Category: நவராத்திரி

நவராத்திரி

  • அன்னை சாமுண்டியின் வெற்றியைக் கொண்டாடும் மைசூர் தசரா

     

    நவராத்திரியின் ஒன்பது நாளும், ஒன்பது இரவுகள் தனி பெரும் சக்தியாக விளங்கும் அம்பிகை,பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக ஐக்கியமாவது தான் இந்த விழாவின் புராண கதை. தான் படைத்த அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள் என்பதை உலகிற்கு உணர்த்தவே, நவராத்திரியின் போது வீடுகளிலும்,ஆலயங்களிலும் கொலு வைக்கப்படுகிறது.

     நவராத்திரி என்றதுமே எப்படி வங்காளிகளின் துர்கா பூஜை நினைவிற்கு வருமோ,அதே போல  மைசூர் தசரா விழாவும் நம் நினைவிற்கு வந்து விடும். உலகப் புகழ் பெற்ற கொண்டாட்டங்களில் ஒன்றான  இது, மைசூரில் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை நாம் தெரிந்துக்கொள்ளலாம். 1573ம் ஆண்டு மைசூரை ஆண்ட  நான்காம் சாமராஜ உடையார் ஒருநாள் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசனம் முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது  நேரத்தில் திடீரென இடி, மின்னல், மழை தோன்ற ,பயணத்தை நிறுத்தி விட்டு, ஒரு பெரிய மரத்தின் அடியில் நின்றார்கள்.‘‘நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா’’ என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார் மன்னர்.

     ஆலயம் தெரியாதபடி மழை மறைக்க,சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி கோயிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.

     மகிஷாசுரனை வதம் செய்ததும் மைசூரைச் சுற்றியுள்ள இடங்களில்தான்.  ஐம்பத்தோரு சக்தி பீட தேவிகளுள் ,இங்கு ஒருவளாக காட்சி தருகிறாள்அன்னை. சாமுண்டி மலையில் அருளாட்சி புரியும் அன்னை  சாமுண்டீஸ்வரி விஜயதசமி அன்று தான் மகிஷனை வதம் செய்தாள். மகிஷாசுர என்பது தான் மறுவி மைசூர் ஆயிற்று என்ற செய்தியும் உண்டு. அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

     தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.உலகப் புகழ்ப்பெற்ற இந்த தசரா விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.

    இந்த விழாவின் முக்கிய அம்சமே ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும்தான்.  தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையே  அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும். நகரமே வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவர்க்க லோகம் போல் காட்சியளிக்கும்.

     

                                                                                   

     

    தசராவின்போது மைசூர் மகாராஜா நடத்தும் கொலு தர்பாரும் சிறப்பு வாய்ந்தது. தர்பாரில் அமர்ந்து ராஜா அனைவரையும் ஆசிர்வதிப்பார். தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று கண்கவரும் யானை ஊர்வலம் நடைபெறும் என்பதால்,மைசூர் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தசரா விழாவைக் கண்டுகளிப்பதற்கும் உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகளாலும் நகரமே கோலாகலமாக காணப்படும்.

     

     

     

  • வங்காளத்தின் துர்கா பூஜை

     

    துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் விழா நவராத்திரி. வடமாநிலங்களில் துர்கா பூஜா என்ற பெயரில் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.வெவ்வேறு விதமாக அம்பிகை ஒன்பது நாட்களும் பூஜிக்கப்படுகிறாள்.குறிப்பாக வங்காளத்தில் இந்த துர்கா பூஜை மிகவும் பிரசித்தம்.

     இதற்கான புராணக் கதையை நாம் தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

     தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள் சக்தி. இதனால் கோபமடைந்த சிவன், இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு கோரதாண்டவம் ஆடினார். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தார்.அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதிப் போற்றப்படுகிறது.

    பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் வங்க தேசத்து மக்கள்.

                                                                                 

    வங்காளத்தில் மட்டுமே சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில், பதினாறு சக்தி பீடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வங்காளிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே சக்தி வழிபாடு இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

    துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்காக  தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் அமைக்கப்பட்டு,அதில் துர்கையின் பிரம்மாண்டமான சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.காண்போரை சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப்படும் அந்த துர்கையின் சிலைகளை அவ்வளவு எளிதில் எல்லோராலும் செய்து விட முடியாது. அதை செய்வதற்கெனவே மிகச் சிறந்த சிற்பிகள் வங்க மாநிலத்தில் அதிக எண்னிக்கையில் இருக்கிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் கவனத்துடன் தயாரிக்கப்பட்டு பூசையில் படைக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

    மேலும் நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கையில்  பார்லி விதைகள் விதைக்கிறார்கள். முளைகட்டி வளர்ந்த பிறகு, பத்தாவது நாளில் அதை விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

     நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.விழாவின் முதல் நாளில்  குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாளில்  கன்னியின் அம்சமாகவும்,மூன்றாம் நாளில்  பேரிளம் பெண்ணின் அம்சமாகவும் தேவி வணங்கப்படுகிறாள். கடைசி நாள் மஹாநவமியாக கொண்டாடப்படுகிறது.அன்று  ஒன்பது கன்னிப் பெண்களுக்கும் பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

     

    நவராத்திரி பெண்களை கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி,நம்முடைய பாரம்பரியத்தைக் காக்கும் விழாவாகவும் விளங்குகிறது.

     

  • அன்னையின் ஒன்பது அம்சங்கள்

     

    சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னைக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

    நவராத்திரியின் முதலாம் நாளில் நாம் சக்தித் தாயை சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், சாமுண்டா எனவும் அழைப்பர். அநீதியை காண்டு கோபம் கொள்ளும் இவளுக்கான முதல்நாள் நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

     

    ஒன்பது நாள் கொண்டாட்டமான நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களைத் தாங்கியிருக்கும் இவளுக்கான நைவேத்தியம் தயிர்ச்சாதம்.

    மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இந்திரனின் சக்தியான இவள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளே. பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்கள் இவளை சரணடைய வேண்டும். இவளின் அருட்பார்வை பெற படைக்க வேண்டிய நைவேத்தியம் வெண்பொங்கல்.

    சக்தியை நான்காம் நாள் அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவளான  இவளின் வாகனம் கருடன். நைவேத்தியம், எலுமிச்சை சாதம்.

    ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். மகேஸ்வரனின் சக்தியான இவள், திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னைக்கு படைக்க வேண்டிய  நைவேத்தியம் புளியோதரை.

    ஆறாம் நாள்  அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு இவளே ஆதாரமானவள். ஓங்கார சொரூபமான இவள், சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தரும் இவளுக்கான ஆறாம் நாள் நைவேத்தியம் தேங்காய்ச்சாதம்.

    ஏழாம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். ஸ்ரீமன் நாராயணனின்  பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தை கொண்ட இவள், தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.ஏழாம் நாள் நைவேத்தியம் கற்கண்டுச் சாதம்.

    எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னைக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். நல்வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமான இவள்  கல்விச்செல்வம் அருள்பவள். அன்னையின் அருள் பெற படைக்க வேண்டிய நைவேத்தியம் அக்கர வடசல், சுண்டல்

     

                                                                              

    இப்படி ஒன்பது நாளும் அன்னையை ஒன்பது அம்சமாக கொண்டாட,நம் இல்லத்திலும் உள்ளத்திலும் அன்னையின் அருள் நிறைந்திருக்கும்.

     

  • தெய்வங்கள் கொலுவீற்றிருக்கும் கொலுபடிகள்

     

    மங்கையர் கொண்டாடும் நவராத்திரியின் சிறப்பு அம்சமே, அந்த ஒன்பது நாட்களும்  வைக்கப்படும் கொலு தான். பல படிகளை கொண்ட மேடையில் நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும் பலவிதமான  பொம்மைகளை பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியும் குதூகலத்தையும் கொடுக்கும்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறு நாள், கொலு ஆரம்பிக்கும். அவரவர் வீட்டு வழக்கப்படி, வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் நிறுத்துவார்கள்.

    கலசம் வைக்கும் போது மனதில் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கி, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச் செம்பை, நன்றாகக் கழுவி, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

    செம்பினுள் பச்சரிசியை நிரப்பி ,அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் மேலும் சிறப்பு.

    கலசத்தின் மேல் மாவிலை மற்றும் அதனை சுற்றி வெற்றிலையை வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும்.தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

    இந்தக் கலசத்தை, அம்மனாகவே பாவித்து  பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும். கலசத்திற்கு தினமும் பூஜை செய்ய வேண்டும். அதனால்,கலசத்தை  கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ கலசத்தை வைக்கலாம். தினமும் பூவைத்து , பூஜை செய்ய வேண்டும்.

    எப்போதும் கொலுப் படிகளை  5 , 7 ,9 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் கிழக்கு மேற்காக இருக்குமாறு வைக்கலாம். படிகளின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை, விரிக்க வேண்டும். அமாவாசையன்று மரப்பாச்சி பொம்மைகளை ஜோடியாக கொலுப்படியில் வைத்து விடலாம்.

    மேல் படிகளில், முதலில் நடுநாயகமாக பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.

    அடுத்த படியாக தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம். அதற்கும் அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆன விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.

     பிறகு, கிரிக்கெட் வீரர்கள் செட் , பூங்கா செட் ,செட்டியார் பொம்மைகள் என மற்ற பொம்மைகளை  வைக்கலாம்.

     அதற்கு அடுத்து  சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் வைக்கலாம். அடுத்த படியில் பறவை பொம்மைகள்.கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

    தினமும் கொலுவின் முன்னால், அழகான கோலங்களைப் போட வேண்டும். இந்த ஒன்பது நாட்களும்,தினமும் மாலையில் விளக்கேற்றி, அந்தந்த  நாளுக்குரிய சுண்டல் போன்ற நைவேத்தியங்கள்  செய்ய வேண்டும். கொலுவின் இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைத்தால், மங்களங்களை அள்ளி தரும்.

    இந்த நன்னாளில் ஒருவருக்கொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இந்த விரதத்தின் சிறப்பம்சமாகும்.

     

  • நவராத்திரி நாயகிகளை வணங்குவோம்

     

    சக்தி  வழிபாட்டு விரதங்கள் அநேகம் இருந்தாலும்,அவற்றுள்  ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் முக்கியமானவை.பெண்கள் இதனை ஒரு முக்கிய விழாவாகவே கொண்டாடுகின்றனர்.பெண்களுக்கே உரிய இந்த நவராத்திரி வழிபாடு, எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களால் கொண்டாடப்படுகிறது.  ஒரு வருஷத்தில் வரும் நான்கு நவராத்திரிகளில், புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோராலும்  கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் சரத்காலத்தில் வரும் இந்த நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுவர்.

     சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

     தமோ குண சஞ்சாரியாக  ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியையும் , ராஜோ குண நாயகியாக ஸ்ரீ மகாலட்சுமியையும் , சாத்வீகக் குண சொரூபியாக  ஸ்ரீ சரஸ்வதியையும், இந்த  மூன்று அம்சமாக கொண்டாடும் நாட்களே நவராத்திரி.

     அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு, இவ்வுலக வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) என்பவற்றை வேண்டும் நாளாக கருதப்படுகிறது. வாழ்க்கையின் எல்லா சுகபோகங்களை அடைய,நமக்கு செல்வம் தேவை. இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். அலைமகளின் அருளால் பெற்ற செல்வத்தை பாதுகாக்க துணிவு வேண்டும்.  அதற்காக வீரத்தை அளிக்கும் துர்க்கா தேவியை வழிபடுகிறோம். அப்படி பெற்ற,பாதுகாக்கப்பட்ட செல்வத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களுக்கு  பயன் படுத்த கல்வியறிவு வேண்டும். அதற்கு சரஸ்வதி தாயை வணங்குகிறோம்.

     நவராத்திரியின்  வரலாறு

     சும்பன், நிசும்பன் என்ற, அரக்க சகோதரர்களின் கொடுமை தாங்காமல், மக்களைக் காப்பாற்ற வேண்டி, மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு,சிவனிடம் ,தேவர்கள் முறையிட்டனர்.

    மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும்,வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகே உருவான பெண் கோலம் பூண்டு, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் என்ற இருவரும், மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்ற ஜோடி இவள் தான் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தன்னை போரில் யார் வெல்கின்றனரோ,அவர்களைத் தான் மணப்பேன் என்றாள்.

    சும்பன், நிசும்பன் காதில் இது விழுந்ததும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. ஆனால் அதில், ரக்த பீஜன் என்ற ஒரு அரக்கன் தனது கடுந்தவத்தால் பெற்ற வரத்தால், அவன் உடம்பிலிருந்து விழுந்த  ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜனாக  தோன்றினான்.

    உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்கிற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததை யும் குடிக்க ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் இச்சா சக்தியை தருகிறாள். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை,தந்து  எல்லா செல்வங்களையும் அருளுகிறாள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.

    தசமியான  பத்தாவது நாள் மோட்சத்தை அடைய வழி ஏற்படுத்திக் கொடுத்து நம்மை ஆட்கொள்கிறாள்.

     

    முப்பெரும் தேவியரை வணங்கி நலம் பெறுவோம்….

     

     

  • சரஸ்வதி பூஜைக்கு… சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம்

    கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். வித்தை உள்ள இடங்களிலும், கல்விச் சாலைகளிலும், இசை அரங்குகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதிதேவி வாசம் செய்கிறாள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையில், இந்த அன்னையை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோம்.
    சரஸ்வதிதேவியை வழிபடும் வேளைகளில் சரஸ்வதிக்கு உரிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நன்மைகள் பல மடங்காக கிடைக்கும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    சரஸ்வதிதேவியை பூஜை செய்து வழிபடும்போது, அன்னையின் பல்வேறு மந்திரங்களின் கூட, மேற்கண்ட சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை நான்முகன் தேவி நமக்கு தந்தருள்வாள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், கல்வியில் சிறந்து விளங்கலாம். வித்தைகள் வளரும். தொழில் சிறக்கும். லாபம் உண்டாகும். உயர் பதவிகள் தேடி வரும். வாக்கு வன்மை சிறக்கும். ஞானம் கிட்டும்.

  • சகல காரிய விருத்திக்கு விஜயதசமி….

    நவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது.
    சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள். இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும்.

    இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.

  • தடைகள் நீங்கி நலங்கள் பெருக ‘ஆயுத பூஜை’

    நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன.
    இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.