Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கள்ளழகர் கோவிலில் ஆடி உற்சவம் தொடக்கம்

    108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.மதுரையை அடுத்துள்ள திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற சிறப்புமிக்க இத்திருத்தலத்தில், நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித்திருவிழா.

    இந்த வருடத்திற்கான ஆடி உற்சவ விழா இன்று (19-07-2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று இரவு அன்னவாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும், நாளை காலை தங்கப்பல்லக்கு உற்சவமும்,  இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நாளை மறுநாள் 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இரவு அனுமார் வாகனத்திலும், பின்னர் 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடக்கவிருக்கிறது.

    23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் அழகர் புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் அன்னையர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து  காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். தொடர்ந்து 28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்சியும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த  மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும் நடைபெறவிருக்கிறது. திருவிழாவை முன்னிட்டு அழகர் தரிசனத்தை காண பெருந்திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

  • தசாபுக்தி தோஷம் நிவர்த்தி செய்யும் வெள்ளீஸ்வரர்!

    செங்கல்பட்டு – கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுக்கிர பகவானும் சூரிய பகவானும் வழிபட்ட ஈஸ்வரன், மெய்யூர் வெள்ளீஸ்வரர் கோவில். இத்திருக்கோயிலில் மூலவராக வெள்ளீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.மூலவர் சுயம்புவாகத் தோன்றிய லிங்கம். வெள்ளியாகிய சுக்கிரன் இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் சுக்கிரவனின் அம்சமாக வெள்ளீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.இத்திருத்தலத்தில் வெள்ளீஸ்வரர் சந்நதிக்கு எதிரே அரச ரத்தின் கீழ் ராகுவும் கேதுவும் ஒன்றாக எழுந்தருளியிருக்கிறார்கள். இது மிகவும் விசேஷமானதாகும். தினமும் ராகுகாலத்தில் இங்கு பாலாபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்ட பின், வெள்ளீஸ்வர்ரையும் வணங்கினால் சர்ப தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

    இத்திருத்தலத்தில் வெள்ளீஸ்வரர் மூலவராக அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அவர் சந்நதியில் விநாயகரும், பாலமுருகனும் காட்சியளிக்கிறார்கள். உள் மண்டபக் கூரையில் ராகுவும், கேதுவும், சூரிய சந்திரர்களைக் கவ்வும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நின்று பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள தசாபுக்தி தோஷம் விலகி, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் வணங்குகின்றன. மேலும் அதன் அருகில் பல்லியின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொட்டு வணங்கினால் பல்லி சொல்லால் ஏற்படும் தோஷங்கள் அகலுவதாகக் கருதப்படுகிறது. வெள்ளீஸ்வரர் சந்நதியில் மேற்கூரையில் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது.

    சுக்கிரன் வழிபட்ட, சுயம்புவாகத் தோன்றிய வெள்ளீஸ்வரரை பௌர்ணமி தினத்தில் 21 முறை வலம் வந்தால், கிரிவலம் வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கமாண்டல தீர்த்தத்தில் சிவபெருமானை ஆவாஹனம் செய்து, அத்தீர்த்தத்தினால் அடியார்க்கு அருள்பாலித்த கமண்டலசித்தர் என்பவர் இங்கு வாழந்து வந்த்தாக இத்திருதல வரலாறு கூறுகிறது. இத்திருத்தலத்துக்கு பிரதோஷம், பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளாமானோர் வந்து நெய்தீபம் ஏற்றி வைத்து வெள்ளீஸ்வர்ரை வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

  • செங்கற்களை பொன்கற்களாக மாற்றிய அக்னீஸ்வரர்!

    நன்னிலத்திற்குக் கிழக்கே 10 கி.மீ தொலைவிலும் திருநள்ளாறுக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் திருப்புகலூர் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அம்மையார் கருந்தாழ்குழலியுடன் சமேதராக காட்சியளிக்கிறார்.

    இத்தல புராணமானது திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரரிடம் ஒருமுறை அவரது மனைவி பரவையார். பொன் வேண்டும் என்று கேட்டபோது. சுந்தர்ருக்கு திருப்புகலூர் திருத்தலம் நினைவுக்கு வந்தது. இதையடுத்து திருப்புகலூர் சென்ற சுந்தரர். அங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் சிவபெருமானைத் தரிசனம் செய்தார். அன்றிரவு கோவில் மண்டபத்தில் தங்கினார். அப்போது தலைக்கு தலையணையாக அங்கு கிடந்த சில செங்கற்களைப் பயன்படுத்தினார்.

    காலையில் துயில் கலைந்து எழுந்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. அவர் தலையணையாக பயன்படுத்திய செங்கற்கள் பொன் கற்களாக மாறிப்போய் இருந்தன. பக்திப் பரவசத்தில் தன்னை அறியாமலேயே அந்த திருத்தலத்து இறைவனைப் பாடினார்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு திருப்புகலூர் கோவிலுக்கு புதிதாக வீடு கட்டுவோர் கட்டிய வீட்டில் குறை உள்ளவர்கள் புதிய அலுவலகம் கட்டுவோர் புதிய தொழிற்கூடம் கட்டுவோர் என பலரும் வருகிறார்கள். அவர்கள் சில செங்கற்களை அந்த கோவிலில் வைத்துப் பூஜை செய்து அதை தங்கள் கட்டுமானத்தில் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படிச் செய்தால், புதிய கட்டடம் எழுப்பும் பணி சுமூகமாக விரைவில் நடந்து முடியும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

  • புதன் தோஷம் நீக்கும் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சிவாலயம். மேலும் நவக்கிரகதலத்தில் இது புதனுக்கு உரிய தலமாக இத்திருக்கோயில் போற்றப்படுகிறது. புதன் தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து புதனை வழிபட்டால் தோஷம் நீங்கி சுபிட்சம் பெருவார்கள் என்பது ஐதீகம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

    இத்தல வரலாறானது. பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்த போது. சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அப்போது அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்த்தாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும் இத்திருக்கோயிலின் மூலவருக்கு தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிஷேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகிறது.

    மேலும் இத்திருக்கோயில் புதனுக்குரிய தலம் என்பதால் புதன் தோஷத்திற்குரிய பிரச்சணைகளான புற்றுநோய், வாதநோய், மனநோய், பிள்ளைகள் படிப்பில் ஈடுபாடு இல்லாமை, சீதள நோய், ஆண்மை குறைவு ஆகிய குறைபாடு உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து புதனுக்கு பரிகார பூஜை செய்தால் வியாதிகள் நிவர்த்தியாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.

  • ஆடி செவ்வாய் தேடிக் குளி

    ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. `ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது ஆன்றோர் வாக்கு.

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகளில் ஓளவையார் விரதமிருப்பது பெண்களின் வழக்கம். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்ரீவர் ஜயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்து காணப்படும்.

    அது மட்டுமா? தெருவெங்கும் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் களைகட்டும். கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், கங்கா – காளி வேடமிட்டு ஆடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், பம்பை உடுக்கை ஒலிக்க சாமியாடுதல் எனத் தமிழகம் எங்குமே பக்திப் பெருக்கெடுக்கும் மாதமும் ஆடிதான். விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான்.

  • ஆடி மாதத்தில் அம்மனை வழிபடவேண்டிய முறைகள்

    ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    அம்மனை வழிபடும் போது மறக்காமல் ‘லலிதாசகஸ்ர நாமம்’ சொல்ல வேண்டும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

  • அகோரமுா்த்திக்கு பூர நட்சத்திர வழிபாடு

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் அருள்பாலித்து வரும் அகோரமுா்த்திசுவாமிக்கு பூர நட்சத்திர வழிபாடு நடைபெற்றது.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம அகோரமுா்த்தியாக மனித உருவில் தனி சன்னதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இவரின் திருமேனியின் கீழ் பகுதியில் எட்டு பைரவா்கள் இருப்பது விஷேமான ஒன்றாகும்.

    மேலும் கபாளம், ஈட்டி, கத்தி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தனது உருவில் தாங்கியுள்ளார். இவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் பல்வேறு தோஷங்கள் நீங்குவதாக ஜதீகம். இவா் மாசிமாத ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரத்தில் தோன்றினார். பல்வேறு சிறப்புகளை கொண்ட உற்சவர் அகோரமுா்த்தி சுவாமிக்கு ஆனிமாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    இதனையொட்டி பால், திரவியப்பொடி. இளநீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் கோயில் உதவி மேலாளர் சிவானந்தம், ஆலய அர்ச்சகர் பட்டாபிராமக்குருக்கள், நாடி நிபுணர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பனம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீரங்கம் கோயிலின் பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டது. தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வரவு, செலவு கணக்குகளை சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனி வார ஆஸ்தனம் நடைபெற்றது. சம்பிரதாய முறைப்படி வரவு, செலவு கணக்குகளை படித்த பிறகு, சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.

    இதையொட்டி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், ஸ்ரீரங்கம் கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் கோவில் அதிகாரிகள், வஸ்திரங்களை எடுத்து வந்தனர்.

    திருமலையில் உள்ள ஜீயர் மடத்தில் பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், 4 மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ், இணை செயல் அலுவலர் பாஸ்கர் ஆகியோரிடம் பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, ஆனி வார ஆஸ்தான பூஜைகள் நடைபெற்றன.

  • குரங்குகள் வழிபடும் குண்டலகரணேசுவரர்!

    பஞ்சதலங்களில் திருக்குரகாவல் தலமும் ஒன்று. மயிலாடுதுறை வைதீஸ்வரன் வோவில் அருகில் திருப்பனந்தாள் சாலை ‘இளந்தோப்பு ‘ பகுதியில் அமைந்துள்ளது இச் சிவாலயம். இத்திருத்தலத்தில் மூலவராக குண்டலகரணேசுவரர் அருள்பாலிக்கிறார்.வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் சந்நிதிகள் உள்ளன.

    முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சநேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சநயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. மேலும் இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார்.

    அதனால் ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடைபெற்றுவருகிறது. அப்போது பூக்களை ஏந்திவந்து குரங்குகள் பிரார்த்தனை செய்து செல்வது இன்றும் அதிசயச் செயலாக இத்திருத்தலத்தில் நிகழ்கிறது. மேலும் ஆஞ்சநேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சநேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். என்பது இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை.

     

  • அருள் வழங்கும் ஆடிமாதம்!

    ஆண்டின் அணைத்து மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்புடையது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள் வேத பாராயணங்கள், மந்திரங்கள், இறந்தோர் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
    மேலும் அறிவியல் பூர்வமாக பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இந்த ஆடி மாதம் தான். மேலும் கிரக சஞ்சாரத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை கற்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. கடக ராசி சந்திரனுக்குரியது. எனவே சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் ஆளுமை பலம் அடைகிறது.

    மேலும் இந்த மாதத்தில் மட்டும் சிவம் சக்திக்குள் அடக்கமாகி விடுவதால் சிவனை விட சக்திக்கு அதாவது அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோயில்கள் அனைத்தும் புத்துணர்வு புது பொலிவு பெற்று காணப்படும். கூழ் வார்த்தல், பூக்குழி இறங்குதல் விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.

    இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது ஆடி மாதம மழைக்காலத்தின் ஆரம்பம் எனவே தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். அதனால் வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினியாக இருப்பதனால். அனைவரும் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் பக்தியுடன் கொண்டாடப்படுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான இந்த காலத்தில் அம்மனை போற்றி வழிபட்டு அம்மன் ஆசி பெறுவோம்.