Blog

  • அதிசயம்: திருப்புட்குழியில் அசையும் கல்குதிரை!!

     

    சென்னை, வேலூர் செல்லும் வழியில் 80  கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்திலும்  இருந்து வேலூர் செல்லும் வழியில் 13  கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பாலுசெட்டி சத்திரத்தின் அருகில் உள்ளது திருப்புட்குழி.  ராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.  ஜடாயு பறவைக்கு ஈமக்கிரியை செய்யப்பட்ட தலம் என்பதால், இத்தல முலவரான விஜயராகவப் பெருமாள் ஜடாயுவை தன் மடியில் வைத்தபடி காட்சி தருகிறார். நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். , பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58 வது திவ்ய தேசம். தாயார் பெயர் மரகதவல்லி என்பதாகும்.  இவருக்கு தனி சன்னதி  உள்ளது.  இங்குள்ள தாயார் வருத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என அழைக்கப்படுகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டும்.பெண்கள் இங்குள்ள ஜடாயு திர்த்தத்தில் நீராடி,மடப்பள்ளியில் தரும் வறுத்து, நனைத்த பயறை தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின்  அதிசயம் என்னவென்றால்,உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக்கொண்ட  கல்குதிரை. இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம்.  ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால் ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள்  அமாவாசையன்று  இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • 6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில்

    6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது. இது பாதி நேரம் கடலினுள் முங்கியே காணப்படுகிறது. இந்த கோயில் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே அமைந்துள்ளது. இத்தனை அதிசயம் நிறைந்த கோயிலை கட்டியவர்கள் பாண்டவர்கள் என்று நம்பப்படுகிறது. மகாபாரதப் போரில், பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களையே கொன்றதான் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த கடலுக்குள் ஐந்து சிவலிங்களை அமைத்து, அதைச் சுற்றி கோயிலையும் கட்டியுள்ளனர் பாண்டவர்கள். கடலுக்குள்ளே இருந்தால் பக்தர்கள் எப்படி செல்வார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்? இரவு பத்துமணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் இந்த கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும். மதியம் 1 மணிக்கு பிறகு கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி, கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள், கடலுக்கு நடுவே இருக்கும் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். அரிய நிகழ்வு என்றவுடன் ஏதோ வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று நடக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அன்றாடம் இந்த நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  • லட்சுமி குபேரன் கோயிலில் தீபாவளிக்கு சிறப்பு பூஜை….

    சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள்ள பழமையான லட்சுமி குபேரன் கோயில். தீபாவளி தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தீபாவளி தினத்தன்று குபேரனை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதால், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தினமும் கோயில் நடை காலை 5.30 மணிக்கே திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன். அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நம்பிக்கை. அதேப்போல கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே, இந்த கோயிலில் இருக்கும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பழங்கள் அளிப்பது குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது.

  • எல்லோரும் கொண்டாடிய தீபாவளி!

     

    தீமை அழித்து நன்மை  பிறக்கும்  நாள் தீபாவளி!

    தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் தீபாவளி என்கின்றனர்.ஒளி என்பது வெற்றியின் அடையாளம்.இருள் என்பது தோல்வியின் பொருள் ஆகும்.தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் மற்றும்  இந்துக்களை தவிர  பிற நாட்டவரும்,பிற மதத்தவரும் கூடக்   தீபாவளியை கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.

    பழங்கால இந்திய மன்னர்கள்,இந்துக்களாக இருந்தாலும்,முகலயர்களாக இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும்  மக்களுக்கு பரிசுகள் மற்றும் சலுகைகள்  தர வழக்கத்தில் இருந்தது. தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம்,எகிப்து, பாபி லோன், கிரேக்கம்,பராசீகம் பல உலக நாடுகளுடன் வர்த்தக  தொடர்புகள் இருந்துள்ளன. இந்தியாவிலிருந்து  வாசனை திரவியங்கள்,மூலிகைகள்,யானை தந்தங்கள் எடுத்து சென்றதாக வரலாற்று கூறுகிறது. அந்த வணிக தொடர்பின் போது  இந்தியாவிலிருந்து சென்ற பல வணிகர்கள் இடம்பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். ஆகவே பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி.சீக்கியர்களும் சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக  கொண்டாடிகின்றனர்.

     

    சீக்கியர்களின் தீபாவளி …!!

      

    சீக்கிர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசீக்கியசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை “பந்தி சோர்ரா” என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் “கால்ஸா” என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது.

     

    சைனர்களின் தீபாவளி..!!

     

    சைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள் சைமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி “உத்தராத்த்யாயன் சூத்ரா”வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அகஞான  இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

     

    வங்காளத்தில் தீபாவளி …!!

     

     

     கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள் பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் “பாய் போலே” என்ற பெயரில் நடக்கிறது.

    ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் தீபாவளி ..!!

     

     ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும் ,இதைக் குறித்து “அன்னகுட்” என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள்.

     குஜராத்தில் தீபாவளி …!!

     

    தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன, கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது, வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர்,

     

    மஹாராஷ்ட்ராவில் தீபாவளி..!!

     

    மஹாராஷ்ட்ராவில் இதை “பலிபாத்யாமா என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. தீபாவளியின் ஒரு வாரம் முன்பே “ரங்கோலி” என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளிஅன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர். பின் “பாவுபீஜ்” என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர்.

     

    தீபாவளி பிறந்த கதை!

     

     

    நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் தீபாவளி, அதாவது தீபங்களின் வரிசைகள், இந்த ஆசையைக் கேட்டது நரகாசுரன் தான். தான் மரணம் அடையும் தருவாயில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். ஆமாம் யார் இந்த நரகாசுரன்?

    பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

    இதற்கு நடுவில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம்  செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, “அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், ஏதாவது வரம் கேள்” என்றார். “நான் சாகக்கூடாது ,என்க்குச் சாகாவம் அருளுங்கள்”

     “உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்” “ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது” “தந்தேன் நரகா, நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்” இதைக்கூறி பிரும்மா மறைந்து விட்டார்.

    ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். எல்லா லோகத்தையும் ஜயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலமையைக் கூறி காப்பாற்றுமபடிக் கேட்டுக் கொண்டனர். “கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்” என்றார் கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாம ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் க்லைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் த்ன் கதை வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்?

    சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், “என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் கீழே சாய்ந்தான். அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான் வரனைக் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். தீப ஒளி நாம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றி வைப்போம்.

  • தீபாவளி வந்திருச்சு…!!!

     

    தீபாவளி நெருங்குகிறது, ஆ, மஜாதான். இனிப்பு என்ன! புது உடைகள் என்ன! விதவிதமான பட்டாசுகள் என்ன! விஜயதசமி அல்லது தசரா முடிந்தவுடனேயே தீபாவளி களை கட்டிவிடுகிறது. எல்லாக் கடைகளிலும் ஜே ஜே என்று கூட்டம், அதுவும் ஜவுளிக் கடைகளில் கேட்கவே வேண்டாம், தவிர, அடுத்து வருவது பட்டாசுக் கடைகள். இப்போதே பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி விட்டது. வாண வேடிக்கைகள் பார்க்கக் கண்களுக்கு ஒரு விருந்துதான், ஆனால் இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.

    முன் காலத்தில் மாடி வீடுகள் அதிகம் இல்லை. திறந்த வெளிகள் நிறைய இருந்தன, ஆகையால் புகை வானத்தில் போக வசதியாக இருந்தது. இப்போது பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்து அடைத்துக் கொண்டு விட்டன. சில பதினாறு மாடிகள் வரை உயர்ந்து நிற்கின்றன. ஆகையால் இந்தப்ப புகை மண்டலம் கீழேயே அதிகம் சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் திருநாள் என்றால் வாண வேடிக்கை வேண்டுமே! இந்தத் தீபாவளிப் பண்டிகைக்குக் காரணாமான நரகாசுரனே தன் மரணத்தை வாண வேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டானாம், ஏன் என்றால் அவனுக்குக் கடைசியில் கண்ணன் அல்லவா காட்சி அளித்தார்?

     

    இப்போது பட்டாசு வெடிப்பதைப் பற்றிப் பார்க்கலாம். பட்டாசு கொளுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விபத்து நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச்சுற்றி இருப்பவருக்கும் வருவது உண்டு. மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளை வருத்தத்தைக் கொடுத்து விடும். பெரிய வெடிகளை பெரிய அண்ணா அல்லது வேறு பெரியவர்கள் துணையுடன் அல்லது அவர்கள் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுவத்தி ஏற்றி நேருக்கு நேர் நிற்காமல் சாய்ந்தவாட்டில் நின்று கொளுத்த வேண்டும். நைலான்

    ஆடை அல்லது பட்டாடை தவிர்க்க வேண்டும். பட்டாசு விடும் போது ஒரு கர்ச்சீப்பை நனைத்து முகத்தில் முகமூடி போல் கட்டிக் கொள்வது நல்லது, ஆஸ்மாகாரர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் அவ்சியம். எதை ஏற்றினாலும் அது முடிந்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். சுடச்சுடக் கீழே போட்டுவிட்டு அதைத் தவறிப் போய் யாராவது மிதித்துப் பின், “ஆ சுட்டுவிட்டதே எரியறதே!” என்று அலறுவதைத் தவிர்க்கலாமே. பட்டாசு வெடிக்கும் போது அருகில் கார், ஸ்கூட்டர் இல்லாமல் இருப்பது நல்லது. பெட்ரோல், டீசல் போன்றதிலிருந்து தூரமாக இருப்பது நல்லது தானே! வீட்டில் நோயாளிகள் அல்லது வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அங்கு வெடிக்காதீர்கள். பாவம், நோயால் அவதிப் படும்போது இதனால் இன்னும் சிரமம் ஏற்படலாம். அதே போல் சின்னப் பாப்பா இருந்தாலும் அந்த வெடிச் சத்தத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போடும், அதன் அருகில் வேண்டாமே!

     

    இதே போல் வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பட்டாசு என்றால் மிகவும் பயம். அதன் உடல் சத்தம் கேட்டாலே நடுங்கும், அதை ஒரு அறையில் வைத்துக் கதவைச் சத்தம் வராதபடி மூடி வைக்க வேண்டும். பட்டாசுகளை டப்பாவிலோ பாட்டிலிலோ வைத்து விடுவது கூடாது. சில ஏழைக் குழந்தைகள் ஏக்கமாகத் தானும் விடமாட்டோமே என்று பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கும் திறநத மனதுடன் பாட்டாசுகளைக் கொடுங்கள். உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு நாம் மகிழ்ச்சி கொடுக்க நம் மனமும் மகிழும்.

    தமிழகத்தில் பாட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 முதல் இரவு 10 வரை. பொது இடங்களில் பொது வழிகளில் வெடிக்கக்கூடாது. சுற்றுப்புறச்சூழல் விதிப்படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசை வெடிக்கக் கூடாது. பட்டாசு ஏற்றி ஹீரோ போல் கையில் வைத்துப் பின் விசிப் போடக்கூடாது.

    தவறிப்போய் உடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. ஒருவரையும் பயத்தில் அணைக்கக்கூடாது. உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீப்புண் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய காட்டன் துணியினால் மூட வேண்டும். பின் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். தன் இஷ்டப்படி மருந்துகளை அதன் மேல் தடவக்கூடாது.

    தீபாவளிப் பண்டிகையின்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்க நினைப்பது அனைவரின் விருப்பம் என்றபோதிலும், கொண்டாட்டங்களின் போது, பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நீடிக்கும்!

     

  • திருப்பரங்குன்றத்தில் தங்கவேலுக்கு மகா அபிஷேகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமரருக்கு எடுத்து சென்று, அங்குள்ள கங்கை தீர்த்த குளத்தில் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை 10 மணிக்கு கருவறையிலிருந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் எடுத்து வரப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் இருந்த பல்லக்கில் வைக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மலைமேல் உள்ள குமரர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளத்தில், தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல்முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷத்துடன் பக்தியுடன் சாமி கும்பிட்டனர் பின்பு பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசிவிசுவநாதர் கோவில் மற்றும் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியசாமி சன்னதி வளாகத்தில் உள்ள வற்றாத கங்கை தீர்த்த குளம் உள்ளது. இது, தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனம் பெறுவதற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல்கொண்டு மலையின் பாறையை கீறி உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இதை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, கோவிலின் கருவறையில் இருந்து முருகப் பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமாரருக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம். அதுபோல இந்தாண்டுக்கான வேல் எடுக்கும் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

  • சூரனைச் வதம் செய்த கந்தப் பெருமான்….

    கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.
    முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
    சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
    கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
    ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

  • குற்றாலநாதர் கோவிலில் தேரோட்டம்….

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன்பிறகு முருகன் தேரும், தொடர்ந்து குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய்மொழியம்மை தேர் ஆகியனவும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. காலை 11 மணிக்கு தேரோட்டம் நிறைவு பெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18-ம் தேதி காலை 9 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது.

  • கந்த சஷ்டி அனுசரிக்கும் முறை….

    கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை
    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று. கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்த்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர். கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்

  • செல்வம் கொழிக்கும் குபேர பூஜை

     

    இருள் அகற்றி நமது வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி திரு நாளில் குபேர பூஜை செய்தால், பல வழிகளிலும் செல்வம் நம் வாசல் வந்து சேரும்.அருள் இல்லார்க்கு  அவ்வுலகம் இல்லை என்றால் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் நம் வாழ்வின் பல விசயங்களை முடிவு செய்கிறது. ஒருவர்  வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி, குபேர பூஜை செய்வது அவசியம்.  தீபாவளி குபேர பூஜை செய்ய உகந்த நாள் . வீட்டில் தீபாவளியன்று குபேர பூஜை செய்ய செல்வ செழிப்பு தழைத்தோங்கி வளரும்.

    மகாலட்சுமி சுத்தமாகவும், நறுமணம் நிறைந்திருக்கும்  வீட்டில்  விரும்பி கொலுவிருப்பாள். முதியோர்களுக்கும் மரியாதையும், குழந்தைகளுக்கு தேவையான  அன்பும் எங்கு இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி  அருள்மழை பொழிவாள் என்கிறது புராணம்.

    லட்சுமி  குபேர பூஜையை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தினம் இரவே செய்வது நல்லது.

    தீபாவளி திருநாள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில்  கிழக்கு அல்லது மேற்கு திசையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும்  புஷ்பலங்காரம்  செய்யவேண்டும்.

     லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

    அடுத்து  மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வாழையிலையின் வலது பக்கமாக வைத்து  குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    விநாயகர் வழிபாட்டுடன் மகாலட்சுமி துதி பாடல்களை பாடி வணங்கலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாவிட்டால் குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்தாலே போதும்.உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் இவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கதீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

     இப்படி பூஜை செய்த பின்னர் தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டும்.  தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் , சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கி கடன் பிரச்னைகளில் இருந்து  விடுபடுவர்  என்பது ஐதீகம்.

    தீபாவளி அன்று புதன் ஹோரையில்  லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதை தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

    இப்படிச் செய்யும் போது , நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

     

    தீபாவளி அன்று செய்யும்  ள ட்சுமி குபேர பூஜையும், நாணய பூஜையும் ஆண்டு முழுவதும் நம் செல்வ நிலையை மேம்படுத்தி தரும்.