Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வைகாசி விசாகம் பற்றிய புராண கதை

    பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன.

    அதனைக் கண்ட முனிவர், “நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று கட்டளையிட்டார். தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் ‘மீன்களாக மாறக்கடவது’ என்று சாபமிட்டார்.

    அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

    ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது “நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.

    இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான். இத்தகைய சிறப்பு வைகாசி விசாக நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.

  • வைகாசி விசாக விரதம் இருப்பது எப்படி?

    வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

  • குழந்தை வரம் அருளும் வைகாசி விசாகம் வழிபாடு

    ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் ஆலயம், கந்த கோட்டம் முருகன் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

  • சபரிமலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தின விழா நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசித்தனர். தொடர்ந்து உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெற்றன. இரவில் பிரதிஷ்டை தின பூஜைகள் நிறைவு பெற்றன.

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

  • 16 கரங்களுடன் அருள்புரியும் நரசிம்மர்

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர், 16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார். சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.

    ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.

    நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.

    சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.

    இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.

    ஒரு ஆலயத்திலுள்ள சுவாமிக்கு எந்தளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது.

    இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.

  • கோபம் நீங்கி சாந்தம் பெற மகேஸ்வரி மந்திரம்

    வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள்.

    ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.

  • நெல்லையப்பர் கோயிலில் 27 இல் உழவாரப் பணி

    திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் மே 27 ஆம் தேரி உழவாரப்பணி நடைபெறுகிறது.

    ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நெல்லையப்பர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்று வருகிறது. அமைப்பின் சார்பில் 227ஆவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் ஸ்ரீஆறுமுகநயினார் சன்னதியில் இருந்து தொடங்கப்படுகிறது.

    அமைப்பின் சார்பில் அன்றைய தினம் திருநெல்வேலி நகரத்திலுள்ள அருள்மிகு கரிய மாணிக்கப்பெருமாள் கோயில், அருள்மிகு தொண்டர்கள் நயினார் கோயில், சம்பந்தர் தெருவிலுள்ள அருள்மிகு திருஞானசம்பந்தர் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.

  • திருப்பதிக்கு ஆதாருடன் சென்றால் தரிசனம் ஈசி

    கோடை விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. 

     

    அதேபோல 300 ரூபாய் தரிசனத்திற்கும், நடைபாதையாக வருபவர்களும் 4 மணி நேரம் காத்து இருந்து தரிசனம் செய்கின்றனர். எனவே விரைவாக தரிசனம் செய்ய ஆதார் எண்ணை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது.

     

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதா தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    நேரம் ஒதுக்கீடு செய்து அன்றே சாமி தரிசனம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

    சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் 20,000 டிக்கெட்டுகளும், புதன், வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 17 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • நத்தம் பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரிலுள்ள பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா 5 நாட்கள் நடந்தது.
    இதையொட்டி கடந்த 14ம் தேதி கோவிலில் கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. 15ம் தேதி காலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நத்தம் சந்தனக் கருப்பு கோவிலிலிருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. 3ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது.4ம் நாள் அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், சந்தனகுடம் போன்றவைகளை நேர்த்திக்கடனாக எடுத்து கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்றிரவு அம்மன் மின் ரதத்தில் நகர் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். மறுநாள் காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அரண்மனை பொங்கல், மாவிளக்கு வழிபாட்டுடன் அசோக் நகர் வீதிகளில் வலம் வந்து அம்மன் கோவிலை வந்தடைந்தது.
    இதற்கான ஏற்பாடுகளை அசோக் நகர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

  • பிரதோஷ விரதம் இருப்பது எப்படி?

    பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது.பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

    நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம். இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும்,குழந்தை பேறு கிடைக்கும்.சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது.பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

    நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம்.

    இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும், குழந்தை பேறு கிடைக்கும். சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.