Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thirupathy-mobile-app-stoped

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யக்கூடிய மொபைல் ஆப் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எந்த இடத்தில் இருந்தும் தங்களது மொபைல் போன் மூலமாக அறைகள், தரிசன டிக்கெட் உள்ளிட்ட தேவஸ்தானத்தின் அனைத்து வசதிகளையும் முன்பதிவு செய்து கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தா திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்ற மொபைல் ஆப்பை பயனபாட்டிற்கு கொண்டு வந்தது.

    இந்த மொபைல் ஆஃப் சேவையில் பக்தர்கள் அறைகள் மற்றும் தரிசன டிக்கெட்டை பெற்ற பிறகு பணம் செலுத்தக்கூடிய கேட்வே பண பரிமாற்றத்தில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையின் காரணமாக தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு மொபைல் ஆஃப் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப துறை மேலாளர் சேஷாரெட்டி தெரிவித்துள்ளார்.

    எனவே பக்தர்கள் தேவஸ்தான மொபைல் ஆஃப் க்கு பதிலாக www.ttdsevaonline.com என்ற இணைய தளத்தில் தேவஸ்தானத்தின் சேவைகளை பயன்படுத்தி பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • indru-soora-samharam

    நவம்பர் 13
    விளம்பி வருடம் – ஐப்பசி 27
    கந்தசஷ்டி
    13-நவ-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி அ.கா 4.30
    நட்சத்திரம் : உத்திராடம் முழுவதும் 0.00
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – பாசம்
    மிதுனம் – தாமதம்
    கடனம் – நட்பு
    சிம்மம் – சாதனை
    கன்னி – உயர்வு
    துலாம் – நஷ்டம்
    விருச்சிகம் – அமைதி
    தனுசு – நலம்
    மகரம் – வெற்றி
    கும்பம் – கோபம்
    மீனம் – ஆர்வம்

  • malaikottai-maha-deepam

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலை உச்சியில் வருகிற 23-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    மலையின் உச்சியில் உச்சி பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி முன்னதாக செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை கொண்டு செய்த திரி வைக்கப்படும். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் ஊற்றப்படும். செப்புக்கொப்பரையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும்.

  • thiruchenduril-soorasamharam

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

  • indraya-rasi-palangal

    நவம்பர் 12
    விளம்பி வருடம் – ஐப்பசி 26
    12-நவ-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 2.30
    நட்சத்திரம் : பூராடம் இ 3.39
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – முயற்சி
    ரிஷபம் – தொல்லை
    மிதுனம் – சிக்கல்
    கடனம் – பக்தி
    சிம்மம் – லாபம்
    கன்னி – நிம்மதி
    துலாம் – பிரிவு
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு – இன்பம்
    மகரம் – நற்செயல்
    கும்பம் – நஷ்டம்
    மீனம் – உற்சாகம்

  • naga-chadurthi-vinayagarai-vazhipadungal

    நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உகந்த விஷயமாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. என்றாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!

    ஆடி மாதத்தில் வருகிற நாக பஞ்சமியும் நாக சதுர்த்தியும் விசேஷமானவை. ஆனாலும் ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவது இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்றைய தினம்… நாக சதுர்த்தசி. இந்த நாளில் அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் அனைத்தும் விலகும்! சந்தோஷங்கள் பெருகும்.

    இந்த நாளில், லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். அல்லது அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை வணங்கிப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

    சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை முட்டை, பால் வைத்து வழிபட்டால், சர்ப்ப தோஷ நிவர்த்தி நிச்சயம்!

  • suba-muhurtha-naal-indru

    நவம்பர் 11
    விளம்பி வருடம் – ஐப்பசி 25
    நாக சதுர்த்தி
    11-நவ-2018 ஞாயிறு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி இ 12.44
    நட்சத்திரம் : மூலம் இ 1.28
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆர்வம்
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – அலைச்சல்
    கடனம் – குழப்பம்
    சிம்மம் – ஜெயம்
    கன்னி – பரிசு
    துலாம் – புகழ்
    விருச்சிகம் – நன்மை
    தனுசு – பரிவு
    மகரம் – வெற்றி
    கும்பம் – சினம்
    மீனம் – உயர்வு

  • santhosathai-nilaika-seiyum-kandha-sasti

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

  • thiruchanoor-bramorchava-vizha

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.

     

  • kandha-sasti-thonriya-kadhai

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை.

    தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.