Sirapamsam niraindha avani month

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர்.

எனவே தான் ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும். விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர். ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் ஆவணியில் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகிப் பூஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோமாக.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *