Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 2016-08-24-05-19-39

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறித்து அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி இந்த இலவச தகவல் வழிகாட்டி APP ஐ உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் குறித்து முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கும் வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது. பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.
    அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் ‘PINAKIN’ என்ற அப்ளிகேஷனை தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.
    ‘PINAKIN’ எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம்.

  • 2016-08-23-15-04-47

    சிதம்பரம் நடராஜருக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானம் ஆகியவற்றை சென்னை சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கினர்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை மற்றும் உலக அமைதி வேண்டி லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை 28-ம் தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தநிகழ்ச்சியின் நிறைவு நாளில் மகாபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ர நாம ஹோமம் மற்றும் ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது.
    இதனை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த பக்தர் காயத்திரி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமிசுந்தரி அம்பாளுக்கு தங்க ஒட்டியானமும் செய்து திங்கள்கிழமை  கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் வழங்கினர். இதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும். நடராஜருக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானமும் சிறப்பு ஆராதனைக்கு பிறகு திங்கள்கிழமை பொதுதீட்சிதர்களால் பொருத்தப்பட்டது.

  • 2016-08-23-12-37-45

    வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருப்பதையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் ஏராளமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    ஐம்பது ரூபாய் முதல் இருபது லட்ச ரூபாய் வரை இங்கே உருவாக்கப்பட்டும் விநாயகர் சிலைகளில் இந்த வருடப் புதுமை… ’பாகுபலி விநாயகர்’. சிவ லிங்கத்தை விநாயகர் தோளில் தூக்கிச் செல்வது போன்ற பாகுபலி படக்காட்சி, இந்தச் சிலையில் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, பஞ்சபூத விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், சூரன் விநாயகர், சித்தி புத்தி விநாயகர், கற்பக விநாயகர், அர்த்தநாரீஸ்வர விநாயகர் என இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளில் வித்தியாசங்களுக்குப் பஞ்சமில்லை.

    சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் காகிதக் கூழ், கிழங்குமாவு உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி இப்பகுதியில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வாங்கிச் செல்வதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

  • 2016-08-23-12-34-38

    திருச்சி கல்லணை ரோடு சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சூரியன் தன் ஒலியால் மூலவரை வழிபட்ட காட்சியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

    திருவெறும்பூர் அருகே உள்ள சர்கார்பாளையத்தில் கரொகாலச் சோழனால் காவிரி தென்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கே ஆவணி ஏழு, எட்டு, மற்றும் ஒன்பதாம் தேதிகளில் சூரிய ஒளி முன் மண்டபம் வழியாக மெல்ல நகர்ந்து கொடிமரம் வழியாக மூலவரை வந்தடைகிறது.

    இதன் மூலம் சூரிய பகவானே சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். இந்த ஆண்டு இந்த சூரிய வழிபாடு இன்று காலை 6 முதல் 6.30 மணி வரை நடந்தது. அப்போது சூரிய ஒளி காசி விஸ்வநாதரின் நெற்றிப் பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது காண்போரை பக்திப் பரவசம் கொள்ளச் செய்தது.

  • 2016-08-22-15-47-33

    வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஆனந்த அனுபவப் பயிற்சியினை நடத்தினார். 

    முதல்முறையாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஆன் லைனில்  சுதர்சனக் கிரியா பயிற்சி நடத்தினார். இந்தியா முழுவதிலும் சுமார் 1800 மையங்களில் வாழும் கலையின் ஆனந்த அனுபவப் பயிற்சி நடத்தப்பட்டது.

    நகைச் சுவையுடன் இணைந்த நடத்தப்பட்ட இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பாராட்டு விமர்சனம் இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு சாந்தமாக இருக்கும் திறனைக் கற்றறிந்தனர்.

    எளிதாகப் பயிற்சி செய்யக் கூடிய முறையில் கற்றுத்தரப் படும் இந்த நுட்பங்கள் ஒருவர் நல்ல உடல்நலன் மற்றும் ஆனந்தத்தைப் பெற்றுச் செல்வார் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

     

  • 2016-08-22-11-34-30

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் இரவு மணிக்கு திருமலைக்கு வந்தார். திருமலையில் ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி எம்.எல்.ஏ. சுகுணா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் என பலர் அவரை வரவேற்றனர்.
    அதிகாலை 2.30 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையில் சிறிசேனா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று மீண்டும் சிறிசேனா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    அவருக்கு கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் வழங்கினர்.

  • 2016-08-22-11-14-10

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
    அதைத்தொடர்ந்து கொடிபட்டம் கோயிலில் இருந்து வீதி உலா சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. சிறப்பு பூஜை செய்யப்பட்டதையடுத்து கொடியேற்றப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • 2016-08-22-11-10-20

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோகநரசிம்மர், வரதராஜ சுவாமி உட்பட 5 சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில். இங்குள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் உட்பட 5 சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

    காலை 9 மணிக்கு பெருமாள், தாயாருடன் சன்னதியில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக மாட வீதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • 2016-08-20-16-32-51

    தென்காசி குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் அகஸ்டு 21ஆம் தேதியன்று வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆகஸ்டு 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமையன்று) காலை11.20மணிக்கு மேல் 12.20க்குள் வருஷாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாலையில் சுவாமி, மற்றும் அம்மன் ரதவீதிகளில் எழுந்தருளல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.சாத்தையா,மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

  • 2016-08-20-12-19-21

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருநாள் விழா 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. ஆகஸ்டு 26 மற்றும் 27-ந்தேதிகளில் இந்த திருவிழா நடக்கிறது.
    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையட்டி ஆகஸ்டு 26-ந்தேதி காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 10.30 மணிக்குஸ்ரீ பண்டாரம் ஆஸ்தான மண்டபம் சேருதல், 11 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுதல், பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல், 2.30 மணி முதல் 5 மணி வரை மண்டபத்தில் பொது ஜனசேவை, மாலை 5.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடு, மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப சேவை உண்டு. பூஜை காலமான காலை 7.15 மணி முதல் 10 மணி வரை மூலவர் சேவை கிடையாது. காலை 10 மணி முதல் 5.15 மணி வரை சேவை நேரம் ஆகும். மாலை 5.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    ஆகஸ்டு 27-ந்தேதி காலை 7.15 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் புறப்பாடு, காலை 9 மணிக்கு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணர் சன்னதிக்கு வந்து சேருதல், மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடும், மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபம் சேருதலும், மாலை 6.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடும், இரவு 8.15 மணிக்கு சித்திரை வீதிகள் வலம் வந்து உறியடி கண்டருளுதலும், இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருதலும் நடக்கிறது.

    இதையடுத்து 27-ந்தேதி காலை 7.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் மூலவர்சேவை உண்டு. பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பூஜைகாலமாகும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.