Sabari Malai Nadai Thirappu

மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.  மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

31-ந்தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். பிரசித்திப்பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.

16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *