Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தைப்பூச ஜோதி தரிசனம் ஜனவரி 30-ந்தேதி தொடங்குகிறது

    வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இதை தொடர்ந்து மாதந்தோறும் பூசநட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல்பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. பின்னர் 31-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு தருமச்சாலை மேடையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் 2-ந் தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்தை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

  • கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா ஜனவரி 19 ஆம் தேதி நடக்கிறது.
    16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் அமைந்து உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக உள்ள தெப்பக்குளம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை புனிதப்படுத்தும் பூஜையாக நரசிம்ம புஷ்கரணிக்கு, தடாக பிரதிஷ்டை விழா நாளை நடக்கிறது. இதையொட்டி ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் நித்யலாராதனம், யஜமான-ஆச்சாரிய வரணம், புண்யாஹவாசனம், பகவத் ப்ராத்தனா, ம்ருத்ஸங்கிரகணம், அங்குரார்ப்பணம், பிரதீசர ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப ஆவாஹணம், கும்ப ரஷ்பந்தனம், பிரதான உக்த ஹோமங்கள், நைவேத்யம் நடக்கிறது. 19 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் பிரதான உக்த ஹோமங்கள், வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கங்கா-நர்மதா-ஸம்யுக்த ஸ்ரீநரசிம்ம புஷ்கரணிக்கு அனைத்து விதமான அபிசேகங்கள், கும்ப தீர்த்தத்தை திருக்குளத்தினுள் சேர்த்தல், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தீர்த்த வலம் வந்து பூஜைகள் நடைபெறுகிறது.

  • சாவித்ரி கௌரி விரதம்

    தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சாவித்ரி கௌரி விரதம். சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

  • சபரிமலையில் மகரஜோதி தரிசனம்…

    சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிந்தது. மகரஜோதியை கண்டு பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜைகள் நடக்க உள்ளன. இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.

  • எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கலாம்?

    தைத் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரியுமா? தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. காலையில் 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது. அல்லது மதியம் 1.45 மணிக்கு மேல் 2.05 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். சரி பொங்கல் வைப்பது எப்படி ?
    வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும். பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. என்று சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும்.

  • மகரஜோதி தரிசனம்; சபரிமலையில் குவியும் பக்தர்கள்!

    கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை ஜனவரி14ம் தேதி நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். மகரவிளக்கு பூஜையை கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். திருவாபரணம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இருந்து ஆண்டுதோறும் திருவாபரணம் ஊர்வலமாக சன்னிதானத்துக்கு எடுத்து செல்லப்படும். ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.25 மணியளவில் சன்னிதானம் அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரதீப தரிசனம் நடைபெறும்.

  • தைப்பொங்கலுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை நடை திறப்பு

    தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து குலதெய்வத்தை வழிபடுவதற்காக யாதயாத்திரையாக செல்வது வழக்கம். தைப்பொங்கல் அன்று தமிழ்கடவுளான முருகனை வழிபட்டால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விரதமிருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர். பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வர். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று பொங்கலிட்டு கதிரவனுக்கு படைப்பது வழக்கமாகும். பக்தர்களின் வசதிக்காக தைப்பொங்கல் அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

  • போகியில் நோய், நொடிகள் பறந்தோட !

    மாரியம்மன் என்றால் மாரியின், அதாவது மழையின் தேவதை என்று பொருள். மாதம் மும்மாரி பொழிய மாரியம்மனைதான் வேண்டி வணங்குவார்கள் விவசாயப் பெருமக்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதும் விளைவித்த உணவுப்பொருட்களை எல்லாம் மார்கழியில் அறுவடை செய்து தை மாதத்தில் விற்பனைக்கு அனுப்புவர். தை முதல் நாள் பொங்கல். அரிசி, மஞ்சள், கரும்பு என எல்லா விளைபொருட்களும் மக்களிடம் வந்து சேரும் . எனவே கடந்தாண்டு வேண்டிய மழையை பெய்வித்து, விளைபொருட்களை நல்ல முறையில் விளைவிக்க அருள் செய்த மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கவே போகி பண்டிகையன்று அம்மன் வழிபாடு நடத்துகிறோம். தை மாதத்திற்கு பிறகு உஷ்ணம் தொடங்கும் என்பதால், கோடையில் பரவும் நோய்களை தடுக்கும் விதமாக அம்மாதங்களிலும் மழையை பெய்விக்க வேண்டி மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மாரியம்மனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே மாரியம்மன் வழிபாடு என்பது குழந்தைகளுக்கு நோய் நொடிகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வாள். போகியில் சாமி கும்பிடும்போது மாரியம்மன் பாடல்கள், மாரியம்மன் தாலாட்டு ஆகிய எளிய தமிழ் பாடல்களை பாடி அன்னையை குளிர்விக்கலாம்.

  • தை திருநாளில் ராஜயோகம் கிடைக்க ….

    தை திருநாளின் முதல் நாளான பொங்கலன்று, கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறோம். இதுவே தமிழர்களின் மரபு. எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்? செல்வம் குவியும் என ஆரூடர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி. சூரியனை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும் என சாத்திரம் கூறுகிறது. எனவே சூரிய பொங்கலன்று சூரிய ஓரையில் பொங்கல் இட்டால் பல நன்மைகள் கிடைக்கும். நல்ல நேரத்திற்குள் பொங்கல் செய்துவிட்டு, பிறகு வடை, பாயாசம் மற்றும் 21 வகையான சமைத்த காய்கறிகளையும், 21 வகையான சமைக்காத காய்கறிகளையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு ஆகியவற்றையும் வைத்து சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரிய ஓரையில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் தேடி வரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சூரிய பகவானின் ஆசிர்வாதமும் அருளும் இந்த சூரிய ஓரையில் பரிப்பூரனமாக கிடைக்கும்.

  • 18 படிபூஜையின் மகத்துவம்

    சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப விக்கிரகத்துக்கு எத்தனை பெருமை உள்ளதோ அத்தனை மகத்துவம் இங்குள்ள 18 படிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இருமுடி தலையில் இல்லாமல், மாலை அணியாமல் இருப்பவர்கள் கூட சபரி மலை ஐயப்பனை தரிசித்து விடலாம். பெண்கள் எல்லோரும் கூட ஐயப்பனை தரிசித்து விடலாம். ஆனால் இருமுடி இல்லாமல், விரதம் இல்லாமல் வந்த ஒருவர் கூட இந்த படியின் மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தனை பெருமை கொண்ட இந்த படிகளுக்கு செய்யப்படும் பூஜையே படி பூஜை எனப்படுகிறது. 18 மலைகளையும், 18 தத்துவங்களையும், 18 தேவர்களையும் குறிப்பதாக இந்த படிகளைச் சொல்வார்கள். மேல்சாந்தி, கீழ்சாந்தி, தந்திரிகள் மற்றும் அந்த பூஜைக்கான செலவினை ஏற்றுக்கொண்ட உபயதாரர்கள் இணைந்து இந்த படி பூஜையினை செய்வார்கள். படிகளை விதவிதமான மலர்களால் அலங்கரித்து, விளக்குகளால் ஜொலிக்கச் செய்து வாத்தியங்கள் முழங்க இந்த பூஜை பிரமாண்டமாக நடைபெறும். இந்த பூஜையைச் செய்ய இப்போது பதிவு செய்தால் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதில் இருந்தே இந்த பூஜை எத்தனை சிறப்பானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சபரி மலையில் கீழ்க்காணும் எல்லா பூஜைகளும் உபயதார்களால் நடத்தப்படுவதுதான். முன்கூட்டியே பதிவு செய்து இந்த பூஜைகளை நடத்தலாம்.