Category: தொடர்கள்

தொடர்கள்

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 16

    கம்போடியக் கல்முகங்களை மிக நெருக்கத்தில் பார்ப்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். என்னுடைய வாழ்நாளில் இதுவரை சோழர்காலக் கோயில்களின் துவாரபாலகர்களைத்தான் பிரமாண்ட உருவில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அதுவும் அதிகபட்சம் இடுப்புவரை உள்ள பகுதிதான் நேர்பார்வைக்குத் தெரியும். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆலய துவாரபாலகர்கள் ஆஜானுபாகுவான ஆட்கள். அண்ணாந்து பார்க்கும்போது சிற்பத்தின் முழுமையான அழகைத் தரிசிப்பது சிரமம். ஆனால் பாயோன் ஆலயக் கல்முகத்தை மிக அருகில் பார்த்து அதைத் தொட்டுப் பார்க்க முடிகிறது. 

    காலை முதல் அலைந்ததில் களைத்துப் போயிருந்தாலும், பாயோன் ஆலயத்தின் அழகு எங்களைக் கட்டிப் போட்டிருந்ததில் களைப்புத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கோர் வாட் போலில்லாமல் இங்கு பயணிகளின் கூட்டம் சற்றுக் குறைவுதான். அதனால் எங்கள் சத்தம்தான் பெருஞ்சத்தமாக இருந்தது.

    மூன்றாம் தளத்தில் இருந்து பார்க்கும்போது சுற்றிலும் காடுதான் தெரிந்தது. வேறு நாகரிகக் கட்டுமானம் எதுவும் தெரியவில்லை. கோயிலைச் சுற்றிக் கடைகளும் ஏதுமில்லை. நம்ம ஊரில் புகழ்பெற்ற ஆலயங்களைச் சுற்றி வளைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கோயிலை ஆக்ரமிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

    மதுரை புதுமண்டபத்தை நினைத்துப் பாருங்கள். அங்குள்ள சிற்பங்கள் படும்பாடு வரலாற்று ஆர்வலர்களைப் பொருமச் செய்யும். அதெப்படி ஒரு மாநிலத்திற்கே வரலாற்று உணர்வு மழுங்கிப் போயிருக்கும் ? அதெப்படி நம்முடைய மக்களுக்கு மட்டும் தமது மூதாதையர் செல்வங்களின் மேல் இப்படி ஓர் அலட்சியம் ?

    ஒருவேளை தமிழகத்தில் எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் அதைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகளின் எண்ணிக்கை அதிகமோ ? எதுவுமே அளவுக்கு அதிகமாகக் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். நமக்கும் அப்படித்தானோ ? இல்லாவிட்டால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நாயக்கர் கால ஓவியங்கள் மீது வெள்ளையடிக்கப்படுவதைப் பார்த்து சும்மா இருந்திருப்போமா ?

    ஆயிரமாண்டுப் பழமைமிக்க கற்கோபுரத்தின் மீது டிஸ்டெம்பர் சாயம் அடிப்பதைப் பார்த்தும் பதறாமல் அந்த இடத்தைக் கடக்க நம்மவர்களால் எப்படி முடிகிறது ? சிற்பங்களைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று மணல்வீச்சு முறையில் அவற்றை மொண்ணையாக்கி வருகிறோமே.. இதற்கெல்லாம் என்று விடிவுகாலம் ? இல்லை அப்படி ஒன்று பிறக்குமுன்னரே எல்லாச் செல்வங்களையும் பின்னப்படுத்தி முடித்திருப்போமா ? ஈஸ்வரோ ரக்‌ஷத் !…

    இவ்வளவு அவநம்பிக்கைக்கு இடையிலும் சில விடிவெள்ளிகளைப் பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக்கில் இளையர்கள் சிலர் ஆலயச் சிலைகளைத் தேடிப் பிடித்துப் பெரியவர்கள் துணையோடு அதன் வரலாற்றை அறிந்து படத்தோடு பதிவிடுவதைப் பார்க்கும்போது மனத்துக்கு ஆறுதலாக இருக்கிறது. சசி தரன் என்ற இளையர் ஒருவர் ஒரு கல்வெட்டு ஆதாரம் தேடிக் கர்நாடகம் வரை சென்று வந்த அனுபவத்தை அண்மையில் படித்தேன். இவரைப் போன்ற இளையர்களைப் பார்க்கும்போது இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.

    கம்போடிய வரலாறு பற்றி அங்குள்ள இளையர்கள் பெருமிதம் கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. உள்ளூர் மனிதர்களோடு நெருங்கிப் பழகினால்தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

    ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரம் என்பதால் அதைப் பேணுவதில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது. அங்கோர் வாட் ஆலயம் ஒன்று மட்டுமே கம்போடியப் பொருளியலுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருமானத்தை ஈட்டித் தருகிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அங்கோர் வாட்டின் பங்கு 16 விழுக்காடு. ஆயத்த ஆடை விற்பனைத் துறைக்கு அடுத்தபடியாக, முக்கியமான பொருளியல் உந்துசக்தி சுற்றுலாத் துறைதான். 2006ஆம் ஆண்டில், சுற்றுலாத் துறை தந்த வருமானம், 1.59 பில்லியன் டாலர் என்கிறது விக்கிப்பீடியா. கம்போடியாவும் அங்கோர்வாட்டும் சொல்லும் பொருளும் போல் பிரிக்க முடியாதவை. ஆகவே, அதைப் பொல்லம்பொத்திப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கம்போடியா என்றுகூடச் சொல்லலாம்.

    இப்போது அங்கோர் வாட்டின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது அந்நாட்டு அரசு. கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு உயர்வு. அது உள்ளூர்க்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நுழைவுக் கட்டண உயர்வுக்கு அஞ்சிப் பயணிகளின் வரத்து குறைந்துபோனால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்கு. சுற்றுலா வழிகாட்டிகளும் இந்த உயர்வை ஆதரிக்கவில்லை. அரசாங்கம் வானத்தில் இருந்துகொண்டு முடிவு எடுக்கிறது. எங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்கின்றனர் வழிகாட்டிகள்.

    அரசாங்கமோ, இது நியாயமான உயர்வுதான். யானை வாங்குவோருக்கு அங்குசம் வாங்கவா பணமில்லாமல் போய்விடும் என்கிறது அது. ஒரு நாள் அனுமதிக் கட்டணம் 2014-இல் நாங்கள் போகும்போது 20 அமெரிக்க டாலர். இப்போது அது 37 டாலர். ஒரு குடும்பமாகப் போகும்போது நிச்சயம் கையைக் கடிக்கும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நுழைவுக் கட்டணம் மட்டும் இந்திய ரூபாயில் சுமார் 9000 வரும். பெருந்தொகைதான். ஒப்புநோக்க, இந்தியாவில் தாஜ் மகாலைப் பார்க்கவரும் வெளிநாட்டினரிடம் 1000 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கு 40 ரூபாய்தான்.

    சில சுற்றுலாத் தலங்களில் குடும்பமாகப் போகும்போது அதற்கென ஒரு தொகுப்புச் சீட்டு இருக்கும். சற்று மலிவாக இருக்கும். அங்கோர் வாட்டில் அப்படிக் கிடையாது. தனித்தனிக் கட்டணம்தான். இருந்தாலும் அங்கோர் வாட்டைப் பார்க்கக் கொடுக்கலாம்தான் என்னைப் பொறுத்தவரை. இத்தனை சீராக அதைப் பராமரிக்கிறார்களே !.. அதற்கே தகும் அந்தக் கட்டணம்.

    சரி பாயோனுக்கு வருவோம். கல்முகங்களுக்கு மேல் சில இடங்களில் செடி முளைத்திருக்கிறது. அப்பனே யாராவது அதைப் பிடுங்கிப் போடுங்கள் என்று சொல்லத் தோன்றியது. கம்போடியாவின் பல ஆலயங்களை இந்தச் செடிகள் வளர்ந்து ஊடுருவிப் பிளந்து வீழ்த்தியுள்ளன. பாயோனுக்கும் அந்த கதி வரக்கூடாது. மூன்றாம் தளம் மிகவும் நெருக்கமாக இருந்தது. சில ஆய்வாளர்கள் இது முதலில் திட்டமிடாத கட்டுமானமாக இருக்கலாம் என்கிறார்கள். 

    இத்தனை பெரிய ஆலயத்தைத் திட்டமிட்ட தலைமைச் சிற்பி இந்த இடத்தை இவ்வளவு குறுகலாக வடிவமைக்கக் காரணங்கள் குறைவு என்பது அவர்களின் வாதம். பிற்காலத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது மூன்றாம் தளம் கட்டும்போது திடீரெனக் கட்டுமானத் திட்டம் மாற்றப்பட்டிருக்கலாம். மத்தியிலுள்ள வட்டக் கட்டுமானம் ஓர் ஒழுங்கற்றுக் காணப்படுகிறது. அதனைச் சுற்றிலும் நிலை வாசல்களோடு பலகணிகள். சிதைந்த முகங்கள். கற்களின் உட்கூடு பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. எந்தச் சாந்தும் கற்களை இணைக்கவில்லை. கற்கள் ஒன்றையொன்று சார்ந்து அடுக்கப்பட்டுள்ளன.

    மேலே மேலே கற்களை அடுக்கும்போது அதிகரிக்கும் எடை காரணமாகக் கீழே உள்ள கட்டுமானம் மேலும் உறுதிபெறுகிறது. பெரும்பாலான கற்களின் உட்புறத்தில் அவற்றைத் தூக்குவதற்காகப் போடப்பட்ட துளைகள் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. கிழக்கு வாயிலில் இருந்து நெடுகப் பார்த்தால் அடுத்த முனைவரை தடையின்றித் தெரிகிறது. கருவறையில், ஒரு புத்தர் சிலையை இருத்தியுள்ளனர். அது தொடக்க காலத்தில் இருந்து உள்ள சிலையா அல்லது தற்காலிக ஸ்தாபிதமா தெரியவில்லை. அதற்கும் அசிங்கமான ஒரு ஜிகினாத் துணி.

    சுற்றிலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கீழே மலர்ப் படையல். உண்டியலில் பலநாட்டு நாணயங்கள் கிடந்தன. கருவறையின் உச்சி திறந்து கிடக்கிறது. பெரிய பொந்துபோல் இருக்கும் அதன் வழியாகச் சூரிய ஒளி வருகிறது. திறந்து கிடப்பதால், மேலிருந்து பெய்த மழைநீர் ஒழுகிப் பக்கவாட்டுச் சுவர்களில் வழிந்த தடம் தெரிகிறது. இது திட்டமிட்டுக் கட்டப்பட்ட துவாரமா அல்லது காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்து ஏற்பட்ட துவாரமா என்று அனுமானிக்க முடியவில்லை.

    அதிகமாக மழை பெய்யும் இடம் என்பதால், எல்லாமே நீரில் ஊறிப் போய் உள்ளன. அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது. அதனால்தான் இப்படி ஒரு பசுமை இந்த ஊரில். பாயோன் கல்முகங்களோடு நாங்கள் ஐவரும் விதவிதமாகப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கோயிலுக்கு உள்ளே வரும்போது எல்லாரும் சேர்ந்து வந்தோம். ஆனால், கருவறைக்கு அருகே வந்தபோது அவரவர்க்குப் பிடித்த அம்சங்களைப் பார்க்க நேரம் எடுத்துக் கொண்டதால் பிரிந்துவிட்டோம்.

    ஒரு மணி நேரம்தான் ஓட்டுநர் எங்களுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்குள் பாயோனைப் பார்ப்பது இயலாத காரியம். இருந்தாலும் வேறு வழியில்லை. குடும்பத்தோடு மறுபடி வருவோம் என்று மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டு கோயிலை விட்டு வெளியேறத் தொடங்கினோம். மேற்குப்புற வாயில் வழியாக நானும் பரணியும் வெளியேறினோம். வழியில் ஒரு புத்தர் சிலை நடுநாயகமாக வைக்கப்பட்டு அதற்கும் எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டிருந்தன.

    சுற்றிலும் கற்கள். பாயோன் ஆலயம் முழுமையாக இருந்தபோது இந்தக் கற்கள் எங்கே இருந்தனவோ.. இன்று மொத்தமாக எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் மழை பெரிதாகப் பிடித்துக் கொண்டது. நல்லவேளை இதுவரை எங்களை விட்டுவைத்ததே பெரிது. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கேமராவைக் கையால் மூடிக் காப்பாற்றியவாறு ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டோம்.

    கனத்த மழைக்கு நடுவே கனவு போல் கரைந்து கொண்டிருந்தது பாயோன். விட்டு வரவே மனமில்லை. இதைப் படித்துவிட்டு கம்போடியா போகத் திட்டமிடுவோர் இந்தக் கோயிலுக்கும் போதுமான நேரம் ஒதுக்குங்கள். இதைப் பற்றி இன்னும் விரிவாகப் படித்துவிட்டுச் செல்லுங்கள். இணையத்தில் ஏராளமான தகவல்களும் ஆவணப் படங்களும் காணக் கிடைக்கின்றன.

    பிள்ளைகளுக்கு இதை ஓர் ஒப்படைப்பாகக் கொடுத்துக் குறிப்பு எடுக்கச் சொல்லிப் போய்வந்தால் அவர்களும் இந்த இடங்களை ஆர்வமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பமாகப் போனால், எல்லாருக்கும் இந்த இடங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆர்வம் உள்ளவரை மற்றவர்கள் பார்க்க விடமாட்டார்கள். போலாம் போலாம் என்று பிள்ளைகள் நச்சரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    பாயோனிலிருந்து புறப்பட்டு நகர்ப் பகுதிக்குள் சென்று இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். நல்ல அகலமான சாலைகள். பெரிதாகப் போக்குவரத்து இல்லை. கடைகள் எல்லாமே பயணிகளை இலக்காகக் கொண்டு இயங்குபவைபோல் தெரிந்தன. கலைப் பொருட்கள் விற்கும் சில கடைகளை எட்டிப் பார்த்தோம். அங்கேயே உட்கார்ந்து சில பொருட்களைச் செய்து கொண்டிருந்தார்கள் சில கலைஞர்கள்.

    எல்லாம் ஆனை விலை. குதிரை விலை. எங்களால் கனமான பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாது. கைச் சுமை மட்டும்தான் விமானத்தில் பதிவு செய்திருந்தோம். அது ஏழு கிலோதான். ஆகவே, ஒன்றும் வாங்கவில்லை. சியாம் ரீப்பிலிருந்து தலைநகர் புனோம் பென் செல்ல வேண்டும். குறைந்தது ஏழு, எட்டு மணி நேரம் பிடிக்கும். மறுபடியும் அந்தக் கண்டான் முண்டான் சாலையில் செல்வதை நினைத்தாலே உடம்பு வலித்தது. என்ன செய்ய முடியும் ?

    புறப்பட்டோம். வழியில் இரவு ஒன்பது, பத்து மணிவாக்கில் ஓர் ஊரில் சாப்பிட வண்டியை நிறுத்தினோம். இந்தக் கடைதான் நாங்கள் முதலில் வந்த அன்று மூடப்பட்டிருந்தது. அன்று 11 மணியாகிவிட்டதால் கடை மூடிவிட்டார்கள். இன்று நேரத்தோடு வந்ததால், தப்பித்தோம். உணவு பரவாயில்லை ரகம்தான். பிரட்டிய சோறும் முட்டை ஆம்லெட்டும் சாப்பிட்டுப் பசியாறினோம். வரும்போது இருந்த உற்சாகம், தெம்பு போகும்போது இல்லை அனைவருக்கும்.

    வண்டியில் ஏறியதுமே கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. ஓட்டுநர் ராவுக்குத் துணையாக நவீன் மட்டும் முன்னிருக்கையில் அமர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார். நாங்கள் நால்வரும் பெரும்பாலான நேரம் அம்பேலாகி விட்டோம். பின்னிரவு மூன்று மணிவாக்கில் புனோம் பென் சென்று சேர்ந்தோம். ஒரு சாதாரணமான ஹோட்டலில் இரண்டு அறைகள் பதிவு செய்திருந்தார் ராஜூ. அறை சுமாராக இருந்தாலும் அன்பான உபசரிப்பு..

    காலையில் எழுந்து கம்போடிய அரண்மனையும் தேசிய அரும்பொருளகமும் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பி அருகிலுள்ள சந்தையில் சில நினைவுப் பொருட்கள் வாங்குவதாகத் திட்டம். மாலை நான்கு மணிக்கு விமானத்தைப் பிடிக்கவேண்டும். காலையில் எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அவ்வளவு கூடுதலான இடங்களைப் பார்க்கலாம். ஹோட்டலில் காலை உணவு கிடையாது. வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும். அதில் எங்கள் பொன்னான நேரம் வீணாகப் போவது தெரியாமல் எல்லாரும் படுத்ததும் உறங்கிப் போனோம்..

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     
     
  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 15

    அடர்ந்த காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். அரை மயக்கத்தில் இருந்தேன் நான். செல்லத் தூக்கம் கலைந்தபோது, வாகனத்தின் இருபுறமும் அகழி தென்பட்டது. ஒரு பக்கம் அசுரர்களும் மறுபக்கம் தேவர்களும் வாசுகிப் பாம்பைப் பிடித்துப் பாற்கடலைக் கடையும் சிற்பம் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. காலம் இந்தச் சிற்பங்களை சின்னாபின்னப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனாலும் என்ன, இன்னும் அதன் அழகு மிச்சமிருக்கிறது.

    அடர்ந்த காட்டுக்குள் பசுமையும் நீர்மையும் சூழ்ந்திருக்க, இலேசான தூறலுக்கு இடையே அந்தச் சிற்பங்களைக் கண்ணாடி வழியே பார்ப்பது கனவு போலிருந்தது. இறங்கிப் பார்க்க நேரப் பற்றாக்குறை இடங்கொடுக்கவில்லை. அது என்னவென்று தெரியாமலேயே அதை முன்பு படங்களில் பார்த்திருக்கிறேன். அருகில் வரும்போது அதை நிறுத்தி நிதானமாய்ப் பார்க்க வாய்ப்பு இல்லாமற் போனது வருத்தம்தான்.

    பிதுங்கிய விழிகளும் கீழ்நோக்கி வளைந்த வாய்களுமாக அசுரர்கள் வரிசையாக நின்றிருந்தனர். சலனமற்ற முகம் அமைதியில் ஆழ்ந்திருக்க, ஏகாக்கிரஹ சிந்தையோடு தென்பட்டனர் தேவர்கள். நாம் சிறுவயதில் படித்த கேலிச் சித்திரக் கதைகளில் வரும் சித்திரக் குள்ளர்களைப் போல அசுரர்கள் என் கண்களுக்குத் தென்பட்டனர்.  

    பாம்பு வடம் இடையிடையே உடைந்து தொடர்பு விட்டுப்போயிருந்தது. சாலையிலிருந்து பார்க்கும்போது பின்னணியில் வெள்ளக்காடும் காடும் மட்டும்தான் தெரிகிறது. எவ்வித மின்சாரக் கம்பங்களோ தொலைத் தொடர்புக் கோபுரங்களோ தெரியவில்லை. சற்றுத் தொலைவில் மழை பெய்து கொண்டிருந்தது புகைமூட்டம் போலிருந்தது. ஆகவே, அதன் பழமையை நன்கு அனுபவிக்க முடிந்தது எங்களால். அசுரர்களின் முகபாவம் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பக்கம் திரும்புவோம் என்பது போலிருந்தது.

    பாலம் போன்ற அந்த இடத்துக்கு நாக பாலம் என்றே பெயராம். அதைக் கடந்து வந்து வாகனத்தை நிறுத்தினார் ஓட்டுநர். இறங்கியதும் எங்கள் எதிரே தோன்றியது பாயோன் ஆலயம். என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது என்று சொன்னால், இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து வருபவர்கள் நம்புவீர்கள் என நம்புகிறேன். இதுவரை நாம் பார்த்தறியாத ஓர் உலகம் கண்முன் எழுந்து நின்றால் எப்படியிருக்கும் ?

    இந்தியக் கலைமனம் இதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஒரு வடிவத்தில் இருந்தது பாயோன் ஆலயம். நாங்கள் சென்ற நேரம் மழை பெய்திருந்தது. கோயிலுக்கு முன்னால் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இன்னுமொரு பாயோன் கோயில் கண்ணாடிப் பிரதிபலிப்பாய்த் தெரிந்தது. கற்பாளங்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, கல்லில் படிந்த பாசி பூத்து, வெளுத்து, அப்படியே படை படையாய்ப் படர்ந்திருந்தது. புதிதாய் முளைத்துவரும் பாசி, மெல்லிய பச்சைப் போர்வை போல் சில இடங்களைப் போர்த்தியிருந்தது.

    இந்தக் கோயிலுக்கு, அங்கோர் வாட்டைப் போல் பெரிய மதில் சுவர் ஏதுமில்லை. ஏனென்றால், இது ஒரு மாபெரும் நகரின் நடுவில் உள்ள ஆலயம். நகருக்கான சுற்றுச்சுவரும் அகழியும் இருந்ததால், இதற்கெனத் தனியே சுற்றுச் சுவரும் அகழியும் இல்லை என்கிறது குறிப்பு. நாம் முதலில் கடந்து வந்த நாக பாலம், நகருக்கான அகழியைக் கடக்க உதவிய பாலமாக இருந்திருக்கலாம். அங்கோர் வாட் ஆலயத்தை அடர்நீல வெல்வெட் பெட்டிக்குள் வைத்த வைரம் என்று சொல்லலாம். முதலில் அது, நீண்ட பீடிகையோடு தன்னுடைய அழகை ஆராதிக்கத் தேவையான மனநிலைக்கு நம்மைக் கொண்டுவந்த பிறகுதான் தன்னுடைய முழு அழகை வெளிக்காட்டுகிறது.

    ஆனால் பாயோன் அப்படியல்ல. அது சூரிய வெளிச்சத்தில் திறந்து வைக்கப்பட்ட வைரம். பட்டை தீட்டப்பட்ட கரிய (பசும் ?) வைரம்.. ஆலயம், எந்த வடிவத்திலும் சேர்த்தியில்லாத ஒரு வடிவத்தில் தெரிகிறது தொலைவிலிருந்து பார்க்கும்போது. சதுரமா, செவ்வகமா, வட்டமா, கோளமா என்றால் எல்லாமும்தான் என்று சொல்லலாம். இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். கோயிலைச் சுற்றிலும் கற்கள், கற்கள், கற்கள் எண்ணற்ற கற்கள். 

    இப்போதுள்ள கோயிலைச் சுற்றி வேறு பெரிய கட்டுமானங்கள் இருந்தனவா.. இல்லை இதே கோயிலின் சில பகுதிகள் நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சிதைந்து விழுந்தனவா தெரியவில்லை. ஒவ்வொரு திசைக்கும் மூன்று வாயில்கள் இருந்தன. நடுவில் இருந்தது முக்கிய நுழைவாயில். எஞ்சியவை சிறிய பக்க வாயில்கள். ஒவ்வொரு வாயிலுக்கும் மேல் கோபுரம் போன்ற அமைப்பு. அதன் நாலுபக்கமும் நான்கு முகங்கள். அவலோகிதேஸ்வரர் முகங்கள்.

    பௌத்த நம்பிக்கையின்படி, கருணைக்கான போதிச்சத்துவர் இந்த அவலோகிதேஸ்வரர் என்கிறது விக்கிப்பீடியா. அவலோகிதேஸ்வரர் என்ற சொல்லுக்கு, ஜெயமோகன் அவ்வண்ணமே வந்தவர் என்று பொருள் தருகிறார். சொல்லை வெல்ல உதவுபவர் அவலோகிதேஸ்வரர் என்பது பௌத்த நம்பிக்கை என்கிறார் ஜெமோ. சமஸ்கிருதத்தில், கீழ்நோக்கிப் பார்க்கும் இறைவன் என்று பொருளாம். அதற்கு ஏற்றாற்போல் மேலிருந்து நாலாபக்கமும் கீழே பார்க்கும்படியாகத்தான் முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கருணையின் வடிவம்தான் இந்த அவலோகிதேஸ்வரர் என்பதை ஏற்கும்படியாகத்தான் சிலைகளின் முகபாவமும் அமைந்துள்ளது. அரைக் கண் மூடிய தியான நிலை. இதழ்க் கடையோரம் விரியும் இலேசான புன்னகை.. கம்போடியர்களுக்கு உரித்தான தடித்த உதடுகள். அகண்ட தட்டையான நாசி.. வடிந்த காதுகள். மூக்கில் வளையம் மாட்டுவதற்கான துளைகள் தெரிகின்றன. சில முகங்களில் இரண்டு துளைகள் உள்ளன. சிலவற்றில் ஒன்றுதான் தெளிவாகத் தெரிகிறது. தலையில் கிரீடம் தெரிகிறது. அடுக்கடுக்காக நான்கு கிரீடங்களும் இணையும் இடம் தாமரை மலரின் மடல்களோடு சேர்ந்து கொள்கிறது. முகங்களுக்கு மேல் உச்சியில் பெரிய தாமரைப் பூவின் மடல்கள் விரிந்த தோற்றம்.

    இந்த முகங்களுக்கு, “தென்கிழக்காசியாவின் மோனலிசா” என்ற பட்டப் பெயரும் உண்டு. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்,அய்யம்பேட்டைக்கு முன்னால், பசுபதிகோயில் என்று ஓர் ஊர் வரும். அதற்குச் சற்று முன்னால், இடப்பக்கம் திரும்பி வயல்களின் ஊடாகச் சென்றால் ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் திருப்புள்ளமங்கை என்னும் வயல்சூழ் கிராமம் வரும். அங்குள்ள முற்காலச் சோழர் கோயிலின் கருவறைக்குப் பின்னே இலிங்கோத்பவருக்குப் பக்கவாட்டில் பிரம்மனின் சிற்பம் ஒன்று இருக்கும். அதுவும் இப்படித்தான் மிக இலேசாக நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்.

    பிரம்மனின் நாசியும் கொழுமிய கன்னங்களும், தலை அலங்காரமும் நாள் பூராவும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்லும். “இவன் பிரம்மனா மன்மதனா? இப்படி மயக்குகிறானே” எனத் தோன்றும். சோழர் காலச் சிற்பங்களில் ஆகச் சிறந்த பத்தில் ஒன்றாக நான் அதைப் பட்டியலிடுவேன். சரி.. பசுபதிகோயிலில் இருந்து பாயோனுக்கு வருவோம்.

    12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. மஹாயான பௌத்தத்தைக் கடைப்பிடித்த மன்னன் ஏழாம் ஜெயவர்மன் கட்டிய கோயில் இது. தனது புதிய தலைநகர் அங்கோர் தாமில், அந்த மன்னன் நிறுவிய அதிகாரபூர்வ ஆலயம் பாயோன். அவலோகிதேஸ்வரரின் முகங்கள், உண்மையில் ஏழாம் ஜெயவர்மனின் முகம்தான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசனை ஆண்டவனாகக் கருதிய காலம் அது. ஏழாம் ஜெயவர்மன் சிலையில் உள்ள முகமும், பாயோன் ஆலய முகமும் பெரிதும் ஒத்துப் போவதை அதற்கான ஆதாரமாகக் காட்டுகின்றனர் ஒருசாரார்.

    கம்போடியத் தலைநகர் புனோம் பென் தேசிய அரும்பொருளகத்திலுள்ள ஒரு சிலை, ஏழாம் ஜெயவர்மனின் சிலை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதன் முகச் சாயலும், பாயோன் கல்முகங்களின் சாயலும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

    கடவுளின் அம்சமாகத் தன்னை முன்னிறுத்தினால்தான் குடிகளைத் தன்பிடியில் வைத்திருக்க முடியும் என்று மன்னர்கள் நம்பியிருக்கலாம். தாய்லந்தில், இன்னமும் மன்னரை இராமரின் அவதாரமாகவே கருதுகின்றனர் மக்கள். அண்மையில் மறைந்த மன்னர் பூமிபோன் அதுல்யதேயை ராமா ராமா என்றுதான் அழைக்கின்றனர் மக்கள்.

    கெமர் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான ஆலயங்களில் இருந்து பாயோனை வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கிய அம்சம் ஜீவகளை ததும்பும் இந்தக் கல்முகங்கள். பாயோன் ஆலயத்தில் இப்போது எஞ்சியுள்ள சுமார் 50 கோபுரங்களிலும் சேர்த்து இருநூற்றுக்கும் மேற்பட்ட முகங்கள் புன்னகையில் உறைந்துள்ளன. எல்லாத் திக்குகளையும் அந்த முகங்கள் பார்ப்பது போல் மன்னன் ஜெயவர்மனின் அரசு எல்லாத் திசைகளையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்து நிர்வகித்தது என்பதன் அடையாளமாகவும் இந்த முகங்கள் கருதப்படுகின்றன.

    உண்மையோ பொய்யோ !.. இந்தத் தகவலும் இந்த முகங்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், கெமர் பேரரசின் பொற்காலங்களில் ஒன்றின்போது கட்டப்பட்ட ஆலயம் இது. கெமர் பேரரசின் வரலாற்றில் அதிக வலிமை மிக்க மன்னர்களில் ஒருவர், ஏழாம் ஜெயவர்மன். அவரது ஆட்சிக் காலம் கி.பி. 1181 – 1218.

    அங்கோர் வாட், பாயோன் உள்ளிட்ட இவ்வளவு பெரிய, கலைநயமிக்க ஆலயங்களைக் கட்ட வேண்டுமானால், பெரும் பொருள் வசதி வேண்டும். போர் அச்சுறுத்தல் இல்லாத அமைதி நிலவ வேண்டும் உள்நாட்டில். எதிரிகளின் படையெடுப்பு அச்சுறுத்தல் உள்ள நாட்டில் இத்தனை பிரமாண்டமான பேராலயங்கள் எழுவது சாத்தியமல்ல.

    பாயோன் ஆலயம் மஹாயான பௌத்த ஆலயமாகக் கட்டப்பட்டாலும், ஏழாம் ஜெயவர்மனின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அங்கு இந்து சமய அம்சங்களையும், தேரவாத பௌத்த அம்சங்களையும் இணைத்தது. அதனால்தான் இது ஒரு கலவையான தோற்றத்தில் இருப்பதாக நினைக்கிறேன். 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், எட்டாம் ஜெயவர்மன் இந்து சமயத்துக்கு மாற, அதற்கேற்ப பாயோன் மாற்றமடைந்துள்ளது. அடுத்த சில நூற்றாண்டுகளில் தேரவாத பௌத்தம் செல்வாக்குப்பெற, அதற்கேற்பவும் ஆலயம் மாற்றப்பட்டது. நாளடைவில், காட்டுக்குள் ஆலயம் கைவிடப்படுகிறது. எப்போது, யாரால் ஆலயம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றிச் சரியான தகவல் இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்த ஆலயத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது.

    பாயோன் ஆலயம், அங்கோர் வாட்டைப் போல இருந்தாலும், அங்கோர் வாட்டைப் போல இல்லை. முற்றிலும் மாறுபட்ட கலைநயம் தெரிகிறது இந்தக் கோயிலில். அங்கோர் வாட்டில் கட்டடக் கட்டுமானத்தில் ஒரு லயம் இருந்தது. ஆனால், இதில் அப்படி இல்லை. ஓர் ஒழுங்கற்றதன்மை உள்ளது இதில். அங்கோர் வாட், தோட்டத்தில் நட்டு வளர்த்து நறுக்கி விட்ட செடியைப் போன்ற ஓர் ஒழுங்கில் இருக்கிறது என்றால், பாயோன் கட்டற்று வளர்ந்து பெருகிக் காட்டை நிறைக்கும் மரம் போல ஒரு கவர்ச்சியோடு ஒளிர்கிறது. பிரமாண்டத்தை நான் சொல்லவில்லை. ஆலயத்தின் கட்டட அமைதியைச் சொல்கிறேன்.

    அங்கோர் வாட் உருவாக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் கழித்து உருவான கோயில் இது. இந்தக் கோயில் எங்களுக்கு பிரமாண்டமான ஒன்றாகத் தென்படவில்லை. சிக்கலான கட்டட அமைப்பைக் காட்டி எங்களை மீண்டும் மீண்டும் வியக்க வைத்தது இது. இதன் கட்டுமான முறையை சிந்திக்க சிந்திக்க, எனக்கு வெறுமைதான் மிஞ்சியது.

    நிர்மலமான வானில், தெளிவாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்க்க நேர்கையில், வானியல் பற்றி நான் யோசிப்பதுண்டு. இப்போது நாம் பார்க்கும் நட்சத்திரப் பிரகாசமே ஏழெட்டு ஒளி ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து புறப்பட்ட வெளிச்சமாம். காற்றில் ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீட்டர். ஓர் ஒளி ஆண்டு என்பது ஒன்பது டிரில்லியன் கிலோமீட்டர். அதை எட்டால் பெருக்கினால் எத்தனை பூச்சியம் வருமென நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நான் கணக்கில் புலியல்ல, பூனை…  பூமி, சந்திரன், சூரிய மண்டலம், நட்சத்திரங்கள், கிரஹங்கள், துணைக் கிரஹங்கள், நிலாக்கள், பால்வெளி, பிரபஞ்சம், கருந்துளை என்று கன்னாபின்னாவென யோசித்து அதற்கும் அப்பால்.. அதற்கும் அப்பால்.. என்று யோசித்து யோசித்து முடியாமல் களைத்துப் போய்க் கண்ணயர்ந்து விடுவேன்.

    அதுபோல் இந்தக் கோயிலின் நடுப்பகுதியில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் கட்டுமானம் என்னைத் தலைசுற்றிப் போக வைத்தது. எத்தனை கூரைகள் ? எத்தனை முகங்கள் ? எத்தனை பலகணிகள் ? எத்தனை நிலைவாசல்கள் ? எண்ண எண்ண வியப்பின் எல்லை விரிந்து கொண்டே போகிறது.

    அங்கோர் வாட்டாவது பெரிய அகழி, மதில் சுவர் என்று ஏக ஜபர்தஸ்துகளோடு நிற்கிறது. ஆனால் பாயோன் அடர்ந்த காட்டுக்குள் அம்மணமாய் நிற்கிறது. கோயிலின் எந்தப் பக்கம் போனாலும் மரக் கூட்டத்துக்குள் கொண்டுபோய் விடுகிறது பாதை. மரகதப் பொதிக்குள் கிடக்கிறது இந்த வைரக்கல்.

    மலைத்துப் போய் நின்றால் கதைக்கு ஆகுமா ? உள்ளே போவோம். நாங்கள் போய் இறங்கியது தெற்கத்தி வாசல். அங்கிருந்து வலப்பக்கமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினோம். அங்கோர் வாட்டைப் போல் பாயோனும் மூன்று நிலைக் கட்டுமானம். முதலிரண்டும் சதுர வடிவங்கள். கருவறை போன்ற நடுப்பகுதியோ, வட்ட வடிவத்திலானது. முதல் சுற்றுத் தாழ்வாரத்தில் நடக்கத் தொடங்கியதுமே எங்களுக்கு இடப்பக்கமாக புடைப்புச் சிற்பங்கள் வரத் தொடங்கின.

    அங்கோர் வாட் புடைப்புச் சிற்பங்கள், கூரையிட்ட தாழ்வாரத்தில் இருக்கும். ஆனால், இங்கே மேலே இருந்த கூரை இப்போது இல்லை. சிதைந்து போனதற்கான தடயங்கள் தென்படுகின்றன. ஒருவேளை இந்த முதல் சுற்றுத் தாழ்வாரத்தில் மரக்கூரை வேயப்பட்டிருக்கலாம் என்கிறது கம்போடிய சுற்றுலாத் துறைக் குறிப்பு. இந்த முதல் தாழ்வாரத்தில் போர்க்களக் காட்சிகளும், அன்றாட வாழ்க்கைக் காட்சிகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. போர்க் காட்சிகளில், மாபெரும் படகுகளில் சென்று போரிடும் காட்சி மிக நீளமானது. இது கம்போடியர்களும் சாம் வீரர்களும் போரிடும் காட்சி. இன்றைய வியட்நாம்தான் அன்றைய சாம் அல்லது சம்ப்பா தேசம். பெரிய சுவர் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மேல்புறத்திலும் நடுவிலும் அடுத்தடுத்துப் படகுகளும் மீன்களும் வருகின்றன. கீழ்ப்புறத்தில் அன்றாட வாழ்க்கை… சந்தையில் பொருள் வாங்கும் காட்சி ஓரிடத்தில் தெரிகிறது.

    ஏதோ ஒன்றைத் தராசில் நிறுத்துத் தரும் காட்சி வருகிறது. அருகே வெட்டப்பட்ட மீன் தலை உள்ளது. மீன் அங்காடியாக இருக்கலாம். அருகிலுள்ள ஓரிரு உருவங்களில் சீனக் களை தெரிகிறது. அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னன் இரண்டாம் சூரியவர்மன், சீனாவோடு அதிகாரபூர்வ அரசதந்திர உறவு கொண்டிருந்ததற்குக் குறிப்புகள் உள்ளன.

    கெமர் பேரரசில் சீனப் பிரதிநிதிகள் இருந்ததை, 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீனக் குறிப்புகள் காட்டுகின்றன. கெமர் பிரதிநிதிகள் சீனப் பேரரசரைச் சந்தித்துப் பேசியதன் பதிவுகள் உள்ளன. இருநாட்டு வர்த்தகத்தில் நிலவிய பிரச்சினைகள் களையப்பட்டதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, பாயோன் ஆலயப் புடைப்புச் சிற்பங்களில் சீன முகங்கள் தென்படுவதில் வியப்பில்லை.

    தெற்குத் தாழ்வாரப் புடைப்புச் சிற்பங்களில், அதிர்வு தாங்கிகளுடன் கூடிய மாட்டு வண்டி தெரிகிறது. யானை மேல் பெரிய ஓலைக் கூடைகளை வைத்து அவற்றுள் செவ்வக வடிவில் ஏதோ ஒன்றை விற்கும் காட்சி உள்ளது. தென்னை மரத்தில் காய்த்துள்ள தேங்காயை நோக்கி இரண்டு விலங்குகள் போவது ஓரிடத்தில் உள்ளது. பன்றி காணப்படுகிறது. ஆமையைப் பிடித்தவாறு சந்தையில் ஒருவன் நிற்கிறான். தோளில் பிள்ளையைத் தூக்கிச் சுமக்கும் தாய். முதலை, மான், குரங்கு, அன்னம், இன்னும் என்னென்னவோ..

    எனக்கு அங்கோர் வாட்டில் படம் எடுத்து எடுத்துக் கண்கள் களைத்துவிட்டன. ஒரு கண்ணைச் சுருக்கி மறு கண்ணால் லென்ஸ் வழியாகக் காட்சிகளைப் பார்த்துப் படம் பிடித்து கண் தசைகள் வலிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, பாயோன் ஆலயத்துக்குச் செல்லும்போது அதிகமான படங்களை எடுக்க முடியவில்லை. இணையத்தில் ஏராளமான படங்கள் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடிப் பாருங்கள். அசந்து போவீர்கள்.. அங்கோர் வாட்டைப் போல் இதை ஒவ்வொரு தாழ்வாரமாகச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை. பாயோனுக்கு வந்து சேரும்போதே மாலை மணி ஐந்தை நெருங்கிவிட்டது. இருட்டுவதற்குள் இங்கிருந்து கிளம்ப வேண்டும். மழை வேறு இருட்டிக் கொண்டு வந்தது. ஆகவே, சற்று அவசர அவசரமாகத்தான் பாயோனைப் பார்த்தோம். அது மாபெரும் தவறு. என்னைப் பொறுத்தவரையில், அங்கோர் வாட்டுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை பாயோன்.

    சொல்லப் போனால் அங்கோர் வாட்டை விட ஒருபடி மேல் பாயோன். மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடும் கட்டுமானப் பொறியியல் கவர்ச்சியும் இங்குதான் அதிகம் என்பேன். ஒரு மாயலோகத்தினுள் நுழைந்தாற் போன்ற உணர்வு இங்கு வந்தது. இந்த வருணனையை இந்தத் தொடரில் நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன் என எனக்கே நன்றாகத் தெரிகிறது. ஆனால், அதுதான் உண்மை. ஆகவே மீண்டும் மீண்டும் அந்த ஒப்புமையைப் பயன்படுத்தத் தயக்கமில்லை எனக்கு. அங்கோர் வாட் அப்சரஸ்களைக் காட்டிலும் பாயோன் அப்சரஸ்கள் அழகோ அழகு. ஒற்றை அப்சரஸ், இரட்டை அப்சரஸ், மூன்று அப்சரஸ் எனத் தூண்களெங்கும் அப்சரஸ் மயம்தான் பாயோனில். மலர்ந்த தாமரை மலர் மீது நடமிடும் அப்ரசஸ்கள்.

    தென்புற வாயிலில் நுழைந்து வலப்பக்கமாகத் திரும்பிப் பின் இடப்பக்கமாக தாழ்வாரத்தைக் கடந்து கிழக்கு வாயில் வழியாக அடுத்தடுத்த தளங்களை அடைந்தோம். இரண்டாம் தளத்திலும் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதாக வழிகாட்டி சொன்னார். எங்களுக்கு நேரமில்லை. கடந்து நடந்தோம்.

    மிக ஒடுக்கமான தாழ்வாரங்கள் பாயோனில். இருவர் நெருங்கி நடக்கலாம். அவ்வளவுதான். வேகமாய் நடந்தால், பக்கவாட்டுக் கற்சுவரில் உடலை உரசிக் கொள்ள வேண்டி வரலாம். தாழ்வாரங்களை இணைக்கும் சந்திப்புகள் அங்கோர் வாட்டைப் போலவே கூட்டல் குறிபோல் இருந்தன. கூரை முகடும் வளைவான அங்கோர் வாட் பாணி முகடுதான். எந்த இணைப்புச் சாந்தும் இங்கேயும் கிடையாது. எல்லாம் கற்களை முட்டுக் கொடுத்து உருவாக்கிய கட்டுமானம்தான்.

    வலுவான லேட்டரைட் எனப்படும் செம்பூரான் கற்களுக்கு மேல் சிலை வடிக்கத் தோதான மணற்கல்லை ஒட்டிச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள் இங்கும். சின்னச் சின்னக் கற்பாளங்களை எப்படி இணைத்து ஓர் உருவத்தை அதில் உருவாக்கினார்கள் என்பது அதிசயம்தான். பெரிய பாளங்களில் அது எளிது. பாயோன் முகங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தீர்களென்றால் அதிலுள்ள இணைப்புகள் தெளிவாகத் தெரியும். ஆனால் தொலைவிலிருந்து பார்த்தால் வழுவழுப்பான முகம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்.

    அழகியல் அறுவை சிகிச்சையின்போது (பிளாஸ்டிக் சர்ஜரி), உடலின் இயற்கையான மடிப்புக்குள் அறுவைச் சிகிச்சைத் தழும்புகள் மறைந்து போவதுபோல் மருத்துவர்கள் சிகிச்சை செய்வார்களாம். அதுபோல் இயல்பான முகவாட்டத்தோடு பொருந்திப் போவதுபோல் கற்களை அடுக்கி முகங்களை உருவாக்கியிருக்கிறார்கள் இங்கே. ஜிக்சா புதிர்க் கற்களைப் போலக் கலைத்துப் போட்டால் எடுத்து, கொஞ்சம் யோசித்தால் எளிதில் அடுக்கிவிடலாம் போலிருந்தன முக இணைப்புகள்.

    மூன்றாம் தளத்துக்கு ஏறி வந்தபோது, கல்முகங்களை நேருக்குநேர் சந்தித்தோம். தொட்டுத் தடவிப் பார்க்கும் தொலைவில்… அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் திருச்சுழி என்ற ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு என் அப்பா துணைத் தாசில்தாராக வேலை பார்த்தார். பகவான் ரமண மகரிஷி பிறந்த ஊர் அது. ரமணர் பிறந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்புகள் அங்குதான் படித்தேன். ஷத்ரிய இந்து வித்தியாசாலா என் பள்ளியின் பெயர் என்று நினைக்கிறேன். அந்த ஊரில் தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில் ஒன்றுண்டு. பூமிநாதர் கோயில் என்று பெயர். யாரோ பாண்டிய மன்னன் எடுத்த கோயில்.

    சிறு வயதில் மிகப் பெரிய ஆலயமாகத் தென்பட்டது. ஆனால், வளர்ந்து பெரிய ஆளான பிறகு ஒருமுறை போயிருந்தபோது அது நடுத்தரக் கோயிலாகத்தான் இருந்தது. அந்தக் கோயிலுக்குள் சென்று வௌவால் புழுக்கை நாற்றமடிக்கும் பிரகாரங்களுக்குள் விளையாடுவது அப்போது எங்களுக்குப் பொழுதுபோக்கு. அங்கே சுவாமி வீதியுலாவிற்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒட்டடை படிந்த மயில், ஆட்டுக்கிடா, ரிஷபம் போன்றவற்றோடு பூதகணமும் இருக்கும்.

    என் பால்யத்தில் பதிந்து போன முகம் அந்த பூதகணம். மரச் சிற்பம்தான். அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கும். மனித உடலும் பூத முகமும்… இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஒரு காலை மடித்து நிலத்தில் ஊன்றி மறுகால் முழங்கால் போட்டு நிற்கும் தோற்றம். விழிகள் பிதுங்கித் தெறித்து விழுந்துவிடும்போல் இருக்கும். ஆஜானுபாகுவான ஒரு ஆள் நிஜத்தில் எதிரே கால்மடித்து எழத் தயாராய் இருப்பது போல இருக்கும்.

    பிற்காலத்தில் விஷ்ணு ஆலயங்களில், கருட வாகனமும் அதே கோலத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் திருச்சுழி பூதகணத்துக்கு உறைபோடக் காணாது அவையெல்லாம், அந்த பூதகணத்தைப் பார்த்த நினைவு மின்னலடித்தது எனக்கு பாயோன் ஆலயக் கல்முகங்களைப் பக்கத்தில் பார்த்தபோது… என் கண்களை நேரடியாகப் பார்க்கவில்லை என்றாலும் கூட என்னை ஊடுருவிப் பார்ப்பது போல்பட்டது எனக்கு. எத்தனை நூற்றாண்டுப் பார்வை அது ?….

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 14

    சிறுவயதில் கடலில் குளிக்கும்போது கொஞ்ச நேரம் கழிந்ததுமே எங்களை அப்பா விரட்டத் தொடங்கி விடுவார். “போதும்.. போதும் வாங்க வெளியில..” என்று கடலில் இறங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்தே அதட்டத் தொடங்கி விடுவார். ஆனால், அவரும் எங்களோடு சேர்ந்து குளித்தால் அவ்வளவு சீக்கிரமாகக் கூப்பிட மாட்டார். ஆகவே, அம்மா கரையில் உட்கார்ந்திருக்க நான், இரண்டு அண்ணன்கள், அக்கா நால்வரும் எப்படியாவது அப்பாவைக் கடலுக்குள் இழுத்துப் போட முயல்வோம்.

    இல்லாவிட்டால் இந்த மனுசன் நம்மளைக் குளிக்க விடமாட்டார் என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். கடலுக்குள் இறங்கிவிட்டால் அப்பா வேற்று மனிதர். கரையில் சட்டை, கால்சட்டையோடு அதிகாரத்தையும் கழற்றி வைத்து விடுவார். கால்களையும் கைகளையும் மல்லாக்கப் பரப்பிக் கடல்பரப்பில் ஒரு சடலம் போல அவரால் மிதக்க முடியும். மூச்சை சீராக மெல்ல விட்டுக் கொண்டே அசையாமல் அலையின் தாளத்திற்கேற்ப ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். ஊரே வேடிக்கை பார்க்கும். நான் சிறுவயதில் செய்ய முயன்று தோற்ற கலை.

    பதின்ம வயதில் என்னாலும் அதைச் செய்ய முடிந்தது. ஆனால் காதுக்குள் கடல்நீர் போகாமல் இலாகவமாய்ச் செய்ய வேண்டும். உப்புநீரின் அடர்த்தி காரணமாக அவ்வாறு கடலில் எளிதில் மிதக்க முடியும். நன்னீர்க் குளங்களிலும் நகர்ப்புற நீச்சல் குளங்களிலும் அவ்வாறு மிதப்பது கடினம். கடலுக்குள் அப்பாவின் தோள் மீது ஏறிக் குதித்துக் கும்மாளம் போடுவது எங்களுக்குப் பிடித்தமான ஆட்டம். ஆனால், அப்படி அதிக சந்தர்ப்பங்கள் வாய்த்தது இல்லை.

    வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து, நினைவு தெரிந்த காலம் முதலே மற்றவர்களை ஏவல் செய்து பழக்கப்பட்டவர் என் தந்தை. துளி எதிர்ப்பையும் அவரால் ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ ஒருக்காலும் முடியாது. விவரம் தெரிந்ததும் அடிக்கடி அப்பாவிடம் சொல்வோம்.. “அப்பா நாங்க ஒங்க பியூன் இல்லப்பா” என்று. அப்போதும் அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ( இப்போது 85 வயதில் முதுமையும் தாத்தா பதவியும் அவரைக் கனிய வைத்திருக்கிறது. இருந்தாலும் அதிகாரமுகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது..J)

    ஆகவே, கடலை விட்டு “வெளியே வாங்கடா” என்றதும் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தமுறை கடற்கரைக்கு அழைத்துப் போகமாட்டார். இந்த அச்சத்தின் காரணமாக அப்பாவின் அதிகாரத்துக்கு உடனே பணிந்து விடுவோம். இருந்தாலும் கடல் எங்களைப் பின்னாலிருந்து அலைகள் மூலம் அறைந்து கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். பிரிய முடியாமல் பிரிந்து வருவோம். “இவர் கூட வந்ததுக்கு ஒரு தாசில்தார் கூட வந்திருந்தாக்கூட இன்னும் கொஞ்ச நேரம் கடல்ல ஆடவிட்ருப்பாரு..” என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே கரையேறுவோம்.

    ஒருவகையில்,அந்த மனநிலையில்தான் இருந்தோம் நானும் பரணியும் அங்கோர் வாட்டின் உச்சியில்… உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் காணும் வாய்ப்பு எல்லாருக்குமா வாய்த்து விடுகிறது? ஏதோ எங்களுடைய நல்லூழோ.. எங்கள் மூதாதையர் நல்லூழோ.. எங்களுக்கு வாய்த்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து புறப்பட வேண்டுமா என்ற ஏக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை எங்களால்.

    பரணிக்குக் கோபமே வந்துவிட்டது. “இது என்ன இம்புட்டு அழகா இருக்கு இந்த இடம் !.. இதை விட்டுட்டு எப்படிங்க அரை நாள்ல கெளம்புறது ? ஒரு வாரம் இதுக்கு மட்டும் போட்ருக்கணும் மகா” என்று புலம்பிக் கொண்டே இருந்தார். என் நிலைப்பாடும் அதுதான்.

    ஆனால் என்ன செய்யமுடியும் ? புறப்பட்டே ஆக வேண்டும். நாளை மாலையில் எங்களுக்கு சிங்கப்பூருக்கு விமானம். இங்கிருந்து புறப்பட்டுப் பின்னிரவுக்குள் புனோம் பென் போனால்தான் தூங்கி எழுந்து நாளைக் காலையில் அரண்மனை, அரும்பொருளகம் எல்லாம் பார்த்துவிட்டு மாலை நாலு மணிக்கு விமானத்தைப் பிடிக்கலாம். புனோம் பென் இங்கிருந்து ஏழெட்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது. பாயோன் கோயில் வேறு அடுத்துப் பார்க்க வேண்டும். மனமின்றிக் கீழே இறங்கத் தொடங்கினோம்.

    செங்குத்தான படிகளைக் கவனமாகக் கடந்து கீழிறங்கினோம். ராஜூ, மகாதேவன், நவீன் கீழே எங்களுக்காகக் காத்திருந்தனர். ஐவரும் அப்படியே மூன்றாமடுக்கை மட்டும் ஒரு சுற்று சுற்றி வந்தோம். எங்கள் வலக்கைப் பக்கம் சின்னக் குன்றுபோல் ஆலயம் அமர்ந்திருந்தது. ஆங்காங்கே மேலே ஏறிச் செல்லப் படிக்கட்டுகள். கற்களுக்கு அடியில் கட்டுமானம் எப்படியிருக்கும் என்பதைக் காணும் வகையில் சில இடங்கள் தெரிந்தன. வெளித் தெரிந்த கற்களுக்குக் கீழே சில இடங்களில் கான்கிரீட் தூணால் முட்டுக்கொடுத்துள்ளனர்.

    தஞ்சைப் பெரிய கோயிலைப் போல் இதையும் எவ்விதக் கலவையும் வைத்து இணைக்காமல் கற்களை ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்தே கட்டியிருக்கிறார்கள். அகழியில் வெட்டியெடுத்த மண்ணை நடுவில் கொட்டி மேட்டை உருவாக்கி அதன் பக்கங்களில் கற்களை அடுக்கிக் கரைகட்டி மேலே மேருக்களை உருவாக்கியுள்ளனர்.

    பல்லாயிரம் டன் எடையுள்ள மண் சரிந்து போகாமலும், கல் கட்டுமானத்தின் எடையைத் தாங்கும் விதமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அங்கோர் வாட் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் அருகில் நிற்கும்போதுதான் இதன் பிரமாண்டத்தையும் இதன் அருமையையும் தெளிவாக உணர முடியும். மற்றபடி எவ்வளவு வருணித்தாலும் அதை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

    எங்களுக்கு இடப்பக்கம் இரண்டாம் அடுக்கின் தாழ்வாரங்கள் வந்து கொண்டேயிருந்தன. நம்ம ஊர் தொட்டில் கம்பு போன்ற உருளைத் தூண்களோடு சாளரத்தின் பலகணிகள்… தில்லைப் பொன்னம்பலத்தை நினைவுறுத்தும் வளைந்த கூரைகள். ஆலயக் கட்டுமானத்தின் இடுக்குகளில் ஆங்காங்கே சில செடிகள் துளிர்த்திருந்தன. பெரும்பாலும் அரச மரச் செடிகள். பளீரெனச் சிரித்தன அரசிலைகள். இந்தச் சின்னச் சின்னச் செடிகள்தான் நாளை பெரிய விருட்சமாகி ஆலயத்தையே பிளந்துவிடும். உழவாரப் பணி செய்ய எந்த நாவுக்கரசர் கம்போடியாவில் இருக்கிறாரோ தெரியவில்லை.

    வெளிநாட்டுக்காரர்கள் வியந்து வியந்து பார்த்து மாய்ந்து மாய்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க, உள்நாட்டுப் பயணிகள் சிரித்துக் கும்மாளமிட்டு உள்ளே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அடிக்கடி வந்து சென்ற இடமாக இருக்கலாம். இதுபோன்ற வேறு பல ஆலயங்கள் இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேகூட இருக்கலாம். தோட்டத்து மூலிகைக்கு எப்போதுமே மவுசு கம்மிதானே ?

    ஐந்து மேருக்களையும் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். வழியில் தென்பட்ட நான்கு திசை மேருக்களையும் கீழிருந்து பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மேருவுக்கும் திசைக்கொன்றாக நான்கு வாயில்கள். அதன் இருபுறமும் துவாரபாலகர்களைப் போல அப்சரஸ்கள். அங்கிருந்து வெளியேறி வந்தால் ஆலயத்தின் நேர் பின்புறம் வந்துவிடும். இது கிழக்குப் பகுதி. ஆளரவமின்றி ஓய்ந்து கிடந்தது இந்த இடம். நடுவில் ஒன்றும் பக்கத்து ஒன்றுமாக மொத்தம் மூன்று நுழைவாயில்கள். நாங்கள் வலப்பக்கமாக உள்ள வாயிலின் வழியாக வெளியே வந்திருந்தோம்.

    இது சிவன் கோயிலாக இருந்திருந்தால் இது முக்கிய நுழைவாயிலாக இருந்திருக்கும். வெளியேறும் வாயில் பகுதி படிப்படியாக உயரம் குறைந்து வருகிறது. கடைசிப் படிக்கட்டை உள்நோக்கித் தள்ளினால், படிகளும் அவற்றை மூடியிருக்கும் மாடங்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ரஷ்ய மட்ரியோஷ்க பொம்மைகள் போல் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி மடங்கிக் கொள்ளும் போலிருந்தன.

    இந்தப் பக்கத்திலிருந்த பலகணிகள் பலவும் சிமெண்ட் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. ஆலய வெளிப்பிரகாரத்தில் வலப்பக்க வாயிலின் அருகே வட்டக் கூம்பு வடிவத்தில் ஓர் அமைப்பு சின்னதாக இருந்தது. மேலே எல்லாம் புல் முளைத்துப் போயிருந்தது. அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ பௌத்தத் தூபி போலிருந்தது பார்க்க. கவிழ்த்த மணி போலவும் காம்புள்ள ஊமத்தம் பூவைப் போலவும் இருந்தது அதன் மேல்பகுதி.

    அதைக் கடந்து வந்தால், சுற்றுச்சுவர் போன்ற உயரம் குறைந்த நீண்ட சுவர். அதன் நடுவே ஏழு தலை நாகம் படம் எடுப்பது போல் இரண்டு வரவேற்பு அலங்காரங்கள். அகழியைத் தூர்த்து வெளிப்புறச் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது இந்த இடம். அங்கோர் வாட்டைப் பின்னணியாக வைத்து ஐந்து பேரும் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். இதைத் தாண்டிவந்து வாகனத்தில் ஏறப்போகும் முன்னால் மற்றொரு பழமையான கட்டடம். அங்கோர் வாட் ஆலயத்தின் ஒரு பகுதியைக் கன கச்சிதமாக அறுத்துப் புல்தரையில் வைத்ததுபோலிருந்தது அந்தக் கட்டடம்.

    அதே கட்டுமான பாணி. அதே போன்ற அப்சரஸ்கள். கைவிடப்பட்டுக் கிடந்தாலும் களையாக இருந்தது கட்டடம். முன்மண்டபத் தூண் சரிந்து மிக விரைவில் விழுந்து விடும் போலிருந்தது. கட்டடத்தின் பக்கவாட்டில் சுற்றுச் சுவர் தெரிந்தது. சந்தடியின்றி அமைதியாகக் காணப்பட்ட அந்த இடமே ஓர் அமானுஷ்யத்தன்மையோடு இருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுக்கு நடுவே அது நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. இங்கேயே உறைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

    வேறு வழியின்றி என் காலை நிலத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம். வயிறு கடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை பசி தெரியவில்லை. பிற்பகல் மணி மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. காலை ஹோட்டலில் சாப்பிட்ட ஆம்லெட், ரொட்டி, பிரட்டிய சோறு, பழம், காஃபி எல்லாம் கரைந்து விட்டன. வாகனத்தில் அகழியின் அழகைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள உணவகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

    நம் கிராமத்து உணவகம் போன்ற சூழல். ஆனால் பெரியது. மெனு கார்ட் எல்லாம் இருந்தது. முதலில் எல்லாரும் இளநீர் கேட்டு வாங்கிக் குடித்தோம். பெரிய கொப்பரைத் தேங்காய் போலிருந்தது இளநீர். ஒரு காயிலேயே இரண்டு, மூன்று குவளை இளநீர் இருந்தது. நல்ல இனிப்பு என்று சொல்லிவிட முடியாது. அதேவேளையில் உப்பு நீரென்று தள்ளவும் முடியாது. ஆனால், அப்போது எங்களுக்கு இருந்த தாகத்துக்கு அந்த இளநீர் தேனாய் இனித்தது. ஓர் அமெரிக்க டாலர் விலை. இங்கே உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு விலை. வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலை. அவர்களுக்குள் கம்போடிய நாணயத்தில் புழங்கிக் கொள்கிறார்கள். நமக்குத்தான் ஒன்றுமே புரிவதில்லை.

    சாப்பாட்டு மேசையில், நடுநாயகமாக அங்கோர் வாட் வந்து எங்களுக்கு முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டது. அவரவர் அனுபவத்தை விவரிக்கத் தொடங்கிப் பேசிக் கொண்டே இருந்தோம். இடையிடையே உணவு உள்ளே போய்க் கொண்டிருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் பார்க்க அரை நாளை மட்டுமே ஒதுக்கிய எங்கள் அறியாமையை நாங்களே நொந்து கொண்டோம்.

    அவரவர் குடும்பத்தோடு வந்து ஆற அமர இருந்து அங்கோர் வாட்டை அணுவணுவாய் ரசிப்பதென ஜமாத்தில் முடிவானது. அதன்பிறகுதான் பரணி ஒரு நிலைக்கு வந்தார். அவித்த கோழி சேர்த்துப் பிரட்டிய சோற்றை ஒரு வாய் அள்ளிப் போட்ட கையோடு “அந்தக் குதிரை வீரனைப் பாத்தீங்களா ? ஈட்டியை ஒரு கையில வைச்சிக்கிட்டு என்னவொரு ஆக்ரோஷமாப் பாயத் தயாரா இருந்தான்னுட்டு?” என்று ராஜூ ஆரம்பிப்பார். உடனே, மகாதேவன் “சான்ஸே இல்லை ராஜூ” என்பார். உடனே பரணி இணைந்து கொள்வார், “அந்த அப்சரஸ் முகத்தைப் பாத்தீங்களா ? எல்லாம் ஒரே போல ஒண்ணாசெஞ்சி வைச்சிருக்காய்ங்க” என்பார். உடனே ஏதோ நினைவு வந்ததுபோல், “ஏங்க இதை எப்புடீங்க பிளான் பண்ணிருப்பான் ஒருத்தன் ? எவ்வளவு மண்டை இருக்கணும் அவனுக்கு ?” என்பார்.

    ராஜூ ரத்தினச் சுருக்கமாய்ப் பேசி நிறுத்திவிடுவார். மகாதேவன் அதை ஆமோதிப்பதோடு சரி. நவீன் எல்லாத்துக்கும் மையமாய் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். ஆனால், நானும் பரணியும்தான் ஓட்டைவாய்கள். லொட லொடவென்று எதையாவது பேசிக் கொண்டே இருப்போம். ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கே புகுந்தால், பேச்சின் ஓட்டம் தடைபடும் என்பதால் குறுக்கே புகமாட்டோம். எதையாவது ஒன்றை வருணிக்க வேண்டி வந்தால், படித்த பழைய புத்தகங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும் பரணிக்கு. பிரபஞ்சனின் அந்தியந்த தாசர் பரணி.

    இலக்கியம் படிப்பது வாழ்க்கையின் பல தருணங்களை அழகாக்கி விடுவதை நாங்கள் இருவருமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். கண்ணில் காணும் காட்சியை உடனே மனம் பழைய புத்தக இடுக்கில் தேடி எடுத்த வார்த்தைகளோடு கோத்துப் பரிணமிக்கச் செய்துவிடுகிறது. அடுத்தடுத்து வரும் சந்திப்புகளில் அங்கோர் வாட் பெரும்பகுதி இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் அரட்டை நீள்வதைப் பார்த்து ஓட்டுநர் ரா, எச்சரிக்கை மணி அடித்தார். இன்னும் நாம் பாயோன் கோயில் பார்க்க வேண்டும். இருட்டுவதற்குள் சியாம் ரீப்பிலிருந்து புறப்பட வேண்டுமென்று.

    காலையில் எங்கள் அறையைக் காலி செய்து மூட்டைகளையெல்லாம் ஹோட்டலிலேயே விட்டுவந்திருந்தோம். நாங்கள் அங்கோர் வாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடி சென்று எல்லாப் பெட்டிகளையும் ரா எடுத்து வந்து வாகனத்தில் வைத்திருந்தார். சாப்பிட்டு முடித்து தெம்புடன் வேனில் ஏறி பாயோன் கோயிலை நோக்கிச் சென்றோம். அங்கோர் வாட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கோர் தாம் என்ற பழம்பெரும் நகரக் கட்டமைப்பின் மையத்தில் உள்ளது பாயோன் ஆலயம்.

    பூமியும் சுவர்க்கமும் சந்திக்கும் இடத்தில் அந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. அங்கோர் வாட் ஆலயம் கட்டி முடிந்த சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாயோன் ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முதன்மையாக இது ஒரு பௌத்த ஆலயம்தான் என்றாலும் இந்து சமய அம்சங்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    தஞ்சையில் எனக்கு சைவத்தில் பற்றுடைய புலவர் ஐயா ஒருவர் அறிமுகம் உண்டு. அவர் பெயர் புலவர் சொக்கலிங்கம். பாரதி பனியன் ஸ்டோர் இரத்தினம் மாமா மூலமாக அறிமுகமான பழுத்த சிவப்பழம். அவரோடு ஒருமுறை தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு கதை சொல்வார். தஞ்சை, நாயக்க மன்னர்கள் வசம் வந்த பிறகு, அந்த ராசாவுக்கு மதுரையிலிருந்து பெண் கட்டி வந்தார்களாம்.

    பாண்டியகுமாரிக்குத் தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றிக் காட்டிய மன்னர், “பார்த்தாயா நீ வாழப் போகும் அரண்மனை எவ்வளவு பெரியதென்று ?” எனச் சவடால் விட்டிருக்கிறார். உடனே மதுரைக்கார மகாராணி, இடுப்பில் ஒரு கையை வைத்து முகத்தில் ஏளனம் தொனிக்கச் சொன்னாளாம், “ஹூம், இதெல்லாம் ஒரு அரமணை ? எங்கப்பன் வீட்டுச் சலதாரைக்குக் காணாது ஓய் ஒம்ம மொத்த அரமணையும் !”

    ங்ஙொப்புரானே ! அதே மாதிரி ஒரு சம்பவம் எங்களுக்கு நடக்கப் போகிறது என்று நானோ, பரணியோ, மற்ற மூவருமோ கற்பனையும் செய்திருக்கவில்லை. எங்கள் ஐந்து பேரையும் வரவேற்க, எண்ணற்ற அவலோகிதேஸ்வரர்கள் இதழ்க் கடையில் உறைந்த புன்னகையோடு பாயோன் கோயில் கோபுரங்களில் காத்துக் கிடப்பது தெரியாமல், உண்ட மயக்கத்தில் கண்கள் செருக, இலேசான இளமழைக்கு இடையே வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்…

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 13

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.

    நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.

    இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது.      மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.

    பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.

    இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்…. இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.

    நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.

    மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.

    இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.                                   

    சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.

    வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.

    பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.         

             

    அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.

    புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.

    வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.     

    ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !

    இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !

    கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.

    சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.

    ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.

    இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..

    தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.

    ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.       

    இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.

    அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.

    ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.

    பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.

    தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.

    படம் நன்றி – முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியம்

    குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.

    தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    படம் நன்றி – தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

    வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.

    குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.

    வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.

    திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.

    அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.

    அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.

    கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.

    கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

    அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.                     

    இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 13

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.

    நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.

    இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது.      மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.

    பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.

    இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்…. இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.

    நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.

    மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.

    இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.                                   

    சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.

    வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.

    பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.         

             

    அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.

    புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.

    வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.     

    ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !

    இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !

    கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.

    சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.

    ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.

    இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..

    தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.

    ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.       

    இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.

    அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.

    ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.

    பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.

    தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.

    படம் நன்றி – முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியம்

    குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.

    தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

    படம் நன்றி – தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

    வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.

    குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.

    வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.

    திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.

    அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

    சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.

    அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.

    கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.

    கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

    அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.                     

    இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

     

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 12

    பயணங்களின் அழகே அப்போது நாம் பார்க்கும் புதிய இடங்களும் சந்திக்கும் புதிய மனிதர்களும்தான். பழக்கமில்லாத இடம், மொழி, மனிதர், தட்பவெப்பம், உணவு, பார்த்திராத கட்டடக்கலை அம்சமுள்ள ஆலயங்கள், அரண்மனைகள், கோட்டை-கொத்தளங்கள்… இவைதான் நம்முடைய பயணங்களைச் சுவாரஸ்யமாக்குகின்றன.

    பழக்கமான இடத்தில் என்னதான் சுற்றிச் சுற்றி வந்தாலும் நம்முடைய மனமும் உடலும் ஓய்வை உணருவதில்லை. அதனால்தான், இந்தியாவில் பக்கத்து மாநிலத்திற்குப் போனால்கூட நமக்கு விநோதமாகப்படுகிறது. முற்றிலும் புதிய இடத்தில்தான் மனம் ஓய்வை உணர்ந்து புத்துணர்ச்சி பெறுவதாக முன்பு ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

    வாரவிறுதியின்போது அருகிலுள்ள இடங்களுக்குச் சிறு-சுற்றுலா செல்வதற்கும், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு கணிசமானது. இதை அனுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் நீளமே உள்ள கடற்பாலத்தைத் தாண்டி மலேசியாவுக்குள் நுழைந்ததுமே வரும் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்வும் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.

    அதற்காக சிங்கப்பூர் தாழ்த்தி என்றில்லை. சொர்க்கமாகவே இருந்தாலும் தொடர்ந்து அனுபவிக்கும்போது வரும் செல்லச் சலிப்பு அது. இங்கே பார்ப்பதற்கு வேலை எதுவும் இல்லை. விடுமுறைக்காக வந்திருக்கிறோம். ஊரைச் சுற்றி உண்டு களித்து உறங்க வேண்டியது மட்டும்தான் வேலை என்ற எண்ணமே அந்த விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.

    என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தர் அதிகமான பயணங்கள் மேற்கொள்பவரே. தினமும் காலையில் ஒரு புதுநிலத்தில் கண்விழிப்பவர் பேறுபெற்றவர். 1984-இல் நான் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும்போது விகடனில் ஒரு நகைச்சுவைத் தொடர்வந்தது. மெரீனா எழுதியது. தலைப்பு எங்கம்மா என்று நினைவு. அதில் வரும் முக்கியக் கதாபாத்திரம் காசிக்கும் திரிவேணி சங்கமத்துக்கும் தீர்த்தயாத்திரை போய்விட்டு வந்து பேசுவதாக மெரீனா எழுதிய வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது.

    “அகலமான கங்கயைப் பார்த்தப்போ மனுஷாள்லாம் எவ்வளவு அற்பம்னு தோணிடுத்து. இந்தச் சின்ன வாழ்க்கைக்குள்ள எவ்வளவு சண்டை, சச்சரவு..” என்ற தொனியில் இருக்கும் அந்த வசனம். உண்மை. பயணங்களே நம்மைப் பரிசீலனை செய்ய உதவுகின்றன. நாம் வாழும் நாட்டின் நிலையை, புதிய தேசத்தோடு நம்முடைய ஆழ்மனம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

    “அடடா இந்த ஊரில் பிறக்கவில்லையே” என்று ஒரு கணமும், “நல்லவேளை ! இந்த ஊரிலெல்லாம் நாம் பிறக்கவில்லை” என்று மறு கணமும் மனம் நினைக்கும். இரண்டுமே ஒருவகையில் நம்மைப் பண்படுத்தும். பிள்ளைகளுக்குக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைப்பதைக் காட்டிலும் அவர்களின் இளவயதில் ஏராளமான பயணங்களுக்கு அழைத்துச் செல்வதே பெற்றோர் செய்ய வேண்டியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. பயணங்களால் மனம் விசாலமடைகிறது.

    அந்த வகையில், எங்கள் அனைவருக்குமே கம்போடியப் பயணம் முக்கியமானது. இந்தியாவுக்குக் கிழக்கே பல்லாயிரம் மைல் தொலைவில் ஒரு தேசம் இந்தியப் பண்பாட்டை, ஆன்மிகப் பாதையை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருவது ஆச்சர்யம்தான். கம்போடிய மங்கல விழாக்களிலும், அமங்கல நிகழ்ச்சிகளிலும் இரண்டு விதமான வைதிகர்களும் இடம்பெறுகிறார்களாம் இன்றளவும். அதுபற்றி அடுத்த பயணத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    உலக அளவில், யோகாசனங்கள் அதிகப் பிரபலமாகி வரும் காலம் இது. அத்தோடு யோகாசனம் பிறந்த நாட்டின் மீதும் சிலருக்கு ஈடுபாடு வந்துவிடுகிறது போலும். அங்கோர் வாட்டில் நாங்கள் சந்தித்த பெண்மணி அந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். முதல் சுற்றுத் தாழ்வாரங்கள் பார்த்து முடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழையும்போது அந்தப் பெண்மணியைச் சந்தித்தோம்.

    இந்தியப் பண்பாட்டின்மீது ஆர்வமுள்ள பிறநாட்டவரோடு பேசுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்தியாவைப் பற்றி அதன் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பற்றி அவர்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் எனக்கு. சிங்கப்பூர் வருமுன், எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிப் பழக்கமில்லை. இருந்தாலும் சமாளிப்பேன்.

    1988-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பகுதிநேரப் பொறியியல் கல்வி வகுப்பு முடிந்து தினமும் இரவு தஞ்சாவூருக்கு ஒரு பாசஞ்சர் ரயிலில் நண்பர்களோடு திரும்பிச் செல்வேன். இரவு ஒன்பது மணிக்கு வகுப்பு முடிந்ததும், அவசர அவசரமாக இரவு உணவை முடித்துக் கொண்டு 9.20க்குக் கிளம்பும் ரயிலில் ஏறி உட்கார்ந்தால், பின்னிரவு ஒன்றரை மணிக்குத் தஞ்சாவூர் வந்துவிடும். அப்படி ஆறு மாதம் வரை சென்றிருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஒருமுறை ஆஸ்திரேலியப் பயணி ஒருவர் வந்தார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவரோடு சற்று நேரம் உரையாடினேன். அவர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமம் இருந்ததால் எங்கள் பேச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. என்ன பேசிக் கொண்டோம் என்பதும் இப்போது நினைவிலில்லை.

    ஆனால் இப்போது நிலைமை வேறு. என்னால் தைரியமாக ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. வெள்ளைக்கார ஆங்கிலமும் ஓரளவு புரிகிறது. அந்த தைரியத்தில் அந்தப் பெண்மணியோடு பேச்சுக் கொடுத்தேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். யோகாசனம் பற்றிப் படித்து அதைப் பயிற்சி செய்கிறார். அப்படியே இந்தியாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவில் சில இடங்களுக்குச் சென்று பார்த்து வந்திருக்கிறார்.

    உலக அதிசயம் என்பதாலும் இந்தியப் பண்பாட்டுடன் தொடர்புடையது என்பதாலும் அங்கோர் வாட்டைப் பார்க்க வந்ததாகச் சொன்னார். அவருக்கு நான்கு வருணங்கள், நான்கு வேதங்கள், மும்மூர்த்திகள் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. மகாபாரத, ராமாயண இதிகாசங்கள் பற்றிய அறிமுகம் உள்ளது.

    ஆகவே, அங்கோர் வாட்டைத் தம்மால் ரசிக்க முடிவதாகச் சொன்னார். தொடர்ந்து இந்தியாவில் பயணம் செய்ய ஆர்வமிருப்பதாகவும் அந்தப் பெண்மணி பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இவர்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன்.

    நாங்கள் சந்தித்த பெண்மணிக்கு 40, 45 வயதிருக்கலாம். தன்னந்தனியாக அறிமுகமில்லாத ஒரு ஆசிய நாட்டுக்குப் புறப்பட்டு வந்து தான் விரும்பியதைப் பார்த்து ரசித்துவிட்டுப் போகிறார். மகனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமே ! மகளுக்கு 200 பவுன் நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமே ! என்ற கவலையெல்லாம் இவர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

    நாம்தான் நமக்காக வாழாமல், நம் சந்ததிகளுக்காக சொத்துச் சேர்த்து வைத்து மறைந்து போகிறோமோ ? வாழையடி வாழையாக நம் குடும்பங்களில் இதுதான் நடக்கிறதோ ? யோசிப்போம். பிள்ளைகள் முக்கியம்தான். ஆனால், நாம் நமக்காக வாழ்வதும் எவ்வளவு முக்கியம் ? பயணங்களும் அது தரும் அனுபவங்களுமே ஈடில்லாத மகிழ்ச்சியை அளிக்கின்றன என்ற எண்ணத்தை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்திக் கொண்டேன்.

    முதல் சுற்றுத் தாழ்வாரத்தின் வடக்குப் பகுதியில், கடவுள்கள் சண்டை போடும் காட்சிகள் ஏராளமாக இருந்தன. எது எது எந்தெந்தக் கடவுள் என்பதைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்குள் போட்டியே உருவானது. பிள்ளையார் இருந்தார். சிவன் ரிஷபத்தின் மேலேறியவாறு இருந்தார். கருடனின் மேல் அமர்ந்த விஷ்ணு இருந்தார். யாளி போன்ற இரண்டு உருவங்கள் இருந்தன. அன்னப் பறவை இருந்தது.

    மயில் மீதமர்ந்து ஆறுமுகன் வில்லில் அம்பு தொடுக்கும் சிற்பமும் இருந்தது. போர்க்களக் காட்சிகள் எல்லாம் உக்கிரமாக இருந்தன. கருடனின் முகபாவம் போரில் கத்திக் கூச்சலிடும் பாவத்தில் இருந்தது. கிழக்குப்புறத் தாழ்வாரத்தில் இருந்த சிற்பங்களைக் காட்டிலும் இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் சற்று நெருக்கமாகச் செதுக்கப்பட்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.

    மேலும் இந்தப் பக்கத்திலிருந்த சிற்பங்களில் வழுவழுப்புத்தன்மை அதிகமிருந்தது. அது பயணிகளின் கைபட்டு உருவான வழவழப்பா இல்லை இயல்பே இப்படித்தானா என்று தெரியவில்லை. ஆடை, ஆபரண வடிவங்களும் சற்றுத் துல்லியமாகத் தெரிந்தன இந்தச் சிற்பங்களில். அவரவருக்குப் பிடித்த சிற்பங்களின் அருகே நின்று கூடுதல் நேரம் செலவிட்டதால், நாங்கள் ஐவருமே தள்ளித் தள்ளி நின்று கொண்டிருந்தோம். கேமராவில் படம்பிடிக்க முடியாமல் எல்லாருமே திறன்பேசிகளைத் தஞ்சமடைந்திருந்தோம்.

    இந்தப் பக்கத்துச் சிற்பங்கள் ஓரளவு நன்கு அடைபட்டன படக்கருவிகளுக்குள். ஐவரும் ஓரிடத்தில் ஒன்றுதிரண்டு, வழிகாட்டியோடு இரண்டாம் சுற்றுத் தாழ்வாரத்தை இணைக்கும் பாதைக்குள் புகுந்து இரண்டாம் சுற்றை அடைந்தோம். இங்கே தூண்களில்தான் புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. முதலில் நினைத்ததுபோல் இங்குள்ள சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி வரும்போதே நடுவிலுள்ள மூன்றாவது முக்கிய அடுக்கு, பலகணி வழியாக வந்து வந்து சென்றது. இந்தச் சுற்றை வேகமாகவே வலம் வந்துவிட்டோம்.

    உயரம் இப்போது அதிகரித்துவிட்டபடியால், சுற்றிலுமுள்ள இடங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. ஒரே பார்வைக்குள் அடங்கும் ஆலயத்தின் அளவு அதிகரித்திருந்தது. அது ஒரு புதுக் கோணத்தைத் தந்தது எங்களுக்கு. இப்போது முக்கிய மூன்றாவது அடுக்கின் கீழ்ப் பகுதிக்கு வந்துவிட்டோம். இங்கேயும் இரண்டு நூலக இடிபாடுகள் இருந்தன வடக்கிலும் தெற்கிலும். அதற்குள் ஏறிப் பார்க்கவில்லை.

    திசைக்கு ஒன்றாக நான்கு மேருக்கள். நான்கு பக்கத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட செங்குத்தான படிகள் மேல்புறத்தை நோக்கிச் சென்றன. பக்கத்து மூன்று விகிதத்தில் மொத்தம் 12 படிக்கட்டுகள் இருக்குமென நினைக்கிறேன். படிக்கட்டுகளை ஏறிக் கடக்கும்போது பக்கவாட்டிலுள்ள கைப்பிடிகளைப் பிடித்தவாறுதான் செல்ல முடியும். அவ்வளவு செங்குத்தான படிகள். பொதுவாகப் படிக்கட்டுகள் 45 டிகிரி சாய்மானத்தில் கட்டப்படும். அதற்கும் கீழான சாய்மானம் என்றால் சறுக்குப் பாதை மாதிரி எளிதில் ஏறிவிடலாம். ஆனால் 45 பாகையைத் தாண்டிவிட்டால் படிக்கட்டுகளை ஏறுவதில் சிரமம் அதிகரித்துக் கொண்டே போகும்.

    அதை ஈடுகட்ட படிக்கட்டுகளின் உயரத்தைக் குறைத்தாலும் பத்தாது. மகாமேருவை நோக்கிய அங்கோர் வாட் ஆலயப் படிக்கட்டுகள் அநேகமாக 60 அல்லது 70 பாகைக் கோணத்தில் இருக்குமென்பது என்னுடைய ஊகம். படிகளின் எண்ணிக்கையும் அதிகம். மூன்று, நான்கு மாடி உயரத்துக்குப் படிகள் இருந்தன. அவற்றுள் கிழக்குப் புறத்தில் மட்டும் ஓரிடத்தில் கற்படிகளுக்கு மேலே மரப்படிகள் அமைத்து ஏறிச் செல்ல வழிவைத்துள்ளனர். எஞ்சிய எல்லாப் படிக்கட்டுகளையும் வேலி போட்டு மறித்துள்ளனர்.

    ஏறுவதற்கு ஒன்று. இறங்குவதற்கு ஒன்று என இரண்டு படிக்கட்டுகள். ஏனென்றால், ஒரே படிக்கட்டில் ஏறுபவரும் இறங்குபவரும் சந்தித்தால் விபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகளைப் படிக்கட்டில் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துதான் மேலே அனுப்புகிறார்கள். வயதானவர்களைக் கூடவே ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது நல்லது. ஒவ்வொரு படியிலும் நின்றே அடுத்தபடியில் ஏற முடிகிறது.

    இப்படி நாம் முதலில் ஏறி அடைவது வடகிழக்கு மூலையிலுள்ள மேருவின் கீழ்ப்பகுதி. அதன் வாசலின் மேலே உள்ள நிலைப் பகுதியில் நாக தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம ஊர் கோயில்களில் யாளி, மகர தோரணம் இருக்கும் பெரும்பாலும். இங்கே எல்லா வாயில்களுக்கு மேலேயும் நாக தோரணம்தான். தோரணத்துக்கு உள்ளே பெரும்பாலும் போர்க்களக் காட்சிகள். விலங்குகள். பக்கவாட்டுத் தூண்களில் அப்சரஸுகள். நான்கு திசைகளிலும் உள்ள நான்கு மேருக்களையும் இணைக்கும் தாழ்வாரம் இரண்டு விதமான உயரங்களில் உள்ளது.

    அந்தத் தாழ்வாரத்துக்கும் நடுவிலுள்ள மகாமேருவுக்கும் இடைப்பட்ட இடம் ஒவ்வொரு திசையின் நடுப்பகுதியிலிருந்து மேருவை நோக்கிச்  செல்லும் இணைப்புச் சாளரங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த இடத்தில் நான்கு தொட்டி போன்ற பகுதி உருவாகிப் பள்ளமாக இருக்கிறது. மேலிருந்து பார்க்கும்போது ஏராளமான கற்கள் பெயர்ந்து கிடப்பது தெரிகிறது. நிலநடுக்கத்தின் பாதிப்பா அல்லது காலப் போக்கில் தானாக இடிந்து விழுந்தவையா என்பது தெரியவில்லை.

    இந்தப் பகுதியிலுள்ள ஒரு மண்டபம் வானம் பார்க்கத் திறந்து கிடந்தது. ஆலயத்தின் முன்புறமும் பின்பிறமும் நீண்ட பாதைகள் தெரிந்தன. சுற்றிலும் பசுமை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை.. பசுமையைத் தவிர வேறில்லை. மேலே வந்ததும் காற்று பலமாக வீசத் தொடங்கியது. வியர்வையில் ஊறியிருந்த சட்டை உலரத் தொடங்கியதால் புதுத் தெம்பு வந்தது போலிருந்தது எல்லாருக்கும். ஒவ்வொரு திசையிலும் தெரிந்த காட்சி, ஏற்கனவே பார்த்த காட்சியை விடவும் மேம்பட்டதாக இருப்பது போலிருந்தது எங்களுக்கு.

    எதிரே அடுக்கடுக்காகத் தெரிந்த கோபுரங்கள் கேரள பாணிக் கோயில்களை நினைவுபடுத்தின. நான்கு மூலைகளிலும் தாழ்வாரங்கள் முடியும் இடத்தில் அடுக்கடுக்காக எழுந்து மேரு உருவாகியிருந்தது. இன்னமும் அந்த இடங்களைச் சீரமைக்கும் பணி தொடர்கிறது. ஆலயப் பகுதிகளை மூடி வைத்து உள்ளே வேலை நடப்பதைப் பார்க்க முடிந்தது.

    கீழே இருந்த மண்டபங்கள் இடைவெளியோடு கூடிய பாதைகளால் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு பார்வையில் அந்த மண்டபங்கள் நமது ஊர் தெப்பக்குளங்களின் நடுவே காணப்படும் நீராழி மண்டபங்கள் போலிருந்தன.

    இந்த உயரத்திலிருந்து தென்படும் காட்சி என்னை என்னவோ செய்தது. பாழடைந்து சிதிலமாகிப் போன ஒரு பேராலயத்தின் மேலே நிற்கிறோம். இதைக் கட்டி முடித்தபோது இந்த இடம் எவ்வளவு புதுக்கருக்குடன் இருந்திருக்கும் ? இரண்டாம் சூரியவர்மனும் இந்த இடத்தில் நின்று பார்த்திருப்பார்தானே ? அப்போது அவர் மனத்தில் என்னென்ன நினைத்திருப்பார் ? உலக அதிசயமொன்றை உருவாக்கிவிட்டோமென்பதை அப்போது அவர் உணர்ந்திருப்பாரா ? அதற்காகப் பெருமைப்பட்டிருப்பாரா ?

    கீழே கற்கள் சிதறிக் கிடந்தன. மேலிருந்து பார்க்கும் கோணத்தில் கோயில் அலங்கோலமாகக் கிடப்பது போல் பட்டது எனக்கு. தொலைவில், மண்ணிலிருந்து மொத்தமாகப் பார்க்கும்போது இருந்த வடிவமைதி இப்போது காணாமற் போயிருந்தது. கோயிலின் சில பகுதிகளில் ஆங்காங்கே பச்சைப் பாசி படர்ந்திருந்தது. காரணமின்றி என்னைச் சோகம் கப்பிக் கொண்டது. மிகப் பழமையான இடங்களில் இருக்கும்போது மட்டுமே என்னால் உணரக் கூடிய வகையான சோகம்….

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – பாகம் 11

                அங்கோர் வாட் பேராலயம், ஒரு பெரிய சதுரத்துக்குள் சின்னச் சின்னச் சதுரங்களை அடுக்கி வைத்தது போன்ற தோற்றத்தைத் தரும், மேலிருந்து பார்த்தால்… முகப்பிலுள்ள மதில் போன்ற பெரிய சுற்றுச் சுவரைக் கடந்து உள்ளே வந்தால், மூன்று அடுக்குகளாக உள்ளது ஆலய வளாகம். முதல் இரண்டு அடுக்குகளும், மிக நீண்ட தாழ்வாரங்களால் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அடுக்கு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் ஐந்து மேருக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

                ஒவ்வோர் அடுக்கும் ஒன்றைவிட உயரத்தில் இருக்கிறது. பொதுவாகவே இந்த ஆலயப் படிகள் மிக உயரமானவை. அவற்றை எளிதில் ஏறிக் கடக்க முடியாது. ஆகவே, படிகள் உள்ள எல்லா இடத்திலுமே இரும்புத் தாங்கிகள் கொண்ட மரப்படிகளைச் செய்து பொருத்தியுள்ளனர். விஷ்ணு சிலை இருந்த இடத்திற்கு இருமருங்கிலும் தாழ்வாரம் நீண்டு கிடந்தது. இரண்டு கண்ணாடிகளை எதிரெதிர் வைத்தால் எண்ணற்ற பிரதிபலிப்புகள் வருமே ! அதுபோலிருந்தது அந்த முடிவற்ற நிலைகளும் தாழ்வாரமும்.

                அதைக் கடந்து கீழே இறங்கிச் சற்றுத் தொலைவு நடந்தால்தான் முதல் சுற்று வரும். போகும் வழியில் நடைபாதையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாழடைந்த கட்டடங்கள். அவை நூலகங்கள் என்று அதிகாலையில் வந்தபோது தெரிந்து கொண்டோம். இப்போது அதனுள்ளே போய்ப் பார்த்தோம். ஒன்றுமில்லை. தொலைவிலிருந்து பார்த்தால், அந்தக் காலத் தஞ்சாவூர்க் கிராம நாட்டு ஓடு வேய்ந்த பெரிய வீடு போலிருந்தது.

                உள்ளே பெரிய கற்களை வாகாகச் செதுக்கி ஒன்றுக்கொன்று முட்டுக்கொடுத்து ஒன்றையொன்று தாங்கிக் கொள்வது போல் கூரை அமைக்கப்பட்டிருந்தது. அங்கோர் வாட் முழுமைக்குமே உள்ளே அடியில் இருப்பது லேட்டரைட் எனப்படும் கடினமான கல். அது சின்னச்சின்னப் பொத்தல்களோடு சொரசொரப்பாக உள்ள கல். அதன்மேல் சிற்பங்களைச் செதுக்க முடியாது. எனவே, உறுதித்தன்மைக்கு அந்தக் கல்லை உள்ளே வைத்துக் கட்டிவிட்டு மேலே மணற்கல்லை வைத்து மூடியிருக்கிறார்கள். அதில்தான் எல்லாப் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

                நம் தமிழ்நாட்டு ஆலயங்களைப் போல முப்பரிமாணச் சிற்பங்கள் அங்கோர் வாட்டில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். அல்லது எங்கள் கண்ணில்படவில்லை. எல்லாமே புடைப்புச் சிற்பங்கள்தான். அதுவும் சுவரில் இருந்து வெகுவாக வெளியில் வராதவை. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த அப்சரஸ் நடனமணிகளின் மார்பகங்கள்தான் புடைப்புச் சிற்பங்களில் ஆக அதிகம் வெளிவந்த பகுதிகளாக இருக்க வேண்டும். மற்ற எல்லாமே சில மில்லிமீட்டர்தான் புடைத்திருக்கும்.

                அங்கோர் வாட் ஆலய நூலகத்தின் உட்பக்கம், கிணற்றடித் துவைகல் மாதிரி குளிர்ச்சியாக இருந்தது. உள்ளே மழையின் வாசம் நிறைந்திருந்தது. சில இடங்களில் வளைவான கூரைக் கற்கள் பெயர்ந்து வானம் தெரிந்தது. அதனூடாக மழை நீர் இறங்கி வழிந்த தடம் தெரிந்தது. இரண்டு பக்கங்களில் இருந்த நூலகக் கட்டடங்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்பு. உள்ளே என்னென்ன நூல்கள் இருந்திருக்குமோ ?

                 பனையோலைச் சுவடிகளா, களிமண் பலகையா அல்லது செம்பு, தாமிரம் போன்ற உலோகத் தகடுகளில் எழுத்துப் பொறிக்கப்பட்ட தொகுப்பா? என்ன இருந்திருக்கும் என்ற தகவல் தெரியவில்லை. கெமர் பேரரசின் அறிவுப் பொக்கிஷங்கள் இங்கு ஒருகாலத்தில் இருந்தன என்ற உணர்வே என்னைக் கிளர்ச்சியடைய வைத்தது. இந்தக் கல் சுவர்களுக்கும் கூரைக்கும் பேசத் தெரிந்தால் விரிவாகச் சொல்லக் கூடும். இலங்கையில் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிப் பதின்ம வயதில் படித்திருக்கிறேன். அதை நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் கருதியதில்லை.

                அலுவல் ரீதியாக எங்கள் அமைச்சரோடு இலங்கை செல்லும்போது யாழ் நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள சிறார் பிரிவை மேம்படுத்தி, தேவையான புத்தகங்களை சிங்கப்பூர் வழங்கியிருந்தது. அதன் அறிமுக விழாவுக்காகப் போனபோது நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்க நேரம். இதுதானா? இங்குதானா? இதைத்தானா? என்று ஒவ்வோர் இடத்தையும் பார்த்துப் பார்த்துக் கண்ணில் தேக்கிக் கொண்டேன்.

                நூலகத்தை எரிக்கவும் ஒருவருக்கு மனம் வருமா? யாழ் நூலக முகப்பிலேயே அது எரிப்பதற்கு முன்னும் பின்னும் இருந்த படங்கள் மாட்டப்பட்டுள்ளன. நெடுநேரம் அதை என்னால் பார்க்க முடியவில்லை. கண்களைத் திருப்பிக் கொண்டேன். அங்கோர் வாட் ஆலய வளாகத்திலுள்ள நூலகத்தை விட்டு வெளியே வரவே மனமில்லை. வழிகாட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். என் கவனம் அவரிடம் குவியவில்லை. எனக்குள் மூழ்கியிருந்தேன்.

                நூலகத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் பளீரென அடிக்கத் தொடங்கியிருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், வியர்வை காயவில்லை. சொதசொதவென சட்டையெல்லாம் நனையத் தொடங்கியது. 

                முதல் சுற்றுக்குள் ஏறிச் சுற்றிப் பார்க்கத் தொடங்குமுன் கழிப்பறைக்குச் சென்று மீண்டோம். சுத்தமான கழிப்பறைகள். ஆலய வளாகம் என்பதற்காகக் கழிப்பறை கட்டாமல், வருவோரைக் கஷ்டப்படுத்தவில்லை. சிங்கப்பூரிலும் எல்லா ஆலயங்களிலும் உள்ளேயே ஓரமாகக் கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கும். கழிப்பறைக்கு வெளியில், வருகையாளர்கள் அணிந்து கொள்ள ரப்பர் காலணிகள் கிடக்கும்.

                அங்கோர் வாட்டில் சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தனர் கழிப்பறையை. தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு முகத்தில் தெளித்துக் கொண்டு புத்துணர்ச்சியோடு திருச்சுற்றுக்குள் நுழைந்தோம். உயரமான படிகளை ஏறிக் கடந்து, தென்மேற்கு மூலையில் தொடங்கினோம். முதலில், தெற்குப்புறத்திலுள்ள புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கத் தொடங்கினோம். மிக நீண்ட தாழ்வாரம். சுமார் ஏழு அடி உயரத்தில் சிற்பங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தாழ்வாரம் 10, 15 அடி அகலம் இருக்கும். வெளிப்புறத்தில் இரண்டு வரிசையாகத் தூண்கள். பெருமழை பெய்தாலும் சாரல் உள்ளே வந்து சிற்பங்களில் படமுடியாத அளவுக்கு உட்புறச் சுவர் தள்ளியே இருந்தது.

                தூண்களில் சிற்ப வேலைப்பாடு ஏதுமில்லை. உட்புறச் சுவரில் மட்டும்தான். பெரும்பாலும் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள். அத்தோடு போர்க்களக் காட்சிகள். புடைப்புச் சிற்பங்களின் மீது சில இடங்களில் வண்ணப் பூச்சு தெரிகிறது. சில சிற்பங்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்த தடயமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் பார்க்கவில்லை. எகிப்திய சிற்பங்களைப் போல் சிற்பத்தின் உருவம், ஒருவரின் அரசியல் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அரசன் என்றால் ஆகப்பெரிய உருவம். சாமானிய வீரன் ஆகச் சின்ன உருவம்.

                மேலும் கம்போடியப் பாரம்பரியப்படி, பதவி உயர உயர, அவரைச் சுற்றியுள்ள அலங்காரக் குடைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இரண்டாவது சூரியவர்மனின் போர்க்களக் காட்சியொன்றில் பதினைந்து குடைகள் வரை சித்திரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். யானைகள் மீள மீள வந்துகொண்டே இருக்கின்றன. சூரியவர்மன் பெரும்பாலான காட்சிகளில் யானை மீதே அம்பாரி கட்டி அமர்ந்திருக்கிறார். இல்லையென்றால் குதிரை வண்டி. அம்பாரியும் யானையும் பேரழகு. யானையின் உடல்மொழி அபாரமாக வந்திருக்கிறது சிற்பத்தில். குதிரை வண்டி நவீன கால வில்வண்டி போல இருக்கிறது.

                யானை மேல் கட்டியுள்ள அம்பாரிகளை மட்டுமே பார்க்க ஒரு நாள் வேண்டும். அத்தனை அழகான வேலைப்பாடு. ஒரு சின்ன அரியாசனத்தையே சிற்பி மன்னருக்குச் செதுக்கிக் கொடுத்துள்ளான். சிற்பி இந்த இடத்தில் பொற்கொல்லராக மாறிவிட்டிருக்கிறான். அத்தனை நுணுக்கமான வேலைப்பாடு அம்பாரிகளில். யானையின் முதுகில், இரண்டு பக்கங்களிலும் பொருந்தியுள்ள அம்பாரியின் கால் பகுதி நுனிகள் சுருண்டு அவற்றில் கயிறு கட்டி அது யானையின் உடலோடு பிணைக்கப்பட்டுள்ளது.

                மன்னன் அம்பாரியின் மேல் இடக்காலும், யானையின் உடல்மேல் வலக்காலும் ஊன்றி அம்பு தொடுக்க ஆயத்தமாக நிற்கிறான். நடுப்பகுதியில் மன்னன் இருந்தால் மேலே அப்சரஸ்கள் அபிநயித்தவாறு உள்ளனர். கீழே படை வீரர்கள் நடந்து செல்லும் தோற்றம் உள்ளது. அவர்கள் விரைந்து செல்வது இரண்டு கால்களுக்கும் இடையே இடைவெளி அதிகம் இருப்பதன் மூலம் உணர்த்தப்படுகிறது. நிழல்விழ அதிக இடமில்லாததால், புடைப்புச் சிற்பங்களைத் தெளிவாகப் படம் பிடிப்பது பெரிய சவால்.

          விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவில் எடுத்துப் பார்த்தபோது கூடப் படங்களைத் தெளிவாகக் காணமுடியவில்லை. ஆனால், ஐ ஃபோனில் எடுத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவாக இருந்தது. வண்ண வேறுபாடு, ஒளி வேறுபாடு இல்லாததால் மசமசவென்றுதான் இருந்தன படங்கள். கிழக்கு, மேற்குப் புறத் தாழ்வாரங்களில் அந்தி, சந்தியில் இளஞ் சூரிய ஒளி படும்போது மேம்பட்ட படங்கள் கிடைக்கக் கூடும். இணையத்தில் தேடியபோது அப்படிப்பட்ட படங்கள் இருப்பதைக் காண முடிந்தது.

          ஓரிடத்தில் பத்துத் தலை இராவணன் இருபது கைகளோடு சித்திரிக்கப்பட்டிருந்தான். இன்னோரிடத்தில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடையும் மாபெரும் சிற்பம் இருக்கிறது. இது இங்குள்ள சிற்பங்களில் மிகப் புகழ் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கீழே ஆமை தெரிகிறது. அதன் மேல் மந்தர மலையை அச்சாகக் கொண்டு வாசுகிப் பாம்பைக் கயிறாகக் கட்டி இடப்பக்கம் அசுரர்களும் வலப்பக்கம் தேவர்களும் பாற்கடலைக் கடைகின்றனர். நடுவே விஷ்ணு மந்தர மலையோடு சேர்த்துக் காட்டப்பட்டிருக்கிறார். மேலே இந்திரன் நிற்கிறான். இது கிழக்குப்புறத் தாழ்வாரத்திலுள்ள சிற்பம்.

                இடப்பக்கத்திலுள்ள 92 அசுரர்கள் முட்டை விழிகளோடு கிரீடங்களோடு காட்டப்பட்டுள்ளனர். வலப்பக்கமுள்ள 88 தேவர்கள் சற்றுக் குறைவான அணிகலன்களோடு காட்டப்பட்டுள்ளனர். அசுரர்கள், ஐந்து தலையுள்ள வாசுகிப் பாம்பின் தலைப்பக்கத்தைப் பிடித்துள்ளனர். தேவர்கள் வால்பக்கத்தைப் பிடித்துள்ளனர். தேவர்கள் வரிசையின் கடைசியில் அனுமன் காட்டப்பட்டிருக்கிறார். வாசுகியின் வாயிலிருந்து வெளிப்படும் நஞ்சு தேவர்களை பாதிக்கக் கூடாது என்றுதான் பெருமாள், முன்கூட்டியே தேவர்களை வாசுகியின் வால்பக்கம் பிடித்துக் கொள்ளச் செய்தார் என்று சொல்வதுண்டு.

                                                           

               வாசுகியின் தலைக்குக் கீழே உள்ள அசுரன் இராவணனைப் போல் பத்து தலையுள்ளவனாக இருக்கிறான். இது நமக்குப் புதிது. பாற்கடலைக் கடையும்போது இராவணன் இருந்ததாக நான் படித்ததில்லை. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் ஆயிரம் ஆண்டுகள் கடைந்ததாக வழிகாட்டி சொன்னார்.  

                பாற்கடலைக் கடையும்போது எத்தனையோ பொருட்கள் பாற்கடலில் இருந்து மேலே வரும். கடைசியில்தான் அமிர்தம் வரும். மகாலட்சுமியும் பாற்கடலுக்கு உள்ளிருந்து வருவாள். பெருமாள் அவளை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொள்வார். அப்புறம் ஆலம் (நஞ்சு) வரும். அதே சமயத்தில், உடலை இழுத்த வேதனையில் வாசுகிப் பாம்பும் தன்னுடைய வாயிலிருந்து நஞ்சைக் கக்கும். இந்த இரண்டும் சேர்ந்துதான் ஆலாலம் என்று பெயர் வந்தது. (ஆலம்+ஆலம்= ஆலாலம்…. ஆலகாலம் அல்ல)

                அது பரவினால் உலகம் அழிந்துவிடும் என்றுதான் சிவபெருமான் அதை எடுத்து அருந்திவிட, அம்மை அஞ்சி அப்பனின் கழுத்தைப் பிடிக்க, ஆலாலம் சிவனின் கண்டத்தில் தங்கி நீலகண்டனாவது.. ஆலால கண்டன் என்ற பெயர் காரணப் பெயர்.. இது பலரும் அறிந்த கதை.  

                இந்தச் சிற்பம் பேரழகோடு உள்ளது. நாங்கள் இதைப் பார்க்க அதிக நேரத்தைச் செலவிட்டோம். அசுரர்களின் உடல்மொழி அபாரம். அனைவருக்கும் ஒரேவிதமான அணிகலன். கிரீடம். தெறித்து விழுவதுபோன்ற முட்டைக் கண்கள். அசுரர்களோடு ஒப்பிடும்போது தேவர்கள் சோனியாக உள்ளனர். முகத்தில் அதிக பாவமில்லை. அசுரர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போல மிடுக்காகவும், தேவர்கள், அரசாங்க அலுவலக குமாஸ்தாக்கள் போல சுவாரசியமின்றியும் உள்ளனர். எப்படியும் ஜெயிக்கத்தானே போகிறோம் என்ற கெத்தோ என்னவோ?

                பாற்கடல் கடையும் சிற்பத்தை விட்டு நகர எங்களுக்கு மனமில்லை. வழிகாட்டிதான் “இன்னும் இதுமாதிரி நிறைய இருக்கு. நமக்கு நேரம் பத்தாது” என்று எங்களைப் பத்திக் கொண்டு போனார். ஒரு கட்டத்தில், கண்கள் சோர்வடைந்து விட்டன. எல்லாமே புடைப்புச் சிற்பம் என்பதால் எனக்கு ஒருவித ஆயாசம் வந்துவிட்டது. முப்பரிமாணச் சிற்பத்தைப் பார்க்கும்போது இன்னும் இன்னும் என்று கண்கள் விழுங்கிக் கொண்டே இருக்கும். இந்தச் சிற்பங்களை ஒருவகையில், கல் ஓவியங்கள் என்பேன். வண்ணமில்லை என்பதால் எல்லாம் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.

                கைகள் பட்டோ என்னவோ ஆள் உயரத்திலுள்ள சில சிற்பங்கள் பளபளவென்று இருக்கின்றன. அதில், சிற்பியின் கைவண்ணம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. கம்போடியர்கள் உடுத்தியுள்ள துணி முதற்கொண்டு சில இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. அதில் பலவிதமான வடிவங்களில் பூக்கள், புள்ளிகள், கோலங்கள். ஒரே ஓரிடத்தில் மட்டும் கம்போடிய எழுத்துகளைப் பார்த்தோம். மேலும் கீழுமாக இழுக்கப்பட்ட எழுத்துகள். வேறு எங்கும் எழுத்துகளைப் பார்க்க முடியவில்லை. என்ன காரணமோ கல்வெட்டுகள் இங்கு இல்லை. இன்னும் அதிக நேரம் செலவிட்டு நுணுக்கமாகப் பார்த்தால் எங்காவது தென்படக் கூடும். இவ்வளவு பெரிய பேராலயத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் குறைவு.

               

               மாமன்னன் இராசராசன் “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில்க் கல்லிலெ வெட்டுக எனத் திருவாய் மொழிஞ்சருள வெட்டிந” என்று வெட்டச் சொன்னதுபோல், இரண்டாம் சூரியவர்மனும் வெட்டச் சொல்லியிருப்பான்தானே ?..

                அடுத்தமுறை வரும்போது ஒரு வார அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு அங்கோர்வாட்டை அணுஅணுவாக ரசிக்க வேண்டுமெனப் பேசிக் கொண்டோம். வெயில் ஏறத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் காலியானது. முதல் சுற்றில், தெற்கிலும் கிழக்கிலும் உள்ள சிற்பங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இதுபோல் இன்னும் வடக்கு, கிழக்குப் பக்கச் சுவர்கள் உள்ளன. அதன் பிறகு இரண்டாம் சுற்றிலுள்ள நான்கு பக்க சுவர்ச் சிற்பங்கள் உள்ளன. இரண்டு சுற்றுகளையும் இணைக்கும் வழி சிலுவை வடிவில் இருந்தது. பக்கவாட்டில் தாழ்வாரங்கள் பிரிந்து செல்கின்றன. அவற்றின் மாடங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தன. மிக உயரத்தில் இருந்த வளைந்த கற்கூரைகளைப் பார்க்கப் பார்க்க ஆலயத்தின் பழமையைத் துல்லியமாக உணர முடிந்தது.

                தாழ்வாரங்களில் நாங்கள் நடக்க நடக்க, எங்களோடு யானைகளும் குதிரைகளும் மன்னர்களும் படைவீரர்களும் ராஜதானிகளும் தெய்வங்களும் அசுரர்களும் கூடவே வந்தனர். எல்லா இடங்களுமே மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதைப் பார்த்தோம். வௌவால் புழுக்கை நாற்றம் எங்குமே இல்லை. புறா எச்சமும் இல்லை. உலகப் புகழ்பெற்ற உன்னதமான ஆலய வளாகம் என்ற பெயருக்கு ஏற்ப இருந்தது அங்கோர்வாட்.

                கிழக்குப்புறத் தாழ்வாரத்தில், சுவாரசியமான வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைச் சந்தித்தோம்..

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – பாகம் 10

                திருப்பாவையில் எருமைச் சிறு வீடு என்று ஒரு வரி வரும். இரவில் கட்டியிருந்த மாட்டைக் காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக் கட்டை அவிழ்த்து விட்டதும் அது ஓடிப் போய் அருகே உள்ள புல்லைக் கரம்பத் தொடங்கும். பெரிய மேய்ச்சல் அப்புறம். முதலில், பசிக்கு இந்தப் புல்லை மாடுகள் மேயும் என்று எங்கோ படித்த நினைவு.

                அதுபோலத்தான் நாங்களும், அதிகாலையில் எருமைச் சிறு வீடு மேய்ந்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். அங்கோர் வாட்டை விரிவாகப் பார்க்கும் முன்னால், புலரும் பொழுதில் கொஞ்சமாக அதன் அழகைப் பருகிவிட்டோம். விடுதியில் எங்கள் அறைக்கு வெளியே மலைச் சுனைபோல் அடக்கமான அழகான நீச்சல்குளம் என்னை வா வா என்று அழைத்துக் கொண்டே இருந்தது.

                கடைசி வரை அதில் குளிக்க முடியவில்லை. பார்த்துப் பருகியதோடு சரி. ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கும்போதும் நானும் பரணியும் “இன்னைக்கு ராத்திரி இதுல விழுந்திரணும்” என்று சொல்லிக் கொண்டே இருந்தோமேயொழிய விழவே இல்லை. இப்போது நினைத்தாலும் வருத்தம்தான். சரி போகிறது.

                குளித்துப் பசியாறி மீண்டும் ஆலயத்துக்குத் திரும்பினோம். வெளியிலேயே ஆங்கிலம் பேசும் ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொண்டோம். ஆலயத்திற்கு வெளியிலுள்ள ஒரு மரத்தின்கீழ் அந்தக் கம்போடிய தட்சிணாமூர்த்தி எங்களுக்கு அரை மணி நேரத்துக்கு அடிப்படை விவரங்களை விளக்கினார். ஆனால், பெரிதாக எதுவும் மனத்தில் தங்கவில்லை.

                ஆலயத்தைச் சுற்றிப் பார்த்த அரை நாளில் அவரிடம் இருந்து நாங்கள் தெரிந்து கொண்டதைக் காட்டிலும் எங்களிடம் இருந்து அவர் தெரிந்து கொண்டதுதான் அதிகம். நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது ஒரு காரணம். எங்கள் ஐவருக்குமே கலை, புராணம், சிற்பம் ஆகியவற்றில் குறைந்தபட்ச அறிமுகம் இருந்தது அடுத்த காரணம்.

                எந்தவொரு சிற்பத்தைப் பார்த்ததும், அதை எங்களால் இந்துப் புராணக் கதைகளோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள முடிந்தது. பெயர்களும் பெரும்பாலும் ஒத்துப் போயின. கெமர் மொழியில் ஒலி வேறுபாடு காரணமாகச் சில பெயர்கள் மாறியிருந்தன. திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தால் அதிலிருந்து நமக்குப் பரிச்சயமான பாத்திரங்களின் பெயர்களை எடுத்துவிட முடியும்.

                அங்கோர் வாட் 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் கட்டப்பட்ட பேராலயம். இரண்டாம் சூரியவர்மன் என்னும் மன்னன்தான் இதைக் கட்டியிருக்கிறான். கட்டுமானப் பணிகள் சுமார் 30 ஆண்டுகள் நீடித்ததாகக் கம்போடிய பயணத்துறைக் குறிப்பு மதிப்பிடுகிறது. இது விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட பேராலயம்.

                வாட் என்றால் கெமர் மொழியில் ஆலயம் என்று பெயர். தாய்லந்திலும் அப்படியே. தாய்லந்து சென்றிருந்தபோது அங்கிருந்த ஆலயங்களெல்லாமே வாட் என்றுதான் முடிந்தன. சோப்ராயா என்னும் அகண்ட நதியின் கரையில் அழகான சுதை வேலைப்பாடுகளோடு திகழும் ஆலயத்தின் பெயர் அருண்வாட். அதாவது அருணன், சூரியனின் ஆலயம். வெறுமனே வாட் என்றிருந்த பெயரோடு பிற்காலத்தில் அங்கோர் என்னும் சொல் இணைந்து கொண்டது.

                வைணவர்களால் கைவிடப்பட்டுப் பின்னர் தேரவாத பௌத்தர்கள் இந்தக் கோயிலை எடுத்துக் கொண்டபோது அவ்வாறு நடந்திருக்க வேண்டும். இது அநேகமாக 16-ஆவது நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்பது ஊகம். கெமர் பேரரசின் தலைநகரம் 1432-இல் புனோம்பென்னுக்கு மாறிய பிறகு நடந்த மாற்றம் இது. அதன் பிறகு பௌத்த பிக்குகளே அங்கோர் வாட்டைப் பராமரித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் நீங்கள் பௌத்த பிக்குகளையே அங்கோர் வாட்டில் அதிகம் காணமுடியும்.

                பொதுவில், அங்கோர் வாட் ஆலயம் இரண்டாம் சூரியவர்மனின் ஈமச் சடங்கு ஆலயம்தான் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். ஆலயம் மேற்குப் பார்த்துக் கட்டப்பட்டிருப்பது அதற்கு ஒரு முக்கியக் காரணம். பொதுவாக இந்து ஆலயங்கள் கிழக்குப் பார்த்தே கட்டப்படும். சூரிய உதயத்தின்போது ராஜகோபுரத்தின் மீதும் விமானத்தின் மீதும் கதிர்கள் படுவதை எல்லாரும் கவனித்திருக்கலாம்.

                ஆனால், அங்கோர் வாட்டோ அஸ்தமன சூரியனை நோக்கி மேற்குப் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஆலயத்திற்குள் இருக்கும் புடைப்புச் சிற்பங்களும், அப்பிரதட்சணமாகச் சுற்றிவந்து அதாவது கடிகார எதிர்ச் சுற்றில்வந்து பார்ப்பது போல் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இது இறைவனுக்கான மங்கலக் கோயிலாக இருக்க முடியாது. அமங்கலக் காரியத்துக்கான ஆலயம் என்பது பலரின் வாதம்.

                ஆலயத்தின் நடுப் பகுதியிலுள்ள ஐந்து மேருக்களில் ஆகப் பெரியதான மகா மேருவுக்கு நேர் கீழே மாபெரும் சதுரக் குழாய் போன்ற துளையின் அடிப்பகுதியில் இரண்டு ஸ்படிகக் கற்களையும் இரண்டு தங்க இலைகளையும் 1934-இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். 

             அதன் மேல்பகுதியில்தான் சூரியவர்மன் நிறுவிய பெரிய விஷ்ணு சிலை நின்றிருக்க வேண்டும். இப்போது அந்த விஷ்ணு சிலை ஆலயத்தின் முன்பகுதியில் பார்வையாளர்கள் உள்ளே நுழையும் பகுதியில் நிற்கிறது. எப்படி அங்கே வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பௌத்தர்கள் கருவறை போன்ற பகுதியில் புத்தர் சிலைகளை நிறுவியபோது இந்த விஷ்ணுவை இறக்கிக் கீழே கொண்டுவந்து வைத்திருக்கலாம் என்கின்றனர் சிலர்.

                விஷ்ணு சிலையின் கையெல்லாம் உடைந்து பிற்காலத்தில் சிமெண்ட் பூசிச் சீராக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய பாதிப்பு இல்லை. புத்தரைப் போலவே விஷ்ணுவுக்கும் தாமரை மலர்களைச் சாற்றி வழிபட்டு வருகின்றனர். எட்டுக் கைகள். ஆக மேலே இருந்த இரண்டு கைகளிலும் சங்கும் சக்கரமும் இருந்ததற்கான தடயங்களைப் பார்க்க முடிந்தது. மற்ற ஆறு கைகளில் என்னென்ன படைக்கலங்கள் இருந்தன என்பது தெரியவில்லை. எட்டில் மூன்று கைகள் உடைக்கப்பட்டுச் சீர் செய்திருப்பதுபோல் தெரிகிறது. நிழற்படத்தைக் கணினியில் பெரிதாக்கிப் பார்க்கும்போதுதான் அதை உணரமுடிகிறது.

                விஷ்ணு சிலை 4 ஆள் உயரம் இருக்கும். அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். புத்தரைப் போலவே தாழ்செவிகள். அப்பட்டமான கெமர் முகம். தடித்த உதடுகள். அரைக்கண் மயங்கிய நிலையில் கீழ்நோக்கிக் காணும் விழிகள். கெமர் பாணியிலான மகுடம். உடலில் என்னென்ன அணிகலன்கள் இருந்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. முகம், வலத்தோள்பட்டை, கைகள் தவிர மற்ற எல்லாப் பாகங்களையும் அசிங்கமான மஞ்சள் வண்ண ஜிகினா துணியால் தாவணி போடுவது போல் போர்த்தி வைத்திருந்தனர்.

                பழமையான பஞ்சலோகச் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் ஆடை உடுத்தி இருப்பதைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக் கொண்டுவரும். என்ன ரசனை இது ? எல்லாச் சிற்பிகளும் அந்தந்தச் சிலைகளுக்குப் பொருத்தமான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளைச் சேர்த்தேதான் வடித்திருப்பார்கள். சிலைகளின் முழுமையான அழகை வெற்றுத் திருமேனியில்தான் நம்மால் கண்டு திளைக்க முடியும். நடராஜப் பெருமான், சிவகாமி, சோமாஸ்கந்தர், நர்த்தன கிருஷ்ணன், ஞானசம்பந்தன்-என ஒருவர் பாக்கியில்லை.

                அத்தனை மூர்த்தங்களுக்கும் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டி, அம்மனுக்கு அழகாக மடிசார் கட்டி முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறார்கள். முகத்திலும் பெரும்பகுதியை மலர் அலங்காரம் மூடிவிடும். பார்த்துப் பார்த்து வெதும்பத்தான் முடிகிறது. ஐக்கிய நாட்டு அமைப்பிலிருந்து ஓர் உத்தரவு வந்தால் தேவலாம். இறைத் திருமேனிகளுக்குச் செயற்கை ஆடை அணிவிக்கக் கூடாது என்று. நடக்கிற காரியம் இல்லைதான். ஆனாலும் மனம் ஆற மாட்டேனென்கிறது. செப்புத் திருமேனிதான் என்றில்லை. சில இடங்களில் புடைப்புச் சிற்பங்களுக்குக்கூட ஆடை கட்டி விடுகிறார்கள். சந்தனக் காப்பு செய்து வைக்கிறார்கள்.. கடவுளே.. அடித்துக் கொள்ள இரண்டு கைகள் போதா.. அங்கோர் வாட் விஷ்ணு சிலையை மேலும் விகாரப்படுத்தும் வகையில், ஒரு பெரிய பிளாஸ்டிக் மாலையைப் போட்டு வைத்திருக்கிறார்கள். விஷ்ணுவின் முகக் குறிப்பைப் பார்த்தால் “பாவிகளா இந்தக் கண்ணராவியை எல்லாம் எடுத்துப் போட்டுட்டு என்னை நிம்மதியா விடுங்களேண்டா” என்று கெஞ்சுவது போல்பட்டது எனக்கு.

                விஷ்ணு சிலை அகற்றப்பட்ட கருவறையை பௌத்தர்கள் திசைக்கு ஒன்றாக நான்காய்ப் பிரித்திருக்கிறார்கள். நடுவிலிருந்த சதுரத் துளையைக் கல்வைத்து நிரப்பிக் கட்டியுள்ளனர். உண்மையில் மேற்கு நோக்கிய விஷ்ணு சிலையோடு நான்கு பக்கங்களும் திறந்த கருவறையாக அது இருந்திருக்க வேண்டும். இப்போது நிலைச் சட்டத்தோடு சேர்த்து அடைக்கப்பட்டு நான்கு தனித்தனிக் கருவறையாகப் பிரிந்துவிட்டது.

                ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு விதமான புத்தர் சிலை. அவற்றில் சிலவற்றின் தலை வெட்டப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் நடந்த கொடூரம் இது. தலை வெட்டப்பட்ட புத்தர் சிலைகளைக் கம்போடியா முழுவதும் காணமுடியும். கம்போடிய புத்தர் சிலைகளுக்கு அனைத்துலகக் கலைப் பொருள் சேகரிப்பாளர்களிடம் கிராக்கி அதிகம்.

                மொத்தச் சிலையை அகற்றி எடுத்துச் செல்வது எளிதல்ல. அது மாபெரும் பணி. பாரந்தூக்கி இல்லாமல் எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே, கத்தியை வைத்து வெண்ணெய் வழிப்பது மாதிரி, இயந்திரத்தால் நறுவிசாகக் கழுத்தில் ஒரு நறுக் !.. புன்னகை உறைந்த புத்தர் தலை கையில் வந்துவிடும். சாக்கில் கட்டி எடுத்துப் போய் கிடைத்த விலைக்கு விற்றுவிடலாம். ஒரு காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இடம். யாரும் வரலாம். என்னமும் செய்யலாம்.

    நல்லவேளை தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு இன்னமும் இந்த கதி வரவில்லை. உடைந்துபின்னமான சிலைகளைத்தான் தமிழகக் கோயில்களில் பார்த்திருக்கிறேன். அதுவும் கைக்கெட்டும் தூரத்திலுள்ள புடைத்து வெளிவரும் பகுதிகள் மட்டுமே உடைந்திருக்கும். சிதம்பரம் கிழக்குக் கோபுரத்திலிருக்கும் அற்புதமான மகிஷாசுரமர்த்தினி சிலை அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அந்தப் பேரெழில் சிற்பத்தின் கைகள் உடைபட்டு நடுவே ஓட்டை தெரியும். பார்க்கப் பார்க்க வேதனையாக இருக்கும். இதையும் உடைக்க ஒரு மனிதனுக்கு மனம் இருந்திருக்கிறதே.. மாலிக்காபூர் படையெடுப்பின்போதுதான் பெரும்பாலான தமிழ்நாட்டுச் சிற்பங்கள் உடைக்கப்பட்டதாகப் படித்திருக்கிறேன்.

             யார் “கைங்கரியமோ” தெரியவில்லை. சில இடங்களில் மூக்குப் பகுதி உடைபட்டிருக்கும். கம்போடியா போலக் கழுத்திலிருந்து முகத்தை அறுத்து எடுக்கப்பட்ட சிலைகளைப் பார்த்ததில்லை. போர்ப் பயிற்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்ட சுவர்ப்பகுதிகளும் கம்போடியாவில் உண்டு. அண்மையில் மும்பையிலுள்ள எலிஃபண்டா கேவ்ஸ் சென்று வந்த ராஜூ சொன்னார். “போர்த்துக்கீசியர் ஆக்ரமிப்பின்போது அங்கிருந்த அழகான சிலைகளை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான இலக்குகளாகப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன்” என்று. மனசுக்குள் உடனே மாபாவிகளா ! என்று கூவிவிட்டேன்.

                எப்படித்தான் கையும் மனமும் வந்ததோ இந்தப் பொக்கிஷங்களைப் பாழ்படுத்த.. மாலிக்காபூர் வரவில்லையென்றாலும்கூடக் கம்போடிய விஷ்ணு தப்பவில்லை. ஏதோ இந்த மட்டுக்குமாவது உருவமென ஒன்று பார்க்கக் கிடைக்கிறதே.. அதுபோதும். இந்த மனநிறைவோடு ஆலயத்திற்குள் புகுந்தோம்.

    – பொன். மகாலிங்கம்

     

     

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com 

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – பாகம் 9

    உணவகத்தை விட்டு வெளியே வந்து, அமெரிக்கரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். அமெரிக்கருக்கு அமெரிக்காவில் மனைவியும் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்களாம். ஆண்டுக்குச் சில மாதங்கள் மட்டும் விடுப்பில் கம்போடியா வந்து இந்த ஊர் மனைவியோடு குடும்பம் நடத்தி விட்டுச் செல்கிறாராம். இது கம்போடியாவில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. கம்போடியாவில் மட்டுமல்ல, தாய்லந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது.

    இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் சென்றிருந்தபோதும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டோம். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேங்காக் சென்றிருந்தபோது, விமான நிலையத்திலேயே வெள்ளைக்காரர்கள் (பெரும்பாலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உள்ளூர்ப் பெண்களோடு அறிமுகமாகி ஊர் சுற்றுவதை சகஜமாகக் காண முடிந்தது. அந்த நாட்டுக்குத் தனியாக வருபவர்கள், உள்ளூரில் துணையைத் தேடிக் கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் அப்போது புரிந்து கொண்டேன். பெரும்பாலும் அப்படித்தான்.

    ஆனால், வெள்ளைக்காரக் கணவருக்காகவே இந்த நாடுகளில் காத்திருக்கும் பருவகால மனைவிகளும் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். புதிய இளம் மனைவிக்கான முழுச் செலவையும் வெளிநாட்டுக் கணவர் ஏற்றுக் கொள்கிறார். மிகப் பெரும்பாலோர் தரமான வீடும் வாங்கிக் கொடுத்து விடுவார்களாம்.

    இளம் மனைவிக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்துக்கே இந்த வெள்ளைக்கார முதிர் மாப்பிள்ளைகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்களாம். தாத்தா, பாட்டி உட்பட… இவ்வாறு வயதான வெள்ளைக்கார மாப்பிள்ளைக்கு வாழ்க்கப்படுவது குறித்து இளம்பெண்களுக்கு எந்த மனக்குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சியாகவே அதை ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.

    அந்த நாட்டு வறுமைச் சூழல் அவர்களை அதை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்க வேண்டும். இந்தக் கதை தெரிந்த பின் கண்ணில் தென்படும் பொருத்தமற்ற ஜோடிகள் பற்றிய எங்கள் மனப்போக்கு மாறியது. அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு. இதில் நாம் யார் அதுபற்றித் தீர்மானிக்க ?

    உணவகத்துக்கு அருகிலிருந்த ஒரு பெரிய பேரங்காடியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு விடுதிக்கு வந்து உடனே தூங்கி விட்டோம். நாளைக் காலையில், கருக்கலில் சென்று அங்கோர் வாட் ஆலயத்தைக் காணத் தீர்மானித்திருந்தோம். ஒரு நாள்தான் இருக்கிறது. முழுமையாகப் பார்த்துவிட முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம். அங்கோர் வாட்டுக்குப் பிறகு பாயோன் கோயில் பார்த்துவிட்டு மாலையே புனோம்பென் புறப்படுவதாகத் திட்டம்.

    அதிகாலையில் பல்விளக்கித் தயாராக இருந்தோம். குளிக்கவில்லை. புலரியில் ஆலயத்தைப் பார்த்துப் படங்கள் கொஞ்சம் எடுத்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து குளித்துக் கிளம்பிக் கோயிலை விஸ்தாரமாய்ப் பார்ப்பதாக ஏற்பாடு. டாண் எனக் காலை ஐந்து மணிக்கு ஓட்டுநர் ரா வந்துவிட்டார். பொழுது விடியும் நேரத்தில் எந்த ஊரும் அழகுதான்.

    எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாய் வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள். அங்கோர் வாட் ஆலய வளாகத்துக்குச் செல்ல சியாம் ரீப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நுழைவுச் சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு நாள் சுற்றிப் பார்க்க, இரண்டு நாள் பார்க்க, ஒரு வாரம், ஒரு மாதம், ஆறு மாதம் தங்கி ஆய்வு செய்ய எனத் தனித்தனியாகக் கட்டணம். நாங்கள் ஒருநாள் நுழைவுச் சீட்டு சூரியோதய வேளைக்குச் சேர்த்து வாங்கினோம். 20 அமெரிக்க டாலர் வழக்கம்போல்.

    நுழைவுச் சீட்டு ஒவ்வொருவராக, தனித்தனியேதான் எடுக்க வேண்டும். அங்கேயே உள்ள கேமராவை நம்மைப் பார்க்கச் சொல்லிப் படமெடுத்து அதை நுழைவுச் சீட்டில் பதித்து விடுகிறார்கள். ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. “கோளாறுக்காரப் பயபுள்ளைக”தான் என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூரில் கூட இந்தப் பழக்கமில்லை. பதியப்பட்ட படத்தைப் பார்த்து எனக்கே பயமாகிவிட்டது. குளிக்காமல் கொள்ளாமல் ஙே என்று முழித்துக் கொண்டிருந்தேன் படத்தில்.

    சியாம் ரீப்பில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆலய வளாகத்திற்கு நம்ம ஊர் ஆட்டோபோல சின்னச் சின்ன வாகனங்கள் அழைத்துச் செல்கின்றன. எங்களிடம் வேன் இருந்ததால் அதிலேயே சென்றோம். எனக்கு மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்கியது. கடவுளே ! நிஜமாகவே நான் அங்கோர் வாட்டைப் பார்க்கப் போகிறேனா ? இது நிஜம்தானா ? வேன் செல்லும் வேகத்தைத் தாண்டி என் ஆவல் பறந்தது.

    வாழ்நாள் கனவு ஒன்று இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது என்ற பதற்றம் என்னை நிலையழியச் செய்தது. நண்பர்களோடு அதிகம் பேசவில்லை. எனக்குள் மூழ்கிப் போனேன். எத்தனை ஆண்டுகள் நினைத்து நினைத்து ஏங்கிய இடம் ?

    சிங்கப்பூருக்கு வந்திருக்காவிட்டால் இங்கே என்னால் வந்திருக்க முடியுமா? அதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா? அதற்கான பொருளாதார வசதி இருந்திருக்குமா? நான் சிங்கப்பூர் வருவதற்குக் காரணமாக இருந்த ஆருயிர்த் தோழன் அசோகன், சம்பத், வீரமணி உள்ளிட்ட நண்பர்களை மனத்துக்குள் நினைத்துப் பார்த்து நன்றி சொன்னேன். அசோகன் இந்த பூமியிலேயே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் காசநோயால் காலமாகிவிட்டான். அசோகா நீ எங்காவது பக்கத்தில் இருக்கிறாயாடா ? இருந்தால் உன்னைத் தழுவிக் கொள்கிறேனடா..

    இதோ உன் தோழன் அங்கோர் வாட் பார்க்கப் போகிறான் ! காரைக்காலில் நீ எடுத்துக் கொடுத்த விசா மூலம் சிங்கப்பூர் வந்தவன், சிறுவயதிலிருந்து கனவு கண்ட இடத்தை நேரில் பார்க்கப் போகிறான். மானசீகமாக உன்னோடு இந்த இடத்தைப் பார்க்கப் போகிறேனடா..

    வெளியே இன்னும் விடிந்திருக்கவில்லை. ஆலயத்திற்கு எதிரே எங்களை இறக்கிவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் அதே இடத்துக்கு வரும்படி சொல்லிவிட்டு ரா போய்விட்டார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய், அகழியைக் கடப்பதற்காக உள்ள பாதையில் சென்றோம். நன்கு மழை பெய்து வெறித்திருந்ததால், பாசி படிந்த சுவர்கள் மழைநீரில் ஊறிப் பேரழகோடு திகழ்ந்தன. ஆலயங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

    ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிகள் வழக்கத்தை விடச் சற்றே உயரமான படிகள். வெளிச்சம் லேசாகத்தான் வரத் தொடங்கியிருந்தது என்றாலும், நன்கு வியர்த்தது.

    அகழியைக் கடக்குமிடத்திலிருந்து உள்ளே இருக்கும் ஆலய முகடுகள் தெரியவில்லை. முதலில் உள்ள மூன்று மொட்டைக் கோபுரங்கள்தான் தெரிந்தன. அதற்குப் பின்னால் வெகுதொலைவில் இருக்கின்றன ஐந்து மேருக்களும். அகழிப் பாதையின் இரண்டு பக்கத்திலும் நீண்ட வாலுடைய ஏழு தலை நாகங்களும் அவற்றின் முடிவில், கலிங்கப் பேரரசின் சின்னமான சிங்கமும் இருந்தன.

    பல இடங்களில் ஏழு தலை நாகங்களின் தலை உடைந்து அதை சிமெண்ட்டால் மாற்றிக் கட்டியிருந்ததைக் கண்டோம். நடைபாதைக் கற்களின்மீது ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடந்தது. முதல் படிக்கட்டை ஏறி மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் புலரத் தொடங்கியிருந்த நீலவானப் பின்னணியில் ஆலய முகடுகள் விளிம்பு ரூபமாய்த் தெரிந்தன. படிக்கட்டில் ஏறி கல்நிலைச் சட்டத்துக்குள் அந்த முகடுகளை ஓர் ஓவியம்போலப் பார்த்தபோது மெல்லிய இசை கேட்பது போலிருந்தது எனக்கு. தாஜ்மகாலைப் பார்த்த போதும் இப்படித்தான் உணர்ந்தேன்.

    மொட்டைக் கோபுரத் தளத்திலேயே நின்று சற்று நேரம் ஆலயத்தை ரசித்தோம். கேமராவில் படம் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமாக இருப்பது போலிருந்தது. ஆனால் உண்மையில் அவ்வளவாக வெளிச்சம் வரவில்லை. ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியிலும் ஏராளமான பனைமரங்கள் நின்றிருந்தன. ஐந்து மேருக்களும் அடங்கக்கூடிய படங்களில் முகடுகளின் இருபக்கங்களிலும், கேரளக் கோயில் திருவிழாக்களில் யானை மேல் அமர்ந்து பிடிப்பார்களே.. அலங்கார வேலைப்பாடு மிக்க இரண்டு பெரிய வட்டங்கள்.. அதுபோல் உயரமான இரண்டு பனைமரங்கள் நிற்பதைப் பார்க்கலாம்.

    நாங்கள் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயணிகள் சாரி சாரியாக உள்ளே செல்லத் தொடங்கினர். நாங்கள் நின்றிருந்த இடத்தைச் சுற்றிப் பெரிதாக சிற்ப வேலைப்பாடுகள் இல்லை. தூண்களில் அப்சரஸ் நடனமணிகள் பல நிலைகளில் இருந்தனர். சில படங்கள் எடுத்துவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினோம். மேரு நாங்கள் நெருங்க நெருங்க எங்களை விட்டு விலகிச் சென்று கொண்டே பெரிதாகத் தொடங்கியது.

    இணைப்புப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் இடிந்த இரண்டு மண்டபங்கள் இருந்தன. அவை முழுமையாக இருந்தால் கூட இவ்வளவு அழகும் அமானுஷ்யமும் அவற்றுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அவை அக்கால நூலகங்களாம். பின்னர் வந்த வழிகாட்டி சொன்னார். ஆலய வளாகத்துக்குள் நூலகத்துக்கும் இடமளித்த மன்னன் இரண்டாம் சூரியவர்மனுக்கு ஒரு ஜே !..

    இப்போது நன்கு விடிந்து விட்டிருந்தது. ஆலயம் மேற்குப் பார்த்தது என்பதால், சூரியக் கிரணங்கள் மேருக்களுக்குப் பின்னாலிருந்து எழும். மசமசவெனப் பரவிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தை அடைந்தது. மேருவை நோக்கிய பாதையின் இரண்டு புறங்களிலும் சின்னக் குளங்கள் உள்ளன. அவற்றில் இடப்பக்கமாக உள்ள குளத்தில் தண்ணீர் நிறையவே இருந்தது. அதன் கரையில்போய் நாங்கள் நின்று கொண்டோம்.

    ஆலயத்தின் ஐந்து முகடுகளும் சுற்றியிருந்த மதில் சுவரோடு சேர்ந்திருந்த மொட்டைக் கோபுரங்களோடு குளத்து நீரில் எதிரொளித்தன. ஆலயத்தையும் அதன் பிரதிபலிப்பையும் ஒருசேரக் காண்பது இனிமையாக இருந்தது. சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் இப்படித்தான் வடக்குக் கோபுரம் அழகாகப் பிரதிபலிக்கும். காணத் திகட்டாத காட்சி.

    கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் ஏறியது. அங்கே அந்த அனுபவத்தைச் சிதைப்பதற்கென்றே சிறு வியாபாரிகள் கூட்டமொன்று இருக்கிறது. காஃபி, தேநீர், நொறுக்குத் தீனி, காலை பசியாற என்று என்னென்னவோ விற்கிறார்கள். ஆனால் நம்மை வற்புறுத்தவில்லை வாங்கச் சொல்லி. அதுவரை பரவாயில்லை. இருந்தாலும் சளசளவெனப் பேசிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் அவர்கள் அலைவது அந்த இடத்தின் அமைதியைக் குலைப்பதாகவே பட்டது எனக்கு.

    எத்தனை ஆண்டுகளாக இந்த ஆலயம் நிற்கிறது? என்னென்ன அரசியல் மாற்றங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் இது மௌன சாட்சியாய்ப் பார்த்திருக்கும்? ஆலயத்தின் முன்புறத்திலிருந்து சூரியக் கிரணங்கள் விழுந்து கோபுரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் துலக்கம் பெறுவது ஒருவகை. ஆனால் இங்கோ ஒளி பின்னால் இருந்து எழுவது ஆலய விளிம்புகளை ஒளிரச் செய்து ஒரு வசீகரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

    தாஜ்மகாலில் அதன் நுணுக்கமான வேலைப்பாடும் எழிலும் நம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் இங்கே முதலில் கண்ணுக்குத் தெரிவது இதன் பிரமாண்டமும் ஒத்திசைவும்தான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் தூண்கள். ஆங்காங்கே கோபுரங்கள். எல்லாவற்றையும் சரடுபோல் இணைக்கும் சாளரங்கள். அவற்றை மூடிய கற்பாளங்கள். அங்கோர் குழும நினைவுச் சின்னங்களில் இதுவே தலையாயது. ஆகப் பெரியது. முழுமையாக இன்று கிடைக்கக் கூடியது.

    அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு அங்கு எடுத்த படங்களை, ஓவியரான நண்பர் பாஸ்கரிடம் காட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவிய ஞானமெல்லாம் கிடையாது.    

    பிக்காசோ ஓவியம் வந்திருக்கிறதே என்று பார்க்கப் போனேன். அப்போது பாஸ்கர் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கிருந்த ஓர் ஐரோப்பிய ஓவியத்தில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அது அழகாய் இருப்பதாக நான் சொன்னபோது பாஸ்கர் அந்த ஓவியரின் திறமையை உணரச் செய்யும் மற்ற அம்சங்களை எடுத்துக் காட்டினார். ஒவ்வொன்றையும் சமன்படுத்தும் வகையில், வண்ணச் சேர்க்கை ஆங்காங்கே தீட்டப்பட்டிருந்ததைச் சுட்டினார்.

    ஓர் ஓவியராக அவர் அந்தப் படைப்பைச் சிலாகித்தது அதன் சமநிலையை. அதேபோல், அங்கோர் வாட் ஆலயம் எல்லாக் கோணத்திலும் சமநிலைப்படுத்தப்பட்டிருந்தது. இடப்பக்கம் ஒன்றிருந்தால் உடனே வலப்பக்கமும் அதே போன்ற ஒன்று சமன்படுத்துகிறது. இது விரிந்து விரிந்து மிகப் பெரிய ஒத்திசைவை உண்டாக்குகிறது. இதன் பிரமாண்டம், பேரழகு எல்லாவற்றுக்கும் இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

    இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் உள்ள புகழ்பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத் தூண்களை நினைத்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற ஒத்திசைவு எப்போதுமே அழகுதான் கட்டடக் கலையில். வரிசை வரிசையாக நிற்கும் தூண்களுக்கு இடையே ஒருவரை நிற்க வைத்துப் படம் எடுத்தால் அதில் ஓர் அழகு கூடிவரும். அது இதனால்தான்.

    இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கண்களைத் திருப்பித் திருப்பி ஆசை தீர அங்கோர் வாட்டின் அழகை அள்ளிப் பருகினோம். இந்தக் காலை நேர இதமான சூழலை நினைவுக்குள் பொதிந்து வைக்கப் படமும் எடுத்துக் கொண்டோம். விடுதிக்குச் சென்று குளித்து, பசியாறித் திரும்புவோம் என்று புறப்பட்டோம். வழியில் அவ்வப்போது நின்று ஆலயத்தைத் திரும்பிப் பார்ப்போம். இன்னும் பல இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மதில்களுக்கு மேல், மொட்டைக் கோபுரங்களுக்கு மேல் என்று பிளாஸ்டிக் கூரையமைத்துப் பல நிபுணர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது இப்போதைக்கு முடியாத செயலாக இருக்க வேண்டும்.

    ஆங்காங்கே கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து அடையாளங்கண்டு உரிய இடத்தில் பொருத்த வேண்டும். எப்படி அந்தந்தக் கற்களுக்கு உரிய இடத்தைக் கண்டுபிடிப்பார்கள்? ஆச்சர்யம்தான். ஆனால், அவர்கள் அதற்கெனப் பயிற்சி எடுத்திருப்பார்களாக இருக்கும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை, இந்தியத் தொல்லியல் துறை இப்படித்தான் புதுப்பித்தது. ஒவ்வொரு கல்லையும் திசை, வரிசை, மேலிருந்து கீழ் எனக் கணக்கிட்டுப் பிரித்து உரிய முறையில் மீண்டும் அடுக்கியிருந்ததைக் கண்ணால் பார்த்தேன். இப்போதும் தாராசுரம் மதில் சுவரில் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.

     அதுபோல் அங்கோர் வாட் ஆலயம் 20, 30 ஆண்டுகள் கழித்து சீரமைப்புப் பணிகள் முடியும்போது புதுக் கோணத்தில் வடிவத்தில் இருக்கலாம். யார் கண்டது? மனித மூளையின் ஆற்றலுக்கு ஏது இணை?

     

    – பொன். மகாலிங்கம்

     

     

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com   

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 8

    உலகமே இருந்தது அந்த உணவகத்துக்குள். வெள்ளைக்கார முகங்கள் அதிகம் தென்பட்டன. இந்திய முகங்களைக் கிட்டத்தட்டக் காண முடியவில்லை எங்களைத் தவிர. வட இந்தியர் போன்ற தோற்றமுள்ள ஒரு சிலரைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் வட இந்தியர்கள்தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பார்த்த அனைவருமே ஏறத்தாழத் துணையுடன்தான் இருந்தனர். யாரும் தனியாக இல்லை. உணவும் அப்சரஸ் நடனமும் சேர்த்து 20 டாலர் கட்டணம்.

    பெரிய அரங்கம். அரங்கத்தின் வலக்கைப் பக்கம் விதவிதமான சைவ, அசைவ உணவு வகைகள். வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம். எது என்ன என்று ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி வைத்திருந்ததால், அச்சமின்றி எடுத்துத் தட்டில் வைக்க முடிந்தது. உட்கார்ந்து உணவுண்ண நீளமான பெஞ்சுகளும் சற்றே அகலமான மேசைகளும் போடப்பட்டிருந்தன. குளிரூட்டப்பட்ட அரங்கு என்பதாலோ என்னவோ உள்ளே புகைபிடிக்க அனுமதியில்லை. அப்பாடா நிம்மதி..

    உணவைச் சாப்பிட்டுக் கொண்டே நடனத்தை ரசிக்கலாம். எப்போதுமே எனக்கு இதில் உடன்பாடில்லை. கல்யாண வீட்டு நாயனக்காரர் கானடாவும் ஆபேரியுமாகப் பொழிகையில், அதுபற்றிய எந்த ஸ்மரணையுமின்றி நம்மாட்கள் அரட்டையடித்துக் கொண்டு இருப்பார்கள். என் நண்பர் திலகராஜ் திருமணத்தில் நாகசுரம் வாசித்தவர் பிரமாதமான வாத்தியக்காரர். 1990 என்று நினைவு. மாயவரத்தில், காவேரிக்கரை ஓரமாக இருந்த பழைய திருமண மண்டபம். அந்தக் காலத்து எட்டுக்கட்டு வீடு. திண்ணையுள்ள பெரிய வீட்டைக் கல்யாண மண்டபமாக்கி விட்டார்கள்.

    முற்றமுள்ள நடுக்கூடத்தில் திருமணம். வாசலுக்கு இடப்பக்கம் இரட்டை நாயனமும் மேளமும். ஆச்சா மரக் குழலில் இருந்து எழுந்து கல்யாண வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது இசை. சம்மணம் கொட்டி அமர்ந்து அமுதத்தை இசையாக்கி வழியவிட்டபடி இருந்தனர் வித்வான்கள். மிகப் பிரபலமான வித்வான்களெல்லாம் இல்லை. மாயவரத்துக்குப் பக்கத்திலுள்ள ஏதோ ஒரு ஊர் வித்வான்கள். தொடர்ந்து இசை கேட்டுப் பாடல்களை இனங்காணத் தொடங்கிவிட்ட வயது எனக்கு.

    ஒவ்வொரு பாடலாக அவர்கள் வாசிக்க வாசிக்க எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூடவே கள்ளத்தொண்டையில் பாடலைப் பாடிக் கொண்டு பின்தொடர்ந்தேன். தாளமெல்லாம் போடத் தெரியாது. ராகத்தையும் அடையாளங்காணத் தெரியாது. ஆனால் பாட்டு மட்டும் தெரியும். போதாதா என்ன? நான் இசையை ரசிக்கிறேன் என்பதை எப்படியோ உணர்ந்துவிட்ட நாயனக்காரர் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டே வாசித்தார். என்னைத் தவிர அன்று அந்த இசையை வேறு எவரும் ஒருபொருட்டாகவே எண்ணவில்லை.

    அன்று அவர்கள் வாசித்த அலைபாயுதே கண்ணா, ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே, வெஸ்டர்ன் நோட், கதனகுதூகலத் தில்லானா எல்லாமே உலகத்தரம். அன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் சம்பாவனை கொடுக்கப்பட்டிருந்தால் எதேஷ்டம். எனக்குச் சாப்பிடப் போகக்கூட அன்று மனமில்லை. கடைசியில் வித்வான்களிடம் போய் பாடல்களைச் சொல்லி நான் மிகவும் அனுபவித்துக் கேட்டதாகச் சொன்னபோது உண்மையான பாராட்டைக் கேட்ட பூரிப்பு அவர்கள் நால்வரின் முகத்திலும் படர்ந்தது. இன்றளவும் அந்த அனுபவம் எனக்கு நினைக்கும்போதெல்லாம் இனிமை தரும்.

    நாகசுர இசைக்கு ருசி சேர அது வாசிக்கப்படும் இடம் பிரதானமானது என்பது என் அனுபவம். கோயில் பிரகாரங்களில் யார் வாசித்தாலும் அது காருகுறிச்சி போல இனிமையாகத்தான் இருக்கும். கோயில்களில் உள்ள கட்டட அமைப்பு அப்படி. நீண்ட பிரகாரங்களில் எதிரொலித்து வரும் ஓசை நம்மை மயக்கிவிடும். மிகச் சிறிய மூடிய அறைக்குள் நாகசுரம் கேட்டால் காது கிழிந்துவிடும். வெளிப்புற ஓசையற்ற திறந்தவெளி அரங்குகள் கச்சேரிக்குப் பொருத்தம்தான். நல்ல ஒலிபெருக்கி அமைந்தால்!

    இசையால் என்னை நெகிழ வைத்த இடங்களில் சிதம்பரம் சபாநாயகர் ஆலய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மேடை முக்கியமானது. 1992 அல்லது 93. திருவிழா ஜெய்சங்கரும் ஹரித்வாரமங்கலம் பழனிவேலும் இணைந்து நாதமும் நாட்டியமும் என்ற பெயரில் ஒரு பெண்ணின் நடனத்திற்கு வாசித்தனர். அன்று அது ஒரு பெரிய பேச்சாக இருந்தது. அன்றுதான் நாட்டியாஞ்சலி தொடங்கிய முதல்நாள் என்று நினைக்கிறேன். சிவராத்திரியன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கும் நாட்டியாஞ்சலி.

    தொடக்கத்தில் மூன்று நாட்களாக இருந்தது பின்னர் எல்லாருக்கும் வாய்ப்புத் தர வேண்டுமென்ற நோக்கில் ஐந்து நாட்களாக விரிவுபடுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து சீவாளியைத் துடைத்து பாரி நாயனத்தைப் பைக்குள் போடப் போய்விட்டார் ஜெய்சங்கர். பின்னிரவு 2 மணியிருக்கும். நடனத்திலும் இசையிலும் உண்மையான அக்கறையுள்ள கூட்டம் மட்டும் எஞ்சியிருந்தது. பிப்ரவரி என்ற போதும் இலேசான பனி இருந்தது. தலைக்குக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு நடனம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

    மேடைக்குச் சற்றுத் தொலைவில் இருந்து ஒரு பெரியவர் எழுந்தார். ஜெய்சங்கர் ! நடராஜாவுக்கு ஒரு மல்லாரி வாசிங்கோ ! என்றார் இரண்டு கையைத் தூக்கி.. வெற்றிலை போடும் பழக்கமுள்ளவராக இருக்க வேண்டும். வெற்றிலையை வாயில் அதக்கிக் கொண்டு வேண்டுகோள் விடுத்தது போல் தோன்றியது எனக்கு. பின்னிரவு நேரமென்பதால் அவர் சொன்னது மேடைக்குத் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே ஹரித்வாரமங்கலம் பழனிவேலைப் பார்த்தார் ஜெய்சங்கர். அவர் உற்சாகமாகத் தலையை ஆட்டித் தவிலில் கழியால் ரெண்டு போடு போட்டார். அவ்வளவுதான்..

    மீண்டும் சீவாளியைப் பொருத்தி பீ பீ என்று ஊதிப் பார்த்துவிட்டு ஆரம்பித்து விட்டார் ஜெய்சங்கர். அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு நான் கேட்ட மல்லாரி என் வாழ்நாளில் மறக்காது. அந்த ஆலயச் சூழல், கலைஞர்களின் அற்புத ஈடுபாடு, பக்தி, மெய்மறந்த ரசிகர்கள். பின்னிரவுக்கே உரிய குளுமை, அமைதி இன்னும் என்னென்னவோ சேர்ந்து அந்த இரவை மறக்க முடியாத இரவாக்கி விட்டன. மல்லாரியைக் கேட்டு ஜிங்கு ஜிங்கென்று நடராஜர் சித்சபையை விட்டு அம்மையுடன் எழுந்தோடி வந்துவிடப் போகிறார் என்றுதான் நினைத்தேன் அன்று. மோட்சம்தான் அன்று அதைக் கேட்டவர்களுக்கு.

    அப்போதிலிருந்து எங்கே மல்லாரி கேட்டாலும் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். தஞ்சாவூர் மாவட்டத் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வரும்போது தவில்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள் என்று என்னுடைய நண்பர் குணசீலனின் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். திருவாளப்புத்தூர், இஞ்சிக்குடி, வலங்கைமான் இந்த ஊர் நாயனக் குழுக்கள் மிகப் பிரபலமாக இருந்த காலமாம்.

    மிகச் சிறப்பாக வாசிக்கும் தவில் வித்வானிடம் எதிராளி தவில் வாசிக்கும் கழியைக் கொடுத்துத் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவாராம். “கழியைக் கொடுத்துட்டான் அவன்” என்று அதை நினைவுகூரும்போதே அந்த இடத்துக்கும் நாளுக்கும் சென்று விடுவார் குணா அப்பா. இது நான் பார்த்ததில்லை. குணா அப்பா பலமுறை சொல்லக் கேட்ட தகவல். அந்தத் தலைமுறை எங்களை விடக் கொடுத்து வைத்தது. எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் நேரடியான இசையைக் கேட்டு வளர்ந்த பாக்கியவான்கள்.

    இன்றளவும் நாகசுரமும் வீணையும் என் மனங்கவர்ந்த வாத்தியங்கள். தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்காவுக்கு வெளியில்தான் வாழ்க்கையில் முதன்முதலாகப் பலாமரத்தில் வீணைக்குடம் செய்வதைப் பார்த்தேன். அப்புறம் என் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்த இளைய மாணவனின் அப்பா வீணை செய்பவர் எனக் கேள்விப்பட்டுத் தஞ்சாவூரில் அவர்கள் வீட்டுக்குப் போய் குடம், பிருகடை என ஒவ்வொன்றாக வீணை உருவாகும் அழகைப் பக்கத்தில் இருந்து ரசித்திருக்கிறேன். பழங்காலத்தில், நிஜமான யானைத் தந்தத்தை வீணையின் மேல்புறத்தில் பதித்து அழகுபடுத்துவார்களாம். இப்போது தந்தம் பதிப்பதில்லையாம்.

    அதேபோல், உலகிலேயே நாகசுரம் உற்பத்தி செய்யப்படுவது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நரசிங்கன்பேட்டையில் மட்டும்தான் என்பது எனக்கு ஆச்சர்யமான தகவல். இலங்கையிலும் நாகசுரம் செய்வதுண்டு என்று ஒருவர் கூறியிருந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்னால், வானொலி நேர்காணலுக்காக அந்த ஊருக்குப் போய் நாகசுரம் தயாரிப்பவர்களைச் சந்தித்திருக்கிறேன். “அட ஏன் சார் ? நாகசுரம் ஆச்சா மரத்துலதான் செய்ய முடியும். இப்ப எங்க கிடைக்குது ஆச்சா மரம் ? எல்லா மரத்தையும் வெட்டிட்டாங்க. எங்கயாவது பழைய வீடு பிரிக்கிறதாத் தகவல் கிடைச்சா அங்க போயித் தேடுவோம். பழைய வீட்டு உத்தரம் பெரும்பாலும் ஆச்சா மரத்தில செஞ்சு போட்ருப்பாங்க. அதை விலை கொடுத்து வாங்கிட்டு வந்து அதுல இருந்துதான் இப்ப நாகசுரம் தயாரிச்சிட்டு இருக்கோம். வருங்காலத்துல அதுவும் கிடைக்குமோ என்னமோ தெரியலை. என்ன செய்யப் போறோம்னு புரியலை !” என்றபோது நான் அதிர்ந்து போனேன்.

    அப்படியென்றால் நாகசுரத்தின் எதிர்காலம் ? நாகசுரத்தில் மூன்று வகை என்று ஷேக் சின்ன மௌலானா ஒருமுறை விளக்கியிருந்தார். பாரி, திமிறி, முகவீணை. நாம் பொதுவாகப் பார்ப்பது பாரி நாயனம். அதாவது பெரிய நாயனம். திமிறி அதில் பாதி. முகவீணை சின்னது. முற்றமுழுக்க யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட முகவீணை கூடப் புழக்கத்தில் இருந்ததாகப் படித்திருக்கிறேன்.

    சரி. எங்கோ ஆரம்பித்தது எங்கோ இழுத்துக் கொண்டு போய்விட்டது. மொச்சு மொச்சென்று கண்டதைச் சாப்பிட்டுக் கொண்டு நடனமோ இசையோ என்னால் ரசிக்க முடியாது சாமி. நாட்டியம் தொடங்குவதற்குள் சாப்பிட்டு முடித்து விடுவோம் என்று கிடைத்ததை அள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு ஐவரும் சேர்ந்து அமர்ந்தோம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். கட்டுப்பாடு ஏதுமில்லை.

    ஆனாலும் பெரிதாகச் சாப்பிடுமளவுக்கு அங்கிருந்த பண்டங்கள் எங்களைக் கவரவில்லை. காய்கறி சூப்பும், நறுக்கிய பழங்களும் வேண்டிய அளவு சாப்பிட்டோம். கடைசிச் சுற்றில் இருந்தபோது கிய்யா முய்யா என்று இலேசாக முனகும் சத்தம் கேட்டது மேடையிலிருந்து. மூக்காலேயே ஒரு பெண்குரல் ஆலாபனை செய்யத் தொடங்கியது.

    எல்லாரது கவனமும் மேடையில் குவிந்தது. மெதுவாக நடந்து ஒரு நடனமணி முன்னால் வந்தார். ஒயிலாக என்று ஒரு வார்த்தை சொல்வோமே. அந்த வார்த்தைக்கு அர்த்தம்போல மேடையில் வழுக்கியவாறு வந்தார். நம்ம ஊர் ஜலதரங்கம் போன்ற ஓசை வரும் வாத்தியமொன்று மேடையில் இருந்தது. குமிழோடு கூடிய பத்துப் பதினைந்து வெண்கலச் செம்புகளைக் கவிழ்த்துப் போட்டு அதன்மேல் மரச் சுத்தியலால் அடிப்பது போன்ற தோற்றம். பக்கத்தில் துந்தனா மாதிரி ஒரு நரம்பு வாத்தியக் கருவி. கம்போடியப் பாரம்பரிய உடையில் பாடகி.

    மெதுவாக ஆரம்பித்துப் பாடத் தொடங்கினார். சத்தியமாக ஒரு வார்த்தை புரியவில்லை. கெமர் பாரம்பரிய செவ்வியல் நடனத்திற்கு அப்சரஸ் நடனம் என்று பெயர். அதாவது தேவலோக மங்கையர் நடனம். சும்மா சொல்லக் கூடாது அந்தப் பெண்களும் அப்படித்தான் இருந்தார்கள். அங்கோர் ஆலயங்களில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களில் உள்ளது மாதிரியே ஆடை அணிகலன்கள். தலை அலங்காரம் எல்லாம் அச்சு அசல் சிலையைப் போலவே. காதுகளின் ஓரங்களில் எருக்கம்பூவைக் குப்பறப் போட்டுக் கோத்துத் தொங்கவிட்டிருந்தார்கள்.

    எல்லாம் பிளாஸ்டிக் மாலைகள்தான். எதுவும் மணமுள்ள உண்மையான மலர்கள் இல்லை. தலையை விரித்துப் போட்டு ஆங்காங்கே சந்தனமுல்லை மலர்கள் போன்ற கவ்விகளால் கட்டியிருந்தனர். கிரீடம் மாதிரி தலையில் அணிந்திருந்த அலங்காரம் அழகின் உச்சமெனலாம். இந்திய மண்ணில் இதுவரை கண்டிராத புதுவகை அலங்காரம். பார்த்ததும் பிரமிப்புதான் வந்தது. எப்போதுமே முன்னோக்கி வளைந்தது போல உடலை வைத்துக் கொண்டு கை விரல்களையும் பின்னால் வளைத்தே வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

    ஹ்ம்ம்ம.. ஆடுகிறார்கள் என்றால் அது சரியாக இருக்காது. அசைகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். பரதம், ஒடிசி அளவுக்கு ஆண்டாண்டு காலப் பயிற்சி தேவைப்படுவது போலத் தெரியவில்லை. சில மாதப் பயிற்சியால் உடம்பில் நளினமுள்ள யாரும் ஆடிவிடக் கூடியதாகவே என் கண்ணுக்கு அப்ரசஸ் நடனம் தென்பட்டது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, கெமர் சாம்ராஜ்யத்தில் உருவாகிச் செம்மைப்பட்ட நடனம் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்து மறைந்து போய்விட்டதாம். இப்போது ஆடப்படும் இந்த செவ்வியல் நடனம், 1940-களில் அப்போதைய கம்போடிய ராணியும் அவரது மகளும் உருவாக்கி வகுத்த நடனமாம். நம்மைப் போலவே ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் மட்டும் ஆடப்பட்ட அப்சரஸ் நடனத்தை அவர்தான் பொது அரங்குக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

    முகபாவங்கள் அதிகமில்லை. எல்லாமே பெரும்பாலும் நாட்டிய நாடகங்கள்தான் என்கின்றனர். இராமாயணக் கதைகளை நடிப்பார்கள் என்றும் சொன்னார்கள். நம் பரதத்தைப் போல் சிக்கலான அடவுகள், முத்திரைகள் எதுவும் இல்லை. எளிமையான உடற்பயிற்சியொன்றை எல்லாரும் சேர்ந்து ஒயிலாக ஒத்திசைந்து செய்வதுபோல் பட்டது எனக்கு. முதலில் ஒரு நடனமணி வந்த சற்று நேரத்தில் மேடையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட பத்துப் பேர் வந்து இணைந்து கொண்டனர்.

    மணிக்கட்டுக்கு மேல் கையை வளைத்து வளைத்து ஒரே மாதிரி சாய்ந்து, அமர்ந்து, ஒசிந்து, திரும்பி, அசைந்து ஆடினர். கூட்டம் கிறுகிறுத்துப் போய்க் கிடந்தது. படக் கருவிகளின் மின்னொளி மின்னிக் கொண்டே இருந்தது.

    நாங்கள் உணவு மேசையை விட்டு எழுந்து வந்து மேடைக்கு அருகே நின்று கொண்டோம். மிக அருகில் பார்க்கும்போது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது நடனம். பரதம், கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, கூச்சுப்படி போன்ற இந்திய நடன வகைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஆழ்ந்து ரசிக்க வேண்டுமானால் அதுபற்றிய குறைந்தபட்ச ஞானம் இருப்பது நல்லது.

    ஆனால் அப்சரஸ் நடனம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த அறிமுகமும் இன்றி ரசிக்கத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இக்காலத்தில். அதை வெள்ளைக்காரர்களிடம் என்னால் கண்கூடாகக் காண முடிந்தது. பரதநாட்டியத்தைப் பார்த்து எந்த வெள்ளைக்காரனும் இவ்வளவு ஆஹாஹாரம் எழுப்பி நான் பார்த்ததில்லை. நடனமணிகள் கையில் பூங்கொத்து போன்ற ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் புஷ்பாஞ்சலி மாதிரியொன்றைச் செய்து காட்டினார்கள்.

    இதுக்கே இப்படின்னா நம்ம ஊர் அலர்மேல் வள்ளி, ரேவதி ராமச்சந்திரன், பத்மா, சுதாராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வரன், ருக்மணி விஜயகுமார் போன்ற நிஜமான கலைஞர்கள் ஆடிப் பார்த்தால் இவர்களெல்லாம் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் ? “இப்ப என்ன ஆடிட்டாங்கன்னு வெள்ளைக்காரனுவோ இப்படிக் கத்துறானுவோ?” என்று எனக்குள் அசரீரி கேட்டது.

    ஆனால், என்னமோ செய்தது அப்சரஸ் நடனம். என்னால் நடனத்தில் ஒன்ற முடியவில்லை. ஏனென்று இன்றுவரை தெரியவில்லை. படம் எடுப்பதில்தான் என் கவனம் இருந்தது. நிழற்பட நிபுணர்களுக்குச் சரியான தீனி.

    மேடையின் பின்புலம் கம்போடிய ஆலயமொன்றைப் பிளந்து மரமொன்றின் வேர்கள் இறங்கும் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தது. பாயோன் கோயிலின் அடையாள முகம் நடுநாயகமாக அமைந்திருந்தது. அதன் தடித்த உதடுகள் உணர்வின்றி உறைந்திருந்தன. அந்த நடனத்திற்கு இந்த மேடை அமைப்பு மிக முக்கியமான ஆதாரம். சிறந்த ஒலி, ஒளி அமைப்பும் அந்த அனுபவத்தை இனிமையாக்கியது.

    மொத்தமே அரை மணி நேரத்திற்குள் ஆட்டம் முடிந்து விட்டது. வந்திருந்த பெரும்பாலோர் மேடயேறி நடனமணிகளோடு படம் எடுத்துக் கொண்டனர். நாங்களும் எடுத்துக் கொண்டோம். அந்தப் பெண்கள் அதிகம் கூச்சப்படவில்லை. இந்தக் கூட்டமும் படமும் அவர்களுக்குத் தினமும் பழகி விட்டிருந்தது.

    ஆட்டம் முடிந்து வெளியே வரும்போது நவீனுக்கு அறிமுகமான ஒருவரை நாங்கள் சந்தித்தோம். அவர் ஓர் அமெரிக்கர். வயது 60களில் இருக்கும். அவர் கூடவே ஓர் இளம்பெண். கம்போடியப் பெண். அவருக்கு வயது 30 இருந்தால் அதிகம். அமெரிக்கரின் கம்போடிய மனைவி. இவ்வளவு வயது வித்தியாசமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். பிறகுதான் ஒரு கதை தெரியவந்தது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் காத்திருக்கலாமா ?

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com