Category: நவராத்திரி

நவராத்திரி

  • நவராத்திரி 7 ஆம் நாள் வழிபடும் முறை…

    நவராத்திரி விரதத்தில் ஏழாம் நாள் வழிபாடு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம்.

    சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். அந்தவகையில், நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் அம்பிகையை வழிபட்டு இருப்போம். ஏழாம் நாளில் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபட வேண்டும். பேரி வாசிக்கத் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.

    நவராத்திரியின் ஏழாவது நாளில் தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். இன்று அம்பிகையை தும்பை பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனை அருளும்.

  • நவராத்திரிக்கு போட வேண்டிய முத்தாலத்தி கோலம்

    முத்தாலத்தி கோலம் என்பது ஜெவ்வரிசிகளை கொண்டு கோலம் போடுவது .

    நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளுக்கான நவக்ரக கோலங்களை தட்டில் அல்லது ஏதோ ஒரு base சில் போட்டு , அதன் மீது ஜெவ்வரிசிகளை ஒட்டி விடலாம் .

    plain white based அட்டைகளை எடுத்து , அதில் இந்த நவக்ரக கோலங்களை தனித்தனியாக வரைந்து , அதில் கடையில் விற்கும் சிறிய மணிகளைக் கொண்டு (colourful beads) ஒட்டி விடலாம்.

    இதை பத்திரமாக வைத்திருந்து , ஒவ்வொரு நவராத்திரிக்கும் கொலுவின் முன் அன்றன்று வைத்துவிடுவேன் .

    நவராத்திரி நாட்களில் முத்தாலத்தி வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

  • சர்வ பூபால வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா

    நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் சுவாமி வீதிஉலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி மனம் உருகி சுவாமியை வழிபட்டனர்.

    இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன.

  • நவராத்திரி – சக்தி வாய்ந்த காளி ஸ்தோத்திரம்

    யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
    தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
    போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
    ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

    எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
    கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
    மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
    சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

    கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
    தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
    மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
    செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.

  • நவராத்திரி – சரஸ்வதி தேவியின் புகழ்

    வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
    வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
    கொள்ளை யின்பம் குலவு கவிதை
    கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
    உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
    கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.

    மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
    மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
    கீதம் பாடும் குயிலின் குரலைக்
    கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
    கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
    குலவு சித்திரம் கோபுரம் கோயில்
    ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
    இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.

  • அஷ்ட லட்சுமி துதிகள்

    இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
    வீர லட்சுமி இருக்கும் இடத்தில் அனைத்து லட்சுமிகளும் வாசம் செய்வார்கள்.

    தன லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

    வித்யா லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    தான்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    வீர லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    ஸௌபாக்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    சந்தான லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    காருண்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    ஆதி லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

  • திருமலைக்கு திருச்செங்கோட்டில் இருந்து மலர்கள் அனுப்பி வைப்பு

    திருப்பதி திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்காக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் மூலமாக 9 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பெண்கள் சம்பங்கி, முல்லை, ரோஜா உள்ளிட்ட மலர்களை மாலையாக கட்டி திருப்பதி மலைக்கு லாரி மூலமாக அனுப்பி வைத்தனர்.

    சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  • திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. முதல் நாளான நேற்று காலை, தேவி, பூதேவி, சமேதராய் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு 3 ஆண்டு களுக்கும் ஒருமுறை 2 பிரம்மோற் சவங்கள் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இதுபோன்று 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப் படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் பிரம்மாண்டமான முறை யில் நடந்தது. இதனை அடுத்து நேற்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இவ்விழா, வரும் 18-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க திருச்சியில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர் இரவு, ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வாகன மண்டபத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி, திருமலையில் மலர் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி போன்றவைகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. மேலும், பிரம்மோற்சவத்தால், திருமலை முழுவதும் பல வண்ண விளக்கு களாலும், மலர்களாலும் அலங் காரம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி நகரிலும் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களிலும் அலங்கார வளைவுகள், மின் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருமலை மற்றும் திருப்பதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • சீதையை மீட்க ஸ்ரீராமர் கடைபிடித்த நவராத்திரி பூஜை

    ஸ்ரீராம பிரான் வனவாசம் சென்ற சமயத்தில் தன் மனைவியை இழந்தார். கடல் கடந்து சென்று சீதையை எவ்வாறு மீட்பது என்று ஏங்கினார். அதனை உணர்ந்த நாரதர் ஸ்ரீராமா! நவராத்திரியில் அம்பிகையை முறையாக வணங்கினால் சீதையை மீட்பதற்கான அருள் கிட்டும் என எடுத்துக்கூறினார். அதோடு நாரதரே ஸ்ரீராமருக்கு குருவாய் இருந்து மாலியவான் மலையில் நவராத்திரி பூஜையினை உபதேசித்தார்.

    ஸ்ரீராமரும் மாலியவான் மலையில் நாரதர் முன் அம்பிகைக்கு நவராத்திரி பூஜை செய்து, தன்னை மறந்து அம்பிகையின் நினைவால் மந்திரத்தை ஓதினார்.

    ஸ்ரீராமரின் பூஜைக்கு மகிழ்ந்த அன்னை, ஸ்ரீராமருக்கு மாலியவான் மலையில் சிம்ம வாகனத்தில் காட்சிளித்தான். பிறகு அவன், ஸ்ரீராமா! உனக்குத் துணையிருப்போர் அனைவரும் வெறும் வானரர் அல்ல. தேவர்கள் என்று அறிவாய்! உனக்கு அனைத்தும் அளித்தோம். வெற்றி கொள்வாய்! என்று அருளி மறைந்தாள்.

    ராம -ராவண யுத்தம் நடந்தது. யுத்தத்தில் ராவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இழந்தான். அனைத்தையும் இழந்த ராவணன் தன் குலதேவதை துர்க்கையை நினைத்து வணங்கினான். ராவணனுடைய இஷ்ட தேவதையும் துர்க்கையே.

    ராவணன் நினைத்த உடனேயே துர்க்கை அவன் முன் தோன்றினாள். ராவணன் துர்க்கையை வணங்கி, அன்னையே! நீ என் சாரதியாய் ஆக வேண்டும் என வேண்டினான். ராவணனின் பிரார்த்தனைக்கு ஏற்ப துர்க்கை அவன் தேரில் சாரதியாய் நின்றாள்.

    ‘கலியுகத்தில் தீயவர்களே அதிக பலம் பெறுவர். தனது பணத்தாலும், பதவியாலும், பலத்தாலும், ஆணவத்தாலும் தீயவரே அதிகமாயிருந்து நல்லவர்களைத் தளர்ச்சி அடையச் செய்வர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டவே துர்க்கை ராவணனுக்குச் சாரதியாய், 18 கைகளில் ஆயுதங்களை ஏந்தி நின்றாள்.

    இதைப் பார்த்த ஸ்ரீராமர் மனம் தளர்ந்தார். தனது கோதண்டத்தைக் கீழே போட்டு விட்டு தேவி! எனக் கதறித் துதித்தார்.

    எனினும், தேவி செவி சாய்க்கவில்லை. ஸ்ரீராமரை நோக்கித் தேரைச் செலுத்தினான்.

    இதைப் பார்த்த ஸ்ரீராமர் மிகவும் தவித்தார். வேறு வழி இல்லையே! என்று மீண்டும் மனமுருகி அன்னையைத் துதித்தார்.

    வெற்றி பெறுவாய் என நீதானே ஆசியளித்தாய். இப்போது அதற்கு நான் தகுதி இல்லையா, என்று ஸ்ரீராமர் கதறினார்.

    அன்னையே! உன்னை என் எதிரியின் தேரினில் சாரதியாய்ப் பார்ப்பதற்கா எனக்கு இரு கண்கள் இருக்கின்றன? அவற்றால் இனி என்ன பயன்? இப்போதே எனது இரண்டு கண்களையும் எடுத்து உனக்குக் காணிக்கையாக அளிக்கின்றேன் என்று தன் அம்புகளால் தன் கண்களை நோண்ட முற்பட்டார். இதனைக் கண்டதுமே அம்பிகையானவள் ராவணனின் தேரிலிருந்து மறைந்து விட்டாள்.

    ராவணன் பலகோடி யுகங்களாய் நவராத்திரி பூஜையினை விடாது செய்தவன். நவராத்திரி பூஜையை விடாது செய்த புண்ணிய பலத்திற்காக அம்பிகையானவள் சிறிது நேரம் சாரதியாய் அமர்ந்தாள்.

    பலநாள் தொடர்ந்து பூஜை செய்தாலும் அதர்மத்தின் வழிச் செல்பவனுக்குச் சிறிது நேரமே. ஆனால், தர்மத்தின் வழி செல்லும் ஸ்ரீராமன் மாலியவான் மலையில் ஒன்பது நாள் மட்டுமே செய்த பூஜையால் மனமகிழ்ந்த தேவி, ராவணன் தேரை விட்டு மறைந்து அவனை வெற்றி கொள்ளும் சக்தியையும் கொடுத்தாள்.
    இதனால் போரில் ராமர் வெற்றி பெற்றார்.

  • திருமணம் கைகூட வைக்கும் நவராத்திரி வழிபாடு….

    நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

    நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

    நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

    உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

    நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

    நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

    ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

    கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

    தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.