Blog

  • 2018-03-15-15-04-36

     

    பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்படுதல் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு, பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி -அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி – அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது.

  • 2018-03-14-14-14-55

    திருப்பதியில் அன்னமாச்சார்யாரின் சிலைகளுடன் மலை ஏறிய அன்னமாச்சார்யா திட்டத்தினர்.
    திருப்பதியில் அன்னமாச்சார்யாரின் 515-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை படி உற்சவம் நடைபெற்றது.
    நிகழ்ச்சியையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யாரின் திட்டத்தினர் செவ்வாய்க்கிழமை காலை திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பாதாள மண்டபத்தில் அன்னமார்ச்சார்யாரின் சிலையை வைத்து, பஜனை பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்தனர்.
    அதன்பின், அன்னமாச்சார்யாரின் சிலைகளுடன் அவர்கள் பஜனை பாடல்களை பாடிய படி திருப்பதி மலையில் ஏறி ஏழுமலையானை தரிசித்தார்.

  • 2018-03-14-13-21-39

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், அடியந்திரபூஜை, குத்தியோட்டம், சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தன. சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்களை கோவில் பூசாரிகள் 9 மண்பானைகள் மற்றும் ஓலைப்பெட்டிகளில் வைத்து பவனியாக கொண்டு வந்தனர். மேலும் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. மண்பானைகளை சுமந்து வந்த பூசாரிகள் தங்களது வாயில் துணியால் முடியிருந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளைத்துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டிருந்தது. இந்த பவனி கோவிலுக்கு வந்து முடிவடைந்தது. ஒடுக்கு பவனியின்போது எந்த சத்தமும் கேட்காதபடி மக்கள் அமைதியாக இருந்தனர். ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை சுற்றி வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவை அம்மனுக்கு படையலிடப்பட்டன. அதைத்தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனை நடந்தபோதே திருவிழா திருக்கொடியும் இறக்கப்பட்டது.

  • 2018-03-14-13-08-32

    பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். அதன் பிறகு இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. 15 ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.இதன் பின்னர் பங்குனி உத்திர திருவிழாவிற்காக 20ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

  • 2018-03-13-13-13-00

    திருப்பதி ஏழுமலையானை தொலைவில் இருந்து பளிச் என்று தரிசிக்க புதிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கூடுதல் நெய் விளக்குகளை ஏற்றி, பக்தர்கள் தெளிவாக பார்த்து தரிசிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் 70 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய உற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு தரிசிக்கும் பக்தர்கள், ஜெயபேரி விஜயபேரி சிலை அருகில் இருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் நின்றபடி ஏழுமலையானை தரிசிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு தரிசிக்கும்போது சுவாமியின் உருவம் தெளிவாக தெரியாமல் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். மேலும் கோயிலின் ஆகம விதிப்படி கருவறையில் மின்விளக்குகள் பொருத்தக்கூடாது என்பதால் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பக்தர்களின் புகார்கள் குறித்து அதிகாரிகளுடன் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து கோயில் கருவறையில் கூடுதல் நெய்விளக்குகள் வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தி பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி 2 ஏகாங்கிகள் நியமித்து கூடுதலாக 2 நெய்விளக்குகள் வைக்கப்பட்டு அதிகளவு நெய் ஊற்றி அந்த விளக்குகளில் உள்ள திரிகளை அதிகாலை 2.30 மணி, பகல் 11 மணி, மாலை 6.30 மணி என 3 வேளைகளில் மாற்றி பிரகாசமாக எரிய விடப்பட்டுள்ளது. கூடுதல் விளக்குகள் வெளிச்சத்தில் கருவறையில் உள்ள ஏழுமலையானை பக்தர்கள் தெளிவாக கண்டு தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • 2018-03-13-12-42-51

    பஞ்சபூத ஸ்தலங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் நீர் ஸ்தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு மண்டல பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வருகிற ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.மண்டல பிரமோற்சவத்தின் முக்கியவிழா பங்குனி தேர் திருவிழாவாகும். இத்தேர்திருவிழா எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கோயிலின் 3 மற்றும் 4ம் பிரகாரங்களில் எட்டுத்திக்கிலும் உள்ள கொடிமரங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற்றது. அதனையொட்டி, சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடியேற்றத்தை கண்டருளினார். 3ம் நாள் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் இரவு சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5ம் நாள் இரவு சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ம்தேதி நடக்கிறது. இதையொட்டி, சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேரில் எழுந்தருளி 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பங்குனி தேர்த் திருவிழா வருகிற 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து மௌனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவமும், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 2ம்தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பர். ஏப்ரல் 4ம் தேதியுடன் மண்டல பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.

  • 2007

    பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜைகளும் நடைபெற்றது. முன்னதாக பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் 2007 இளநீரை தலையில் சுமந்தபடி டிரங்க் சாலையில் குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். உடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் வந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

  • 2018-03-12-06-29-44

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சசைப் பட்டினி விரதம் தொடங்கி உள்ளது. பூச்சொரிதல் தொடங்கியவுடன் அம்பாள் உலக நன்மைக்காக பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்குவதாக ஐதீகம். அதன்படி அம்மன் விரதத்தைத் தொடங்கினார். இந்த விரதம் 28 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வழக்கமான நைவேத்தியத்திற்குப் பதிலாக உப்பில்லாத தயிர்சாதம், வெள்ளரிப் பிஞ்சு, தூள் மாவு, பழங்கள், ஊற வைத்த பாசி பருப்பு போன்றவை படைக்கப்படுகின்றன. அம்மனின் பக்தர்களும் அம்மனைப் போல பச்சை பட்டினி விரதத்தைத் தொடங்கினர். விரத நாட்களில் பக்தர்கள் மஞ்சளாடை உடுத்தி, விரத உணவை உண்பர். இந்த விரதம் பங்குனி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை வரை உள்ள 28 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தேவஸ்தான புஷ்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து கூடை கூடையாக பூ கொண்டு வந்து அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் பணியாளர்கள் செய்தனர். அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் 2-ஆவது வார, 3-ஆவது வார, 4-ஆவது வார பூச்சொரிதல் விழாக்கள் நடைபெற உள்ளன. சித்திரை மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

  • 2018-03-12-06-13-17

    பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து காலை 6.45-க்கு மீன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் ஊழியர்கள், ஊர்ப் பிரமுகர்கள் தட்டு, கூடைகளில் பூக்களை சுமந்து கொண்டு யானையுடன், மேள தாளத்துடன் ஊர்வலமாகச் சென்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து காப்புக் கட்டப்பட்டது.

  • 2018-03-10-13-25-34

    கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலை தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாரத்துக்கு கூடுதலாக 17 ஆயிரம் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகின்றன. ஏழுமலையான் தரிசனத்தை எளிமையாக்க தேவஸ்தானம் இணையதளம் வாயிலாக ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியது. இதன் மூலம் தினந்தோறும் 18 ஆயிரம் டிக்கெட் வரை முன்பதிவு செய்யப்படுகின்றன. பக்தர்கள் தங்கள் விடுமுறை நாள் மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து 90 நாள்களுக்கு முன்பாக திருமலை பயணத்தை முன்பதிவு செய்கின்றனர். இந்த தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க முடிவதால் வாடகை அறைகளும் அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. இந்நிலையில் தேவஸ்தான இணையதளத்தில் இதுவரை தேவஸ்தானம், ஏப்ரல் மாத கோட்டாவை வெளியிடவில்லை. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் இந்த தரிசன டிக்கெட்டின் எண்ணிக்கையை உயர்த்தி, ஒரு வாரத்துக்கு கூடுதலாக 17 ஆயிரம் டிக்கெட்டை இணைத்து இன்னும் 3 நாள்களில் ஏப்ரல், மே மாத கோட்டாக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.