Thirupathy bakthargal dharisana ticket

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில், தனியார் வாகனங்கள் மூலம் திருமலையை வந்தடைகின்றனர்.

 
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் நீடித்து வருவதால் பக்தர்களின் வருகையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்து வந்தது.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் ஆயிரம் டிக்கெட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *