Pazhani Murugan Koil Therottam

பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

கொடியேற்றத்தையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரரான முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.  திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. தைப்பூச தேரோட்டம் 21ம் தேதி நடக்க உள்ளது. தைப்பூச திருவிழா காரணமாக 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *