Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கோடி சிவ தரிசன புண்ணியம்: அன்னாபிஷேகம்

     

     

    ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.

    இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.

    தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.

    கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும். கோவில்களிலும், இல்லங்களிலும் லிங்கத் திருமேனி மூழ்கும் வண்ணம் சூடாறிய வெள்ளை அன்னத்தைக் கொட்டி மூடி, வெந்த காய்கறிகள், பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அடுக்கி லிங்க முகத்தையும் அழகுபடுத்துவார்கள்.

    ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த அன்னாபிஷேக சிவனை ஒரு முறை தரிசித்தால் கோடி சிவ தரிசனம் செய்த பலன் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த அன்னச் சிவரூபத்திற்கு தீபாராதனை காண்பித்த பின்னர், சிவன் மேல் பூசிய அன்னம் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படும். வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால், இந்த அன்னப் பிரசாதம், சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

    திருக்கோயில்களில் நடத்தப்படும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, விசேஷ ஹோமங்கள், நித்ய ஹோமங்கள், வேத பாராயணம், தீபாராதனை என அனைத்தும் ஆகம வழிப்படிதான் நடத்தப்படுகின்றன. அபிஷேகப் பிரியனான சிவனுக்குப் பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி எழுபது வகையான அபிஷேகப் பொருட்களில் ஒன்று அன்னம். அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம். இந்த அபிஷேக அன்னத்தில் பாதி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். மீதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக்கப்படும்.

  • கல் கருடனின் கனம் அதிகரிக்கும் அதிசயம்…

    திருநறையூர் நம்பி திருக்கோவில் உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்பொழுது அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தக் கல் கருட உற்சவர் சந்நிதியில் இருந்து தூக்கும்பொழுது உள்ள கனமானது, கூடிக்கொண்டே போகிறது. தொடங்கும் போது 4 பேர் தூக்க எடை கூடிக்கொண்டே 128 பேர் தூக்கும் அளவுக்கு எடை கூடிக்கொண்டே போகிறது. கும்பகோணம் அருகே உள்ள நறையூர் என்ற நாச்சியார் கோவிலில் அமைந்துள்ள திருநறையூர் நம்பி திருக்கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது. மஹாவிஷ்ணு கோவில் கொண்டுள்ள இத்திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர். இந்த கோயிலை சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். மஹரிஷி மேதவிக்கு காட்சி அளித்த ஸ்ரீநிவாசபெருமாள் அவரது வளர்ப்பு மகளான தாயாரைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கேட்கிறார். மஹாலஷ்மி தாயார் மேதாவி மகரிஷிக்கு மகளாக இங்கு வந்த புராணக்கதையும் சுவாரஸ்யமானது. மேதவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார். இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி திருவுளம் கொண்டார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டிப் பேணிக் காப்பாற்றி வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார். அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். உற்சவராக கருடன் பெருமாளைத் தாங்கி திருவீதி உலா வரும்பொழுது அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தக் கல் கருட உற்சவர் சந்நிதியில் இருந்து தூக்கும்பொழுது உள்ள கனமானது, நான்கு நபர்களாலேயே தூக்கிவிட கூடிய அளவிலேயே இருக்கும். இம்மூர்த்தி பிரகார திருவீதிகளை ஒவ்வொன்றாகக் தாண்டும்பொழுது கல் கருடனின் கனம் அதிகரித்துக் கொண்டே வருவதால் நான்கு பேர் என்பது 8, 16, 32, 64, மற்றும் 128 என்பதாகப் தூக்குபவர்களின் எண்ணிக்கை உயரும். சந்நிதியை அடையத் திரும்பி வரும்பொழுது இதே கல் கருடனின் கனம் குறைந்துகொண்டே வருவதால் 128 பாதந்தாங்கிகள் என்பது 64,32,16,8. என்று குறைந்து வந்து சந்நிதியை அடையும்பொழுது 4 பாதந்தாங்கிகள் என்ற கணக்கில் முடிவுறும்.

  • ஐப்பசி அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்….

    அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
    அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.
    இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
    அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.
    அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
    அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

  • சூரிய பகவான் பற்றி  எவருமறியாத அற்புதத் தகவல்கள்!

     

     

    சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்!

    சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.

    சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன் , ‘கிரகபதம்’ என்னும்பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.

    சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாக மும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

    சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரதசப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் 7 என பொருள். அமாவாசைக்கு பிறகான 7- வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமானதை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.

    அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராடவேண்டும். 7 எருக்கம் இலைகள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.

     

    இந்த 7 எருக்கம் இலைகளையும், கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டைகளில் 2, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், 7எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.

    கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி விரதத் தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரதசப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரியரதம் வரையவேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

    சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

    ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

     

  • யோகம் தரும் குருபகவான்!

     

    குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

    பஞ்சலிங்க தலம்

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

    குரு பகவான்

    நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

    இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.  

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

     

    குரு பெயர்ச்சி யின் பொது  ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைப்பெற்றது. இதையோட்டி லட்சார்ச்சனையும் நடந்தது.

    வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். 

    மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம்

    இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன. 

     இறைவன்  மீது  சொட்டும்  நீர்

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

    தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது!

    திருச்சி: ஸ்ரீ ரங்கத்தில்  இருக்கும் ஸ்ரீ ரெங்காநாதர்  கோவிலுக்கு  பாரம்பரியத்துக்கான ‘யுனெஸ்கோ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுக்க மற்றும் பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஆண்டுதோறும், யுனெஸ்கோ போட்டிகளை நடத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட பாரம்பரிய விருது போட்டிக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஈரான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளிலிருந்து 43 பாரம்பரிய கட்டடங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

    காவிரிக்கரைக்கும் கொள்ளிடக் கரைக்கும் நடுவே அமைந்து உள்ள அற்புதமான வைஷ்ணவத் தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவ திவ்விய தேசங்களில், முதன்மையானதாக கருதப்படுகிறது. அத்துடன் பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்றதும் இக்கோவில் தான். சுற்றுலா தலமாக திகழ்கிறது. 7 பிரகாரங்கள்,21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரமாண்டமான கோவில் பல ஏக்கர் பரப்புகளில் அமைந்துள்ளது. இந்த பெரிய  கோவிலில் முழு அளவில் திருப்பணிகள் செய்து கடந்த வருடத்தில் இரண்டு கட்டமாக மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வழிபாட்டில் உள்ள பழமை மாறாமல் நடக்கும் திருப்பணிகள் குறித்து,கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பு சார்பில் 9 வல்லுனர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழு தனது ஆய்வறிக்கை முடிவு குறித்த அறிவிப்பை புதன் கிழமை வெளியிட்டது. இக்கோவிலில்  பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி,புராதன சிறப்பை பாதுகாத்தமைக்கு சிறப்பு விருது (யுனெஸ்கோ) வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபடுகிறது.

    யுனெஸ்கோ விருது அறிவிக்கபட்ட தகவல் அறிந்த ஸ்ரீ ரங்கம் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்  கோவில் வாசலில் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும்  கொண்டாடினார்.

     

     

  • ஐப்பசி மாத பெளர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த நாளில் சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். சரி அன்னாபிஷேகம் ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்யப்படுகிறது. ஏனெனில், ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். சந்திரனுக்கு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திர மனைவியர் உண்டு. இவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பும் பிரியமும் கொண்டிருந்தான். இதனால், அவன் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்ட… அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் மாமனார் சும்மா இருப்பாரா? விஷயம் தெரிந்து கொந்தளித்தார். ஆவேசமானார். சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டார். ‘உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும்’ என சாபமிட்டார். அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். கெஞ்சினான். துக்கித்துக் கலங்கினான். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. இப்போதைய திங்களூர் தலத்தை எடுத்துச் சொல்லி, அங்கே சிவனாரைப் பூஜித்தால், சாபவிமோசனம் கிடைக்கும் என தட்சன் சொல்ல, அந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி, கடும் தவம் இருந்தான். ஆனாலும் அவனுடைய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக மங்கிக் கொண்டே வந்தது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருந்தன. தான் செய்த தவறை முழுமையாய் உணர்ந்து கலங்கினான் சந்திரன். அப்போதுதான் அந்தத் தருணத்துக்குக் காத்திருந்தவர் போல், சிவனார் அவன் முன்னே திருக்காட்சி தந்தருளினார். சாபத்தில் இருந்து விமோசனம் அளித்தார். மேலும் சந்திரனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் பிறையை, தன் சிரசில் அணிந்து அவனுக்கு பெருமை சேர்த்தார். சந்திரன் இழந்த பதினாறு கலைகளும் மீண்டும் அவனிடமே வந்தாலும் கூட, முழுமையான பொலிவுடன் ஐப்பசி பெளர்ணமி நாளில் மட்டுமே சந்திரன் மிகுந்த தேஜஸூடன் காட்சி தருகிறான் என்கிறது புராணம்.

  • திருமலையில் கைசிக துவாதசி விழா

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி விழாவை வெகுவிமர்சையாக நடைபெற்றது. உக்ர சீனிவாசமூர்த்தியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகா விஷ்ணு வரும் ஆஷாட மாதத்தில் ஏகாதசி அன்று நித்திரைக்கு செல்ல இருப்பதால் கார்த்திகை மாதம் வரக் கூடிய கைசிக துவாதசி அன்று நித்திரையில் இருந்து மகா விஷ்ணு கண் விழித்து எழக்கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகா விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் சன்னதியில் இருக்க கூடிய உக்ர சீனிவாச மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சூரிய உதயத்திற்கு முன்னதாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

  • துளசி தேவிக்கு திருமணம்!

     

    துளசி தேவிக்கு திருமணம் (01-11-2017)

    ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமான் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம் நடந்ததே, அதற்கு பத்திரிகை கிடைக்காததால் வராதவர்களுக்கும், ‘கல்யாணமா, எப்போ, தெரியாதே’ என்பவர்களுக்கும்,’ கல்யாணம் நடந்தது தெரியுமே, ஆனால் மறந்து போனதே’ என்பவர்களுக்கும், அந்த திருமணத்தைப் பற்றியும் மணமகள் துளசி தேவியைப் பற்றியும் ஞாபகப் படுத்தவே இந்த கட்டுரை. 
    கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று
    எத்தனையோ காலத்திற்கு முன்பு நடந்தது அந்த தெய்வீக திருமணம்.

    தீபாவளிக்கு பிறகு ஒரு 15 நாள் துளசி பூஜை (துளசி ஹப்பா )என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று துளசிக்கட்டை தான் மணமகள். நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.

    கல்யாணத்திற்கு முன்பே முதல் நாள் சாயங்காலம் இப்போதெல்லாம் அநேகர் மணமக்களை வாழ்த்தி வரவேற்பு அளிக்கிறார்களே. அது போல கல்யாணத்திற்கு முதல் நாள் விஷ்ணுவும், துளசி என்கிற லக்ஷ்மியும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பார்கள். லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் திருமண மக்களாக பாவிப்பது ஐதிகம். அன்று விஷ்ணு கிருஷ்ணன் ஆகியோரின் சக்தி ஜலத்திலும் அக்னியிலும் இருப்பதாக நம்பிக்கை.

    துளசி விவாகத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

     1.துளசி மாடத்தை அலங்கரிப்பது.
     2. நாலு பக்கம் கொம்பு நட்டு, துணியில் விதானம் அமைத்து மண்டபமாக செய்வது. விளக்கேற்றுவது,
     3. துளசி செடிக்கு பட்டுத்துணியில் புடவை.துளசி மணி வளையல். குங்கும தாரணம்.
     4. சின்ன பிள்ளையார் விக்ரஹம், சாளிக்ராமங்கள், அருகே வைத்து பூஜை.
     5. துளசி மந்திரம் ஜபித்தல் ” ஓம் துளஸ்யை நம: 108 தடவை. குங்குமார்ச்சனை.’
     6. தூப தீப ஆராதனை. தேங்காய் உடைத்தல்..
     7. துளசி செடியை, மாடத்தை, 7 முறை வலம் வருதல்- பரிகாரம்.
     8.துளசிக்கும், சாளகிராமங்களுக்கும் ஆர்த்தி. மங்கள கீதம் பாடுவது.
    விவாகம் முடிந்துவிட்டதே.
    விஷ்ணு பூஜை துளசி இல்லாவிட்டால் வீண். எந்த நைவேத்யமும் துளசி தளம், ஜலம் ப்ரோக்ஷணம் இன்றி பூர்த்தியாகாது. துளசி சர்வ பாவங்கள், ஏன் வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள்.

    தேவாசுரர்கள் பாற் கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாலகிராமமாக இருக்கும்போதெல்லாம் துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.

    விஷ்ணு ஆலயங்களில், மாதவர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல் பூஜை இல்லை, விஷ்ணுவுக்கு நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும் தான் தீபம் நமஸ்காரம். பிரார்த்தனை . 
    லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.

     

     

    பத்ம புராணத்தில், பாதாள காண்டத்தில் ஒரு விஷயம் தெரியுமோ ?

    சிவபெருமான்: ”நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்’
    எவன் ஒருவன் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாவங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். எவனது உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாவங்களும் எரிந்துவிடும் எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோட்சம் எய்துவான்.
    கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .
    எவன் துளசி கட்டையை, சமித்துகளோடு சேர்த்து வைத்துக்கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான். 
    துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோதான பலனும் கொடுக்கும். 
    கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.

    ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லட்சம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை. 
    துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல் கிருஷ்ணனுக்கு சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன். 
    துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான்.துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.

    இன்னொன்று சொல்லட்டுமா. எவன் வழியிலே எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாவ, தோஷங்கள் நீங்கப் பெறுவான்.

    துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன். காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    (துளசி கட்டை வேண்டும் என்பதற்காக துளசி செடியின் கிளையை ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம். காய்ந்த துளசி செடியிலிருந்து அதை சேகரிக்கலாம்).

     

     

    துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம்

    முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை பாடுங்கள். உபதெய்வங்கள் பிரபாவத்தை, சக்தியை எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும் அவை ஈடாகுமா.கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை தனது சிரத்தில் விஷ்ணு தாங்கினார்.

    துளசி மாதா,நமஸ்காரங்கள். விஷ்ணுவின் சரீரத்தில் நீ சாற்றப்படும் போது, எல்லோரையும் நீ பரிசுத்தமாக்குபவள்.  துளசி தேவி, உனது தளத்தால் நான் ஸ்ரீ ஹரியை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும் இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில் இருக்கிறேனே.
    துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான். துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு பக்க துணையாக இருந்தவளே நீ தானே.

    துளசி மாதா,நீ சாமான்யமானவளா. சரயு நதிக்கரையில் வசிஷ்டர் அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே ராக்ஷசர்களை அழித்தார்.உனக்கு நமஸ்காரம். அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ அவளுக்கு தெம்பை தந்தவள்.

    அம்மா துளசி, சிவ பிரானை அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே வளர்த்து பார்வதி தேவி வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும் சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள்ளவும். அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி. உனக்கு நமஸ்காரங்கள்.

    துளசி தேவி, ஸ்ரீ ராமபிரான் உன்னை வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை வளர்த்து பூஜித்தாள் . உனக்கு நமஸ்காரங்கள்.

    துளசி தேவி, உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல் சகல ஸ்தாவர ஜங்கம ஜீவர்களும் வணங்குபவள் நீ.

    அம்மா உன்னை வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன் சுக்ரீவன், வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள்

    ஹனுமான், உன்னை வணங்கியபிறகு தானே, சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை வெற்றி கரமாக முடித்து திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள்

    துளசியை தொடுவதாலே, சகல பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும் நாடும் துளசி மாதா உனக்கு நமஸ்காரங்கள்.

    ஒரே ஒரு துளசி தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம் செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும், பாத்து பசுக்களை தானம் செய்த புண்யமும் பெறுவானே. உனக்கு நமஸ்காரங்கள் தாயே.

    தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின் பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே, எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம்.

    துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை கிருஷ்ணன் அவன் செய்த பாவங்களை மன்னித்து அருள்கிறார். துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம் இல்லை. ஏன் என்றால் அங்கே அதிர்ஷ்ட தேவதை குடி கொண்டவள்.துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே.

     

  • பிரதோஷம் கிளம்பும் முன் படியுங்க!

    இன்று மாலை 4.30க்கு எல்லாருமே பிரதோஷ தரிசனத்துக்கு புறப்படுவோம். அதன் மகிமையைத் தெரிந்து கொண்டு கிளம்புவோமா! அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான். 
    அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், “ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?” என்று சத்தமிட்டாள்.  அவளிடம் வந்த நந்தி,””தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,” என்றார். அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார். 
    இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது “குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது’ என்ற விதிப்படி, அங்கு தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர். இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார். 
    நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார். சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார். தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், “”இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?” என மன்றாடினார். அந்த நேரத்தில்,””சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,” என அசரீரி ஒலித்தது. 

    12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார். தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவலோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது. சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர். அவன் பிரதோஷ வேளையில் (மாலை4.30-6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான். அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான். 
    இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர். பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார். தன் தவறுக்கு வருந்தி, முழங்காலிட்டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார். பிரதோஷ நாளான இன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.