Category: old…

old…

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 4.57 கோடி உண்டியல் காணிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 83 ஆயிரத்து 964 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 32 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை இன்று எண்ணப்பட்டது. இதில் ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ 4.57 கோடியும் ரூ 5, 10, 20, 50 உள்ளிட்ட சில்லரை நோட்டுகள் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டதில் ரூ 5 கோடிக்கு ஒரே நாளில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த 2015 ஆண்டு ஒரே நாளில் ரூ 5.53 கோடி காணிக்கையாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பதே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை தரிசனம்

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அம்மாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இதில் நேற்று அமாவாசையையொட்டி, மாசணியம்மன் கோயிலுக்கு கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கேரள பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் உள்புறம் மற்றும் வெளிபுறத்திலும் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். அமாவாசையையொட்டி பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல் பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள மாரியம்மன்கோயில், காளியம்மன்கோயில், காமாட்சியம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  • சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம்

    ஆந்திர மாநிலம் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம் 6 டன் வண்ண மலர்களால் நடத்தப்பட்டது.
    ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சந்திரகிரி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம், நித்யகைங்கர்யம் நடக்கும்போது ஏதேனும் தோஷம் இருந்தால் அதனை போக்குவதற்காக இந்த புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    அதன்படி நேற்று இந்த யாகம் நடந்தது. இதனையொட்டி கல்யாண வெங்கடேஸ்வரர் தேவியருடன் திருமண மண்டபத்தில் உள்ள யாகசாலை நடக்கும் இடத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரருக்கு 18 வகையான 6 டன் மலர்களால் புஷ்பயாகம் நடந்தது. அப்போது கூடை கூடையாக பூக்கள் கொண்டு வரப்பட்டு வேதமந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் இதனை நடத்தினர்.

    கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலுக்கு திருப்பதியை சேர்ந்த சீனிவாசரெட்டி என்ற பக்தர் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள பெரிய மணி ஒன்றை வழங்கினார். இதனை கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டனர்.

  • ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்…..

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் இன்று 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சகணக்காக இருக்கும் அதன்படி நேற்றும் (சனி) இன்றும் (ஞாயிறு) பக்தர்கள் அதிகளவு திரண்டுள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 51 ஆயிரத்து 990 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இலவச தரிசனத்தில் 12 மணி நேரமும், திவ்ய தரிசனத்தில் 10 மணிநேரமும், ரூ.300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் ஏராளமான பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் ரூ.2.51 கோடி காணிக்கையாக கிடைத்தது.

  • சனி பிரதோஷத்தின் மகிமைகள்…..

    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்…


    சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.


    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • மார்ச் 25 மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம்…

    மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று வருகிறது. சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

  • மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28-இல் தொடக்கம்

    மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை சித்திரைத் திருவிழா அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 28ஆம் தேதி காலை கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் சிறப்பு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
    விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, மே 5ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மே 6ஆம் தேதி சனிக்கிழமை திக்கு விஜயமும், 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறும்.
    மே 8ஆம் தேதி காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும், அன்று மாலை பூப்பல்லக்கும் நடைபெறுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.
    மே 9ஆம் தேதி ஸ்ரீ கள்ளழகருக்கு மதுரையில் வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறும். தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அன்று இரவு தங்கி அருள்பாலிக்கும் கள்ளழகர் மே 10ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார்.
    அன்று இரவு வண்டியூர் அனுமார் திருக்கோயிலில் எழுந்தருளும் கள்ளழகர், மே 11ஆம் தேதி சேஷ வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றின் நடுவில் உள்ள உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறுகிறது.
    மே 12 ஆம் தேதி இரவு தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் தங்கி பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். மே 13 ஆம் தேதி மலைக்கு மீண்டும் கள்ளழகர் புறப்பாடாகிறார்.
    சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சியும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து தற்போது மேற்கொண்டு வருகின்றன.

  • பழநிமலை முருகன் அதிசய தகவல்கள்

    தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

    ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

    அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

    இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

    விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

    தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

    தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

    அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

    இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

    அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
    அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

    போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

    கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

    தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

    பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு

  • காஞ்சி சங்கராச்சாரியாருக்கு சொர்ணபாத பூஜை

    தஞ்சையில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு 1,000 தங்ககாசுகளால் சொர்ணபாத பூஜையை விஜயேந்திரர் செய்து வைத்தார்.
    தஞ்சை மேலவீதியில் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பீடத்துக்கு வந்து 63 ஆண்டுகள் முடிந்து 64-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி சொர்ணபாத பூஜை தஞ்சை மேலவீதியில் உள்ள பங்காருகாமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இதையடுத்து தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திங்களூர் கோவில், திட்டை கோவில், ஆலங்குடி கோவில், திருவிடைமருதூர் கோவில், திருக்கொல்லிக்காடு, தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோவில், திருக்கருக்காவூர், ஸ்ரீரங்கம், திருக்கடையூர், எட்டுக்குடி, எண்கண், திருவானைக்காவல் உள்ளிட்ட கோவில்களில் இருந்து பிரசாதம் கொண்டுவரப்பட்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டன.

    பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு 1,000 தங்க காசுகளால் சொர்ணபாத பூஜையை, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள், “இந்து மதம் வளர நாம் அனைவரும் பாடுபட வேண்டும்”என்றார். அதன் பின்னர் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

  • திருவண்ணாமலை கோவில் மண்டல பூஜை

    திருவண்ணாமலை கோவிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா மார்ச் 25-ந்தேதி நடக்கிறது
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்ததை அடுத்து 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா மார்ச் 25-ந்தேதி நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 48 நாள் மண்டல பூஜை 25-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
    நிறைவு நாளான்று காலையில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மாலையில் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
    அதைத் தொடர்ந்து மார்ச் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உச்சிக்கால பூஜையின்போது அனைத்து பரிவார சன்னதிகளிலும் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காணாதவர்கள் மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றால், கும்பாபிஷேகத்தை நேரில் கண்டதற்கு ஈடான பலன் கிடைக்கும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.