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டணத்தை திடீரென உயர்த்தி கோயில் நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.
    இனி, வரும் காலங்களில் ஸ்பரிச தரிசனம் காலை 6.30 முதல் 10.30 மணி வரையும், மீண்டும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நேரங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அலங்கார தரிசனத்தில் மட்டும் சிவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தரிசன டிக்கெட்டின் கட்டணம் குறைவாக இருப்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகம் உள்ளதாகவும், கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தவும், கோயிலின் மற்ற செலவுகளை சமாளிக்கவும் தரிசன டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில், ரூ. 10 ஆயிரத்தில் புதிய தரிசன சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 61 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

    சிவனின் அக்னி தலமாக விலங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
    100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள், கிரிவலப்பாதை அஷ்டலிங்க சந்நிதிகளில் இருந்த உண்டியல்கள், துர்க்கையம்மன் கோயில் உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.
    இதில், 60 லட்சத்து 97 ஆயிரத்து 597 ரூபாய் ரொக்கம், 220 கிராம் தங்கம், 640 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தது தெரியவந்தது.

    காணிக்கையாக கிடைத்த ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • திருப்பதியில் காணிக்கை முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம்….

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.
    வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.
    திருப்பதியில் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
    பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாக முடி ஒவ்வொரு மாதமும் ஏலம் விடப்படுகிறது.
    இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
    ஜூலை மாதம் முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாதம் முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • ஜயேந்திரர் சிறப்பு வழிபாடு

    காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள மடத்துக்கு சிறப்பு பூஜைக்காக சென்றிருந்த ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்கு பூஜைகள் முடிந்து செப்டம்பர் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குத் திரும்பினார்.

    அங்கு அவருக்கு பக்தர்கள், மடத்தின் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி பிற்பகலில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஜயேந்திரர் சென்றார். அங்கு கோயில் நிர்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சங்கராச்சாரியார் கலந்து கொண்டு வழிபட்டார்.

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா….

    பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டு தசரா திருவிழா அக்டோபர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 30ம் தேதி காலை 10 மணிக்கு காளி பூஜை நடக்கிறது. அக்டோபர் 1ம்தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது.

    காலை 8 மணிக்கு நடக்கும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்குவர். இதையொட்டி காலை 6 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனையும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு பரதநாட்டியமும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

  • கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் உயர்வு….

    கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக கோயில்களில் சேவை புரிந்துவரும் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, அவர்களின் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 5 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 3 ஆயிரத்தி 700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோயில் சிற்பிகள், அர்ச்சகர்கள், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ. 5கோடியில் திட்டமும், மேலும் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சேவர்த்திகள் மண்டபம், பாதுகாப்பு அறை கட்டப்படும்.

    தேனி மாவட்டம் குச்சனுர் கோயிலில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டப்படும்.மேலும் 241 கோயில்களில் ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.