Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Madurai Meenakshiyamman Temple Ashtami Festival

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.
     

  • Devotees’ Paal Kudam procession at the Renuka Devi Amman Temple.

    ரேணுகா தேவி அம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்

     

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 22ஆம் ஆண்டு பால் குட திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

  • Vallalar and Samarasa Suddha Sanmargam!

    வள்ளலாரும் சமரச சுத்த சன்மார்க்கமும்!

     

    ஆன்மிகம், அறம், சமத்துவம், கல்வி, தியானம் ஆகியவற்றை மக்களிடை பரப்பி சேவை உணர்வை போதித்த வள்ளலாரை பற்றி ஆய்வாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான விஷ்வா தரும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த தொடரில் பார்ப்போம்…

     

     

  • Special Abhishekam in Thanjavur Big Temple on the evening of New Year

    புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்

     

  • Sri Akilandeswari Navarathna Maalai

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவரத்ன மாலை

    காப்பு

    ஏற்றம் எளிதாய் என்றும் அமைந்திட
    தோற்றம் நலமாய் மலர்ந்திட அருளும்
    ஊற்றின் கண்ணே நவ மாலையினை
    உயர்வாய் காக்கும் கண நாயகனே

    மாதா ஜெய ஓம் அகிலாண்டேஸ்வரி
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே
    மாதா ஜெய ஓம் அகிலாண்டேஸ்வரி
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    வைரம்

    கற்றோர் தெளிவே கனிவாழ் அமுதே
    கலைகள் இடைவாழ் கரையா நிலவே
    பற்றும் அடியார் நினைவே என்றும்
    பசுந்தேன் மழையே இமவான் உமையே
    பனிப்பூங் கணையும் பாசாங் குசமும்
    இனித்தே கரத்தில் அணையும் கொடியே
    வைரத் திருமேனியளே வருவாய்
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    மாணிக்கம்

    கானத்தினிலே உயிரானவளே
    கருதக் கிடையா மறையானவளே
    வானத்தினைப் போல் வடிவானவளே
    வரையக் கிடையா அருமைப் பொருளே
    நாடித் திருநாமமும் நின் துதியும்
    நவின்றால் அவரை நீங்காதவளே
    மாணிக்க ஒளிச் சுடரே வருவாய்
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    கோமேதகம்

    வீரத் தனலே சரணம் சரணம்
    விதையாய் மரமாய் விளைபவள் சரணம்
    வேதப் பொருளே சரணம் சரணம்
    வினவா மொழியின் விடையே சரணம்
    கோமேதகமே குயில் மாமயிலே
    குழல்வாய் மழலை மொழியே வருவாய்
    வானோர் மகளே வரும் மாமழையே
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    பவளம்

    நந்தினி சௌந்தர்ய கானவி சங்கரி
    வைஷ்ணவி சாமுண் டீஸ்வரி காளீ
    பஞ்சமி பைரவி கௌமாரி யளே
    பரிபூரணி நாராயணி வாணீ
    அஞ்சுக தேவி மகேஸ்வரி கௌரீ
    அகிலாண்டேஸ்வரி பவள சொரூபினி
    மங்கல நாயகி சந்த்ர கலாதரி
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    மரகதம்

    உறைநின் கோலம் மனதில் என்றும்
    நிலைக்கும் நலனை எமக்கிங் கருளி
    பதிக்கும் செயல்கள் எதிலும் உனையே
    துதிக்கும் அடியேன் திறனைப் பேணி
    வாக்கும் மனமும் வளம்பெற நாளும்
    தாக்கும் மாயை தகர்ந்திடச் செய்து
    காக்கும் மாதவ மரகத வல்லீ
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    வைடூர்யம்

    ஒன்றாய் அரும்பி உலகிங் கெல்லாம்
    வென்றாய் ஆற்றல் வைடூரியமே
    குன்றா மணியே ஒளிரும் குவையே
    நன்றே தாய்மை நலமே வருவாய்
    உத்தமி நீயே! உமையவள் நீயே!
    உலகினை ஆளும் கொற்றவை தாயே!
    முப்புரம் எரித்தவன் முழுமுதல் பத்தினி
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    நீலம்

    வெள்ளி விடிந்த பொன்னிற வானம்
    வேத பாராயணம் செய்திடும் வேளை
    சிந்தை நிரம்பிய அம்பிகை கோலம்
    சேர்ந்து நலம்தரும் மங்கலம் யாவும்
    நீலத் திருமே னியளே உமையே
    நினைவார் நெறியில் நிறையும் பொருளே
    வாலைக் குமரி வருவாய் அருள்வாய்
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    முத்து

    வித்தே விதையுள் உறையும் கருவே
    விலகா பதியின் பிரியா விடையே
    முத்தே உலகின் முதல்வி சரணம்
    முடியா தியங்கும் விசையே சரணம்
    மத்தேறிய பால் தயிராய் திரியும்
    அஃதே அழியா ஆற்றல் உனதே
    சித்தே சிவசக்தி யளே வருவாய்
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    பத்மராகம்

    மங்கலம் மேவிய நின்திருக் கோலம்
    மகிமை நிறைந்த குங்குமத் தாதும்
    என்றும் நிலைத்திடும் புண்ணிய வதனம்
    ஏடுகள் தோறும் உன்புகழ் வாசம்
    எந்த மனத்தும் எதிலும் இருப்பாள்
    சந்திர பதும ராக வியாபினி
    மந்திர தந்திர யந்திரம் யாவிலும்
    மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

    பலச்ருதி

    எவர் எப்பொழுதும் இயல்பாய் அகிலா
    நவ ரத்தின மாலையினை நவின்றிடுவார்
    அவர் நற்பலன்கள் விரைவாய் அடைவார்
    சிவசக்தி அருட் குணமும் பெறுவார்.

  • Story of Kurinchiandavar temple at kodaikanal

    மலைகளும், மேகங்களுமாக குளிரும் மழையுமாக பசுமை படர்ந்திருக்கிறது கொடைக்கானல்.

    கொதிக்கும் கதிரவனின் அனலில் இருந்து தப்பிக்க கோடை வாசஸ்தலங்களை நாடும் மக்களின் விருப்பத்திற்குரிய இடமாக இருக்கிறது கொடைக்கானல். இயற்கையின் கொடையை கானகமாக கொண்டிருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில் மலைகளின் வாசம்மிக்க இடத்தில் குன்றுதோறும் குடியிருக்கும் முருகன் இல்லாமல் எப்படி?

    இயற்கையின் கடவுளாக, தமிழ் கடவுளாக நாடி வருவோரை தன் புன்னகையால் வரவேற்கும் ஆதி கடவுளாக குறிஞ்சியாண்டவர் குடியிருக்கிறார் கொடைக்கானலில்.

    இந்த கோயில் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. இது முருகப் பெருமானின் பரம பக்தையால் உருவான கோயில்.

    அவர் இந்தியர் அல்ல என்பது இன்னொரு சுவாரஸ்யம். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். அவரது பெயர் லீலாவதி.  பழனி பாலதண்டாயுதபாணியின் அதிதீவிர பக்தை. பழனி முருகனை தரிசிப்பதற்காகவே 1934ஆம் ஆண்டு இந்தியா வந்த லீலாவதி, கொடைக்கானலில் தங்கியிருந்தார். அவரது தினசரி பொழுதுகள் தூரத்தே தெரியும் பழனி முருகன் கோயிலை நோக்கியே விடிந்தது. அங்கிருந்தபடியே தினமும் தரிசித்துக் கொண்டிருந்ததை அவரது கணவரும், சிவபக்தருமான ராமநாதனும் தடுக்கவில்லை.

    மேகங்கள் கொஞ்சி விளையாடி பழனி முருகனை தரிசிப்பதைப்போல, லீலாவதியும் அவரது மனதால் பழனி முருகனை பரவசத்தோடு தரிசிப்பார். ஆனால் காலம் எப்போதும்போல இருப்பதில்லையே. பருவம் மாறியபோது அதிக மேகங்கள் கூடி பழனி மலையை மறைத்துவிட்டன.

    தவித்துப்போனார் லீலாவதி, கண்ணீர் வடித்தார். கதறுகிறார். முருகா என்மேல் என்ன பிழை கண்டு உன் தரிசனத்தை மறுக்கிறாய்? அப்பனே, உன்னைக் காணாமல் எப்படி இந்த நாளை போக்குவேன். நீ குடியிருக்கும் மலையை பார்க்காமல் எப்படி நான் இருப்பேன் என்று தவிக்கிறார்.

    அழுது தேம்பியபடியே கண்ணயர்ந்த லீலாவதியின் கனவில் வந்த முருகன், ஏன் இவ்வளவு வேதனை படற? உனக்காக நானே இங்கு வர்றேன். எனக்காக இந்த கொடைக்கானலிலேயே கோயில் எழுப்பேன் என்கிறார். திடுக்கிட்டு எழுந்த  லீலாவதி பரவசத்தோடு தனது கணவரிடம் கூறுகிறார். மனைவியின் விருப்பத்திற்கேற்ப, ராமநாதன் எழுப்பிய கோயில்தான் குறிஞ்சியாண்டவர் கோயில்.

    மனைவியின் பக்திக்கு உதவி கோயில் கட்டியவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ராமநாதன் கல்லூரி நிறுவனர் சர் பொன்னம்பல ராமநாதன்.

    1936ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டது. பக்தையின் பக்திக்கு முருகன் செவிமடுத்த திருத்தலம். அதனாலே என்னவோ புன்னகை தவழும் இதழ்களோடு ராஜ அலங்காரத்தில் கண்கொள்ளாமல் காட்சியளிக்கிறார் இந்த குறிஞ்சியாண்டவர்.

    ஒருமுறை பார்த்தால் போதுமா? பிரகாரம் சுற்றி விட்டு மீண்டும் வந்து பார்க்கிறோம். போதவில்லை. அப்படி ஒரு அழகன். முருகன் என்றாலே அழகுதான். இந்த குறிஞ்சியாண்டவர் கோலத்தில் அவன் ஒரு பேரழகன்.

    கோயிலில் மகாவிஷ்ணுவும், பிள்ளையாரும் தனி பிரகாரங்களில் இருக்கிறார்கள்.

    கொடைக்கானல் மையப்பகுதியில் இருந்து ஒருசில கிலோமீட்டர்களில் அமைந்துள்ள இந்த  குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வருவோர் மறக்காமல் கோயில் அருகே நின்று பாருங்கள். தூரத்தே பழனி பாலதண்டாயுதபாணி குடியிருக்கும் மலையை தரிசிக்கலாம். இங்கிருந்து பார்க்கும்போது  மனதில் ஒலிப்பது அரோகரா.. பழனி முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமும்தான்.

    அரோகரா…

    – எழுத்தாளர் பாமா

  • kadavulin peyaral

    கடவுளைப் புகழ்ந்து பெறுவது

    யாரிடமாவது எதையாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் அவரது அருமை பெருமைகளைப் போற்றிப் புகழ்வோம். நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு, மிகுந்த பணிவோடு வேண்டியதைக் கேட்போம். இதைத்தான் கடவுளின் விஷயத்திலும் நாம் செய்கிறோம்.

    அவர் புகழ்ச்சிக்கு மயங்குபவரா? என்பதைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனாலும் புகழ்ந்தால்தானே ஏதாவது கிடைக்கும் என்ற நமது பொதுப் புத்தியானது கடவுளையும் விட்டு வைக்கவில்லை.

    விநாயகர் அகவல் எனும் அவ்வையின் பாடலில்,

    “பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்

    அஞ்சு கரமும் அங்குச பாசமும்

    நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்…….”

    என்று விநாயகரின் தோற்றத்தை வர்ணிக்கிறார்.

    அதன்பிறகு

    “தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி

    மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே…….“

    “………வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்

    கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே….”

    என்று தனது விண்ணப்பங்களை அடுக்குகிறார்.

    உண்மையில் கடவுள் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற கருத்தும் உண்டு.

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்தல்” என்கிறார் வள்ளுவர்.

    அதாவது வள்ளுவரின் பார்வையில் விருப்பு வெறுப்பு அற்றவன் கடவுள்.

    படையலையும் நெய்வேத்தியத்தையும் புகழ்ச்சிப் பாடலையும், நேர்த்திக் கடன்களையும் அவர் உண்மையில் விரும்புகிறாரா? அப்படிச் செய்தால்தான் அவர் நாம் வேண்டுவதைக் கொடுப்பாரா? என்றால் மனிதனுக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு? அவர் அனைத்தும் அறிந்த கடவுள் அல்லவா? நாம் கேட்டால்தான் நமக்கு வேண்டியது என்ன என்று அவருக்குத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. எதையும் கேட்காத பற்றற்ற துறவிகளின் ஆன்மீகம் இதுதான்.

    இன்னொரு குறளில்,

    “பற்றற்றான் பற்றினைப் பற்றுக” என்கிறார் வள்ளுவர்.

    “அதாவது ஆசை இல்லாதவன் மீது ஆசை கொள்க.”

    அடுத்த வரி,

    “பற்றுக அப்பற்றை பற்று விடற்கு”

    அதாவது “அந்த ஆசையும் ஆசையை விடுவதற்காகத்தான்.”

    உண்மையில் விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு ஒருவன் சென்று விட்டால், அவன் கடவுளின் தன்மையை அடைந்து விட்டான் என்று பொருள். பிறகு அவனுக்குப் பிரார்த்தனை தேவை இல்லை.

    விருப்பு வெறுப்பற்ற மனநிலை என்பது ஒன்றுமற்ற நிலை.

    ஒன்றுமற்ற நிலைதான் கடவுள் நிலை என்று ஏராளமான ஆன்மீகவாதிகள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    இசைஞானி இளையராஜா மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற போது, அவருக்கு ஒரு பாராட்டு விழாவை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சில் இளையராஜா இப்படிப் பேசினார்:

    "தமிழ் மொழியில் உள்ள கடவுள் என்ற வார்த்தை கடவுளின் தன்மையை அப்படியே பிரதிபலிக்கிறது. கட உள் என்றால் உள்ளுக்குள் உள்ளத்துக்குள் கடந்து செல் என்று அர்த்தம். அப்படிக் கடந்து சென்று கொண்டே இருந்தால், அங்கே கடைசியாக ஒன்றுமற்ற நிலை வரும். இதைத்தான் ஒருவேளை பெரியார் பார்த்து விட்டு கடவுள் இல்லை என்று சொல்லி விட்டாரோ"

    ஒரு கவிஞர் எழுதி இருந்தார்:

    “கடவுளைக் கண்டேன்

    எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.”

    இத்தகைய பரவச நிலையை அடைபவன், கடவுளிடம் எதுவுமே கேட்கத் தேவை இல்லை. அவரைப் பிரார்த்தனை செய்யத் தேவை இல்லை. அவரைத் துதிக்கத் தேவை இல்லை. அவர் விரும்பினால் நமக்குத் தேவையானதைக் கொடுக்கப் போகிறார். இல்லையெனில் இல்லை என்ற பக்குவம் அவனுக்கு இருக்கும்.

    ஆனால் லௌகீக வாழ்க்கையில் உள்ள யாரும் கடவுளை இப்படிப் பார்ப்பதில்லை. தனக்கு விருப்பமானதைக் கொடுப்பவர் என்றே நினைக்கிறார்கள். கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

    இங்கே நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கடவுளை நம்புவார்கள் என்பது பொதுவான கருத்து. “கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தன்னம்பிக்கை அவசியம்” என்கிறார் விவேகாநந்தர். “தன்னம்பிக்கை இல்லாதவன் எத்தனைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் பயனில்லை” என்கிறார் அவர்.

    ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சில நேரங்களில் தன்னம்பிக்கையை வளர்க்க உதவவும் செய்கிறது.

    இதை விரிவாகப் பார்க்கலாம்…..

    கடவுளின் பெயரால்….

    தொடரும்….

  • Kadavulin Peyaral

    பிரார்த்தனை

    பிரார்த்தனை இல்லை என்றால் கடவுள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் பிரார்த்தனைக்காகத்தான் கடவுளே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறார்

    முதலில் எஜமான் உருவாகி பின்னர் அவரிடம் கேட்பது என்றில்லை. கேட்பதற் காகவே படைக்கப்பட்ட எஜமான்தான் கடவுள்.

    மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆற்றாமையைக் கொட்ட, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு ஒரு ரகசியமானஅதே சமயத்தில் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டநண்பன் தேவை. அப்படிப்பட்ட நண்பன்தான் கடவுள்.

    ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொள்ள மட்டும் உதவுவார்கள். ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொள்வதோடு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பார்கள். கடவுள் இதில் இரண்டாவது வகை.

    அப்படிப் பகிர்ந்து கொள்வதும் கோரிக்கை வைப்பதும்தான் பிரார்த்தனை. பிரார்த்தனையின் அடிப்படை இதுதான்.

    பிரார்த்தனை என்பது துன்பச் சுமையை இறக்கி வைப்பது

    பிரார்த்தனை என்பது வேண்டுவதைக் கேட்டுப் பெறுவது

    யாரிடமும் சொல்ல முடியாத துயரத்தை எங்கே போய்ச் சொல்வது? சுற்றியிருக்கும் நண்பர்கள் உறவினர்களிடம் சொன்னால், அதை அவர்களால் தீர்த்து வைக்க முடியாது என்பது மட்டுமல்ல. நம்மை ஏளனமாக வேறு பார்ப்பார்கள் என்ற அச்சம் தோன்றும் போது, நமது துயரத்தை எங்கே போய்ச் சொல்வது?

    இங்கேதான் கடவுள் வருகிறார். இங்கேதான் பிரார்த்தனை வருகிறது.

    சரி துயரத்தைச் சொல்லியாயிற்று. அதற்குத் தீர்வு?

    அவர்தான் எல்லாம் வல்லவராயிற்றே. தீர்த்து வைப்பார்.

    இங்கே நம்பிக்கை மிகவும் முக்கியம். எல்லா மதங்களும் கடவுளிடம் சந்தேகப்படக் கூடாது என்றே போதிக்கின்றன. பாஞ்சாலியைத் துச்சாதனன் துயிலுரிக்கும் போது, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணனை உதவிக்கு அழைத்த போது அவன் வரவில்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கையில் கைகளை உயரத் தூக்கி வணங்கிய போது மட்டுமே வந்தான் கண்ணன்.

    நம்பிக்கை வேண்டும். ஒரு சிறு சந்தேகம் கூட இல்லாத நம்பிக்கை.

    இந்தக் கதையின் மூலம் சொல்லப்படும் உண்மை இதுதான்.

    பிரார்த்தனை என்பது வேண்டுவதைக் கேட்டுப் பெறுவதுதான். ஆனால் வேண்டும் போது விசுவாசத்தோடு வேண்டிக் கேட்க வேண்டும் என்கிறது கிறிஸ்துவம்

    தன் மீதும், பிறர் மீதும், உலகின் மீதும், நம்பிக்கை இல்லாத போது, அல்லது நம்பிக்கை அற்றுப் போகும் போது, கடவுள் நம்பிக்கை மனித மனத்திற்கு தேவைப்படுகிறது

    நடக்குமா? நடக்காதா? என்ற அச்சத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கும் மனிதனால் அதை முழுமையாக சரியாக முடிக்க முடியாது. நடக்கும் என்ற நம்பிக்கையில் கிடைக்கும் ஆசுவாசம், அவனது மனதைச் சமநிலைப்படுத்தும். பதற்றம் தணியும். அமைதி நிலவும். அந்த நேரத்தில் பதறாமல் செய்யும் அவனது காரியம் சிதறாது.

    வருவது வரட்டும். சமாளிப்போம் என்று நினைக்கும் துணிவு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும்பாலானவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கு கடவுளைத் தவிர வேறு கதி இல்லை.

    எனவே நடக்குமா நடக்காதா என்ற அச்சமில்லாமல், நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காரியத்தைத் தொடங்க அவர்களுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

    கடவுள் நடத்தி வைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. பதற்றத்தைத் தணிக்கிறது. காரியத்தில் வெற்றி சித்திக்கிறது. ஒருவேளை அது நடக்காமல் போனாலும் இப்போது கடவுளுக்குச் சித்தமில்லை போல என்று ஆற்றுப்படுத்தவும் கடவுள் உதவுகிறது.   

    ஆக அடிப்படையில் பிரார்த்தனை என்பது கேட்டுப் பெறுவதுதான்.

    அதுமட்டுமல்லாமல் எல்லாம் வல்ல இறைவனை எல்லா வகையிலும் போற்றிப் புகழ்வதும் கூட. பிரார்த்தனைதான்.

    யாரிடமாவது ஒரு காரியம் ஆக வேண்டுமனால் நாம் என்ன செய்வோம்? அவரைப் புகழ்வது இயல்புதானே. இந்த இயல்புதான். கடவுளிடம் நடக்கும் பிரார்த்தனையிலும் வெளிப்படுகிறது.

    அப்படிப் புகழும் போது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதும் உண்டு.

    நாயேனை நானும் நல்லவனாக்க

    ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்

    என்ற பிரார்த்தனை அத்தகைய வகைதான்.

    புகழ்ச்சி மட்டுமல்ல. எதையேனும் உனக்கு நான் தருகிறேன் அதற்குப் பதில் நீ எனக்கு இதைத் தா என்று கேட்பதும் பிரார்த்தனைதான்.

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

    நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

    கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே

    நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கேட்பது அந்த வகையைச் சேர்ந்தது.

    புகழ்தல், தருதல், வேண்டுதல் என்பது மட்டுமல்ல. இவை எதையுமே செய்யாமல் எல்லாம் நீயே என்னை ஆட்டுவிப்பவன் நீயே. எனக்கென்று கேட்பதற்கு எதுவுமில்லை. எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள்வாய் என்று முழுமையான சரணாகதி அடைவதும் பிரார்த்தனையே.

    அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

    கடவுளின் பெயரால்…

    தொடரும்

  • Kadavulin Peyaral

    மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கடவுள்தான். அனைத்தையும் படைக்கும் கடவுள். அத்தனைக்கும் மேலான கடவுள். அவனால், அவளால் அல்லது அதுவால் முடியாதது எதுவுமே இல்லை. கடவுள் அவனா அவளா அதுவா?

    எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் அவருடைய சாயலில் மனிதனைப் படைத்தார் என்கிறது பைபிள். உண்மையில் மனிதன்தான் அவனது சாயலில் கடவுளைப் படைத்திருக்கிறான். அவனவன் அவனவன் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப வாழும் சூழலுக்கு ஏற்ப கடவுளைப் படைத்திருக்கிறான்.

    சைவ உணவு உண்பவர்கள் சைவக் கடவுளையும் அசைவ உணவு உண்பவர்கள் ஆடு கோழி பலி கேட்கும் கடவுளையும் படைத்திருக்கிறார்கள். இரு மனைவி கட்டிய கடவுள், கட்டிய மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத கடவுள் என்று ஆண் கடவுள்கள் இப்படிப் பெண்களின் துணையோடு வாழ, பெண் கடவுள்கள் தனித்து நிற்கின்றன. பிரம்மச்சாரிக் கடவுள்களும் உண்டு ஐயப்பனைப் போல.

    பெண்ணுக்கு கற்பு அவசியம் என்று கற்பிதம் செய்துள்ள ஆண்கள் இங்கே படைத்து வைத்திருக்கும் பெண் கடவுள்களும் கற்பரசிகளாகவே இருக்கின்றனர். ஆண் கடவுள்களுக்கு இருப்பதைப் போல ஒன்றுக்கு மேற்பட்ட இணையர்களோடு பெண் கடவுள்கள் இருப்பதில்லை. 

    இந்து மதம் இப்படிப் பற்பல கடவுள்களைப் படைத்து வைத்திருக்க, இஸ்லாம் ஒரே கடவுள் என்கிறது. அல்லா ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிறது. அவரும் உருவமற்றவர் என்கிறது.

    கிறிஸ்தவ மதமும் ஒரு கடவுளைத்தான் சொல்கிறது. அவரும் உருவமற்றவராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் யேசு கிறிஸ்து பிரார்த்தனை அல்லது ஜெபம் செய்வது குறித்துச் சொல்கையில், அறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி வைத்து விட்டு அந்தரத்தில் உள்ள பிதாவை ஜெபிக்குமாறுதான் கூறுகிறார். அந்தரத்தில் உள்ள பிதா என்பவர் உருவமற்றவர்தானே.

    பிறகு யேசுவே கடவுளாகவும், அவரது அன்னை மேரியும் கடவுளாகவும் உருவங்கள் வந்தன. 

    மனிதர்களின் உள்ளத்துக்குள்தான் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் சிலர். உடலே கோவில் உள்ளமே தெய்வம் என்கிறார்கள். 

    சித்தர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்.
    நட்ட கல்லை தெய்வமென்று
    நாலு புஷ்பம் சார்த்தியே
    சுற்றி வந்து மொணமொணன்று
    சொல்லும் மந்திரம் ஏதடா?
    நட்ட கல்லும் பேசுமோ
    நாதன் உள்ளிருக்கையில்..

    என்ற சித்தர் பாடலில் அவர் சொல்ல வருவது இதுதான். கடவுள் உள்ளத்துக்குள் இருக்கையில், கற்சிலையாக இருக்கும் கடவுள் எப்படிப் பேசும்? என்று கேட்கிறார்.

    இப்படிக் கடவுள்கள் குறித்து ஆளுக்கொரு விதமாய் பகுதிக்கொரு விதமாய் பேசி வருவதைப் பார்த்தால் எதுதான் கடவுள்? என்று அலுப்பு மேலிடுகிறது.

    கடவுள் ஒரே இடத்தில் ஒரே மாதிரிப் பிறக்கவில்லை. அங்கங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருப்பவர் கடவுள். நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருப்பவர் கடவுள் என்று பல்வேறு விதமாக வரையறைப் படுத்தப்படும் கடவுள்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கற்பிதம் செய்யப்படுகின்றனர்.

    கடவுள் எப்படி இருப்பார் என்பதில் குழப்பம் இருந்தாலும், அவர் எப்போது பிறந்திருப்பார் என்று நம்மால் அனுமானிக்க முடிகிறது. காட்டுமிராண்டியாக மனிதன் வாழ்ந்த காலத்தில், திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளமும், பற்றிப் படர்ந்த காட்டுத் தீயும் அவனை அச்சப்படுத்தியிருக்கும். பெய்த மழை அவனை ஆச்சரியப்படுத்தி இருக்கும். வீசிய காற்று அவனை அதிசயப்பட வைத்திருக்கும். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்று அவனால் கண்டு கொள்ள முடிந்திருக்கும். அந்தச் சக்திக்கு அவன் கடவுள் என்று பெயர் வைத்திருக்கக் கூடும். 

    அப்போதிருந்து சர்வ வல்லமை படைத்தவர் கடவுள் என்ற கருத்தாக்கம் விடாப்பிடியாக மனித சமூகத்துடன் வந்து கொண்டே இருக்கிறது. அதில் விதவிதமான வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும், அதன் மூலப் பொருள் ஒன்றுதான். 

    "சர்வ வல்லமை படைத்தது கடவுள்"

    "அனைத்தையும் படைத்தது அவரே"

    கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்று நமது சிந்தனை முடிந்து போய் விட்டால், விஞ்ஞானம் வளருமா? கடவுள் விஞ்ஞான வளர்ச்சிக்குத் தடையாக இருக்க மாட்டாரா?  

    இரவைப் படைத்தது அவர்தான் என்ற முடிவுக்கு மனிதன் வந்திருந்தால், அந்த இரவை வெளிச்சமாக்கும் விளக்கை மனிதன் கண்டுபிடித்திருப்பானா? 

    மழை பொழிவது அவன் செயல். அதை மறிப்பது பாவம் என்று மனிதன் நினைத்திருந்தால் குடை வந்திருக்குமா? 

    புயலும் பூகம்பமும் நம்மை அழித்துப் போட கடவுள் செய்து வைத்த விதி என்று மனிதன் முடிவு செய்திருந்தால், அவற்றை முன்கூட்டியே அறியும் கருவிகளைக் கண்டுபிடித்திருப்பானா? 

    பறவைக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்த கடவுள், மனிதனுக்கு அதைக் கொடுக்காமல் விட்டது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான். அதை மீறி நாம் பறக்க ஆசைப்படுவது பாவம் என்று மனிதன் நினைத்திருந்தால் விமானமும் ராக்கெட்டும் வந்திருக்குமா? 

    எங்கோ ஒருவர் பேசுவதை ஆடுவதை பாடுவதை பேசுவதை வேறு ஒரு இடத்திலிருந்து பார்க்க கடவுளின் அருள் பெற்ற ஞான திருஷ்டி படைத்த ஒருவனால்தான் முடியும் என்பதை மனித குலம் நம்பிக் கொண்டிருந்திருந்திருந்தால், இன்றைய தொலைக்காட்சிகளும் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமா?

    உடல் உறுப்பு பழுதடைந்தால், அது கடவுளின் கட்டளை என்று மனிதன் நம்பி இருந்தால், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா?

    இதுதான் இயற்கை விதி இதை மாற்ற முடியாது என்பதைத் தாண்டி, எப்படிப்பட்ட விதியானாலும் அதை மனிதனின் வசதிக்காக மாற்றிக் கொள்ள முடியும் எனும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. 

    இத்தனை விஞ்ஞானம் வளர்ந்ததற்குப் பிறகும் கடவுள் அவசியமா?
    அது அவசியமா இல்லையா என்பது இருக்கட்டும். இன்னும் நீடிக்கிறதே ஏன்?
    மனிதனுக்கு கடவுள் என்னதான் செய்கிறார்?
    கடவுளைப் பற்றி வெவ்வேறு விதவிதமான வியாக்யானங்கள் சொல்லப்படுகிறதே. 
    உண்மையில் எதுதான் கடவுள்?
    எப்படி இருந்தால் கடவுள்?
    கடவுளிடம் நாம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் அவரது வேலையா?
    மனிதனின் மனத்தில் கடவுள் விளைவிக்கும் அற்புதங்கள் என்ன?

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயற்சிப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

    கடவுளின் பெயரால்… தொடரும்….

     

      

  • Thiruppavai Padal 23

    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.