Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நைவேத்தியம்

    அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

    இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.

    ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

  • ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உருவான சிறப்பை எடுத்துக் காட்டும் விதமாக ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, முதல் பிரகாரத்தில் உள்ள ராமநாதசுவாமி சன்னதியில் இருந்து சிவலிங்கத்தை அனுமன் வேடமணிந்தவர் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • ஆண்டுக்கு 3 முறை மட்டும் நடைபெறும் அதிசய வழிபாடு!

    திருச்சி-கல்லணை ரோடு சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

    கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் சென்று கொண்டிருக்கும் போது சர்க்கார்பாளையத்தில் சற்று நேரம் இளைப்பாறியதாகவும், அப்போது அவரது கனவில் இறைவன் தோன்றி தமக்கு கோயில் அமைக்க கூறியதாகவும், அதனை தொடர்ந்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோயில் கட்டியதாகவும், பின்னர் கல்லணை கட்டப்பட்டதாகவும் வரலாறு.

    இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோயிலின் சார்பு கோயிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது.

    வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ம்தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாகபடும்.

    இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

    3 நாட்கள் சூரியோதயத்தின் போது வழிபாடு நடைபெறுவதால் ஆலயத்தில் தங்கி வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். 

  • ஏழுமலையான் கோயிலில் கொலுவு தர்பார்

    ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக உள்ள “கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி” விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.

    ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.

    அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

  • சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம்

    சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், நேற்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசனம் தொடங்கியது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது.

    இதைத் தொடர்ந்து, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி சுவாமி திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 3.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஸ்ரீநடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தபடியே சித்சபை பிரவேசமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, திருநாளைப்போவார் என்கிற ஸ்ரீ நந்தனார் பட ஊர்வலம் நடந்தது. நந்தனார் கல்விக்கழகத்தினர், நந்தனார் மட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • சிவலிங்கத்தின் சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய கோயில் !!

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது ரத சப்தமி அன்று சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் உள்ள திருத்தலத்தின் புராணப் பெயர் திருவோத்தூர் என்பதாகும். இத் தலத்தில் தேவர்களுக்கு ஈசன் வேதங்களை உபதேசம் செய்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. திருவோத்தூர் என்பது தற்போது திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.

    பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு உலகை காத்தருளும் சிவபெருமானை அழைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் பார்வதிதேவி வருத்தம் கொண்டாள். தன் கணவனை அழைக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய அவர் தட்சனிடம் சென்றான். ஆனால் பார்வதி தேவி அங்கு செல்வதற்கு சிவபெருமான் சம்மதிக்கவில்லை.

    இருந்தாலும் அவரது சொல்லை மீறி பார்வதிதேவி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அன்னைக்கு அவமரியாதை ஏற்பட்டது. கணவனின் சொல்லை மீறிச் சென்று அவமானத்தை சந்தித்ததற்காக பாவம் நீங்க, பார்வதிதேவி இத்தலத்தில் வந்து தங்கி இறைவனை நினைத்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.

    தேவர்களுக்கு வேதத்தை இறைவன் ஓதிவித்தான். சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு.

    இந்த இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்க வடிவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் மீது தினமும் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இருப்பினும், ரத சப்தமி அன்று இறைவன் மீது சூரியக் கதிர் படுவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

    இறைவியின் திருநாமம் இளமுலையம்பிகை என்பதாகும். அன்னைக்கு பாலகுஜாம்பிகை என்ற பெயரும் உள்ளது. ஆலயத்தில் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசினம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது.

    சிவபெருமானைப் போற்றி பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240–வது தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருண கிரிநாதர் பாடியுள்ளார்.

    இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தில் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த ஊர் ‘செய்யாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. இத்தல விநாயகர் ‘நர்த்தன விநாயகர்’ என்றும், முருகப்பெருமான் ‘சண்முகர்’ என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் 9 வாசல்களைக் கடந்து சென்றால்தான் மூலவரை தரிசிக்க முடியும். பஞ்ச பூதத் தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னிதிகள் இங்கு இருக்கின்றன. எனவே இங்கு பஞ்சபூத லிங்கங்களையும் தரிசிக்கலாம். ஒரே இடத்தில் நின்றபடி ஆலயத்தின் 8 கோபுரங்களை தரிசிக்க முடியும்.

    இந்த ஆலயத்தில் தை மாதம் 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு அடுத்த நாள் கொடியேற்றம் செய்யப்படும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். இது தவிர ஆடி மாதத்தில் லட்ச தீபம், பங்குனி உத்திரம், மாசி மகம், சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், தலமரமான பனை மரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    பொதுவாக அனைத்து சிவாலயங் களிலும் நந்தியானது, இறைவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள நந்தி வாசலை நோக்கியபடி அமைந்திருக்கிறது. இதற்கு ஒரு கதையும் கூறப்படுகிறது. அதாவது இத்தல ஈசன், தேவர்களுக்கு வேதம் ஓதிக் கொண்டிருந்தார். அப்போது பாடம் சொல்லிக் கொடுக்கும்போது இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நந்தியை இறைவன் பணித்தார். அதன்காரணமாகவே நந்தி, ஆலய வாசலை நோக்கியபடி இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தவிர இந்தப் பகுதியை ஆண்ட தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரிய தயக்கம் காட்டி, இத்தல இறைவனை வேண்டினான். இதையடுத்து ஈசன் நந்தியை வாசலை நோக்கி காவல் காக்கும்படி சொன்னதால், நந்தி வாசலை நோக்கியபடி இருப்பதாகவும் இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    வேதபுரீஸ்வரர் ஆலயம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட, அதனால் கோவில் சுவர்கள் பாழாகி வந்தன. இதனால் வருத்தம் கொண்ட சிவனடியார் ஒருவர், ஆற்றின் கரையை உயர்த்தி மண் கரைந்து போகாமல் தடுக்க பனங்கொட்டைகளை நட்டு பனை மரங்களை வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பனை மரங்கள் அனைத்துமே ஆண் பனையாக இருந்தன. இதைப் பார்த்து சிலர், காய்க்காத ஆண் பனையை வைத்துக் கொண்டு என்ன செய்ய? என்று ஏளனம் செய்தனர்.

    ஒரு முறை இந்தப் பகுதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம், தன்னுடைய வருத்தத்தை சிவனடியார் கூறினார். இதையடுத்து சம்பந்தர் இத்தல இறைவனின் மீதும், ஆண் பனை பெண் பனையாக மாற வேண்டியும் 11 பாசுரங்களை பாடினார். இதில் ஆண் பனை மரங்கள் அனைத்தும் பெண் பனைமரங்களாக மாறி காய்த்துக் குலுங்கின.

    இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது பிற மதத்தைச் சேர்ந்த சிலர், வேள்வி ஒன்றை நடத்தி சம்பந்தர் மீது கொடிய பாம்புகளை ஏவிவிட்டனர். சம்பந்தர் இத்தல ஈசனை நினைத்து வேண்டினார். உடனே சிவபெருமான், பாம்பாட்டியாக வந்து அந்த பாம்புகளை பிடித்துக் கொண்டு மறைந்துவிட்டார். 11 சர்ப்ப தலைகளுடன் இந்த நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகநாத லிங்கத்தை சனிக் கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோ‌ஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

  • திருமலை ஏழுமலையானுக்கு இரண்டு பிரம்மோற்சவம்

    திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடத்தப்பட உள்ளது.

    உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை, 2 பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஐதீகம். கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அனைத்து துறை தலைமை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாச ராஜு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது. கருடசேவை செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கருட சேவை 17ஆம் தேதி இரவு நடத்தப்படுகிறது. 18ஆம் தேதி தங்க ரதம், 20ஆம் தேதி தேர்த் திருவிழா மற்றும் 21ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    அக்டோபர் 10-ம் தேதி முதல், 18ம் தேதி வரை 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதில் அக்டோபர் 14ஆம் தேதி கருட சேவை, 17ஆம் தேதி தங்க தேர் ஊர்வலம், 18ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரம்மோற்சவத்தையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமி வீதி உலா நடக்கும். கருட சேவை மட்டும் இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது.

    கடந்தாண்டு பிரம்மோற்சவத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜிலென்ஸ், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    வழக்கமாக பிரம்மோற்சவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால், ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணி நடக்கும் என்றும் அவர் கூறினார்.

  • நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

    ஆனி திருமஞ்சன தரிசன விழாவின் ஒரு பகுதியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

    பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலத்திற்கு பெயர் பெற்ற இடமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 16-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

    இந்த நிலையில், நேற்று ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.

    இதையடுத்து சுவாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் முன்னும், பின்னுமாக நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

     தேர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. ஒவ்வொரு வீதியிலும் மண்டகபடிதாரர்கள் மண்டகபடி செய்தனர். சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலவீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் பருவத ராஜாகுல மரபினர் ஸ்ரீநடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சுவாமிகளுக்கு பட்டு சாத்தி மண்டகபடி செய்தனர். பின்னர் சுவாமிகள் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் ஸமேத நடராஜ மூர்த்திக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது.

  • திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் தோள் மாலை சேவை

    திருமலையில் சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

    பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

    இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.

    சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.
    இந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.

  • நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

    நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. நாளை காலை 8.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா, இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

    21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும், 22-ந் தேதி காலை சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 23-ந் தேதி காலை வெள்ளி ரி‌ஷப வாகனங்களில் வீதி உலா, 24-ந் தேதி காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும் இரவு வெள்ளி சப்பரத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    25-ந்தேதி காலை சுவாமி அம்பாள் பல்லக்கிலும் (தவழ்ந்த கோலம்), இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை சுவாமி நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளல், உட்பிரகாரம் உலா வருதல் மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதி உலா, மதியம் 12 மணிக்கு சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி எழுந்து வீதி உலா, இரவு தேர் கடாட்ச வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகர் வீதி உலா வருகின்றனர்.

    27-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 1-ம் திருவிழா முதல் 7-ம் திருவிழா வரை தினமும் மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடா உபசார விழா தீபாராதனை நடக்கிறது. தினமும் மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.