Blog

  • 2018-04-04-14-59-17

    மக்களைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும்.
    இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன.
    திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது.அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.
    அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும்.
    இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான்நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ரங்கநாதருக்கு வைத்தியம் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது.
    தமிழகத்தில் கோவில் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தன்வந்திரி பகவானுக்கு தனி ஆலயம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது. ஸ்ரீ தன்வந்திரி பகவான் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
    இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். ஆரோக்கிய பீடம் இங்குள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வலம் தரும் வாஸ்து பகவான் முதல் சஞ்சலம் போக்கும் சஞ்சீவிராயர் வரை ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் 75க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களும் இருப்பதும் ஒரு தனி நபராக பீடத்தை நிறுவி இருப்பது தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த உலகமே வாலஜாவை திரும்பி பார்ப்பது ஆச்சர்யமே. இங்கு யோகா மற்றும் இயற்கை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. தினசரியும் யாகம் தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். தன்வந்திரி பகவான் சிலை எட்டு அடி உயரம். ஒரே கல்லால் செய்யப்பட்டது. சுமார் இரண்டு டன் எடையுள்ளது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். நான்கு திருக்கரங்கள். பகவானின் திருமார்பில் வலது பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமியின் உருவம் இருக்கிறது.
    சற்றுக் கீழே கஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேற்கரத்தில் சக்கரம். வலது கீழ்க்கரத்தில் அமிர்த கலசம். இடது மேற்கரத்தில் சங்கு. இடது கீழ்க்கரத்தில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் செய்யப்பட்ட அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதஸ்கோப்பும், கைக்கடிகாரமும் வைத்து, கத்தியும் இடுப்பில் பெல்ட் அணிந்து தலைமை அலோபதி மருத்துவாகத் தரிசனம் தருகிறார். கோவிலுக்கு செல்லும் வழி 46 லட்சம் பக்தர்கள் கைபட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார் தன்வந்திரி பகவான். ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

  • 2018-04-04-14-52-09

    ஸ்ரீகாளஹஸ்தி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் துணைக்கோயிலான முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சரக உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் மயில் கோலம், சேஷபானு கோலம் ஆகியவை போடப்பட்டது. இதில் ஸ்ரீகாளஹஸ்தியை சுற்றிய பகுதிகளை சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
    இதேபோல் இன்று (4ம் தேதி) காலை கிராம கடவுள் கோலமும், மாலை ரேணுகாதேவி கோலமும் மதியம் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    விழாவின் நிறைவு நாளான நாளை(5ம் தேதி) காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை மற்றும் கோயில் வளாகத்தில முத்துமாரியம்மன் கோலமும், இரவு அம்மன் ஊர்வலமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா செய்து இருந்தார்.

  • 2018-04-04-14-36-02

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    அதற்கான கவுண்ட்டர்கள் அமைக்கும் பணி ரூ.3 கோடி செலவில் நடந்து வருகிறது. அந்தப் பணி இன்னும் முடியாத நிலையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் வருகிற 10-ந் தேதிக்குள் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, கட்டிடத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    2013-ம் ஆண்டு 300 ரூபாய் டிக்கெட் ‘டைம் ஸ்லாட்’ முறையில் வழங்கப்பட்டது. அதேபோல் 2017-ம் ஆண்டு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகளில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசன அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
    அதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது.
    இந்தத் திட்டம் வெற்றி பெற்றதால், ‘டைம் ஸ்லாட்’ முறையில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அட்டை வழங்கும் பணியை வருகிற 10-ந் தேதிக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
    அதற்காக திருமலையிலும், திருப்பதியிலும் கவுண்ட்டர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கவுண்ட்டர்களில் பக்தர்கள் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கைகள், மின் விசிறிகள், கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
    இலவச தரிசனத்தில் முதியோர் பலர் செல்கிறார்கள். முதியோருக்காக மாதத்தில் இரு முறை சிறப்பு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்பு தரிசனத்தில் செல்ல முடியாதவர்கள் இலவச தரிசனத்தில் சென்று ‘டைம் ஸ்லாட்’ தரிசன அனுமதி அட்டையை பெற வசதியாக அவர்களுக்கென தனிக் கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ‘டைம் ஸ்லாட்’ முறையிலான தரிசன அனுமதி அட்டை பெற வரும் அனைத்துத் தரப்பு பக்தர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
    ஒரு முறை ‘டைம் ஸ்லாட்’ அனுமதி அட்டையை பெற்ற ஒரு பக்தர் 15 நாட்களுக்குள் மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ அட்டையை பெற முடியாது. அத்துடன் சாமி தரிசனமும் செய்ய முடியாது. அதற்காக கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
    மேலும் திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இலவச தரிசனத்தில் சென்று வழிபட முடியாது. அவர்களுக்கும் ‘டைம் ஸ்லாட்’ முறையிலான தரிசன அனுமதி அட்டை வழங்க முடியாத அளவுக்கு கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது.
    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் ஆதார் அட்டையோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ இல்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுத்து இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews

  • 2018-04-02-13-15-28

    ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை ‘சஹஸ்ரகலசாபிஷேகம்’ போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.

  • 2018-04-02-12-58-29

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 21ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
    இதையடுத்து கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானைக்கு திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
    12ம் திருநாளான நேற்று சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதியுலா வந்து பட்டினப்பிரவேஷம் சென்றனர். 13ம் திருநாளான இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது.

  • 2018-04-02-12-49-39

    கல்லங்குறிச்சி, கலியுகவரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    தமிழகத்தின் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுவது, கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த மார்ச் 25-ம் தேதி துவஜாரோகணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
    7-ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து வெண்ணெய்த்தாழி உற்சவமும் மாலையில் வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழாவில் காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். முன்னதாகச் சிறிய தேரில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று நிலையத்தை வந்தடைந்தது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • 2018-04-02-12-37-09

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீ மிதித் திருவிழா நடைபேற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை ஸ்ரீசவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து நாக்கில் வேல் குத்தியும். பால் குடம் எடுத்தும் வீதி உலாவாக வந்து தண்டாயுதபாணிசுவாமி கோயில் முன்பாக பரப்பட்டிருந்த தீ குழியில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

  • 2018-04-02-12-20-25

    ஆறு படை வீடுகளில் முதல் படை வீடாள் திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா 14 நாட்கள் நடைபெறும். கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் 14 நாள் திருவிழா தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
    12ம் நாள் திருவிழாவான இன்று அருள்மிகு திருக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை திருமண நிகழ்ச்சி திருக்கோயில் ஆறுகால் மண்டபத்தில் மதியம் 12:39 க்கு கடக லக்னத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மற்ற பூஜைகள் மற்றும் தீபாரனை காட்டப்பட்டது.
    இந்நிகழ்ச்சிகாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிருந்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருளினர். திருக்கல்யாண நிகழச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் தாங்கள் திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக் கொண்டரை்.

  • 2018-04-02-09-00-35

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
    இதனையடுத்து ஆறு கால் மண்டபத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. மேலும் நாதசுவரம் ஒலிக்க மேள, தாளங்கள் முழங்க நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி கும்பிட்டனர்.
    மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வார். இதேபோல் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றத்திற்கு வருவார்கள்.
    இதன்படி இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்கும் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்காக மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர்.

  • 2018-04-02-08-28-25

    ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் , 11வது பட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள் (84), கடந்த, 19ம் தேதி திருநாட்டை அலங்கரித்தார் (காலமானார்). மறுநாள், ஸ்ரீரங்கம் பெரியாஸ்மரத்தில் அவரது உடல் திருப்புட்குழி புகுந்தது (நல்லடக்கம் செய்யப்பட்டது).
    தனக்கு பிறகு, 12வது பட்டத்திற்கு வர வேண்டிய, மூன்று பேர்களின் பெயர்களை மறைந்த ஆண்டவன் ஸ்வாமிகள் குறிப்பிட்டிருந்தார்.
    அதனடிப்படையில், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒன்று கூடி கலந்தாலோசித்து, 12வது பட்டமாக வெள்ளியனூர் நாராயணச்சாரியரை புதிய ஆச்சாரியராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
    திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும், வெள்ளியனூர் நாராயணாச்சாரியர் விரைவில் பட்டமேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதிய பட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணச்சாரியார் பூர்வாசிரமத்தில், சின்னாண்டவன் திருக்குடந்தை ஸ்வாமிகளின் கொள்ளுப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.