Category: தொடர்கள்

தொடர்கள்

  • பகவான் சீரடி சாயிபாபாவின் பதினோரு உபதேச மொழிகள்

     

    பகவான் சீரடி சாய் மகாராஜ்  தன்னை நினைக்கும் அடியவர்களுக்கு அளவில்லாத அருள் பாலித்து வருகிறார். தனது பக்தர்களை வழி நடத்த பதினோரு உபதேசங்களை நல்கியுள்ளார் பாபா 

     

    எவன் ஒருவன் சீரடி மண்ணை மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

    துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

    இந்த உலகத்தை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

    என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.

    என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

    என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

    என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

    நீ என்னை அடைந்தால் நான் உன்னை காப்பாற்றுகிறேன்.

    நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

    நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.

    என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது. சாயி மகானின் வார்த்தைகளை வேத வாக்காக நம் வாழ்க்கையில் கடைபிடிக்க என்றென்றும் வாழ்வில் வசந்தம் நிலைக்கும்.

     

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ….

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 17

    புனோம் பென் விடுதியில் தூங்கி எழுந்தோம். நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்துவிட்டோம். எப்படியும் ஒன்பது மணிக்குதான் கண்ணைப் பிட்டுக்கொள்ள முடியும் என்று நினைத்தோம். ஆனால் ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். புறப்பட்டு வெளியே வந்தபோது எட்டரை மணியிருக்கும். தங்கிய ஹோட்டலில் காலை உணவு வசதி இல்லை. அது தங்குமிடம் மட்டும்தான். ஆகவே, வேறுவழியின்றி வெளியே பசியாறப் புறப்பட்டோம்.

    ஒவ்வொர் இடமாகப் பார்த்துப் பார்த்துத் தேடினாலும் நாங்கள் நினைப்பது போன்ற எந்தவோர் உணவகமும் கண்ணில் அகப்படவில்லை. எல்லாமே உள்ளூர்க்காரர்களுக்கு ஏற்ற உணவுக் கடைகள்தான். அங்கிருந்து எழும் வாடை எங்களை நெருங்கவே விடவில்லை. அனைவருமே அசைவ உணவு உட்கொள்ளக் கூடியவர்கள்தான் என்றாலும் காலை உணவுக்கு அசைவம் உண்டு பழக்கமில்லை.

    சிங்கப்பூரில் ஆங்காங்கே பொது உணவுக் கடைகள் இருக்கும். ஹாக்கர் செண்ட்டர் என்று அழைப்போம். அதில் எல்லாருக்கும் ஏற்ற உணவுத் தெரிவுகள் கிடைக்கும். சீன உணவுக் கடைகள் அதிகமிருக்கும் அங்கு. மலாய், இந்திய இனத்தவருக்கென ஒரு கடையாவது ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தியக் கடைகளை நடத்துவது பெரும்பாலும் இந்திய முஸ்லிம்களாக இருக்கும். அங்கு பெரும்பாலும் தோசையும் பரோட்டாவும் கிடைக்கும். முன்பு இடியாப்பமும் புட்டும் ஆயத்த உணவாக அங்கு கிடைத்து வந்தன. இப்போது ஏனோ அவை பெரும்பாலும் கிடைப்பதில்லை உணவு அங்காடிகளில்..

    அதுதவிர மேற்கத்திய உணவும் அங்கேயே கிடைக்கும். கொஞ்சம் நடந்தால், மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி, பர்கர் கிங் போன்ற விரைவு உணவுக் கடைகள் தென்படும். ஆனால் புனோம் பென்னில் அப்படி எதையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் ஓட்டுநரான ராவும் எங்கள் தேவையை ஊகித்து ஒவ்வொரு கடையாக நிறுத்துவார். உள்ளே போன எங்களில் ஒருவர் வெளியே வரும்போது அவருடைய முகத்தை வைத்தே “எட்ரா வண்டியை” என்று கூவுவோம் எல்லாரும்.

    இந்தக் கடை தேடலிலேயே ஒரு மணி நேரத்துக்கும் மேல் வீணாயிற்று. ஒரு வழியாக அரண்மனை உள்ள ராஜ வீதிக்கு அருகே ஒரு கடையைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். ரொட்டி, ஆம்லெட், காப்பி கிடைக்கும் என்றதும்தான் எங்களுக்கு உயிர்வந்தது. ஒரு ஆளுக்கு பத்து வெள்ளி வரை வரும் என்றாலும் பரவாயில்லை இதுக்குமேல் அலையத் தெம்பில்லை என்று அமர்ந்துவிட்டோம்.

    கடைக்காரப் பையன் குறிப்பெடுத்து எங்களுக்கான உணவைத் தயாரித்து எடுத்துவர மேலும் அரைமணி நேரமானது. வெறுத்துவிட்டோம். காத்திருக்கும் நேரத்தில் விளையாடுவதற்கென்று சில சீட்டு விளையாட்டுகளும் வண்ணம் தீட்டும் தாள்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. இலவச இணைய வசதியும் இருந்தது. அதனால் ஓரளவு சமாதானமானோம். பேசாமல் ஒரு ரொட்டி பாக்கெட் வாங்கிக் கடித்துக் கொண்டே பாதி இடம் பார்த்திருக்கலாமே என்று அலுத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து வெளியேறினோம்.

    அப்போது முடிவெடுத்தோம். இனிமேல் வெளியூரோ வெளிநாடோ தங்குவதற்கு விடுதி பதிவு செய்யும்போது காலை உணவுக்கும் சேர்த்துப் பதிவு செய்ய வேண்டும். கூடிய மட்டும் அந்த வசதியுள்ள விடுதியில்தான் தங்கவேண்டும் என்று. இல்லாவிட்டால் இப்படித்தான் நேரம் விரயமாகும். வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புமிக்கது. அங்கு பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கும். ஒருவேளை உணவுக்கு இப்படி அலைந்து நேரத்தை வீணடிப்பது அராஜகம்.

    பசியாறி முடிக்கும்போது மணி பத்தைத் தாண்டிவிட்டது. மாலை நான்கு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும். இடையில் இருப்பதோ ஆறு மணி நேரம்தான். மதிய உணவுக்கு எப்படியும் அரை மணி நேரமாவது வேண்டும். தங்கியிருந்த விடுதிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சந்தை இருந்தது. கம்போடியா நினைவாகச் சில பொருட்களாவது அங்கே வாங்க வேண்டுமென பரணி ஒரே அடம்.

    இந்த லட்சணத்தில் எதைப் பார்ப்பது ? அரண்மனை அருகிலேயே இருந்தது. முதலில் அதைப் பார்த்து முடிப்போம் என்று முடிவெடுத்தோம். நல்லவேளை அரண்மனைக்கான அனுமதிக் கட்டணம் அதிகமில்லை. எங்கள் கையிலிருந்த விட்டமின் ப எல்லாம் கிட்டத்தட்ட காலியாகும் தறுவாயில் இருந்தோம். நாலு வெள்ளியோ ஐந்து வெள்ளியோ கட்டணம். அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனோம். அரண்மனை என்றால் நம்ம ஊர்போல கோட்டை கொத்தளங்களோடு பிரமாண்டமாய்ப் பழமைப் பிசுக்கேறி வெளவால் பறக்கும் இடம் என்று நினைக்க வேண்டாம். 

         

    சும்மா துடைத்து வைத்த வெண்கலச் செம்பு மாதிரித் தக தக தக என மின்னியது அரண்மனை. காலை வெயிலில் பொன் போல் சுடர்ந்தது அரண்மனை. முற்பகல் வேளையாக இருந்தாலும்கூடக் கடுமையான வெயில் இல்லை. நிர்வாக வசதிக்காகப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் அவை கண்ணை உறுத்தாத வண்ணம் அரண்மனைக் கட்டட வடிவத்தோடு இயைந்து செல்லும் வகையில் கட்டப்பட்டிருந்தன.

    அரண்மனை நுழைவாயிலிலேயே அனுமதிச் சீட்டு விற்குமிடம் இருந்தது. இதென்ன பெரிய விஷயமா என்று சிலர் நினைக்கலாம். ஆமாம், பெரிய விஷயம்தான். நீங்கள் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் போயிருக்க மாட்டீர்கள். தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்றிருக்க மாட்டீர்கள். பூம்புகாரிலுள்ள எழுநிலை மாடத்துக்குப் போயிருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அங்கெல்லாம் பார்க்க வேண்டிய இடத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளித்தான் அனுமதிச் சீட்டு விற்கும் கூடம் இருக்கும்.

    அதைத் தெரிவிக்கும் எந்த அறிவிப்பும் இருக்காது. அதைக் கடந்து நுழைவுச் சீட்டுக் கிழிக்கும் இடத்துக்கு அருகே போனபிறகுதான் “அந்தா அங்கண போயி டிக்கெட் வாங்கிட்டு வாங்க” என்று ஒருவர் உங்களை ஆற்றுப்படுத்துவார். வேகாத வெயிலில் வேகு வேகென்று நடந்து போய்ச் சீட்டு வாங்கித் திரும்ப வேண்டும். வேறு வழியில்லை. இது என் அனுபவம். இப்போது மாறியிருக்கலாம். இந்தியாவை விட்டு வெளியே வந்ததுமுதல், ஒவ்வோர் இடத்திலும் மனம் அந்த இடத்தை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

    என் நண்பர்களும் அப்படித்தான். ஏன் நம்மவர்கள் ஒரு சிறிய விஷயத்தில்கூட அக்கறை செலுத்துவதில்லை என்று வியந்துபோகும் எங்கள் மனம். இந்தியாவைவிடப் பொருளாதாரத்தில் பலமடங்கு பின்தங்கியுள்ள கம்போடியாவின் தூய்மை வியக்கத்தக்கது. அரண்மனை அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் அபாரமாகப் பராமரிக்கப்பட்டு வரும். மற்ற இடங்கள் பெரும்பாலும் குப்பைதான்.

    தஞ்சாவூர் அரண்மனையிலுள்ள மராட்டா தர்பார் என்னும் கூடம் கவின்மிக்க இடம். வண்ண வண்ணச் சுதைச் சிற்பங்கள் அழகு கொஞ்சும் எழில்மிக்க இடம். பட்டை பட்டையாகத் தூண்களும்.. வளைவுகள் மிகுந்த மேற்கூரையும்… பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இடம். கலைடாஸ்கோப்பைத் திருகினால் உருவாகும் வண்ண வண்ண வடிவங்களைப் பார்ப்பது போலிருக்கும் அந்த கம்பீரமான வண்ணக்கூடம். சுமார் 500 ஆண்டுப் பழமை மிக்க இடம். ஆனால் அதற்குச் செல்லும் வழியெல்லாம் இருட்டு, நூலாம்படை, வௌவால் புழுக்கை துர்நாற்றம், தர்பார் தரையெங்கும் புழுதி. எவர் வேண்டுமானாலும் சுவரில் கிறுக்கினால் அதைத் தட்டிக் கேட்க நாதியற்ற தனிமை.

    தர்பாரின் நடுநாயகமாக உள்ள அலங்காரக் கூடத்தின் பின்னால் உள்ள சுவரில் அமைச்சர்கள் இருவர் அருகில் நிற்க, இரண்டாம் சிவாஜி மகாராஜாவின் அழகான ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருக்கும். இவர் மன்னர் சரஃபோஜியின் மகன். இவர்தான் தஞ்சையை ஆண்ட கடைசி மராட்டிய மன்னர். 1833-1855 இவரது ஆட்சிக் காலம். இவருக்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளே புகுந்துவிட்டது. ஜீவகளை ததும்பும் இந்த சிவாஜி மன்னரின் ஓவியம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. ஓதம் பொங்கும் பழங்காலச் சுவர் காரணமாகத் தரையிலிருந்து நாலு அடி உயரம் வரை அது மொத்தமாக அழிந்தே போனது. மிஞ்சியுள்ள இடத்தில் கையெட்டும் தூரம் வரை கிறுக்கல்கள்.

           (ஓவியத்தில் இருப்பது சரஃபோஜியா சிவாஜியா என்று இப்போதுதான் குடவாயில் பாலு ஐயாவை அழைத்துக் கேட்டேன். அவர்தான் இந்த விவரங்களைச் சொன்னார். மேலும் அவர் மராட்டா தர்பார் என்று அந்தக் கூடத்தை அழைப்பது சரியல்ல என்கிறார் தமது “தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு” நூலில். நாயக்கர்களால் கட்டப்பெற்ற அந்த கொலு மண்டபத்தின் மூலப் பெயர் லக்ஷ்மி விலாசம். செவ்வப்ப நாயக்கர் இதைக் கட்டியிருக்கலாம். பிற்காலத்தில் மராட்டிய மன்னர்களும் அதை கொலு மண்டபமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். சுதைச் சிற்பங்கள் உட்படப் பலவும் பிற்கால மராட்டியர்களின் சேர்க்கை என்பதால் நாயக்க பாணி மறைந்து மராட்டியக் கலை பாணி மேலோங்கிவிட்டது என்று எழுதுகிறார் குடவாயில்.)

    இப்படித்தான் ஒருமுறை கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களைப் பார்க்கக் குடும்பத்தோடு போயிருந்தோம். பல ஆண்டுகளாகப் போக நினைத்த இடம் என்பதால் நின்று நின்று ரசித்து ரசித்து மன்மதனையும் ரதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே காமிரா எடுத்துச் செல்லக் கூடாதாம். ஏன் என்றால் பதில் இல்லை. அப்படித்தான் என்றார்கள். சரி தொலைகிறது. சிற்பங்கள் பூராவும் நூலாம்படை படிந்து பராமரிப்பு இல்லாமல் நின்றன.

    நூலாம்படையைக் கைகளால் களைந்து கொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் வந்து “சார் செலையெல்லாம் தொடக் கூடாது சார்” என்று அதட்டினார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா?” என்று கடுமையாகக் கேட்டதும் பேசாமல் போய்விட்டார். ஒருக்காலும் இம்மாதிரி ஆட்களிடம் பணிந்து போகாதீர்கள். கருவறை மூர்த்தியைப் படம் எடுக்கக் கூடாது என்பதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. ஆனால், வெளிப்புற மண்டபத்திலுள்ள சிலைகளைப் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் ? இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

    கம்போடிய அரண்மனையின் வெளிப்புறத்தில் படம் எடுக்கத் தடையில்லை. 1860களில் கட்டப்பட்ட கம்போடிய அரண்மனை வளாகத்துக்குள் பல்வேறு கட்டடங்கள் உள்ளன. அவற்றுள் எங்கள் கண்ணுக்கு முதலில் தட்டுப்பட்டது கொலு மண்டபம். சரிவான கூரையுடன் கூடிய அழகான கட்டடம். தாய்லந்துக் கட்டட பாணியை ஒத்த கட்டட பாணி.

    கரண்ட மகுடம் போல் படிப்படியாகக் குறுகி மேலே ஊசிபோல் முடிகின்றன கட்டடத்திலுள்ள மூன்று கோபுரங்களும். நடுவில் இருக்கும் கோபுரம் பெரியது. அதன் இருபக்கமும் அளவிற்சிறிய கோபுரங்கள். நடுவிலுள்ள கோபுரத்தின் மேலே நான்முகன் முகம் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அப்பட்டமான கம்போடிய முகம். ஊழ்கத்தில் அமைந்த தோற்றத்தில் இல்லாமல் கண்களைப் பளிச்சென வெறித்துப் பார்க்கும் தோற்றம் பிரம்மனுக்கு.

    அந்த முகத்துக்கு மகுடம் வைத்தது போல் கோபுரம் சுருங்கி மேலேறுகிறது. கோபுரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கின்னரர்கள் அதைத் தாங்கிப் பிடிப்பது போன்ற அழகிய சிலைகள் உள்ளன. அந்தக் காலத்தில் இங்கேதான் மன்னருக்குப் பட்டாபிஷேகம் நடந்திருக்கும். இன்னமும் இங்கே சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவாம். முக்கிய விருந்தினர்களை மன்னர் சந்திப்பதும் இங்கேதானாம். வேலைப்பாடு மிக்க சில அரியணைகளோடு வெளிநாட்டுப் பிரதானிகள் அளித்த மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் இங்கே கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நின்று நிதானமாகப் பார்க்க ஒரு முழுநாள் வேண்டும்.

    எங்களுக்கு அதற்கு நேரமில்லை. லேசாகக் கண்களால் மேய்ந்துவிட்டு அடுத்த கட்டடத்திற்குச் சென்றோம். ஒவ்வொரு கட்டடமும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கிறது. கொலு மண்டபத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறது பௌர்ணமி அரங்கு. இதற்குக் கூரை மட்டும்தான். பக்கவாட்டுச் சுவர்கள் கிடையாது. நல்ல உயரமான தளத்தின் மீது தூண்களோடு உள்ளது அரங்கு. உள்ளே ஒரு மேடை. அதற்கு மட்டும் பக்கச் சுவர்கள் உள்ளன. கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க இந்த இடம். பௌர்ணமி அன்று ஏகாந்தமாக அமர்ந்து இசை கேட்டு, அப்சரஸ் நடனம் கண்டு ரசிப்பார் மன்னர்.

    அதன் அருகிலேயே சில்வர் பகோடா. அதாவது வெள்ளிக் கோபுர அரங்கு. இது மன்னர் குடும்பத்துக்கான பௌத்த ஆலய வளாகம். உள்ளே விதவிதமான புத்தர் சிலைகள் உள்ளன. ஆலயத்துக்கு வெளியே ஒரு தாழ்வாரத்தைத் தாண்டினால் மன்னர் நொரோடம் ஒரு வெள்ளைக் குதிரையில் அமர்ந்தவாறு உள்ள சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் இருபக்கங்களிலும் வெள்ளி மாடங்கள் உள்ளன. அதில் மன்னரின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டிருக்கிறதாம். அண்மையில் கட்டப்பட்டதுதான் என்றாலும் மிகுந்த வேலைப்பாடுமிக்க மாடங்கள்.

    இந்த இடத்தில் சற்று உயரத்தில் தண்ணீர்த் தொட்டி அமைத்து தாமரைப் பூக்களை மலரச் செய்திருக்கிறார்கள். அந்த மலர்கள் அந்த இடத்தையே அழகாக்கி விட்டன. அதற்குப் பக்கவாட்டில் அங்கோர் வாட்டின் சிறிய மாதிரி ஒன்று செய்து வைத்திருக்கிறார்கள். அந்த மாபெரும் ஆலயத்தை நன்கு புரிந்துகொள்ள இந்த மாதிரி வடிவம் உதவியாக இருக்கும். இந்தச் சிறிய அளவில் பார்க்கும்போதே அந்தப் பேராலயத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது.

    இதற்குள் வெயில் ஏறிவிட்டது. வியர்த்துக் கொட்டி சட்டையெல்லாம் நனையத் தொடங்கி நிழலுக்கு ஏங்கியது உடல். அரண்மனைக்குள் எங்களைத் தவிர வேறு அதிகமான பயணிகள் யாரும் இல்லை. எல்லா இடங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. அரண்மனையை ஒரு சுற்றி சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அடுத்த இலக்கு, கம்போடியாவின் தேசிய அரும்பொருளகம். நேரமிருந்தால் S-21 சிறைச்சாலையைப் பார்க்க நினைத்தோம். ஆனால் அது முடியாது. அதற்கு நேரமில்லை.

    புனோம் பென் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது அந்த உயர்நிலைப் பள்ளி. மிக அண்மையில் நடந்த மாபெரும் இனப் படுகொலையின் சாட்சியாக இன்னும் இருக்கிறது அந்தப் பள்ளி. சுமார் 17-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறை வைக்கப்பட்ட இடம் அது. அங்கிருந்து உயிரோடு வெளியேறியவர்கள் ஏழு பேர் மட்டுமே !…

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     
     
  • மழலை வரம் தந்த சாய் மகாராஜ்

     

    சீரடி தெய்வத்தின்  ஒவ்வொரு சொற்களும் அவரின் அடியவர்களுக்கு வேத வாக்கு. அவர் சொல்லும் சொற்கள் மகத்துவம் வாய்ந்தது என்று மனமார நம்பினார்கள். அவர் சொல்லிவிட்டால் அது அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

     ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையில்லை.  கண்ணில் பட்ட தெய்வங்கள் அனைத்துக்கும் கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் செய்துகொண்டாள்.  ஆனால் அதற்கான பலனை தான்  காண முடியவில்லை . இதனால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த அவள்,   இறுதி முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் சீரடி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள். 

     மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.அவள் அவரைத் தனியாகக் கண்டு வீழ்ந்து வணங்கி தனது நீண்ட நாள் கோரிக்கையான பிள்ளை வரத்தை வேண்ட விரும்பினாள். ஆனால் அதற்கான  உரிய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி பாபாவின் நெருங்கிய நண்பரான  ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள். 

     ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்.  ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார். 

     இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். ஷாமா அந்தப் பெண்மணிக்கு ஜாடை செய்தார்.  அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம்அளித்தாள்.  பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்.  அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

     பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறது என்பதைக் கவனி. 

    ஷாமா:  இந்த பெண்மணி, அந்த மாதிரியாக ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்.  எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள். 

     பாபா: இத்தேங்காய் அவளுக்கு ஒரு மழலையை அளிக்குமா?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

     ஷாமா:  உங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நாங்களறிவோம் .  உங்களது சொல் அவளுக்கு நிச்சயம் குழந்தைப் பேற்றை அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.

    விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது.  பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருதார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்.  முடிவாக பாபா சம்மதித்தார். 

    பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்

     ஷாமா:  எப்போது?

    பாபா:  12 மாதங்களில்

    இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும்உண்டனர்.  மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது. 

     பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி “தாயே ! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி.  பாபாவின் கருணையால் பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை நிச்சயம் பிறக்கும். நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்” என்று கூறினார்.

     பாபாவின் வாக்கு பொய்யாகவில்லை. அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.  புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்.  கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள். பாபாவுக்கு தங்களது  நன்றியை தெரிவிக்க ,அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்.  ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.

     

    சீரடி சாய் பாதம் பணிவோம் ………

    சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் ……

     

  • தன்னைக் காண அடியவருக்கு உதவிய ஸ்ரீ சமர்த்த சாயி

     

    காகாஜி வைத்யா என்பவர் நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணியில் வாழ்ந்து வந்தார்.  அவர் ஒரு சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர். சில காலமாக பல்வேறு மனவருத்தத்தினால்  அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார்.  மன அமைதி இழந்திருந்த அவர், ஒருநாள் மாலை தேவியின் கோவிலுக்குச் சென்று தம்  கவலைகளை தீர்க்குமாறு,மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.  தேவியும்  அவர் மேல் கருணைக் கொண்டு,இரவு கனவில் தோன்றி அவரிடம், “பாபாவிடம் நீ செல்வாயாக, பின் உன் மனம் அமைதியடையும்”என்றாள்.   இந்த பாபா யார் என்று அவளிடம் கேட்க காகாஜி முற்படும் போது தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார்.  தேவி, தன்னைக் காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார். 

     சிறிது எண்ணத்திற்குப்பின் அவராகவே இந்த பாபா த்ரயம்பகேஸ்வராக (சிவனாக) இருக்கவேண்டும் என முடிவுக்கு வந்தார்.  எனவே அவர் நாசிக் ஜில்லாவிலுள்ள  த்ரயம்பத்திற்குச் சென்றார்.  அங்கு பத்து நாட்கள் தங்கி, தினந்தோறும் அதிகாலை குளித்து, ‘ஸ்ரீருத்ரம்’ ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களை செய்தும்   சலனமுற்றவராகவே இருந்தார்.  தமது இருப்பிடத்திற்குச் மீண்டும் சென்ற அவர், தேவியிடம் மீண்டும் மன்றாடினார். அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, “நீ ஏன் த்ரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்?  நான் பாபா என்று கூறியது ஷீர்டியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை” என்றாள்.

     அடுத்து தான் எப்போது ஷீர்டிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் கவலையாக மாறியது. ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார் என்பது காகாஜியின் விஷயத்தில் நிரூபணமானது. காகாஜிக்கு உதவிட பாபா  தனது அடியவரான ஷாமாவையே அனுப்பி வைத்தார்.  அதன் பின்னணி சுவாரசியமானதும், ஆச்சரியப்படுத்துவதும் ஆகும். ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.  அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான வணியில் உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.

     தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள்.  அத்தருணத்தில் தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள்.  இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன.  அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்து அவரது கவனத்தை ஈர்ந்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள். 

    சிலநாட்களுக்குப் பின்னர் ஷாமா இவ்வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார்.  இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில் ,ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார்.  ஸ்ரீமான் பூட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின.  அனைவரும் மகிழ்ந்தனர். 

    ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார்.  அப்போது அவரது தாயாரின் வேண்டுதல்களை அவரின் அண்ணன் அவளின் மரணப்படுக்கையில் நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  எனவே கடவுள் அவர்கள்மீது மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.  பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவர் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார். ஷாமாவும் மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் செய்யாமல்,ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கச் சொன்னார்.

     பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து வேண்டிக்கொண்டார்.  சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் அவரையே சமர்ப்பிக்கும்படியும் பாபா வற்புறுத்தினார்.  பாபாவின் அனுமதியையும், உதியையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார்.  அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார்.  காகாஜி அப்போதுதான் பாபாவைப் பார்க்க மிக்க கவலையுள்ளவராக இருந்தார்.  அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார்.  இது தான் சாயின் லீலை.

    தேவி சொன்னது போலவே , பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாயும், அடக்கமாகவும் ஆயிற்று. பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார். 

    தன் பார்வை மற்றும் தரிசனத்தினால் மட்டுமே கூட  பாபா தன் அடியவர்களுக்கு பேரானந்தத்தையும், நிம்மதியையும் தர முடியும் என்பதற்கு காகாஜியின் சம்பவமே ஒரு உதாரணம் .

    ஜெய் ஜெய் சாய் ராம் …..

  • சீரடி பாபாவுக்கான விரதங்கள்

     

    ஆன்மீகத்தோடு ஒன்று கலந்தது பிராத்தனைகளும்,விரதங்களும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பிரத்தனைகளை, பக்தர்கள் அவர்தம் வசதிக்கேற்ப செலுத்துவதுண்டு. ஆனால் அதனை முறைப்படி பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு,அர்ப்பணிப்போடு செய்யும் போது அதன் பலன்கள் அனேகம்.

    நமது சீரடி மகானிடமும், பக்தர்கள் தங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல விதமான விரதங்களை கடைப்பிடிப்பதுண்டு . சீரடி பாபா விரத முறைகளில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தது வியாழக்கிழமை விரதம் தான். ஆனால் அது போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில்  சிலவற்றை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.  

     சாய் சத்யவிரத பூஜையில்,வழக்கமான சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி உள்ளன்புடன் அவரை வணங்க வேண்டும் .

     பாபாவின் வழிபாட்டு முறையில் ,சர்க்கரையில் அக்கறை இல்லா லீலையும் ஒன்று. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருந்தால் ,மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

     பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாயத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்பது சாய் அடியார்களின்  நம்பிக்கை.

     திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது என்பது பலனடைந்தவர்களின் வாக்குமூலம்.

     கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று,  அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ என்னும் அணையா நெருப்பு முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு படைக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

     நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21,  48,  54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் தேங்காய் துருவல், அவல், சர்க்கரை கலந்த இனிப்பை நைவேத்தியமாக  படைக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

     இந்த வழிபாட்டு முறைகளில் யாருக்கு எந்த வேண்டுதல் உண்டோ, அதற்கேற்ப அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை, இன்ன தேதிக்குள் முடிய வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து செய்தால் அவர் நமக்கு எல்லா செல்வங்களையும் அருள்வார்.

     சாய் பிராத்தனை   இருளகற்றி நம் வாழ்வில் ஒளியேற்றும் . ஜெய் சாய்ராம் 

     

  • எல்லா உயிர்களுக்கும் தாயான சாய்

     

    தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் இறைவன் என்பார்கள் . கண்கண்ட கருணை தெய்வமான பாபா எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்து  இருக்கிறார் . சீரடியில் பல்லி  ஒன்றை வைத்து  சாய் நிகழ்த்திய அற்புதத்தை இப்பதிவில் காண்போம் .

    இறைவனின் படைப்புகளில் ஆறறிவு படைத்த மனிதன்தான்  அனைத்தை விடவும் ஒரு படி மேல் . ஆனால் அவன் தான்,  தன் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றிற்கும்  கூட அதிகமாக கவலைப்படுவான் . அதே , ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் இறைவன்  கொடுத்த வாழ்க்கையை சுதந்திரமாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு நம்மை காட்டிலும் எதிர்காலத்தை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றலை இறைவன் தந்துள்ளான் .

    ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தபோது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. அவர்முன் அமர்ந்திருந்த பக்தர் ஒருவருக்கு அது  கெட்ட சகுனமா நல்ல சகுனமா?  என்ற சந்தேகம் எழுந்தது . அதை பாபாவிடம் கேட்க , அவரோ இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் . கேட்டவர்களுக்கு நம்பவும் முடியவில்லை , ஆனால் சொனது பாபா என்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . அதனால் எல்லோரும் அந்த சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, ஆவலோடு காத்திருந்தனர். பாபா! வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்குகள் எப்படி இவற்றையெல்லாம் அறிகின்றன? என  அந்த பக்தர் வியப்போடு கேட்டார்: பாபா பக்தரைக் கூர்மையாகப் பார்த்தார்.

    அந்த பக்தருக்கு இப்போது ஒன்று புரிந்தது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு! இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை சீரடி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில் இருந்து வந்த ஒரு பிரமுகர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர். ஆனால் குதிரை நகர மறுத்தது.

    குதிரைக்கு நல்ல பசி போலிருக்கிறது என்று நினைத்த பிரமுகர் , அதற்கு கொள்ளு வாங்கி வர நினைத்தார் . கொள்ளை  வாங்கி வர  பிரமுகர் தன் தோளில் இருந்த ஒரு காலிப் பையை தூசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. கீழே விழுந்த பல்லியின் அடுத்த செயல்பாடுகளைக் கவனிக்குமாறு கண்ணாலேயே கட்டளை இட்டார். சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது. அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.

     இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபா அந்த பல்லிகளைப் பற்றி  தீர்க்கதரிசனமாக சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆகிவிட்டதே? அவுரங்காபாத் எங்கே? சீரடி எங்கே? . அந்த பல்லிகள் மீண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததை எண்ணி பேச்சற்று போனதோடு , அனைத்து உயிர்களிடத்தும் பாபாவிற்கு உள்ள தாயன்பை நினைத்து நெக்குருகினார் .

    விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் நுண்ணிய  உணர்வுகளையும் , அதன் எதிர்காலத்தைப் பற்றியும்  துல்லியமாக உணர்ந்தவர் நம் பாபா . துயருற்றும் , பாபாவின் கருணைக்கும் ஏங்கி தவிக்கும் நம் உணர்வுகளை அறியாதவரா பாபா? . மனம் உருகி உண்மையாக பாபாவின் திருப் பெயரை சொல்லி பிரார்த்திக்கும் போது  நம் துயரங்கள் எல்லாம் சுவடு தெரியாமல் பறந்து விடும் .

     

    ஓம் சாய் ராம்

    சாய் சரிதம் தொடரும் …..

  • “நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் ”

     

    என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால், உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன் – சாயி

     

    மும்பை  பகுதியின்  தானே என்ற பிரதேசத்தில் பாபாவின் அடியவரான  சோல்கர் என்பவர்  வசித்துவந்தார். சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து அவர் , உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் நிர்வகிக்க கூடிய சூழலில் இருந்தார் .  தற்காலிக ஊழியராக இருக்கும்  அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்று  நிரந்தர ஊழியரானால்  ,தனது சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும் என நினைத்தார் . அவர் பாபாவிடம் ,“ பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி சீரடி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு சீரடியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்! ” என்று வேண்டிக்கொண்டார் . பாபாவைப் பூரணமாக நம்பிய அவர் , தேர்வுக்கு தயாரானார் .பாபாவிடம்  நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்து ,அதில் வெற்றியும் பெற்றார் .  

     

                                                             

     

    தெய்வத்தை நம்பியவர்கள் கைவிடப்பட்டது இல்லை . நடமாடும் தெய்வமான பாபாவை நம்பியவர்களை அவர்  கைவிட்டதும் இல்லை . தேர்வில் சோல்கர் வெற்றிபெற்றார். அவரது பணியும்  நிரந்தரமாக்கப்பட்டது. சோல்கர் தனது பிராத்தனையை நிறைவேற்ற முடிவு செய்தார் . ஆனால் அதற்கு பணம் தேவைப்பட்டது .  அதற்கு  தனது அன்றாட செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க எண்ணினார். எனவே, இனிமேல் அவர் தனது தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என முடிவெடுத்தார். அதனால் செலவு மட்டுப்பட்டு சீக்கிரமே அவரால் சீரடி பயணத்திற்கான பணத்தை சேகரிக்க முடிந்தது. தான் சேமித்த பணத்தின் மூலம் சீரடி வந்த அவர், பாபாவைப் பார்த்ததும் மெய்மறந்தபடி நின்றார் .  மக்களின் துயர் துடைக்க ,மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பரவசம் அவரைத் தொற்றிக் கொள்ள பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பாபா அவரையே கனிவோடு பார்த்தார் . ஆனால் எதுவும் பேசவில்லை. பின் சோல்கர் , பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் . இதை பார்த்துக் கொண்டிருந்த  பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை தன்னருகே அழைத்தார். “அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள் ”என்றார் . அங்கிருந்த  அடியவர்களுக்கு பாபா எதைப் பற்றி சொல்கிறார் என்று  புரியவில்லை.

     

    ஆனால், சோல்கருக்கு அதன் அர்த்தம் புரிந்தது.  தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். மனம் நெகிழ்ந்து  ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை தனது தாமரை மலர் போன்ற கரங்களால்  தூக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்து , “ இரவும் பகலும் எப்போதும் உன் இதயத்தில் தானே நான் இருக்கிறேன். நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேனே அப்பா! நீ என்னை நாடி வருவதற்காக இனிப்பை தியாகம் செய்தது எனக்குத் தெரியாதா என்ன? ”என்றார் .  

     

    தனது அடியவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அந்த தெய்வம் தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ? தன்னை மனத்தால் ஸ்மரிப்பவர்கள், எத்தனை தொலைவில் இருந்தாலும் தனது பார்வையும் , கருணையும் அவர்கள் மேல் எப்போதும் இருக்கும் என்பதை அந்த சீரடிவாசன் தனது பக்தர்களின் வாயிலாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் .

     

     

     

    தனது அடியவர்கள் மீது கருணை மழை பொழியும் சாயி நாதனின் சரிதம் தொடரும்…

    ஓம்  சாயி ராம் …

     

     

  • எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்

     

     

    எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்பாபா , தான் படைத்த அனைத்து ஜீவராசிகளிலும் தன்னை காண முடியும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறார் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் . அதேப்போல் தன அடியவர்களுக்கு செய்யும் தொண்டு தன்னை வந்தடையும் என்பதையும் பாபா பல தருணங்களில் நிரூபித்து இருக்கிறார் . அப்படியான ஒரு அற்புதத்தை இப்பதிவில் பார்ப்போம் .

    ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் நாந்தேட் கிராமத்தில் வசித்தது வந்த  பார்சி மில் காண்டிராக்டர் . இறைவன் அளவற்ற எல்லாச் செல்வங்களுடன்  அவரை ஆசீர்வதித்து இருந்தாலும் ,   ஒரு செல்வத்தைத் மட்டும் அவருக்கு அருளவில்லை . மக்கட் செல்வம் தானே  அனைத்திலும் சிறந்தது . வாடியாவிற்கும்  தன் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே  என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. அவர் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். தர்மசீலரான அவர் ஏழை எளியவர்களுக்கு  தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தியது. ஒரு  சமயம் அவரின் துன்பத்தைக் கண்ட அவரது  நெருங்கிய நண்பரான தாஸ்கணு,கவலைக்கான காரணத்தைக் கேட்டார் .

    உற்ற நண்பரான தாஸ் கணுவிடம் எதையும் மறைக்காமல் , வாடியா  தனக்கு ஒரு குழந்தை  செல்வம் இல்லாத குறையை வெளிப்படுத்தினார் . பாபாவின் தீவிர பக்தரான  தாஸ்கணு,தன் தெய்வம் பாபா நினைத்தால் எந்த அற்புதங்களையும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் ,  அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு கூறி தேற்றினார் . பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு  கிட்டும் என்று வாடியாவிற்கு  நம்பிக்கையூட்டினார்  தாஸ்கணு. அலைக்கடலில் சிக்கித் தத்தளித்தவனுக்கு  ஒரு பெரிய மரக்கலன் கிடைத்தது போன்று இருந்தது  வாடியாவிற்கு . ஷிர்டி செல்ல முடிவெடுத்த அவர் , சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்ட வாடியா . ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.

     பாபாவை சரணடைந்த அந்த கணமே , தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பிய பாபாவின் பார்வை. “எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு!” என்றார் உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. அப்போது , “அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!”என்றார் பாபா  சற்றே அதட்டலுடன். தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே?  என்று வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனால், பாபா எதுசொன்னாலும்  அதில் ஒரு காரணம் இருக்கும் ஆதலால் , அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என ஏற்கனவே அவருக்கு  தாஸ்கணு அறிவுறுத்தியிருந்தார் . ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணா காணிக்கையை  பாபாவின் பாதத்தில் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.

    நண்பர் தாஸ்கணுவிடம் சீரடியில்  நடந்த அனைத்தையும் ஒரு வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. “சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! ”என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதினான்கு அணா இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார் .

    வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும்  பக்திப் பெருக்கால் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    பாபாவின் பாதங்களை உண்மையில்  நம்பிக்கையுடன்  சரணடைந்தவர்களுக்கு குறையொன்றும் இல்லை .

    சாய் சரிதம் தொடரும் …

  • தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வைத்தியநாத சாயி

     

    பாபாவின் சமஸ்தானத்தில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் பல விதம் . பொன் பொருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . பாபாவின் அருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . முன் வினை காரணமாக தீராத வியாதிக்கு  தீர்வு தேடி  அவர் முன் நிற்பவர் ஒரு விதம் . இதில் தங்கள் வியாதிகளிடமும்  இருந்தும் , வலிகளிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டி அவர் முன் கண்ணீர் மல்க நிற்பவர்களே அதிகம் . எப்பேர்ப்பட்ட வைத்தியனாலும் கைவிடப்பட்ட  நோய்களும்  அந்த வைத்தியநாத சாய்  முன் தங்கள் கைவரிசையை  காட்ட முடியாது என்று  அவர் பக்தர்கள் நம்பினார்கள் .

    திக்கற்றவர்களுக்கு  சாய் தான்  தன்வந்திரி தெய்வம் . ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். தங்கள் மருத்துவர்கள் மேல் அவர்கள் வைத்து இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்த நம்பிக்கை  தான்  அதிகம். பூட்டி என்று பெயர் கொண்ட ஒரு அடியவருக்கு , ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. நீர் சத்து மிகுந்து வெளியேறியதால் , மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார் பூட்டி . எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்ட நிலையில் , கிழிந்த நாராகப் படுத்திருந்த அவரை எவ்விதமேனும் அழைத்து வருமாறு,ஓர் அடியவரை  பாபா அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.

    பாபாவை கண்ட நொடியில் ,பாபா! என்னைக்  காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா?என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்ட  ,வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் , அவரது அதட்டலால் பயந்து , அடுத்த கணமே பூட்டியை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின் திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். பாபாவின்  ஒரே அதட்டலுக்கு  அந்த நோய்க் கிருமிகள்  கட்டுப்பட்டதை எண்ணி ஆச்சரியப் பட்டதுடன் பாபாவின் கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது.

    கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்ட பாபாவின் இன்னொரு  பக்தரான கண்பத் , பாபாவே கதியென  சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் தான் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார். 

    கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் கேள்விகளுக்கும் , சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் பாபா என்பதால் , எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதுடன் , அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும் தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் .  உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று,பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.

    பின் சுதாரித்துக்கொண்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய்,நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள். கண்பத்தின்  கண்களும் ,இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன.

    இதில் நாம் வியப்பதற்கு எதுவும் இல்லை . பாபா நினைத்தால் , அவர் கருணை இருந்தால் முடியாத காரியம் என  இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை பாபாவின் பக்தர்கள் நன்கு அறிவார்கள் .

     

    ஸ்ரீ சாயி திருவடிகளே சரணம்

    சாய் சரிதம் தொடரும் …

  • “என் அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை?” – சீரடி சாயி

     

    பூர்வ ஜென்மப் பாவ புண்ணியங்களில் நம் எல்லோருக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது  .  நல்லது நடந்தால் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்றும் , விரும்பத்தகாதது நடத்தால் பாவத்தின் பலன் என்றும் நம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம் . சாதாரண லௌகீக வாழ்க்கையிலேயே  பாவ புண்ணிய பலன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்க முடியும் என்கிறபோது சுவர்க்க லோக  வாழ்க்கைக்கு சொல்லவா வேண்டும் .மண்ணில் பிறந்த எல்லோருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

     

     சத்குருவின் பெயர் நம் காதுகளில் விழவும் , அவரின் திரு உருவத்தை  நம் கண்கள் தரிசிக்கவும் , அவரின்  அமுதமொழிகளை கேட்கவும் நாம் கடுகளவாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  பாபாவின் பெருங்கருணை நம் மீது விழுந்தால் மட்டும்  இந்தப் பிறவியில் இதெல்லாம் நமக்கு சாத்தியம். அவரை நினைப்பதற்கே அவரின் கருணை வேண்டும் என்னும் போது அந்த சீரடி வாசன் வாழ்ந்த புண்ணிய தலமான சீரடி மண்ணை மிதிக்க  அவரின் அனுமதி வேண்டாமா ? அந்த மகானின் அருளும் , அனுமதியும் இன்றி அங்கு யாரால் தான் செல்லமுடியும். அது மட்டும் இல்லாமல் அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பமோ  ,அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும் என்பதும் இன்றளவும் சத்தியம். 

     

     

    காகா மகாஜனி என்ற  பாபாவின் தீவிர அன்பர் , கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி சீரடியில்  கோலாகலமாக கொண்டாட்டப் படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க  மும்பையில் இருந்து சீரடி செல்ல விரும்பினார் .  ஒருவாரம் அங்கே  தங்கி இருந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிக்க  முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு , அலுவலகத்தில், இருந்தஇன்னொருவரிடம் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். அவர்  விருப்பப்படி சீரடி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? அவராக சீரடியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்யலாம்?

     

    பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்! பாபாவின் இந்த கேள்வியால் சற்று ஏமாற்றம் அடைந்த காகா , மறுத்து எதுவும் பேசாமல் பணிவோடு, தாம் ஒருவாரம் சீரடியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். காகாவின்  இந்த பணிவான பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. திரிகாலமும் உணர்ந்த பாபா  , “நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ” என்று உத்தரவிட்டார் . ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. மனிதனல்லவா …..அந்த தெய்வத்தின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை . ஆனாலும்  மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். பாபாவின் கட்டளைப்படி அன்றே அலுவலகத்திற்கும் சென்றார்.

     

    அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். காகாவைப் பார்த்ததும் , அவருக்காகவே காத்திருந்தவர் போல  ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். “என் கடிதம் கிடைத்ததா? ”என்று கேட்டார். “எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! ”என்றார் காகா. “உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! ”என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டதால் ,  மானேஜர் செய்து வந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. அவசர காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வும் தரப்பட்டது. இப்போது தான் அந்த நடமாடும் தெய்வத்தின்  எண்ணம் புரிந்தது காகா மகாஜனிக்கு . பாபாவின் அருளால் தான்  இந்த பதவி உயர்வு கிட்டியது  என நெகிழ்ந்தார் .

     

    பதவி உயர்வு கிடைத்த பின், காகா சீரடி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் தனது ஆனந்த கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது தெய்வீக கரத்தால் கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்காமல் கேட்தது போல் இருந்தது  பாபாவின் அருள்பொங்கும் விழிகள். நாளெல்லாம் பொழுதெல்லாம் நம்மை வழி நடத்தும் பாபாவின் கருணையை போற்றுவோம்.

     

    ஓம் சாய் ராம் . சாய் சரிதம் தொடரும்…..