Thirupathyil Azhvar Thirumanjanam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி இன்று 5 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சுவாமி தரிசனம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மற்றும் 7 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையோட்டி சொற்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.இதையொட்டி  இன்று கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. 

பக்தர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் தூய்மைப்பணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துழில் எழுப்பப்பட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. 

பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படவுள்ளது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிருத்தப்பட்டது. தொடர்ந்து, 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் கோயில் ஜீயர்கள், செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி,  முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செயல் அலுவலர்  அனில்குமார் சிங்கால் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி 4ம் தேதி மாலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள் என்பதால் அதற்கேற்ப பக்தர்கள் காத்திருக்கும் விதமாக வைகுண்டம் காத்திருப்பு அறை, நாராயணகிரி தோட்டம்,  நான்கு மாட வீதி முதல் கல்யாண மேடை வரை பக்தர்களுக்கு குளிரில் பாதிப்பு ஏற்படாத வகையில் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அன்னப் பிரசாதம் , குடிநீர் ஆகியவை காத்திருக்கும் இடத்திலேயே வழங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் முடிந்த அளவிற்கு அதிக அளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *