Thirupathi laddu Paper bag

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சணல் மற்றும் பேப்பர் பெட்டிகளில் லட்டு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.   அவ்வாறு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு வழங்குவதற்காக லட்டு பிரசாதத்தை ஒவ்வொரு பக்தர்களும் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்று செல்கின்றனர். 

இதற்காக லட்டுகளை எடுத்துச் செல்ல மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்கள் தேவஸ்தானம் சார்பில் ரூ 3 விலைக்கு பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இருப்பினும் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு கட்டமாக பிளாஸ்டிக் கவர்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இன்று முதல் பேப்பர் மற்றும் சணல் மூலம் தயார் செய்யப்பட்ட பை மற்றும் அட்டை பெட்டிகள் மூலம் லட்டு கொண்டு செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக ஒரு லட்டு பிடிக்கும் விதமான அட்டை பெட்டி 3 ரூபாயும், 2 லட்டுகள் பிடிக்கும் விதமான அட்டைப்பெட்டி 5 ரூபாயும்,  4 லட்டுகள் பிடிக்கக்கூடிய அட்டைப் பெட்டி 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று 5 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சனல் பை 25 ரூபாயும், 10 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 30 ரூபாயும்,  15 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 35 ரூபாய்,  25 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 55 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் லட்டு  பெறக்கூடிய பக்தர்கள்  பேப்பர் பெட்டி அல்லது சணல் பைகளில் மட்டுமே லட்டுகளை கொண்டு செல்ல முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சணல் அல்லது பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *