Thiruvannamalai Maha Deepam

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு  துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற இருக்கிறது. 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகாதீப திருவிழா டிசம்பர் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி முன்னிட்டு வியாழக்கிழமை துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இரவு சுமார் 8.30 மணியளவில் துர்க்கையம்மன், காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.

நாளை மறுநாள் பிடாரியம்மன் உற்சவம் நடக்கிறது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது. 30-ந்தேதி விநாயகர் உற்சவம் நடக்கிறது. அப்போது விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை செய்யப்பட்டு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வருகின்றனர்.

1-ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி விமானங்களில் அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இறுதியாக 14-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *