Uthrakosa Mangai

அதிசய மரகத நடராஜர் சிலை உள்ள உத்திர கோசமங்கை மங்கள நாதர் கோயில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என்று நம்பப்படுகிறது.

ஆதிகாலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது. இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன், அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்தால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.

பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும் தான். இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும் மற்றொருவர் முடியையும் தேடிச்செல்வது என்றும் யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

பிரம்மன் முடியைத் தேடியும் விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன் தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தனர்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும் என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

ஒரு அதிசயமான மரகதத்தினால் ஆன நடராஜர் சிலை உள்ள மிகவும் பெருமை வாய்ந்த திருத்தலம். மதுரையிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்திர கோசமங்கை என்ற ஊரில் உள்ள பிரசித்திபெற்ற மங்களநாதர் –மங்களாம்பிகை கோவில் ஆகும்.

இந்த தல வரலாறு பற்றி கூறியது என்னவென்றால் ராவணனுடைய மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்ததாம். அவள், இந்த உலகத்திலேயே சிறந்த சிவபெருமானை வணங்கும் பக்தனையே திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையில் இருந்தாள். சிவபெருமானை நோக்கி தியானம் செய்தாள் சிவபெருமான் அவரிடமிருந்த வேதநூல் ஒன்றை முனிவர்களிடம் தந்து இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அவர்களிடம் என்னுடைய பக்தை மண்டோதரி என்னை வணங்கி தியானம் செய்து வருகிறாள். எனவே அவளுக்கு காட்சி தர செல்கிறேன் என்றார். மண்டோதரி முன்னர் ஒரு குழந்தை உருவத்தில் காட்சி தந்தார். அப்பொழுது அங்கு வந்த ராவணன், சிவபெருமான் தான் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டான். ராவணன் ஆர்வத்தில் குழந்தை உருவில் உள்ள சிவபெருமானை தொட முயன்றான். உடனே சிவபெருமான் அக்னி பிழம்பாக மாறி அனைத்து பொருட்களும் எரிய தொடங்கின. வேத நூல்களை காப்பாற்றும் முயற்சியில் தேவர்கள் முயன்றனர். அதில் தோல்வியடைந்து சிவபெருமானுக்கு அதில் தோல்வியடைந்து சிவபெருமானுக்கு அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று, அங்கிருந்த தீர்த்த குளத்தில் விழுந்து மாண்டார். மாணிக்க வாசகர் மட்டும் வருவது வரட்டும் என்று வேத நூல்களை இறுகப்பற்றி நமச்சிவாய நாமம் கூற ஆபத்தின்றி முடிந்தது. வேத நூல்களை காப்பாற்றி சிவபெருமானிடம் ஒப்படைத்தார். மாண்ட தேவர்களையும் இறைவன் உயிர்ப்பித்தார். பின்னர், மண்டோதரிக்கும் ராவணனுக்கும் திருமணம் நடக்க அருள்புரிந்தார்.

இந்த வேளையில் தைரியமாக தனது மீது பற்று கொண்டு வேத நூலை காத்த, மாணிக்க வாசகருக்கு, கௌரவித்து லிங்க வடிவத்தில் இருத்தி உள்ளார். மேலும் இந்த தலத்தில் மரகத நடராஜர், மாணிக்க வாசகர், இரட்டை பைரவர், சுப்ரமணியர் ஸ்படிக லிங்கம் ஆகியவைகள் உள்ளது சிறப்பானதாகும். சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்துவது இங்கு மட்டுமே உள்ளது. இறைவன் மங்களநாதர், இறைவி மங்களேஸ்வரியின் திருவருளைப்பெற மூன்று வேளையும் தரிசித்து வழிபட தடைபட்ட திருமணங்கள் நிறை வேறும் என்பதுவும், முன்வினையில் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பதுவும், இப்பிறவியில் செய்த தீயபாவங்களும் அகலும் என்பதுவும் ஐதீகம். காலை, மதியம் , மாலையில் மூன்று வேளையும் தரிசிக்க ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

மரகதச்சிலையின் உயரம் 5 1/2 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டுமே பூஜை நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் என்ற விழா அன்று, மரகதச்சிலையின் சந்தன காப்பு நீக்கி, மற்ற அபிஷேகம் அனைத்தும் நடத்தப்படுகிறது.

இங்குள்ள உட்பிரகாரத்தில் நுழையும் இடத்தில் இரண்டு யாளிகள் வாயில் உள்ள கல்பந்தை கைகளால் உருட்ட முடிவது, சிற்பக்கலையின் நுணுக்கத்தை காண முடிகிறது. திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி தினத்தன்று முழுவதும் உபவாசம் இருந்து ஈஸ்வரனை தியானிப்பதுவே திருவாதிரை நோன்பாகும். சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை என்பதால் இந்த பெருமை பெறுகிறது. அன்று தேரில் வீதி உலா வருவதை ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். இதனால் முக்தி கிடைப்பதாக கூறுகின்றனர்.

எனவே தான் மார்கழி மாதம், சிறப்புடைய மாதம் என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் உளுந்து மாவினால் செய்த களி, நைவேத்யமாக படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என பெரியவர்கள் கூறுவர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *