Category: கோவில்கள்

கோவில்கள்

  • ஆறாவது முகம் பின்னால் அமைந்து இருக்கும் சிறப்பு வாய்ந்த முருகன் கோயில்

    பெரும்பாலான கோவில்களில், முருக பெருமான் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால் ஆறாவது முகம் மட்டும் பின்னால் இருக்கும் சிறப்பு வாய்ந்த முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் திருமுருகன் பூண்டி முருகன் கோயில் தான் அந்த கோயில். 

    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. 

    இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

    வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.
     

  • நாம் இழந்ததை திருப்பித்தரும் சுந்தரவரதபெருமாள்

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகியவை பல நூறு ஆண்டுகளாக தொடர் இயக்கத்தில் இருக்கும் நகரங்கள்.. பூமிக்கடியில் பழமைகளை பொக்கிஷங்களாக கொண்டிருக்கும் நகரங்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நடப்புகளின் சாட்சிகளாக நின்று கொண்டிருக்கும் தொன்மையான நகரங்களில் ஒன்று உத்திரமேரூர். உத்திரமேரூரில் உள்ள கோயில்களில் பொதுவாக காணப்படும் அம்சம் என்னவெனில் அங்குள்ள கோயில்களில் கோஷ்ட தேவதைகள் இருக்காது. 

    மற்ற கோயில்களை பார்ப்பதற்கு முன் உத்தரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலை பார்க்கலாம். 
    உத்தரமேரூரை அடைந்ததும் பேருந்து நிலையத்தில் இருந்து பார்த்தாலே தெரிவது சுந்தர வரதராஜ பெருமாள் கோயில்தான்.

    பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது இந்த கோயில். பின்னர் ராஜராஜ சோழன் காலத்திலும், பாண்டியர்கள், சம்புவராயர்கள் என பின்னர் வந்த மன்னர்களின் காலகட்டங்களிலும் நன்கொடைகள் வழங்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் இந்த கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

    பெருமாள் நின்றும், இருந்தும், கிடந்துமாக மூன்று நிலைகளில் உள்ள கோயில்களில் சுந்தர வரதபெருமாள் கோயிலும் ஒன்று.  கோயிலின் கட்டுமானம் தனிச்சிறப்பானது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு 5 நிலை கோபுரம்தான் தெரியும். உள்ளே நுழைந்தால் வலப்பக்கம் பாழடைந்த மண்டபம் தென்படும். நேராக சென்று படிக்கட்டுகளில் ஏறி, கருடாழ்வார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால் நின்றகோலத்தில் நான்கு கரங்களுடன் கூடிய பெருமானைக் காணலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய திருக்கோலமது. 

    வரதர் என்றாலே வரப்பிரசாதிதான். இந்த சுந்தர வரதரும் பேருக்கேற்றார்போல, வரம் தரும் வரதராகவே இருக்கிறார். இந்த சன்னதியின் இருபுறமுமாக வளையும் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.


    அடுத்த படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால், ஆதிசேஷன் மீது கிடந்த திருக்கோலத்தில் அனந்த பத்மநாபராக காட்சி தருகிறார். கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் தெற்கு நோக்கி அச்சுத வரதர், மேற்கு நோக்கி அனிருத்த வரதர், வடக்கு நோக்கி கல்யாண வரதர் என பார்க்க பார்க்க திகட்டாத திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார் பெருமாள். 
    மடி மீது தேவியை அமர வைத்துக்கொண்டு இருக்கும் வராக பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்ட பெருமாளையும் இங்கு தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். 

    இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலமாக சுந்தர வரத பெருமாள் திருக்கோயில் கூறப்படுகிறது. 

    இதன் பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வந்தால் வாழ்க்கையில் எதையெல்லாம் இழந்ததாக கருதுகிறீர்களோ அத்தனையையும் திருப்பித்தர காத்திருக்கிறார் சுந்தர வரதராஜ பெருமாள். 


    இழப்பென்று கருதுவதெல்லாம் இழப்பல்ல.. இந்த இறைவனை கண் கொண்டு பார்த்தபின் இழப்பெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.. தோல்வி, அவமதிப்பு, வஞ்சனைகளால் விரட்டப்பட்ட பாண்டவர்களுக்கு அருள்பாலித்து அவர்களை மீண்டெழச்செய்த பெருமாள் இங்கே சுந்தர வரதராஜராகவும், வைகுண்ட பெருமாளாகவும் எழுந்தருளியிருக்கும்போது நமக்கெல்லாம் என்ன குறை.. ? 

    குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா.. குறை ஒன்றும் இல்லை கண்ணா..

    – எழுத்தாளர் பாமா
     

  • தலைகீழாக நிழல்விழும் ஈசன் கோவில் கோபுரம்  

    ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது இந்த கோயில்.

    பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது.

    விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது. 

    ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு பொருள்  இடையில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின் உச்சமாகும்.

    கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும். இல்லை இது கட்டடக்கலையின் நுட்பம் என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். 

    ஆனாலும் இதுவரை இரு தரப்பு வாதங்களும் நிரூபிக்கக்படவில்லை என்பதே உண்மை.

    அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும். படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.

    எண்ணிலடங்கா மர்மத்தோடு விருபாட்சர் திருக்கோயில் நம் கலாச்சாரத்தின் சின்னமாகவும் நம் கட்டிடக்கலையின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் சின்னமாகவும் விளங்கி நமக்கெல்லாம் பெருமை சேர்கிறது.

  • சென்னை காளிகாம்பாள் கோயில் பற்றிய சில தகவல்கள்…

    காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.

    ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.

    தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.

    சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.

    காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.

    காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.

    காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.

    ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.

    காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

    காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.

    அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.

    காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.

    காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் “சொர்ணபுரி” என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.

    காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.

    இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.

    காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.

    இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.

    திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

    இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.

    சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.

    இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது.

    இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி.

    காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.

    “உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.

    இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.

    இங்கு குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     

  • திருப்பதி ஏழுமலையான் கோயில்  வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்….

    நிகழ்ச்சி நிரல்….
    29.09.1019
    7.00pm அங்குரார்ப்பணம்.
     
    30.09.2019
     3.00P.M. தங்க திருவாட்சி 5.00PM கொடியேற்றம் 
    6.00PM. ஊஞ்சல் சேவ
    7.00PM ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு.
    8.00.P.M. பெரிய சேஷ வாகனம்.

    01.10.19
    9.00AM. சின்ன சேஷ வாகனம்.
    2.00.PM. சப்னா திருமஞ்சனம். 
    8.00.P.M ஹம்ச வாகனம்.

    02.10.2019
    9.00.AM . சிம்ம வாகனம்.
    2.00.PM. சப்னா திருமஞ்சனம்.
    6.00PM. ஊஞ்சல் சேவை.
    8.00PM. முத்து பல்லாக்கு வாகனம்.

    03.10.2019
    9.00AM. கல்ப விருட்ச வாகனம்
    6.00PM. ஊஞ்சல் சேவை
    8.00PM. சர்வ பூபால வாகனம்.

    04.10.2019
    9.00.AM. மோகினி அவதார வாகனம்
    4.00PM. ஊஞ்சல் சேவை
    7.00PM. கருட வாகன சேவை.

    05.10.2019
    9.00AM. ஹனுமந்த வாகனம்
    4.00PM. தங்கத் தேரோட்டம்
    8.00PM. கஜ வாகனம்.

    06.10.2019
    9.00AM. சூரிய பிரபை வாகனம்
    2.00PM. சப்னா திருமஞ்சனம்
    6.00PM. ஊஞ்சல் சேவை
    8.00PM. சந்திர பிரபை வாகனம்.

    07.10.2019
    7.00AM. தேரோட்டம் 
    6.00PM . ஊஞ்சல் சேவை
    8.00PM அஸ்வ வாகனம்.
     
    08.10.2019
    6.00AM . சக்கர ஸ்நனம்
    7.00PM. கொடி இறக்குதல்

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்….

    உலகப்புகழ்பெற்ற  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்  தொடங்குகிறது .

      தசரா திருவிழாவிற்கு  புகழ்பெற்ற மைசூருக்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சரியாக கொண்டாடப்பட்டுவருகிது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு இங்கு தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  தொடரந்து பத்து நாட்கள் வெகு விமர்சரியாக நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை கொடியேற்றத்தினை தொடர்ந்து  விரதமிருந்து வரும் பக்தர்கள்  காப்பு அணிந்து  தாங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தாங்கள் விரும்பும் வேடங்களான அம்மன் வேடம்,  காளி வேடம்,  ஆஞ்சநேயர் , குரங்கு,  கரடி மற்றும் சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று காணிக்கை எடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் திருநாளன்று நடைபெறும்.

    மகிசாசூரசம்காரம் அன்று கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.  தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி குலசேகரன்பட்டிணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
     

  • திருப்பதி பெருமாள் கருவறைப் படியைக் கடக்கும் ஒரே பிரசாதம்…. அதிசயம்

    திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை.  இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு. 

    கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.

     யார் இந்தக் குலசேகரன்? 

    சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர்.  கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். 

    பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.  சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். 

    நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும், ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். 

    எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.

     ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். 

    அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர்,  ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. 

    எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சி தான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார். 

    முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட  பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார். 

    திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். 

    திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.  தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார். 

    திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. 

    திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார். 

    'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.' என்றெல்லாம் பாடினார். 

    இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே  அழைக்கப்படுகிறது. 

    இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை

    தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில், ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது.

     பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள், 

    தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அத்தனை பேறு பெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது.

    ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார்,  இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார். 

    அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார்,  வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.

  • பரீட்சைக்கு போகும் முன் அவசியம் போக வேண்டிய கோயில்

    ப்ளஸ் டூ தேர்வு நெருங்குகிறது. அதற்கு முன்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவ, மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பெற்றோரின் மனம் வேண்டுவது தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதுதான்.

    மனதில் வேண்டுவதோடு நின்றுவிடாமல் அவர்கள் தேர்வுக்கு முன்பாக தரிசிக்க விரும்புவது ஹயக்ரீவரைத்தான்.

    கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாக வழிபடுவது ஹயக்ரீவரைத்தான் எனும்போது, கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க அவரை சாமான்யர்களான நாமும் வழிபடுவதுதானே சிறந்தது.

    சென்னைக்கு பக்கத்தில் எங்கே ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறதென்று தேடுகிறீர்களா? சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரங்களில் கேட்டிருப்பீர்கள்.. அப்படி மிக அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

    மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

    வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். அப்படியே ஒரு நோட்டு பேனா, கொஞ்சம் துளசியை வாங்கிக்கொண்டு உள்ளே போனால் ஹயக்ரீவரை தரிசித்துவிடலாம்.

    யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தில் அத்தனை கரிசனமும் அன்பும் தென்படுவது, தவிப்போடு கோயிலுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்வார்கள். வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

    பொதுத்தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

    ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

    ஆமாம் இங்கு ஹயக்ரீவர் எப்போது வந்தார்?

    1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூலவராக வரதராஜ பெருமாளும் ஹேமாப்ஜவல்லி தாயாரும் சேவை சாதிக்க, உற்சவராக தேவநாத சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்தில் ராமர் சன்னதி தென்படும். நேராக சென்றால், கருடாழ்வாரின் பார்வையில் நேர் எதிரே கருவறையில் மூலவரும், தாயாரும் உற்சவரும் காட்சியளிக்க, அவர்களை தரிசித்து திரும்பினால், ஆண்டாள் தனி சன்னதியில் காட்சியளிப்பார். அவரை வணங்கி கடந்தால், ராமானுஜர், விஷ்வக்சேனர் தரிசனம். பின்னர் வெளியே வந்தால், அழகிய நந்தவனத்துடன் காட்சியளிக்கும் கோயிலை வலம் வரலாம். கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

    இந்த ஆலயத்தில் நோட்டு புத்தகம் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிச்செல்லும் பக்தர்கள்,, ஆர்வமிகுதியில் தங்கள் தேர்வு எண் பள்ளி பெயர், என சுவர்களில் கிறுக்கி தள்ளியிருப்பதுதான் பார்க்க சங்கடம் தருகிறது. கோயிலை பாழ்படுத்தாமல் நம் நம்பிக்கையை இறைவன் மீது மனமார வைக்கலாமே. இந்த எண்களை எழுதி வைத்தால்தான் அவருக்கு தெரியுமா? இறைக்கு தெரியாத பக்தனா என்ன?

    1869ஆம் ஆண்டு தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமபிரானும் சீதா, லட்சுமண சமேதராக இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

    ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.

    யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

    “ஞானானந்த மயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
    வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”

     –       எழுத்தாளர் பாமா
     

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 29-ந்தேதி கொடியேற்றம்…. 

    உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. காலை 7.45 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

     
    கொடியேற்றம் முடிந்ததும் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டுவார்கள். அதன் பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

    திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழி பாடுகள் நடக்கிறது. தினசரி மாலை 6 மணிக்கு இன்னிசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 8-ந் தேதி  சூரசம்ஹாரம் நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.

    9-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெரு வீதி உலா சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க் கப்படும்.

    அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் உள்ள காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
     

  • ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வீடியோ காட்சி…..

    செங்குன்றம் அருகே வடகரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலசுப்ரமணியர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.