Dhanusu Shakthi Online – May Monthly Prediction – 2024

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

01-05-2024 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான்  சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே

இந்த மாதம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்மார்க்கம் உண்டு. எந்த பிரச்சனைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மனதைரியத்தை பெறுவீர்கள். வீடு, மனை, தாய் வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும்,அனுகூலமும் சம அளவில் இருக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். மனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம்.

உத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.

தொழிலதிபர்கள் உங்கள் தொழில் வகையில் கடந்த நாட்களைவிட உயர் வருமானம் பெறும் வாய்ப்புண்டாகும். சகோதர வகையில் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்வது உத்தமம். வெளிநாட்டு வகையில் தொழில் செய்பவருக்கு கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே நல் ஆதாயத்தைக் காண முடியும். எந்த ஆவணங்களாக இருந்தாலும் படித்து பார்த்து கையெழுத்திடுவது நல்லது.

பெண்கள் அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிபுரிந்து அதற்கான வெகுமதியை பெறுவார்கள். உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.

கலைஞர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு அதிக கவனம் தேவை.

அரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிய வரும். சிலர் மீது கோபப் பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.     

மாணவர்கள் தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினாலும் கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்க சந்தர்ப்பங்கள் உருவாகும்.

மூலம்:

இந்த மாதம் பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.

பூராடம்:

இந்த மாதம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் –  மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.

பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 07, 08

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *