Kadaga rasi Ragu Kedhu Peyarci

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். 

கடக ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டிலும், கேது ஐந்தாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், பதினொன்றாம் வீடு என்பது லாபங்கள், தொழில் மூலம் வருமானம், மூத்த உடன்பிறப்புகள், நண்பர்கள், சமூக வட்டாரம், மற்றும் விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றைக் குறிக்கும். ஐந்தாம் வீடு என்பது, குழந்தைகள், புத்திசாலித்தனம், படைப்பாற்றல், காதல் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றைக் குறிக்கும். 

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. 

இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. 

ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
             
கடக ராசி அன்பர்களே, 
ராகு உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கடகத்திற்குப் பதினொன்றாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு நன்மை தரும் மாற்றமாக அமையும் எனலாம். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு வகையிலும் உங்களுக்கு லாபங்கள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக பொருள் சார்ந்த ஆதாயங்களை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். மூத்த உடன்பிறப்புகளுடன் நீங்கள் இணக்கமான உறவைப் பராமரிப்பீர்கள். 

அதிக நண்பர்களும் உங்களுக்குக் கிடைப்பார்கள். இதனால் உங்கள் சமூக வட்டமும் வளரும். உங்களில் சிலர் அதிக அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து கூட உதவி பெறலாம். சில புதியவர்களுடன் நட்பு ஏற்படுவதற்கும், வெளிநாட்டு நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கும் கூட நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதிகார வர்கத்தில் இருப்பவர்கள், மற்றும் அரசாங்கத்தின் மூலம் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில முக்கிய விஷயங்கள், இப்பொழுது உங்களுக்குக் கை கூடி வரும். நீங்கள் ஏதேனும் போட்டிகளில் பங்கேற்றால், பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெறுவதற்கான சரியான தருணமாகவும் இந்த காலக் கட்டம் விளங்கும். 

எனவே, இந்தப் பெயர்ச்சியின் பயனாக, உங்கள் வாழ்க்கை பொருள் வளங்கள், செழுமை, வெற்றி ஆகியவற்றால் நிறைந்து காணப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ஆசைகள் யாவும் கூட நிறைவேறலாம். இவ்வாறு, லௌகீக இன்பங்களைப் பொறுத்தவரை, உங்களுக்குப் பெரும் நன்மைகள் விளைவிக்கும் காலமாக இது அமையக்கூடும். 

கேது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கடகத்திற்கு ஐந்தாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சவால்கள் நிறைந்த காலமாக அமையக்கூடும். உங்கள் கடந்த கால செயல்களின் பலன்களை நீங்கள் இப்பொழுது அனுபவிப்பீர்கள். திருமணமான தம்பதியர் குழந்தை பாக்கியத்தை இப்பொழுது எதிர் பார்க்க இயலாது. அதே நேரம், குழந்தைகளுடனான உறவும், சுமுகமாக இல்லாமல், கவலை அளிக்கும் விதமாக இருக்கலாம். 

இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக அன்பையும், பரிவையும் காட்ட முயலுங்கள்; இது, அவர்களுடனான உறவை இணக்கமாகப் பராமரிப்பதற்குத் தேவையான ஒன்றாகும். தவிர, உங்கள் செயல்பாடு புத்திசாலித்தனமாக இல்லை என்ற எண்ணமும், இப்பொழுது உங்களை அலைக்கழிக்கலாம். மேலும், அதிர்ஷ்டம் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றின் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவதும், இப்பொழுது இயலாத ஒன்றாக இருக்கும்.  

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக இதயம் மற்றும் முதுகெலும்பு குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதே சமயம், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு போன்ற கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவும் இது இருக்கும். கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம், அவர்கள் கல்வியில் சிறக்க முடியும். ஆனால், இந்த நேரத்தில் உங்கள் கற்பனைத் திறன், சுற்றுலா செல்லும் ஆர்வம் போன்றவை குறைந்தே காணப்படும். 


நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

 

  •  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *