Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மகரவிளக்கு பூஜை அன்று மலை ஏற தடை….

    சபரிமலையில் மகரவிளக்கு பூஜை அன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சன்னிதானத்தில் முன் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் பிற்பகல் 1.47 மணிக்கு மகர சங்கிரம பூஜை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். முன்னதாக காலை 10.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகர சங்கிரம பூஜைக்காக கோவில் வளாகம் சுத்தம் செய்யப்படும்.மகர விளக்கு பூஜை அன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பம்பையில் இருந்து ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படுவதையொட்டி அன்றைய தினம் பிற்பகல் முதல் மகர ஜோதி தரிசனம் வரை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த சமயத்தில் மலை ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஜோதி தரிசனத்திற்கு பின் மாலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உச்ச பூஜைக்கு பின் திருவாபரண வருகைக்காக பதினெட்டாம் படியை சுத்தம் செய்ய வசதியாக, திருவாபரணம் அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும் வரை பக்தர்கள் பதினெட்டாம் படி வழியாக ஏறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. திருவாபரணங்கள் அணிவித்து நடத்தப்படும் சிறப்பு தீபாராதனைக்கு பின்பு பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார்.

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவ பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையும், திருப்பாவாடை கோஷ்டியும் நடந்தது. நம்பெருமாள் நேற்றிரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமாமணி மண்டபத் தில் இருந்தவாறு ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 6 முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் காலை 9.30க்கு திருமாமணிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்றிரவு 8.30 முதல் 9 வரை மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. இரவு 9 மணி முதல் மறுநாள் 9ம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்தனுமண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன்பின் அதிகாலை 4 முதல் 5 வரை சாற்றுமறை நடக்கிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி,உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து ஜனவரி 9ம் தேதி முதல் உற்சவர் ரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 18ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. நாளை மாலை முதல் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல்பத்து உற்சவமான 2 ஆயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுகிறார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

  • திருப்பதி கோயிலில் ரூ.1000 கோடி உண்டியல் காணிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் முதல் பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டு 2 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 897 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 730 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 66 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 594 பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்தாண்டில் 1 கோடியே 22 லட்சத்து 37 ஆயிரத்து 368 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதன் விற்பனை மூலம் ரூ.6.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

  • சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் புத்தாண்டு தொடங்கியது முதலே பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் வழிபாடு முடிந்து மகரஜோதி வழிபாடு கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை மகரஜோதி வழிபாடு நடக்கிறது. புத்தாண்டு முதல் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் பெறுகின்றனர். பம்பையிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. ஜனவரி 14-ம் தேதி மகர ஜோதி தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  • அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத காணிக்கை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. அதன்படி மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.33 கோடியும், தங்கம் 156 கிராமும், வெள்ளி 760 கிராமும் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

  • திருப்பதியில் ஊடல் உற்சவம்

    திருப்பதி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஏழுமலையானுக்கிடையே ப்ரணய கலசோற்சவம் எனும் ஊடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருமலையில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஏழுமலையானுக்கும், ஸ்ரீதேவி – பூதேவி தாயார் களுக்கும் இடையே ஏற்படும் ஊடலை தேவஸ்தானம் உற்சவமாக நடத்தி வருகிறது. ஏழுமலையான் எப்போதும் தன்னை நாடி வரும் அடியார்களிடமும், ஆழ்வார்களிடமும் அதிக அன்பு பாராட்டுவதாகவும், தங்களிடம் அந்த அளவுக்கு அன்பு பாராட்டுவதில்லை என்றும் தாயார்கள் ஏழுமலையானின் மீது கோபம் கொள்வதாக ஐதீகம். ஏழுமலையான் சமாதானப்படுத்தி அவர்களின் கோபத்தை குறைப்பது இந்த உற்சவத்தின் தாத்பரியமாகும். அதன்படி, திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் அருகில் ஊடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்டு, தனித் தனியே தங்கப்பல்லக்குகளில் எதிரெதிராக எழுந்தருளினர். அதன் பின்னர் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் இரு பிரிவாக பிரிந்து நாச்சியார்கள் பக்கம் சிலரும், மலையப்ப சுவாமி அருகில் சிலருமாக நின்று கொண்டனர். மலையப்பசுவாமி மீது கோபம் கொண்ட தாயார்களின் அணியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் நிந்தஸ்துதியில் நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களைப் பாடினார். பின்னர் பூப்பந்துகளை ஏழுமலையான் அணியினர் அவர்கள் மேல் எறிந்தனர். அவற்றை எதிர் அணியில் உள்ளவர்கள் லாவகமாகப் பிடித்து நாச்சியார்களை சமாதானப்படுத்தி பாசுரம் பாடினர். இதையடுத்து நாச்சியார்கள் சமாதானத்தின் அடையாளமாக, மலையப்ப சுவாமி அருகில் இருவரையும் எழுந்தருளச் செய்து ஆரத்தி காட்டி நைவேத்தியம் உள்ளிட்டவற்றை அர்ச்சகர்கள் சமர்ப்பித்தனர்.

  • சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி

    மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பூஜைகள் நடைபெற்றன. 26 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற மண்டல பூஜை வழிபாடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு தந்திரி கண்டாரு மகேஷ் மோகனரு முன்னிலையில் ,மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்தார். சபரிமலையில் வருகிற 14 ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறும் இதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12 ஆம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் 11 ஆம் தேதி நடைபெறும். 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிவரை இரவில் படி பூஜை நடைபெறுகிறது. 20 ஆம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும் .

  • தியாகராஜர் கோயிலில் திருவாதிரை விழா

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடைபெற்ற சாமியின் பாத தரிசன நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். திருவாதிரை விழாவின் முதல் நாளான நேற்று இரவு தியாரகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் சாமியின் பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாத தரிசனத்தை தொடர்ந்து மாலை சகஸ்கரநாம அர்ச்சனை மற்றும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது உள்ளது. திருக்கயலாயத்தில் தேவர்கள் திருவாதிரை நாளில் நடராஜ பெருமானின் நடனத்தை பார்க்க விரும்பியதாகவும், அப்போது நடராஜர் நடனமாடிய போது இடது காலை சிதம்பரம் கோயிலிலும், வலது காலை திருவாரூர் தியாகராஜர் கோயிலில் காட்டியதாகவும் ஐதீகம். இதனையொட்டி இந்த கோயிலில் சாமியின் வலது பாத தரிசன நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காலை 6 மணி முதல் தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும், 7மணி அளவில் நடராஜபெருமான் தரிசனமும் நடந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

  • ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி ஜன.9 தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா 9-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை முதல் 5 நாட்களுக்கு பகல் பத்து உற்சவம் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் நடைபெறும். இந்த 5 நாட்களும் மாலை 5 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு அனுமதி கிடையாது. தாயார் புறப்பாடும் கிடையாது. மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நடைபெறும். ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் ராப்பத்து உற்சவமாகும். 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முடிய தினமும் மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைவார். இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார். ஜனவரி 17-ந்தேதி ரெங்கநாச்சியார் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தை அடைவார். மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் சாதித்தல் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 1.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். 18-ந்தேதி மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருவாய்மொழி மண்டபத்தை அடைவார். இரவு 11 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை சென்றடைவார்.

  • திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடக்கம்…

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து ஆர்ஜித சேவைகள் ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒருநாள் மட்டும் 74 ஆயிரத்து 144 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். துவாதசி தரிசனத்தில் 75 ஆயிரத்து 658 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். முன்னதாக, வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடர்ந்து நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.