Egadasi Viradham

ஏகாதசி பற்றி புராணங்கள் கூறும் கதைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று முரன் என்னும் அசுரனை அழித்த கதை. புராணத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். 

இதனால், அவர்கள் அனைவரும் அசுரை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அவர்களிடம் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறுகிறார். அதன்படி தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.

தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாகப் பயண்படுத்திக்கொள்ள நினைத்த அசுரன் முரன் மகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். அப்போது, அவரிடமிருந்த சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

நித்திரையில் இருந்து விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *