Vazhvil nalam tharum vinayakar vazhipadu

பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. தனக்கு அளிக்கப்பட்ட இட்சுவாகு குல தனமான ஸ்ரீரங்கநாதரை ரங்கவிமானத்துடன் விபீஷணன் இலங்கைக்கு எடுத்து செல்லுங்கால், தனது திருவிளையாடல் மூலம் ஸ்ரீரங்கத்தில் நிலைப்படுத்தி அருளியதும் விநாயகரே. 

"அற்புதம் நின்ற கற்பகக் களிறே' என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். 

வேதங்களை வகைப்படுத்தி அருளிய வியாஸர் மஹாபாரதத்தை தான் சொல்லச் சொல்ல அதனை தனது தந்தத்தை உடைத்து எழுதியதும் விநாயகப்பெருமானே. ந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமானோடு திருவையாறு அருகில் வரும்போது காவிரி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஈசனை நினைந்து அவர் வேண்ட, ""சுந்தரனே வா!'' என ஓலமிட்டு அழைத்து காவிரியின் நடுவில் பாதை அமைத்து அவருக்கு உதவியவர் விநாயகரே.  இவ்வாறு விண்ணோருக்கும் மண்ணோருக்கும் விநாயகர் அருளிச்செய்த செயல்கள், அற்புதங்கள் பட்டியல் நீளூம்.

சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று "விநாயக சதுர்த்தி' பூஜை கொண்டாடப்படுகிறது. 

பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடாகும். பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம். 

விநாயக சதுர்த்தியன்று களி மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவத்தை (பிம்பத்தை) வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது…..

உலக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில் பிருதிவி எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை பிருதிவியால் (களிமண்ணால்) உருவாக்கி விநாயக சதுர்த்தியன்று பூஜிக்கின்றோம். புனர்பூஜை கழித்து திரும்பவும் அந்த பிம்பத்தை கடல்நீரில் கரைத்து விடுகின்றோம்.

விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை:
அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை,
அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள்,
நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை, வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை: நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று.

வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை எந்நாளிலும் வழிபடுவோம்.  நம்பிக்கையுடன் அந்த தும்பிக்கையானை வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *