Meiporul Nayanar PART2

– "மாரி மைந்தன்" சிவராமன்

 

ஒரு கணத்தில் 
தத்தனின் கூர்வாள்
முத்தநாதனின்
முடிவைக் கண்டிருக்கும்.

அதற்குள் 
தேவ தேவருடைய திருத்தொண்டர் மெய்ப்பொருளார் 
'தத்தா'
என்று உரக்கக் கத்தி தத்தனைத் தடுத்தார் உயிர் நீங்கும் நிலையிலும்.

"தத்தா…..!
இவர் நம்மவர்.
சிவயோகியாகத் தோன்றுகிறார்.

எனவே நாம் 
மதிக்க வேண்டும். ஒன்றும் செய்யாதே. இவருக்குத் தீங்கு நினையாதே."

அரசன் இட்ட 
கட்டளைக்கு அடிபணிந்தான்
தத்தன்
அரை மனதோடு.

தன் கூர்வாளினை இடையில் 
செருகிக் கொண்டான்.

அரசகட்டளை 
அடுத்து வந்தது.

"தத்தா….
நம் மக்கள் யாரும் 
இவரைத் தாக்காது பாதுகாத்து 
இடையூறின்றி 
அழைத்துச் சென்று 
இவர் விரும்பும் இடம் சேர்ப்பது உன் பொறுப்பு."

தத்தனின்
கோபப் பார்வையால் பயந்து 
உறைந்து போயிருந்த 
மூர்க்கன் முத்தநாதன் 
மெய்ப்பொருள் நாயனார் தத்தனுக்கிட்ட உத்தரவால் பயம் நீங்கி 
புறப்பட தயாரானான் தீரன் போல.

இரத்தவெள்ளத்தில் 
உறைந்து கொண்டிருந்த மெய்ப்பொருளாரை 
தீர்த்து முடித்த 
வஞ்சகப் பெருமையோடு
தத்தனின் பாதுகாப்போடு
அரண்மனை விட்டு வெளியே வந்தான்
வஞ்சக நெஞ்சகத்தான்.

அதற்குள் ஊருக்குள் செய்தி பரவவே வழியெங்கும் 
எதிர் எதிராய் 
மக்கள் திரண்டு 
போலி 
தவ வேடதாரியை ஒரேடியாகக் 
காலி செய்ய முயன்றனர்.

அரசன் தனக்கிட்ட கட்டளையை கொதித்தெழுந்த மக்களிடம் 
எடுத்துச் சொல்லி 
வழிவிடச் செய்து 
நாட்டின் எல்லையில் 
ஒரு கானகத்தில் கொலைஞனை 
விட்டு விரைந்தான் 
தத்தன் அரண்மனைக்கு.

நல்லபடியாக 
சிவனடியார் 
ஊர் எல்லையைத் 
தாண்டி விட்டாரா என்பதை அறியக் காத்திருந்தவர் போல் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஈனஸ்வரத்தில் 
இருந்தார் ஈஸ்வரபக்தர்.

'தவ வேடம் 
பூண்டு வந்து வென்றவனை 
நாட்டின் எல்லையில் விட்டு வந்தேன்' 
எனத் தொடங்கி
நடந்தது அனைத்தையும் கண்ணீர் மல்கச் சொன்னான் தத்தன்.

"தத்தா….!
இன்றைக்கு நீ எனக்கு செய்த உபகாரத்தை 
வேறு யார் செய்யவல்லார்?"
என்று புகழ்ந்துரைத்தார் 
ஆவி பிரியும் நிலையில்
இருந்த 
அருந்தவ நாயனார்.

அதற்குப்பின் 
தனக்குப் பின்னர் 
அரசாளப் போகிறவர்களையும் உறவினர்களையும் மந்திரிகளையும் 
அருகே அழைத்தார்.

"என் மக்களே….!

நம் முன்னோர் 
செய்து வந்த 
சிவ சேவையைத் தொடர்வது
 உங்கள் கடமை.
சிவனடியார் சேவை அதற்கு ஒப்பானது.

எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் சிவனடியார்களை 
மதிக்க வேண்டும்.
வணங்க வேண்டும்.

சிவனடியார்களின் அரிச்சுவட்டில் 
நீங்களும் மக்களும் நடப்பீர்களாயின்
சிவனடியார் திருக்கூட்டம் வெள்ளம் போல் பெருகும்.

சிவனடியார்கள் 
நன்றாக இருந்தால் 
நாடும் மக்களும் செல்வமும் அமைதியும் பெற்று 
சுபிட்சமாக இருப்பார்கள்."

மெய்ப்பொருள் நாயனாரின் 
கண்கள் நிலை 
கொள்ள ஆரம்பித்தன. சொற்கள் வாயினின்று வெளிவர முடியாமல் துடித்தன.

முயற்சித்து 
கண்களை மூடி சிவபிரானின்
தாமரைத் திருவடிகளைச் சிந்தையில் எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார் சிவநேசரான
மெய்ப்பொருள் நாயனார்.

என்னே அதிசயம் !

தியானத்தில் அவர் கண்ட திரு உருவத்திலேயே பரமசிவன் காட்சி அளித்தார் 
அவர் கண்முன்னே.

"பரந்த பேரன்பு கொண்டவனே …!

மறுத்தல் இல்லா 
பக்தி கொண்டவனே!

'உம் நாயகன்' என போலியான முத்தநாதன் 
தன்னையும் அறியாமல் உரைத்தும் 
சிவனடியார் 
மேலுள்ள காதலால்
உண்மை உணராது 
உணர விரும்பாது 
என் பாதம் நினைத்தவனே!

நீ தான் 
தேவர்களும் 
அணுக முடியாத 
உயர்ந்த சிவபுரம் ஆகிய பேரின்பப் பெரு வீட்டை அடையத் தகுதியுள்ளவன்.

நீ என்னிடம் வந்து 
நீ விரும்பும்
என் பாதத்தை 
மெய்யன்பால் அலங்கரிப்பாயாக !"

பரமேஸ்வரன் மறைந்தார் நிறைந்த திருப்தியுடன்.
மனம் நிறைந்த பக்தனை மக்கள் மனதில் 
இடம் பெறச் செய்த பெருமிதத்துடன்.

'இறைவன் ஒருவனே மெய்ப்பொருள்'
என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய மெய்ப்பொருள் நாயனார் காட்சி தந்த சர்வேஸ்வரன் 
மறைந்த அக்கணமே மண்ணுலகை விட்டு 
விண்ணுலகை அடைந்தார்.

கார்த்திகை மாதம் 
உத்திர நட்சத்திரத்தில் உதித்த 
மெய்ப்பொருள் நாயனாரின் 
அவதார தலமும் முக்தித்தலமும் திருக்கோவலூரே.

'வெல்லுமா மிக்கவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்' என்று
மெய்ப்பொருள் நாயனாருக்கு
மெய்ப் புகழ் பாடுகிறார்
திருத்தொண்டத்
தொகையில்
திருவருள் மிக்க 
சுந்தரர் பெருமான்.

(மெய்ப்பொருள் நாயனார் புராணம் – முடிவுற்றது.)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *