Thirupathy Ezhumalayanai Veetil Irundhapadiye

வீட்டில் இருந்தே பக்தர்கள் பங்கேற்கும் ஆன்லைன் சேவைகளுக்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் மேலும் பல சேவைகளை இணையதளம் மூலம் நடத்த ஏழுமலையான் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே வழிபடும் முறையில் ஆர்ஜித சேவைகளைத் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஜூன் மாதம் 8 ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு கிடைத்து வருகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத்தையொட்டி நடைபெற்ற குங்கும அர்ச்சனையில் பக்தர்கள் வீட்டில் இருந்தே ( விர்ச்சுவல் ) முறையில் ஆன்லைனில் பங்கேற்கும் விதமாக செய்யப்பட்டது. 

இதற்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையும் வீட்டில் இருந்தே பக்தர்கள் சம்பர்தாய உடை அணிந்து பங்கேற்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு அர்ச்சகர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி பங்கேற்று வருகின்றனர். இந்த கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 90 நாட்களுக்குள் ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. 

இதேபோன்று ஆர்ஜித பிரம்மோற்சவம், டோல் உற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளையும் பக்தர்கள் ஆன்லைனில் விட்டில் இருந்தே பங்கேற்கும் விதமாக  நவம்பர் மாதம் முதல்  தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என்பதால் இந்த சேவையில் பங்கேற்க நினைக்கும் பக்தர்கள் ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாடு முழுவதும், ஆந்திராவிலும் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நவம்பர் முதல் கோவிலுக்கு வெளியே நடைபெறக்கூடிய சகஸ்கர தீப அலங்கார சேவையும், இந்த சேவைக்கு பிறகு  மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவும் கொரோனா தொற்று  தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *